மே -5 – உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் மார்க்ஸ் பிறந்தார் - இணையவழிக் கூட்டம் பற்றி
செந்தளம் செய்திப் பிரிவு

உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கார்ல் மார்க்ஸ்-ன் 207வது பிறந்த நாளை முன்னிட்டு செந்தளம் நேற்று இணைய வழிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியது.
அக்கூட்டத்தினை செந்தளம் வலையொளியின் நெறியாளர் தோழர். புகழ் வேலன் தலைமையேற்று நடத்தினார்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில தலைவர் தோழர் G. மஞ்சுளா, எழுத்தாளர் தோழர். இரா. முருகவேள், மக்கள் ஜனநாயக இளைஞர் கழத்தின் வழக்கறிஞர் தோழர் சேல் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது செவ்வுரைகளை வழங்கினர்.
இறுதியாக செந்தளத்தின் பதிப்பாசிரியர் தோழர். நியூ ரெட்மேன், பங்கேற்ற அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்.
தோழர். புகழ்வேலன்
தலைமை உரையை வழங்கிய புகழ்வேலன், மார்க்ஸ் தத்துவவியலாளர் மட்டுமல்ல அவர் புரட்சியாளராகவும், மானுட சமூகம் உள்ள வரை ஒரு புரட்சியாளர் எவ்வாறு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சான்றாகவும் வாழ்ந்து சென்றுள்ளார் என்பதை தனது உரையில் அழுத்தமாக பதிவு செய்தார்.
அவர் பேசுகையில்,
“1850 -1860 களில் ஐரோப்பா முழுவதும் நிலவிய அடக்குமுறை காலகட்டத்தில் முற்போக்கு இயக்கங்கள் ஒடுக்கப்பட்டன. மட்டுன்றி மார்க்ஸ் தனிபட்ட முறையிலும் நாடு கடத்தபட்டு பல இன்னல்களை எதிர்கொண்டார். வறுமையில் தங்களது குழந்தைகளை பறிகொடுத்தார். அத்தகைய சூழலிலும் கூட தளராமல் தனது புரட்சிகர பணிகளையும் - தத்துவ பங்களிப்பையும் தொடர்ந்தார். எங்கெல்சும் உற்ற தோழனாக மார்க்சுக்கு உதவினார். அந்த உதவிகளையும் தனக்கானதாக தனது குடும்பத்திற்கானதாக மாற்றிக் கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தத்துவ பங்களிப்புக்கு காணிக்கையாக்கினார்.” என்றார்.
மேலும்,
“உலக தொழிலாளர்களின் தத்துவமாக விளங்கும் இந்த இயக்கவியல் - வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஒரு முரணற்ற தத்துவமாகும். எந்த நாட்டிற்கும் இந்த தத்துவம் அவர் வகுத்தளித்த விதி அப்படியே பொருந்தக்கூடியாதாகும். அத்தகைய சிறந்த தத்துவத்தை நமக்கு வகுத்தளித்தவர் மார்க்ஸ்.”
“அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வகுத்தளித்த தத்தவத்திற்கு உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் சற்று மனம் தளராமல் தனது புரட்சிகர பணியை தொடர்ந்தார். ஏனெனில் அவர் நம்பினார். நம்பினார் என்று கூறுவதே தவறு; அவர் அறிவியல்பூர்வமாக கண்டடைந்தார். மற்ற தத்துவங்கள் வெறும் நம்ப்பிக்கையின் கட்டியமைக்கப்பட்டன. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமான இயக்கவியல் - லரலாற்றுப் பொருள்முதல்வாதம் பரந்த அறிவியல் ஆய்வின் மீது கட்டமைக்கப்பட்ட கோட்பாடு ஆகும். அந்த அறிவியலே அவரை மேலும் மேலும் செயல்படவைத்தது. 1881ல் தனது உயிர் மனைவி ஜென்னி வறுமையின் கொடிய பிடியில் இறந்தபின் 1883 ல் மார்க்ஸ் இயற்கை எய்துகிறார். ஆனால், அவர் தத்துவ கொடை 200 ஆண்டுகளை தாண்டி இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது லெனின் போன்ற ஆசான்களால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தத்துவத்தை வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்வது நமது இன்றிமையாத கடமையாகியுள்ளது” என்றார்.
தோழர். G.மஞ்சுளா
அவரை தொடர்ந்து உரையாற்றிய தோழர் மஞ்சுளா, மார்க்சியத்தின் 3 அடிப்படைகளின் ஒன்றான விஞ்ஞான சோசலிசத்தை பற்றி விளக்கினார். அது எவ்வாறு கற்பனாவாத சோசலிசத்தில் இருந்து வேறுபட்டது என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது எழுந்த வாதங்களுடன் ஒப்பிட்டு சிறப்பாக விளக்கினார்.
அவர் உரையில்,
“அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவில் பங்கேற்ற கே.டி.ஷா, இந்தியா மதசார்பற்ற கூட்டாட்சி சோசலிச மாநிலங்களின் ஒன்றியம் என மாற்ற கோருகிறார். ஆனால், வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கர், முகவுரையில் சோசலிசம் என சேர்த்தால் எதிர்கால சந்ததியினர் தங்களது பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எனக் கூறி அந்த முன்மொழிவை உறுதியாக நிராகரித்தார். முகவுரையில் சோசலிசம் என குறிப்பிடாவிட்டாலும் இந்திய அரசியலமைப்பு சட்ட வழிகாட்டும் கொள்கைகள் சோசலிச உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அம்பேத்கர் வாதிட்டார். நேருவும் பிற்பாடு அம்பேத்கர் பேசியதை ஆதரித்து பேசியுள்ளார். ஆனால் இந்திராவின் எமெர்ஜென்சி ஆட்சியில்தான் இந்திய அரசியலமப்புச் சட்டத்தில் மத சார்பற்ற / சோசலிசம் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. தற்போதைய பாஜக ஆதை நீக்க வேண்டும் என பேசி வருகிறது” என்றார்.
அதைத்தொடர்ந்து சோசலிசம் என்ற வார்த்தை பயன்பாடுகள் குறித்து நீதிமன்ற வழக்காடுகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். சோசலிசம் என்ற வார்த்தை இந்திய சூழலில் முழுமையாக கற்பனாவாத சோசலிச கோட்பாட்டின் அடிப்படையிலேயே விளக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக முன்வைத்தார். மார்க்ஸ் முன்வைத்த விஞ்ஞான சோசலிசம் இதிலிருந்து எவ்வாறு அடிப்படையிலேயே வேறுபட்டுள்ளது என்பதை இன்றைய சுரண்டல் அமைப்பு உதாரணங்களோடு ஒப்பிட்டு சிறப்பாக விளக்கினார்.
மேலும்,
“முதலாளித்துவ அரசை தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க தலைமையில் அரசு அமைக்க வேண்டும். நிலத்தையும் ஆலைகளையும் பொதுவுடமையாக்க வேண்டும்; சந்தை பொருளாதாரத்திற்கு முடிவுகட்டி திட்டமிட்ட சோசலிச சமத்துவ சமூகத்தை படைக்க முடியும். முதலாளித்துவ தனியுடமையை ஒழிக்காமல் சமத்துவம் சோசலிசம் சாத்தியமில்லை என்கிறது மார்க்சியம். ஆட்சியமைப்பிற்கு பின்பும் கூட ஊதியம் வழங்குவது பற்றியும் சமத்துவத்தை கொண்டு வருவதில் கட்டங்கள் உள்ளது என்பது பற்றியும் சிறிதும் கூட கற்பனையில்லாத தெளிவான விஞ்ஞான சோசலிசத்தை முன் வைக்கிறார் மார்க்ஸ். வெறும் சீர்திருத்தங்கள் மூலமே சோசலிசத்தை கொண்டு வர முடியும் என பேசும் அனைத்தும் கற்பனாவாத சோசலிச வகைப்பட்டதே” என்றார்.
தோழர். இரா. முருகவேள்
அதன் பின்னர் பேசிய தோழர் இரா. முருகவேள், மார்க்சியம் தோன்றிய சூழலை பற்றியும் அது தோன்றிய பின் உருவாக்கிய தாக்கங்கள் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
அவர்,
“அடிமைமுறை 200 ஆண்டுகளுக்கும் முன்பு வரை கூட அளவில் மிகச்சிறிய கோவில்களிலும் கூட அடிமை முறை நீடித்தது. சமூகமாற்றத்தை விரும்பியவர்கள் செய்வதறியாது தங்களுக்கு ஏற்றவாறு பல விளக்கங்களை கொடுத்து வந்தனர். ஒரு சுரண்டல் அமைப்பு முறையில் இருந்து மற்றொரு வகை சுரண்டல் அமைப்புக்கு சமூகம் மாறி வந்து கொண்டுள்ளது. இத்தகைய சுரண்டல் அமைப்பு முறை இல்லாத சமூகம் சாத்தியமா என்பதுதான் அன்றைய கட்டத்தில் எழுந்த கேள்வியாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கடவுளின் இருப்பு பற்றியும், மன்னர்களின் அதிகாரங்களை குறித்தும் கேள்விகளை எழ செய்தன. இருப்பினும், இவை அனைத்தும் ஓரிடத்தில் தொக்கி நின்றன. அந்த சூழலில்தான் மார்க்ஸ் வருகிறார்.”
“தனித்தனியாக தொடர்பற்று இருந்த ஹெகல், ஃபாயர்ஃபார்க் உள்ளிட்டவர்களின் தத்துவங்களை இணைத்து அதனுடன் தனது ஆய்வையும் ஒருங்கிணைத்து தீர்வை முன்வைக்கிறார் மார்க்ஸ். தனியுடமை உருவாக்கத்தை பற்றியும் அதை ஒழித்து பொதுவுடமையை உருவாக்கபட வேண்டிய அவசியம் பற்றியும் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார் மார்க்ஸ்.”
இதை உள்ளடக்கமாக கொண்டு வரலாற்று பூர்வமாக பல தகவல்களை முன்வைத்து மார்க்சிய தத்துவம் செழுமைப்படுத்தப்பட்டதை தெளிவாக விளக்கினார் தோழர் முருகவேள்.
மேலும்,
“புரட்சிகர அரசை உருவாக்குவதில் பாட்டாளி வர்க்கம்தான் தலைமை பாத்திரம் ஆற்ற முடியும். அந்த வர்க்கம்தான் இணைந்து செயல்படும் தன்மைபெற்றது. விவசாய வர்க்கம் குறிப்பிட்ட அளவில் புரட்சிகர பாத்திரம் ஆற்றினாலும் கூட அது பாட்டாளி வர்க்கம் அளவுக்கு ஒன்றிணைந்து செயல்படும் தன்மையற்றுள்ளது. அது பாட்டளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகர பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பது அனுபவங்கள். …அத்தகைய பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்படக்கூடிய கட்சி இருக்க வேண்டும். அதுதான் முதலாளித்துவம் உள்ளிட்ட அனைத்து சுரண்டல் அமைப்பு முறைகளில் இருந்து விடுவித்து சமூக மாற்றத்தை உருவாக்கும். இவை மனிதகுல வரலாற்றின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் ஆகும். இதை நமக்கு தந்தவர் மார்க்ஸ்” என்றார்.
தோழர். சேல் முருகன்
இறுதியாக பேசிய தோழர் சேல் முருகன், இன்றைக்கு மார்க்சியத்தின் பெயராலேயே மார்க்சியத்தை சிதைக்க முயற்சிகள் சிலர் எடுத்து வரும் சூழலில் மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் பற்றி விளக்கி பேசினார்.
“மார்க்ஸ் கண்டறிந்த சமூக வளர்ச்சி கட்டம் பற்றிய வரலாற்று பொருள்முதல்வாதத்தை மறுத்து, முதலாளித்துவ சமூகம் இறுதியான ஒன்று அது மாறாது என்று ஒரு தரப்பும், மறுபக்கம் அனைத்தும் தானாகவே மாறிவிடும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே தானாக சமூக மாற்றத்தை உருவாக்கி விடும் என்றும் மற்றொரு தரப்பும் மார்க்சியத்தின் பெயராலேயே மார்க்சிய விரோத வாதங்களை முன்வைக்கின்றனர். கற்பனாவாத சோசலிசத்தை முன்வைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து இந்தியாவின் உற்பத்தி முறை குறித்த இன்றைய சூழலையும் சுருக்கமாக விளக்கிய அவர், இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தின் மார்க்சியமான லெனினியத்தை தாக்கி மார்க்சியத்தை பூஜை பொருளாக்குபவர்களையும் அம்பலப்படுத்தி பேசினார். இனவாதம் உள்ளிட்ட பல்வேறு முதலாளித்துவ வர்க்க அரசியல்களை மார்க்சியத்தின் பெயரால் பேசுபவர்களை மார்க்சிய உதாரணம் கொண்டே அம்பலப்படுத்தினார்.
“கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளில் ஒப்பற்ற தலைவனாக மார்க்ஸ் விளங்குகிறார் என்பதை முதலாளித்துவ ஊடகமான பிபிசி யே ஒப்புக்கொள்ளும் அளவில் உலக மக்களின் வாழ்க்கையிலும் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார் மார்க்ஸ்.” என்றார்.
இவ்வாறாக நேற்றைய நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தது. மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களை கற்பிப்பதாகவும் அமைந்தது.
“மார்க்ஸ்க்கு முன்பு மார்க்ஸ்க்கு பின்பு என்று மனித குல வரலாற்றை கட்டாயம் பிரிக்க முடியும் ”
என்பதை உணர்த்துவதாக இருந்தது.
உரையாற்றிய தோழர்களுக்கும், பார்வையாளர்களாக கலந்து கொண்ட தோழர்களுக்கும் செந்தளம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு