ஆப்ரேசன் சிந்தூர் யாருக்கானது??

சமரன் சிறப்புக் கட்டுரை

ஆப்ரேசன் சிந்தூர் யாருக்கானது??

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் (IOK) பகுதியில் உள்ள பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22 அன்று நடத்தபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இது பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கை என்று கூறிய மோடி கும்பல், மே 7 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் மீது ஆப்ரேசன் சிந்தூர் எனும் இராணுவ பயங்கரவாதத்தை ஏவியது. பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்துவிட்டதாக வழக்கம் போல பொய்மூட்டைகளை ஊடகங்கள் வாயிலாக அவிழ்த்துவிட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானும் இந்தியா, காஷ்மீர் மீது இராணுவ ரீதியான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. போரில் இரு நாடுகளும் தாங்கள்தான் வெற்றிபெற்றோம் என கூறிக்கொண்ட கேலிக்கூத்துகளும் அரங்கேறின. பிறகு, பாசிசக் கோமாளி டிரம்ப் தான் ஒற்றை ஆளாக இப்போரை தடுத்து நிறுத்தியதாக - அதுவும் போரை நிறுத்தாவிடில் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவோம் என சொன்னதால் மோடி போரை நிறுத்தியதாக கூறி, ஊதிப்பெருக்கப்பட்ட "மோடி பலூனில்" ஓட்டையைப் போட்டு புஸ்வானமாக்கினார். 

உண்மையில் இந்த போர் அல்லது இராணுவ நடவடிக்கைகள் யாருக்கானது?

பஹல்காம் தாக்குதல் 

பஹல்காமில் நடத்தப்பட்டது நிஜமான தாக்குதலா?? இல்லை மோடி கும்பலின் / பாகிஸ்தானின் ஏற்பாடா?? என உறுதியாக தெரியவில்லை. காரணம்

  1. தாக்குதல் நடந்த 2 நாட்களுக்கு முன்பு, மோடி தனது காஷ்மீர் பயணத்தை இரத்து செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். 
  2. பஹல்காம் பகுதியானது, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இருந்து (LOC) 200-300 கி.மீ தொலைவில் உள்ளது. தீவிரவாதிகள் 200-300 கி.மீ கடந்து வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்; தாக்குதல் நடத்திய அன்று அவ்வாறே வந்து தாக்குதல் நடத்தி, மீண்டும் அதே தூரம் கடந்து பாகிஸ்தான் சென்றுள்ளார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. மோடி கும்பலின் உளவுத்துறை என்ன கிழித்துக் கொண்டிருந்தது?? என தெரியவில்லை. 
  3. இத்தாக்குதலுக்கு முதலில் பொறுப்பேற்பதாக எக்ஸ் தளத்தில் அறிவித்த (TRF - The Resistance Force) எனும் அமைப்பு, பிற்பாடு தான் தாக்குதல் நடத்தவில்லை என அறிவித்தது. 

இக் காரணங்களால் இது பயங்கரவாத தாக்குதலா அல்லது இந்திய / பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களின் ஏற்பாடா என்பதே ஆய்வுக்குரியதாக உள்ளது.

ஆனால் எவ்வித ஆதாராமும் இல்லாமல் இத்தாக்குதலை பாகிஸ்தானின் இசுலாமிய பயங்கரவாத தாக்குதல் என உருவகித்து, தேசிய வெறியூட்டி ஆப்ரேசன சிந்தூரை ஏவியது மோடி கும்பல். போர்! ஆமாம் போர்! இது தேசபக்த போர்! என காங்கிரசு, திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகளும் (கிட்டத்தட்ட இந்தியா கூட்டணி முழுக்க) பாஜகவின் இந்துமதவாத தேசியவெறியை ஆதாரமாக கொண்ட ஆப்ரேசன் சிந்தூரை வெட்கமே இல்லாமல் ஆதரித்தன.

ஆப்ரேசன் சிந்தூர்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாக.. மோடி அரசு மே 6 அன்று ஆபரேசன் சிந்தூர் எனும் இராணுவ பயங்கரவாத நடவடிக்கையை ஏவியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மீது 9 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்த 9 இடங்களும் பயங்கரவாத முகாம்கள் எனவும், பயங்கரவாதத்தை ஒரே நாளில் அழித்துவிட்டதாகவும் அறிவித்தது. அதை அப்படியே மோடியின் ஊடகங்களும் பாராளுமன்றவாத கட்சிகள் அனைத்தும் விதிவிலக்கில்லாமல் வாந்தி எடுத்தன. இந்திய இறையாண்மை, தேசபக்தி என மக்களுக்கு பாடம் எடுத்தன. 

சரி. பயங்கரவாதம் மீதான துல்லிய தாக்குதல் என கொண்டாலும், மோடி கும்பல் பயங்கரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தியதா?? என்றால் அதுவும் இல்லை. 

இது பற்றி - முன்னாள் இராணுவ அதிகாரியும் Force எனும் இணையதளத்தின் ஆசிரியருமான பிரவின் சோனி (Pravin Sawhney) என்பவர், Wire யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதிரவைக்கும் உண்மைகளை போட்டுடைத்தார். அந்த வீடீயோவை நீக்கி, கீவீக்ஷீமீ தளத்தையும் மோடி கும்பல் முடக்கியது மட்டுமின்றி அவரையும் மிரட்டியது. 

அதில் அவர் கூறியதாவது

"மோடி அரசு, உண்மையில் ஏவுதளம் அல்லது இயங்குதளம் (Launch Pads) எனப்படும் தற்காலிக கூடாரங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தியதே ஒழிய, நிரந்தர முகாம்கள் மீதல்ல. அவையும் பொருத்தமற்ற இலக்குகளே (UnsuitableTargets). இந்திய இராணுவத்தின் இலக்கானது - இராணுவமல்லாத இலக்குகளைத்தான் குறிவைத்தது. இந்திய விண்வெளி படை தேவையான நவீன தரத்திற்கு குறைவான (Sub optimal usage of air force) அளவில்தான் பயன்படுத்தப்பட்டது. ஆகவே சிந்தூர் நடவடிக்கை 'ஆப்ரேசன் பண்ட் (Bund)' போலவே நிச்சயம் தோல்வி அடையும்" என்றார்.

மோடி கும்பல் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில் பயன்படுத்திய போர் விமானங்களில், 3 ரஃபேல் விமானங்கள், ஒரு MIG 29 போர் விமானம், ஒரு Su 30 விமானம் என மொத்தம் 5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஃபேல் பிரான்சு நாட்டையும், மீதி இரு வகை விமானங்களும் ரசிய நாட்டையும் சேர்ந்த விமானங்களாகும். இந்த தோல்வி நான் எதிர்பார்த்த ஒன்றுதான், சீனாவின் வலிமையையும், சீன ஆதரவு பாகிஸ்தானின் வலிமையையும் மோடி ஆட்சி குறைவாக எடைபோட்டதே அதன் காரணம் என்கிறார் பிரவின்.

சீனாவின் நவீன தொழில்நுட்ப உதவியுடன் வளரும் பாகிஸ்தான் இராணுவம்

பாகிஸ்தான் சீனாவின் புதிய காலனியாக நீடித்து வருகிறது. அதன் அனைத்து துறைகளிலும் சீன நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை ஆகஸ்ட் 2020 முதல், சீனாவின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணிணியாக்க (Computing) துறைகளில் பாதுகாப்பு மையத்தை உருவாக்கிவருகிறது. அதன் மூலம் பாகிஸ்தான் அறிதிறன் மின்னணு போர்முறைகளை (Cognitive Electronic Warfare) உருவாக்கியுள்ளது. இந்த போர்முறைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளதால், இந்த இணைப்பு வடிவமானது, மிகவும் ஆபத்தான, மிகவும் வலிமைமிக்க இராணுவமாக பாகிஸ்தான் இராணுவத்தை மாற்றியுள்ளது. 

பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை ஆயுதங்கள் 80% சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் மீதி 20% ஆயுதமும் சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டதே ஆகும்.

அத்தகைய AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட சீனாவின் PL15 ஏவுகணை உடனான J10C போர்விமானம் எனும் மிக ஆபத்தான காம்பினேஷன் (Deadly Combination) மூலமாகவே இந்தியா பயன்படுத்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து J10C மற்றும் PL15 இரண்டையும் தயாரித்த சீனாவின் AVIC Chengdu Aircraft எனும் கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்குகள் 40% வரை கிடுகிடுவென உயர்ந்தன. அதே சமயம் ரஃபேலை தயாரித்த பிரான்சின் டெசோல் ஏவியேசன் (Desol Aviation) எனும் கார்ப்பரேட் நிறுவனம் மற்றும் ரசிய போர் விமானங்களை தயாரித்த நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. 

இந்தியா பயன்படுத்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய சீனாவின் இந்த வெற்றியானது, மேற்கத்திய இராணுவ சந்தையை நெருங்க முடியாமல் உள்ள மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளை ஈர்த்து வருகிறது. சீனாவுடனான அவற்றின் இராணுவ உறவுகள் பலமடைந்து வருகின்றன. அல்ஜீரியா, எகிப்து, ஈராக், சூடான் ஆகிய நாடுகள் இதுவரை ரசிய விமானங்களை பயன்படுத்தி வந்தன. அந்த நாடுகளின் இராணுவ சந்தையையும் சீனா கைப்பற்றிவருகிறது. 

சீனாவின் போர் விமானங்கள் மிக நீண்ட அலகுடன் (nose), 200-300 கி.மீ வரை இலக்குகளை கண்டறிந்து தாக்கி அழிக்கும் ராடாரின் (Radar) திறன் கொண்டவையாக உள்ளன. இந்த கண்டறியும் திறன் ரஃபேலை விட மிக அதிகமாகும். ரஃபேல் விமானியால் சீனாவின் ராடர்களால் தனது இருப்பிடம் கண்டறியப்பட்டதை உணர இயலாது. ரசிய விமானங்களுக்கும் இதே நிலைதான். ஆகவேதான் அவை சீனாவின் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 

இந்தியா தனது இழப்பை இன்றுவரை நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை. அண்மையில் கூட சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும் என்றுதான் சொன்னது. ரசியாவோ அமைதி காத்து வருகிறது. பிரான்சின் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், ரஃபேலின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக பிரவின் சோனி சொல்கிறார். 

ஆப்ரேசன் சிந்தூர் - வெற்றியா? தோல்வியா? 

இவ்வாறாக சீனா பாகிஸ்தான் வாயிலாக தனது இராணுவ வலிமையை பரிசோதித்துக் கொண்டது. இந்தியா தனது பலவீனத்தை சோதித்துக் கொண்டது. ஆபரேசன் சிந்தூரின் தோல்வியை காரணம் காட்டி, அமெரிக்கா இந்தியாவின் இராணுவ தொழிற்துறை முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான COMPACT திட்டத்தில் மோடி கும்பலை கையெழுத்திட வைத்துள்ளது. இதன் மூலம் பிரான்ஸ், ரசியாவுடனான இந்தியாவின் இராணுவ வர்த்தகம் படிப்படியாக குறையவுள்ளது. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா ரசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் இராணுவ தளவாடங்களின் இறக்குமதி விகிதம் 62% இல் இருந்து 45% ஆக சரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் இந்த வெற்றி அமெரிக்காவிற்கு மட்டுமன்றி, தனது கூட்டாளியான ரசியாவிற்கும், தன்னுடன் தென் சீனக்கடல் பிரச்சினையில் முரண்படும் ஐரோப்பிய யூனியனுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையும் ஆகும். நெருங்கி வரும் அமெரிக்க - ரசிய உறவுகள், தனி ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புதிய நிலைமைகளின் பின்புலத்தில் இதைப் பொருத்தி, ஏகாதிபத்திய முரண்களை கணக்கிட முடியும். 

எனினும் ஆப்ரேசன் சிந்தூர் முழு தோல்வி என சொல்ல இயலாது. காரணம், இஸ்ரேல் நாட்டு ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் சில விமான தளங்களை இந்தியா தாக்கியுள்ளது. இந்த ட்ரோன்களை, பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ராடர்களால் கண்டறிய முடியவில்லை. எனவே, இந்தியா பயன்படுத்திய ட்ரோன்களை தயாரிக்கும் இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆப்ரசேன் சிந்தூாரின் தோல்வி என்பது மோடி கும்பலின் இராணுவ, இந்துமதவாத, தேசியவெறி மற்றும் அகண்ட பாரத கொள்கையின் தோல்வியாகும். பரந்துபட்ட மக்களுக்கு பயன்படாமல், அமெரிக்க - இந்திய ஆளும் வர்க்கங்களின் விரிவாதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்திய இராணுவத்தின் வெற்றி அல்லது தோல்வியால் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. 

காஷ்மீர்: ஏகாதிபத்தியங்களின் சூறைக்களம்! 

இந்திய - பாகிஸ்தான் முரண்பாட்டின் மையக்கண்ணியாக காஷ்மீர் பிரச்சினை உள்ளது. இதுவரை காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆக்கிரமித்துவந்தன. சமீப காலங்களில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (IOK) அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) சீனாவும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்கள் தெற்காசியாவில் மேலாதிக்கம் பெறுவதற்கு, அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக காஷ்மீர் அத்தியாவசியத் தேவையாகும். சீனாவை கண்காணிக்கவும், அதற்கு எதிராக இந்தியாவை பதிலிப்போரில் ஈடுபடுத்தவும் காஷ்மீர் யுத்ததந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஆகவேதான் அங்கு அமெரிக்கா இராணுவ தளம் அமைக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவ பயிற்சிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. சோனாமங்க் பகுதியில் இந்தியாவின் HAWS (High Altitude Warfare Scheme) பிரிவும், அமெரிக்க இராணுவப் பிரிவும் கூட்டுப்பயிற்சியில் 2024 முதல் நடத்திவருகிறது. 

சீனா கில்ஜிட், பல்டிஸ்தான் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதிகளில் இராணுவ தளத்தை ஏற்கனவே நிறுவிவிட்டது. அங்கு தனது 11,000 இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சுமார் 5,000 சதுர கி.மீ பரப்பளவை சீனாவின் CPEC உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பாகிஸ்தான் சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது. புதியதாக அங்கு தங்கம் சுரங்கம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. 

சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC )காஷ்மீர் வழியாகத்தான் தெற்காசியாவைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கிற்கும் செல்கிறது. கில்ஜிட் பல்டிஸ்தான் பகுதிகளில் 22 பெரும் டணல்களை (Tunnels) ஏவுகணை தளம் அமைக்க சீனா உருவாக்கி வருகிறது. மேலும் JY, HGR வகை ரேடார்களை ஏற்கனவே நிறுவியுள்ளது. 

அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்களின் தொழில் நுட்ப மேலாதிக்கத்துக்கு அரிய கனிம வளங்கள் அவசிய தேவை. அவை ஏராளமாக காஸ்மீரில் கொட்டிக்கிடக்கின்றன. பாரக்ஸ், ஜிப்சம், லைம்ஸ்டோன், கிராபைட், உள்ளிட்ட கனிமங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. 

அண்மையில், Reasi மாவட்டத்தின் சலால் ஹைமானா பகுதியில் சுமார் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்கு இது அத்தியாவசியம் ஆகும். அதன் மூலம் தெற்காசியாவின் எலக்ட்ரானிக் வாகன சந்தையை கைப்பற்ற இயலும். அதற்கான ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும் இந்தியாவும் COMPACT திட்டத்தின் கீழ் கையெழுத்திட்டுள்ளது. 

எனவே இந்தியா - பாகிஸ்தான் போரின் பொருளியல் அடிப்படை இதுவே ஆகும்.

பாட்டாளி வர்க்க நிலைபாடு

மேற்கண்ட அம்சங்கள் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுகின்றன. 

  1. இந்தியா - பாகிஸ்தான் போரானது, அமெரிக்கா எதிர் சீனாவின் தெற்காசிய மேலாதிக்க நலன்களுக்கும், இந்தியா எதிர் பாகிஸ்தானின் விரிவாதிக்க நலன்களுக்குமானது என்பது தெளிவு. எனவே பயங்கராவத எதிர்ப்பு, இந்திய இறையாண்மைக்கான போர், தேசப்பாதுகாப்பு என்பதெல்லாம் ஏமாற்றே. அந்த வகையில் இது அமெரிக்க - இந்திய எதிர் சீன - பாகிஸ்தான் முகாம்களின் பனிப்போருக்கான சோதனைப் போரே (Test war) ஆகும். இதன் மூலம் இரு தரப்பும் தனது பலம், பலவீனத்தை சோதித்துக்கொண்டன. மட்டுமின்றி, தமது இராணுவ தொழிற்துறை சந்தையை விரிவுபடுத்திவருகின்றன. அமெரிக்கா தனது புதிய காலனிய தூக்கு கயிற்றை இந்தியா மீது காம்பாக்ட் திட்டம் மூலம் மேலும் இறுக்கியுள்ளது போலவே சீனாவும் பாகிஸ்தான் மீதான புதிய காலனியாதிக்க சங்கிலியை பலப்படுத்திவருகிறது. 
  2. அமெரிக்க, சீன ஏகாதிபத்தியங்கள் இந்தியா, பாகிஸ்தானை தமது மேலாதிக்க நலன்களுக்காக பதிலிப்போரில் ஈடுபடுத்துகின்றன என்பதை இதன் மூலம் கண்கூடாக அறியமுடிகிறது. அதை நாம் திரளாக எதிர்க்கவேண்டும். 
  3. இந்தியாவின் இராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அமெரிக்காவின் டெக்னோ கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி ஆட்சியை தூக்கியெறிய வேண்டியது நமது பிரதான கடமையாகும். 
  4. காஷ்மீரில் இருந்து இரு முகாம்களும் வெளியேற வேண்டும். அங்கு தன்னாட்சிக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீரின் சுய நிர்ணய உரிமையே இந்திய- பாகிஸ்தானின் முரணுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். 
  5. பாஜகவின் அகண்ட பாரத, இந்து மதவெறி தேசியவாத நலன்களுக்கான ஆப்ரேசன் சிந்தூரை ஆதரித்ததன் மூலம், காங்கிரசு, திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு மாற்றல்ல என்பதை தாமாகவே அறிவித்துள்ளன. பாஜகவுக்கு மாற்று என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசும் திமுகவும் ஆப்ரேசன் சிந்தூரை ஆதரித்து ஊர்வலம் நடத்தின. தேசபக்தி எனும் பெயரில் முதலாளித்துவ வர்க்கங்கள் நடத்தும் ஆதிக்கத்திற்கான போரில் சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தை ஆதரிப்பது காவுத்ஸ்கியவாதம் என்றார் லெனின். மோடி கும்பலின் விரிவாதிக்கத்திற்கான ஆப்ரேசன் சிந்தூரை ஆதரித்ததன் மூலம் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரிகள் காவுத்ஸ்கியவாதத்தை - சமூக தேசியவெறியை வெளிபடுத்தியுள்ளன. இந்தியா கூட்டணி பாஜகவிற்கு மாற்றாக விளங்காது என்பதை இதன் வாயிலாக மேலும் அம்பலப்படுத்த வேண்டும்.

- சமரன்
ஜூன் -ஜூலை 2025