தேர்தல் : தேவை வர்க்கப் பார்வை!
துரை. சண்முகம்
நாம எவ்வளவு சொன்னாலும் ஜனங்க கேட்கவா போறாங்க! ஓட்டு போட்டுகிட்டுதான் இருக்காங்க!
அதனால?
நாமளும் போய் ஒரு ஓட்ட போட்டுருவோம்!
இப்படி சில முற்போக்காளர்களின் தர்க்கம்.
நூற்றாண்டுகளாக பகுத்தறிவாளர்கள் கூட சாமி இல்லை மதங்களை நம்பாதே என்று பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்கள் அப்படியே கேட்டு விடுவதில்லை. முன்பை விட டிசைன் டிசைனாக விழாக்கள் கொண்டாட்டங்கள் என கடவுள் பக்தி கலை கட்டுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.
அதனால நாம சொல்லி கேட்கவே இல்ல! அதனால நாமளும் போயி சாமிய கும்பிடுவோம் ! கோயில் திருப்பணிகள செய்வோம் என்று எந்தபகுத்தறிவாளராவது கருத முடியுமா? பக்தியும் மத உரிமையும் தனிநபர்களது விருப்பம் உரிமையின் பாற்பட்டதாக இருக்கிறது.
அதே நேரம் அதை கடைபிடிப்பவர்களிடம் நாத்திகம் மற்றும் பகுத்தறிவுக்கான பிரச்சாரம் செய்கின்ற உரிமையை அதற்காக அவர்கள் கைவிடுவதில்லை.
இப்படித்தான் சமூகத்தில் ஏற்கனவே பிடிமானமாக இருக்கிற பழைய கருத்தை மாற்றுவதற்கான ஒரு பிரச்சார முறையை தேர்ந்தெடுக்க முடியும். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் உருவாக்கி இருக்கும் அத்தனை வாழ்க்கை வேதனைகளுக்கும் மனதில் ஒரு வடிகாலாக வேண்டுதலையும் சாமி கும்பிடுவதையும் மன ஆறுதலாக தனது உடனடி வாழ்க்கை சுழற்சிக்கான மனப்பயிற்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களது வேண்டுதல்களை தீர்க்கும் அடிப்படையை சமூகமாக அமைக்கும் வரை இதை முற்றிலும் தீர்க்க முடியாது என்பதுதான் அறிவியல் பூர்வமான சமூக உண்மை.
அதுபோலத்தான் தேர்தலில் மக்கள் பங்கெடுப்பது என்பது
வெள்ளி செவ்வாய் விளக்கு போடுவது போல ஏதோ ஒரு அரசியல் நம்பிக்கைதான்.
அதே மக்கள்தான் எல்லா பயலும் திருட்டுப் பய ! எவனையும் நம்ப முடியாது! எவன் வந்தாலும் நம்ம கஷ்டப்பட்டு உழைச்சுதான் வாழ வேண்டி இருக்கு! என்று இந்த தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே தேர்தலை பயன்படுத்துவது என்பது அதில் பங்கேற்பது என்பது மட்டுமல்ல
அதைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வையும் விமர்சன ரீதியான அணுகு முறையையும் மக்களிடம் ஏற்படுத்தும் புறக்கணிப்பு வகையிலான பிரச்சாரமும் கூட தேர்தலை பயன்படுத்துவதில் அடங்கும். தேர்தலை பயன்படுத்துவது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு எந்த அளவுக்கு பயன்படுகிறது என்ற பார்வையில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் அணுகுமுறை.
மாற்று அரசியல் அமைப்பின் மீது மக்களுக்கு பெரும்பான்மை நம்பிக்கை வரும் வரை தங்களுக்குத் தெரிந்த வழியில் தேர்தலை அணுகிக் கொண்டு தான் இருப்பார்கள்.
நாம் கருத வேண்டியதும் தேர்தல் நடப்பதும் நடக்காததும் நமது விருப்பத்தில் இல்லை.
ஆளுகையில் இருக்கும் ஆளும் வர்க்கமும் அரசும் தீர்மானிப்பதில் இருந்து நடக்கிறது. மக்கள் ஓட்டு போடட்டும். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும். ஆனால் அதை ஒட்டிய பாட்டாளி வர்க்க அரசியலை கைக்கொள்ள வேண்டிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் களமாக அதை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியில் தேர்தல் களத்திற்கு வெளியே கம்யூனிச அமைப்புகள் செய்யும் மக்களுக்கான போராட்டத்தில் தான் இதற்கான நியாயத்தை மக்கள் அளவு ரீதியாக படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள்.
ஓட்டு போடுவதுனாலயே மக்கள் இந்த அரசமைப்பு முறையை விருப்பமாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இல்லை.
குடும்பம் நடத்துவதாலேயே அனைவரும் இனிய தம்பதிகள் என்று எப்படி கருத முடியாதோ!
அப்படி வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்ட இந்த கூட்டு வாழ்க்கை நடக்கிறது.
அதுபோல ஓட்டு போட வேண்டாம் என்று சொல்வது மட்டுமல்ல புரட்சி. மாற்று அரசியல் சித்தாந்த கண்ணோட்டத்தில் இடையறாது மக்களுடன் தொடர்பு கொண்டு வேலை செய்வதுதான் முதன்மையான இலக்கு.
உடனே மாற்றம் இல்லை! புரட்சி வரவில்லை என்பதால் தோல்வி அடைந்து விட்டோம்! என்று கருதுவதில் ஏதாவது அறிவுப் பார்வை இருக்கிறதா?
இந்த முதலாளித்து அமைப்பு முறை தேர்தலில் கூடத்தான் ஒரு மாற்றமும் வரவில்லை!
அதை மட்டும் நம்ப சொல்லலாமா?
இருப்பதிலேயே நல்ல கட்சியை ஆதரிப்போம்! என்றால் இந்தக் கட்சிகளால் மட்டும்! நீங்கள் சொல்லும் குறிப்பிடத்தக்க சமூக மாற்றம் புரட்சி என்று மாற்றம் வந்து விட்டதா? இந்த முதலாளித்து அமைப்பு முறை நாம் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு புரட்சிகர அரசியல் மாற்றத்தை தந்துவிட்டதா?
மக்களும் முழு மனதோடு நம்பவில்லை, நாமும் கூட நம்பவில்லை. இருந்தாலும் இருக்கிறவரை நம்ப வைப்போம் என்பது என்ன அறிவியல் பார்வை?
இந்தத் தேர்தல் முறை மாற்றத்தையும் தரவில்லை! ஆனாலும் இதை நம்புவது முற்போக்கு! என்பதில் அப்பட்டமான தானும் கும்பலில் கோவிந்தா! என்பதை தவிர எந்த முற்போக்கும் இல்லை.
தேர்தலை புறக்கணித்து சாதிச்சிட்டீங்களா? என்றால்,
தேர்தலை ஆதரித்து சாதித்ததும் இல்லை என்பதும் சேர்ந்தே வருகறது. சொல்லப்போனால் தேர்தலுக்கு வெளியே ஆன களத்தில்தான் மக்கள் போராடி சாதித்தது அதிகம். நமக்காக ஓட்டு வாங்கி ஜெயித்துப்போனதாக சொல்லும் நல்லவர்கள் கூட கடைசியில் பாராளுமன்றத்தின் காந்தி சிலைக்கு முன்னே போய் கதறுவதை தவிர வேறு வழியில்லை.
எந்த ஆக்கபூர்வமான மாற்றத்தையும் தராமல் இருக்கிற உரிமைகள் வாழ்க்கை நிலைமைகளையும் பறித்து கொள்வதின் மீது நம்பிக்கை வைக்கலாமாம்!
கம்யூனிசத்தை நம்புவது மட்டும் வரட்டுத்தனமாம்! கதைக்கு ஆகாத பேச்சாம்! இப்படி சில கிளுகிளுப்பு வாதிகள் கிளப்பி விடுகிறார்கள்.
தேர்தல்! ஓட்டு போடுவது! நமது கட்டுப்பாட்டில் இல்லை. சடங்கு படி கும்பாபிஷேகம் பிரதோஷம் என்பது போல அது நடந்து கொண்டுதான் இருக்கும்.
இவற்றின் மீதான விமர்சன அரசியல் பார்வையையும்,
மாற்று அரசியல் பாதையையும்
மக்களிடம் கொண்டு செல்வதில் உரிய ஒருங்கிணைப்பும் முழுமையும் அற்று இரண்டகம் செய்தவர்களால்தான் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறோம்.
ஓட்டுப் போடுவதை மட்டுமே புனிதக் கடமையாக வலியுறுத்த வேண்டிய அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.
மக்கள் ஓட்டு போட்டாலும்,
அவர்களிடம் உழைக்கின்ற வர்க்கத்துக்கான உரிமைகளுக்கான ஜனநாயகத்திற்கு எப்படி போராட வேண்டும்! எனும் அரசியல் பிரச்சாரத்தை கூர்மையாக எடுத்துச் செல்வது தான் நமக்குத் தேவை.
தேர்தல் களத்திலும் கூட.
இதில் ஏதோ அதிகப்படியாக சரியாக வேலை செய்து களைத்தவர்கள் போல பேசிக் கொள்வதில் நியாயம் இல்லை.
எப்போதெல்லாம் தேர்தல் களத்திற்கு வெளியே அதிகப்படியான மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்பியதன் மூலமாகத்தான் மக்களுக்கான உரிமைகள் சட்டப்படியாக ஆக்கப்படும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, உழைக்கும் வர்க்கத்திற்கு அதிகாரம் வழங்காத இந்த அரசமைப்பு முறையில் ஒட்டிக்கொண்டதால் கிடைத்தது அல்ல!
ஆகவே தேர்தல் அரசியலை புரிந்து கொள்வது என்பது
இருப்பதில் அப்படியே பங்கேற்பது என்பது அல்ல,
நமக்கு என்ன மாதிரியான ஜனநாயகம் தேவை! அதற்கு ஏற்ற எந்த வகையான தேர்தல் தேவை! என்பதுவரை
மக்களிடம் வாதிப்பதற்கான அரசியல் களமாகவும் அதை பயன்படுத்துவதுதான் சரி.
மக்களின் எதிரிகளான ஆளும் வர்க்கம் தேர்தலை தனக்கான பலாபலன் கணக்கு போட்டு தான் செய்கிறது. இப்போது இருக்கிற தேர்தல் முறையிலான தனக்கான அதிகார ஒப்புதலை கீழ் இருந்து வாங்கிக் கொள்வதற்கான நாடகக் கம்பெனியாக நடத்துகிறது.
பாட்டாளி வர்க்கம் மட்டும் எந்த உத்தரவாதமும் ஒப்புதலும் இல்லாமல் இதன் மீது தனக்கான நோக்கமற்று ஒத்து ஊத வேண்டிய அவசியம் இல்லை.
https://www.facebook.com/100080904177819/posts/944881764885287/?rdid=gYJZdkuzSA3mBDIl
=======================================================================
முதலாளித்துவக் கட்சிகளை அதன் தன்மைகளை வேறுபாடுகளை வகைப்படுத்தி புரிந்து கொள்வது என்பது வெவ்வேறு வகை வடிவங்களில் அணுகுமுறைகளில் இவர்கள் எவ்வாறு முதலாளித்துவ அரசு எந்திரத்தின் ஆரக்கால்களாக இருக்கிறார்கள் என்பதை புரிய வைப்பதற்குதான்.
மாறாக இவரை விட அவர் நல்லவர் அவரைவிட இவர் நல்லவர் என்று முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறை அரசியலுக்குள் மக்களை நிலை நிறுத்துவதற்காக அல்ல.
அரசியல் அடிப்படை காரணங்களின் மீது வாதம் செய்யாமல் கட்சிகளைப் பற்றிய அதன் தலைவர்களை பற்றிய வாதங்களாக மாற்றி
அதை ஒரு உதாரணத்திற்கு குறிப்பிடுவது என்பதையும் கடந்து அதன் உள்ளடக்க அரசியலை பேசுவதற்கு பதிலாக அதன் வடிவ போக்குகளிலேயே வாழ்ந்து விடுவது என்பதை அரசியல் ஆய்வுபோல சிலர் சுமத்த விரும்புகிறார்கள்.
இந்தப் போக்கு புதியன சிந்திக்க விரும்பும் இளைஞர்களின் தலையில் பழைய உப்புமாவை கிண்டுகிறது.
ஏனென்றால் உள்ளடக்கத்தின் மீதான வாத விமர்சனமாக இதைக் கொண்டுச் சென்றால்,
முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறைக்கு முட்டுக் கொடுக்கும் அத்தனை விதமான அரசியல் போக்குகளும் அம்பலப்பட்டு விடும். ஆகையால் நபர்களைப் பற்றிய வாதங்களாக கட்சிகளின் எசப்பாட்டுகளாக இதை இசைப்பதை மைய ஊடகங்கள்
விவாதங்கள் என்ற பெயரில் இப்போது சமூக ஊடகங்களின் அவர்களது இளைய பங்காளிகளின் கைக்கும் வழங்கியிருக்கிறது.
அதனால்தான் முதலாளித்துவ சீரழிவு அரசியல் உள்ளடக்கத்திற்கு ஏற்ற அதன் சகல விதமான சேட்டைகளையும் அதன் ஆன்மாவோடு பொருத்திச் சொல்லாமல், விஜய் கூட்டத்தில் தற்குறிகள் தலைகீழாக தொங்குகிறார்கள்! எனும் கேலி கிண்டலாக முடித்துக் கொள்வதும், பதிலுக்கு அவர்கள் உதயநிதி மாநாட்டில் மப்பில் ஆடும் இளைஞர், வாழைத்தாரை வெட்டிக் கொண்டு ஓடும் கழகக் கண்மணிகள்! என்று லாவணிக்கச்சேரியாக இனிமையாக முடிக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்கு சொல்லப்பட வேண்டியது அரசு வர்க்கம் ஆகிய பற்றிய பார்வையில் இருந்து ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் அதன் மூலத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிளுகிளுப்பு கதைகளைக் கேட்டு சிரித்து முடித்த பிறகு அத்தோடு கலைந்து விடாமல் அதன் தோற்றுவாய்க்கான காரணத்தை பற்றி சீரியசாக உணர்த்த வேண்டி இருக்கிறது.
ஏனென்றால் கட்சிகள் வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன. கட்சிகளின் தலைவர்கள் அந்த வர்க்க நலன்களை பிரதிபலிக்கிறார்கள். இதற்கு மேலான சேட்டைகள் எல்லாம்
இந்த வர்க்க வரையறைக்குள் நடக்கும் விதவிதமான முழுமையின் பகுதிகள்தான்.
இப்படிப்பட்ட வர்க்க கண்ணோட்ட வகையில் அரசியலை புரிந்து கொள்ளும் தலைமுறையை நோக்கித்தான் நாம் அதிகம் பேசவும் வேண்டியுள்ளது. இதற்காக அரசியல் கண்ணோட்ட ஆற்றல்களை செலவிடவும் வேண்டியுள்ளது.
புதிய தலைமுறையினருக்கு மார்க்சிய கண்ணோட்டத்தில் அரசியலை புரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்றாலே,
அவர்களிடம் தயக்கம் இன்றி எதார்த்தமாக உறவாடுவது
அவர்களிடமிருந்து தற்காலத்திய வாழ்வின் வெளிப்பாடுகளை கற்றுக் கொள்வது அதிலிருந்து இவைகளுக்கான அரசியல் அடிப்படைகளைப் பற்றி தொடர்ந்து உரையாடுவது
என்பது நாம் சளைக்காமல் செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது.
https://www.facebook.com/100080904177819/posts/945076118199185/?rdid=wCg92yC0tGxN3N4e
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு