இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் : ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

ஏஎம்கே

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் : ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

முன்னுரையை படிக்க: 

இங்கே சொடுக்கவும்: கலைப்புவாதம் குறித்து -ஏஎம்கே    

                                                           

1.     இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்                          

2.    நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட்சியும்                

3.    கனுசன்யாலின் ஐக்கியத்திற்கான  முயற்சிகளும் பிளவுகளும்                                        

4.    இ.க.க (மா.லெ) (ம.யு) போல்ஷ்விக் கட்சிக்கு    திட்டம் இல்லை என்ற பிரச்சாரம் குறித்து   

5.    திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் உருவாக்குவதில் நாம் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்

 

பின்குறிப்பு

 

=======================================

 

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

இ.க.க.(மா.லெ)-வை சார்ந்த கனுசன்யால், "சாருமஜும்தாரும் இ.க.க(மா.லெ) மத்தியக் கமிட்டியும் இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தி கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொண்டு வந்தனர்" என்றும், "கட்சியில் தோன்றிய பிளவுகளுக்கெல்லாம் சாருமஜும்தாரே காரணம்" என்றும் கூறி தனது வலது சந்தர்ப்பவாத வழியை முன் வைத்தார். அதே வழியில் மா.லெ குழுக்களின் ஐக்கியத்திற்கான முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தற்போது "பச்சோந்தி" கோவைஈஸ்வரன் தலைமையில் நம்மிடம் இருந்து ஓடிப்போன கலைப்பு -வாதிகளையும் பிழைப்புவாதிகளையும் ஓடுகாலிகளையும் வைத்துக்கொண்டு கனுசன்யால் கட்சியின் தமிழ் மாநிலக் கமிட்டியை உருவாக்கியுள்ளனர். கனுசன்யால் போன்ற சிறந்த தலைவரை நாம் இருட்டடிப்பு செய்துவிட்டதாக நம் மீது குற்றம் சுமத்துகின்றனர். மேலும் நாங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம், அகில இந்திய கட்சியைக் கட்டிவிட்டோம் என்று கூறி அணிகளைக் குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். கனுசன்யால் வழி மற்றும் அவர் எடுத்த ஐக்கியத்திற்கான முயற்சிகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றியுள்ள பிளவுகள் குறித்த வரலாற்று ரீதியிலான காரணங்களைக் காண்போம்.

 

=======================================

 

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக்கான வரலாற்று ரீதியான காரணங்கள்

1. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பிளவு

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தில் அக்கட்சியின் தலைவர் குருச்சேவ் தாக்கல்செய்த அறிக்கையில் மார்க்சிய-லெனினியத்தை நிராகரிக்கும் விதமாக சில கோட்பாட்டு வரையறைகளை முன்வைத்தார்.

அனைத்து மக்களுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான அரசு ஆகிய முழக்கங்களோடு, கட்சி என்பது பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படை மற்றும் சுரண்டும் வர்க்கத்தின் மீதான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் போன்ற கோட்பாடுகள் கைவிடப்பட்டன. ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் "பாராளுமன்றவாத வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்" என்று கூறினார்.

ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது. இன்றைய சகாப்தம் ஏகாதிபத்திய மற்றும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகளது சகாப்தம் என்ற கருத்தாக்கங்களை நிராகரித்ததன் மூலம் சரணாகதிக்குப் பலியாகி மார்க்சியத்தைத் திருத்தும் வகையில் சமாதானப்பூர்வமான மாற்றம், சமாதான சகவாழ்வு, அமைதிவழிப் போட்டி என்ற கோட்பாடுகளை அது அறிமுகப்படுத்தியது. இந்த நவீன திருத்தல்வாதக் கோட்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் வலது சந்தர்ப்பவாதத்தைப் பலப்படுத்தியது.

குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக் கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு கூறியது.

"சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது ஆகியவைதான் முக்கியப் பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கியப் பிரச்சினையாகும். அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின் ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை. இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்." மார்க்சின் பிரபலமான சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், "பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்." லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது "மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச் செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்" திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி போரைத் தடுப்பதற்கான சாத்தியமான கூறுகளைப் பொருத்தமட்டில் ஏகாதிபத்தியப் போர்களும் தலையீடுகளும் தவிர்க்கவியலாததாகும் என்ற லெனினியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது. போருக்கு எதிராகப் போர்தொடுப்பதன் மூலமாகவும், மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறையை ஒழிப்பதன் மூலமாகவும் போரை ஒழித்துவிட முடியும் என்று கூறி குருசேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது.

1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் "ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை இயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு" என்ற கடிதமும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று. இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் "மாபெரும் விவாத ஆவணங்கள்" என்று அறியப்படுகின்றன.

"ஏகாதிபத்தியம் பலமிழந்துவிட்டது, காலனிய முறை முடிவுக்கு வந்து விட்டது" என்ற ஒரு புதிய முடிவுக்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வந்துவிட்டது. குருசேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைபாட்டிலிருந்துதான் சமாதான சகவாழ்வு, ஏகாதிபத்தியவாதிகளுடன் சமாதான வழியிலான போட்டி, சமாதானமாக சோஷலிசத்திற்கு மாறுவது என்ற குருசேவ்வின் திரிபுவாதம் தலையெடுத்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப் போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை "மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி" என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய - லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில் அவர் கூறியதாவது:

"இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது" என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.

அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றிய பெரும்பாலான சி.பி.ஐ. தலைவர்கள் எப்போதும் மார்க்சியவாதிகளாகவும் இருந்ததில்லை, கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததில்லை. இப்போது அவர்களுக்கு நவீன திரிபுவாதத்தை அரவணைப்பது குறித்தும், மார்க்சிய-லெனினியத்தைக் கைவிடுவது குறித்தும் கூரைகளின் மீதேறிக் கூவுவதற்கான வாய்ப்புக் கிட்டியது.

பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதை பின் வருமாறு கூறியது:

"அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கூறாக விளங்குகிறது" என்று கூறியது.

சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல் அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும் நிலைபாடு சேர்க்கப்பட்டது: "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்" என்று அந்தத் திருத்தம் கூறியது.

சி.பி.ஐ-யைகட்சியானது "மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளால்" வழிநடத்தப்படுவதாக பேராயம் கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீன திரிபுவாதத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் "தடைக்கற்களாக" கருதி மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை நிராகரித்தது. கேரளாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. அவர்களுக்கு தெலுங்கானா அல்ல; கேரளாதான் முன்மாதிரியாக விளங்கியது.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60-ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்கு முறைகளைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எரிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை.

நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது. தெலுங்கானாவிற்கு ஆதரவாக நகர்ப்புற பகுதிகளிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் முதலில் ஆதரவு தளத்தைக் கட்டியெழுப்பி, பின்னர் இதுபோன்ற பல தெலுங்கானாக்களை உருவாக்குவதற்காக மக்களுக்கு எழுச்சியூட்டி, அவர்களை ஒருங்கிணைப்பதற்கான பணியை பொறுமையுடன் மேற்கொள்வதற்குப் பதிலாகப் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் உடன்பாடு எட்டப்பட்ட பிறகு தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.

"தெலுங்கானா போர்" நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத் தொடங்கப்பட்டப் போராட்டமோ அல்லது தொடர்கின்றப் போராட்டமோ அல்ல. மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்தது. மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையானது "அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்குமாறும் தெலுங்கான விவசாயிகளையும், போராளிகளையும் கேட்டுக் கொண்டது". காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவு செய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது "கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசு அதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல".

சி.பி.ஐ. கட்சியானது 1951- மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பிவைத்தது. அக்குழுவின் நோக்கம் "கட்சியானது புரட்சிகர வழியை கைவிட்டுவிட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில் உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் - அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.

3. சி.பி.எம்-.க்குள் புரட்சியாளர்களின் போராட்டம்

சி.பி.ஐ-யின் திருத்தல்வாதத்தை எதிர்த்து சி.பி.ஐ.யிலிருந்து பிளவுப்பட்ட பின்பும் கூட சி.பி.ஐ(எம்) தலைமை குருச்சேவின் நவீன திருத்தல்வாதம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்தது. மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968-ல் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளிப்போட்டது. ஆனால் இக்கட்சி சோவியத் திருத்தல்வாதத்திற்கு அடிப்படையில் எதிரான ஒன்று அல்ல என்பது 1968-ல் பர்துவான் சிறப்புக்கூட்டத்தில் நிரூபணமானது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் தலைமையானது உண்மையில் ஒரு மையவாத நிலைப்பாட்டை எடுத்தது. இது வலது பாதையிலிருந்து அடிப்படையில் வேறான ஒன்று அல்ல. சி.பி.ஐ. போலவே இந்தியா தேசிய சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற நிலையை எடுத்தது. இதற்காக இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரமானது, ஆனால் பொருளாதார ரீதியாக சார்புடையது என்ற புதுமையான வாதத்தை முன்வைத்தது.

சி.பி.ஐ(எம்)-இன் கட்சித் திட்டம் கூறியதாவது: "அமைதியான வழிகளின் ஊடாக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காகவும் சோசலிச மாற்றத்தை அடைவதற்காகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்தை துறப்பதற்குத் தாமாகவே முன்வரமாட்டார்கள். அவர்கள் மக்களின் விருப்பத்தை நிராகரிப்பதற்கு - சட்டம் ஒழுங்கைக் குலைப்பதன் மூலமாகவும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் பின்னடைவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிப்பார்கள். எனவே புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருப்பதும், நாட்டின் அரசியலில் ஏற்படும் திடீர் திருப்பங்களை நேர்கொள்வதற்கு ஏற்றவகையில் தங்களுடைய பணியினை ஒருமுகப்படுத்துவதும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது."என்று கூறியது. இவ்வாறு அது அமைதிவழிப் பாதையை முன்வைத்தது. இதையே சி.பி.எம். கட்சி வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது என நேரு அரசாங்கம் குற்றம் சுமத்தியது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், தங்களுடைய கட்சித் திட்டத்தின் 113-வது பிரிவும், ஏறத்தாழ இதே காலகட்டத்தில் பம்பாயில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் (டாங்கே வாதிகளின்) ஏழாவது பேராயத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டத்தின் 99-வது மற்றும் 102-வது பிரிவுகளும் ஒன்று போலவே இருந்ததோடு, அவ்விரண்டு திட்டங்களில் இடம் பெறுள்ள "சொற்றொடர்களும், பத்திகளும்" ஏறத்தாழ ஒன்றுபோலவே இருந்துங்கூட, இந்தியாவின் அந்நாளைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா மார்க்சிஸ்டுகள் வன்முறைப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள்" என்ற "கீழ்த்தரமான அவதூறை" பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள் என நந்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் என்ற தலைப்பில் சி.பி.ஐ.(எம்) தலைமைக்குழு உறுப்பினரான பசவப்புன்னையா புலம்பினார்.

முன்னதாக, சி.பி.ஐ (எம்)-வன்முறைப் புரட்சிக்கான தயாரிப்பை மேற்கொள்ளும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருந்த குல்சாரிலால் நந்தாவின் எண்ணைத்தை மாற்றுவதற்காக கட்சிப் பேராயம் நிறைவு பெற்றவுடன் குல்சாரிலால் நந்தாவை சந்திப்பதற்காகக் கட்சியின் பொதுச் செயலாளர் சுந்தரய்யா புது தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நந்தாவைச் சந்தித்த சுந்தரய்யா தாங்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும், தங்களுடைய கட்சி "சட்ட ரீதியாகவும், வெளிப்படையாகவும்தான் செயல்படும்" என்றும் அவரிடம் உறுதிமொழி அளித்தார். தாங்கள் ஆயுதப் போராட்டம் போன்ற எந்த ஒரு போராட்டத்தைக் குறித்தும் சிந்தித்தும் கூட பார்த்ததில்லை என்று சுந்தரய்யா கூறினார். "இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து "ஜனநாயக உரிமைகளையும்"(!) நிராகரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு தாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல" என்றார் அவர்.

தெலுங்கான வகைப்பட்ட போராட்டத்தைக் கட்டியமைப்பதற்காக, தலைமறைவாக இயங்குவதற்கான தயாரிப்புகளை தாங்கள் மேற்கொண்டுவருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்தார். தெலுங்கானாவின் ஆயுதந்தாங்கிய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சி.பி.ஐ.யின் நிலையையே சி.பி.ஐ (எம்)-மும் எடுத்தது. அதாவது தெலுங்கானா போராட்டம் அரசியல் அதிகாரத்திற்கான போரட்டம் அல்ல நிலத்திற்கானப் போரட்டமே என்ற வரையறையையே மேற்கொண்டது.

தொகுத்துக் கூறினால் அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சி அல்ல! நிலத்திற்கானப் போராட்டம், அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல! என்ற நிலைப்பாட்டைத்தான் சி.பி.ஐ(எம்)-கட்சி எடுத்தது. இவ்வாறு சி.பி.ஐ(எம்) கட்சி மையவாத நிலைப்பாட்டிலிருந்து திரிபுவாதத்திலும் வலது சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கியது. இத்தகைய நிலையில்தான் சி.பி.ஐ (எம்)-க்குள் இருந்த புரட்சியாளர்கள் சி.பி.ஐ (எம்)-ன் திரிபுவாத நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப் பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.

=======================================

 

2. நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட்சியும்

1. சி.பி.ஐ (எம்.எல்) உருவாக்கம்

சி.பி.எம். கட்சிக்குள் போராடிய புரட்சியாளர்கள் நவீன திரிபுவாதத்திற்கு எதிராகவும், அக்கட்சி வர்க்கப் போராட்டத்திற்கு இழைத்த துரோகத்திற்கு எதிராகவும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டுவதற்குப் போராடினர். அவ்வாறு போராடிய புரட்சியாளர்கள் பலகுழுக்களாக இருந்து போராடினார்கள். சாருமஜூம்தார் தலைமையிலான குழு, எம்.சி.சி குழு, நாகிரெட்டி குழு போன்ற பலக்குழுக்களாக இருந்து போராடினர். கனுசன்யால் சி.பி.ஐ (எம்.எல்) - கட்சிக்குள்ளேயே இருந்து மாறுபட்ட நிலை எடுத்தார்.

புரட்சிகரப் போராட்டத்தைத் தொடரும் விதமாக 1967-ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு புரட்சியாளர்கள் அறைகூவல் விட்டனர். ஆனால் சி.பி.ஐ (எம்)-கட்சி, காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பது என்ற பெயரில் ஓடுகாலியான சி.பி.ஐ. கட்சி மற்றும் பிற பிற்போக்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்தது. தேர்தலுக்குப் பின்பு மே.வங்கத்திலும், கேராளாவிலும் சி.பி.ஐ (எம்) தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் மூலம் அக்கட்சி பாராளுமன்றப் பாதை, வர்க்க சமரசப் பாதை என்று தனது பாதையை மாற்றிக்கொண்டது. மே.வங்கத்திலும் கேரளாவிலும் அமைந்த சி.பி.ஐ.(எம்) தலைமையிலான அரசாங்கங்கள் இவர்கள் தலைமையிலான அகில இந்திய"கிசான் சபா" என்ற விவசாய சங்கத்தின் கோரிக்கையான நிலச்சீர்திருத்தக் கொள்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டன. சி.பி.ஐ (எம்) ஆட்சியாளர்கள் உழுபவனுக்கே நிலம் சொந்தம் போன்ற நிலச்சீர்திருத்தக் கோரிக்கைகளை கைவிடுமாறு நிர்ப்பந்தித்தனர்.

7-வது காங்கிரசிற்கு பிறகு சி.பி.ஐ.(எம்) கட்சிக்குள்ளேயே இருந்த பொதுவுடமைப் புரட்சியாளர்கள் சி.பி.எம்.இன் துரோகத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினர். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் மற்றும் பிற மிகவும் முக்கியமான பிரச்சினைகளை (நிலத்தைக் கைப்பற்றுதல், அறுவடையைக் கைப்பற்றுதல் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் போராட்டத்தை விவசாயப் புரட்சியை நோக்கிக் கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். நில உச்சவரம்புச் சட்டப்படி உபரி நிலங்களைப் பறிமுதல்செய்வது மற்றும் விநியோகம் செய்வது, நிலம் உழுபவனுக்கே சொந்தம் என்ற அணுகுமுறையோடு நிலச்சீர்திருத்தத்தை புரட்சிகரமாக்குவது என்ற கோரிக்கையை முன்வைத்தும் சி.பி.ஐ.எம். கட்சிக்குள் இருந்த பொதுவுடமைப் புரட்சியாளர்கள் 1967- மே மாதத்தில் வடக்கு வங்காளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நக்சல்பாரி எழுச்சியை நடத்தினர். அவ்வெழுச்சியானது சி.பி.ஐ.எம். அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டது.

சி.பி.ஐ.(எம்)-ன் நவீனத் திரிபுவாதத்தை எதிர்த்தும், மா.லெ. சிந்தனையின் அடிப்படையில் கட்சியைக் கட்டுவதற்கும் சி.பி.ஐ.(எம்)-குள் இருந்த புரட்சியாளர்கள் முதலில் விவசாயிகளின் புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். பிறகு விரைவிலேயே புரட்சியாளர்களை உள்ளடக்கிய அகில இந்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி விவசாயப் புரட்சியைத் தொடர்ந்தது.

சி.பி.ஐ.(எம்) தலைமையிலான கூட்டணி ஆட்சியின் துரோகத்தை எதிர்த்து அகில இந்திய புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு விவசாயப் புரட்சியை நிறைவேற்ற அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான, ஆயுதப் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்தது. நாடு முழுக்க நக்சல்பாரி போராட்டங்களை ஏற்படுத்துவதற்கான அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் சீறீகாகுளம், மே. வங்கத்தில் தேப்ரா-சோபிபல்லப்பூர், பீகாரில் முசாகிரி, உ.பி.யில் தராய் பிராந்தியம், தமிழகத்தில் தருமபுரி, வட ஆற்காடு-தஞ்சை-தென் ஆற்காடு என விவசாயிகளின் பேரெழுச்சிகள் வளர்ந்தன. நாடு முழுவதும் விவசாயப் புரட்சிக்கான அந்த ஆயுதப் போராட்டம்தான் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரிப் பேரெழுச்சியாகும். இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் இந்தப் புரட்சி எழுச்சியில் இணைந்தனர்.

ஆனால் வெகுஜனவழி மற்றும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிரான தனிநபர் அழித்தொழிப்பு வழியை ஏற்றுக்கொண்டதினாலும், அனைத்து வர்க்க அல்லது வெகுஜன அமைப்புகளைப் புறக்கணித்ததாலும், கொரில்லாப் போராட்டமே ஒரே போராட்ட வடிவமாக ஏற்றுக் கொண்டதினாலும் ஏற்பட்ட இடது குறுங்குழுவாத வழி காரணமாக கட்சி உருவாக்கத்தால் ஏற்பட்ட உற்சாகமானது மிகவேகமாக மங்கித் தேய ஆரம்பித்தது. இதன் விளைவாகவும் 1971-72-ல் நிகழ்ந்த அரசு இயந்திரம் மற்றும் தரகு சக்திகளின் தீவிரத் தாக்குதலின் காரணமாகவும் புரட்சிகர இயக்கமானது கடுமையான பின்னடைவுக்கு உள்ளானது. சி.பி.ஐ (எம்.எல்) ஆனது பலதரப்பட்ட குழுக்களாகச் சிதறுண்டு போனது.

நக்சல்பாரிப் பேரெழுச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இடது தீவிரவாதம் இருந்தது எனினும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது மாநாட்டிற்குப் பிறகு லின்பியோவின் இடது தீவிரவாத வழியின் தொடர்ச்சியாகவே இங்கும் அழித்தொழிப்பு ஒன்றே ஒரே போராட்ட வழியாக செயல்படுத்தப்பட்டது. லின்பியோவின் "மக்கள் யுத்தத்தின் வெற்றி நீடூழி வாழ்க"என்ற அறிக்கையிலும், 1969-ஆம் ஆண்டு மாநாட்டிற்கான அவரது அறிக்கையில் உருவகப்படுத்திக் காட்டியிருந்த "புதிய சகாப்தத்தின் தோற்றம்", "ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சி", "உலகு தழுவிய சோசலிசத்தின் வெற்றி (!)", "மாசேதுங் சிந்தனையே இன்றைய சகாப்தத்தின் மார்க்சியம்-லெனினியம்" ஆகிய வரையறுப்புகள்தான் துணிச்சல்வாதத்திற்கும், சாகசவாதத்திற்கும், அழித்தொழிப்பு ஒன்றே போராட்டவடிவமாக முன்வைப்பதற்கும் வழிவகுத்தது. இத்தகைய இடது தீவிரவாதப் போக்கின் காரணமாக கட்சி பல்வேறு முரண்பாடுகளுக்கும், பிளவுகளுக்கும் உள்ளானது. இத்தகைய சூழலில்தான் கட்சிக்குள் இரண்டு வழிக்கான போராட்டம் துவங்குகியது.

2. இரண்டு பாதை

கனுசன்யால் தந்துள்ள விபரங்களிலிருந்து நக்சல்பாரிப் போராட்டத்தைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே இரண்டு விதமான புரிதல்கள் இருந்தன என்று தெரிகிறது. ஒன்று சாருமஜூம்தாரின் வழி, மற்றொன்று கனுசன்யாலால் முன்வைக்கப்பட்ட வழி. ஆனால் இவ்வாறு இரண்டுவிதமான வழிகள் இருந்தது பற்றி அகில இந்திய புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு தோழர்களுக்குத் தெரியாது என்று கனுசன்யால் கூறுகிறார்.

சாரு மஜூம்தாரின் வழி

சாரு மஜூம்தார் 1965-67 ஆகிய ஆண்டுகளில் எட்டு ஆவணங்களின் மூலம் மா.லெ. கட்சியைக் கட்டுவதற்கான நிலைப்பாடுகளை முன்வைத்தார். அந்த எட்டு ஆவணங்களின் சாரம் என்ன?

சாரு மஜூம்தார் தனது எட்டு ஆவணங்களில் நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

-           தான் எழுதிய ஆவணங்களில் நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போரை அறிவித்த அவர் மார்க்சிய-லெனினியத்தின் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாசேதுங் சிந்தனையை ஏற்றுக்கொண்டார்;

-           திரிபுவாத சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்தியத்தின் கூட்டாளி என்று வர்ணித்த அவர், புரட்சிகர வன்முறை மூலமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம் மூலமாகவும் மட்டுமே சுரண்டல் ஒடுக்குமுறை நிறைந்த நிலவுகின்ற அமைப்பைத் தூக்கியெறிய முடியும் என்பதை வலியுறுத்தினார்.

-           இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காகக் கட்சியை புரட்சிகரக் கட்சியாக மறுகட்டமைப்புச் செய்யவேண்டும் என்று கூறினார்.

-           கட்சியை இரகசியக் கட்சியாகக் கட்டியமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

-           விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் போன்ற வெகுதிரள் அமைப்புகளின் செயல்பாடுகளிலும் நடைமுறையிலும் உள்ள பொருளாதாரவாதம் தோற்கடிக்கப் படவேண்டும் என்றார்.

-           அமைதியான பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக விவசாயிகளின் எந்த ஒரு அடிப்படைப் பிரச்சினையையும் தீர்க்கமுடியாது என்றார்.

-           விவசாயப் புரட்சியில் ஏழை, நிலமற்ற விவசாயிகளின் தலைமைக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கும், தொழிலாளி-விவசாயி கூட்டின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் புரட்சிகர வர்க்கங்களைக் கொண்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்குமான தேவைக்கு அவர் அழுத்தம் கொடுத்தார்.

-           இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமையான பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அவர் ஆதரித்தார்.

அவருடைய எட்டுக் கட்டுரைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைக் குறித்தன எனினும் அவை பல்வேறு தவறான கருத்துக்களிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தியது; கட்சி, மக்கள்படை, ஐக்கிய முன்னணி என்ற மூன்று மந்திரகோல் குறித்த தவறான வழிமுறைகளை முன்வைத்தது; சீனத் தலைவரே நமது தலைவர் என்ற முழக்கம்; சில தளப்பிரதேசங்கள் உருவாக்கிய பின்பே ஐக்கிய முன்னணி என்ற நிலைப்பாடு; எதிரியின் இரத்தத்தில் கை தோய்த்தவர்களே கட்சி உறுப்பினர் என்ற கோட்பாடு; விவசாயத் திட்டம் இல்லாததுடன், விவசாயப் புரட்சிக்கான அழுத்தத்தை தராமல் அழித்தொழிப்பு வழியை மாற்றாக முன்வைத்தது; வெகுஜன அமைப்புகளையும், போராட்டங்களையும் புறக்கணித்தது; தலைமைக்கான வாரிசுரிமை கோரியது போன்ற பல்வேறு தவறான வழிமுறைகளை முன்வைத்தார்.

நக்சல்பாரி எழுச்சிக்கு முன்பும், அதன் பிறகு சிலகாலம் வரையிலும் சாருமஜூம்தார் முன்வைத்த அழித்தொழிப்பு செயல்தந்திரங்களைப் பொறுத்தமட்டில் அவை கற்பனைகளாக மட்டுமே இருந்தன. சில வர்க்க எதிரிகள் அழித்தொழிக்கப்பட்டு மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டால் ஒரு பகுதியோ அல்லது ஒரு கிராமமோ விடுதலைப் பிரதேசமாக மாறிவிடும் என்று எண்ணுவது எதார்த்தத்திற்கு பொருத்தமானது அல்ல. அவ்வாறு நடந்தால் அரசின் ஆயுதப்படைகள் புரட்சிகர விவசாயிகளை நசுக்குவதற்காக அந்தப் பகுதிக்கு துரிதமாக அனுப்பிவைக்கப்படும். எதிரியின் அரசுக்குச் சொந்தமான ஆயுதப்படைகளுக்கு தீர்மானகரமான தோல்விகளை ஏற்படுத்தும்போது மட்டுமே ஒரு பகுதி விடுதலைப் பிரதேசமாக மாறமுடியும். சாரு மஜூம்தார் கற்பனை செய்ததுபோல விடுவிக்கப்பட்ட தளப்பகுதி கட்டப்படுவது சாத்தியமான ஒன்றோ அல்லது எளிதான ஒன்றோ அல்ல.

சாருமஜூம்தாரால் முன்வைக்கப்பட்ட அழித்தொழிப்பு வழி என்ற இடது தீவிரவாத வழி கட்சிக்கு பெரும் தோல்வியைக் கொண்டுவந்தது. இத்தகைய இடது தீவிரவாத வழி அமைப்புக்குள் தீர்க்கமுடியாத முரண்பாடுகளையும் பிளவுகளையும் கொண்டுவந்தது. சருமஜும்தாரின் இத்தகைய இடது தீவிரவாத வழி எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும்.

இத்தகைய தனிநபர் பயங்கரவாத வழி குறித்தும் அதை எதிர்த்துப் போராடவேண்டிய அவசியம் பற்றியும் "பொருளாதார பயங்கரவாதமும் - தொழிலாளர் இயக்கமும்" என்ற கட்டுரையில் தோழர் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.

"தொழிலாளர்கள், தங்களின் முதலாளிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்த வேளையில் -இயந்திரங்களை உடைத்து நொறுக்கியதும், தொழிற்சாலைகளுக்குத் தீயிட்டுக் கொளுத்தியதுமான காலம் ஒன்றிருந்தது. இயந்திரங்கள்தான் வறுமைக்கான காரணம்! தொழிற்சாலைகள்தான் ஒடுக்குமுறையின் தலைமைப் பீடம்! ஆகவே உடைத்து நொறுக்கு, அவற்றை எரித்துச் சாம்பலாக்கு!" தொழிலாளர்கள் அக்காலக்கட்டத்தில் சொன்னது இது. அந்தக் காலக்கட்டம் அமைப்பு ரீதியற்ற அராஜகவாத கலகக்கார மோதல்களின் கட்டம்.

இத்தகைய தீயிட்டுக் கொளுத்துவதிலும், உடைத்து நொறுக்குவதிலும் நம்பிகையிழந்து, பிரம்மைகள் தகர்ந்து போன நிலையிலிருந்து தொழிலாளர்கள் "மேலதிக வன்முறை வடிவங்களை" சுவீகரித்துக்கொண்டதான வேறு சம்பவங்களையும் நாம் அறிவோம். இயக்குநர்கள், மேலாளர்கள், மேஸ்திரிகள் போன்றவர்களை கொல்லுவதும் பிறவும். எல்லா இயந்திரங்களையும் எல்லா தொழிற்சாலைகளையும் நாசப்படுத்துவது என்பது இயலாத காரியம். அதோடு கூட அவ்வாறு செய்வது தொழிலாளர்களின் நலனுக்கு உகந்ததல்ல. ஆனால் மேலாளர்களை அச்சத்தில் ஆழ்த்துவது என்பது எப்போதுமே முடியக்கூடியது. தீவிரவாதத்தின் மூலம் அவர்களின் பலத்தை அடித்து நொறுக்குவதும் இயலக் கூடியதே. ஆகவே, அவர்களை அடித்து உதை, அவர்களைக் கடுமையாக அச்சுறுத்து." தொழிலாளர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சொன்னது இது.பொருளாதாரப் போராட்டத்திலிருந்து வேர்பிடித்து, வளர்ந்த தனிநபர் தீவிரவாத மோதல்களின் காலம் இது. தொழிலாளர் இயக்கமானது மேற்கண்ட இவ்விரண்டு போராட்ட வடிவங்களையுமே கூர்மையாக விமர்சித்ததுடன் அவற்றை கடந்தகால நிகழ்வாக ஆக்கிவிட்டது.

இது புரிந்துகொள்ளப்படக் கூடியதே. தொழிற்சாலைகள்தான் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான தலைமைப் பீடம்; இந்தச் சுரண்டல் நீடிப்பதற்கு இயந்திரங்களே இன்னும் முதலாளிகளுக்கு உதவுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் இயந்திரமும், தொழிற்சாலையும்தான் தம்மளவிலேயே வறுமைக்கான அடிப்படைக் காரணிகள் என்று இதற்கு பொருள் இல்லை. அதற்கு நேர்மாறாக தொழிற்சாலைகளும், இயந்திரங்களுமே துல்லியமான முறையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியக் கூடியனவாக பாட்டாளியை ஆக்கக் கூடியவை. வறுமையைத் துடைத்தெறியவும், எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு அழித்தெறியவும் இயலச் செய்பவை. தனிநபர்களாயிருக்கும் முதலாளிகளிடமிருந்து வருகிற தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் மக்களுடைய உடைமைகளாக பொதுச் சொத்துக்களாக மாற்றியமைப்பதுதான் இப்போது தேவைப்படுவதெல்லாம்!

இதற்கு மாறாக இயந்திரங்களையும் - தொழிற்சாலைகளையும் இரயில்வேக்களையும் நாசப்படுத்தவும் - எரிக்கவும் நாம் தயாராகி செயல்படத் தொடங்கினால், நமது வாழ்க்கை என்னவாகும்? துயரம் தரும் வறண்ட பாலைவனத்தில் வாழ்வது போலாகிவிடும் என்பதுடன், தொழிலாளர்கள்தான் தங்களது வாழ்வாதாரங்களை முதலில் இழக்கப் போகிறவர்களாகவும் இருப்பார்கள்.

தெள்ளத் தெளிவாக இயந்திரங்களையும், தொழிற்சாலைகளையும் நாம் ஒரு போதும் நாசப்படுத்தக் கூடாது; ஆனால் வாய்ப்பு வரும்போது அவற்றை நாம் நமது உடைமைகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே வறுமையை ஒழிக்க தீவிரமாக போராடுபவர்கள் நாம் எனும் பட்சத்தில் அவ்விதம் செய்தே தீரவேண்டும். இந்தக் காரணத்தினால்தான், அராஜகவாத-கலகக்கார மோதல்களை தொழிலாளர்களின் இயக்கம் நிராகரிக்கிறது.

முதலாளிகளை அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் வரையில், பொருளாதார பயங்கரவாதத்திற்கும் கூட ஒரு "நியாயப்படுத்தல்" இருக்கவே செய்கிறது. ஆனால், இது மிகக் குறுகிய காலத்திற்கே நிலைத்து நிற்கும். இதன் ஆயுட்காலம் மிகக்குறைவு என்னும் பட்சத்தில், இத்தகைய அச்சுறுத்தலின் பயன்தான் என்ன? பொருளாதார பயங்கரவாதத்தை எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கையிலெடுக்க முடியாது என்ற ஒரே ஒரு உண்மையிலிருந்து மட்டுமே, இந்த அச்சுறுத்தலின் ஆயுட்காலம் மிகக் குறைவு என்பது தெளிவாகும். இது முதலாவது அம்சம்.

இரண்டாவது அம்சம், நாம் நமக்குப் பின்னால் ஒரு வலிமை மிக்க பெருந்திரள் தொழிலாளர்கள் அமைப்பினைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பெருந்திரள் அமைப்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு எல்லாக் காலங்களிலும் தயாராக இருக்கக்கூடிய ஒன்று. அத்துடன், நாம் ஏற்கெனவே வென்றெடுத்துள்ள சலுகைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் கூடியது அது. இத்தகைய ஒரு அமைப்பினை நமக்குப்பின்னால் அணிதிரட்டி நிறுத்தாதபோது - முதாளிகளுக்கு ஏற்படக்கூடிய மிக குறுகிய கால அச்சத்தினாலும், அந்த அச்சத்தின் காரணமாக அந்த வர்க்கத்திடமிருந்து விடுவிக்கப்படக்கூடிய ஒரு சில சலுகைகளாலும் என்ன பயன். அதற்கு மாறாக, பொருளாதார பயங்கரவாதம், மேற்கண்ட தன்மையிலான ஓர் அமைப்பு வேண்டுமென்கிற தொழிலாளர்களின் விருப்பத்தையே கொன்றுவிடுகிறது. ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்கிற உள்ளார்ந்த தாக்கத்தையே உறிஞ்சிக் காலிசெய்து விடுகிறது. ஏனெனில் அவர்களுக்காக செயல்பட பயங்கரவாத "கதாநாயகர்களை" அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தொழிலாளர்கள் நடுவே சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பண்பை நாம் வளர்க்க வேண்டுமா? தொழிலாளர்கள் நடுவே ஒன்றுபட்டு நிற்பதற்கான ஒற்றுமை வேட்கையை வளர்க்க வேண்டுமா? நாம் இரண்டையும் நிச்சயமாக செய்தே தீரவேண்டும். ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் இந்த இரண்டு வேட்கைகளையுமே கொன்றுவிடக் கூடிய பொருளாதார பயங்கரவாதத்தை நாம் மேற்கொள்ளலாமா?

இல்லை, தோழர்களே தனிநபர் ரீதியிலான இரகசியத் தன்மைவாய்ந்த வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முதலாளிகளை பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவது நமது கொள்கைகளுக்கே விரோதமானது. இத்தகைய "காரியங்களை" மோசமான பயங்கரவாத சக்திகளுக்கென்று ஒதுக்கிவிடுவோம்" என்று ஸ்டாலின் இடது தீவிரவாதப் போக்குகளை விமர்சனம் செய்தார்.

ஸ்டாலின் சுட்டிக்காட்டியது போல தோழர் சாருமஜும்தார் முன்வைத்த நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பது என்ற தனிநபர் பயங்கரவாதச் செயல் என்பது வர்க்கப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தவில்லை. வர்க்கக் குரோத உணர்வையே வெளிப்படுத்தியது. அது மக்களுக்காகப் போராடக் கூடிய ஒரு சில கதாநாயகர்களை உருவாக்கியது. ஆனால் எந்நேரமும் மக்கள் உரிமைகளுக்காகப் போராடக் கூடிய, மக்கள் உரிமகளைப் பாதுகாக்கக் கூடிய வெகுஜன அமைப்புகளைக் கட்டியமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியது. அத்தகைய இடது தீவிரவாதப் பாதை என்பது இயக்கத்திற்கு மிகப் பெரும் பாதிப்புகளைக் கொண்டுவந்தது. எனவே சாருமஜூம்தாரின் இடது தீவிரவாதப் பாதை எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும். ஆனால் சாருமஜூம்தாரின் இடது தீவிரவாத வழியை எதிர்துப் போராடுவது என்ற பேரில், அவர் முன்வைத்த எட்டு ஆவணங்களில் உள்ள சாதகமான அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு செல்வது என்பது பல்வேறு திரிபுகளுக்கே வழிவகுக்கும்.

கனுசன்யால் வழி

சாருமஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் மட்டுமே நக்சல்பாரியை உருவாக்கியதாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் நக்சல்பாரி எழுச்சிக்கும் சாருவின் எட்டு ஆவணங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கனுசன்யால் கூறுகிறார். அந்த எட்டு ஆவணங்களின் மூலத்தைப் பற்றியும், அதன் வாழ்க்கைப் பற்றியும் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) உடன் தொடர்புடைய 90-சதவீதம் தோழர்களுக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். 'நக்சல்பாரி இன்னமும் கூடுதலாக' என்ற கட்டுரையில் நக்சல்பாரிப் பேரெழுச்சி பற்றிய தனது நிலைப்பாட்டை கனுசன்யால் முன்வைத்துள்ளார்.

நக்சல்பாரி பேரெழுச்சி 1967-ல் திடீரென்று ஏற்பட்டது அல்ல அது தன்னியல்பான இயக்கமும் அல்ல என்று கனுசன்யால் கூறுகிறார். 1951-ல் தொடங்கி 1967-ஆம் ஆண்டுவரையிலான நக்சல்பாரி வரலாறு என்பது நீண்டகால வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று கூறுகிறார். அதை 5 கட்டமாக விளக்குகிறார். அதன் சாரம் வருமாறு:

விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்களுக்கான வர்க்க அமைப்புகளைத் தனித்தனியாக அமைத்துக்கொள்ளுதல்; விவசாயிகள், தொழிலாளர்கள் அமைப்புகள் ஒன்றுபட்டு கூட்டாக வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுவது, அவர்களுக்கிடையில் நெருக்கமான கூட்டணி அமைத்துக்கொள்ளுதல்; விவசாயிகளும், தோட்டத் தொழிலாளர்களும் தேயிலை முதலாளிக்களுக்கு எதிராக நடத்தும் போனசுக்கான போராட்டமே அரசியல் போராட்டமாக மாறுகிறது; நிலத்திற்கும் அறுவடையை கைப்பற்றுவதற்கும், போனசுக்குமான போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக வளர்த்தெடுப்பது; பொருளாதாரப் போராட்டங்கள் ஒருகட்டம் அது வளர்ந்து ஆயுதப் போராட்டக்கட்டத்திற்கு மாறும் என்பது; விவசாயப்புரட்சி அரசியலை பிரச்சாரம் செய்வது அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்றது புரட்சி எழுச்சிக்கு பயன்பட்டது என்ற நிலைப்பாடுகளையே வர்க்கப் போராட்டம் என்றும், அதுவே நக்சல்பாரி எழுச்சி என்றும் கனுசன்யால் கூறுகிறார். தொகுத்துக் கூறினால், சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாதத்தை எதிர்ப்பது என்று கூறி கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டப் பாதையைப் பின்வருமாறு கூறலாம்.

விவசாயிகளும், தொழிலாளர்களும், தனித்தனியாக வர்க்க அமைப்பைக் கட்டிக்கொள்வது; நிலத்திற்காகவும், அறுவடையைக் கைப்பற்றுவதற்காகவும், போனசுக்காகவும் இரண்டு அமைப்புகளும் கூட்டாக போராடுவது; போனசுக்கான போராட்டமே அரசியல் போராட்டமாக மாறும் என்பது; நிலத்திற்கானப் போராட்டத்தையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவது; அத்தகைய போராட்டங்களின் ஊடாகவே விவாயப்புரட்சி அரசியலை பிரச்சாரம் செய்வது என்பதையே வர்க்கப் போராட்டம் என்றும் நக்சல்பாரி எழுச்சி என்றும் கனுசன்யால் கூறுவது என்பது பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாதமேயாகும். அத்துடன் பொருளாதாரவாதம் தொழிற்சங்கவாதத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்ற பாராளுமன்றப் பாதையை கனுசன்யால் முன்வைப்பது என்பது அப்பட்டமான வலது சந்தர்ப்பவாதமேயாகும்.

இவ்வாறு வரையறுப்பதால் அன்றாட மற்றும் பகுதி நலன்களுக்கான போராட்டங்களையும், அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களையும் நடத்துவதையோ; விவசாயத் திட்டத்தையும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 'ஆயுதப் போராட்ட அரசியலை' பிரச்சாரம் செய்யவே கூடாது என்று நாம் கூறவில்லை. மாறாக இவை அவசியமானவையே. ஆனால் இந்த முறையிலேயே இவற்றின் மூலமாகவே பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் உணர்வை ஏற்படுத்தவோ, இப்போராட்டங்களையே அரசியல் அதிகாரத்துக்கான ஆயுதப் போராட்டங்களாக வளர்த்தெடுக்கவோ முடியாது என்று மட்டுமே சொல்கிறோம்.

நக்சல்பாரி எழுச்சிக்கும் சாருமஜும்தாருக்கும் சம்பந்தம் இல்லை என்று சனுசன்யால் பின்வருமாறு கூறுகிறார்.

1966-ல் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களும் கனுசன்யாலும் சாருமஜூம்தாருடன் எட்டு ஆவணங்கள் பற்றி விவாதித்தனர். அவருடன் நடந்த விவாதங்களின் போது மூலவுத்தி குறித்த பிரச்சினைகளில் (போர்த்தந்திரம்) அவருடன் உடன்படுவதாகவும், ஆனால் செயலுத்தி (செயல்தந்திரம்) தொடர்பான சில பிரச்சினைகளில் மாறுபட்ட நிலையை எடுத்தனர். அதாவது அழித்தொழிப்பு வழியை எதிர்த்து வெகுஜனப் போராட்டங்களுக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்ற நிலை எடுத்தனர். எனினும் இதில் உடன்பாடு ஏற்படாததால் இரண்டு தரப்பினரும் தங்களது வழியின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியாகச் செயல்படுவது என உடன்பாடு கண்டனர்.

சாரு மஜூம்தாரின் பாதை அதாவது அழித்தொழிப்புப் பாதை மிக விரைவிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்றும், தன்னால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகள்தான் நக்சல்பாரி எழுச்சியை உருவாக்கியது என்றும் உரிமை கொண்டாடுகிறார்.

ஆரமபத்தில் நக்சல்பாரி எழுச்சி பற்றி எழுதிய கட்டுரையில் நக்சல்பாரி எழுச்சி அரசியலதிகாரத்திற்கான ஆயுதப் போராட்ட எழுச்சி என்று எழுதும்போது, தான் ஹூனான் உழவர் அறிக்கையில் இருந்ததைப் போன்றே அதில் உள்ள எல்லா அம்சங்களும் நக்சல்பாரி பேரெழுச்சியில் இருந்ததாக மிகை மதிப்பீட்டின் அடிப்படையில் தவறாக எழுதிவிட்டதாகவும் அதற்கு சாருமஜூம்தாரின் தலையீடுதான் காரணம் என்றும் பின் நாளில் கனுசன்யால் குறிப்பிடுகிறார். அவரது கருத்துப்படி நக்சல்பாரி எழுச்சி என்பது பொருளாதாரப் போராட்டங்களுக்கான அதாவது நிலத்திற்கான ஆயுதப் போராட்டம்தான். அது அரசியல் அதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டம் அல்ல என்பதே கனுசன்யாலின் நிலைப்பாடாகும். அதாவது பொருளாதாரப் பொராட்டத்திற்கான ஆயுதப் போராட்டமே கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டமாகும்.

கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கப் போராட்டம் பற்றி எத்தகைய கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர் என லெனின் குறிப்பிடும்போது 1852-ல் இப் பிரச்சினையை மார்க்ஸ் எடுத்துரைத்ததை எடுத்துக்காட்டி தனது அரசும் புரட்சியும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

மார்க்ஸ் இப்பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது கூறுவதாவது: "என்னைப் பொறுத்தவரை, தற்போதைய சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ, அவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுவதையோ, கண்டுபிடித்த பெருமை என்னைச் சாராது. எனக்கு நெடுங்காலம் முன்னதாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளியலாளர்கள் வர்க்கங்களுடைய பொருளாதார அமைப்பியலையும் விவரித்திருந்தனர். நான் செய்ததில் புதியது என்னவெனில் பின்வருவனவற்றை நிரூபித்ததுதான்: 1) வர்க்கங்கள் இருப்பது, பொருள் உற்பத்தியினது வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் (historische Entwicklungsphasen der Production) மட்டுமே இணைந்ததாகும், 2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது, 3) இந்தச் சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும் ஒழிக்கப்படுவதற்கும், வர்க்கமல்லாத சமுதாயத்திற்குமான இடைக்கால கட்டமே ஆகும்."

மார்க்சின் மேற்கண்ட கோட்பாடுகளை எடுத்துக்காட்டிய லெனின் மேலும் அதுபற்றி பின்வருமாறு விளக்குகிறார்:

முதலாவதாக, தமது போதனைக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய ஆழ்ந்த சிந்தனையாளர்களுடைய போதனைகளுக்குமுள்ள பிரதான அடிப்படை வேறுபாட்டையும், இரண்டாவதாக, அரசு பற்றிய தமது போதனையின் சாரப் பொருளையும் மார்க்ஸ் இச்சொற்களிலே தெட்டத்தெளிவாய் எடுத்துரைத்துவிடுகிறார்.

வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டத் தத்துவம் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாய் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய தத்துவமே. வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சிய வாதிகளாகிவிடுவதில்லை. இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத் தத்துவத்துக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும் சாதாரண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவவாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்துகொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைகல்லாய் அமைவது இதுவே. எனவே கனுசன்யால் முன்வைக்கும் அரசியலதிகாரத்திற்கல்லாத பொருளாதார வாதம், தொழிற்சங்கவாதப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டம் என்பதுடன் பாராளுமன்றவாதத்தை இணைத்து அதையே வர்க்கப் போராட்டம் என்று கூறுவது முதலாளித்துவ வரம்புக்குட்பட்ட, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு ஏற்புடைய வர்க்கப் போராட்டமே ஆகும்.

மேலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்நிலை அபிவிருத்திக்கான போராட்டங்களையும், பகுதி நலன்களுக்கான போராட்டங்களையும் புறக்கணிப்பது போன்ற இடது தீவிரவாதப் போக்குகளை எதிர்த்துப் போராடிய லெனின், இத்தகைய அன்றாட நலன்களுக்கான தன்னியல்பான, கருநிலையான வர்க்கப் போராட்டங்களின் மூலமாகவே அரசியல் அதிகாரத்திற்கான புரட்சிகரப் போராட்டங்களைக் கொண்டுவர முடியும் என்ற வலது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்துப் போராடினார். பொருளாதாரப் போராட்டங்களையும், வெகுஜனப் போராட்டங்களையும் புறக்கணிப்பதை எதிர்த்துப் பொருளாதாரப் போராட்டங்களின் அவசியம் பற்றியும் தொழிற்சங்கங்களின் அவசியம் பற்றியும் லெனின் 'வேலை நிறுத்தம்' பற்றிய தனது கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

தொழிற்சாலைகளும், உபகரணங்களும் நிலமும் மிகச்சிறு எண்ணிக்கையிலான முதலாளிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும் உடைமையாக இருக்கும் ஒரு சமூக அமைப்பே முதலாளித்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் மிகப்பெருமளவிலான மக்களுக்கு உடைமைகள் ஏதுமில்லை; அல்லது மிகச்சிறு அளவிலான உடைமைகளே உள்ளன. எனவே இம்மக்கள் திரள் தங்கள் உழைப்புச் சக்தியை விற்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தொழிலாளர் என அழைக்கப்படுகின்றனர். நிலவுடைமையாளர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்தி பல்வேறு விதமான உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றைச் சந்தையில் விற்கின்றனர். மேலும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்சக் கூலியை மட்டுமே தருகின்றனர். இந்தப் பணத்திற்கு மேல் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் எல்லா மதிப்பும் முதலாளிகளின் பைகளுக்குள் இலாபம் என்ற வடிவில் போய்ச் சேருகிறது. எனவே முதலாளித்துவப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிறரால் ஒப்பந்தத்திற்கு அமர்த்தப்பட்டு மற்றவர்களுக்காக கூலிக்கு உழைப்பவர்களாகவே உள்ளனர்; அவர்கள் தங்களுக்காக உழைப்பவர்கள் அல்ல. எனவே இந்த அமைப்பில் முதலாளிகள் எப்போதும் கூலியை குறைப்பதற்கு முயற்சி செய்பவர்களாகவே இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அவர்கள் எவ்வளவு குறைவாக கூலி கொடுக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக லாபமடைவார்கள். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினர் பிச்சைக்காரர்கள் போலல்லாமல் மற்ற மக்களைப் போலவே போதுமான முழு உணவு உட்கொள்ளவும், நல்ல வீட்டில் வசிக்கவும், நல்ல ஆடைகளை உடுத்தவும் தேவையான அளவில் இயன்றவரை அதிகக் கூலியை பெறமுயற்சி செய்வர். எனவே முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடைவிடாது போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்; முதலாளி தனக்குப் பிடித்தமான யாரையும் கூலிக்கு அமர்த்திக் கொள்ளச் சுதந்திரம் பெற்றவர். எனவே அவர் எப்போதும் குறைந்த கூலிக்கு வேலை செய்பவரையே தெரிவு செய்வார். தொழிலாளிக்கு தன் உழைப்பை விற்க எந்த முதலாளியையும் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. எனவே அவர் தன் உழைப்புக்கு யார் அதிகக் கூலி தருவார்களோ அவர்களையே தேடிச் செல்வார். ஒரு தொழிலாளி கிராமப்புறத்தில் வேலை செய்தாலும் அல்லது நகர்ப்புறத்தில் வேலை செய்தாலும் தன் உழைப்பை பண்ணையாருக்கோ அல்லது தொழிற்சாலை முதலாளிக்கோ யாருக்கு விற்றாலும் அவர் எப்போதும் தன் எஜமானனுடன் பேரம் பேசுகிறார். கூலி விஷயத்தில் சண்டையிடுகிறார்.

ஆனால் ஒரு தொழிலாளியால் தனிப்பட்ட முறையில் இந்தப் போராட்டத்தை நடத்த இயலுமா? தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும் மேலும் விவசாயிகள் பஞ்சைகளாக மாறி கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஓடிவருகின்றனர். நிலப்பிரபுக்களும், தொழிற்சாலை அதிபர்களும் புதிய இயந்திரங்களைப் புகுத்தி தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கின்றனர். நகரங்களில் வேலையில்லாப் பட்டாளம் அதிகரித்துவரும் அதேவேளையில் கிராமப்புறங்களில் பஞ்சைகள், பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பசியிலும், பட்டினியிலும் தள்ளப்படுகின்ற மக்கள் தங்கள் கூலியை மேலும் மேலும் குறைத்துக் கொள்ளவும் தயாராகின்றனர். இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் தங்கள் எஜமானர்களை எதிர்த்துத் தனியாகப் போரிடுவது என்பது இயலாத ஒன்று. தொழிலாளர்கள் அதிகக் கூலியை கேட்டாலோ, அல்லது கூலி வெட்டுக்கு சம்மதிக்க மறுத்தாலோ முதலாளி அவர்களை வெளியே போ என்று கையைக் காட்டுகிறான். பசியிலும், பட்டினியிலும் வாடி தொழிற்சாலை வாயிற்புறங்களில் காத்துக்கிடக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தைக் காட்டி இன்னும் குறைந்த கூலி கொடுத்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஓடி வருவார்கள் என்று கூறுகிறான்.

மக்களின் வாழ்நிலை இந்த அளவுக்கு வறுமைக்கும் பேரழிவுக்கும் ஆளாகி நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வேலையில்லாப் பட்டாளம் நிரந்தரமாய் பெருகி வீதியெங்கும் ஓடிச்சாகும் இந்த நிலையில், பெரும் முதலாளிகள் குறுகிய காலத்தில் கொள்ளை லாபமடிக்கும் இந்த வேளையில், சிறு உடமையாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களால் நசுக்கப்பட்டு தூக்கி வீசியெறியப்படும் காலத்தில் இந்தக் கொடிய வலிமை கொண்ட முதலாளிக்கு எதிரில் தனியொரு தொழிலாளி எந்தவித வலிமையும் அற்று அநாதரவாக நிற்கிறான். இந்த நிலைதான் முதலாளிகள் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களை கூலி அடிமைகளாக மரணப் படுகுழிக்குள் முழுமையாகப் பிடித்துத்தள்ள வழி செய்கிறது.

தங்கள் எஜமானர்களின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாமல் உள்ள நிலைமைகளிலும், தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் போராடிப் பெறமுடியாத நிலைமைகளிலும் உள்ள உழைப்பாளி மக்களின் மீதான ஒடுக்குமுறை அடிமை முறையிலும் பண்ணையடிமை முறையிலும் இருந்ததைக் காட்டிலும் பயங்கரமானதாக உள்ளது.

எனவே தங்கள் வாழ்க்கை மோசமான கடைகோடி நிலைமைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க தொழிலாளர்கள் போராடியே தீரவேண்டியுள்ளது. மூலதனத்தின் ஒடுக்குமுறைகளால் தங்கள் வாழ்க்கை மிதித்து நசுக்கப்படும் போது தனித்தனி நபர்களாக தாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்களாக பலவீனர்களாக இருப்பதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களை எதிர்த்துக் கூட்டாகக் கலகம் செய்யத் தொடங்குகின்றனர். இவ்வாறாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. ஆரம்பக் கட்டங்களில் தாங்கள் அடைய முயல்வது எது என்பதைப் பற்றிய புரிதல் தொழிலாளர்கள் மத்தியில் அடிக்கடி காணப்படுவதில்லை. தங்கள் நடவடிக்கைகள் எதை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது உணர்வுப்பூர்வமாக அறியப்பட்டிருப்பதில்லை. அவர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்குகிறார்கள் அல்லது தொழிற்சாலையை அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தொழிற்சாலை உரிமையாளருக்கு தங்கள் கோபத்தை வெளிக்காட்ட விரும்புகிறார்கள். தாங்கமுடியாத வாழ்நிலைமைகளிலிருந்து வெளியேற, தங்கள் கூட்டுப் பலத்தால் முயற்சி செய்து பார்க்கிறார்கள். தங்கள் வாழ்க்கை ஏன் இந்த அளவிற்கு நம்பிக்கையற்றுப் போயிருக்கிறது என்பதைப் பற்றியோ, இதிலிருந்து விடுபட எதை நோக்கி பயணப்படவேண்டும் என்பதைப் பற்றியோ அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு தொழிலாளி முதலாளியின் முன் முழுவதும் சக்தியற்றவராக இருக்கும்போது தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக கூட்டாகப் போராட வேண்டியது அவசியம் என்பது வெளிப்படை. முதலாளிகள் கூலியைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டியும், அதிகக் கூலிக்காகவும் அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முதலாளித்துவ உற்பத்திமுறை நிலவுகின்ற ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் என்பது நடைமுறை உண்மையாகும்.

எனவே லெனின் மேலே கூறியுள்ளது போல விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களின் உடனடி நலன்களுக்கான போராட்டங்கள் மிகவும் அவசியமானதும், அதற்கு அமைப்புரீதியில் அணிதிரள்வதும் போராடுவதும் அவசியம் என்பதை கம்யூனிஸ்ட்கள் ஏற்றுச் செயல்படவேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். அதே சமயம் இத்தகைய தன்னியல்பான போராட்டங்கள் மட்டுமே அவர்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது என்றும் லெனின் கூறுகிறார்.

தன்னளவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயிகளின் பொருளாதாரப் போராட்டங்கள், முதலாளித்துவ வர்க்கங்களை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் கிளர்ச்சிகள் மட்டுமே விடிவைத் தராது என்பதை லெனின் அதே கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

"... எனவே வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களிடையே ஒற்றுமையின் அவசியத்தை போதிக்கிறது; முதலாளிகளை எதிர்த்துப் போராடவேண்டுமானல் அது தாங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்பதைக் காட்டுகிறது; தொழிற்சாலை உரிமையாளர்களின் மொத்தக் கூட்டத்தை எதிர்த்தும் எதேச்சதிகார குண்டாந்தடி அரசாங்கத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடவேண்டும் என்கிற அறிவை அது தொழிலாளிகளுக்குப் போதிக்கிறது. இந்தக் காரணத்தால்தான் பொதுவுடமையாளர்கள் வேலை நிறுத்தங்களை "போர்க்கலைப் பயிற்சிப்பள்ளி" என்று அழைக்கிறார்கள். உழைத்து உருக்குலையும் மக்கள் கூட்டத்தையும், அனைத்து மக்களையும் அரசாங்க அடக்குமுறை நுகத்தடியிலிருந்தும் மூலதன கொடூர நுகத்தடியிலிருந்தும் விடுதலை பெறச்செய்ய தொழிலாளர்கள் தங்களுடைய எதிரிகளுடன் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை இந்தப் பள்ளியில்தான் கற்கிறார்கள்.

இந்தப் "போர்க்கலைப் பள்ளியையே" உண்மையான போர் என்று கருதிவிடலாகாது. தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் மிகப்பரவலாக விரிவடையும் போது சில தொழிலாளர்கள் - அவர்களில் சில சோசலிஸ்டுகளும் அடங்குவர் - தொழிலாளர் வர்க்கம் தன் நடவடிக்கைகளை வேலைநிறுத்தப் போராட்டம், போராட்ட நிதி, போராட்ட ஆதரவு குழுக்கள் என்பனவற்றுடன் மட்டுமே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நம்புகிறார்கள். வேலைநிறுத்தப் போராட்டங்களால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முன்னேற்றங்கள் சாத்தியம், ஏன் வர்க்க விடுதலையே கூட கைகூடலாம் என்றும் நம்புகின்றனர். மிகச்சிறிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டங்களில் கூட வெளிப்படும் தொழிலாளர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பார்க்கின்ற அவர்கள் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஒரு நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தை அறிவித்து அதை ஒழுங்கமைத்தால் மட்டுமே போதும் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் தான் வேண்டுவது அனைத்தையும் பெற்றுவிடமுடியும் என்று நினைக்கின்றனர். தொழிலாளிவர்க்கம் அதன் ஆரம்ப நிலைகளிலும் தொழிலாளர்கள் போதிய அனுபவமற்றவர்களாக உள்ள வேறுபல அயல்நாடுகளிலுள்ள தொழிலாளர்களும் இதே விதமான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கருத்தாகும். வேலைநிறுத்தங்கள் உழைக்கும் வர்க்க விடுதலைக்கு ஒரு பாதை. இதுதான் ஒரே பாதை என்பது தவறு. வர்க்க விடுதலைக்கான மற்ற போராட்டப் பாதைகள் மீது போதிய கவனம் செலுத்தாமல் போனால் தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் பின் தள்ளிப்போகும்.

கனுசன்யால் முன்வைக்கும் வர்க்கப் போராட்டப் பாதை என்பது மேலே லெனின் சுட்டிக்காட்டியபடி ஒரே பாதையாகும்; அது தொழிற்சங்க வகைப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களேயாகும். தொழிற் துறையிலும், வேளாண்துறையிலும் நேர் எதிரெதிர் வர்க்கங்கள் மோதிக் கொள்ளும் உடனடிப் பொருளாதார நலன்களுக்கான போராட்டம் எவ்வளவுதான் எழுச்சியாகப் போராடினாலும் அது தன்னியல்பு போராட்டமே. எனவே தன்னியல்பான போராட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் தொழிற்சங்க உணர்வைத்தான் பெறமுடியும். தொழிலாளர்கள் சமூக ஜனநாயக உணர்வைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற நூலில் லெனின் பின்வருமாறு விடையளிக்கிறார்.

விவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் மற்றும் அறுவடையைக் கைப்பற்றுவதற்கான போராட்டம்; விவசாயிகள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாக போனஸ் போன்ற பொருளாதாரப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக நடத்துவதையே, அதாவது தன்னியல்பான இத்தகைய போராட்டங்களே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகரமான போராட்டமாக மாறும் என்ற கனுசன்யால் போன்றவர்களின் கருத்தை லெனின் மறுக்கிறார். அவ்வாறு மறுத்து தன்னியல்பு பற்றியும், தன்னியல்பான போராட்டங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக ஒருபோதும் மாறாது என்பதையும்; தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்வை வெளியிலிருந்துதான் கொண்டுவர இயலும் என்பதையும் லெனின் பின்வருமாறு விளக்குகிறார்.

என்ன செய்யவேண்டும் என்ற நூலில் மக்களின் தன்னியல்பும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும் என்ற தலைப்பில் லெனின் கூறுவதாவது.

"ருஷ்யாவில் 1870களிலும், 1860களிலும் (பத்தொன்பதாவது நூற்றாண்டின் முதற்பகுதியிலும் கூட) வேலைநிறுத்தங்கள் நடந்தன. அவற்றைத் தொடர்ந்து "தன்னியல்பாக" இயந்திரங்களை உடைப்பது போன்றவையும் நடந்தன. இந்தக் கலவரங்களோடு ஒப்பிட்டால் 1890களின் வேலைநிறுத்தங்கள் கூட "உணர்வுப் பூர்வமானவையாக" வர்ணிக்கப்படக் கூடும். அந்தளவுக்கு அவை அக்காலத்தில் சாதித்த முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.

1890களின் வேலைநிறுத்தங்கள் எவ்வளவோ பெரிதான உணர்வின் மின்வெட்டுகளை வெளிப்படுத்தின. திட்டவட்டமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சரியான நேரம் பார்த்து வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. வேறு பகுதிகளிலிருந்து அறியப்பெற்ற வழக்குகளும், எடுத்துக்காட்டுகளும் விவாதிக்கப்பட்டன என்றாவாறு.

கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன. ஆனால் முறைமையுள்ள வேலை நிறுத்தங்கள் கருவடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப்போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலைநிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களே. இன்னமும் சமூக ஜனநாயகப் போராட்டங்களாக இல்லை. அவை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் மூண்டுவரும் பகைமைகளைக் குறித்தன. ஆனால் தற்கால அரசியல் சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்த முடியாத பகைமை இருப்பதை தொழிலாளிகள் உணர்ந்திருக்கவில்லை. உணரமுடியவில்லை - அதாவது அவர்களின் உணர்வு இன்னமும் சமூக ஜனநாயகவாத உணர்வாக இல்லை.

இந்த அர்த்தத்திலே 1860களின் கலவரங்களோடு ஒப்பிடும்போது மாபெரும் முன்னெற்றத்தைக் குறித்தபோதும் அவை வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன.

தொழிலாளர்களிடையே சமூக ஜனநாயகவாத உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாக தொழிற்சங்க உணர்வைமட்டுமே அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது முதலியனவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபை மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிந்தது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது. அரசியல் உணர்வை தன்னியல்பு முற்றாக ஆட்கொண்டுவிட்டது - சமூக ஜனநாயகவாதிகள் தன்னியல்பு.

ஒரு ரூபிளுக்கு கூடுதலாக ஒரு கோபக் கிடைப்பது எந்த சோஷலிசத்தையோ, அரசியலையோவிட மேல். தொழிலாளர்கள் "தாம் போராடுவது ஏதோ ஒரு தலைமுறைக்காக அல்ல. தமக்காகவும், தமது குழந்தைகளுக்காகவும் போராடுகிறோம் என்று உணர்ந்து போராடவேண்டும்!" என்கிற வாதங்களில் இழுத்துச் செல்லப்பட்ட தன்னியல்பு.

பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பின் பால் உள்ள எல்லா வழிபாடும், உணர்வுபூர்வமான அம்சத்தின் "பாத்திரத்தை சிறுமைப்படுத்துவது அனைத்தும், சமூக ஜனநாயகவாதத்தின் பாத்திரத்தைச் சிறுமைபடுத்துவதும் - அப்படிச் செய்கிறவன் விரும்புகிறானோ இல்லையோ - தொழிலாளர்கள் மீது முதலாளிவர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே பொருள்.

தொழிலாளர்களின் சுதந்திரமான, எளிமையான தொழிலாளர் இயக்கம் தாமாகவே தமக்குரிய ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு ஆழ்ந்த தவறு. முதலாளித்துவ வளர்ச்சி, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை உயர்த்த உயர்த்த, பாட்டாளிவர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மென்மேலும் தகுதி பெறுகிறது. "சோஷலிசத்தின் சாத்தியப்பாட்டையும், அவசியத்தையும்" பாட்டாளிவர்க்கம் உணர்ந்துகொள்கிறது. இது சம்பந்தமாக, சோஷலிஸ்டு உணர்வு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தின் அவசியமான நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்.

தத்துவம் என்ற வகையில் சோஷலிசம் - பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே - தற்காலப் பொருளாதார உறவு முறைகளில் வேர்கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்ப துயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித்தோன்றுகிறதும் உண்மைதான். ஆனால், சோஷலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம்பக்கமாக உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கின்றன. நவீன சோஷலிஸ்ட் உணர்வு, ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே உதிக்கமுடியும். உண்மையாகச் சொன்னால் (எடுத்துக்காட்டாக சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானம் சோஷலிஸ்டு உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்தபோதிலும் சரி, தொழிலாளி வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்கால சமுதாய நிகழ்வு போக்கிலிருந்தே உதிக்கின்றன.

விஞ்ஞானத்தை எடுத்துச்செல்லும் ஊர்தி பாட்டாளிவர்க்கமல்ல. முதலாளித்துவ வர்க்கப் போக்குள்ள படிப்பாளிப் பகுதியே (காவுத்ஸ்கி கொட்டை எழுத்தில் போட்டது). இந்தப் பகுதி தனித்தனி உறுப்பினர்களின் சிந்தையிலேதான் நவீன கால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தாம் மேலான அறிவுவளர்ச்சி பெற்ற தொழிலாளிகளிடம் அதைக் கொண்டுபோனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்கு அதைப் புகுத்தினர்.

எனவே, சோஷலிஸ்டு உணர்வு எனப்பட்டது, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்கு வெளியிலிருந்து புகுத்தப்படுகின்ற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல.

தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியல் உணர்வு வெளியிலிருந்து மட்டுமே - அதாவது பொருளாதாரப் போராட்டத்திற்கு அப்பால் வெளியிலிருந்துதான், தொழிலாளிகள், முதலாளிகள் இடையேயுள்ள உறவுகளின் துறைக்கப்பால் வெளியிலிருந்துதான் - கொண்டுவரமுடியும். அரசுபாலும் அரசாங்கத்தின்பாலும் எல்லா வர்க்கங்களுக்கும் மக்கட்பகுதிகளுக்கும் உள்ள உறவு முறைகளின் துறையிலிருந்து மட்டுமே, எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள பரஸ்பர உறவுமுறைகளின் துறையிலிருந்து மட்டுமே இந்த அறிவைப் பெறுவது அவசியம்.

மேற்கண்ட லெனினுடைய கோட்பாடுகளிலிருந்து புரிந்து கொள்வது என்னவெனில்:

விவசாயிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் இடையிலுள்ள உறவுத்துறைகளில் எழும் தன்னியல்பான பிரச்சினைகள் மீதும், பொருளாதார நலன்களுக்காக நிலப்பிரபுக்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தையும்; தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலுள்ள உறவுத்துறைகளிலிருந்து எழும் பிரச்சினைகளுக்காகவும், பொருளாதார நலன்களுக்காகவும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் எதிர்த்த தொழிலாளர்களின் போராட்டத்தையும்; இதைப் போன்றே மாணவர், நடுத்தர வர்க்கத்தினர் இன்னும் பிறரும் தொழில் துறையில் தமக்கு நேரெதிரான வர்க்கத்தையும் அரசையும் எதிர்த்துப் பகுதி நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் நடத்தும் மேற்கூறப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் தன்னியல்பான, பொருளாதாரப் போராட்டங்களேயாகும். இப்போராட்டங்கள் எவ்வளவு முறைமையுள்ள, திட்டமிட்டவையாக இருந்தாலும் இவை அனைத்தும் தன்னியல்பானவையே.

கனுசன்யால் கூறுவதைப் போல இத்தகைய தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்களில் விவசாயிகளை ஈடுபடச் செய்வதன் மூலம், விவசாயிகளின் நிலத்திற்கான மற்றும் அறுவடையைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தின் மூலம்; தொழிலாளர்களின் போனசுக்காக நடத்தப்படுகின்ற போராட்டங்களின் மூலம் புரட்சிகர அரசியல் உணர்வைக் கொண்டுவந்துவிட முடியும் என்பதோ; இத்தகைய பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களின் ஊடாகவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியலையும், விவசாயப் புரட்சித் திட்டத்தையும் பிரச்சாரம் செய்வதுடன் சட்டவரம்பை மீறியும், ஆயுதப்போராட்டத்துடன் இணைத்து இத்தகைய தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்கள் நடத்தப்படுவதால் புரட்சிகர அரசியல் உணர்வை கொண்டுவந்துவிட முடியும் என்று கூறுவது தன்னியல்பை வழிபடுவதேயாகும். நக்சல்பாரி எழுச்சி என்று கனுசன்யால் கூறுகின்ற போராட்டங்கள் எவ்வளவு உச்சபட்சமாக நடத்தப்பட்டிருந்தாலும் அது திட்டவகை செயல்தந்திரத்தோடு, அரசியல் நடத்தை வழியோடு இணைக்கப்படாவிட்டால் அது தன்னியல்பிலிருந்து மீளாது. எனவே பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு திட்டவகை செயல்தந்திரமும், அரசியல் நடத்தை வழியும் அவசியமாகும்.

3. அரசியல் நடத்தை வழி

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நாடு தழுவிய அளவிலும் அனைத்து வர்க்கங்களையும் பாதிக்கக்கூடிய சமூக அரசியல் பொருளாதார பிரச்சினைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதின் முலம் அத்தருணத்தில் எழும் பிரதானமான போக்கை அறிவதும், அப்பிரதானப் போக்கு குறித்துப் பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் கண்ணோட்டத்தையும், அப்பிரதான போக்கின்பால் சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்கள் மேற்கொள்ளும் நிலைப்பாட்டையும், அதன் விளைவாகப் பகைவர் முகாமிலும், நமது முகாமிலும் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப அத்தருணத்திற்கு பொருத்தமாக நேரடிச் சேமிப்புச் சக்திகளையும், மறைமுகச் சேமிப்புச் சக்திகளையும் எவ்வாறு பாட்டாளி வர்க்கக் கட்சி பயன்படுத்துவது என்பதைக் குறித்தும் - அதாவது அத்தருணத்தில் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது குறித்தும்; பிரதான எதிரிக்கு எதிராக இடைநிலை வர்க்கங்களையும், சக்திகளையும் வென்றெடுப்பதையும், சமரசச் சக்திகளைத் தனிமைப்படுத்தி அவர்களைச் செயலிழக்கச் செய்வது குறித்தும் கோட்பாட்டு ரீதியில் வரையரை செய்தல் கட்சியின் அரசியல் நடத்தை வழியில் அடங்கும்.

அ)       அரசியல் நடத்தை வழியை சரியான ஒன்றாக வகுத்துக்கொள்ள வேண்டுமானால் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி கீழ்க்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

1)         பாட்டாளி வர்க்கக் கட்சி தனது அரசியல் நடத்தை வழியைச் சரியாக வகுத்துக் கொள்ள வேண்டுமானால் அது அரசியல் யுத்த தந்திரத்தை, அதாவது யுத்ததந்திர பொது திசை வழியையும், யுத்ததந்திரத் திட்டத்தையும் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்; அதற்குச் சேவை செய்ய வேண்டும். இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கட்டத்தில் முதலாளித்துவத்தின் பாத்திரம் மிகச் சிக்கலானதாகவுள்ளது. ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் உள்ள தேசிய முதலாளித்துவம் என்ற முறையில் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய முதலாளித்துவம் இரட்டைத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆகையால் தேசிய முதலாளித்துவம் சில காலக்கட்டங்களில் புரட்சியில் பங்குகொள்ளக்கூடியதாகவும், வேறு சில காலக்கட்டங்களில் எதிர்ப் புரட்சி அணிகளில் சேரக் கூடியதாகவும் இருக்கின்றது. அத்துடன் வரலாற்று ரீதியான நிலைமைகளின் காரணமாக இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய முதலாளித்துவ வலதுசாரிப் பகுதியினர் சிலகாலக்கட்டங்களில் நேரடிச் சேமிப்புச் சக்திகளைத் தம் பின்னால் திரட்டிக் கொண்டு புரட்சியைச் சீர்குலைப்பதாகவும் இருக்கின்றது. ஆகையால் தேசிய முதலாளித்துவத்துடன் ஐக்கிய முன்னணிப் பிரச்சினை என்பது வர்க்க சமரச சக்தி என்ற முறையில் அதனைத் தனிமைப்படுத்தும் பிரச்சினையும் எழுகின்றது. எனவே பாட்டாளிவர்க்கக் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமையைப் பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில் தேசிய முதலாளித்துவத்துடன் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டுமா? ஒரு ஐக்கிய முன்னணி அதனுடன் கட்டப்பட்டிருந்தால் அதை முறித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது வர்க்க சமரசப்பாதையை மேற்கொண்டு நேரடிச் சேமிப்புச் சக்திகளை தன் பின் திரட்டிக்கொண்டு புரட்சிக்குத் தீங்கு விளைவிக்குமானால் அதைத் தனிமைப்படுத்திச் செயலழிக்கச் செய்ய வேண்டுமா? என்பதை தீர்மானிப்பது அத்தருணத்தில் கட்சி தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதில் அடிப்படையான அம்சமாகும். கட்சி தனது அரசியல் நடத்தை வழியை சரியான ஒன்றாக வகுத்துக் கொள்ள வேண்டுமானால் இப்பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கு அது அரசியல் யுத்ததந்திரத்தினால் வழிகாட்டப்பட வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்மானிப்பதில் அது யுத்ததந்திரத்தை வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அந்த அரசியல் நடத்தை வழி ஒரு சந்தர்ப்பவாத வழியாக அமைந்துவிடும்.

2)         தரகு முதலாளித்துவம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் இலக்காகவோ - எதிரியாகவோ இருக்கின்றது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புரட்சியின் பிரதான தாக்குதல் ஒரு ஏகாதிபத்திய வல்லரசையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்து திருப்பப்பட்டிருக்கும் போது பிற ஏகாதிபத்தியத்தின் தரகர்கள் பிரதான எதிரியை எதிர்த்த போராட்டத்தில் பாட்டாளிவர்க்கத்துடன ஒரு ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமையின் அடிப்படையில் அக்காலக்கட்டத்தில் புரட்சியின் பிரதான தாக்குதல் ஒரு ஏகாதிபத்திய வல்லரசையும் அதனுடைய கூட்டாளிகளுக்கும், எதிராகத் திருப்ப நேரிடும்போது, பிற ஏகாதிபத்தியத்தின் தரகர்களுடன் ஒரு ஐக்கியமுன்னணியைக் கட்ட வேண்டுமா? அல்லது எத்தகைய உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அத்தருணத்தில் கட்சி தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதில் உள்ள அடிப்படையான அம்சமாகும். எனவே இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் அரசியல் நடத்தை வழி யுத்ததந்திரத்தை தனது வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அது சந்தர்ப்பவாதத்தில் முடியும்; ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக் கொள்ள இயலாது.

மேலும் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சி, தேசிய விடுதலை மற்றும் ஜனநாயகப் புரட்சி ஆகிய இரு கடமைகளை ஒரு சேரப் பெற்றிருக்கிறது. தேசிய விடுதலை என்பதில்கூட பல தேசிய இனங்களைக்கொண்ட ஒரு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனால், நாட்டை அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்தல், பல தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றாக இருப்பதால் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவம் - தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுதல் என்று இரு அம்சங்கள் அடங்கியுள்ளன. எனவே தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி ஆகிய இரண்டிற்கும் இடையிலான உறவை புரட்சியின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப சரியாகக் கையாள வேண்டியதும் அதிமுக்கியமான பிரச்சினையாகவும் இருக்கின்றது. ஆகையால் கட்சியானது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடத்தை வழியை வகுத்துக் கொள்ளும்போது மேற்கூறப்பட்ட பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கு அரசியல் யுத்தந்திரத்தைத் தனது வழிகாட்டியாகக் கொள்ளாவிட்டால் அது சந்தர்ப்பவாத வழியாக அமைந்துவிடும்.

இத்தகைய சிக்கல்கள் நிறைந்த நிலைமைகளின் காரணமாக, கட்சியனாது ஓரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமைகளுக்கேற்ப ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்வதற்கு அது அரசியல் யுத்த தந்திரத்தினால் வழிகாட்டப்பட வேண்டும் என்பதும், அதைப் பிறழாமல் கட்சி கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் முக்கியமான பிரச்சினையாகும்.

3)         கட்சியானது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் சூழ்நிலைமைக்கேற்ற ஒரு சரியான அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்ள வேண்டுமானால் அது நீண்ட மக்கள் யுத்தப்பாதையின் - இராணுவ யுத்ததந்திர செயல்தந்திர விதிகளையும் கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாவிட்டால் கட்சியின் அரசியல் நடத்தை வழி ஒரு சந்தர்ப்பவாத வழியாக அமைந்து விடும். பகைவர்கள் முகாமிலுள்ள முரண்பாடுகளும், பிளவுகளும், மோதல்களும் யுத்தமாக (ஆயுத மோதல்களாக) இல்லாமல் அரசியல் போராட்டமாகவே இருப்பதுவும் ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சி போராடுதல் என்ற அம்சம் இந்தியப் புரட்சியில் ஒரு விசேசமானதும் சாதகமானதுமான அம்சமாக இன்னும் தோன்றாமல் இருப்பதும் மையப்படுத்தப்பட்ட அரசும், போலிப் பாரளுமன்ற ஆட்சிமுறையும் இருப்பதும்; சீனமக்கள் ஜனநாயகப்புரட்சி 1924-1927 ஆண்டுகளின் புரட்சியைக் கடந்து சென்றதைப் போன்று ஒரு புரட்சியை நமது மக்கள் ஜனநாயகப் புரட்சி கடந்து செல்லாமல் இருப்பதும் ஆகிய விசேசமான நிலைமைகள் நமது ஜனநாயகப் புரட்சியில் உள்ளன. இந்த விசேஷமான நிலைமைகளின் காரணமாக அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலான உறவை சரியாக கையாளுதல் என்ற ஒரு தனித்தன்மை வாய்ந்த அம்சம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியில் உள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரம் அரசியல் போராட்டத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலான உறவை சரியாகக் கையாளவேண்டிய பிரச்சினையைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் கட்சி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேற்கொள்ளவேண்டிய அரசயில் நடத்தைவழியைத் தீர்மானிக்கும்போது மக்கள் யுத்தப் பாதையின் இராணுவ யுத்ததந்திர செயல்தந்திர விதிகளையும், கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

4)         ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமையை மதிப்பீடு செய்து தனது அரசியல் நடத்தை வழியை வகுத்துக்கொள்ளும்போது அத்தருணத்தில் எவை வர்க்க சமரச சக்திகளாக இருக்கின்றன என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்கவேண்டும். நேரடிச் சேமிப்புச் சக்திகளைத் தன் பின் திரட்டிக்கொண்டு எதிரிகளுடன் சமரசம் செய்துகொள்வதின் மூலம் புரட்சியைச் சீர்குலைக்கும் வர்க்க சமரசச் சக்திகளை தனிமைப்படுத்துவதையும், அவ்வாறு அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் சேமிப்புச் சக்திகளைத் தன்பக்கம் வென்றெடுப்பதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும். சமரசச் சக்திகளைத் தனிமைப்படுத்தி நேரடிச் சேமிப்புச் சக்திகளை வென்றெடுக்காமல் முன்னணியை மட்டும் தீர்மானகரமான மோதலில் ஈடுபடச் செய்வோமானால் புரட்சிக்கு தீங்கே விளையும். ஆகையால், சமரசச் சக்திகளின் பின்னாலுள்ள பரந்துபட்ட மக்களை வென்றெடுத்துப் பிரதான எதிரிக்கு எதிராக நிறுத்துவதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும். சமரசச் சக்திகளின் நடவடிக்கைகளையும், போராட்ட வடிவங்களையும் விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் வைக்கும் திட்டத்திற்கு மாறாக ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராடுவதன் மூலமே நாம் அவர்களைத் தனிமைப்படுத்த முடியும். ஆகையால் அரசியல் நடத்தை வழி இதை உத்திரவாதம் செய்வதாக அமையவேண்டும்.

5)         எதிரியின் முகாமிலும், நமது முகாமிலும் ஏற்படும் மாறுதல்களை - புரட்சிகரச் சக்திகளின் அணி சேர்க்ககையிலும் அதைப் போன்றே எதிர்ப்புரட்சிகர சக்திகளின் அணி சேர்க்கையிலும் ஏற்படும் மாறுதல்களைச் சரியாக மதிப்பீடு செய்து, எல்லா நேரடி மறைமுகச் சேமிப்புச் சக்திகளையும் தவறாமல் பயன்படுத்துவதை அரசியல் நடத்தை வழி உத்திரவாதம் செய்யவேண்டும்.

6)         ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சூழ்நிலையை மதிப்பீடு செய்து, அத்தருணத்தில் பிரதான எதிரியை எதிர்த்து சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்கள் மேற்கொள்ளும் நிலைப்பாட்டைப் பொறுத்து, பிரதான எதிரியை எதிர்த்து உண்மையாகப் போரிட முன்வரும் வர்க்கங்களுடன் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு ஐக்கிய முன்னணியைக் கூட்டியமைக்கும்படி நிலைமைகள் கோருமானல், கட்சி ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்கும்போதும், ஐக்கிய முன்னணி ஒன்று கட்டியமைக்கப்பட்ட பின் அந்த ஐக்கிய முன்னணிக்குள்ளும் இருவகை விலகல்களை எதிர்த்து கட்சி ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, பிரதான எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கலந்துகொண்டு, பாட்டாளி வர்க்கக் கட்சியுடன் ஒன்றுபட்டுப் போராட முன்வரும் முதலாளித்துவ வர்க்கப் பிரிவினருடன் பாட்டாளி வர்க்கக் கட்சி ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதை இயன்ற அளவிற்கு நிலைநிறுத்தும் கொள்கையையோ, அதன் சாத்தியப்பாட்டையோ நிராகரிப்பது, இடது சந்தர்ப்பவாதமாகும். பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டத்தை ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ளும் முதலாளித்துவப் பிரிவினர் முன்வைக்கும் திட்டத்தின் மட்டத்திற்கு தாழ்த்த முயல்வது தத்துவ, அரசியல் துறைகளில் அவர்களை எதிர்த்துப் போராடவேண்டியதன் அவசியத்தை மறுப்பது - ஐக்கிய முன்னணிக்குள்ளும் முதலாளித்துவ பிரிவினரை எதிர்த்து நடத்தப்படவேண்டிய இரத்தம் சித்தாப் போராட்டத்தின் அவசியத்தை மறுப்பது; இது வலது சந்தர்ப்பவாதமாகும். இந்த இரு விலகல்களை எதிர்த்த போராட்டத்தை அரசியல் நடத்தை வழி உத்திரவாம் செய்ய வேண்டும்.

ஆ) குறிப்பான திட்டம்

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியது ஒரு குறிப்பான திட்டம். கட்சியின் அரசியல் நடத்தை வழியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வர்க்கச் சக்திகளின் அணிசேர்க்கைக்கு ஏற்ப புரட்சிகரச் சக்திகளின் அணிசேர்க்கையிலும், எதிர்ப்புரட்சிகரச் சக்திகளின் அணி சேர்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, பிரதான எதிரியை எதிர்த்துப் போரிடும் சக்திகளின் நலன்களைக் கருதி உடனடிக் கோரிக்கைகள் அடங்கிய ஒரு குறிப்பான திட்டம் பாட்டாளி வர்க்கக் கட்சியினால் முன்வைக்கப்படவேண்டும். இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் (மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தின் அடிப்படையில்) அமைய வேண்டும். இக்குறிப்பான திட்டம் கட்சியின் குறைந்தபட்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட வேண்டும். அக்காலக்கட்டத்திற்கு உகந்த சில அரசியல் சமூகப் பொருளாதாரத் துறைகளில் உடனடிக் கோரிக்கைகள் அடங்கியது. அக்காலக்கட்டத்தின் அரசியல் நடத்தை வழிக்கேற்ப, விவசாயிகளின் விவசாயத் திட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது ழுமுமையையோ இந்த குறிப்பான திட்டம் கட்டாயமாக உள்ளடக்கியிருக்க வேண்டும். பிரதான எதிரியைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் நம்முடன் ஐக்கிய முன்னணியில் பங்குகொள்ள முன்வரும் வர்க்கங்களுக்கு, குறிப்பாக ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவு ஐக்கிய முன்னணியில் பங்குக்கொள்ள முன்வருமானால் அவற்றிற்கும் சில சலுகைகளைத் தரும் வகையில் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும். எதிரிகளுக்குள்ளே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், பலருடன் ஐக்கியப்படுவதற்கும், ஒருநேரத்தில் சிலரை எதிர்த்தும் எதிரிகளைத் தனித்தனியாக ஒழித்துக்கட்டவும் மாவோ வகுத்துத் தந்த செயல்தந்திர நெறிமுறைகளைச் சரியாகக் கையாளும் நோக்கத்தின்படி குறிப்பான திட்டம் அமையவேண்டும்.

குறிப்பான திட்டம் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்ததாக வகுக்கப்படும் கட்சியின் அரசியல் நடத்தை வழியும், அதனடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டமும் தொலைநோக்குடையதாக இருக்க வேண்டும், நீண்ட புரட்சியில் அடுத்துவரும் காலக்கட்டத்திற்குத் தேவையான நிலைமைகளை இந்தக் காலக்கட்டத்திற்குள் தோற்றுவிப்பதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு உகந்த அரசியல் நடத்தை வழிக்கு ஏற்றவாறு வகுக்கப்படும் குறிப்பான திட்டம், அந்த அரசியல் நடத்தை வழிக்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான தீர்வை அந்த குறிப்பான திட்டம் வகுக்க வேண்டும். அத்தருணத்திலுள்ள எதிரிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் அல்லது ஏற்கெனவே உள்ள அரசு இயந்திரத்தின் மூலமோ அல்லது அதனிடம் கோரிக்கைகளாக முன்வைத்து நிறைவேற்றக்கூடியதாகவோ ஒரு குறிப்பான திட்டம் அமையக்கூடாது. போலிப்பாராளுமன்ற ஆட்சிமுறை இருப்பதனாலும், ஒழுங்கமைக்கப் பட்ட திருத்தல்வாதக் கட்சிகளின் பிரச்சாரத்தினாலும் இந்த அரசு அமைப்பு முறைக்குள் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் என்ற மாயை தோற்றுவிக்கப்படும். ஆகையால் இந்த அரசு முறை பயனற்றது. இதன்மூலம் ஒரு குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவது இயலாது. இந்தக் குறிப்பான திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமானால் இந்த அரசுமுறை துடைத்தெறியப்பட வேண்டும் என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும்.

ஆளும் வர்க்கங்களும் சமரசச் சக்திகளும் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டங்களுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் உகந்த குறிப்பான திட்டங்களை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்காகப் போராடுவதன் மூலமாகத்தான், மக்களை அவர்களின் செல்வாக்கிலிருந்தும், தலைமையிலிருந்தும் வென்றெடுக்க முடியும். இவ்வாறு ஒரு குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கங்களையும் முன்வைக்காமல், ஒவ்வொரு மக்கட் பகுதியினரும், வர்க்கமும் தத்தம் பகுதி நலனுக்கான போராட்டங்களையும், பொருளாதாரப் போராட்டங்களையும் நடத்திக்கொண்டிருக்கும்போதே ஒரு பொதுவான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் (புரட்சிகர) அரசியலைப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடியாது. மக்களுக்குப் புரட்சிகர அரசியல் உணர்வைக் கொண்டுவர முடியாது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் திரட்டவும் முடியாது. இத்தகைய இயக்கங்கள் பொருளாதாரவாதத்திற்கும், தன்னியல்பிற்கும் தலைவணங்கியே தீரும். மக்களை ஆளும் வர்க்கக் கட்சிகள், சமரசக் கட்சிகள், திருத்தல்வாதக் கட்சிகள் ஆகியவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்காது. ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொரு காலக்கட்டத்தில் நிலவும் பருண்மையான சூழ்நிலைக்கு உகந்த அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் அமைந்த குறிப்பான திட்டத்தையும், அரசியல் முழக்கத்தையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றப் போராடுவதன் மூலமாகத்தான் பாட்டாளி வர்க்கம் சமுதாயத்திலுள்ள அனைத்து மக்கள் பிரிவினரோடு திட்டமிட்ட முறைப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விரிவுபடுத்த முடியும்; அவர்கள் அனைவரையும் புரட்சிகரப் பேராட்டங்களுக்குத் திரட்ட முடியும்.

இ) முழக்கங்களும் ஆணையும்

ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது போராட்டத்தின் நோக்கங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் முறைப்படுத்துவதே முழக்கம் எனப்படும். போராட்டத்தின் வெவ்வேறு குறிக்கோள்களுக்கு ஏற்ப முழக்கங்கள் மாறுபடும். முழக்கங்கள் ஒரு முழு வரலாற்றுக் கட்டத்தை தழுவியதாகவோ அல்லது வரலாற்றுக் கட்டத்துக்குள் தனித்தனி காலக்கட்டத்தைத் தழுவியதாகவோ அல்லது நிகழ்ச்சிகளை மட்டும் தழுவியதாகவோ அமையலாம்.

            எல்லாப் புரட்சிகளின் பிரதானமான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினையே ஆகும் என்றார் லெனின். புரட்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் எந்த வர்க்கத்தின் கைகளில் அல்லது எந்த வர்க்கங்களின் கைகளில் அதிகாரம் குவிந்திருக்கிறது; எந்த வர்க்கம் அல்லது எந்த வர்க்கங்கள் தூக்கியெறியப்பட வேண்டியவை; எந்த வர்க்கம் அல்லது எந்த வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அக்குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் புரட்சியின் பிரதானமான பிரச்சினையாகும்.

            புரட்சியின் வரலாற்றுக் கட்டம் முழுவதையும் தழுவியது கட்சியின் யுத்ததந்திர முழக்கம். ஆகையால் யுத்ததந்திர முழக்கம் மேற்கூறப்பட்ட லெனின் ஆய்வுரையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஒரு யுத்ததந்திர முழக்கம் சரியான ஒன்றாக இருக்கவேண்டுமானால் அது அந்நாட்டில் அக்கட்டத்தில் உள்ள சமூகப் பொருளாதாரப் படிவத்தைப் பற்றியும், அச்சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கச் சக்திகளைப் பற்றியும் ஒரு மார்க்சிய-லெனினிய முறையிலமைந்த ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கவேண்டும். இது வர்க்கப்போராட்டமுறையில் புரட்சிகரச் சக்திகளை பிரித்து ஒதுக்குவதற்கு உகந்த ஒரு சரியான திட்டத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்; புரட்சியை வெற்றி பெறச் செய்வதற்கும், புதிய வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்துக்கு பரந்துபட்ட மக்களை போர்முனைக்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு இன்றியமையாததாக இருக்கக்கூடிய ஒரு பரந்த, சக்தி வாய்ந்த அரசியல்படையை பரந்துபட்ட மக்களிடமிருந்து கட்டியமைப்பதற்குத் துணை புரிய வேண்டும். சுருங்கக்கூறின், புரட்சியின் ஒரு வரலாற்றுக்கட்டம் முழுவதும் நிலவும் வர்க்க அணி சேர்க்கைக்கு ஏற்றவாறு அதாவது எதிரியின் மீது பாட்டாளி வர்க்க இயக்கம் தாக்குதலைத் தொடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய பொதுப்பாதைக்கும் (திசை வழிக்கும்), அதற்கு இசைவாக வரையப்படும் யுத்தந்திர திட்டத்திற்கும் ஏற்றவாறு அவ்வரலாற்றுக் கட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நோக்கிப் பாட்டாளி வர்க்க இயக்கத்தை நடத்திச் செல்லும் பொருட்டு பாட்டாளி வர்க்கக் கட்சியால் முன்வைக்கப்படும் முழக்கம் ஒரு யுத்ததந்திர முழக்கம் எனப்படும்.

            மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கட்டத்துக்குள் புரட்சியின் அடிப்படையான சாராம்சமான தன்மைகள் மாறாமல் இருப்பினும், நாட்டில் நிலவும் சூழ்நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எதிரியின் முகாமிலும் பாட்டாளி வர்க்க முகாமிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் பாட்டாளி வர்க்கத்தின் உடனடிச் செயல்பாட்டிற்கான நிலைமைகளிலும், நோக்கங்களிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகின்றன. இச்சூழ்நிலையில் நிலவும் வர்க்க அணிசேர்க்கைக்கு ஏற்ப, கட்சியின் அரசியல் நடத்தை வழியின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க இயக்கப் போராட்டத்தின் நோக்கங்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் முறைப்படுத்துவதற்காக வைக்கப்படும் முழக்கம் ஒரு செயல்தந்திர முழக்கம் எனப்படும். சூழ்நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்போது, வர்க்க அணி சேர்க்கையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்போது, அச்சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு புதிய செயல்தந்திர முழக்கம் வைக்கப்படும்.

            செயல்தந்திர காலக்கட்டத்திற்குள் ஏற்படும் திருப்பங்கள் அல்லது பெரிய நிகழ்சிகளுக்குத் தகுந்தமுறையில், புரட்சி இயக்க வெள்ளத்தின் ஏற்றம் அல்லது இறக்கத்திற்கு ஏற்றவாறு வைக்கப்படும் முழக்கங்கள் நடவடிக்கை முழக்கங்கள் எனப்படும். செயல்தந்திர முழக்கத்தை நிறைவேற்றும் பொருட்டும், கட்சியின் அரசியல் நடத்தை வழியும், செயல்தந்திர முழக்கமும் சரியானது என்று மக்கள் தங்கள் சொந்த அரசியல் அனுபவத்தின் மூலம் உணரச் செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை முழக்கங்கள் வைக்கப்படுகின்றன.

            எனவே போராட்டத்தின் நோக்கங்கள், அவை உடனடி நோக்கங்களாகவோ அல்லது தொலைவான எதிர்காலத்திய நோக்கங்களாவோ இருப்பதற்கேற்ப மேற்கூறப்பட்ட முழக்கங்கள் மாறுபட்டவையாக இருக்கின்றன.

            வரலாற்று வளர்ச்சிக்கு ஏற்றவகையில் செயல்தந்திர (அடிப்படை) அரசியல் முழக்கங்களை முன்வைப்பதன் மூலம், இந்தச் செயல்தந்திர அரசியல் முழக்கங்களை உண்மையில் நடைமுறையில் நிறைவேற்றும் பொருட்டு செயல்தந்திரக் காலப்பகுதிக்குள் ஏற்படும் திருப்பங்களுக்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்கும் தகுந்த முறையிலும் புரட்சி அலை ஏற்றம் அல்லது இறக்கத்திற்கு ஏற்றவாறும் நடவடிக்கை முழக்கங்களை முன்வைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கமானது தனது கட்சியின் மூலம் நாட்டிலுள்ள எல்லா புரட்சிகர வர்க்கங்களுக்கும் மக்கள் பிரிவினருக்கும் அரசியல் தலைமையை வழங்குகின்றது. இப்படிப்பட்ட குறிப்பான நோக்கங்கள் இல்லை என்றால் அரசியல் தலைமை என்பதற்கு இடமே இல்லை.

            பரந்துபட்ட மக்களின் அரசியல் கல்விக்குப் பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. அரசியல் கல்வியைப் பெற மக்களுக்குச் சொந்த அரசியல் அனுபவமும் தேவைப்படுகின்றது. கட்சியின் முழக்கத்தை மக்களுக்கான முழக்கமாக மாற்றுவதற்கும், அவர்களைப் போராட்ட அரங்கிற்குக் கொண்டு சென்று நிறுத்துவதற்கும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த அரசியல் அனுபவத்தின் வாயிலாகக் கட்சியின் அடிப்படை அரசியல் முழக்கத்தின் சரியான தன்மையை உணர்ந்து கொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை முழக்கங்கள் வைக்கப்படுகின்றன.

            செயல்தந்திர நடவடிக்கைகளில் முக்கியமானது மக்களை வழிநடத்துவதற்கான சரியான முழக்கங்களையும் ஆணையையும் தருவதாகும். இம்முழக்கங்களும் ஆணையும் யுத்ததந்திர, செயல்தந்திர முழக்கங்களும் ஒன்றல்ல; இவை இருவகைப் பட்டவையாகும்.

            யுத்ததந்திர, செயல்தந்திர முழக்கங்கள் ஒன்று ஒரு வரலாற்றுக் கட்டம் முழுவதற்கும் உரியது; மற்றொன்று அவ்வரலாற்றுக் கட்டத்துக்குள் தனித்தனி காலக்கட்டங்களுக்கு உரியது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவும் வர்க்க சக்திகளின் அணி சேர்க்கைக்கு ஏற்றவாறு அமையும் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கங்களைக் குறிக்கின்றன. ஆனால் ஒரு காலப்பகுதியின் நோக்கமாக அமையும் ஒரு குறிப்பிட்ட முழக்கத்தை (யுத்த தந்திர முழக்கத்தை அல்லது செயல்தந்திர முழக்கத்தை) அமல்படுத்தும்போது அம்முழக்கத்தைப் புறவயமான நிலைமைகளுக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு ஒரு பிரச்சார முழக்கமாக, ஒரு கிளர்ச்சி முழக்கமாக, ஒரு செயல்முழக்கமாக இறுதியில் ஒரு ஆணையாக மாற்றுதல் என்பது இயக்கம் வளர்ச்சியடையும் கட்டங்களையும், பாய்ச்சலையும் குறிக்கின்றது. சுருங்கக்கூறின் முழக்கங்கள் இரண்டுவகைப்படும். இரண்டு வகைப்பட்ட முழக்கங்களையும் சேர்த்து ஒன்றெனக் கருதி விடக்கூடாது. ஒரு காலப்பகுதிக்கென பாட்டாளி வர்க்கத்தின் நோக்கங்களாக அமையும் (யுத்தநத்திர, செயல்தந்திர முழக்கங்கள்) முதல்வகைப்பட்டதையும், இம்முழக்கங்களில் ஏதாவது ஒன்றை அமல்படுத்தும்போது இயக்கம் அடையும் வளர்ச்சியின் கட்டங்களையும், பாய்ச்சலையும் குறிக்கின்ற இரண்டாவது வகைப்பட்ட முழக்கங்களையும், ஆணையையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஒரு பிரச்சார முழக்கத்தின் நோக்கம் மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக்குழுக்களையும், நபர்களையும் வென்றெடுப்பதாகும். அதாவது மக்களின் முன்னேறிய பகுதியினரை ஒழுங்கமைப்பது இக்கட்டத்தில் நமது நோக்கமாக இருக்கின்றது.

            ஒரு கிளர்ச்சி முழக்கத்தின் நோக்கம் பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுப்பதாகும். இயக்கம் ஒரு வெகுஜனத் தன்மையை அடையச் செய்வது இக்கட்டத்தில் நமது நோக்கமாகும்.

            ஒரு செயல்முழக்கத்தின் நோக்கம் எதிரியின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பரந்துபட்ட மக்களைத் தூண்டுவதும், மக்களை நடவடிக்கைகளில் இறங்கும்படி தூண்டுவதுமாகும்.

            ஒரு கட்சியின் ஆணை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கட்சியின் நேரடியான அறைகூவல் ஆகும். இந்த அறைகூவலானது மக்கள் திரளினரின் தேவைகளைச் சரியாகவும், பொருத்தமாகவும் முறைப்படுத்தப்பட்டு இருக்குமேயானால் பரந்துபட்ட மக்களால் அது மேற்கொள்ளப்பட்டு விடும். இதற்குக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

            பொதுவாகப் பிரச்சார முழக்கத்திலிருந்து துவங்கி படிப்படியாகச் செயல் முழக்கத்திற்கும், செயல்முழக்கத்திலிருந்து திட்டவட்டமான ஆணை பிறப்பிக்கும் கட்டத்துக்கு மாறிச்செல்வது கட்சியின் பணியாகும்.

            இவ்வாறு முழக்கத்தை மாற்றிச்சொல்லும்போது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை காலம் கனிவதற்கு முன்னர் அதை ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வதற்குத் தேவையான நிலைமை இன்னும் தோன்றாதிருக்கும் போது பாட்டாளி வர்க்க இயக்கம் எடுக்கும் நடவடிக்கை அதன் சக்திகள் தோல்வியடைவதில் போய் முடியும்.

            நெருக்கடி நேரங்களில் நடுத்தரவர்க்கத்தினரிடம் ஊசலாட்டம் காணப்படலாம். செயல்முழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட ஆணையையும் மாற்றவோ, தள்ளிப்போடவோ நேரிடும். ஆனால் இதற்காக கிளர்ச்சி முழக்கத்தைக் கைவிடக்கூடாது.

            சூழ்நிலையை ஒவ்வொரு தருணத்திலும் சரியாகப் பரிசீலித்து திறமையாக தக்க தருணத்தில் கிளர்ச்சி முழக்கங்களைச் செயல் முழக்கங்களாகவும், செயல் முழக்கங்களை ஆணைகளாகவும் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றியமைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், சூழ்நிலைமை மாறினால், எந்தவொரு முழக்கத்தையும் அது ஜனரஞ்சகமானதாக இருந்தபோதிலும், காலம் கனிந்திருந்தபோதிலும் அதை நிறைவேற்றுவது சரியல்ல என்ற நிலைமை ஏற்பட்டிருந்தால், அதைச் செயல்படுத்துவதை ரத்துச் செய்வதற்குத் தேவையான வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதும் கூட கட்சியின் கடமையாகும். சிலசமயம் எதிரி விரித்துள்ள வலையில் விழாமல் அணிகளைக் காப்பாற்றுவதற்காக எந்தவொரு தீர்மானிக்கப்பட்ட முழக்கத்தையோ அல்லது ஆணையையோ அதற்கான காலம் கனிந்திருந்தபோதிலும்கூட உடனடியாக ரத்துச் செய்ய வேண்டிய தேவையை அல்லது மாற்றியமைக்கவேண்டிய தேவையை கட்சி எதிர்கொள்ள வேண்டியதும் உண்டு. அல்லது ஒரு ஆணையை நிறைவேற்றுவதை மேலும் ஒரு சாதகமான தருணத்திற்கு ஒத்திப்போட வேண்டிய தேவையையும் கட்சி எதிர்கொள்ள வேண்டிய சமயமும் உண்டு.

            பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புறவயமான அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, அகவயமான அம்சத்தை நெறிமுறைப்படுத்தும் பொருட்டு அதைச் சரியாகக் கையாள்வதற்கென ஒரு முழு வரலாற்றுக் கட்டத்தையும் தழுவக்கூடியதாகவுள்ள யுத்ததந்திர முழக்கத்தையும், அவ்வரலாற்றுக் கட்டத்திற்குள் தனித்தனி கால கட்டங்களுக்குரிய செயல்தந்திர முழக்கங்களையும் முன்வைப்பதும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பழைய முழக்கங்களுக்கு பதிலாகப் புதிய முழக்கங்களை முன் வைப்பதும், இம்முழக்கங்களில் எதுவொன்றையும் அமல்படுதும்போது அதை ஒரு கட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிச்சென்று இறுதியில் அதை ஆணையாக மாற்றுவதும்; அடிப்படை லட்சியங்களுடன் உடனடிக் குறிக்கோளை இணைக்கும் பொருட்டு பிரச்சார முழக்கங்களுடன் நடவடிக்கை முழக்கங்களைத் திறமையுடன் இணைப்பதும் ஆகியவை கட்சித் தலைமையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். இத்தகைய மர்க்சிய லெனினிய மாவோ வழியிலான போர்தந்திரம் செயல் தந்திரத்தை இ.க.க.(மா.லெ) கடைபிடிக்கவில்லை.

தொகுத்துக் கூறினால் சாருமஜூம்தார் முன்வைத்த வழியானது வெகுஜன இயக்கங்களையும், போராட்டங்களையும் புறக்கணித்து அழித்தொழிப்பு ஒன்றேவழி, ஒரே போராட்ட வடிவம் என்பது இடது தீவிரவாத வழியேயாகும். அது எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றேயாகும். அதேபோல் சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் கனுசன்யால் முன்வைக்கும் பொருளாதாரவாத, தொழிற்சங்கவாத, பாராளுமன்றவாத வழி மற்றும் வெளிப்படையான கட்சி என்பது ஒரு வலது சந்தர்ப்பவாத வழியாகும். சாரு மஜூம்தாரின் இடது தீவிரவாத வழியும், கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத வழியும் தன்னியல்பின் இரண்டு முனைகளேயாகும். எனவே இவ்விரண்டு தன்னியல்புகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க முடியும். அத்தகைய ஒரு புரட்சிகர கட்சி சரியான திட்டம், போர்தந்திரம், செயல் தந்திரம், அரசியல் நடத்தை வழி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய முறைகளை இ.க.க.(மா.லெ) கடைபிடிக்கவில்லை என்பதைப் பார்த்தோம். இ.க.க.(மா.லெ) கட்டியமைக்கப்பட்ட முறைகள் பற்றி இனி காண்போம்.

4. இ.க.க (மா.லெ) கட்டிய முறை பற்றி

1967-ல் நக்சல்பாரியில் ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒரு பேரெழுச்சியாகும். இத்தகைய ஒரு பேரெழுச்சியே கட்சியை கட்டுவதற்கான தத்துவ, அரசியல், அமைப்புக் கோட்பாடுகளை முன்வைக்க முடியாது. ஒரு கட்சியை கட்டியமைக்க முடியாது. அவ்வாறு நக்சல்பாரிப் பேரெழுச்சியே கட்சியைக் கட்டும் என்று கூறுவது ஒரு அனுபவவாதமேயாகும். நக்சல்பாரி எழுச்சியே கட்சியைக் கட்டியது என்ற நிலைப்பாட்டைத்தான் கனுசன்யால் முன்வைக்கிறார்.

உண்மையில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவும், அதற்குப் பின்னர் வந்த மா.லெ. கட்சியும்தான் கட்சிகட்டும் பணியை மேற்கொண்டது. 1970-ல் கட்சி கட்டுவதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்தது. அது தீர்த்துவைத்த தத்துவ அரசியல் நிலைப்பாடுகளைப் பின்வருமாறு கூறலாம்.

1)         இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் புரையோடிப் போயிருந்த திரிபுவாதத்தை எதிர்த்து அரசியல் தத்துவ ரீதியாக போராட்டம் நடத்தி அதனை முறியடித்தது.

2)         மாவோ சிந்தனையை உயர்த்திப்பிடித்தது - அதை சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டியாக இன்றைய கட்டத்தின் மார்க்சிய-லெனினியமாக ஏற்றுக்கொண்டு இந்தியப் புரட்சியின் வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம்-லெனினியம்-மாவோ சிந்தனையைப் பிரகடனம் செய்தது.

3)         இந்திய சமூக அமைப்பை அரைக்காலனிய, அரைநிலவுடைமை அமைப்பென்று கணித்து, இந்தியப் புரட்சியின் கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் வரையறை செய்தது. இந்திய சமுதாயத்தில் நிலவும் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் முதன்மை முரண்பாட்டை சரியாக கணித்தது. இந்தியப் புரட்சியின் இலக்குகளாக நிலவுடைமை, தரகுமுதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய நான்கு மலைகளைத் தூக்கியெறிய வேண்டுமென வரையறுத்தது. அதை எதிர்ப்பதற்கான போர்தந்திரத்தை புரட்சியின் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதைச் சரியாகத் தீர்மானித்தது.

4)         அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்தியாவின் புரட்சிக்குத் தடையாக உள்ள பாராளுமன்றப் பாதையை புறக்கணித்ததுடன், அதற்குப் பதிலாக புரட்சிகரமான ஆயுதந்தாங்கிய விவசாயப்புரட்சிப் பாதையை முன்வைத்தது. குருச்சேவின் இந்திய வாரிசுகள் சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம்.-மும் முன்வைத்த "அமைதிவழி மாற்றத்திற்கு" மாறாக நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்து இந்திய மக்களின் விடுதலைக்கான பாதை இது ஒன்று மட்டும்தான் என்பதைத் திட்டவட்டமாக பிரகடனம் செய்தது. மக்கள் படையை கட்டுவதற்கான பொது விதிகளைத் தீர்மானித்தது.

5)         சர்வதேசக் கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு அதற்கு எதிராகப் போராடியது. சீனத்தில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும் பண்பாட்டுப் புரட்சியை உயர்த்திப் பிடித்தது. சர்வதேச ரீதியிலும், இந்தியாவிலும் திரிபுவாதமே பிரதான அபாயம் என்பதைப் பிரகடனம் செய்தது.

6)         திரிபுவாத, சட்டவாதப் போக்கான வெளிப்படையான கட்சி என்ற நிலையை மாற்றி இரகசியக் கட்சி அமைப்பை நிறுவ முயற்சித்தது.

7)         இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் பிரச்சினைக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைதான் தீர்வு என்று சரியாக வலியுறுத்தியது.

மேற்கண்டவாறு இ.க.க. (மா.லெ) 1970-ல் தனது வேலைத்திட்டத்தை முன்வைத்தது.

5. கட்சி கட்டுவதில் கனுசன்யாலின் பங்கு

கனுசன்யால் மா.லெ. கட்சி கட்டுவதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார். கனுசன்யால் சீனாவிலிருந்த போது இந்தியாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் கூட்டமைப்பு 1967- நவம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த வளர்ச்சி பற்றி தோழர் கனுசன்யால் அறிந்திருக்கவில்லை என்று கூறுகிறார். சீனாவில் இருந்து திரும்பிய உடன் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் ஓராண்டு கழிந்து வெளிவந்த பிறகு சி.பி.ஐ. (எம்.எல்) உருவாக்கப்பட்டதை கல்கத்தாவில் மே-1 ம் தேதி கனுசன்யால் அறிவித்தார். சி.பி.ஐ. (எம்.எல்) உருவான காலக்கட்டத்தில் அகில இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்கள் குழுவின் உள்ளேயும் வெளியேயும் வேறுபாடுகளும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வந்தது. இது கனுசன்யாலுக்கும் மற்ற நக்சல்பாரி தோழர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. சி.பி.ஐ (எம்.எல்) சாருமஜும்தாருடைய பாதையை ஏற்றது. இந்தப் பாதை கனுசன்யாலால் தலைமை தாங்கப்பட்ட நக்சல்பாரிபோராட்ட இயக்கத்தினால் முன்பே ஒதுக்கித் தள்ளப்பட்டது.

கனுசன்யால் அரசியல்வழி பற்றிப் பேசுகிறாரே ஒழிய திட்டம்பற்றி எதுவும் பேசவில்லை. அத்துடன் அரசியல்வழி பற்றிய பிரச்சினையிலும் கூட தமது நிலைப்பாட்டை முன்வைத்துப் போராடவும் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுவிலும் இ.க.க (மா.லெ) மத்தியக் கமிட்டி உறுப்பினராக அவர் இருந்தார் என்பது மட்டுமல்ல, இ.க.க (மா.லெ.) கட்சி அமைக்கப்பட்டதை அவர்தான் பிரகடனப்படுத்தினார். இவ்வாறு கட்சிக்குள் மௌனமாக இருந்துவிட்டு கட்சி கட்டுவதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது கனுசன்யாலின் சந்தர்ப்பவாதத்தைதான் காட்டுகிறது.

கனுசன்யாலிடம் இருந்த பொருளாதாரவாதம் மற்றும் வலது சந்தர்ப்பவாதம் தான் சாரு மஜூம்தாரை எதிர்த்து கட்சிக்குள் தனது நிலையை வைத்துப் போராடாமல் மௌனமாக இருக்கச் செய்தது. கனுசன்யால் தனது இத்தகைய போக்குப் பற்றி தனது சுயவிமர்சனத்தில் பின்வருமாறு கூறியுள்ளதாக "கனுசன்யால் பொதுவுடைமை இயக்கத்தின் கலங்கரை விளக்கம்" என்ற கட்டுரையில் சுபோத் மித்ரா கூறுகிறார்:

"ஆனாலும் கனுசன்யால் இந்தப் பாதையை (சாருவின் இடது தீவிரப் பாதையை) எதிர்த்துத் தொடர்ச்சியான விடாப்பிடியான வழியில் போராடவில்லை. தலைமை தாங்குபவர் மற்றும் வழிநடத்துபவர்கள் பற்றி மார்க்சிய விரோதக் கருத்துக்களை கனுசன்யால் கொண்டிருந்தார். கனுசன்யால் தோழர் சாருமஜூம்தாரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல தருணங்களில் எதிர்த்தவர். ஆனாலுங்கூட மா.லெ. கட்சியின் உருவாக்கத்தின் போது சாருமஜூம்தாரின் பங்கைப் பற்றிய விஷயத்தில் அவர் மிகமோசமான மார்க்சிய விரோத நிலையை எடுத்தார். சாரு மஜூம்தாரின் பாதைக்கு ஆதரவு தெரிவித்தும், அதைப் பரந்த அளவில் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்ததையும் கவனித்த கனுசன்யால் அந்தக் காலக்கட்டத்தில் பொறுத்திருந்து பார்ப்பது என்ற நிலையை எடுத்தார். இது கனுசன்யால் உண்மையில் மார்க்சியத்தைக் கைவிட்டுவிட்டதையும், அனுபவ வாதத்திற்கு அடிபணிந்து போனதையும், மிக மோசமான வடிவில் தாராளவாதத்தை நடைமுறைபடுத்தியதையும் காட்டியது. 1969-ஆம் ஆண்டில் கட்சி உருவாக்கத்தின் போதும் 1970-ஆம் ஆண்டு கட்சிக் காங்கிரசின் போதும் கனுசன்யால் அமைதிகாத்தது சாரு மஜூம்தாரின் பாதைக்கு மறைமுகமாக ஆதரவளித்துதான்" என்று கூறுகிறார்.

நக்சல்பாரி எழுச்சியின் தோல்விக்குப் பிறகு கட்சி அணிகளுக்கு கனுசன்யாலும் 6 மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து 1970-க்குப் பின்பு சிறையிலிருந்து கட்சி அணிகளுக்கு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதினர். அந்தக் கடிதத்தில் திட்டம் பற்றி எந்தவித நிலைப்பாட்டையும் முன்வைக்காமல் சாருவின் இடது தீவிரவாத வழியை எதிர்த்துப் போராட அழைப்பு விடப்பட்டது. அந்தக் கடிதம் 4 பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்டது.

1)         சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1970-நவம்பரில் நமது விடுதலைப் புரட்சி குறித்து முன்வைத்த ஆலோசனைகளை சாருமஜூம்தாரும், மத்தியக் கமிட்டியும் ஏற்று சுயவிமர்சனமாக வரவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை மத்தியக் கமிட்டியும், சாருமஜூம்தாரும் அணிகளுக்கு சுற்றுக்கு விடவுமில்லை. இந்த ஆலோசனைகளிலிருந்து அவர்கள் பாடம் கற்கவுமில்லை. உட்கட்சி விவாதத்திற்கும் தயாரில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய பழைய கேடு கெட்ட முறைகளே தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டது.

2)         சாருமஜூம்தாரும், இ.க.க.(மா.லெ) மத்தியக் கமிட்டியும் நமது விவசாயப் புரட்சியின் வசந்தத்தின் இடி முழக்கம் என்ற பிரசித்திப் பெற்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பாதையிலிருந்து முழுவதுமாக விலகிச் சென்றுவிட்டனர். இடது தீவிரவாத வழியைச் செயல்படுத்தி கட்சிக்குப் பெரும் தோல்வியைக் கொண்டுவந்துள்ளனர். எனவே இந்த வழிக்கு சாருமஜூம்தாரும் மத்தியக் கமிட்டியும் பொறுப்பேற்க வேண்டும். அதிலும் இதற்கு முதன்மையான பொறுப்பு சாருமஜூம்தாரே ஆவார்.

3)         நாங்கள் எந்த ஒரு குழுவோ அல்லது கோஷ்டியோ அல்ல என்பதைப் பிரகடனப்படுத்துகிறோம்.

4)         மாவோ சிந்தனையின் மீது நம்பிக்கையுள்ள - கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் உள்ள தோழர்களோடு பகைமையற்ற உறவுகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு கனுசன்யால் இ.க.க (மா.லெ) கட்சியை எதிர்த்து, தனது வலது சந்தர்ப்பவாத வழியில் அகில இந்திய அளவில் ஒரு மாற்றுக் கட்சியை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில்தான் கட்சிக்கு உள்ளே உள்ள புரட்சியாளர்களைக் கொண்டும் வெளியிலுள்ள குழுக்களுடனும் ஐக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

=======================================

 

 

3. கனுசன்யாலின் ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

 

1. சி.பி.ஐ (எம்.எல்)-லில் ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

சி.பி.ஐ. (எம்.எல்.)ன் இடது தீவிரவாத வழியில் கட்சி பல குழுக்களாக சிதறுண்ட பிறகு 1972-க்குப் பின்னால் சிதறுண்ட புரட்சியாளர்கள் குழுக்களை ஒன்றுபடுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு.

1)         சத்யநாராயண் சிங், சிவக்குமார் மிஸ்ரா, குருபக்சிங், அசிம் சட்டர்ஜி ஆகியோர் எடுத்த முயற்சி;

2)         சுனிதிகுமார் கோஷ், கொண்டப்பள்ளி சீதாராமையா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அமைப்புக் கமிட்டி;

3)         சத்யநாராயண் சிங், சந்திரபுல்லா ரெட்டி உருவாக்கிய மத்திய கமிட்டி;

4)         சத்யநாராயண் சிங், சந்தோஷ்ராணா, பாஸ்கர் நந்தி ஆகியோர் உருவாக்கிய ஐக்கியம்;

5)         தேவலப்பள்ளி வெங்கடேஸ்வர ராவ், மோனிக் குஹா உருவாக்கிய ஒருங்கிணைப்பு மையம்;

6)         கேரளா வேணு உருவாக்கிய மத்திய ஒருங்கிணைப்பு கமிட்டி;

7)         கொண்டபள்ளி சீதாராமையா தலைமையில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்த்து அமைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு;

8)         கனுசன்யால், அசிம் சட்டர்ஜி முயற்சியில் ஆறு குழுக்கள், ஒன்பது குழுக்கள் இணைந்தன என்ற அறிவிப்புகள்;

9)         சத்யநாராயண் சிங் 13 குழுக்களைக் கொண்டு வெளியிட்ட கூட்டு அறிக்கை;

10)       சந்திரபுல்லா ரெட்டி, வினோத் மிஸ்ரா இணைந்து உருவாக்கிய கூட்டுக்கமிட்டி.

மேற்கண்டவாறு பல்வேறு ஐக்கியத்திற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இவ்வாறு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன?

அ) திட்டப் பிரச்சினையில் சமூக அமைப்பின் தன்மை பற்றியும், புரட்சியின் பாதை நீண்ட யுத்தம் பற்றிய கோட்பாடுகளிலும், சீனா சோசலிச நாடா, முதலாளித்துவ நாடா ஆகிய பிரச்சினைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்.

ஆ) நடைமுறைப் பிரச்சினையில் போர்க்குணமிக்க பொருளாதாரப் போராட்டமே வர்க்கப் போராட்டம் என்ற நிலைப்பாடுகளும், தேர்தலில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற நிலைப்பாடுகளிலும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் பிளவுகளாக மாறுகின்றன.

நாம் பங்கேற்ற மக்கள் யுத்தக் குழு பிளவுப்பட்டதற்கான காரணம், அதன் ஐக்கியத்திலேயே உள்ளது. மக்கள் யுத்தக் குழு 1970 - திட்டத்தை ஏற்றதோடு அன்றாட நலன்களுக்கான பொருளாதாரப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவது என்ற போர்க்குணம்மிக்க பொருளாதாரப் போராட்டங்கள் என்ற தன்னியல்பு செயல்தந்திரத்தின் அடிப்படையில்தான் ஒன்றிணைந்தது. பின்னர் மத்தியக் கமிட்டியில் இருந்த பெரும்பான்மையான தோழர்கள் கட்சியின் வழி தன்னியல்பானது என்றும், போர்க்குணம்மிக்க பொருளாதாரவாதம் என்றும் விமர்சித்து திட்டவகை செயல்தந்திரத்தின் அடிப்படையில் அறிக்கையை முன்வைத்தனர். திட்டம் பற்றியும், போர்தந்திரம் செயல்தந்திரம் பற்றியும் பெரும்பான்மையினர் ஒரு ஆவணத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த ஆவணத்தை கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான மத்தியக்கமிட்டி ஏற்க மறுத்ததோடு கட்சியை மேலிருந்து பிளவுபடுத்தியது. இவ்வாறு போர்தந்திர செயல்தந்திரப் பிரச்சினகளில் ஏற்பட்ட முரண்பாடுகளால் மக்கள் யுத்தக் குழு பிளவுபட்டது.

2. கனுசன்யாலின் ஐக்கியத்திற்கான முயற்சிகள்

கனுசன்யால் தனது வலது சந்தர்ப்பவாத வழியிலிருந்து ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 1979-ல் சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு கனுசன்யால் மேற்கொண்ட ஐக்கியத்திற்கான முயற்சிகள் பற்றி கனுசன்யால் கலங்கரை விளக்கம் என்ற கட்டுரையில் சுபோத் மித்ரா பின்வருமாறு கூறுகிறார்:

"1979-ல் சிறையிலிருந்து வெளிவந்தபிறகு கனுசன்யால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை இணைப்பதற்கு முயற்சிகள் எடுத்தார். அதன் முதற்படியாக 1981-ல் ஒ.சி.சி.ஆர். (Organaisation Committee for Communist Revolutinaries) உருவாக்குவதில் முடிந்தது.

அகில இந்திய அளவில் கேரளாவின் கே.பி.ஆர்., எம்.கிருஷ்ணப்பா மற்றும் சத்யநாராயண் சின்ஹா ஆகியோருடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனால் அது நீடிக்கவில்லை. அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

பின்னர் கனுசன்யால் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஒ.சி.சி.ஆர். (OCCR), சுபோத் மித்ராவால் தலைமைதாங்கப்பட்ட யு.சி.சி.ஆர்.ஐ (எம்.எல்.) UCCRI (ML), உமாதர் சிங் தலைமையிலான சி.ஒ.சி. சி.பி.ஐ. (எம்.எல்.) COC CPI (ML), கைமூராங்கே, எம்.எச்.கிருஷ்ணப்பாவால் தலைமைதாங்கப்பட்ட ஐ.சி.பி. (ICP) மற்றும் சபுஜ்சென் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆகியவை ஒன்றிணைவது என்று முடிவு செய்தன. 1985,மே-24ல் நடந்த ஐக்கியத்திற்கான மாநாட்டில் கனுசன்யாலை பொதுச் செயலாளராகக் கொண்டு சி.ஒ.ஐ.(எம்.எல்.) COI (ML) உருவாக்கப்பட்டது.

பின்னர் 2003-ல் மூன்று அகில இந்தியக் குழுக்களான சி.ஒ.ஐ (எம்.எல்), சி.பி.ஐ.யு (எம்.எல்.) மற்றும் சி.பி.ஐ (எம்.எல்.) ஐக்கியம் ஆகியவை ஒன்றிணைந்து கனுசன்யால் தலைமையில் சி.பி.ஐ (எம்.எல்.) உருவானது. அதே நேரத்தில் கேரளாவை ஆதாரமாகக் கொண்ட கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.) செங்கொடி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தன. பேச்சுவார்த்தையின் இறுதியில் 2005-ல் விஜயவாடா ஐக்கிய மாநாட்டில் சி.பி.ஐ (எம்.எல்)-ம், சி.பி.ஐ.(எம்.எல்) செங்கொடியும் இணைந்து கனுசன்யால் தலைமையில் சி.பி.ஐ. (எம்.எல்.) உருவானது" என்று கூறுகிறார்.

ஆனால் அந்தக் கட்சி 2009ல் மூன்றாக உடைந்தது. கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.), கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான சி.பி.ஐ.(எம்.எல்.) என இரண்டாகப் பிளவுபட்டது மட்டுமல்ல கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலான செங்கொடி குழுவின் கேரளப் பிரிவு ஜெயக்குமார் தலைமையில் தனியாகப் பிரிந்து இயங்க ஆரம்பித்தது.

சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சி உருவானது பற்றியும், அவர்கள் எந்த அடிப்படையில் ஐக்கியப்பட்டார்கள் என்பதையும் அக்கட்சியின் 'கம்யூனிஸ்ட்' பத்திரிகையில் பின்வருமாறு கூறுகின்றனர்:

கட்சித் திட்டம் குறித்த வரையறைகள், கட்சி அமைப்பு விதிகள், அரசியல் தீர்மானம் குறித்து இரண்டு அமைப்புகளின் கூட்டுக் கமிட்டியின் நீண்ட விவாதத்தின் மூலம் ஒரே அமைப்பாக மாறுவது என்பதை ஒற்றுமை மாநாடு ஏற்றுக்கொண்டது. ஆனால் நான்கு முக்கியப் பிரச்சினைகளில் அதாவது 1967-முதல் 1972-வரையிலான கட்சியின் வரலாறு பற்றிய மதிப்பீடு, இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு மற்றும் புரட்சியின் பாதை போன்ற பிரச்சினைகளில் ஒத்தக் கருத்தை எட்ட முடியவில்லை. இந்த நான்கு அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டாலும் அவைகளை ஐக்கியத் தீர்மானம் மற்றும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலான புரட்சிகர நடைமுறையில் முன்னேறுவதன் மூலமாகத் தீர்க்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையிலிருந்து துணிந்து முடிவெடுத்ததாகக் கூறுகின்றனர்.

மேலும் அடிப்படைப் பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துக்களை விவாதித்து தீர்வுகண்டு ஒற்றுமை காண்பதற்குப் பதிலாக முரண்பாட்டுடன் ஐக்கியப்பட்டதை பின்வருமாறு நியாயப்படுத்துகின்றனர். சி.பி.ஐ.(எம்.எல்.)-ன் சிறப்பு மாநாட்டிற்காக இராமச்சந்திரன் குழுவினர் முன்வைத்த ஆவணத்தில் இந்த ஐக்கியம் பற்றி பின்வருமாறு நியாயப்படுத்தப்படுகிறது :

"ஒரு புறத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரப்படுத்திக்கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு யுத்ததந்திர ரீதியான அடிமைத்தனத்தை பலப்படுத்துகின்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கு சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தது. இது சோசலிச பொய் கோஷத்தின் கீழ் ஆளும் வர்க்கக் கொள்கைகளுக்கு முற்றாக சீரழிந்து போனதை அம்பலப்படுத்தியது. சி.பி.எம். லிபரேசன் குழுவானது வலது சந்தர்ப்பவாத நிலைக்கு வேகமாக விலகிச் சென்றது. இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த "காலனிய ஒழிப்பு" கொள்கைகளானது இத்தகைய நாடுகள் (இந்தியா போன்ற) ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்துவிட்டதாகவும், சோசலிசப் புரட்சியின் கட்டத்தில் இருக்கக்கூடிய முதலாளித்துவ நாடுகளாக விளக்கம் கொடுத்து வந்த விளிம்பு நிலைக் குழுக்கள் சீர்திருத்தத்திற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சித்தாந்தத்திற்கும் சென்று சிதைந்து போனது. "எதிர்ப்பு வழியை" அடிப்படையாகக் கொண்ட நீண்ட மக்கள் யுத்தத்தை பரிந்துரைத்த சி.பி.ஐ (எம்.எல்.) புதிய ஜனநாயகம் போன்ற அமைப்புகள்"எதிர்ப்புப் போராட்டத்தை" வளர்ப்பதோ அல்லது வெகுஜன வழியை வளர்ப்பதோ கடினமானது இல்லை என்று கண்டனர். அவ்வமைப்புகள் குறுங்குழுவாத நிலைகளுக்கும், வலது விலகல்களுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். மறு புறத்தில் சி.பி.ஐ (எம்.எல்) மக்கள் யுத்தமானது சி.பி.ஐ (எம்.எல்.) கட்சி ஒற்றுமையுடனும், பிறகு எம்.சி.சி. யுடனும் இணைந்து சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தை உருவாக்கியது. வெறும் படைக்குழு நடவடிக்கைகளாகக் குறுக்கிக்கொண்டது. இவ்வாறு இந்த அமைப்புகளில் எதுவும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற, ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கிற மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு நாடுதழுவிய வெகுஜன இயக்கங்கள் மற்றும் எழுச்சிகளை எடுத்துச் செல்லும் நிலையில் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் ஐக்கியப்பட்ட சி.பி.ஐ.(எம்.எல்.)-ன் உருவாக்கத்தை நோக்கி இட்டுச் சென்ற விஜயவாடா ஒற்றுமை மாநாடானது ஒரு இனக்குறிப்பான முன்னோடி நடவடிக்கையாகும் என்று கூறுகிறது. அதுவும் மா.லெ. சக்திகள் ஒற்றுமை குறித்து பிடிகொடுக்காமல் தப்பித்துக் கொள்ளும் இன்றைய சூழலில் அடிப்படைப் பிரச்சினைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஒன்றுபடுவது என்ற முடிவு துணிச்சலானது என்று கூறினர். கோட்பாடற்ற ஐக்கியத்தை நியாயப்படுத்தினர்.

அடிப்படை நிலைப்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் ஐக்கியப்படுவது என்பது சந்தர்ப்பவாதம் என்பதும், அது பிளவில்தான் முடியும் என்பதும் இவ்விரு அமைப்புகளும் அறியாததல்ல. அத்துடன் அது ஒன்றும் புதிய முயற்சியோ அல்லது துணிச்சலான முடிவோ அல்ல. ஏற்கனவே சி.ஆர்.சி. செங்கொடியிலிருந்து தோழர் ரவூப் வெளியேற்றப்பட்டபோது, செங்கொடி அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளை கேள்வி எழுப்புகிறார் என்ற காரணத்திற்காகத்தான் அவரை வெளியேற்றியது. எந்த நிலைப்பாடுகளைச் சொல்லி 1998-ல் ரவூஃப் வெளியேற்றப்பட்டாரோ அதே நிலைப்பாடுகளை உடைய கனுசன்யால் கட்சியுடன் 2005-ல் ஐக்கியப்பட்டது கேடுகெட்ட சந்தர்ப்பவாதமே ஒழிய துணிச்சலான நடவடிக்கை அல்ல. இந்த சந்தர்ப்பவாதத்தை மூடி மறைப்பதற்காகத்தான் மேற்கண்டவாறு சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அணிகளை ஏமாற்றினர்.

3. சி.ஆர்.சி. யிலிருந்து ரவூஃப் வெளியேற்றப்படுவதற்கான காரணம்

1979-ல் ஆந்திராவின் எ.பி.ஆர்.ஒ.சி (APROC)-யும், கேரள மாநிலக் கமிட்டியும் இணைந்து கீழ்க்கண்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் சி.ஆர்.சி (CRC) என்ற பேரில் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1)         மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் மிகப்பெரிய படிப்பினைகளை உள்ளடக்கிய மாவோ சிந்தனையை உயர்த்திப்பிடிப்பது.

2)         சீனாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய, வர்க்க ஒத்துழைப்புக் கொள்கை கொண்ட மூன்றுலகக் கோட்பாட்டை முன்வைத்த எதிர்ப்புரட்சியாளர் டெங்சியோபிங் கும்பலை எதிர்ப்பது.

3)         சர்வதேசக் கம்யூனிச இயக்கத்திற்கு துரோகம் இழைத்த புதிய டிராட்ஸ்கிய அல்பேனிய தலைமையை எதிர்ப்பது.

4)         சாருவின் பாட்டாளிவர்க்க புரட்சிகர வழியை உயர்த்திப்பிடிப்பது.

5)         ஆயுதப் போராட்டத்தை முதன்மையான போராட்ட வடிவமாக நடைமுறைப்படுத்துதல், பிற போராட்ட வடிவங்கள் அனைத்தும் அப்போராட்டத்தை நிறைவு செய்வதாக இருக்கவேண்டும்.

ஆனால் மேற்கண்ட ஏற்கப்பட்ட நிலைப்பாடுகளுக்கு எதிராக சி.ஆர்.சி. செங்கொடி வலது சந்தர்ப்பவாதத்தை நோக்கி செல்கிறது என்று கூறி பின்னாளில் ஆந்திராவைச் சேர்ந்த தோழர் ரவூஃப் உட்கட்சிப் போராட்டத்தைத் துவக்கினார். சி.ஆர்.சி. நிலைப்பாட்டின் மீது தனது விமர்சனத்தை முன்வைத்தார். அவை பின்வருமாறு:

அ)       அரசியலதிகாரத்தைப் பகுதிபகுதியாகக் கைப்பற்றுவது என்ற நீண்ட யுத்தப் பாதையை கைவிட்டுவிட்டது.

ஆ)      முதன்மையான முரண்பாட்டை தீர்மானிக்க மறுத்தது.

இ)       ஆயுதப் போராட்டம் மற்றும் மக்கள்படை அமைப்பதற்கான செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

ஈ)        தேர்தல் புறக்கணிப்பை ஆரம்பத்திலிருந்தே கைவிட்டு தேர்தல் பங்கேற்பை வலியுறுத்தியது.

உ)       தேசிய இனப்பிரச்சினை குறித்த திட்டம் இல்லாதது.

போன்ற கேள்விகளை எழுப்பினார்.

முதன்மை முரண்பாடான நிலப்பிரபுத்துவத்திற்குப் பரந்துபட்ட மக்களுக்குமான முரண்பாட்டைக் கைவிடுவது குறித்தும், இரகசியக் கட்சி மற்றும் தலைமறைவு அமைப்பை கைவிடுதல் பற்றி எந்தவிதமான ஆவணமோ, விவாதமோ இல்லை. மற்றொரு வகையில் அனைத்துப் போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவது என்ற பேரில் தேர்தலில் பங்குபெறத் தீர்மானித்துவிட்டது. சி.ஆர்.சி. தலைமையானது மென்மேலும் வலது போக்கிற்குள் மூழ்கி விட்டது என்று விமர்சித்தார். சி.ஆர்.சி. தலைமையானது இவ்வாறு 1979-ன் கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறி உட்கட்சி போராட்டத்தை துவக்கினார்.

4) சி.ஆர்.சி.-யிலிருந்து ரவூஃப் வெளியேற்றப்படுதல்

கே.என்.ராமச்சந்திரன் தலைமையிலானவர்கள் ரவூஃப் மீது பின்வரும் விமர்சனங்களை வைத்தனர். அனைத்துப் பிரச்சினையிலும் ரவூஃப் மற்றும் ஆந்திர குழுவினர் மாறுபட்ட தத்துவ அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தனர். அமைப்பு தனது தத்துவ-அரசியல் அமைப்பு வழியை தொடர்ச்சியாக வளர்த்துக்கொண்டு வந்தாலும், அரசியலமைப்பு மத்தியத்துவத்தை படிப்படியாக சாதித்து வந்தாலும் ஆந்திராவில் அமைப்புச் செயல்பாடுகளை அதிகரிக்க அமைப்பால் முன்வைக்கப்பட்ட மையப் பிரச்சினைகளிலும் அமைப்பைப் பலப்படுத்தும் பணிகளிலும் தனது ஈடுபாட்டைக் காட்ட மறுத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்தியாவின் சமூகப் - பொருளியல் வளர்ச்சி பற்றிய ஸ்தூலமான ஆய்வு, 1982முதல் மாநாட்டைத் தொடர்ந்து சி.ஆர்.சி. யால் மேற்கொள்ளப்பட்டது; இக்கட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட புதிய காலனிய மாற்றங்களை விளக்கும் பொருட்டு அகில இந்தியப் பொருளாதார ஆய்வு முன்வைக்கப்பட்டபோது, மற்றும் இப்பிரச்சனைகள் குறித்த விவாதிக்க 1984ல் அகில இந்திய ஆய்வு முகாம் திட்டமிடப்பட்டபோது, இந்த வேறுபாடுகள் மேலும் தெளிவாக வெளிப்பட்டன. அனால் ரவூஃப்"இருவழிப் போராட்டம்" என்ற பெயரில் தற்போது தனது தத்துவ அரசியல் அமைப்பு நிலைப்பாடுகளையே எந்திரத்தனமாக கடந்தகாலத்தில் அவர் தொடர்ந்து செய்ததைப் போலவே மீண்டும் செய்கிறார்.

1997-நான்காவது அகில இந்திய மாநாட்டில் கட்சி அமைப்பு, கட்சித் திட்டம் மற்றும் சர்வதேச வழியிலும், பாட்டாளிவர்க்க கட்சியாக மாற்றியமைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னோக்கிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதை ரவூஃப் அங்கீகரிக்க மறுக்கிறார். மேலும் மறுசீரமைப்பு வேலைகள் துவங்கிய காலத்திலிருந்து முன்வைத்துவரும் தனது நிலைப்பாடுகளையே வைக்கிறார் என குற்றம் சுமத்தினர். அதாவது இந்தியா புதிய காலனிய நாடு என்றும், முதன்மை முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமானது அல்ல என்ற நிலைப்பாட்டையும், நீண்ட யுத்தப்பாதை என்ற புரட்சிப்பாதை பொருந்தாது, வெளிப்படையான கட்சி என்ற அவர்களுடைய நிலைப்பாடுகளுக்கு எதிராக பழைய தனது நிலைப்பாடுகளையே வைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். இவ்வாறு இக்காலக் கட்டத்தின் செக்டேரியனிச விலகல்களிலிருந்து எந்த ஒரு சீரமைப்பிற்கும் எதிராக"மதிற்சுவர் எழுப்புகிறார்" என்று குற்றம் சுமத்தியது. அதாவது இந்தியா அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதையும், நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாடு பிரதான முரண்பாடு என்பதையும், நீண்ட மக்கள் யுத்தபாதை என்ற நிலைப்பாட்டையும் செக்டேரியனிசம் என்று கூறி சி.ஆர்.சி.யிலிருந்து ரவூஃப்பை இராமச்சந்திரன் குழுவினர் வெளியேற்றினர். ஆனால் 2005-ல் அதே நிலைப்பாடுகளைக் கொண்ட கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ (எம்.எல்.) உடன் ஐக்கியப்பட்டது துணிச்சலான முடிவு என்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல அது ஒரு மோசடியுமாகும்.

5) சி.பி.ஐ. (எம்.எல்) பிளவுக்கான காரணம்

சி.பி.ஐ(எம்.எல்.) பிளவுபடுவதற்கான காரணத்தை அக்கட்சியின் சிறப்பு மாநாட்டிற்காக செங்கொடி அமைப்பின் சார்பாக கே.என்.ராமச்சந்திரனால் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பு அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

கனுசன்யால் தலைமையிலான சி.பி.ஐ(எம்.எல்.)-2003 தலைமையானது சாருமஜூம்தாரை வெறுத்த போதிலும் யாந்திரீகமாக நீண்ட மக்கள் யுத்த பாதை என்கிற சீனப்பாதையை பற்றிக் கொண்டிருந்தனர். மேலும் அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு என்கிற அணுகுமுறையின் விளைவாக பகுதிபகுதியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற கருத்திலேயும் இருந்தனர். அதாவது இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு, புரட்சியின் பாதை பற்றிய தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகிறது.

மேலும் கனுசன்யால் தலைமையிலான முந்தைய சி.பி.ஐ (எம்.எல்.)-2003 தரப்பினரும், ராமச்சந்திரன் தலைமையிலான செங்கொடி தரப்பினரும் இந்திய அரசின் பண்பு, முதன்மை முரண்பாடு, புரட்சியின் பாதை குறித்த தத்தமது நிலைப்பாடுகளை ஆவணங்களாக முன்வைத்து 2009-நவம்பருக்குள் மாநாடு நடத்தித் தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. முந்தைய சி.பி.ஐ.(எம்.எல்.) செங்கொடியின் கண்ணோட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்திய நகல்களின் ஒரு பிரதி மட்டுமே வரையறுத்த காலத்திற்குள் வைக்கப்பட்டது. அதாவது புதியகாலனி, நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்பதற்கு மறுப்பு, நீண்ட யுத்தப் பாதைக்கு மறுப்பு அடிப்படையில் அந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இறுதியாக டிசம்பர் 2008-ல் சுபோத் மித்ரா, விஸ்வம் போன்றவர்களின் நகல் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவம், நீண்ட யுத்த பாதை, நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடு என்ற அடிப்படையில் இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு நகல் அறிக்கைகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைப்பதால் ஒரு கூட்டு ஆவணத்தை வைக்கமுடியாத நிலை உருவானது. முந்தைய செங்கொடி தரப்பினர் அனைத்து ஆவணங்களையும் "வழிகாட்டியில்" வெளியிட்டு இருவழிப் போராட்டத்தின் மூலம் விவாதம் நடத்தி தீர்வுகாணவேண்டும். மாநாட்டிற்கான தயாரிப்பு செய்ய வேண்டும் என்றும் அதன் போக்கில் கூட்டு நகல்களுக்கான சாத்தியப்பாடு கோரப்பட முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் முந்தைய மத்தியக் கமிட்டியின் தீர்மானத்தின் அடிப்படையிலான இந்தப் பிரேரணைகள் முந்தைய சி.பி.ஐ (எம்.எல்.)2003-ஐ சேர்ந்த மத்தியக் கமிட்டி உறுப்பினர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்த நகல்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தின் பிரகாரம் ஒற்றுமை மாநாட்டின் வழிக்கு எதிராகச் சென்றதனால் அவைகள் வெளியிடப்பட முடியாது மற்றும் அவைகளை மறுபடியும் நகல் எடுக்கக் கோரப்பட முடியாதென்ற நிலைப்பாட்டை எடுத்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் கனுசன்யால் எந்த சமரசமும் இந்நகல்கள் சம்பந்தமாக சாத்தியமில்லை ஆதலால் நட்பு ரீதியாக பிரிந்து போகலாம் என்று ஃபேக்ஸ் மூலம் பதிலளித்தார். இதன் தொடர்ச்சியாக அக்கட்சி பிளவுபட்டது.

இவ்வாறு சி.பி.ஐ.(எம்.எல்.) கட்சி என்பது இந்தியப் புரட்சி குறித்த அடிப்படை நிலைப்பாடுகளில் எதிரெதிரான மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டவர்கள் ஒன்றிணைந்த காரணத்தால்தான் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் துவங்கின. இந்த அடிப்படை முரண்பாடுகளின் காரணமாகத்தான் தொழிற்சங்கங்களை ஒரே அமைப்பாக்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பது; அரசியல் பிரச்சாரங்கள், பாராளுமன்றப் பேரணிகளில் கூட ஒன்றுபட்ட செயல்பாட்டிற்கு ஒத்துழைக்க மறுத்தல், தேர்தலில் பங்கேற்பதற்கு ஒத்துழைக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தது, சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதையும், பிற அமைப்புகளோடு ஒற்றுமைக்கான முயற்சிகளை சந்தேகத்துடன் பார்ப்பது என ஒரு பிரச்சினையிலும் கூட இணைந்து செயல்பட முடியாமல் போனது.

தொகுத்துக் கூறினால் கனுசன்யால் எடுத்த ஐக்கியத்திற்கான முயற்சிகள் என்பது படுதோல்வி அடைந்துவிட்டன. கனுசன்யாலின் கோட்பாடற்ற ஐக்கியம் என்ற சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவே இரண்டு ஐக்கியம் மூன்று பிளவுகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் கோட்பாடற்ற ஐக்கியம், அடிப்படை நிலைப்பாடுகளில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை ஒரே அமைப்பில் கொண்டுவருவது என்பது சந்தர்ப்பவாதம்மட்டுமல்ல அது ஒரு கதம்பவாதமுமாகும். சந்தர்ப்பவாதமும், கதம்பவாதமும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்தப் பயன்படாது. மென்மேலும் பிளவுகளுக்கே வழிவகுக்கும்.

கோட்பாடற்ற ஐக்கியம், கொள்கைகளை விட்டுக்கொடுத்து ஐக்கியம் என்பது பிளவுக்கே வழிவகுக்கும் என்பதை மார்க்ஸ், எங்கல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு எழுதிய பின்வரும் கடிதம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

"1875-ல் சமூக ஜனநாயகக் கட்சி, கொள்கையை விட்டுக்கொடுத்து, லசாவியர்களோடு கூட்டுச் சேர்ந்ததையும், அதன் விளைவாக உருவான"கோத்தா"வேலைத் திட்டத்தையும் மார்க்சும், எங்கல்சும் விமர்சித்தார்கள். இந்த ஒற்றுமை 'மிக அதிக விலைகொடுத்து பெறப்பட்டது' என்றும், "கோத்தா வேலைத்திட்டம் கட்சியை நிலைகுலையச் செய்யும் ஆட்சேபனைக்குரிய திட்டம்" என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். எங்கல்ஸ், "இது ஜெர்மன் சோசலிசப் பாட்டாளிவர்க்கம் முழுவதும் லசாவியர்கள் முன் மண்டியிடும் செயல் ஆகும்" என்றார். "இந்த அடிப்படையில் உருவாகும் ஒற்றுமை ஒரு வருடம் கூட நிலைக்காது என நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.

மார்க்ஸ் கோத்தா வேலைத் திட்டத்தை விமர்சனம் செய்தபோது மார்க்சிய வாதிகளுக்கு "கோட்பாடுகள் பற்றிய விசயங்களில் எவ்வித ஊசலாட்டமும் இருக்கக் கூடாது" என்ற புகழ்மிக்க கோட்பாட்டை முன்வைத்தார்.

மேற்கண்ட மார்க்ஸ், எங்கல்சின் கோட்பாடற்ற ஐக்கியம் பற்றிய விமர்சனம் கே.என்.ராமச்சந்திரன் மற்றும் கனுசன்யால் குழுவினருக்கும் பொருந்தக் கூடியதே. அரசியல் நிலைப்பாட்டில் வலது சந்தர்ப்பவாதம், கட்சி ஐக்கியம் பற்றிய பிரச்சினையில் கோட்பாடற்ற சந்தர்ப்பவாதம் மற்றும் கதம்பவாதம் ஆகிய இவர்களின் நிலைப்பாடுகள்தான் ஐக்கியத்திற்கான முயற்சிகள் அனைத்தும் பிளவுகளாக மாறுவதற்கு காரணங்களாகும். கோட்பாடற்ற ஐக்கியத்தின் மூலம் சோர்ந்து கிடக்கும் அணிகளை ஐக்கியம் பற்றி பேசி ஏமாற்றவும், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு ஆள்பிடிக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் ஐக்கியம் பற்றிய பிரச்சினையைக் கையாள்கிறார்கள். அரசியல் தத்துவப் போராட்டத்தை சிறுமைப்படுத்துகிறார்கள்.

ஒரு கட்சியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனுசன்யால் கட்சிக்கு சித்தாந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தலைமைதாங்குகிற பணியை புறக்கணித்து அவருடைய கிராமத்தில் இருந்துகொண்டு ஒரு சிறிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு வழிகாட்டுகிற பல பத்தாண்டு நீண்ட நடைமுறையோடு ஒட்டிக் கொண்டிருந்தார் என்ற ராமச்சந்திரன் குழுவினரின் விமர்சனமும்; 5-வது மாநாட்டு ஆவணங்களின் வெளிச்சத்தில் கனுசன்யால் குழுவுடனான ஐக்கியம் பற்றிய வினாவிற்கான விபரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கே.என்.ராமச்சந்திரன் அவர்களின் பிளவுவாத நிலைப்பாட்டின் அரசியல் ஓட்டாண்டித்தனம் தெரியும் என்ற செங்கொடியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் ஜெயக்குமாரின் விமர்சனமும் இவர்களின் தலைமை முறையை புரிந்துகொள்ளப் போதுமானது.

6. கனுசன்யாலின் சந்தர்ப்பவாத வழியில் தமிழகத்தில் சி.பி.ஐ (எம்.எல்.) உருவாக்கம்

கனுசன்யால் கடைப்பிடித்த வலது சந்தர்ப்பவாத வழியும், கோட்பாடற்ற ஐக்கியத்திற்கான முயற்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. ஆனால் இந்த அனுபவத்திற்குப் பின்னரும் கூட அக்கட்சி எந்தப் பாடத்தையும் கற்கவில்லை. தமிழகத்தில் அதே பொருளாதாரவாத, தொழிற்சங்கவாத மற்றும் பாராளுமன்றவாத வழியில் கோட்பாடற்ற சந்தர்ப்பவாத, கதம்பவாத அடிப்படையில் கட்சியை கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. கொள்கை கோட்பாடற்ற உதிரி விந்தை வேந்தனை தலைவராகவும், பச்சோந்தி ஈஸ்வரனை தரகராகவும் கொண்டு நமது அமைப்பிலிருந்து வெளியேறிய கலைப்புவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இணைத்துக் கொண்டு கட்சி கட்டுவது என்பது கோட்பாடற்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமேயாகும். கனுசன்யால் குழுவினர் முன்வைக்கும் பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாதம், பாராளுமன்ற வாதம் போன்ற நிலைப்பாடுகளுடன் இவர்கள் முழுமையான உடன்பாடு கொண்டவர்கள் அல்ல. இப்படி முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு கட்சி கட்டுவதைத்தான் கோட்பாடற்ற ஐக்கியம் என்றும் கூறுகிறோம்.

நமது அமைப்பிலிருந்து வெளியேறிய கலைப்புவாதிகளையும், பிழைப்பு வாதிகளையும் அவர்கள் எதனடிப்படையில் இணைத்துக்கொண்டார்கள் என்று அவர்கள் கூறவில்லை. இவர்களும் எதனடிப்படையில் இணைந்தார்கள் என்று எந்த அறிக்கையையும் வெளியிடவுமில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாததால் வெளியேறினோம் என்று கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் ஜனநாயகத்தின் போர்வையில் தங்களது கலைப்புவாத மற்றும் பிழைப்புவாதப் போக்குகளை மூடி மறைத்துக் கொள்ளுகின்றனர்.

1988-சிறப்புக்கூட்டம் முடிவடைந்த பிறகு சோவியத் சமூக ஏகாதிபத்தியம் சிதறுண்டு போனது. இந்தக் கலைப்புவாதப் போக்கு அமைப்பில் கடுமையான அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியது. பத்திரிகைக் குழுவில் ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர் நம்பிக்கை இழந்து கட்சியை விட்டு வெளியேறினார்.

அதே சமயம் அந்தோணிசாமி மார்க்ஸ் கும்பல் கட்சியை பிளவுபடுத்தி வெளியேறி நிறப்பிரிகை, மக்கள் கல்வி இயக்கங்களைத் துவக்கி கலைப்புவாத கருத்துகளை பிரச்சாரம் செய்தது. மார்க்சியம் பொய்த்துவிட்டது கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று கட்சியின் மீது தாக்குதல் நடத்தியது. புதிய இடது, பின் நவீனத்துவக் கருத்துகளை முன்வைத்தது. அம்பேத்காரிய, பெரியாரிய கருத்துகளுடன் அடையாள அரசியலை முன்வைத்து கட்சி மீது தாக்குதல் தொடுத்தது. கோவை சிவா மூலம் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விடியல் பதிப்பகம் துவங்கி கட்சிக்குள் ஊடுருவ முயற்சிசெய்தது.

சித்தானந்தன் கலைப்புவாதத்திற்கு பலியாகி கோவை சிவாவின் உதவியோடும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் கலைப்புவாத நோக்கத்தோடு சேலத்தில் அகிலம் புத்தகக் கடையை திறந்தார். தொண்டு நிறுவனங்களின் கலைப்புவாத அரசியலையும், அம்பேத்காரிய பெரியாரிய கருத்துகளையும் பிரச்சாரம் செய்யும் நோக்கத்துடன்தான் அக்கடை திறக்கப்பட்டது. அதை அனுமதிக்க மறுத்ததால் எதிரியிடம் சரணடைந்து அமைப்பைவிட்டு வெளியேறினார். சேலம் செல்வராஜ் இந்தக் கலைப்புவாதத்திற்கு ஒத்தூதி வெளியேறினார்.

கட்சி செயலாளர் பொறுப்பில் இருந்த தமிழ்வாணன் ஆரம்பத்திலிருந்தே தனது பாலியல் சீரழிவின் காரணமாக எல்லாவிதமான பிற்போக்கான கருத்துகளையும் எதிர்த்துப் போராட முடியாமல் மௌனியாகிக் கிடந்தார். அமைப்பில் உருவான எல்லா சீரழிவுகளுடனும் கைகோர்த்து செயல்பட்டார். தன் மீதான பாலியல் சீரழிவுகளுக்கு சுயவிமர்சனமாக வரமறுத்து அமைப்பை விட்டு வெளியேறினார். கலைப்புவாதிகளோடு கரம் கோர்த்தார்.

மாநில குழு உறுப்பினர்களான ஏலகிரி இராமனும் பாரதியும் 88-சிறப்புக்கூட்டத்திற்கு முன்பே 70-திட்டம் அடிப்படையில் சரியில்லை என்றவாதத்தை முன்வைத்தனர். பெரும்பான்மையினர் முன் வைத்த போர்தந்திர செயல் தந்திர ஆவணங்களை விவாதிப்பதற்கும் மறுத்தனர். மாற்று நிலைப்பாடு இருந்தால் எழுதி வையுங்கள் என்று கோரியபோது இராமனைப் பொறுத்தவரை எழுத்துப் பூர்வமாக எதையும் வைக்கத் தயாரில்லை. அதற்கு அவர் கூறிய காரணம், நீங்கள் அந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் அதேபோல்தான் எனக்கும் அவாளவு காலம் தேவைப்படுகிறது என்று வாதிட்டார். மேலும் திட்டம் இதுவரை போதிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

சித்தாந்த அரசியல் அடிப்படையில் திட்டம் தயாரிப்பதற்கான பயிற்சி பெறுவதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்பது உண்மை. ஆனால் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் திட்டத்தை வரைவதற்கோ, விளக்கம் கொடுப்பதற்கோ ஆற்றலைப் பெறுவதற்கு சாத்தியமில்லை. அத்துடன் ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கான தகுதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர திட்டத்தை வரையும் அளவுக்கு சித்தாந்த வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. எல்லா உறுப்பினர்களும் திட்டத்தை வரைவதற்கான தகுதி பெற்ற பிறகுதான் கட்சியின் திட்டத்தை விவாதித்து தீர்வுகாண்பது என்பது கற்பனாவாதமே. அது நடைமுறை சாத்தியமானது அல்ல.

இருப்பினும் பிடிவாதமாக இராமன் அந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டிருந்தார். இதுநாள்வரை கட்சி அணிகள் வரையில் திட்டம் போதிக்கப்படாததன் காரணமாக, அதுபற்றி போதனை கொடுத்து தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து கட்சியின் 88 ஆம் ஆண்டு சிறப்புக்கூட்டம் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட கட்சி உறுப்பினராக இருக்கலாம் என்றும் ஜனநாயக மத்தியத்துவத்தை வரம்புக்குட்படுத்துவது என்றும் தீர்மானித்தது. ஆனால் ஏலகிரி இராமனோ சில மாதங்கள் கழிந்த பின்பு திட்டம் அடிப்படையில் சரி என்பதை தான் உணர்ந்துவிட்டதாக கூறினார். தற்போது கட்சியைவிட்டு வெளியேறியபின் போல்ஷ்விக் கட்சிக்கு திட்டம் இல்லை என்று சந்தர்ப்பவாதமாகப் பிரச்சாரம் செய்கிறார்.

 மேலும் இராமன், கட்சித் தோழர்களிடம் அமைப்புக்குத் தெரியாமல் பணம் வசூல் செய்து நிலம் வாங்கி விவசாயம் செய்தார். கட்சியின் முழுநேர ஊழியர் என்று கூறிக்கொண்டு கட்சி வேலையைச் செய்யாமல், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் தான் வாங்கிய நிலத்தில் தனக்காக உழைத்தார், இத்தகைய பிழைப்புவாதத்திற்கு சுயவிமர்சனமாக வரமறுத்து அமைப்பைவிட்டு வெளியேறினார்.

குணாளன் கட்சித் தோழர் ஒருவரிடமிருந்து எட்டு சவரன் நகையை கறந்து தனது மகளுக்கு வரதட்சிணை கொடுத்து நடத்திய பிற்போக்குத் திருமணத்தையே புரட்சிகரத் திருமணம் என்று கூறி அணிகளை ஏமாற்றினார். அதற்கு சுயவிமர்சனம் செய்துகொள்ள மறுத்தார். குட்டிமுதலாளித்துவ அராஜக வழியில் அமைப்பைக் கைப்பற்றுவதற்கான பதவி வெறி தலைக்கேறி தன்னை செயலாளராக்க மாநாடு நடத்தவேண்டும் என்று கூறினார். நபரை மாற்றுவதற்கு மாநாடு நடத்த முடியாது, கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில்தான் மாநாடு நடத்த வேண்டும் என்ற அமைப்பின் முடிவை ஏற்கமறுத்தார். அவரைப் பொறுத்தவரை தனது பிழைப்புவாத நலன்களிலிருந்து பெயரளவுக்கு முழுநேர ஊழியர்களைக் கொண்ட, பெயரளவுக்கு இரகசியமான, ஒரு குட்டிமுதலாளித்துவக் கட்சியை கட்டியமைப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவருடைய இத்தகைய நிலைப்பாட்டை ஏற்க மறுத்ததால் அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அமைப்பைவிட்டு வெளியேறினார். தற்போது தான் விரும்பியதுபோலவே ஒரு கட்சியை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

வில்கிருஷ்ணன் கொள்கைக் கோட்பாடுகள் மீது நம்பிக்கை இழந்து கோஷ்டிவாதத்திற்கு பலியாகி வெளியேறினார். குண்டலப்பட்டி சின்னசாமி போலீஸ் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தவர். சேலம் சின்னுவோ கந்துவட்டி தொழிலில் காசுபார்த்தவர். இப்படி இவர்கள் அனைவரும் கலைப்புவாதக் கருத்துகளுக்கு இரையாகி புரட்சியின் மீது நம்பிக்கை இழந்து தாங்கள் செய்த தவறுகளுக்கு சுயவிமர்சனமாகவும் வரமறுத்து அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்று கூறி வெளியேறினார்கள். இவர்கள் ஒரே நிலைப்பாடோ, கொண்ட கொள்கைக்கு விசுவாசமோ இல்லாதவர்கள்.

இவ்வாறு அமைப்பைவிட்டு வெளியேறிய கலைப்புவாதிகளும், பிழைப்புவாதிகளும் தனிமைப்பட்டுக் கிடந்தனர். பின்பு பச்சோந்தி ஈஸ்வரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளிலிருந்து வெளியேறிய ஓடுகாலிகளைக் கொண்ட 11 அமைப்புகளை 18 முறை கூட்டி ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பிறகுதான் ஆந்திராவின் விசுவம், தமிழகத்தின் விந்தை வேந்தன், பச்சோந்தி ஈஸ்வரன் கும்பல் இவர்களை இணைத்து சி.பி.ஐ. (எம்.எல்.)-ன் தமிழ் மாநில கமிட்டியை உருவாக்கியுள்ளனர்.

இவர்கள் மா.லெ. அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்தோ, அல்லது ஒரு அரசியல் வழியின் அடிப்படையிலோ ஒரே கட்சியாக இணையவில்லை. அதே போல் இவர்களுக்கிடையில் முழுமையான அரசியல் ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எந்த அரசியல் நிலைப்பாட்டிற்கும் விசுவாசமானவர்களும் இல்லை. இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு, எல்லாத் தவறுகளையும் மூடி மறைத்துவிட்டு, தங்களுடைய பிழைப்புவாதத்தை மூடிமறைத்துவிட்டு, தங்களுடைய பழைய தவறுகளைப் பற்றி யாரும் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நமது அமைப்பிலிருந்து வெளியேறிப்போன கலைப்புவாதிகளும், பிழைப்புவாதிகளும் தாங்கள் ஏதோ ஒரு கட்சியை கட்டிவிட்டதாக கதைக்கின்றனர். ஆனால் இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் விந்தை வேந்தன் கூறும்போது "அரசியல் அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளேன்" என்று கூறினார். உண்மையில் அதுதான் நடந்துள்ளது.

இவ்வாறு அடிப்படை நிலைப்பாடுகளில் ஒற்றுமையின்றி, அரசியல் வழியிலும் உடன்பாடின்றி, கொள்கை இலட்சியங்களில் விசுவாசமில்லாத கலைப்புவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் கொண்டு கட்சிகட்டுவது ஒரு கோட்பாடற்ற சந்தர்ப்பவாத ஐக்கியமே. கனுசன்யால் கட்சியினர் கட்டியமைக்கும் இத்தகைய கட்சி உடனடியான பிளவுகளுக்கே கொண்டு செல்லும். இவ்வாறு கனுசன்யால் கட்சியினர் ஐக்கியத்தின் பேரால் பிளவுகளைத்தான் முன்வைக்கின்றனர்.

 

=======================================

 

 

4. இ.க.க (மா.லெ) (ம.யு) போல்ஷ்விக் கட்சிக்கு
திட்டம் இல்லை என்ற பிரச்சாரம் குறித்து

 

நமது கட்சியிலிருந்து வெளியேறிய ஓடுகாலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சிக்கு திட்டம் இல்லை, கொள்கை நிலைப்பாடுகள் எதுவுமில்லை என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் போல்ஷ்விக் கட்சி உருவானதன் வரலாறு தெரிந்தவர்கள், நியாயபுத்தி உள்ளவர்கள் அனைவரும் இந்தப் பிரச்சாரம் ஒரு மோசடிப் பிரச்சாரம் என்பதை அறிவார்கள்.

1. மக்கள் யுத்தக் கட்சி உருவானதும் உடைவும்

தமிழகத்தை சார்ந்த மா.லெ. கட்சியின் கூட்டக் குழுவினரும், ஆந்திராவின் கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான மா.லெ. குழுவும் இணைந்து 1979 ஏப்ரல் 22-ஆம் தேதி ஒரு மையக்குழுவை உருவாக்கி இ.க.க.(மா.லெ.) மக்கள் யுத்தக் கட்சியை பிரகடனம் செய்தனர். 1970 கட்சித் திட்டம், இ.க.க. (மா.லெ.)வின் 10 ஆண்டுகால வரலாற்றை தொகுத்த சுயவிமர்சன அறிக்கை, போர்த்தந்திர வழி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்ட மூன்றுலகக் கோட்பாடு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் அந்த இணைப்பு நிறைவேறியது.

மேற்கண்ட அடிப்படை நிலைப்பாடுகளில் ஒற்றுமை நிலவிய போதிலும், மிக முக்கியமாக கூட்டக்குழு செயல் படுத்திவந்த பகுதிநலன்களுக்கான வெகுஜன போராட்டங்களை நடத்துவதோடு வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் குழு போராட்டத்தை இணைப்பது என்ற கூட்டக்குழுவின் வழிக்கும் - ஆந்திராவின் கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான குழுவினர் கடைப்பிடித்து வந்த வழிக்கும் இடையிலான ஒற்றுமையே இணைப்பிற்கான பிரதானமான காரணமாக அமைந்தது.

ஆந்திர கட்சியால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது போர்த்தந்திர வழி, தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டது. முற்போக்கு இளைஞர் அணி, முற்போக்கு மாணவர் சங்கம், புரட்சி பண்பாட்டு இயக்கம் உருவாக்கப்பட்டு பிரச்சாரம் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டது. விவசாயிகள் இயக்கம் பலமாக உருவானது. தருமபுரி பகுதியில் இயக்கம் வீச்சாக சென்றது.

தருமபுரி மாவட்டத்தில் இயக்கம் வளர்ந்து முழு வீச்சோடு முன்னேறியது. அதே சமயம் கண்ணாமணி தலைமையிலான குழு அழித்தொழிப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது. விவசாயிகளின் பொருளாதாரப் போராட்டங்களையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவது என்று கூறி அழித்தொழிப்புப் போராட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினர். வன்முறை நடவடிக்கைகளில் வேகமாக சென்றனர்.

தருமபுரியில் வெகுஜன இயக்கங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் கண்ணாமணி குழுவினர் ஜோலார்பேட்டையில் போலீஸ் வாகனத்தில் கையெறி குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். அதில் சில காவலர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் குண்டு வெடிப்பை பயன்படுத்திக் கொண்டு தேவாரம் தலைமையில் தருமபுரி இயக்கத்தின் மீது நரவேட்டை கட்டவிழ்த்து விடப்பட்டது. தோழர் பாலன் கொல்லப்பட்டார். இயக்கம் ஒரு நெருக்கடியை சந்தித்தது.

இதற்கு முன்பே நமது செயல்தந்திர வழி செயல்படுத்தப்பட்டு சிலப் பிரச்சினைகளைச் சந்தித்தோம். வெளிப்படையான வடிவம் மற்றும் இரகசிய வடிவத்தையும்; சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கருத்து முரண்பாடுகளும், விவாதமும் தொடர்ந்தன. இப்பிரச்சினை குறித்து உரிய வழிகாட்டுதல் வேண்டுமென மத்தியக் கமிட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து போர்த்தந்திர, செயல்தந்திர பிரச்சினைகளில் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன.

மையக்குழு அமைத்து அதன் இரண்டாவது கூட்டத்திலேயே அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றின. 1981 மார்ச்சில் நடந்த 2வது மையக்குழுவின் கூட்டத்தில் கூர்மையான அரசியல் விவாதம் துவங்கியது. மையக்குழுவில் நடந்துவந்த கருத்துப் போராட்டங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1)         1980ல் ஆந்திராவில் நடந்த கட்சி மாநாட்டில் சோவியத் எதிர்ப்பு முன்னணி என்ற தீர்மானம் கே.எஸ். தலைமையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலக யுத்த அபாயத்திற்கு அமெரிக்கா மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டு ஏகாதிபத்தியங்களுமே காரணம் என்றும்; இன்றைய மக்கள் சீனம் முதலாளித்துவ நாடாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை ஒரு சோசலிச நாடாகக் கருதி சோவியத் எதிர்ப்பு முன்னணி கட்டும்படி அறைகூவல் விடுப்பது தவறு என்றும்; மேலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி என்று கூறுவது முதலாளித்துவ பாதையாளன் "டெங்" நிலைப்பாட்டிற்கு ஆதரவானது என்றும் கூறி எதிர்த்தனர். அதற்கு தோழர் கே.எஸ். "இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துத்தான் நாம் ஒரே கட்சியாக நீடிக்கிறோமா இல்லையா என்பது உள்ளது" என்ற நிலையை எடுத்தார்.

2)         1984ஆம் ஆண்டு ஆந்திராவில் என்.டி.ராமாராவ் ஆட்சி இந்திராகாந்தி அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. அதற்கு எதிராக விவசாயப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு என்.டி.ஆரின் தெலுங்கு தேச கட்சி உள்ளிட்ட நாடாளுமன்றவாத தரகு முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆந்திரக் கட்சியின் சார்பாக ஐக்கிய முன்னணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இது முதலாளித்துவக் கட்சிகளின் செல்வாக்கிற்கு பாட்டாளிவர்க்கக் கட்சியை கீழ்ப்படுத்துவது, வர்க்க சமரசப் பாதை என்று தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர்கள் எதிர்த்துப் போராடினர்.

3)         சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மாநாட்டின் நான்கு நவீனப்படுத்தல்கள் என்ற வரலாற்றுத் தீர்மானம் முதலாளித்துவப் பாதையே என்றும், சீனாவை முதலாளித்துவ நாடாக அறிவிக்கவேண்டும் என தமிழ்நாட்டுத் தோழர்கள் போராடினர். அவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக அறிவிக்கக் கூடாது என கே.எஸ். கூறினார்.மேலும் நான்கு நவீனப் படுத்தலைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த மூன்றுலகக் கோட்பாடு வர்க்க சமரச கோட்பாடு எனவே அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரியும் போராடினர்.

4)         தேசிய இனப் பிரச்சினை. 1983ல் இலங்கையில் தமிழ் ஈழத் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்ற பொதுக் கோட்பாட்டை ஏற்பதோடு, பிரிவினைப் பிரச்சினை எழும்போது தனித்தனி வழக்காக பரிசீலித்து முடிவுக்கு வரவேண்டும் என்ற லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தோம். இந்தியாவில் தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை நாம் ஏற்கவில்லை.

            ஆனால் புலவர் கலியபெருமாள், தமிழரசன் போன்றோர் இலங்கையில் தனிநாடு, இந்தியாவிலும் தனிநாடு என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை முன்வைத்தனர். அவர்கள் தங்களது இந்த நிலைப்பாட்டை உட்கட்சி விவாதத்தின் மூலம் தீர்வுகாண மறுத்தனர். முதலாளித்துவ தேசிய வாதத்தை முன்வைத்தனர். அத்துடன் அன்றைய கேரள வேணுவின் தலைமையிலான சி.ஆர்.சி. முன்வைத்த முதலாளித்துவ தேசியவாதம் எனும் வலது சந்தர்ப்பவாதம் மற்றும் கலைப்புவாதத்திற்கு பலியாகி இயக்கத்தை பிளவுபடுத்தினர்.

            கேரள சி.ஆர்.சி.யில் வேணுவால் வழிநடத்தப்பட்ட ஒரு பிரிவினர் புதிய காலனிய உருவாக்கம் பற்றிய ஆய்வுப் போக்கில், மார்க்சியத்திற்கு எதிரான "புதியகாலனிய சூழலில் சந்தையானது முதன்மை முக்கியத்துவத்தை எட்டியுள்ளது" என்று கூறினர். அரூபமான சந்தைக் கோட்பாட்டை முன்வைத்து அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்தனர். இக்கண்ணோட்டம் மார்க்சியமல்லாத போக்குகளின் "சார்பு கோட்பாடு" என்ற நிலைப்பாடுகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. புதிய காலனிய சூழலில் முதலாளித்துவ சந்தை முறையே ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய இனப் பிரச்சினையே முதன்மையான முரண்பாடு என்றும், ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாகப் பிரிந்து போவது என்றும், அவ்வாறு பிரிந்து சென்ற பின் தேசங்களின் இணைவுக் கோட்பாடு பேசினர். விளைவு கட்சி பிளவுபட்டது. வேணு கலைப்புவாதி என்று கட்சியைவிட்டு தூக்கியெறியப்பட்டார். வேணுவின் குட்டிமுதலாளித்துவ கலைப்புவாதத்தின் செல்வாக்கின் விளைவாகத்தான் இங்கும் கட்சி பிளவுபட்டது. இந்த கலைப்புவாத சித்தாந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் அன்றைய தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி (ஜிழிளிசி) பின்னாளில் தனித் தமிழ்நாடு என்று பேசி த.நா. மா.லெ. (ஜிழிவிலி) வாக சீரழிந்தது.

5)         மக்கள் யுத்தக் குழுவில் ஏற்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்த கருத்து முரண்பாடுகளில் மிக முக்கியமானது போர்த்தந்திர வழி செயல்படுத்தியதன் விளைவாக கட்சிக்குள் ஏற்பட்ட பொருளாதாரவாதம் மற்றும் தன்னியல்பு வழி பற்றிய முரண்பாடேயாகும். அதற்குக் காரணம் போர்த்தந்திர, செயல் தந்திரங்கள் குறித்து மா.லெ. ஆய்வின் அடிப்படையில் தீர்வுகாணாததேயாகும். எனவே கட்சித் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றி ஆய்வு செய்து போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழலில் இப்பிரச்சினையை முன்வைத்துப் போராடுவதற்குப் பதிலாக குருச்சேவின் திரிபுவாதத்தின் தொடர்ச்சியாக சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் தோன்றிய "டெங்" திரிபுவாதத்தை எதிர்த்துப் போராட்டத்தை - அதாவது மூன்றாம் உலகநாடுகள் அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டன என்ற நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதை முதன்மைப்படுத்தினோம். நாடுகள் சுதந்திரம் அடைந்து விட்டது என்ற டெங் கும்பலின் நிலைப்பாடு இந்தியா ஒரு அரைக்காலனி நாடு என்பதையே மறுப்பதன் மூலம் திட்டத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டது. அப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண்பது முதன்மையானதாக மாறிவிட்டது. எனவேதான் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரப் பிரச்சினைகளை இரண்டாவதாக எடுத்துக்கொண்டோம்.

            மூன்றுலகக் கோட்பாடு பற்றி ஒரு உடன்பாட்டிற்கு வந்தபிறகு சர்வதேச பொதுவழி பற்றிய நிலைப்பாட்டிற்கான தீர்மானம், திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரப் பிரச்சினைகள் பற்றிய தீர்மானம் போன்ற பிரச்சினைகள் மத்தியக் கமிட்டியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

            மத்தியக் கமிட்டியில் பெரும்பான்மையினர் இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் என்ற ஆவணத்தை விவாதித்து தீர்வு காண்பதற்காக முன்வைத்தனர். ஆனால் கே.எஸ். தலைமையிலான தோழர்கள் கட்சிக்குள் ஏற்பட்ட ஆறு தீமைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற ஆந்திரக் கட்சி தீர்மானத்தை முன் வைத்து தீர்வு காண வேண்டும் என்று கோரினர். ஆறு தீமைகள் பற்றிய பிரச்சினையில் கட்சியின் அரசியல் வழியை சரி செய்வதன் மூலமும், ஆறு தீமைகள் உருவாவதற்கான சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் திட்டத்துடன் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக - ஆந்திராவைச் சேர்ந்த மத்தியக் குழு பெரும்பான்மையைச் சார்ந்த தோழரை அவை அனைத்திற்கும் பொறுப்பாக்கி, அவரை மையக்குழுவிலிருந்து திரும்பப் பெறுவது என்று கே.எஸ். தரப்பினர் கூறினர். எனவே இப்பிரச்சினை குறித்து மத்தியக்கமிட்டி ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை. எனவே மத்தியக் கமிட்டியில் ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மாநில சிறப்புக் கூட்டங்கள் கூட்டி விவாதிப்பதன் அடிப்படையில், மாநில சிறப்புக் கூட்டங்களின் ஆலோசனைகளை கணக்கில் கொண்டு மீண்டும் மத்தியக் கமிட்டி கூடி விவாதித்து இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தமிழ் மாநில சிறப்புக்கூட்டம் 1985ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்றது.

2. ஆறு தீமைகள் பற்றிய தமிழ் மாநில சிறப்புக்கூட்டத்தின் திட்டம் பற்றிய முடிவுகள்

1985ல் நடந்த ஆறு தீமைகள் பற்றிய பிரச்சினைகளுக்காக கூடிய தமிழ்மாநில சிறப்புக்கூட்டம், மத்தியக் கமிட்டியின் பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டது. சிறுபான்மையினரின் நிலைப்பாடுகளையும் ஆவணங்களையும் அடியோடு நிராகரித்தது.

மையக் குழுவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது மையக்குழுவில் உள்ள திட்டவட்டமான அரசியல் போக்குகளுக்கிடையிலான போராட்டத்தின் அமைப்பு ரீதியான வெளிப்பாடேயாகும் என்றும்; கட்சிக்குள் இரண்டு அரசியல் வழிகளுக்கு இடையே முறையாக இருவழிப் போராட்டம் நடத்த முடியாததால் அமைப்புப் பிரச்சினையாக வெளிப்படுகிறது என்றும் தீர்மானித்தது. இருதரப்பினரின் அரசியல் கண்ணோட்டங்களையும் கூட்டம் கறாராக எடுத்துரைத்து கே.எஸ். பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழுவில் சிறுபான்மையினர் நிலைப்பாடு வலது திசை விலகல் போக்குகளைக் கொண்டுள்ளது என்று விமர்சித்தது. மையக்குழு பெரும்பான்மையினர் முன்வைத்துள்ள இந்தியப் புரட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திர ஆவணம் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று அங்கீகரித்ததோடு மத்தியக் கமிட்டி உரியமுறையில் இதற்கு தீர்வுகாணவேண்டும் என்றும் தீர்மானித்தது.

ஆனால் மாநிலச் சிறப்புக் கூட்டங்கள் முடிந்த பிறகு மத்தியக் கமிட்டி கூடி மாநில சிறப்புக் கூட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி எடுக்கவில்லை. மத்தியக் கமிட்டியில் பெரும்பான்மையினரால் முன்வைக்கப்பட்ட இந்தியப் புரட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திர ஆவணத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இல்லை. கே.எஸ். தலைமையிலான மத்தியக் கமிட்டி சிறுபான்மையினர் கட்சி அமைப்பு விதிகளை மீறி தங்களை பெரும்பான்மையாக மாற்றிக் கொண்டதுடன் ஏகமனதான கருத்தை மட்டுமே செயல்படுத்த முடியும் என்று எதேச்சதிகாரமாக செயல்பட்டனர். கமிட்டியில் ஒத்த கருத்து இல்லையாதலால் நட்பு ரீதியாக பிரிந்து போகலாம் என்று கூறி கட்சியை மேலிருந்து கே.எஸ். தரப்பினர் பிளவுபடுத்திவிட்டனர். எனினும் 1985 தமிழ்மாநில சிறப்புக் கூட்டம் மத்தியக் கமிட்டியின் பெரும்பான்மை முன்வைத்த இந்தியப் புரட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திர ஆவணத்தை சரியான பாட்டாளிவர்க்க நிலைப்பாடு என்று ஏற்றுக்கொண்டு உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்று நிலை எடுத்தது.

3. திட்டம் பற்றி 1988- சிறப்புக்கூட்டத்தின் தீர்மானம் -2 கூறுவதாவது

வேலைத்திட்டத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்தந்திரம் வகுத்தல்

இந்தியா அமெரிக்கா, சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளின் ஒரு அரைக்காலனி, என்றும் இந்திய சமுதாயத்தில் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன என்றும், இந்திய அரைக்காலனித்துவ அரைநிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் ஆளும் வர்க்கங்கள் அதிகார வர்க்கத் தரகுப் பெரு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அதிகார வர்க்கத் தரகுப் பெரு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவம் ஆகிய நான்கும் இந்திய மக்களின் எதிரிகள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) - யின் வேலைத்திட்டம் வரையறை செய்கிறது. இந்தியப் புரட்சியின் அடிப்படையான சக்தி விவசாயிகளே ஆவர் என்றும் வரையறை செய்கிறது. அதிகார வர்க்கத் தரகுப் பெரு முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் பின்வரும் பெரும் முரண்பாடுகள் நிலவுகின்றன என்ற கோட்பாட்டு ரீதியான முடிவிற்கு வருகிறது.

-           ஏகாதிபத்தியம் சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கும் நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு

-           நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு.

-           மூலதனத்திற்கும் கூலி உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு

-           ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடு ஆகிய நிலவுகின்றன.

வேலைத்திட்டம் முன் வைத்திருக்கிற மேற்கூறப்பட்ட வரையறை இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புறவயமான அம்சம் பற்றிய முடிவுகள் அடிப்படையில் சரியானது.

புறவய அம்சத்தைப் பற்றிய கணிப்பிலிருந்து வந்தடைந்த அடிப்படையான முடிவுகளிலிருந்தும் இந்திய சமுதாயத்தில் நிலவும் நான்கு பெரும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோளை வேலைத்திட்டம் தீர்மானிக்கிறது. அதாவது இந்திய புரட்சியின் இலக்குகள், கடமைகள் இயக்கு சக்திகள் இயல்பு மற்றும் எதிர்கால நோக்குகள் ஆகிய வற்றை வேலைத்திட்டம் தீர்மானிக்கிறது.

இந்திய புரட்சியின் இந்த கட்டத்தில் அதன் பிரதான இலக்குகள் அல்லது பிரதான எதிரிகள்:

அ. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான தலைமையிலான ஏகாதிபத்தியம்

ஆ. சோவியத் சமூக ஏகாதிபத்தியம்

இ. அதிகார வர்க்க தரகு முதலாளித்துவம் மற்றும்

 ஈ. நிலப்பிரபுத்துவம்

என்ற நான்கு மலைகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. இவை நான்கும் இந்திய மக்களின் எதிரிகள்.

இந்தியப் புரட்சியின் தற்போதைய கடமைகள் (அ) பணிகள்

கட்சியின் வேலைத்திட்டம் இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டத்திலுள்ள கடமைகள் அல்லது பணிகள் நிலப்பிரபுத்துவம், அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவ ஏகாதிபத்தியம் சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றை தூக்கியெறிவதாகும் எனக் குறிப்பிடுகிறது.

இந்தியப் புரட்சியின் இயக்கு சக்திகள்

இன்றைய காலக்கட்டத்தில் இந்தியப் புரட்சியின் இயக்கு சக்திகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது

1)         ஜனநாயகப் புரட்சியின் பிரதான சக்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாய வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் நிலமற்ற ஏழை விவசாயிகளை முற்றிலும் சார்ந்து மத்திய தர விவசாயிகளுடன் உறுதியாக ஐக்கியப்பட்டு பணக்கார விவசாயிகளின் ஒரு பகுதியை வென்றெடுத்து மற்றொரு பகுதியினரை நடுநிலைபடுத்துகின்றது. பணக்கார விவசாயிகளின் ஒரு சின்னஞ்சிறிய பகுதியினர் புரட்சியில் எதிரிகளோடு கடைசியாய்ச் சேரும். நகர்ப்புறச் சிறு முதலாளிகளும் நமது நாட்டின் புரட்சிகரமான அறிவுஜீவிகளும் புரட்சியின் நம்பகமான நேச சக்திகள் ஆவர். (பத்தி. பக்.30)

2)         சிறு, நடுத்தர முதலாளி வர்க்கத்தினர் வியாபாரிகள் முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஆகியோர் ஜனநாயகப் புரட்சியில் நிலையற்று ஊசலாடுகிற நேச சக்திகள் ஆவார்கள். அவர்கள் ஒரு சமயத்தில் புரட்சியை ஆதரிப்பார்கள். மற்றொரு சமயத்தில் எதிர்ப்பார்கள். சில சமயங்களில் புரட்சிக்கு துரோகம் இழைக்கவும் செய்வார்கள். நமது புரட்சியின் எதிரிகளுடன் அவர்களுக்குள்ள ஒற்றுமையும், முரண்பாடும் காரணமாக புரட்சியில் அவர்களுக்கு இரட்டைத்தன்மை ஏற்படுகிறது.

3)         ஆகவே ஜனநாயகப்புரட்சியை முடிவிற்கு கொண்டு செல்ல இவ்வெல்லா வர்க்கத்தினரையும் கொண்டு ஒரு ஜனநாயக முன்னணியை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்படுவது அவசியம்.

புரட்சியின் இயல்பு

கட்சியின் வேலைத்திட்டம் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியப் புரட்சியின் இயல்பை பற்றி பின்வருமாறு தீர்மானிக்கிறது.

இது புதிய வகை ஜனநாயகப்புரட்சி, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகும். இந்தியப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், சிறு முதலாளி வர்க்கம், நடுத்தர முதலாளி வர்க்க ஒரு பகுதியினர் உள்ளிட்டு இவ்வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் என்ற வரையறைகளை முன்வைக்கிறது.

புரட்சியின் எதிர்கால நோக்குகள்

கட்சியின் வேலைத்திட்டம் புரட்சியின் தொலைநோக்கை தெளிவாக வகுத்துக்கொள்ளவில்லை மேலும் வேலைத்திட்டம் தொலைநோக்கைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

இம்மக்கள் படையே நகரங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு நாடு முழுவதும் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி இறுதியாக அதைப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் சோஷலிசத்திற்கும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்று கூறுகிறது. வேலைத்திட்டம் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிறுவுவதும் அதை சோஷலிசத்திற்கு முன்னெடுத்துச்செல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அல்லாமல் மக்கள் படையின் பணியாகும் என்று கூறுகிறது. இது மிகத் தவறானதாகும்.

இந்தியப் புரட்சியை முழுமையாக எடுத்துக்கொண்டால் அது இரு கடமைகளை எதிர்கொள்கிறது. ஒன்று பூர்ஷ்வா ஜனநாயக குணாம்சங்களை உள்ளடக்கிய புதிய ஜனநாயகப்புரட்சி. மற்றொன்று பாட்டாளி வர்க்க சோசலிச குணாம்சங்களை உள்ளடக்கிய சோஷலிசப் புரட்சி ஆகிய இரண்டு கட்டங்களையும் கொண்ட ஒரு புரட்சியாகும். இந்த இரு புரட்சிகர வளர்ச்சிப் போக்குகளின் தன்மை மாறுபட்டவை. முதல் கட்டப் புரட்சியை முழுமையாக நிறைவேற்றினால் ஒழிய நாம் இரண்டாவது கட்டத்தை அடையவே முடியாது. சோஷலிசப் புரட்சிக்கான அவசியமான முன் தயாரிப்புதான் புதிய ஜனநாயக புரட்சி. ஒரு சோஷலிச, கம்யூனிச சமுதாயத்தை அடையப் பாடுபடுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதி லட்சியமாகும். எனவே கட்சியின் வேலைத்திட்டத்தில் எதிர்கால நோக்கை தெளிவாகவும் சரியாகவும் வகுத்துக்கொள்ள வேண்டும். தொகுத்துப் பார்த்தால் கட்சியின் வேலைத்திட்டமும் இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோளை தீர்மானிப்பதிலும் அடிப்படையில் சரியாகவே இருக்கிறது.

கட்சியின் வேலைத்திட்டத்தின் நடைமுறைப் பகுதி பத்தி 8-ல் ஜனநாயக அரசு கீழ்க்கண்ட முக்கிய செயல்களை நிறைவேற்றும். என்ற தலைப்பின் கீழ் 14 அம்சங்களை வைத்திருக்கிறது. இதுவும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதில் புரட்சியின் அடிப்படைப் பணிகளிலிருந்து விலகிச் சென்றுவிடாது.

கட்சியின் வேலைத்திட்டம் இந்தியப் புரட்சியின் இராணுவப் பாதைகள் ஒரு மக்கள் யுத்த பாதையே ஆகும் என்று வரையறை செய்துள்ளது.

இந்தியப் புரட்சியின் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புறவய அம்சத்தைப் பற்றிய கணிப்பிலிருந்து வந்தடைந்த அடிப்படையான முடிவுகளும், இந்தியச் சமுதாயத்தில் நிலவும் நான்கு பெரும் முரண்பாடுகளைத் தீர்க்கும் பொருட்டு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோளைத் தீர்மானிப்பதிலும், இக்குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக வந்தடைந்திருக்கும் நடைமுறைப் பகுதியில் அடங்கியுள்ள 14 அம்சங்களும் வேலைத்திட்டத்தில் வைத்திருப்பதுடன் 70-திட்டம் அடிப்படையில் சரியாகவே இருக்கிறது.

4. பெரும்பான்மையினர் முன் வைத்துள்ள திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய ஆவணங்களின் உள்ளடக்கம்

அ) இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் பற்றி

அரசியல் போர்த்தந்திரத்தின் செயற்பாடுகள் பின்வருமாறு

1)         பொது வேலைத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தொழிலாளி வர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய பிரதான திசை வழியை பாட்டாளி வர்க்கம் தனது எதிரி மீது பிரதான அடியை மிகவும் சாதகமாகத் தொடுக்க முடிகிற திசை வழியைத் தீர்மானிப்பதாகும்.

2)         இதற்கேற்ப பாட்டாளி வர்க்கம் சமூக சக்திகளையும் அதனுடைய கூட்டாளிகளையும் சமூகத் தளத்தில் முன் நிறுத்துவதற்கு ஒரு திட்டத்தை முன்வைப்பதே போர்த்தந்திரத் திட்டம் ஆகும். ஒரு போர்த்தந்திர திட்டம் என்பதானது உயர்ந்த பட்ச பயன்களைத் தரக்கூடிய திசை வழியில் தீர்மானகரமான அடியை கொடுப்பது பற்றிய ஒரு திட்டமாகும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான போராட்டம்

பிரதான திசை வழி

பாட்டாளி வர்க்கத்தின் நோக்கமானது, புரட்சியின் தற்போதைய கட்டத்தில் அதனுடைய பொது வேலைத்திட்டம் முன்வைக்கும் ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் தரகு அதிகாரத்துவ முதலாளித்துவம் ஆகியவற்றைத் தூக்கியெறிவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயகச் சர்வாதிகாரத்தை நிறுவுவதுமாகும்.

இந்தியச் சமுதாயத்தில் உள்ள பல்வேறு வர்க்கங்கள் யாவை?

முதலில் நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். இவ்வர்க்கம் இந்த நாட்டிலேயே மிகப் பிற்போக்கான வர்க்கமாகும். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவை இந்திய சமூகத்தின் பிரதான சமூகத் தூண்களாகும். இவைகளே விவசாயப் புரட்சியின் பிரதான இலக்குகள் ஆவர்.

அடுத்து முதலாளிய வர்க்கம் இருக்கிறது. இது தரகு முதலாளிய வர்க்கம் தேசிய முதலாளிய வர்க்கம் என்று இரண்டாகப் பிரிந்துள்ளது. தரகு முதலாளிய வர்க்கமானது தனது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஏகாதிபத்தியத்தை சார்ந்துள்ளது. எனவே இது புரட்சியின் இலக்குகளில் ஒன்றாக அமைகிறது. தரகு முதலாளிய வர்க்கம் இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ளது. ஒன்று இந்த வர்க்கத்தின் உயர்தட்டு பிரிவு. இப்பிரிவு அரசு முதலாளியத்துடன் சேர்ந்து பெருந்தரகு அதிகாரத்துவ முதலாளியமாக மாறியுள்ளது. இந்த பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிய வர்க்கமே அரசு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம் ஆகியவற்றின் பிற்போக்குக் கூட்டுக்குத் தலைமை தாங்குகிறது. நிலப்பிரபுக்களுடன் இவர்களும் இந்திய மக்களின் பிரதான எதிரிகளாக அமைகிறார்கள். நடுத்தர முதலாளிய வர்க்கத்தின் ஏனைய பிரிவு அரசு அதிகாரத்தில் பங்கு பெறவில்லை. சில சமயம் இது பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிய வர்க்கத்துடன் முரண்பாட்டுக்கும் உட்படுகிறது. தேசிய முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இது சில சமயங்களில் சில எல்லை வரை ஒரு புரட்சிகர பாத்திரத்தை ஆற்ற முடியும். இது பலவீனமானது. பொதுவாக இதனுடைய வலது சாரிப் பிரிவு ஒரு சமரசப் பாத்திரத்தை ஆற்றும்.

அடுத்து குட்டி முதலாளிய வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பொதுவாக குட்டி முதலாளிய வர்க்கமானது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு அதிகாரத்துவ முதலாளியம் ஆகியவற்றால் ஒடுக்கப்படுகிறது. ஆனால் இதனுடைய மேல் தட்டுப் பிரிவு ஆளும் வர்க்கத்துடன் எண்ணற்ற வெளிப்படையான, மறைமுகமான, தொடர்புகளை வைத்துள்ளது. இந்த பிரிவுகளின் பெரும்பகுதி பிற்போக்கானது. இது ஒரு சமரசப் பாத்திரத்தையே ஆற்றும். சிறப்பு தொழில் வல்லுநர்கள், கம்பெனி நிர்வாகிகள், மேனேஜர்கள், மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் போன்றவர்களை உள்ளடக்கியதாகும்.

குட்டி முதலாளிய வர்க்கத்தின் ஏனைய பிரிவு குறிப்பாக அறிவாளிகளும் கைவினைஞர்களும் புரட்சியில் ஒரு முக்கியமான உந்து சக்தி ஆவார்கள்.

விவசாயி வர்க்கத்தை மூன்றாகப் பிரிக்கலாம். அவை பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், நிலமற்ற கூலி விவசாயிகள். பணக்கார விவசாயி வர்க்கமானது ஒரு புறம் கொடூரமாக நிலமற்ற ஏழை விவசாயிகளைச் சுரண்டுகிறது. மறுபுறம் அதுவே ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகிறது. பணக்கார விவசாயி வர்க்கத்தின் மேல் தட்டு, நிலப்பிரபுத்துவ உறவுகளைப் பெற்றுள்ளது. நிலப்பிரபுத்துவ அபகரிப்பு முறையைப் பயன்படுத்துகிறது. இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சில பாத்திரத்தை ஆற்றுவார்கள். ஆனால் விவசாயப் புரட்சியில் நடு நிலைமை வகிப்பார்கள். ஏகாதிபத்தியம், பெரும் தரகு, அதிகாரத்துவ முதலாளிய வர்க்கத்துடனான இவர்களுடைய போராட்டங்களிலும் கூட இவர்கள் சில சலுகைகளைப் பெறுவதற்காகவும் இறுதியாக சமரசத்திற்காகவும் தான், இயக்கத்தை வழி நடத்துவார்கள். நடுத்தர விவசாயி வர்க்கமானது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் இரண்டினாலும் ஒடுக்கப்படுகிறது. எனவே, இது புரட்சியில் ஒரு உந்து சக்தியாக உள்ளது. நிலமற்ற ஏழை விவசாயிகளே சமுதாயத்தில் மிக ஒடுக்கப்படுகிற பிரிவினராகும். இவர்களே புரட்சியின் முக்கிய சக்தியாக அமைகிறார்கள். பொதுவாக 'விவசாயி வர்க்கம்' என்ற சொல்லானது நிலமற்ற ஏழை விவசாயிகளையும் நடுத்தர விவசாயிகளையும் மட்டுமே குறிக்கிறது.

'தொழிலாளி வர்க்கமானது' ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் தரகு அதிகாரத்துவ முதலாளியம் ஆகியவற்றால் சுரண்டப்படுகிறது. இது புரட்சியின் பிரதான உந்து சக்திகளில் ஒன்றாகும்.

அப்படியென்றால் நமது எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? தற்போதைய கட்டத்தில் புரட்சியின் எதிரிகள் பின்வருமாறு         

1) அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள்

2) சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகள்

3) பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிகள்

4) பெரும் நிலப்பிரபுக்கள்

புரட்சியின் நண்பர்கள் பின்வருமாறு

1) தொழிலாளி வர்க்கம்

2) விவசாயி வர்க்கம்

3) குட்டி முதலாளிய வர்க்கம்

4) தேசிய முதலாளிய வர்க்கமும் பணக்கார விவசாயி வர்க்கமும்.

போர்த்தந்திர திட்டம் - பிரதான அடியின் திசை வழி

சக்திகளை முன் நிறுத்தும் திட்டம் என்பதானது புரட்சியின் தலைவராக எந்த வர்க்கம் அமையவேண்டும் என்பதையும் அந்த வர்க்கம் தனது போராட்டத்தில் எதிரிக்கு எதிராக யாருடன் கூட்டுச் சேரவேண்டும் என்பதையும், புரட்சியின் தற்போதைய கட்டத்தில் அது யாரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதாகும்.

புரட்சியின் தலைவர் : ஆலைப் பாட்டாளி வர்க்கம்

நம்பிக்கைக்கு உரிய கூட்டாளிகள் : விவசாயத் தொழிலாளிகள், அரைப்பாட்டாளிகள் வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டிமுதலாளிய வர்க்கம். (மேல் மட்டப் பிரிவைத் தவிர).

ஊசலாடும் கூட்டாளிகள் : தேசியமுதலாளிய வர்க்கம், பணக்கார விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் ஒரு பகுதி

சமரச சக்திகள் : குட்டிமுதலாளிய வர்க்கத்தின் மேல்தட்டு, தேசியமுதலாளிய வர்க்கத்தின் வலதுசாரிப் பிரிவு, பணக்கார விவசாயி வர்க்கத்தின் மேல்மட்டப் பிரிவு (நிலப்பிரபுத்துவ உறவு உடையவர்கள்).

பாட்டாளி வர்க்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், ஆகியவற்றிற்குச் சேவகம் புரிகிற பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிய வர்க்கம், பெரும் நிலப்பிரபு வர்க்கம் ஆகியவற்றின் கூட்டுச் சர்வாதிகாரத்தை பலாத்காரம் மூலம் தகர்ப்பதற்காகவும், தேசிய முதலாளிய வர்க்கத்தின் வலதுசாரிப் பிரிவு, குட்டி முதலாளிய வர்க்கம், பணக்கார விவசாயி வர்க்கம், ஆகியவற்றின் மேல் தட்டுப் பிரிவு, ஆகியவற்றின் நிலையற்ற தன்மையையும் ஊசலாட்டத்தையும் செயலற்றதாக ஆக்குவதற்காகவும், தொழிலாளி, விவசாயி கூட்டணியை அச்சாணியாகக் கொண்டு, பரந்துபட்ட விவசாயி வர்க்கம் குட்டி முதலாளிய வர்க்கம் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து தேசிய முதலாளிய வர்க்கத்தின் ஒரு பகுதியை வென்றெடுத்து ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்ள வேண்டும்.

சமரசவாதிகளை தனிமைப்படுத்தும் பிரச்சனை

புரட்சியின் உந்து சக்திகளை (அதாவது தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம்) வென்றெடுத்து ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு அதிகாரத்துவ முதலாளியம் ஆகியவற்றுடன் ஒரு சமரசத்தை மேற்கொள்வதன் மூலம் புரட்சியைச் சீர்குலைக்க முயல்கிற சமரச சக்திகளை நோக்கி பிரதான அடியின் திசைவழி அமைய வேண்டும். புரட்சியின் எதிரிகளையும் நண்பர்களையும் தீர்மானிப்பது என்பதானது போர்த்தந்திரத்தின் ஒரு முக்கியமான செயற்பாடு என்பதில் ஐயமில்லை. இது செய்யப்படவில்லை என்றால் புரட்சியின் நோக்கம் தெளிவாக அமையாது. அது போலவே நமது நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது பற்றிய ஒரு தெளிவான வரையறை இல்லையென்றாலும், எதிரிக்கு எதிராக தீர்மானகரமான அடியைத் தொடுப்பதிலும், அவனைத் தோற்கடிப்பதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் நாம் தோல்வி அடைவோம். ஆனால் சமுதாயத்தில் ஊசலாடுகிற எதிரியுடன் சமரசம் செய்து கொள்கிற சில வர்க்கங்கள் அதாவது சமரச சக்திகள் இருக்கின்றன. இந்த சமரச சக்திகள் பிரபலமான முழக்கங்களை எழுப்புவதோடு, மட்டுமல்லாமல் ஜனநாயகக் கோரிக்கைகளையும் எடுக்கிறார்கள். ஆனால் சீர்திருத்தத் தீர்வுகளோடு அவற்றை எடுக்கிறார்கள். இந்த ஜனநாயகக் கோரிக்கைகளின் அடிப்படையில் மக்களை (விவசாய வர்க்கம் உள்பட புரட்சியின் உந்து சக்திகளையும் கூட) அவர்கள் அணி திரட்டுகிறார்கள். இறுதியில் ஆளும் வர்க்கங்களுடன் சமரசத்தில் முடிக்கிறார்கள். இவ்வாறு புரட்சியைச் சீர்குலைத்து உடைக்கிறார்கள்.

எனவே, இந்த சமரச சக்திகளை தனிமைப்படுத்தாமல் பாட்டாளி வர்க்கத்தால் மக்களை அவர்களின் பிடியிலிருந்து வென்றெடுத்து, அதன் மூலம் எதிரியை மக்களுடன் நேரடியான மோதலுக்கு கொண்டு வரவோ அல்லது தொழிலாளி - விவசாயிக் கூட்டணியை நிறுவவோ அல்லது நாட்டின் ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தின் மீது தனது தலைமையை நிறுவவோ முடியாது. கொள்கையில் சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரச்சனையையும் எந்த வர்க்கங்கள் சமரசவாதிகளாக அமைகிறார்கள் என்பதையும் நாம் தீர்மானிக்கவில்லையென்றால் இரண்டு விலகல்களுக்கான வாய்ப்பு இருக்கிறது. முதலாவது பாட்டாளி வர்க்கம் தன்னையே சமரசவாதி அளவிற்குத் தாழ்த்திக் கொள்ளும். அதன் மூலம் சீர்திருத்த வாதத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் இட்டுச்செல்லும். இரண்டாவது, பாட்டாளி வர்க்கம் மக்களை சமரச வாதிகளின் பிடியிலிருந்து வென்றெடுக்காமல் முன்னேறிய பிரிவை எதிரிக்கு எதிரான தீர்மானமான போர்க்களத்தில் இறக்கி அதன் மூலம் இடது தீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும் அபாயமாகும். இந்த இரண்டாவது விலகலும் மக்களின் மீது பாட்டாளி வர்க்கத்தின் (அரசியல்) செல்வாக்கை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களை சமரசவாதிகளின் பிடிக்குள்ளே விட்டு வைப்பதில் முடியும். இந்த இரண்டு வகையான விலகல்களுக்கும் இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் போதுமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. உண்மையில் இது பாட்டாளிவர்க்க இயக்கம் தொடர்ந்து ஒன்று அல்லது மற்றொரு விலகலில் நழுவி விழுவதற்கு உரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

தொகுத்துக் கூறினால் சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி அவர்களுடைய நிலையற்ற தன்மையைச் செயலற்றதாக ஆக்குவது என்பது விவசாயி வர்க்கம் உட்பட உந்து சக்திகளை அவர்களுடைய பிடியிலிருந்து வென்றெடுக்கவும், தொழிலாளி விவசாயி கூட்டணியைக் கட்டவும், மக்களின் மீது பாட்டாளி வர்க்கத் தலைமையை நிறுவவும் அவசியமான, நிச்சயமான வழி முறையாகும். இது இல்லாமல் எதிரிக்கும் மக்களுக்கும் இடையில் நேரடி மோதலைக் கொண்டு வருவதையும் எதிரியைத் தூக்கியெறிவதையும் நம்மால் ஒரு போதும் நினைத்துப் பார்க்க முடியாது. எனவே பிரதான அடியின் திசைவழியைத் தீர்மானிப்பது என்பது, அதாவது சமரச சக்திகளை தனிமைப்படுத்துவதும், அதற்கேற்ப வர்க்க சக்திகளை முன் நிறுத்தும் ஒரு போர்த்தந்திர திட்டத்தை உருவாக்குவதும் பொதுவான கொள்கைகளையும் விதிகளையும் முன் வைக்கிறது. இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சக்திகளைப் பருண்மையாகவும், யதார்த்தமாகவும், நிலை நிறுத்துவதைத் தீர்மானிக்க முடியும். (இது போர்த்தந்திரம், செயல்தந்திரம் இரண்டின் கூட்டுச் செயல்பாடு ஆகும்.)

இந்தியாவில் சமரச சக்திகள், தேசிய முதலாளிய வர்க்கத்தின் வலதுசாரிப் பிரிவு, குட்டி முதலாளிய வர்க்கத்தின் மேல் தட்டு பணக்கார விவசாயி வர்க்கத்தின் மேல் தட்டுப் பிரிவு ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கியதல்ல. அரசு அதிகாரத்தில் பங்கு பெற முடியாத தரகு முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாக ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுத்துவவாதிகள், பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிகள் ஆகியோருடன் தனது சொந்த முரண்பாடுகளின் காரணமாக சில சலுகைகளை பெறுவதற்காக ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முன் வருகிற தன்மையில் தரகர்களாக உள்ள நடுத்தர முதலாளிய வர்க்க பிரிவானது சமரசம் செய்து, இயக்கத்திற்கு துரோகம் விளைவிக்கிறது இவையே இந்தியாவின் பிரதான சமரச வர்க்கங்களாகும்.

சேமிப்பு சக்திகள் பற்றிய பிரச்சினை

போர்த்தந்திரமானது கூட்டாளிகள், சமரச சக்திகள் பற்றியது மட்டும் அல்ல, புரட்சியின் சேமிப்பு சக்திகள் பற்றியும் அது கூறுகிறது. சேமிப்புச் சக்திகள் இரண்டு வகையானவை. அவை நேரடி மற்றும் மறைமுகம். முந்தையது நம்பிக்கைக்கு உரியவை. பிந்தையது பாட்டாளி வர்க்க புரட்சியை முன் தள்ள அறிவியல் பூர்வமாக பயன்படுத்தப் படவேண்டும். எனவே இவை தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.

1) நேரடி சேமிப்பு சக்திகள்

 -          இந்தியப் புரட்சியின் உந்து சக்திகள்- தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம்.

 -          ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்க சோசலிச இயக்கங்கள்.

 -          அரைக்காலனிய, புதியகாலனி நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்கள்.

2) மறைமுக சேமிப்பு சக்திகள்

 -          உந்து சக்திகள், கூட்டாளிகள் ஆகியவற்றின் ஒரு பிரிவுக்கும் எதிரிக்கும் இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும். இவை பாட்டாளி வர்க்கத்தால் எதிரியை பலவீனப்படுத்தவும் தனது சொந்த நேச சக்திகளை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

 -          ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும்.

 -          பொதுவாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு இடையேயுள்ள குறிப்பாக வல்லரசுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளும் மோதல்களும். இந்தியாவில் இந்த முரண்பாட்டின் பிரதிபலிப்பும் அதாவது ஒரு வல்லரசுக்கு விசுவாசமான தரகு முதலாளிகளுக்கும் மற்றொரு ஏகாதிபத்திய சக்திக்கு (குறிப்பாக மற்றொரு வல்லரசு) விசுவாசமான தரகர்களுக்கும் இடையில் மேற்கூறிய முரண்பாட்டின் பிரதிபலிப்பு.

நேரடி, மறைமுக சேமிப்புச் சக்திகளை முறையாக கையாளுகிற பிரச்சனையானது ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இதன் மீதுதான் இந்தியப் பொதுவுடமை இயக்கமானது மீண்டும் மீண்டும் திசை விலகியது. அது பல சமயங்களில் மறைமுக சேமிப்புச் சக்திகளை நேரடிச் சேமிப்புச் சக்திகளாக எடுத்துக் குழப்பியது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் அது ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ஒரு எதிரிக்கும் ஒரு நண்பனுக்கும் இடையிலான முரண்பாடாகக் கண்டுள்ளது. எனவே, அது ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவை, இப்பிரிவு ஆளும் கும்பலுடன் சில முரண்பாடுகளைக் கொண்டிருக்கலாம் என்பதாலேயே நண்பர்களாகத் தவறாக எடுத்துக்கொண்டது. நேரடி மறைமுக சேமிப்புச் சக்திகளைச் சரியாக கையாள்வதன் மூலம் மட்டுமே அவற்றை நம்மால் புரட்சியின் நலன்களுக்கு நன்கு பயன்படுத்த முடியும்.

ஐக்கிய முன்னணி பற்றிய பிரச்சினை

சக்திகளை முன் நிறுத்துவது பற்றிய ஒரு திட்டத்தை வரையறுப்பதை சக்திகளை முன் நிறுத்தும் யதார்த்தமான (பருண்மையான, நடைமுறையிலான) செயலோடு குழப்பக்கூடாது. இச்செயல், செயல்தந்திரம், போர்த்தந்திரம், இரண்டினாலும் கூட்டாக மேற்கொள்ளப்படுகிறது. போர்த்தந்திரமானது செயல்தந்திரத்திற்கு வழிகாட்டுவதற்கும், செயல்தந்திரமானது போர்த்தந்திரத்திற்கு சேவை செய்வதற்கும், சக்திகளை முன்நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதிகளை முன்வைப்பது அவசியமானதாகும். இது அப்படையில் ஐக்கிய முன்னணி பிரச்சனை பற்றியதும் அதற்காக மாவோவால் முன்வைக்கப்பட்ட விதிகள் பற்றியதும் ஆகும். இந்த விதிகளின் அடிப்படையில் இந்தியாவில் ஐக்கிய முன்னணிக்கான விதிகள் பின்வருமாறு.

1)         தேசிய முதலாளிய வர்க்கமானது சில குறிப்பிட்ட நேரங்களில் சில குறிப்பிட்ட எல்லை வரை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் தரகு அதிகாரத்துவ முதலாளியம் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுக்கும். பாட்டாளி வர்க்கமானது தேசிய முதலாளிய வர்க்கத்துடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும், முடிந்த வரை அதைப் பேணவேண்டும்.

2)         பிற வரலாற்றுச் சூழ்நிலைகளில் தேசிய முதலாளிய வர்க்கம் தனது பொருளாதார, அரசியல் பலவீனம் காரணமாக ஊசலாடும்; விலகி ஓடும். எனவே புரட்சிகர ஐக்கிய முன்னணியின் உள் அமைப்பானது எல்லா நேரங்களிலும் மாறாமல் அப்படியே இருக்காது. மாற்றத்துக்கு உட்படும். ஒரு நேரம் தேசிய முதலாளிய வர்க்கம் அதில் பங்கெடுக்கும். சில நேரங்களில் பங்கெடுக்காமல் இருக்கலாம்.

3)         தன்மையில் தரகராக உள்ள பெரும் முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக சேவை புரிகிற அதனால் வளர்க்கப்படுகிற ஒரு வர்க்கமாகும். எனவே தரகுப் பெருமுதலாளிய வர்க்கமானது எப்போதுமே புரட்சியின் இலக்காக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த பெரும் முதலாளிய வர்க்கத்திற்குள்ளேயே வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்திய சக்திகளால் (குறிப்பாக இரண்டு வல்லரசுகள்) ஆதரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும் போது ஒரு குறிப்பிட்ட சக்திக்கு எதிராக புரட்சியின் முனை முக்கியமாக திருப்பப்படும்போது பிற சக்திகளைச் சார்ந்த பெரும் முதலாளிய வர்க்க கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான போராட்டத்தில் சில குறிப்பிட்ட எல்லை வரை சில குறிப்பிட்ட காலத்திற்குச் சேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பாட்டாளி வர்க்கமானது எதிரியை பலவீனப்படுத்தும் பொருட்டும் தனது சொந்த சேமிப்புச் சக்திகளைக் கூட்டும் பொருட்டும் இந்த பிரிவினருடன் ஒரு ஐக்கிய முன்னணியை அது புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் உருவாக்கலாம்.

4)         தரகுப் பெருமுதலாளிய வர்க்கமானது பொது எதிரிக்கு எதிராகப் போராடுவதில் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியில் சேரும்போது கூட மிகப் பிற்போக்கானதாகவே நீடிக்கும். அது பாட்டாளி வர்க்கத்தின் எந்தவொரு தத்துவார்த்த அரசியல் ஸ்தாபன வளர்ச்சியையும், பாட்டாளி வர்க்க கட்சியையும் உறுதியாக எதிர்க்கிறது. அவற்றின் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்க முயலுகிறது. அவர்களுக்கு எதிராக ஏமாற்றுதல், புகழ்ச்சி, விழுங்கல், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், சீர்குலைவுத் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. மேலும் எதிரியிடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைப் பிளவுபடுத்தவும் தயார் செய்வதற்காகவும் இது இவற்றைச் செய்கிறது.

5)         விவசாயி வர்க்கமே பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான கூட்டாளியாகும்.

6)         நகர்ப்புற குட்டி முதலாளிய வர்க்கம் நம்பத்தகுந்த கூட்டாளியாகும்.

7)         சர்வதேசிய ரீதியில், ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளிவர்க்க இயக்கங்களும், அரைக்காலனிய, புதிய காலனி நாடுகளில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்கள் மட்டுமே உறுதியான கூட்டாளியாகும். எந்தவொரு குறிப்பிட்ட வல்லரசு சக்தியும் தற்காலிகமாக உதவி செய்யலாம். (ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் காரணமாக) ஆனால் இது மிகவும் நம்பத்தகாதது.           

இந்த விதிகளை செயல்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு

-           ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை நிறுவப்படவேண்டும். அதாவது, பாட்டாளி வர்க்கமானது அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளைக் கொண்ட தனது குறிப்பான வேலைத்திட்டத்துடன் வரவேண்டும்.

-           ஐக்கிய முன்னணியைக் கட்டும்போது சூழ்நிலை பற்றிய ஒரு பருண்மையான ஆய்வின் அடிப்படையில் வர்க்க உறவு பற்றிய ஒரு சரியான மதிப்பீடு இருக்க வேண்டும்.

-           ஐக்கிய முன்னணிக்குள் ஊசலாடும் சக்திகளைத் தனிமைப்படுத்தவேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்காகப் போராட வேண்டும்.

-           ஐக்கிய முன்னணிக்குள் சுரண்டும் வர்க்கங்களின் சிந்தனையையும் அரசியலையும் எதிர்த்துப் போராடவேண்டும். அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை நிறுவவும் அதனுடைய சுயேட்சைத் தன்மையையும் முன் முயற்சியையும் பாதுகாக்கவும் வேண்டும்.

-           ஐக்கிய முன்னணியின் நடவடிக்கையில் இரண்டு விலகல்கள் ஏற்படலாம். முதலாவதானது முதலாளிய வர்க்கம் முழுமையையுமே எதிரியாக அல்லது அதைவிட மோசமானதாக நடத்துவதும் குட்டி முதலாளிய வர்க்கத்தையும் கூட தாக்குவதும் ஆகும். மற்றொரு அபாயமானது முதலாளிய வர்க்கத்தின் பின்னே பின் தங்கி நின்று பாட்டாளி வர்க்கமானது முன் முயற்சியையும் சுயேச்சைத் தன்மையையும் இழந்து அதன் வாலாக மாறுவதுமாகும். இரண்டு விலகல்களும் தொடர்ந்து எதிர்த்துப் போராடப்படவேண்டும்.

-           இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியானது ஒரு விவசாயப் புரட்சியாகவும், அதே சமயத்தில் விவசாயி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர யுத்தமாகும் அமைகிறது. எனவே எந்தவொரு ஐக்கிய முன்னணியின் அடிப்படையும் தொழிலாளி, விவசாயி கூட்டணியேயாகும். ஜனநாயகப் புரட்சியின் முக்கிய சக்தி விவசாய வர்க்கமே. எனவே, விவசாய வர்க்கத்துடனான கூட்டு எந்தவொரு ஐக்கிய முன்னணிக் கொள்கையிலும் ஒரு கேந்திரமான பிரச்சனையாகும்.

-           பரந்துபட்ட மக்களின் அரசியல் போராட்டங்களுக்கும் மக்கள் ஆயுதப்படைகளின் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையே ஒரு சரியான உறவு இருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலக்கட்டத்தின்போது ஐக்கிய முன்னணியானது நேரடியாக ஆயுதப் போராட்டத்திற்கு உதவி செய்ய வேண்டும். அரசியல் போராட்டம் பிரதானமாக இருக்கிற காலக்கட்டத்தில் ஐக்கிய முன்னணியானது மக்களை ஆயுதப் போராட்டத்திற்குத் தயார் செய்யும் திசை வழியில் ஐக்கிய முன்னணி கட்டப்படவேண்டும். புரட்சிகரச் சூழ்நிலையின் வளர்ச்சியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை ஐக்கிய முன்னணி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருப்பதுபோல லெனினியத்தின் மூன்று செயல்தந்திர கோட்பாடுகளில் ஒன்று 'ஒவ்வொரு நாட்டின் பொதுவுடமைக் கட்சியும் பாட்டாளி வர்க்கத்திற்காக ஒரு பரந்துபட்ட கூட்டாளியை அது ஊசலாடுகின்றதாகவும் நிலையற்றதாகவும் நம்பத்தகாததாக இருப்பினும்கூட பெறுவதற்காக மிகச்சிறிய வாய்ப்பைக் கூட தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்'.

போர்த்தந்திர முழக்கங்கள்

 'ஒவ்வொரு புரட்சியின் முக்கிய பிரச்சனையும் அரசு அதிகாரம் பற்றிய பிரச்சினையாகும்'. என்று லெனின் கூறுகிறார். எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கைகளில் அதிகாரம் குவிந்துள்ளது எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் தூக்கியெறியப்படவேண்டும்.எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதிகாரத்தை எடுக்க வேண்டும் இவையே ஒவ்வொரு புரட்சியின் முக்கிய பிரச்சனையாகும்.

புரட்சியின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்தின் முழுமையான காலக்கட்டத்தின்போதும் செல்லுபடியாகிற கட்சியின் அடிப்படை முழக்கங்கள் லெனினின் இந்த அடிப்படையான கோட்பாட்டை மொத்தத்தில் முழுமையாகச் சார்ந்திருக்கவில்லை என்றால் அவை அடிப்படை முழக்கங்களாக இருக்க முடியாது.

அடிப்படை முழக்கங்கள் வர்க்க சக்திகளைப் பற்றிய ஒரு மார்க்சிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டிருந்தால் புரட்சியின் வெற்றிக்கான வர்க்கப் போராட்டத் தளத்திலும் புதிய வர்க்கத்தால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத் தளத்திலும் புரட்சிகர சக்திகளை முன் நிறுத்தும் சரியான திட்டத்தைச் சுட்டிக் காட்டினால் இப்பணியின் நிறைவேற்றலுக்கு ஒரு பெரிய பலம் வாய்ந்த அரசியல் ராணுவத்தைப் பரந்துபட்ட மக்களின் மத்தியிலிருந்து உருவாக்குவதற்கு உதவினால் அவை சரியான முழக்கங்களாகும்.

இந்தியப் புரட்சியின் இந்தக் கட்டத்தில் போர்த்தந்திர முழக்கங்களாக இருக்கக் கூடியவை:

1)         பெரும் தரகு அதிகாரத்துவ முதலாளிய வர்க்கம், பெரும் நிலப்பிரபு வர்க்கம் ஆகியவற்றின் கூட்டு சர்வாதிகாரத்தைத் தூக்கியெறி!

2)         அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகாரத்துவ முதலாளியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றைத் தூக்கியெறி!

3)         பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளிகள் விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியவற்றின் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிறுவு!

4)         மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் நீடூழி வாழ்க!

போர்த்தந்திர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான போராட்டம்

போர்த்தந்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான போராட்டத்தில் இயக்கத்தின் எல்லாச் செயல்தந்திரக் கட்டங்களின் போதும் கீழ்க்கண்ட கோட்பாடுகளை மனதில் கொள்ள வேண்டும்.

1)         ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்தின் போதும் சக்திகளை முன்நிறுத்தும் விதிகளுக்கு ஏற்ப செயல்தந்திரம் செயல்படுகிறதா என்பதைப் பார்க்கப் போராடு!

2)         வர்க்கச் சக்திகளை முன் நிறுத்தும் பிரச்சனையில் தோன்றும் இரண்டு விலகல்களையும் எதிர்த்துப் போராடு! ஒன்று முதலாளிய வர்க்கம் அல்லது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பின்னால் தொங்கி நின்று அதன் மூலம் செயல்தந்திரத்தை போர்த்தந்திர திட்டத்திலிருந்து திசைத் திருப்பி சீர்திருத்தவாத, திருத்தல்வாதச் சகதியில் முடிவடைகிறது. இரண்டாவது, முரண்பாடுகளைக் காண மறுக்கிறது. கதவை மூடிக்கொள்கிற சிந்தனைப் போக்கை மேற்கொள்கிறது. பிளவு வாத 'இடது' தீவிரவாத சகதியில் முடிவடைகிறது.

3)         எல்லாச் செயல்தந்திரக் கட்டங்களிலும் எல்லா குறிப்பிட்ட நோக்கங்களும் போர்த்தந்திரத்திற்குச் சேவை செய்கிறதா என்பதை பார்க்கப் போராடு!

4)         ஒவ்வொரு செயல்தந்திரக்கட்டத்திலும் சமரச சக்திகளை தனிமைப்படுத்தப் போராடு!

5)         இயக்கத்தின் எல்லா செயல்தந்திரக் கட்டங்களிலும் பாட்டாளி வர்க்கத் தலைமைக்காக போராடு!

இந்தியப் புரட்சிக்கே உரிய சிறப்புப் பிரச்சனையான தேசிய இனப் பிரச்சினையிலும் சாதிப் பிரச்சனையிலும், இயக்கத்தின் எந்தவொரு குறிப்பிட்ட கட்டத்திலும் ஒரு குறிப்பான பகுதியில் குறிப்பான செயல்தந்திர திட்டத்தை உருவாக்கும்போது கீழ்க்கண்ட போர்த்தந்திர திட்டத்தை மனதில் கொள்ளவேண்டும்.

தேசிய இன பிரச்சினை

இயக்கத்தின் ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்திலும் பாட்டாளி வர்க்கமானது தேசிய ஒடுக்கு முறையை எதிர்த்தும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட தேசிய சுயநிர்ணய உரிமைக்கும் போராடவேண்டும். ஆனால் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும்போதே பாட்டாளி வர்க்கமானது இந்தியாவின் அனைத்துத் தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையையும் நலன்களையும் தனது சொந்த தேசிய இனத்து முதலாளிய வர்க்கத்துடனான பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு மேலே வைக்கவேண்டும்.

சாதி

இயக்கத்தின் ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்திலும் பாட்டாளி வர்க்கமானது சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து பொதுவாகவும் அதனுடைய மிக மோசமான வெளிப்பாடான தீண்டாமையை எதிர்த்து குறிப்பாகவும் போராடவேண்டும். ஆனால் தீண்டாமையையும் சாதி ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும்போதே பாட்டாளி வர்க்கமானது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை, குறிப்பாக பாட்டாளி வர்க்க விவசாயி வர்க்க ஒற்றுமையை குறுகிய சாதி ஒற்றுமைக்கு மேலே வைக்க வேண்டும்.

இவைதான் நமது செயல்தந்திரத்தை உருவாக்கும் போது போர்த்தந்திரத் திட்டத்தை செயல்படுத்தப் போராடும் பாதையின் சில அடிப்படைக் கோட்பாடுகளாகும். இந்த கோட்பாடுகள் கேந்திர முக்கியத்துவம் உடையன. ஏனென்றால் அடிக்கடி நாம் இயக்கத்தின் உடனடித் தேவைக்கேற்ப செயல்தந்திரத்தை உருவாக்கி அதன் மூலம் தன்னெழுச்சிக்குத் தலை வணங்கவும் இந்த செயல்தந்திரங்களை நமது போர்த்தந்திர திட்டத்திலிருந்து முறிக்கவும் செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம். இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் வரலாறானது அப்படிப்பட்ட பல உதாரணங்களை கொண்டுள்ளது. செயல்தந்திரம் பிரச்சனைக்குப் பிரச்சனை தாவியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தக் கோடி, மறு கட்டத்தில் அதற்கு எதிர்க்கோடி என்று தாவி எந்தவொரு போர்த்தந்திர திட்டத்திலிருந்தும் முழுமையாகவே விலகியிருந்திருக்கிறது.

ஆ) செயல்தந்திரப் பிரச்சினைப் பற்றி

பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான அடிப்படையான நோக்கங்கள் அதாவது அரசியல் போர்த்தந்திரம்-புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்துக்குள் மாறாது; ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பொருளாதாரப் புரட்சியின் பொதுவான போக்கானது (பொருளாதார போக்கு மட்டுமல்ல) சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவு போல மாறாது ஆனால், புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்துக்குள் சமுதாய, அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை மிகவும் நேரடியாகவும், உடனடியாகவும் செயலுக்கான நிபந்தனைகளையும், அதன் காரணமாக அதன் நோக்கங்களையும் தீர்மானிக்கின்றன. பொதுவான பணிகள், வரலாற்றுச் செயல் போக்கின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பருண்மையான பொருளாதார அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றிய ஒரு துல்லியமான ஆய்வானது, அந்தக் குறிப்பிட்ட கட்டத்திற்கான சூழ்நிலைகளால் கட்டாயமாக மாற்றியமைக்கப்படுகின்றன. எனவே, வரலாற்றுச் சூழலின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பருண்மையான அரசியல் செயல்தந்திரத்தை உருவாக்குவதற்கு அத்தகைய ஆய்வு அவசியமானதாகும். செயல்தந்திரத்தின் செயற்பாடானது, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் உடனடி நோக்கத்தையும் திசை வழியையும் தீர்மானிப்பதாகும். 'கட்சியின் செயல்தந்திரம் என்பதானது கட்சியின் அரசியல் நடத்தை அல்லது அதனுடைய நடவடிக்கையின் பண்பு, திசை வழி மற்றும் வழிமுறைகள் என்று பொருள்படும்' என்று லெனின் கூறியிருக்கிறார்.

கட்சியானது புதிய பணிகளுக்காக அல்லது ஒரு புதிய அரசியல் சூழ்நிலையின் காரணமாக, கட்சியின் அரசியல் நடத்தையை மொத்தத்தில் துல்லியமாக வரையறுக்கும் பொருட்டு, தனது செயல்தந்திரத்தை உருவாக்குகிறது என்று லெனின் மேலும் கூறியிருக்கிறார். கட்சியின் அரசியல் செயல்தந்திரம் அல்லது கட்சியின் நடத்தையின் அரசியல் வழியானது, ஒவ்வொரு வரலாற்றுச் சூழ்நிலைக்கும் உரிய வர்க்கங்களின் உறவையும் பருண்மையான அம்சங்களையும் பற்றிய மிகச் சரியான, புறவயமாக நிரூபணமாகக்கூடிய ஒரு ஆய்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆய்வு, கொள்கைக்கு ஒரு விஞ்ஞான அடிப்படையைக் கொடுப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூழ்நிலையை ஆய்வு செய்து, செயல்தந்திரத்தை உருவாக்குவது பற்றி லெனின் பின்வருமாறு கூறினார். 'நாம் முதலாவதாக சமூகப் பொருளாதார, அரசியல் வளர்ச்சியின் பொதுவான போக்குகளிருந்து' குறிப்பிட்ட புரட்சிகர சூழ்நிலையின் தன்மையை ஆராய வேண்டும். இரண்டாவது, இன்று ரஷ்யாவில் (அதாவது குறிப்பிட்ட நாட்டில்) வர்க்கங்களின் (மற்றும் கட்சிகளின்) அரசியல் குழுச் சேர்க்கை. மூன்றாவது, இந்த சூழ்நிலையில் சமூக ஜனநாயக உழைப்பாளர் கட்சியின் அடிப்படைப் பணிகளும் அரசியல் குழுக்கள் சமூக சக்திகளுடனான அடிப்படை உறவுகளும். லெனின் மேலும் கூறினார்: "சமுதாயம் அரசு அதிகாரம் ஆகியவற்றின் சமூக அமைப்பு மாற்றங்களினால் சித்திரிக்கப்படுகிறது; இந்த மாற்றங்கள் புரிந்து கொள்ளப்படாவிட்டால், எந்தவொரு சமூகத் துறையிலும் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. இந்த மாற்றங்களைப் பற்றிய புரிதலே எதிர்காலத்திற்கான முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது; இதற்கு நாம் நிச்சயமாக தெரியாத பொருள்கள் பற்றி பயனற்ற கற்பனை என்று பொருள் கொள்ளவில்லை; மாறாக பொருளாதார அரசியல் வளர்ச்சியின் அடிப்படை போக்குகள் என்றே பொருள் கொள்ளுகிறோம். இந்த போக்குகளின் இறுதி விளைவுகளே இந்த நாட்டின் அடுத்து வரும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. இந்தப் போக்குகளே ஒவ்வொரு அறிவுள்ள பொது வாழ்க்கையிலுள்ள மனிதனின் பணிகளையும் திசை வழிகளையும் இயல்பையும் தீர்மானிக்கின்றன".

மார்க்சிய-லெனினியமானது நம்மிடம் வேண்டுவது "எந்தவொரு அரசியல் செயலையும் மேற்கொள்வதற்கு முன்னால் வர்க்க சக்திகள் மற்றும் அவற்றின் அணிசேர்க்கை பற்றிய ஒரு துல்லியமான புறவய மதிப்பீடு" செய்யப்படவேண்டும் என்பதேயாகும்.

(லெனின் ப.18 தொகுதி 19)

எந்தவொரு அரசியல் செயலையும் மேற்கொள்ளுவதற்குமுன் சூழ்நிலையில் மாற்றங்களைக் காண மறுத்தல், வர்க்க சக்திகள் மற்றும் அவற்றின் அணி சேர்க்கை ஆகியவை பற்றி ஒரு புறவயமான மதிப்பீட்டைச் செய்வதன் அவசியத்தை மறுத்தல் ஆகியவை ஒரு இயங்கியல் பார்வையற்ற அணுகுமுறையாகும்; ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையானது பொருள்களை அவற்றின் மாற்றத்திலும் வளர்ச்சியிலும் பார்க்கவில்லை. அனுபவவாதம் இப்படிப்பட்ட ஒரு கண்ணோட்டத்திற்கான காரணங்களில் ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு கண்ணோட்டத்தின் அடிப்படையில் எந்த ஒரு அரசியல் செயல்தந்திரமும் அல்லது அரசியல் நடவடிக்கையும் தீர்மானிக்கப்படுவதாக இருந்தால், அந்த இயக்கம் தன்னெழுச்சி வாதத்தில் தூக்கியெறியப்படும். இந்த முறையை மேற்கொள்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிப்பான நோக்கங்களையோ அல்லது உடனடி நோக்கம், திசை வழி ஆகியவற்றையோ நம்மால் சரியாகத் தீர்மானிக்க முடியாது. எனவே, இந்த அணுகுமுறையினால் தீர்மானிக்கப்படுகின்ற எந்தவொரு செயல்தந்திரமும், செயல்தந்திரத்தை ஒரு நிகழ்வுப் போக்காகக் கொள்ளுமே தவிர, ஒரு திட்டமாகக் கொள்ளாது.

எனவே, ஒரு உண்மையான பாட்டாளிவர்க்கச் செயல்தந்திரத்தை முன் வைப்பதற்கு நாம் கீழ்க்கண்ட மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனைகளின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.

தோழர் ஸ்டாலின் கூறினார்

"போர்த்தந்திரத்தாலும், உள்நாட்டிலும் அண்டை நாடுகளிலும் உள்ள புரட்சிகர இயக்கத்தின் அனுபவத்தாலும் வழிகாட்டப்படுகிற செயல்தந்திரமானது, ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலும் பாட்டாளி வர்க்கம், அதனுடைய கூட்டாளி ஆகியவற்றிற்குள் உள்ள சக்திகளின் நிலைமையையும் (பண்பாட்டின் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலை, அமைப்பு மற்றும் அரசியல் உணர்வு நிலையின் உயர்ந்த அல்லது தாழ்ந்த அளவு, நிலவுகின்ற மரபுகள் இயக்கத்தின் வடிவங்கள், பிரதான, துணை அமைப்பு வடிவங்கள்) எதிரியின் முகாமிற்குள் உள்ள சக்திகளின் நிலையையும் கவனத்தில் கொண்டு எதிரியின் முகாமிலுள்ள அதிருப்தி அல்லது எந்தவொரு குழப்பத்தினையும் சாதகமாக எடுத்துக்கொண்டு பரந்துபட்ட மக்கள் திரளைப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்கவும் அவர்களைச் சமூக தளத்தில் தங்களது போராடும் இடங்களில் முன் நிறுத்தவும் (ஒரு போர்த்தந்திர திட்டத்தில் சக்திகளை முன் நிறுத்துவதற்காக வரையப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதில்) உறுதியான வழிகளைச் சுட்டிக்காட்டி, போர்த்தந்திரத்தின் வெற்றிக்கு மிக நிச்சயமாகத் தயார் செய்கிறது. இதற்கேற்ப அது கட்சியின் முழக்கங்களையும் செயல் கட்டளைகளையும் இடுகிறது அல்லது மாற்றுகின்றது."

மேலும் ஸ்டாலின் கூறினார்.

"செயல்தந்திரமானது, மற்றொருபுறம் குறிப்பிட்ட போர்த்தந்திரக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட திருப்பத்தின் அடிப்படையில் அலை ஏற்றங்கள், இறக்கங்களாலும் மோதுகின்ற சக்திகளின் உறவுகளாலும், போராட்ட (இயக்க) வடிவங்களாலும் இயக்கத்தின் வீச்சாலும், ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தின் குறிப்பிட்ட மாவட்டத்தின் போராட்ட அரங்காலும் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் ஒரு திருப்பத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான காலக்கட்டத்தின் போது இடம் மற்றும் காலத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த காரணிகள் மாறுவதால் யுத்தம் முழுமையும் தழுவியதாயில்லாமல் யுத்தத்தின் வெற்றி அல்லது இழப்பிற்கு இட்டுச்செல்லும் தனிப்பட்ட மோதல்களை மட்டுமே தழுவுகிற செயல்தந்திரமானது ஒரு போர்த்தந்திர காலக்கட்டத்தின் போக்கில் பல தடவைகள் மாறுகிறது. (மாறலாம்). செயல்தந்திரமானது போர்த்தந்திரத்தின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டது. பொதுவாகப் பேசினால் செயல்தந்திர வெற்றிகள் போர்த்தந்திர வெற்றிகளுக்குத் தயார் செய்கிறது.

            செயல்தந்திரத்தின் செயல்பாடானது, போராட்டம் மொத்தத்தில் யுத்தத்தின் வெற்றியில், அதாவது போர்த்தந்திர வெற்றியில் முடிகிற வகையில் மக்கள் திரளைப் போராட்டத்தில் வழி நடத்துவதும் முழக்கங்களை முன்வைப்பதும் மக்கள் திரளைப் புதிய நிலைகளுக்கு இட்டுச் செல்வதுமாகும்.ஆனால் ஒரு செயல்தந்திர வெற்றியானது போர்த்தந்திர வெற்றியைத் தளர்வடையச் செய்கிற அல்லது ஒத்திபோடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்படிப்பட்ட நிலைமைகளில் செயல்தந்திர வெற்றியைக் கண்டு கொள்ளாமல் செல்வது அவசியமாகும்."

மாவோ கூறினார்

"செயல் தந்திரத்தின் சரியான திசை வழிக்கு தோழர் ஸ்டாலின் சுட்டிக்காட்டுவது போல, சூழ்நிலை பற்றிய ஒரு சரியான ஆய்வு (வர்க்க சக்திகளின் உறவுகளைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீடும், இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றிய ஒரு சரியான கணிப்பும்) தேவைப்படுகின்றன; அதைச் சார்ந்து சரியான போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் தேவைப்படுகின்றன. சரியாக தனது எதிரிகளின் முகாமில் உள்ள ஒவ்வொரு பிளவையும் சாதமாக எடுத்துக்கொள்வதும் கூட்டாளிகளைக் கண்டுகொள்ளும் திறமையை எடுத்துக் கொள்வதும் தேவைப்படுகிறது. சிறந்த மாடல்களில் ஒன்று சீனப் புரட்சிகர இயக்கத்திற்கான தோழர் மாசேதுங்கின் திசை வழியாகும்."

(மாவோ - வரலாற்றின் சில பிரச்சனைகளின் மீது தீர்மானம்  தொகுதி 3 பக்கம் 201)

செயல்தந்திரத்தின் சில கோட்பாடுகள் -செயல்தந்திர முழக்கம்

செயல்தந்திரத்தைத் தீர்மானிப்பதற்குச் சூழ்நிலை பற்றிய ஒரு பருண்மையான கணிப்பைப் பெற்றிருப்பது அவசியமாகிறது. சூழ்நிலையானது பின் கண்ட இரண்டு அம்சங்களிலிருந்து கணிக்கப்பட வேண்டும்.

1)         வர்க்கச் சக்திகளின் உறவுகள் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு இது இயக்கத்தின் அரசியல் பணிகளை அல்லது அரசியல் வழிகளைத் தீர்மானிக்கிறது.

2) இயக்கத்தின் அலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் பற்றிய ஒரு சரியான கணிப்பு. இது அரசியல் பணியை அதாவது போராட்ட வடிவங்கள், அமைப்பு வடிவங்கள் போன்றவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கிறது

வர்க்க சக்திகளின் உறவு பற்றிய பிரச்சனை

அரசியல் செயல்தந்திரம் அல்லது கட்சி நடத்தையின் அரசியல் வழியானது வர்க்கங்களின் உறவு பற்றிய மிகச் சரியான புறவயமாக நிரூபிக்கப்படக்கூடிய ஆய்வையும், கொள்கைக்கு ஒரு அறிவியல் பூர்வமான அடிப்படையைக் கொடுப்பதற்கு மிகவும் அவசியமாக அமைகிற ஒவ்வொரு வரலாற்று சூழ்நிலைக்கும் உரிய பருமையான அம்சங்களையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இந்த செயல்தந்திர வழியின் அடிப்படையில் அந்தக் காலக்கட்டத்தின் அரசியல் வழியின் பொதுவான போக்கை வெளிக்காட்டுகிற ஒரு அரசியல் செயல்தந்திர முழக்கம் அங்கிருக்கும். முழக்கங்களின் அடிப்படையில் பிரச்சனையை தெளிவுப்படுத்தும்போது லெனின், "போராட்டத்தைத் தீவிரப்படுத்துதல் என்பது அகவயவாதிகளின் வெறும் வாய்ச்சொல் ஆகும். இவர்கள் பொருளாதார யதார்த்தங்கள், அரசியல் சூழ்நிலை மற்றும் முழக்கங்களின் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு சரியான ஆய்வினால் ஒவ்வொரு முழக்கமும் நியாயப்படுத்தப்படவேண்டும் என்ற மார்க்சியத் தேவையை மறந்து விடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு சூழ்நிலையை ஒருவர் எவ்வாறு ஆராய்கிறார் சூழ்நிலை பற்றிய ஒரு ஆய்விற்காக கீழ்க்கண்டவற்றை நாம் சோதித்து அறியவேண்டும். முதலாவது, சமுதாய அரசியல் வளர்ச்சியின் பொதுவான தன்மைகளின் கோணத்திலிருந்து குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையின் தன்மை. இரண்டாவது, குறிப்பிட்ட கட்டத்தில் நாட்டில் வர்க்கங்களின் அரசியல் குழுச்சேர்க்கை. மூன்றாவது, இச்சூழ்நிலையில் கட்சியின் அடிப்படைப் பணிகளும் அரசியல் குழுச் சேர்க்கைகள் பற்றிய அதனுடைய மனப்பாங்கும், கட்சி அரசியல் நடத்தை வழியையும் அதனால் இயக்கத்தின் அந்தக் கட்டத்திற்கான குறிப்பான அரசியல் செயல்தந்திர முழக்கத்தையும் தீர்மானிப்பதற்கு பின்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அ)       சூழ்நிலை பற்றிய ஆய்வின் அடிப்படையில், வர்க்கச் சக்திகளின் உறவு பற்றிய ஒரு மதிப்பீடு கட்சியால் செய்யப்படவேண்டும்.

ஆ)      இந்தச் சூழ்நிலையில் நிலவுகிற வர்க்கச் சக்திகளின் உறவின் அடிப்படையில் கட்சியின் அடிப்படைப் பணிகளை நாம் தீர்மானிக்க வேண்டும்.

இ)       பிறகு, ஆராயப்பட்ட சூழ்நிலையில் இயக்கத்தின் குறிப்பிட்ட கட்டத்திற்காக கட்சியின் குறிப்பானப் பணிகளைக் கொண்ட ஒரு குறிப்பான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் பொதுவான வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இருக்க வேண்டும். புதிய ஜனநாயகத்திற்கான நமது பொதுவான வேலைத்திட்டமானது ஜனநாயகப் புரட்சிக் காலக்கட்ட முழுமைக்கும் அதாவது பல பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும். ஆனால் இந்த காலக்கட்டத்தில் கட்டத்துக்குக் கட்டம் நிலைமைகள் மாறுகிறது அல்லது மாறிக்கொண்டிருக்கிறது. எனவே, அதற்கேற்ப நாமும் நமது குறிப்பான வேலைத்திட்டத்தை மாற்ற வேண்டியிருப்பது இயற்கையே! நமது குறிப்பான வேலைத்திட்டத்தில் மாற்றங்கள் இருக்கும், ஏனெனில் நமது நண்பர்களும் எதிரிகளும் வெவ்வேறு கட்டங்களில் அப்படியே மாறாமல் இருக்க மாட்டார்கள்.

ஈ)        இயக்கத்தின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தின் போராட்டத்தின் நோக்கங்களை உருவாக்குகிற ஒரு அரசியல் செயல்தந்திர முழக்கம், குறிப்பான வேலைத்திட்டத்தால் வரையறுக்கப்பட்ட திசை வழியில் மக்களை அணி திரட்டும் பொழுது, கட்சியால் முன் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால் இந்த செயல்தந்திர முழக்கத்தை பொதுவான போர்த்தந்திர முழக்கத்திலிருந்து அப்படியே பெற்றுக் கொள்ளமுடியாது. அதற்கு பருண்மையான வரலாற்றுச் சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; புரட்சியின் முழு வளர்ச்சியையும் தொடர்ச்சியாக முன்னேற்றம் முழுவதையும் நாம் கண்டறியவேண்டும்; நமது பணியானது வேலைத்திட்டத்தின் கொள்கைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட முடியாது; மாறாக இயக்கத்தின் முன்னேறுகிற நடவடிக்கைகள் கட்டங்கள் ஆகியவற்றினாலும் தீர்மானிக்கப்படுகிறது. லெனின் கூறியது போல இப்படிப்பட்ட ஒரு ஆய்வு மட்டுமே ஒரு இயங்கு இயல் பொருள் முதல்வாதிக்கு கட்டாயமாகத் தேவைப்படுகிற ஒரு உண்மையான வரலாற்று ஆய்வாகும்.

உ)       வர்க்கச் சக்திகளின் உறவுகளைப் பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையிலும் அதை அடிப்படையாகக் கொண்ட அதனுடைய பணி, வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்சியானது இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அதனுடைய கூட்டாளிகளின் இயல்பை பருண்மையாகவும் குறிப்பாகவும் தீர்மானிக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யும்போதே, ஐக்கிய முன்னணியை பற்றிய ஒரு அடிப்படையான விதியை அதாவது இந்தியச் சமுதாயத்தில் எல்லா வர்க்கங்களிலும் விவசாயி வர்க்கமே தொழிலாளி வர்க்கத்தின் ஒரு உறுதியான கூட்டாளி. நகர்ப்புறக் குட்டி முதலாளிய வர்க்கம் ஒரு நம்பத்தகுந்த கூட்டாளி. தேசிய முதலாளி வர்க்கம் சில காலங்களில் சில எல்லை வரை ஒரு கூட்டாளி என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், எந்தவொரு ஐக்கிய முன்னணியின் அடிப்படையும் தொழிலாளி வர்க்கம் -விவசாயி வர்க்கம் குட்டி முதலாளிய வர்க்கம் என்று அமைய வேண்டும். இது கட்டத்துக்குக் கட்டம் மாறாது. ஐக்கிய முன்னணி பற்றி பேசும்போதெல்லாம், அடிக்கடி, முதலாளிய வர்க்கத்துடனான ஒற்றுமை பற்றி மட்டுமே சிந்திக்கிற ஒரு போக்கு - மேற்கூறிய மூன்று அடிப்படை வர்க்கங்களுடனான இந்த முன்னணியைக் கட்ட வேண்டும் என்ற அவசியத்தை மறுக்கிற ஒரு போக்கு நிலவுகிறது. இயக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் மாறுவது எதுவென்றால், முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாத்திரமேயாகும். எனவே, இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின்போது ஐக்கிய முன்னணியைக் கட்டும்போது, கட்சியானது கீழ்க்கண்டவற்றை மனதில் வைத்துக்கொண்டு தனது பணியைத் தீர்மானிக்க வேண்டும்.

1)         வர்க்க சக்திகளின் உறவைப் பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில் கட்சியானது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முதலாளிய வர்க்கத்தின் எந்தவொரு பிரிவுடனும் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டுவதற்கு அல்லது ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு ஐக்கிய முன்னணி இருந்தால் அதை முறிப்பதற்கு சூழ்நிலைகள் கோருகின்றனவா என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.

2)         கட்சியானது ஊசலாடும் சக்திகளை அல்லது எதிரியுடன் ஒரு சமரசத்திற்குச் செல்கிறவர்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும். அது அவர்களைத் தனிமைப்படுத்தவேண்டும்; அதன் மூலம் அவர்களது பிடியிலிருந்து மக்களை வென்றெடுக்க வேண்டும்.

3)         'ஒவ்வொரு நாட்டின் பொதுவுடமைக் கட்சியும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு பரந்த கூட்டாளியை -அது தற்காலிகமானதாகவும், ஊசலாட்டமுடையதாகவும் நம்பத்தகாத கூட்டாளியாக இருந்தாலும் கூட- பெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்ற - லெனினியக் கோட்பாட்டை அது பின்பற்ற வேண்டும்.

            ஆனால், இந்த கோட்பாடானது நிச்சயமாக வர்க்க சக்திகளின் பருண்மையான மதிப்பீட்டையும் அவற்றின் பாத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாதத் தவறுகளில் முடிவடையக்கூடும். மேலும் ஒரு ஐக்கிய முன்னணிக்குள் நுழையாமலேயே அது ஒரு குறிப்பான பணியின் அடிப்படையில் அல்லது குறிப்பான பிரச்சனைக்காக சில தற்காலிக அல்லது மாறும் கூட்டாளிகளைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமாக அமையலாம்.

4)         முதலாளிய வர்க்கத்தின் எந்தவொரு பிரிவுடனாவது ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டும் அவசியம் இருக்குமேயானால் (செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்), அது சக்திகளை சமூக தளத்தில் முன் நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதிகளால் அதாவது புரட்சியின் இந்தக் கட்டத்தில் சக்திகளின் வர்க்க அணிசேர்க்கையைத் தீர்மானிக்கிற அடிப்படை விதியால் வழிகாட்டப்பட வேண்டும். கட்சி ஒருபோதும் இதிலிருந்து விலகக்கூடாது. இந்த அடிப்படையில் இயக்கத்தின் குறிப்பிட்ட கட்டத்தின் குறிப்பான வேலைத்திட்டத்திற்கேற்ப ஐக்கிய முன்னணி கட்டப்படவேண்டும்.

5)         இறுதியாக பாட்டாளி வர்க்கமானது நாட்டில் எல்லா புரட்சிகர வர்க்கங்களுக்கும் தனது கட்சி மூலம் எவ்வாறு அரசியல் தலைமையைக் கொடுக்கிறது?

            முதலாவதாக வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கேற்ப அடிப்படை அரசியல் போர்த்தந்திர முழக்கங்களை முன் வைப்பதன் மூலமும், வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு பெரிய நிகழ்ச்சி மாற்றத்திற்கும் ஏற்ற அரசியல் செயல்தந்திர முழக்கங்களை முன்வைப்பதன் மூலமும் இந்த அரசியல் முழக்கங்களை யதார்த்தமாக்குவதற்காகச் செயல் முழக்கங்களை முன் வைப்பதன் மூலமும் ஆகும்.

            இரண்டாவதாக பாட்டாளி வர்க்கம் குறிப்பாக அதனுடைய முன்னோடியான பொதுவுடமைக்கட்சியானது, அவற்றைச் செயல்படுத்துவதற்காக நாடு முழுமையுமே இறங்கும்போது குறிப்பான நோக்கத்தை நிறைவேற்றுவதில் தனது எல்லையற்ற ஆர்வம், விசுவாசம் ஆகியவற்றின் மூலமாக ஒரு எடுத்துக்காட்டாகத் தன்னை அமைத்துக்கொள்ளவேண்டும்.

            மூன்றாவதாக, பொதுவுடமைக் கட்சியானது தனது வரையறுக்கப்பட்ட அரசியல் நோக்கத்தை ஒரு போதும் கைவிடாத கொள்கையைப் பின்பற்றும்போதே தனது கூட்டாளிகளுடன் சரியான உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், அவர்களுடனான தனது கூட்டை வளர்க்கவும் உறுதிப்படுத்தவும் செய்யவேண்டும்.

            நான்காவதாக, அது பொதுவுடமைக் கட்சியின் ஊழியர்களை பெருக்க வேண்டும்; தனது தத்துவார்த்த ஒற்றுமையையும் கண்டிப்பான ஒழுக்கத்தையும் பேணவேண்டும்.

இவை எல்லாவற்றையும் செய்வது மூலம் மட்டுமே பொதுவுடமைக் கட்சியானது மக்களுக்கு அரசியல் தலைமை கொடுக்கிறது.

இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றிய மதிப்பீடு

சூழ்நிலை பற்றிய மதிப்பீட்டில் இரண்டாவது அம்சம் இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றிய சரியான மதிப்பீடாகும். தோழர் ஸ்டாலின் பின்வருமாறு கூறியுள்ளார். "போர்த்தந்திரங்கள் என்பவை இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் புரட்சியின் எழுச்சி அல்லது வீழ்ச்சி ஆகியவற்றின் ஒப்பு நோக்கில் குறுகியதான காலக்கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் நடத்தை வழியைத் தீர்மானித்தல் பழைய போராட்ட வடிவங்களுக்குப் பதிலாக புதிய போராட்ட வடிவங்கள் மற்றும் பழைய முழக்கங்களுக்குப் பதிலாக புதிய முழக்கங்களை வைப்பதன் மூலமாகவும் இவை எல்லாவற்றையும் இணைப்பதன் மூலமாகவும் இன்னும் இது போன்றவற்றின் மூலமாகவும், இந்த நடத்தை வழியை நிறைவேற்றுவதற்காகப் போராடுதல் ஆகியவையாகும்". அவர் மேலும் கூறுகிறார். "செயல்தந்திரமானது பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட வடிவங்கள் மற்றும் அமைப்பு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி, அவற்றின் மாற்றங்களுடனும் சேர்க்கையுடனும் கூறுகிறது. புரட்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இயக்கத்தின் அலை ஏற்றம் அல்லது இறக்கம் புரட்சியின் எழுச்சி அல்லது வீழ்ச்சி ஆகியவற்றைப் பொருத்து செயல்தந்திரம் பல தடவைகள் மாறலாம்".

இத்துடன் மாவோவும் பின்வருமாறு கூறுகிறார். செயல்தந்திரத்தின் ஒரு சரியான திசை வழிக்கு சூழ்நிலை பற்றிய ஒரு சரியான ஆய்வு வர்க்க சக்திகளின் உறவு பற்றிய ஒரு மதிப்பீடு இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு ஆகியவை தேவைப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்ட சரியான போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் அதற்குத் தேவைப்படுகின்றன.

செயல்தந்திரத்திற்கு இங்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன:

1)         இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு;

2)         அதை அடிப்படையாகக் கொண்ட சரியான போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும்;

3)         முழக்கங்களும், பழைய முழக்கங்கள் புதிய முழக்கங்களால் அகற்றப்படுதல்

முதல் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட, நேரத்தில் இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் ஆகியவற்றை எவ்வாறு மதிப்பிடுவது என்பதாகும்.

அலை இறக்கம் மிகவும் தாழ்வாக இருக்கும்போது ஒரு புரட்சியின் முத்திரைப் பண்புகள் பின்வருமாறு:

-           ஆளும்வர்க்கம் பரந்துபட்ட மக்களின் மீது நீடிக்கிற அரசியல் உரிமைகள், பொருளாதார நலன்கள், அல்லது வாழ்க்கை நிலை ஆகியவற்றை அவர்களிடமிருந்து பறிப்பதற்காக கொடூரமான ஒடுக்கு முறையை அவிழ்த்துவிடும்; இதற்கு மக்களிடமிருந்து அதிக எதிர்ப்பு இல்லாமல் இருக்கும்.

-           தொழிலாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றிருக்கின்ற பொருளாதார முன்னேற்றங்களையும் ஜனநாயக உரிமைகளையும் முழுமையாக இழப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் பெற்றுத்தந்த எல்லாப் பொருளாதார முன்னேற்றங்களும் தூக்கியெறியப்படும். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தலைவர்களின் எல்லா நடவடிக்கைகளும் ஒடுக்கப்படும். அதன் மூலம் அவர்கள் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாக்கப்படும்; ஆனால் இதற்கு எதிர்ப்பு அதிகம் இருக்காது.

-           ஆளும் வர்க்கங்களும் அவர்களுடைய அரசும் தங்களுடைய ஆட்சியின் தற்காலிக நிலைத்த தன்மையை (ஸ்திரத்தன்மையை) பேணிப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கண்ட முறைகளை மேற்கொள்ள முயற்சிக்கும். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவார்கள். அதாவது வேலைப்பளுவை அதிகரிப்பார்கள். அவர்கள் நெருக்கடிகளின் சுமையை தொழிலாளர்களின் தோள்களில் இறக்கி வைக்க முயற்சிப்பார்கள். லே-ஆப், கதவடைப்பு, ஆட்குறைப்பு போன்றவற்றை மேற்கொள்ள முயற்சிப்பார்கள், தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்கும் பொருட்டு, அவர்கள் அதனுடைய செயல் வீரர்களைப் பலியிடுவார்கள். இவைதான் அலை இறக்கம். மிகத் தாழ்வாக இருக்கும்போது ஒரு புரட்சியின் பண்பாகும்.

-           விவசாய வர்க்கத்தின் நிலைமைகள் இதைவிட மோசமாக இருக்கும். நிலப்பிரபு வர்க்கமும் அவர்களுடைய அரசும் விவசாயிகளின் எல்லா வெளிப்படையான நடவடிக்கைகளையும் பறித்து விடும். அவர்களது தலைவர்களைக் கொல்லும். நிலப்பிரபு வர்க்கத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டங்கள் ஒரு பரந்து பட்ட மக்களின் போராட்டமாக வடிவம் எடுக்கின்ற பகுதிகளில் அரசு இயந்திரம் போலீஸ் மயமாக்கப்படும். அவர்கள் விவசாயிகளின் குடும்பங்களைத் தீ வைத்து கொளுத்துவார்கள். அவர்களது பயிரை அழிப்பார்கள். சாதி மோதல்களை அவிழ்த்து விடுவார்கள். இதன் மூலம் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகள், சமூகங்களைச் சேர்ந்த மக்களை அடக்குவார்கள்... வெள்ளை பயங்கரவாதத்தை மேற்கொள்வதன் மூலம் ஏராளமான மக்களை கிராமங்களிலிருந்து விரட்டியடிப்பார்கள். இதன் விளைவாக விவசாயிகளால் நிறுவப்பட்ட வர்க்க அமைப்புகள் அழிக்கப்பட்டுவிடும். நில வாடகைக் குறைப்பு, கந்து வட்டிக் குறைப்பு கூலி உயர்வு போன்ற அவர்கள் பெற்றிருக்கிற பொருளாதார சலுகைகள் தூக்கியெறியப்படும். அவர்கள் குத்தகை விவசாயிகளை வெளியேற்றவும் முயற்சிப்பார்கள். பல வழிகளில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயற்சிப்பார்கள், விவசாய இயக்கங்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயகச் சூழல் எதுவாக இருப்பினும் அது தடை செய்யப்படும். விவசாயிகள் இயக்கத்தைப் பொருத்த மட்டில் நடுநிலைமையாகவிருந்த அல்லது நட்புக் கொண்டிருந்த இடைமட்ட வர்க்கம் அதற்கு எதிராக மாறலாம். நடுத்தர விவசாய வர்க்கத்தின் ஒரு பிரிவு ஊசலாடலாம். இயக்கம் உயர்ந்த அலை ஏற்றத்தில் இருக்கும் போது இயக்கத்திற்கு வந்தவர்கள், இயக்கத்தின் மீதான இத்தாக்குதல்களைக் கண்டு மக்கள் முகாமிலிருந்து விலகிச் செல்லலாம். அவர்களில் சிலர் எதிரியுடன் கூட சேர்ந்து இயக்கத்தை சீர்குலைப்பார்கள். உணர்வு நிலையின் மட்டமும் அமைப்புகளின் மனத்திடமும் வீழ்ச்சி அடையலாம்.

தொகுத்துக் கூறினால் கீழ்க்கண்டவை தாழ்வான அலை இறக்கத்தின்போது இயக்கத்தின் பண்புகளாக அமைகின்றன.

-           ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசும் மக்களை ஒடுக்குவதற்காக வெள்ளைப் பயங்கரவாதத்தை மேற்கொள்ள முயலுகின்றன. மக்கள் இயக்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒடுக்கும்பொருட்டு மக்களின் மக்கள் திரள் அமைப்புகளைத் தடை செய்கின்றன. அவற்றின் நிலவுகின்ற உரிமைகளைத் தடை செய்கின்றன. முன்னோடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றன. அவற்றின் தலைவர்களைச் சித்திரவதை செய்கின்றன. கொல்லவும் செய்கின்றன. அவை வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி வடிவங்களை மேற்கொள்ள முயலுகின்றன. இங்கும்கூட அதற்கு எதிர்ப்பு மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும்.

-           ஒரு புறம் ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசும் மக்கள் மீது பயங்கர ஆட்சியை அவிழ்த்து விடுகின்றன. அவர்களுடைய மக்கள் திரள் அமைப்புகளை நசுக்குகின்றன. புரட்சியாளர்களைக் கொல்கின்றன. மறுபுறம் தங்களுடைய நெருக்கடி சூழ்ந்த ஆட்சியை நீடிக்க வைக்கும்பொருட்டு, தங்களுடைய சமூக தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் மக்களின் ஒரு சிறு பகுதியினருக்கு சில சில்லரைச் சலுகைகளைக் கொடுக்கின்றன. இடைமட்டப் பிரிவினருக்கு சில ரொட்டித் துண்டுகளை வீசுகின்றன.

-           அரசும் ஆளும் வர்க்கங்களும் நிலைத்த தன்மையைக் (ஸ்திர தன்மையை) கொண்டு வரவும் மக்கள் இயக்கத்தை ஒடுக்கவும் ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த மோதுகின்ற குழுக்களிடையே தற்காலிக ஒற்றுமையைக் கொண்டு வருவதற்குச் சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்.

-           அலை இறக்கக் காலக்கட்டம் முழுமையுமே மக்களிடமிருந்து மிகக்குறைவான எதிர்ப்பே நீடிக்கிறது. இயக்கத்தில் மந்த நிலை நீடிக்கிறது. மக்கள் திரள் அமைப்புகளில் நட்புப் பிரிவினரும் (உடன் பயணம் செய்பவர்கள்) கட்சியின் ஊழியர்களில் சிறு பகுதியினரும் குறிப்பாக இயக்கம் அலை ஏற்றத்தில் இருக்கும்போது இயக்கத்திற்கு வந்த குட்டி முதலாளிய அறிவுஜீவிகளும் கிராமங்களில் உள்ள சில மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் எதிரியின் தாக்குதல்களை சந்திக்கும்போது அதை எதிர்ப்பதற்கு பதிலாக இயக்கத்தை விட்டு பிரிந்து செல்வார்கள். சிலர் எதிரிகளிடம் சரணடையவும் செய்து எதிர்ப்புரட்சியுடன் சேர்ந்து இயக்கத்திற்கு அதிகச் சேதத்தையும் விளைவிப்பார்கள்.

-           எதிரியின் தாக்குதலுக்கு உட்படாமல் விலகி நிற்பதற்கான ஒரு வழிமுறையாக, கட்சி வழியானது ஒரு திருத்தல்வாத திசை வழியில் எடுத்துச் செல்லப்படும் ஒரு பெரிய அபாயமும் உள்ளது. ஒரு பின்னடைவை சாதகமாக எடுத்துக்கொண்டு கட்சியின் ஒரு பகுதியானது ஊழியர்களின் மனத்தளர்ச்சியை பயன்படுத்தி கட்சிவழியை மாற்றி கட்சியையும், இயக்கத்தையும் சட்ட வாதத்தை நோக்கி எடுத்துச்செல்லவும் வர்க்க சமரசப் பாதையில் அவற்றைக் கொண்டு செல்லவும் பெரிய முயற்சிகள் நடக்கும்.

-           தொழிலாளி வர்க்கத்தின் பின்தங்கிய பிரிவினரும் மக்களும் விவசாயி வர்க்கத்தின் பின்தங்கிய பிரிவினரும் உட்பட இயக்கத்தில் நம்பிக்கை இழந்து சோர்வின் காரணமாக இயக்கத்தை விட்டு விலகலாம். அமைப்பும் அரசியல் ரீதியாக பலவீனமடையும். கொஞ்சம் தனது வேகத்தையும் இழக்கலாம். இவை ஒருபுறம் நடைபெறும்போது மறுபுறம் தொடர்ந்து நீடிக்கிற மற்றவர்கள், வர்க்கப் போராட்டத்திலும் உட்கட்சிப் போராட்டத்திலும் நன்கு உறுதிப்படுத்தப்படுவார்கள். இது கட்சியிலுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனைகளையும் கட்சியினுடைய பலவீனத்தையும் களைந்தெறிந்துவிட்டு கட்சியைப் போல்ஷ்விய மயமாக்குவதற்கு ஒரு சரியான நேரமாகும்.

புரட்சி அலை எப்போது உயர்கிறது என்பதை கீழ்க்கண்டவை தீர்மானிக்கின்றன.

-           மக்களின் புரட்சிகர எழுச்சி உணர்வு நிரம்பி வழியும் வேளை, நமது செயல் முழக்கங்கள் மக்களின் இயக்கத்திற்குப் பின் தங்கி நிற்கும் வேளை, மக்களை மிகக் கஷ்டத்துடன் எப்போதும் வெற்றிகரமாக என்று இல்லாமல் நாம் கட்டுப்படுத்தும்வேளை

-           எதிரியின் முகாமில் உறுதியற்ற நிலை, குழப்பம், தொய்வு, சீர்குலைவு ஆகியவை ஒரு உச்சக்கட்டத்தை அடையும்வேளை, எதிரி முகாமிலிருந்து விலகிச் செல்பவர்களும், துரோகிகளும் வேகமாகப் பெருகும் வேளை. நடுநிலையாளர்கள் என்று சொல்லப்படுகிற நகர்ப்புற, கிராமப்புறக் குட்டி முதலாளிய வர்க்கத்தின் மக்கள் திரள் உறுதியாக எதிரியிடமிருந்து விலகி வந்து பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டுக்கு முயலும் வேளை இவை எல்லாவற்றின் விளைவாக எதிரியினுடைய நிர்வாக யந்திரங்களும், ஒடுக்குமுறை யந்திரங்களும் கூட முறையாகச் செயல்படாமல் செயலற்றுப்போகும் வேளை, இவ்வாறு பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தனது உரிமையை செயல்படுத்த, பாதை திறந்துவிடப்படும் வேளை.

            மேற்கண்ட இரண்டு நிகழ்வுப்போக்கும் நடைபெறும்போது ஒரு உயர்ந்த அலை வளரும். ஆனால் இந்தியாவில் சமச்சீரற்ற வளர்ச்சியின் காரணமாக இது நாடு முழுவதும் ஒன்று போல் வளர்வது அபூர்வம் என்றாலும் பொதுவாக குறிப்பிட்ட பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தேசிய இனங்களிடையே வளருகிறது.

-           ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை ஆய்வு செய்யும்போது அகநிலை வாதத்தில் வழுக்கிவிழுந்து விடாமல் இருக்கும் பொருட்டு நாம் ஒரு சூழ்நிலையை எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதற்கான மாவோவின் வழிமுறையையும் அணுகுமுறையையும் கற்கவேண்டும்.

            "மேலோட்டமான புறவெளிப்பாட்டை மட்டுமே பார்க்கிற, தங்கள் முன்னேயுள்ள சாராம்சத்தைப் பார்க்காத தோழர்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவதற்கு உட்படுகிற ஒரு புறவயச் சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக தங்கள் முன்னேயுள்ள செஞ்சேனையில் பணி புரிகின்ற நமது தோழர்கள் போரில் சோர்வு அடையும்போது அல்லது எதிரிப்படையினால் சுற்றி வளைக்கப்படும்போது அல்லது பின் தொடரப்படும்போது தற்காலிகமான, குறிப்பான, குறுகிய சூழலை ஏதோ சீனாவிலும் உலகம் முழுவதிலும் சூழலானது நம்பிக்கை தருவதாக இல்லையென்பது போலவும் புரட்சிக்கான வெற்றி வாய்ப்பு தொலை தூரத்தில் இருப்பது போலவும் பொதுமைப்படுத்தவும், மிகைப்படுத்தவும் செய்கிறார்கள். அவர்கள் பொருள்களை நோக்கும்போது, புறத்தோற்றத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சாரம்சத்தை கைவிடுவதன் காரணம் சூழ்நிலை முழுவதின் சாராம்சம் பற்றி ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வை செய்திருக்கவில்லை என்பதேயாகும். பிரச்சனை என்னவென்றால் சீனாவில் ஒரு புரட்சிகர உயர் அலை இருக்குமா என்பதை ஒரு புரட்சிகர அலை எழுச்சிக்கு இட்டுச் செல்கிற முரண்பாடுகள் உண்மையில் வளர்ந்துள்ளனவா என்பதைக் கண்டுகொள்ள ஒரு விரிவான ஆய்வைச் செய்வதன் மூலமே தீர்மானிக்க முடியும்."

இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் பற்றிய ஒரு தவறான கணிப்பினால் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுள் ஒரு விலகல் எவ்வாறு ஏற்படுகிறது? ஒரு தவறான கணிப்பு கட்சி நடத்தையின் அரசியல் வழியில் எவ்வாறு பாதிப்பைச் செலுத்துகிறது? ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தில் வலது அல்லது இடது விலகல் இரண்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்தின் சூழ்நிலை பற்றிய தவறான தன்னிலை வாதக் கணிப்பிலிருந்தே வருகின்றன. அதாவது வர்க்க சக்திகளின் உறவு பற்றிய தவறான மதிப்பீடு, இயக்கத்தின் அலை ஏற்ற இறக்கம் பற்றிய தவறான முடிவு ஆகியவற்றிலிருந்தே வருகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்க்க சக்திகளின் உறவு பற்றிக் கணிக்கும்போது, முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாத்திரம் புரட்சிக்கு எதிராக இருக்கும்போதே, அப்பிரிவை ஒரு கூட்டாளியாகக் கருதும் முடிவுக்கு ஒருவர் வந்தால் இது ஒரு வலது விலகலாகும்; அதுபோலவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்க்க சக்திகளின் உறவைக் கணிக்கும்போது முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவு எதிரிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விரும்பும்போது நாம் அதனுடன் கூட்டுச் சேராவிட்டால் அது ஒரு இடது விலகலாகும்.

அதுபோலவே இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றி நாம் சரியாக கணிக்கவில்லையென்றால் நாம் வலது அல்லது இடதுக்கு ஊஞ்சலாடுவோம். ஒரு புரட்சிகர உயர் அலை இருந்து அதை நாம் அலை இறக்கமாக மதிப்பிட்டால் நாம் ஒரு தற்காப்புச் செயல்தந்திரத்தை மேற்கொள்வோம். இது ஒரு வலது விலகல் அல்லது திருத்தல்வாதத்தில் முடிகிறது. சூழ்நிலை அலை இறக்கமாக இருந்து அதை நாம் அலை ஏற்றமாக கருதி அதனால் நாம் தாக்குதல் செயல்தந்திரத்தை மேற்கொண்டால் அது ஒரு இடது விலகலுக்கு இட்டுச் செல்கிறது. இதைவிட மோசமானது என்னவென்றால் செயல்தந்திரத்தைத் தீர்மானிப்பதில் இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றிய பிரச்சனை கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழ்நிலை தொடர்ந்து உயர் அலை நிலையிலே நிலைத்து நிற்பதாக புரட்சியானது எல்லா முனைகளிலும் நிலவுவதாகத் தொடர்ந்து பார்க்கிற ஒரு போக்கு பொதுவாக எம்.எல் (மார்க்சிய - லெனினிய) இயக்கத்தில் நீடித்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை தவறானது. மேலும், வேறு சில நேரங்களில் செயல்தந்திரத்தைத் தீர்மானிக்கும்போது அலை ஏற்ற இறக்கம் பற்றி ஆராயமலேயே இருக்கிற ஒரு போக்கு நம்மிடையே நிலவுகிறது. வர்க்க சக்திகளைக் கணிப்பதற்கும், இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றி முடிவு எடுப்பதற்கும் கவனமே கொடுக்கப்படவில்லையென்றால், உருவாக்கப்படுகிற அரசியல் வழியானது அரசியல் நோக்கங்களைச் சரியாக கணிக்கவோ அல்லது போராட்ட வடிவங்களைச் சரியாகத் தீர்மானிக்கவோ, செய்யாது - இது தன்னெழுச்சிவாதத்திற்கு இட்டுச் செல்லும். (இட்டுச் சென்றிருக்கிறது), சந்தர்ப்பவாதத்தில் முடியும்.

செயல்தந்திரமானது இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் ஆகியவற்றிற்கேற்ப மாறும். புரட்சி அலை உயரும்போது இயக்கம் முன்னே செல்லும். அப்போது கட்சியானது தாக்குதல் செயல்தந்திரத்தைப் பின்பற்றும். புரட்சிகர இயக்கம் பின்தங்கியிருக்கும்போது புரட்சி அலை இறக்கத்தில் இருக்கிறது. கட்சி பின்வாங்கும் செயல்தந்திரத்தை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படும். நமது நாட்டின் திருத்தல்வாதிகளும், "இடதுகளும்" ஒரு போதும் சூழ்நிலையிலுள்ள மாற்றத்தை இயக்கத்தின் வளர்ச்சியில் உள்ள ஏற்ற இறக்கங்களை அங்கீகரிப்பதே கிடையாது. இதைத் திருத்தல்வாதிகள் தங்களுடைய அரசியல் நடத்தை வழியை தீர்மானிப்பதில் போலிப் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் பொருட்டும், தங்களது பாராளுமன்ற வாதத்தை நியாயப்படுத்தும் பொருட்டும் கவனத்தில் - கொள்ள மறுக்கிறார்கள். மறுபுறம் மற்றவர்கள் அலை ஏற்றம் இறக்க பிரச்சனையில் குருட்டுத்தனமாக இருக்கிறார்கள். தத்துவார்த்தரீதியில் போர்க்குணம்மிக்க பொருளாதாரவாதத்தில் கசிந்தார்கள். ஆங்காங்கே சில தனித்தனி ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்துடன் திருப்தி அடைந்து கொண்டார்கள்.

இந்தியா போன்ற ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் என்ற ஒன்றே இல்லை என்ற கருத்தை சில தோழர்கள் கொண்டுள்ளனர். சூழ்நிலை பற்றிய அப்படிப்பட்ட ஒரு கணிப்பு முறையை ஏற்றுக்கொள்வதும் அதன் காரணமாக இயக்கம் அலை ஏற்றத்தில் இருப்பதாக ஒரு முடிவுக்கு வருவதும் பாராளுமன்றவாதத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் இட்டுச் செல்லலாம் என்ற ஒரு நேர்மையான பயத்தினால் அவர்கள் அப்படிப்பட்ட கணிப்புகளுக்கான அவசியத்தை மறுக்கிறார்கள். பாராளுமன்ற நிறுவனங்களுக்கான தேர்தல்களில் பங்கெடுக்கவா அல்லது புறக்கணிக்கவா என்பதை தீர்மானிக்க மட்டுமே இயக்கத்தின் அலை ஏற்றம் இறக்கம் பற்றிய கணிப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் இருக்கிறார்கள். இது தவறானது.

இந்தியாவில் நமது ஜனநாயகப் புரட்சியின் எந்தவொரு கட்டத்திலும் பின்பற்றப்படுகின்ற செயல்தந்திரத்தின் பண்பு எதுவாக இருந்தாலும் அது தாக்குதல் செயல்தந்திரமாகவோ அல்லது தற்காப்புச் செயல்தந்திரமாகவோ இருந்தாலும் இரண்டிலுமே தேர்தல்களைப் புறக்கணிக்கிற செயல்தந்திரத்தையே கட்சி பின்பற்ற வேண்டும். இதற்கு காரணம் போராட்ட வடிவங்கள் இறுதியில் இந்தியாவின் நீண்ட மக்கள் யுத்தத்திற்கே உரிய கூறுகளையும் ராணுவ அரசியல் போர்த்தந்திரங்களையும் சார்ந்துள்ளன. அவற்றால் வழிகாட்டப்படுகின்றன. செயல்தந்திரம் அல்லது போராட்ட வடிவத்தில் உள்ள எந்தவொரு உடனடி மாற்றமும் நமது அடிப்படையான போர்த்தந்திரத்திலிருந்தும் நமது பாதையிலிருந்தும் அதாவது நீண்ட மக்கள் யுத்தத்திலிருந்தும் விலகக்கூடாது.

மற்றொரு இறுதியான உண்மையென்னவென்றால் அரை நிலப்பிரபுத்துவ அரைக்காலனிய இந்தியாவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி சமச்சீரற்றதாகவிருப்பதால் அதனுடைய புரட்சியின் வளர்ச்சியும் சமச்சீரற்றதாகவே இருக்கிறது.எனவே இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கமும் இந்தியாவில் சமச்சீரற்றதாகவே இருக்கிறது. ஒரே நேரத்தில் சில பகுதிகள் அலை இறக்கத்திலும் பிறபகுதிகள் அலை ஏற்றத்திலும் இருக்கலாம். எனவே, மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்தந்திரத்தின் பண்பும் போராட்ட வடிவங்களும் இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நிலவுகிற இயக்கத்தின் அலை ஏற்றம், இறக்கம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைப் பொருத்து இடத்திற்கு இடம், வேறுபடும். மாநிலங்களுக்கு இடையிலேயும் அலை ஏற்றம், இறக்கம் வேறுபடலாம். ஒரு மாநிலத்திற்குள்ளேயே ஒரு பகுதியில் இயக்கம் அலை இறக்கத்தில் இருக்கலாம். பிறபகுதியில் ஏற்றத்தில் இருக்கலாம். இந்தச் சமச்சீரற்ற தன்மைதான், முதலாளித்துவ நாடுகளில் ஒரு நாடு தழுவிய உயர் அலைக்காக காத்துக்கொண்டிருப்பது போல் இல்லாமல், ஒரு இயக்கம் ஒரு பகுதியில் வளர்ந்து இறுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெடிக்க அனுமதிக்கிறது.

ஆனால் இதற்கு நாட்டின், எல்லாப் பகுதிகளிலும் அரசியல் பணிகளும் குறிப்பான வேலைத்திட்டமும் அடிப்படைச் செயல்தந்திர முழக்கங்களும் பொதுவானவை இல்லை என்று பொருள் கிடையாது. நிச்சயமாக அவை பொதுவானவைதான். நாடு முழுவதும் போர்த்தந்திர முழக்கங்களும் மையமான செயல்தந்திர முழக்கங்களும் ஒன்றுதான். செயல்தந்திரத்தின் தன்மை மட்டுமே வேறுபடும். அதாவது பிரதான போராட்ட வடிவமும் அடிப்படை முழக்கங்களைச் செயல்படுத்தும் கட்டமும் வேறுபடும். ஒரு பகுதியில் அவை பிரச்சார முழக்கம் என்ற நிலையில் இருக்கலாம். மற்றொரு பகுதியில் கிளர்ச்சி முழக்கங்களாக இருக்கலாம். மூன்றாவது பகுதியில் அது நடவடிக்கை அல்லது செயலுக்கான ஒரு அறைகூவலாக அமையலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய பருமையான செயல் முழக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இயக்கத்தின் வளர்ச்சி, மக்களின் உணர்வுநிலை ஆகியவற்றைப் பொறுத்து, பகுதிக்குப் பகுதி வேறுபடலாம். ஆனால் எல்லாச் செயல் முழக்கங்களும் மையமான அரசியல் முழக்கங்களுக்கே சேவை செய்யும்.

இ) திட்டம் பற்றிய 1988 சிறப்புக்கூட்ட தீர்மானம்

1970 திட்டம் அடிப்படையில் சரி என்ற நிலைப்பாட்டிலிருந்து செயல்தந்திரம் வகுத்துக்கொண்டு செயல்பட்டு திட்டப் பிரச்சினையைத் தீர்ப்பது என்று 1988 சிறப்புக்கூட்டம் பின்வருமாறு தீர்மானித்தது:

1).        நமது தற்போதைய (1970 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட) வேலைத்திட்டம் அடிப்படையில் சரியானதென்ற நோக்கிலிருந்து மை.கு. பெரும்பான்மையினரால் முன் வைக்கப்பட்டு மா.கு. ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ள நகல் அரசியல் தீர்மானத்தை உரிய விதத்தில் அமைப்பு ஏற்றுக்கொண்டபின் அமைப்பிற்கு ஓர் சமூக ஜனநாயக நடைமுறையை வகுத்து நம் குழுவை புனரமைத்தல்

2).        1970 வேலைத்திட்டம் அடிப்படையில் சரியானது என்பதை பற்றி கருத்து வித்தியாசம் இருப்பினும், திட்டம் அடிப்படையில் சரியானது என்ற மதிப்பீட்டிலிருந்து வகுக்கப்படும் செயல்தந்திரத்தை ஏற்று, அதை நடைமுறைப்படுத்திக்கொண்டே திட்டப் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருப்பதால் அமைப்புத் துறையில் பின்வரும் கோட்பாட்டை முன்வைக்கிறது.

அரசியல் மையப்படுத்தும் அளவிற்கு அமைப்பையும் மையப்படுத்துதல், அதாவது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற செயல்தந்திரத் தீர்மானத்தின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்களது உரிமை, கடமை வரையறுக்கப்படும். இதன் பொருள் அத்தீர்மானம் நம் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டபின் உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை செயல்படுத்திக்கொண்டே அதன் மீது மாற்றுக்கருத்து இருப்பின் முறையாக உட்கட்சிப் போராட்ட வழிமுறைகளில் விவாதத்திற்கு உட்படுத்தலாம்.

மேற்கண்டவாறு 1970 திட்டம் அடிப்படையில் சரி என்ற நிலைப்பாட்டிலிருந்தும், மையக் குழு பெரும்பான்மையினரால் முன்வைக்கப்பட்ட போர்த்தந்திர செயல்தந்திர ஆவணங்களின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் செயல்தந்திரங்கள் வகுத்து செயல்படுவது திட்டப் பிரச்சினையை முறையாக வைத்து அங்கீகாரம் பெறுவது என்று சிறப்புக்கூட்டத் தீர்மானம் முடிவு செய்தது. இவையனைத்தையும் மூடிமறைத்துவிட்டு போல்ஷ்விக் கட்சிக்குத் திட்டம் இல்லை, கொள்கை நிலைப்பாடு இல்லை என்று பேசுவது மோசடித்தனமேயாகும்.

=======================================

 

5. திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் உருவாக்குவதில்
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

 

1.         1970 ஆண்டுத் திட்டம் இந்திய சமூக அமைப்புப் பற்றி அரைக்காலனி, அரைநிலப்பிரபுத்துவம் என வரையறை செய்கிறது. ஆனால் திட்டத்தின் 11வது பிரிவில் இந்தியா புதியகாலனியாக மாறிவிட்டது என்பதை பின்வருமாறு கூறுகிறது.

பிரிவு 11-ல் கூறுவதாவது:

"....இவ்வாறு இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் புதிய காலனியாக மாறியது...."

அதே சமயம் திட்டத்தின் 25- வது பிரிவு கூறுவதாவது:

"இந்த கசப்பான உண்மைகள்,இந்தியாவின் அரை நிலப்பிரபுத்துவத் தன்மையை மட்டுமின்றி அரைக்காலனியத் தன்மையையும் மறுப்பதற்கு இடமின்றி மெய்ப்பிக்கின்றன."என்று வரையறை செய்கிறது.

இவ்வாறு இந்தியா ஒரு அரைக்காலனி நாடு, புதியகாலனி நாடு என்ற வாதத்தை ஒரே படித்தான நிலைப்பாடாக முன்வைப்பது மார்க்சியத்திற்கு உடன்பாடான ஒன்றல்ல. இவ்வாறு இரட்டை நிலைப்பாடாக பேசுவது புறநிலை அம்சத்தை சரியாக வெளிப்படுத்துவது ஆகாது. எனவேதான் காலனியம், அரைக்காலனியம், புதியகாலனியம் மற்றும் மறுகாலனியம் குறித்து ஆய்வு செய்து இந்திய சமூக பொருளாதார படிவத்தை வரையறை செய்து முன்வைப்பது அவசியம் என கருதுகிறோம்.

-           இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு புறநிலையில் ஏகாதிபத்தியத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்வதன் அடிப்படையில் திட்டம் திருத்தப்படுவது தவிர்க்க இயலாததாகும்.

-           இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அதாவது:

1)         அட்லாண்டிக் சாசனம்,

2)         மார்ஷல் திட்டம்,

3)         பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகள்,

4)         அமெரிக்காவின் தலைமையிலான பல்வேறு இராணுவக் கூட்டுகள் மற்றும் பிற பல்வேறு மாற்றங்களை கணக்கிலெடுத்துக்கொண்டு புதிய காலனியம் பற்றிய வரையறையைச் செய்யவேண்டும் என்பது தவிர்க்க இயலாததாகும்.

மேலும் புதிய காலனியம் பற்றி தோழர் மாவோ வரையறைகளைக் கொடுத்திருந்த போதிலும், அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய புதியகாலனியம் பற்றிய அடிப்படையான வழிகாட்டுதலாகும். அது புதிய காலனியம் பற்றிய வரையறைகளை கொடுத்திருந்த போதிலும், புதிய காலனியம் பற்றிய ஆய்வுகள் மேலும் தொடராமல் விடப்பட்டுவிட்டது. எனவே இன்றைய தேவையை அது நிறைவேற்றவில்லை.

2)         இரண்டாம் உலகப் போரின் காலத்தில் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியங்களை மீட்பதற்காக முன்வைக்கப்பட்ட கீன்சியத் தத்துவமும் பொருளாதாரக் கொள்கைகளும் 1970களில் படுதோல்வி அடைந்தன. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி பெருமளவில் வெடித்தது. அத்துடன் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ மீட்சிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்க சக்தியாக வளர்ந்து புதிய தாராளக் கொள்கைகளை - புதியகாலனியக் கொள்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது. இத்தகைய சூழலில் உலகின் அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சர்வதேச சூழலில், இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் கொண்டு போர்த்தந்திர செயல்தந்திர திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

3)         பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன நலன்களிலிருந்து உலக அளவில் வேளாண் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இத்தகைய போக்குகள் இந்தியாவின் வேளாண் துறையிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய விவசாயப் புரட்சித் திட்டத்தில் மாற்றத்தைக் கோருகிறது. எனவே இது குறித்த ஆய்வின் மூலம் ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இவ்வாறு இந்தியப் புரட்சிக்கான 70 ஆம் ஆண்டு திட்டத்தில் மாற்றத்தை செய்வதன் மூலம்தான் திட்டப் பிரச்சினையை முழுமையாக தீர்க்கமுடியும்.

 இ.க.க (மா.லெ) மக்கள்யுத்தம்-போல்ஷ்விக்

நவம்பர்-2015

=======================================

 

பிற்குறிப்பு

 

1 நாகிரெட்டி வழி.

அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு 1969-பிப்ரவரியில் நாகிரெட்டி குழு தனியாகக் கூடியது. தங்களை அகில இந்திய ஒருங்கிணப்புக் குழுவிலிருந்து நீக்கி கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் ஒற்றுமையை உடைப்பது என்பது மக்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்குக் குந்தகம் விளைவிப்பது என்று கண்டனம் செய்தது. மீண்டும் ஏப்ரல் 10-12 ஆகிய தேதிகளில் கூடிய நாகிரெட்டி குழு ஒரு "உடனடி வேலைத் திட்டத்தை" வெளியிட்டது. அந்தத் திட்டம் இந்திய அரசாங்கம் தரகுமுதலாளித்துவ வர்க்கங்களால் ஆளப்படும் ஒரு அதிகாரவர்க்க ஆட்சிமுறை என்று கூறியது. அது புதிய ஜனநாயகப் புரட்சி அரசாங்கம் அமைக்க வேண்டியத் திட்டத்தை வெளியிட்டது. கிராமங்களை விடுதலை செய்து நகரங்களை சுற்றிவளைத்து படிப்படியாக விடுதலை செய்வதற்கான ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆந்திரப் பிரதேசம் பற்றிப் பேசும்போது உடனடித் திட்டம் கூறுவதாவது:

சிறீகாகுளம் பகுதியில் "மக்கள் இயக்கம் ஆயுதப் போராட்ட மட்டத்தை அடைந்துள்ளது" அதே சமயம் வாரங்கல், கம்மம் மாவட்ட வனப்பகுதிகளில் மக்களின் இயக்கம் பொதுவாக "சட்ட எல்லைகளை மீறியுள்ளது". நில மறு வினியோகம் பற்றிய பிரச்சினையை "உடனடிப் பிரச்சினையாக" வலியுறுத்தி பின்வருமாறு எச்சரிக்கை செய்கிறது.

"நாம் நம்முடைய விவசாயப் புரட்சித் திட்டத்தை (நில மறு வினியோகம்) இந்தப் போராட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிப்போமானால் அரசாங்கத்திடமிருந்து அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும். நமது தற்காப்புப் போராட்டமும் தீவிரமாகும்" என்று கூறுகிறது.

இங்குத்தான் நாகிரெட்டி குழு சாருமஜும்தாரின் மூலவுத்தியிலிருந்து (Strategy) மாறுபடுகிறது. சாருமஜும்தார் வர்க்க எதிரிகளுக்கு எதிராக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தினார். அதையே முதன்மையான திட்டமாக முன்வைத்தார். இதன்படி வர்க்க எதிரிகளை அழித்தொழித்த பண்புதான் நிலச் சீர்திருத்தம் செய்வது என்பதாகும்.

மறு புறம் நாகிரெட்டியின் உடனடித் திட்டம் விவசாயச் சீர்திருத்தத்தையும், நில மறு வினியோகத்தையும் முதன்மையாக வலியுறுத்துகிறது.அரசாங்கத்தையும் போலீசையும் எதிர்ப்பதை பின்னால் வைக்கிறது. நாகிரெட்டி பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது பின்வருமாறு கூறினார். "எங்களைப் பொறுத்தவரை இது ஒரு தற்காப்புக்கானதே. அவர்களுக்கு (சாருமஜும்தார் அமைப்பினருக்கு) இது ஒரு தாக்குதல் தந்திரம்" என்று கூறினார். ஆக நாகிரெட்டி நிலத்திற்கான, நில மறுபங்கீட்டிற்கான போராட்டத்தின் மூலம் தற்காப்பிற்கான ஆயுதப் போராட்டம் பற்றிதான் பேசுகிறார். அதாவது நிலத்திற்கான ஆயுதப் போராட்டம்தான், அரசியலதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டமல்ல. ஆக நாகிரெட்டியின் நிலைப்பாடும் கனுசன்யாலின் நிலைப்பாட்டைப் போலவே சுத்தப் பொருளாதாரவாதத் தன்னியல்பேயாகும். எனவேதான் கனுசன்யால் ஆரம்பம் முதல் நாகிரெட்டியுடன் நெருக்கமாக இருந்துவந்தார்.

2. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை சுருக்கமாக பின்வருவனவாகும்:

1)         சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி இடது சாகசத்தையும், வலதுதிரிபையும் எதிர்த்துப் போராடுவதன் மூலமே வளர்ந்து முன்னேறியது.

2)         சீனப் புரட்சி (அ) கட்சி, (ஆ) மக்கள் படை, (இ) ஐக்கிய முன்னணி என்ற மூன்று மந்திரக்கோல் மூலமே வெற்றியடைந்தது.

3) ஒரு கட்சியின் தலைவரையே மற்றொரு நாட்டுக் கட்சியின் தலைவராக ஏற்பது பாட்டாளி வர்க்கத்தின் தேசிய உணர்வை புண்படுத்துவதாகும்.

4) தளப்பிரதேசம் அமைத்தப் பிறகுதான் ஐக்கிய முன்னணி என்ற உங்களது கருத்து தவறானது. ஐக்கிய முன்னணி குறித்த உங்கள் கருத்து எந்திர ரீதியானது.

5)         வெளிப்படையான தொழிற்சங்கம், வெகுஜன அமைப்புகள், வெகுஜன இயக்கங்கள் காலங்கடந்தவை என்றும், இரகசியக் கொலைகள் புரிவதையே ஒரே வழியாகக் கொண்டுள்ளதை மறுபரிசீலனை செய்யவேண்டும். அழித்தொழிப்பு என்பதை எங்கள் தலைவர் குறிப்பிட்டதை போல் அழித்தொழிப்பு யுத்தம் என்றே நாங்கள் முதலில் கருதினோம். பின்னர்தான் அது இரகசியக் கொலை என்பதை தெரிந்துகொண்டோம்.

6)         லின்பியோவின் மக்கள் யுத்தக் கோட்பாடுகளை எந்திரகதியாக புரிந்துள்ளீர்கள். லின்பியோவின் கொரில்லா கோட்பாடு இராணுவ நடவடிக்கைகளுக்கானது. இராணுவ கோட்பாடுகளுக்கும் அரசியல் அமைப்புப் பிரச்சினைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

7) வர்க்க எதிரியின் இரத்தத்தில் கை தோய்க்காதவர் எவரும் கம்யூனிஸ்ட் இல்லை என்பதை அளவுகோலாய் வைத்தால் அந்தக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்காது.

8)         விவசாயப் புரட்சிக்கும், அரசியலதிகாரத்தை கைப்பற்றுவதற்கான திட்டத்திற்குப் பதில் நிலப்பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டது. விவசாயப் புரட்சித் திட்டம் இல்லை.

9)         வெகுஜனப் போராட்டமும், வெகுஜன அமைப்புகளும் இல்லாமல் விவசாயிகளின் ஆயுதப் போராட்டம் நீடித்து தாக்குப்பிடிக்காது.

10)       ஒரு தலைவரின் செல்வாக்கும், தலைமைக்கான வாரிசு உரிமையும் உருவாக்க முடியாது. அது தானாகவே வருவது.

11)       இ.க.க. (மா.லெ.)யின் பொது நோக்கம் சரியானது அதன் கொள்கைகள் தவறானது.

 

-         -  ஏஎம்கே
2015

அச்சு நூலாகபெற : கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

தொடர்பு கொள்ளவும் - +91 9095365292