கவிதை: பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவு நீடூழி வாழ்க!
ரணதீபன்

தூக்கிலேற்றியவனை
கொல்லமுடியாமல்
இன்றுவரை பதறிக் கொண்டிருக்கிறது
முதலாளித்துவம்!
ஆளும் வர்க்கத்தின்
தூக்கு கயிறுகளும்
உயிர் துளைக்கும்
ஆயுதங்களும்
பகத்சிங்குகளை
பணியவைக்க முடியாதென
வரலாற்றில் சாட்சியமளிக்கின்றன!
தோழனே பகத்சிங்!
உன்னை அராஜகவாதியாக கட்டமைக்கும்
அற்பர்களின் எண்ணம்
தவிடு பொடியாகிக் கொண்டிருக்கிறது...
அகிம்சையின்
இம்சையை தோலுரித்து
அதன் கொடூர கோரமுகத்தை
நீ அம்பல படுத்தினாய்...
ஏகாதிபத்தியத்திற்கும்
காந்தியத்திற்கும் எதிராக
வீசியெறியப்பட்ட
உந்தன் வெடிகுண்டின் வேகத்தை
மட்டுப்படுத்துவதற்காய்
இங்கே சிலர்
மாடாய் மேய்ந்து கொண்டிருக்கின்றனர்...
என்ன சொல்ல!
அவர்களும் தங்களை
சிவப்பர்களாக சிலாகிக்கிறார்கள்
உந்தன் பெயரையும்
ஆடையாக உடுத்திக் கொள்கிறார்கள்...
சீர்த்திருத்தத்தின் காலடியில்
முதலாளித்துவத்தின் சிலுவையை
சுமந்து கொண்டிருக்கிறார்கள்...
செங்கொடி பிடித்த
அந்த ஏசுபிரான்கள்!
அவர்களது நெற்றிப்பொட்டில்
ஆணி வைத்து அரைந்தாலும்
யூதாஸ்களின் முத்தங்களுக்காவே
அவர்கள் ஏங்கி கிடக்கிறார்கள்...
தங்களை அடக்கம் செய்துக் கொண்ட
பாராளுமன்ற சவபெட்டிக்குள்ளேயே
சவமாகிபோனதே அவர்களுக்கு
சுகமாகி போனது!
எவையெல்லாம் நீ எதிர்த்தாயோ
அவையெல்லாம் அரவனைத்துக் கொண்டு
உன்னையும் ஏந்தி கொள்கிறார்கள்!
தோழனே!பகத்சிங் நீ
இந்தியாவின் ஆகச்சிறந்த
போல்ஷ்விக்
லெனினது மாணவன்
இந்தியப் புரட்சிக்காக
தலைகொடுத்த தலைமை தோழன் நீ!
சொந்த தொழிலிலும்
குடம்ப வாழ்விலும்
மூழ்கியிருந்தால்
கட்சி கட்டுவதும்
புரட்சி நடத்துவதும் சாத்தியமில்லை
என்று நீ கூறியது எத்தனை
தீர்க்கமானது..!
உனது வழியில்
வர்க்கப் பகை முடிக்க
உடல் பொருள் ஆவியை
அர்ப்பனித்து
மானுடம் விடதலைப் பெற
இந்நாளில் சபதமேற்கிறோம்!
நாட்டை அச்சுறுத்திவரும்
பாசிச பேய்தனை
பாடையில் ஏற்ற இந்நாளில்
உறுதி கொள்வோம்!
பகத்சிங் ராஜகுரு சுகதேவ்
நினைவு நீடூழி வாழ்க!
இன்குலாப் ஜிந்தாபாத்!
- ரணதீபன் (முகநூலில்)
https://www.facebook.com/share/1EMJEbBrGK/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கவிஞரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு