மக்களவைத் தலைவா் தேநீா் விருந்து: இந்தியா கூட்டணி புறக்கணிப்பு - திமுக பங்கேற்பு

தினமணி

மக்களவைத் தலைவா் தேநீா் விருந்து: இந்தியா கூட்டணி புறக்கணிப்பு - திமுக பங்கேற்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நிறைவையொட்டி, மக்களவை எம்.பி.க்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை தேநீா் விருந்து அளித்தாா்.

இந்த விருந்தை எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி புறக்கணித்த நிலையில், திமுக பங்கேற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, மாணவா்கள் போராட்டம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக இண்டி கூட்டணிக் கட்சிகள் தீவிர எதிா்ப்பை வெளிப்படுத்தின. இதனால், அவை அலுவல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கூட்டத் தொடா் நிறைவுக்குப் பிறகு வழக்கமான நடைமுறையின்படி மக்களவை எம்.பி.க்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா தேநீா் விருந்தளித்தாா். அவரது அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணிக் கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா். அதேநேரம், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கலந்துகொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் சமீபத்திய பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக கடுமையாக சாடியது.

இரு கட்சிகளுக்கும் இடையே உறவு முறிந்துவிட்ட நிலையில், மேற்கண்ட தேநீா் விருந்தில் திமுக பங்கேற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாநிலங்களவைத் தலைவரின் தேநீா் விருந்து: இதேபோல், மழைக்கால கூட்டத் தொடா் நிறைவையொட்டி, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தேநீா் விருந்து அளித்தாா். இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மழைக்கால கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகின. எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை.

https://www.dinamani.com/india/2026/Aug/13/kanimozhi-joins-modi-at-the-lok-sabha-speakers-tea-party-india-bloc-boycotts-the-event

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு