கவிதை: பயங்கரவாத பூச்சாண்டிக் காட்டி - நாடோடிகளாய் எங்களை மாற்றி...

பாண்டி

கவிதை: பயங்கரவாத பூச்சாண்டிக் காட்டி - நாடோடிகளாய் எங்களை மாற்றி...

எங்கள் வளமோ ஓராயிரம்
எங்கும் விரியும் எழிலோவியம்
நில்லாமல் ஓடும் நீர்வளம்
எப்போதும் பேசும் காவியம்

 

காடுகள், மலைகள் ஆயிரம்
புதைந்து கிடக்கும் வளங்களாயிரம்
அந்நியன் தின்று கொழுக்க
பாய் விரித்தது பாசிச பேய்கள்

 

வளங்களை எல்லாம் வாரிச் சுருட்ட
இருட்டறைக்குள் திட்டம் தீட்டி
காட்டை நாட்டை வளர்த்த
எம் மக்களை மவுனமாக்கியதே

 

பயங்கரவாத பூச்சாண்டிக் காட்டி
நாடோடிகளாய் எங்களை மாற்றி
எதிர்த்தவர்களை பிணமாய் மாற்றி
கொட்டமடித்தது பாசிசக் கூட்டம்

 

அரசு பயங்கரவாத நீர் ஊற்றி
பழங்குடி மக்களை பயங்காட்டி
கருவைக் கூட பயங்கரமாய் காட்டி
முளைக்கும் முன்னே புதைத்தது மண்ணில்

 

மதவெறியை விசமாய் ஏற்றி
போர்வெறிக் கூச்சல் கூட்டி
தேசவெறி எரிச்சலூட்டி
நம் அறிவைத் திண்றதே

 

-        இதுவரை இழந்தது போதும்
பிரிந்து கிடந்தது போதும்
மீண்டும் பொங்கி எழுந்திடு
இனியொரு சுதந்திரப் போரைத் தொடங்கிடு

பாண்டி