சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளின் இன்றைய அவலநிலை . . .

ந. தெய்வ சுந்தரம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளின் இன்றைய அவலநிலை . . .

மாபெரும் அறிஞர்கள் இரா.பி. சேது அவர்கள் ,  வையாபுரி அவர்கள் (தமிழ் லெக்சிகன்) மு.வ. அவர்கள், ந. சஞ்சீவி அவர்கள், சி. பா. அவர்கள், மு. சண்முகம் அவர்கள், பொற்கோ அவர்கள், மணவாளன் அவர்கள், இ. சுந்தரமூர்த்தி அவர்கள், வ. ஜெயதேவன் அவர்கள் , மா. செல்வராசன் அவர்கள், வீ. அரசு அவர்கள் , ய. மணிகண்டன் அவர்கள், பழனி அவர்கள், ஏகாம்பரம் அவர்கள்  உட்பட பலர் சிறப்பாகப் பணியாற்றி  . . .  சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்தது ஒரு வரலாறாக ஆகிவிட்டது. இவர்களில் மூன்று பேராசிரியர்கள் (சி.பா, பொற்கோ, இ.சுந்தரமூர்த்தி)  பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாகவும் பணியாற்றியவர்கள்! பேரா. பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழத்திற்கே துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்று ந. சஞ்சீவி, பொற்கோ பணியாற்றிய தமிழ் இலக்கியத்துறைக்குத் தமிழ்ப் பேராசிரியர்கள் கிடையாது. தமிழ்மொழித்துறையிலும் இரண்டு விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளார்கள். 

அவர்களில் ஒருவரை இன்று தமிழ் இலக்கியத் துறைக்குத் தலைவராக நியமித்துள்ளார்கள்.  ஆக, தமிழ்மொழித்துறைக்கு ஒரு விரிவுரையாளர் (தலைவர்), தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு விரிவுரையாளர் ( பொறுப்புத் தலைவர்) ! இரு பேராசிரியர்களுக்கும் எனது பாராட்டும் வாழ்த்தும்! 

மேலும் திருக்குறள் ஆய்விருக்கை (பேரா. மோகனராசு அவர்கள் முன்னாள் பேராசிரியர்) , கிறித்தவத் தமிழ் ஆய்விருக்கை (பேராசிரியர் இன்னாசி அவர்கள் முன்னாள் பேராசிரியர்) என்று இரண்டு இருக்கைகளும் உண்டு. அவற்றிற்கும் பேராசிரியர்கள் பதவிகள் உண்டு.. ஆனால் இவற்றிற்கும் இன்று பேராசிரியர்கள் கிடையாது! 

இத்துறைகளில் முதுகலை முதல் ஆண்டு, இரண்டாமாண்டு, எம்.ஃபில், முனைவர் பட்டப் படிப்புகள் உண்டு என்பது கவனத்திற்கு உரியது. 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் உண்டு! கல்லூரிகளில் ஒரு துறை நீடிக்கவேண்டுமென்றால், குறிப்பிட்ட ஆசிரியர் எண்ணிக்கை வேண்டும் என்று சட்டம் இடுகிற உரிமைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே இந்த அவலநிலை! 

தமிழ்நாட்டின் தாய்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளின் இன்றைய நிலை  . . .  கருதிப்பாருங்கள்!  (70 துறைகளைக்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 700 பேராசிரியர்கள் உண்டு. ஆனால் தற்போது எனக்குக் கிடைத்த தகவலின்படி சுமார் 150 பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர் . அப்படியென்றால் 500 ஆசிரியர் பதவிகள் என்னவாயிற்று?) )

தமிழ்த்தாய் வாழ்த்துக்கான உரிய மரியாதைக்காகப் போராடும் நாம்  . . .  தமிழகத்திலேயே . . .  அதுவும் தாய்ப் பல்கலைக்கழகத்திலேயே . . .  தமிழ்த்துறைகளின் இந்த அவலநிலையைப் போக்கக் குரல் கொடுக்கவேண்டாமா? இந்தியாவின் பிற மாநிலங்களில் நிறுவப்பட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கிற அவலநிலையைக் கண்டு வேதனையடைகிற தமிழ்ச்சமுதாயம் . . .  தமிழ்நாட்டிலேயே தமிழ்த்துறைகளின் இந்த அவலநிலைக்கு எதிராகக் குரல்கொடுக்கவேண்டாமா? 

இந்த அவலநிலை தமிழகத்தில் பிற பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளிலும் நீடிக்கிறது என்பதும் கவனத்திற்கு உரியது! 

தமிழ்நாடு அரசு இந்த அவலநிலையைப் போக்க உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று வேண்டுகிறேன். 

தமிழ் அன்பர்கள் இதுபற்றிப் பல்கலைக்கழகத்திற்கும் அரசுக்கும் வேண்டுகோள் அனுப்பிவைக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன். 

அன்புடன்

ந. தெய்வ சுந்தரம், முன்னாள் தமிழ்மொழித்துறைப் பேராசிரியர் & தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

https://www.facebook.com/100004424580477/posts/3741561846001265/?rdid=VHvv8cL1WGidRyZt

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு