பட்ஜெட் எனும் பேரில் மோடி கும்பல் தாக்கல் செய்த வெற்று தேர்தல் அறிக்கை
சமரன்

கடந்த பிப்ரவரி மாதம் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2025–2026க்கான நிதிநிலை அறிக்கையானது, பாசிச மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் நீடித்துவரும் விவசாயிகள் தற்கொலை, வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, சிறுகுறு தொழில்கள் அழிவு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்துள்ளது. மேலும் உணவு பஞ்சத்தையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் ஆழப்படுத்தும் வகையில் உணவு மானியம், உர மானியம், எரிபொருள் மானியங்களை பறித்து மேலும் நெருக்கடிகளுக்கு தள்ளியுள்ளது. மறுபக்கம் விக்சித் பாரத் எனும் பெயரில் எல்.ஐ.சி. ராணுவம் உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் கும்பல்களுக்கு தாரைவார்க்கும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய மிரட்டலுக்கு அடிபணிந்து ராணுவப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
மேலும் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளித்தல், பீகாரில் ஒரு வசந்த காலத்தை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துதல், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுதல், வறுமை ஒழித்தல் போன்ற நாமகரணங்களை சூட்டிக் கொண்டு அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் கும்பல்களையும், சர்வதேச நிதி மூலதன கும்பல்களையும் கொழுக்க வைக்கும் பட்ஜெட்டாகவும் உழைக்கும் வர்க்கங்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டும் பட்ஜெட்டாகத்தான் இருந்து வருகிறது.
மோடி கும்பலின் போலி வாக்குறுதிகளும் விவசாயிகள் மீதான தாக்குதல்களும்
நமது நாட்டு விவசாயிகள்தான் எப்போதும் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர் என்றும் புத்தம் புதிய உறுதியான நடவடிக்கை மூலம் நாட்டின் இந்த முதுகெலும்பை மேலும் வலுப்படுத்தவே நாங்கள் முயன்று வருகிறோம் எனக் கூறிய மோடி கும்பல் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான 1) குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்தல், 2) விவசாயிகள் கடன் தள்ளுபடி 3) விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இருவருக்கும் ஓய்வூதியம், 4) மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, 5) நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் கூடாது, 6) மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய போராடி உயிர் நீத்த விவசாய குடும்பங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் புதிய கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளிலிருந்து இரும்பு கரம் கொண்டு நசுக்கி வருகிறது.
மேலும் மோடி கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சியும், நிதிநிலை அறிக்கையும் 140 கோடி மக்களுக்கு உணவளிக்கும் முதுகெலும்பான விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும், உயிரோடு சமாதி கட்டும் வகையில் உலக வர்த்தக கழகத்தின் ஆணைகளையும் புதிய கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தல், உணவுக் கொள்முதல் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை கைவிடுதல், விவசாயிகளுக்கான மானியத்தை வெட்டுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைகளைக் கைவிடுதல் ஆகியவற்றின் மூலம் விவசாயத் துறையை சீரழித்து வருகிறது.
தற்போது 80 கோடி மக்கள் ஒருவேளை உணவுக்காக ரேஷன் பொருள்களை நம்பி வாழ்ந்து வரும் நிலையில், 67 லட்சம் குழந்தைகள் 24 மணி நேரமும் உணவின்றி வாடும் நிலையில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மூன்று வேளை உணவில்லாமல் மடிந்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணி தாய்மார்கள் வரை ஊட்டச்சத்துக்கள் இன்றியும், இரத்த சோகையிலும் பாதிக்கப்பட்டு மடிந்து வரும் நிலையில், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வேளாண் நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு 10 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாய பெருங்குடிகள் மாண்டு வரும் நிலையில், புதிய காலனிய கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளிலிருந்து உரமானியத்தையும், உணவு மானியத்தையும், எரிபொருள் மானியத்தையும் பறிப்பது மேலும் பொருளாதார நெருக்கடிகளை ஆழப்படுத்துவதற்கும், பட்டினி சாவுகளுக்கும், விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரிப்பது போன்றவற்றுக்கு சேவை செய்யும் பட்ஜெட்டாக உள்ளது.
மேலும் இதுவரை இல்லாத வகையில் 50 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது மோடி கும்பல். உணவு மானியம், உர மானியம் எரிபொருள் மானியங்களுக்கு ரூ. 4 லட்சம் கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக இந் நிதிநிலை அறிக்கையில் உரமானியம் ரூபாய் 1,71,299 கோடியிலிருந்து ரூபாய் 1,67,887 கோடியாக அதாவது ரூபாய் 3,412 கோடியை குறைத்துள்ளது. பெட்ரோல் மானியத்தை ரூ.2,600 கோடியாக குறைத்துள்ளது. இவை விலைவாசி உயர்வுக்கும் வாங்கும் சக்தியின்மை அதிகரிப்பதற்கும், மிகப் பெரிய உணவு பஞ்சத்திற்குமே வழிவகுக்கும்.
மேலும் 2014 முதல் 2025 வரை கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி, செஸ் வரி, சிறப்பு வரிகள் மூலம் சுமார் ரூ. 39.54 லட்சம் கோடியை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ள மோடி கும்பல் மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கும்பல்களுக்கு ரூபாய் 25 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த மோடி கும்பல், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை குறைந்தபட்ச ஆதார விலை, மற்றும் விவசாயிகளின் ரூபாய் ஒரு லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. கடந்த ஆண்டு சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் இறக்குமதிக்காக ரூபாய் 1,72,170 கோடி செலவு செய்துள்ளது. இவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டால் கூட MSP உத்தரவாத சட்டம் சாத்தியமாகும். ஆனால் விவசாயிகளுக்கு 2014–ல் மோடி தந்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஏமாற்றி வருகிறது.
தலைவிரித்தாடும் வேலையின்மை
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக 2014–ல் வாக்குறுதி அளித்த மோடி கும்பல், 10 ஆண்டுகள் ஆகியும் எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. மாறாக இருக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்புகளையும் பறித்துள்ளது. அந்நிய மூலதனம் வந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், ஏற்றுமதி பெருகும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறி சர்வதேச தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைத்து இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என புதிய காலனிய கார்ப்பரேட் கும்பல்களுக்கு திறந்துவிட்டது.
ஆனால் அன்னிய நிதி மூலதனக் கும்பல்கள் பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. கார்ப்பரேட் வரி குறைப்பு, வாராக்கடன் தள்ளுபடி, ஊக்கத் தொகை என்று மக்களின் வரிப்பணத்தை பல லட்சம் கோடிகளை வாரி சுருட்டிக் கொண்டு உள்நாட்டு சுதேசிய தொழில்களை அழித்து வேலைவாய்ப்புகளையும் பறித்து வருகின்றன. ஆலைகள் மூடல், உற்பத்தி முடக்கம், கதவடைப்பு மூலம் 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து எதிர்கால மாணவர் சமுதாயத்தை நடுத்தெருவில் தள்ளியுள்ளது மோடி கும்பல்.
ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம் மூலம் சிறு குறு வணிகத்தை மோடி அரசு சீரழித்ததன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால் மோடி கும்பல் அதிகரித்துவரும் வேலையின்மையை பற்றி கவலைக் கொள்ளவே இல்லை. இந்தியாவில் அபரிமிதமான இளைஞர்கள் வளம் உள்ளது; தொழில் திறமையுள்ள படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இதை பயன்படுத்தி இந்தியாவை சிறந்த ஏற்றுமதி நாடாக்க வேண்டும் என வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீத்தாராமனிடம் தரமான வேலைகள் உருவாக்கப்படுவதில்லை என அரசின் மீது குற்றம் சாட்டப்படுகின்றதே என நிருபர்கள் கேட்டதற்கு முதலாளிகள் எதிர்பார்க்கும் திறன் பெற்ற தொழிலாளர்கள் சந்தையில் இல்லை, வேலைகள் சந்தையில் உள்ளது ஆனால் பொருத்தமான திறன் பெற்ற தொழிலாளர்கள் இல்லை, இருக்கக்கூடிய திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு சந்தையில் இருக்கும் வேலையை பெற முடியாமல் உள்ளனர், அதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக நிதியமைச்சரும் மோடியும் மாறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர்.
மேலும் திறன் மேம்பாடு பயிற்சி என்ற பெயரில் 4.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி 2 லட்சம் கோடியை இல்லாத வேலைக்கு பயிற்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துள்ளது.
2047க்குள்ளாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதாக கூறும் மோடி அரசு, ஏழை எளிய கிராமப்புற மக்கள், ஆதரவற்றவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆணிவேராக இருக்கும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து நிதிகளை குறைத்து வருகிறது. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும், 150 நாள்களாக வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும் என கிராமப்புற விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடாளுமன்ற நிலைக் குழு ரூ. 2.50 லட்சம் கோடியாக ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் மூன்றாவது முறையாக ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கி கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ள மோடி கும்பல், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், ஏழை எளிய மக்கள், விதவைகள் உள்ளிட்ட நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்காமல் உதாசீனம் செய்கிறது மோடி கும்பல். கார்ப்பரேட்டு கும்பல்களுக்கு ஆண்டுக்கு வரிச் சலுகையாக ரூ. 1.45 லட்சம் கோடியை தூக்கி கொடுக்கும் கார்ப்பரேட் கைக்கூலி மோடி கும்பல் - ஏழை எளிய மக்களிடம் பல லட்சம் கோடிகளை மறைமுக வரிகள் மூலம் கொள்ளையடிக்கும் மோடி கும்பல் - நாட்டை அந்நியனுக்கு திறந்துவிட உலகம் சுற்ற ரூ. 8,400 கோடியில் இரண்டு சொகுசு விமானத்தை மக்கள் வரிப் பணத்தில் வாங்கிய மோடி கும்பல் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.8,447 கோடியை மட்டும்தான் ஒதுக்கியுள்ளது. அவர்களுக்கு (முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய், ஊனமுற்றோர்களுக்கு 300) என்பது இன்றைய பணவீக்கம் விலைவாசி உயர்வு அடிப்படையில் கணக்கிட்டால் அற்பத் தொகையே ஆகும்.
காப்பீட்டுத்துறையை அமெரிக்காவிற்கு திறந்துவிடும் நிதிநிலை அறிக்கை
பாசிச மோடி ஆட்சி காப்பீட்டுத் துறையை 100 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு பட்ஜெட் மூலம் திறந்துவிட்டுள்ளது. 1956–ம் ஆண்டு இந்திய அரசுத் துறையில் ரூ. 5 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், தற்போது மக்களின் பேராதரவுடன், 13 லட்சத்திற்கு மேற்பட்ட முகவர்களின் கடின உழைப்பால் ரூ.54லட்சம் கோடிக்கு அதிகமான சொத்து மதிப்பை வைத்துள்ளது. 40 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்திய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சியிலும், ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி, தொழில், சுகாதாரம், குடிநீர், சாலைகள் அமைத்தல் போன்ற சமூக நலப் பணிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அட்சயப் பாத்திரமாக எல்.ஐ.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மோடி அரசால் பொது காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் 51% சதவிகித பங்குகளை மத்திய அரசு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இந்த மசோதா ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்து அந்நிய வர்த்தகத் துறையில் இருந்து வந்த ஏழு காப்பு வரிகளை ஒரேயடியாக ரத்து செய்ததோடு ஒட்டு மொத்த காப்பு வரிக் கொள்கைகளையும் எளிமைப்படுத்துவது வரம்புகளை தளர்த்துவது என்று இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் வெறுத்து ஒதுக்கப்பட்ட - தடை செய்யப்பட்ட - அமெரிக்காவில் திவாலாகிப்போன - அமெரிக்க நாட்டு மக்களையே ஏமாற்றிய நிறுவனங்களின் கோரப்பசிக்கு நமது காப்பீட்டுத் துறையையும், ரூ.54 லட்சம் கோடி சொத்துக்களையும் அமெரிக்க கம்பெனிகள் சூறையாடப் போகின்றனர். இந்தத் தங்க முட்டையிடும் வாத்தை அமுத சுரபியை தாரை வார்ப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் தேசத் துரோகமாகும்.
அமெரிக்காவின் போர் வெறிக்கு சேவை செய்யும் ராணுவ பட்ஜெட்
பாசிச மோடி கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து மக்கள் நலன் திட்டங்களுக்கான நிதிகளை குறைத்து ராணுவத்திற்கான நிதிகளை அதிகரித்து வருகிறது. இவ்வாறு ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது நாட்டின் நலன்களுக்காவோ? மக்களின் பாதுகாப்புக்களுக்காகவோ அல்ல? மாறாக அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்திற்கும், போர்வெறிக்கு சேவை செய்வதற்கும், தெற்காசிய பிராந்தியாத்தில் சீன எகபாதிபத்தியத்தின் தலையீட்டை முறியடித்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், குவாட், குவாட் பிளஸ், மற்றும் ஆக்கஸ் ஒப்பந்தக்ளுக்கு சேவை செய்யவும், நாட்டின் பாதுகாப்புத் துறைகளை அம்பானி அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்களுக்கு திறந்துவிடவும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கங்களை ஆயுதம் கொண்டு அழிப்பதற்காகவே இந்த பட்ஜெட்டில் ரூ.6.81லட்சம் கோடி நிதி ஒதுக்கி ராணுவப் பொருளாதாரத்தை கட்டியமைத்து வருகிறது.
கடந்த 2021–ம் ஆண்டு அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா என்ற பெயரில், அமெரிக்காவின் லாங்கிட் மார்டின் போன்ற பகாசுர நிறுவனங்களுக்கும், அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்ரேட் கும்பல்களின் சுரண்டலுக்கும் 41 ராணுவ தளவாட உற்பத்தித் துறையை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி தாரைவார்த்துள்ளது மோடி அரசு. 2023–ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த ஜி20 மாநாட்டில் நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய பிடியில் இறுக்கும் வகையில் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை செயல்படுத்தி வருகிறது மோடி அரசு.
56 இன்ச் மார்பளவு கொண்ட வீராதி வீரன் - தெய்வக் குழந்தை மோடி அவர்கள், நமது நாட்டு மக்களை அடிமைகள் போல கை கால்களில் விலங்கிட்டு அவமானப்படுத்தி அனுப்பிய இனவெறியன் டிரம்பை கண்டிக்க கூட துப்பில்லாத மானம்கெட்ட ஆட்சியை நடத்தி வருகிறது. இதை கேலிச்சித்திரம் வரைந்து அம்பலப்படுத்திய விகடன் இணையதளத்தை முடக்கி தனது எஜமான் விசுவாத்தை காண்பித்தது. இவைதான் ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பலின் உண்மையான தேசபக்தியாகும். மேலும் அமெரிக்காவின் புதிய காலனிய அடிமை சேவகன் என்பதை நிரூபிக்கும் வகையில் டிரம்ப் கூறும் ஒப்பந்தங்களையும், நிபந்தனைகளையும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு தற்போது எஜமான் டிரம்ப் அடிமை மோடிக்கு இட்ட கட்டளைகளே சாட்சி ஆகும்.
அவை வருமாறு:
1. ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம், குவாட், குவாட் பிளஸ், ஆக்கஸ் ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருக்கும் போது டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய பத்து வருட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை நிர்பந்தம் செய்துள்ளது.
2. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருள்களின் மீதும் அவர்கள் விருப்பப்படி இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வது.
3. எஃப் 35 ஸ்டெலத் போர் விமானத்தை வாங்க நிர்பந்தம் செய்வது.
4. அமெரிக்காவின் அணு உலைகளை வாங்குவதற்கு நிர்பந்தம் செய்வது.
5. அமெரிக்காவின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு எண்ணெய் எரிவாயுக்களை வாங்க நிர்பந்தம் செய்வது.
நமது நாட்டு விவசாயிகள் எங்களது கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகிறார்கள், சிறு குறு தொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளையும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் குறைக்க வேண்டும் என இந்த நாட்டு உழைக்கும் வர்க்கங்கள் போராடி வருகின்றன. இதைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாத மோடி ஆட்சி? அமெரிக்க மாமன் டிரம்ப் கும்பல் அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் வரி அதிகம் என கூறியவுடன் தனது எஜமானின் மனம் குளிர அமெரிக்காவின் கோர்பன் விஸ்கிக்கு இருந்த 150 சதவீத வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளது. அமெரிக்காவின் காலாவதியான பாதுகாப்பற்ற அணு உலைகளை வாங்க சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யயப்படும் இரு சக்கர வாகனங்கள் செயற்கைச் சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. பல பில்லியன் டாலர் விலை கொடுத்து அதிக விலை கொண்ட எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானம் வாங்க ஒப்புக் கொண்டு அமெரிக்க ராமன் டிரம்புக்கு பாதை பூஜை செய்கிறது மோடி அரசு.
இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய அடிமை சங்கிலியில் இந்தியாவை இறுகப் பிணைத்துள்ளது. இந்திய நாடு எந்த பொருளாதார கெள்கைகளை செயல்படுத்த வேண்டும், எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்க உள்ளது. இதற்கு நேரடி சாட்சியம் இந்திய தேர்தல் வாக்குப் பதிவை அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் 21 மில்லியன் டாலர் பணம் தந்துள்ளது. இவைகளுக்கு கைமாறாக இந்திய பாதுகாப்புத் துறையை, நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் வைக்கவே ராணுவ பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் மூலம் கட்டியமைத்து வருகிறது மோடி அரசு.
12 லட்சம் வருமான வரி யாருக்கானது
கடந்த 2023ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ 7 லட்சமாக இருந்த நிலையில், 2025–2026க்கான நிதிநிலை அறிக்கையில் ரூ. 12 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தின் கைகளில் ரூபாய் 1 லட்சம் கோடி குவிந்து பணப்புழக்கமும், வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என மோடி ஆட்சி ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் உண்மை நிலை வேறொன்றாக உள்ளது.
சாமான்ய மக்களின் ஆட்சி என்று பதவிக்கு வந்த மோடி அமித்ஷா கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சி, திட்டக்குழுவை கலைத்து விட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கான நிதிகளை ஒதுக்காமால் ஏமாற்றுகிறது. மேலும் நேரடி வரிகளை குறைத்து மறைமுக வரிகளை அதிகரித்து சாமான்ய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகிறது. இதன் மூலம் வரலாறு காணாத அளவில் வறுமையும், வேலையின்மையும், பொருளாதார நெருக்கடிகளும், வாங்கும் சக்தியின்மையும் அதிகரித்து வருகின்றன.
மாநில அரசுகளுக்கு தரவேண்டிய நிதிநிலுவைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பணவீக்கத்தை குறைத்து விட்டதாக ஏமாற்றுகிறது. ஆனால், உணவுப் பொருள் பணவீக்கம் 12.5 சதவிகிதமும், மருந்துப் பொருள்களின் பணவீக்கம் 15.8 சதவிகிதமும், போக்குவரத்து பணவீக்கம் 17 சதவிகிதமும், கல்விக்கான பணவீக்கம் 22.4 சதவிகிதமும், விலைவாசி உயர்வு கண்டுள்ளது. ஆனால் ஊதிய உயர்வு சதவிகிதம் 4.2 அளவிலும், வாங்கும் சக்தி இழப்பு 8.3 சதவிகிதமாக உயர்ந்து நாள் ஒன்றுக்கு 1.15 டாலருக்கு குறைவான வருமானம் ஈட்டும் பரம ஏழைகள் வாழும் நமது நாட்டில் - 38 கோடிக்கு அதிகமான மக்கள் வாங்கும் சக்தியற்ற வாடும் நிலை இந்த நாட்டில் நீடிக்கிறது. இவ்வாறிருக்கையில், இந்த ஒரு லட்சம் கோடி என்பது இந்தியாவின் மொத்த ஜி.டி.பி., தொகையில் சுமார் 320 லட்சம் கோடியில் வெறும் 0.3 சதவீத சலுகை எப்படி ஜி.டி.பி. வளர்ச்சிக்கு வேகத்தை எவ்வாறு தர முடியும்? எவ்வாறு வாங்கும் சக்தியை பெருக்க முடியும்? நிச்சயம் முடியாது.
டபிள்யுஇஎப் அறிக்கை படி உலக பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை அடையும் எனக் கூறுகிறது. உலகளாவிய பொருளாதாரம் ரூ. 51 லட்சம் கோடி முதல், ரூ 485 லட்சம் கோடி வரை இழப்பை சந்திக்கும் என்றும், 2008 பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பொருளாதார நெருக்கடிகளை விட ஆழம் பெறும் என கூறும் நிலையில் இந்திய மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் தாங்கள் விரும்பும் பொருட்கள், தேவைப்படும் வசதிகளுக்கு ஏற்ப செலவிட முடியாத நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நிதி சேமிப்பு வீழ்ச்சி அடைந்து கடன்களும் அதிகரித்துள்ளது என ப்ளும்வென்ச்சர்ஸ் ஆய்வு கூறும் நிலையில், 2025–2026க்கான நிதிநிலை அறிக்கையில் மொத்த பொருளாதாரம் வளர்ச்சி 8.2 சதவீதமாக கணிக்கப்பட்ட நிலையில், 6.4 சதவிதமாக குறைந்துள்ள நிலையில் ஊதிப் பெருக்கப்பட்ட இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க குறைந்த 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள் ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாமல், கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தாமல், தற்போது சம்பாதிக்கும் வருமானத்தில் இருந்து சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிப்பது பற்றி மோடி கும்பல் கதையளப்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளையே கொழுக்க வைக்கும். இந்த ரூ 1 லட்சம் கோடி சேமிப்பு என்பது நடுத்தர வர்க்கத்தின் பணப்புழக்கத்தை பெருக்கப் போவதில்லை; மாறாக நெருக்கடியை ஆழப்படுத்துவே செய்யும்.
கார்ப்பரேட்டுகளின் கோரப் பசிக்கு பலியாகும் ரயில்வேத்துறை
பாசிச மோடி ஆட்சி, கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக ஆண்டுக்கு ஆண்டு ரயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதிகளை குறைத்து வருகிறது. 2016–17 முதல் ரயில்வேக்கு என இருந்த தனிபட்ஜெட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒழித்துக்கட்டி பொது பட்ஜெட்டோடு இணைத்து தனியார்மயமாக்கலை வேகப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 13 ஆயிரம் பயணிகள் ரயில்கள் இயங்கி வருகிறது. தினந்தோறும் 2.5 கோடி மக்களும், மாதத்திற்கு சுமார் 41 கோடி மக்களும் பயணம் செய்து வருகின்றனர். மேலும், உலகளவில் நான்காவது மிகப்பெரிய துறையாக இந்திய ரயில்வேத்துறை விளங்குகிறது. இதில் போதிய ஓய்வின்றி 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை (3.25 லட்சத்திற்கு அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருப்பதால்) உழைக்கும் அவலநிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் 500 ரயில் நிலையங்கள், 150 ரயில்கள், 109 முக்கிய ரயில் பாதைகள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான 4.77 ஹெக்டெர் மைதானங்கள் உள்ளிட்டவற்றை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைகளுக்கு விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த லாபவெறியால் ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்பு திட்டங்களுக்கு சேவை செய்து வருகிறது. நிதி ஒதுக்கீடுகளை கடந்த பட்ஜெட்டில் ரூ. 2.62 லட்சம் கோடியிலிருந்து 2025–க்கான பட்ஜெட்டில் 2.55 லட்சம் கோடியாக குறைத்துள்ளது. ஒதுக்கிய நிதியையும் வந்தேபாரத் அதிவேக ரயில்களுக்கும் அதற்கு தேவையான கட்டுமானங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாப்பிற்கான நிதியையும் ரூ. 322.50 கோடி குறைத்து ரயில் விபத்துக்களுக்கும் மக்களின் உயிருக்கு உலைவைத்து வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு தாய்சேய் மரணங்கள் அதிகரிக்கும் நிலையில் சமூக நல திட்டங்களுக்கு மூடுவிழா
மோடி அரசின் 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியில், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு நிதிகளை குறைத்து வருகிறது. இன்றைய பணவீக்கம், வாங்கும் சக்தியின்மை, வேலையின்மை அதிகரிப்பை கணக்கில் கொண்டால் இத்துறைகளுக்கான நிதி என்பது யானை பசிக்கு சோளப்பொறி கதையாகத்தான் உள்ளது.
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், வறுமை ஒழிப்பு, உணவு உத்திரவாதம் உள்ளிட்ட அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தந்துள்ளதாக மோடி ஆட்சியும் நிர்மலா சீத்தாராமனும் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் உரிய ஊட்டச்சத்து, மருத்துவம், சுகாதாரம் இல்லாமல் தாய்சேய் மரணத்திலும், பச்சிளம் குழந்தைகள் மரணத்திலும், வறுமையிலும், வறுமைமிக்க நாடுகளுடன் போட்டி போடுகின்றனர். 2021–ல் ஊட்டச்சத்து இல்லாமல் 47 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். இவை 2024ம் ஆண்டில் மட்டும் அரை மில்லியன் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக 17 சதவித குழந்தைகள் குறை எடையுடனும், 36 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ள நிலையில், நாள் முழுவதும் 67 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் வாழும் அவலநிலையில், மத்திய உணவு திட்டத்திற்கான பிரதான மந்திரி போஷன் திட்டத்திற்கு வெறும் ரூ. 12,500 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒரு குழந்தைக்கு 5 பைசா வீதம் ஒதுக்கிடு செய்துள்ளது. சுகாதார துறைக்கு ரூ. 98311 கோடியும், நகர்புற மேம்பாட்டுக்கு ரூ.96.777 கோடி ஒதுக்கியுள்ளது. இத்தகைய நிதி வெட்டுகள் மூலம் உணவு பஞ்சமும் ஊட்டச்சத்து குறைபாடுகளும், தாய்சேய் மரணங்களும், தொற்று நோய்களும் அதிகரிப்பதை நோக்கி உழைக்கும் வர்க்கங்களை தள்ளியுள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மோடி கும்பல்
மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தனியார்மயம், வணிகமயம், கார்ப்பரேட்மயமாக்குவதை தீவிரப்படுத்தி வருகிறது. 1966–ல் உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான நிதி 6 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என கோத்தாரி கமிசன் முன்வைத்து 59 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆண்ட எந்த அரசுகளும் 6 விழுக்காடு நிதி ஒதுக்கவில்லை. குறிப்பாக மோடி அரசு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்விக்கான நிதிகளை அதிகரித்து அடிப்படை கல்வியை புறக்கணித்து வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் உயர் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்விக்கான நிதியை வெறும் 0.5 சதவீதம் மட்டுமே (ரூ. 1,28,650 லட்சம் கோடி) ஒதுக்கியுள்ளது மோடி அரசு. மறுபக்கம் கல்வித்துறையை ஏகாதிபத்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கும், அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளித்துவ கும்பல்களின் கல்விக்கான வழிகாட்டுதலை பெறுவதற்கு உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. நீட், கியூட், போன்ற நுழைவு தேர்வுகள் மூலம் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து தூக்கு கயிற்றில் தொங்கவிட்டுள்ளது மோடி அரசு.
மேலும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் என்ற பெயரில் ஒரு மில்லியன் இந்திய குழந்தைகளை புதிய கண்டுபிடிப்பாளர்களாக வளர்ப்பது என்ற பெயரில் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் நாடு முழுவதும் அமைப்பதாக கூறுகிறது. இளம் மனங்களில் ஆர்வம், படைப்பாற்றல் ஆகியவற்றை ஊக்குவிப்பது, சமூக பிரச்சனைகளுக்கு மாணவர்களின் யோசனைகளுக்கு வடிவம் கொடுப்பது எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பது என மோடி அரசு கூறுகிறது.
ஆனால் மோடி அரசு கூறும் நிதி ஆயோக் அடல் புதுமை மிஷன் திட்டம் குழந்தைகள் மனத்தில் நஞ்சை விதைக்கும் திட்டமாகும். குஜராத் அரசு 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத்கீதையை ஒரு பாடமாக சேர்க்க வழிகாட்டியுள்ளது. ராஜஸ்தானில் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் புத்தகத்தில், வேத கணிதம் எனும் பாடம் வைக்கப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பிற்கான அறிவியல் புத்தகத்தில் மலர்கள் பாடத்தில் தாமரை மலர் இந்து கடவுள் சரசுவதியுடன் தொடர்புடையது என்றும், ஆறாம் வகுப்பு புவியியல் புத்தகத்தில் அண்டம் பற்றிய பாடத்தில் துருவதாரா எனும் இந்துக் கடவுள்தான் துருவ நட்சத்திரம் என்றும் குழந்தைகளுக்கு கட்டுக்கதைகள் பாடமாக நடத்தப்படுகிறது. மேலும் விமானத்தை மகாபாரத காலத்திலேயே கண்டுபிடித்ததாகவும், நாடுவிட்டு நாடு அல்ல, கிரகம் விட்டு கிரகம் பாயும் ஏவுகனைகளை அன்றே கண்டுபிடித்ததாகவும், பிள்ளையாருக்கு யானை முகம் வந்ததற்கு காரணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி தொழில் நுட்பம் கண்டுப் பிடித்ததாகவும், மகாபாரதத்தில் 100 கௌரவர்கள் உருவானது டெஸ்டியூப் பேபி மூலம்தான் என்றும் ராமன் 24 வகையான ஏவுகணைகளை பயன்படுத்தினார் என்றும், மாட்டு சானத்திலும், மாட்டு சிறுநீரிலும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் மருத்துவம் உள்ளது என்று இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர் சமூகத்தை விஞ்ஞானத்திற்கு எதிராக மத பிற்போக்கு தனத்திலும் மூட பழக்க வழக்கங்களிலும், புராண கட்டுக்கதைகளையும், இந்து மதவெறிகளை ஏற்றி இந்துராஷ்டிரக் கனவை நினைவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த அடல் புதுமை மிஷன் திட்டமாகும்.
நெருக்கடியில் மூழ்கும் இந்திய பொருளாதாரமும் நிதி மூலதன கைகளில் குவியும் மக்கள் சொத்துக்களும்
அமெரிக்காவில் 2008–ல் வெடித்து கிளம்பிய மிகு உற்பத்தி நெருக்கடி, கொரோனா பொருளாதார நெருக்கடி, மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் உலகம் தழுவிய நெருக்கடியாக ஆழப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திலும் உற்பத்தி வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் வீழ்ச்சி, சமூக நலத் திட்டடங்களுக்கு மூடு விழா நடத்துவது, ஆலை மூடல், ஆட்குறைப்பு, லே-ஆப் செய்வது, வேலையின்மை அதிகரிப்பு, ஊதியம் குறைப்பு போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. செல்வம் குவிவதும், வறுமை பெருகுவதும் நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும் அதிகரித்து வருகின்றன.
மேலும் அந்நிய முதலீடுகள் இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளின் உற்பத்தி துறை மற்றும் தொழிற்துறைகளில் சொற்ப அளவில்தான் வந்துள்ளன. மாறாக அந்நிய நிதி மூலதன கும்பல்கள் ஊக வாணிபத்தின் மூலமும், பங்குச் சந்தை சூதாட்டத்தின் மூலமும் ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலமும், நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு தொழில்களையும் அழித்து வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வறுமையையும் அதிகரிக்க செய்கின்றனர்.
ஆனால், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை சேவகம் செய்யும் மோடி ஆட்சி, உலகில் அதிகவேகமாக வளர்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது விரைவில் 3–வது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் எனக் கூறி, அந்நிய மூலதனத்தைச் சார்ந்த ஏற்றுமதியைச் சார்ந்த உலகமய கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என அகலத் திறந்துவிட்டுள்ளது; மேலும் இன்று இந்தியாவின் பொருளாதார உறவை வலுப்படுத்த உலகம் ஆர்வமாக இருக்கிறது என்றும் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி என்ஜினாக இந்தியா உருவாகி வருகிறது எனக் கூறி நாட்டின் பொதுச் சொத்துக்களையும், கனிம வளங்களையும், மலிவான மனித உழைப்பையும், இயற்கை வளங்களையும் அம்பானி அதானிகளின் வேட்டைக் காடாக மாற்றி வருகிறது மோடி அரசு. மேலும் மோடி கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் கடும் உழைப்பால் இரத்தத்தால் வரி பணத்தால் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே துறைகள், மின் உற்பத்திதுறை உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்துக்களை அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டது. தற்போது 2025–2026க்கான பட்ஜெட்டில் வெளிநாட்டு மூலதனத்தை சார்ந்து உள்நாட்டு உற்பத்தியை புறக்கணிப்பது, சமூக நலனை மறுப்பது, சமத்துவமின்மையை அதிகரிக்கும் வகையில் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களை பன்மடங்கு உயர்த்தும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் 2025–2026 க்கான மத்திய பட்ஜெட்டில் வரவு–செலவுக்கான நிதியாக ரூ. 50.65 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2024–2025க்கான பட்ஜெட் நிதி ரூ. 48.20 லட்சம் கோடியை விட ரூ. 2.35 லட்சம் கோடி அதிகமாகும். ஆனால் இன்றைய பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த நிதி அதிகரிப்பு என்பது பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஊதிப் பெரிதுபடுத்தப்படும் ரூ. 50.65 லட்சம் கோடி நிதி மூலம், அதிகரித்து வரும் வேலையின்மை, ஆழம் பெரும் வாங்கும் சக்தியின்மை, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதார மேம்பாடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, வெள்ளம் வறட்சி, உள்ளிட்ட பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிதிப் பகிர்வு மற்றும் ஜி.எஸ்.டி. கலால்வரி, உள்ளிட்ட புதிய காலனிய வரிகள் மூலம் சிறுகுறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்கான எந்த தீர்வும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஏழை, எளிய, நடுத்தர உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படுவதாக கூறும் சலுகைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன; அவை தேர்தல் வாக்குறுதி போல வெற்று வாக்குறுதிகளாகவே உள்ளன. அவற்றுக்கான நிதி எவ்வளவு என ஒதுக்காமலேயே வாய்ச்சவடால் மூலமே பட்ஜெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பாஜக அரசு. இவ்வாறு நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் மோசடியான தேர்தல் அறிக்கையையே வெளியிட்டுள்ளது மோடி கும்பல்.
மாறாக, கார்ப்பரேட் கும்பல்களுக்கு கட்டமைப்பு வசதிகள், பொதுத்துறைகளைப் பணமாக்கல் திட்டம் மூலம் 10 லட்சம் கோடிக்கு தாரைவார்த்தல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தல், கார்ப்பரேட் வரிகளை குறைத்தல், மக்கள் மீது மறைமுக வரிகளை அதிகரித்தல், ஆகியவற்றின் மூலம் மோடி கும்பல் இந்திய நாட்டை கார்ப்பரேட்டுகளின் இனிப்பு பிரதேசமாக மாற்றி வருகிறது.
குறிப்பாக பாசிச மோடி கும்பலின் 10 ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் கும்பல்களின் வாராக் கடன் ரூ. 25 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. டீசல், பெட்ரோல் மீதான புதிய காலனிய கார்ப்பரேட் வரிக் கொள்கைகள் மூலம் 39.54 லட்சம் கோடி மக்களிடம் இருந்து கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கே திருப்பிவிட்டுள்ளது. நான் செல்வத்தை வழங்கும் மகாலட்சுமியிடம், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெற்றி, செழிப்பு, நல்வாழ்வை வழங்க வேண்டும் - அவர்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கூறியது மோடி கும்பல். மோடியின் இந்த பிரார்த்தனை என்பது பரம ஏழைகளான - ஒரு வேலை சோற்றுக்கே வழியில்லாமல் தன் மகனின் திருமணத்திற்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு செலவு செய்த அம்பானி, மற்றும் அதானிகள் உள்ளிட்ட நான்கு பெரும் கார்ப்பரேட்டுகளுக்காகத்தான். ஏழை சேவகன் மோடியின் பிரார்த்தனையால் ரூ. 210 லட்சம் கோடியை குவித்துள்ளது இந்த கார்ப்பரேட் கும்பல். இவை தற்போதைய பட்ஜெட் தொகையை விட 4 மடங்கு அதிகமாகும்.
மேலும் 2014ல் 109 பில்லியனர்கள் இருந்தார்கள்; தெய்வக் குழந்தை மோடியின் அற்புத வேண்டுதலால் தற்போது 200 பில்லியனர்களை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த பரம ஏழைகளுக்கு கார்ப்பரேட் வரிகளை குறைத்தும், வாராக் கடன்களை தள்ளுபடி செய்து, ஊக்குவிப்பு என்றும், வரிச்சலுகை என்றும் பணமாக்கல் திட்டம் மூலமும் பல லட்சம் கோடிகளை வாழ்வில் நலிவடைந்த ஏழைகளுக்கு தானமாக வழங்கி அவர்களின் பேராதரவோடு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். ஏழைத்தாயின் மகன் மோடி அவர்கள் மேலும் மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர வைத்த இந்த ஏழைகளுக்கு காணிக்கையாக உழுபவனுக்கே நிலம் என்ற கொள்கையை ஒழித்து கார்ப்பரேட்டுகளுக்கே நிலம் என்ற கொள்கையை வேகமாக செயல்படுத்தி வருகிறார். இந்த பரம எழைகளின் ஒரு சதவீத கரங்களில் 57.2% சதவீத சொத்துக்களை அகப்பட வைத்த அற்புத சேவகன் மோடி ஆவார்.
2014ல் 54லட்சம் கோடியாக இருந்த அந்நியக் கடனை 10 ஆண்டுகளில் 205 லட்சம் கோடியாக மாற்றியுள்ளது. இதற்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 12.76 லட்சம் கோடி செலுத்த வேண்டி நிலையை உருவாக்கி உள்ளது மோடி அரசு. இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாகுறை ரூ. 15.68 லட்சம் கோடியாக மாறியுள்ளது. இந்த சுமைகள் அனைத்தும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களை கொழுக்க வைப்பதினாலேயே ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களிடமிருந்து ரூ. 5.74 லட்சம் கோடியை வசூலிக்கும் மோடி அரசு கார்ப்பரேட்களிடமிருட்ந்து ரூ.2.10 லட்சம் கோடியைதான் வசூலிக்கிறது. கார்ப்பரேட்கள் மீதான நேரடி வரியை குறைத்து உழைக்கும் மக்கள் மீது மறைமுக வரியை அதிகரித்து வருகிறது.
மறுபக்கம் மோடியின் தெய்வீக பார்வையில் செல்வந்தர்களாக இருக்கும் 140 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு கடனுதவிகளை நிறுத்தியுள்ளார். உற்பத்தி பொருளை விலைக்கு வாங்க மறுத்துள்ளார். அவர்களின் வேளாண் நிலங்களை எல்லாம் பறித்து பஞ்சத்தில் வாடும் கார்ப்பரேட்டுகளுக்கு மலிவு விலையில் வழங்கியுள்ளார். அதானி, அம்பானி போன்ற ஏழைகளை வாழவைக்க 10 லட்சம் விவசாயிகளை கொன்று புதைத்துளளார், அவர்களின் ஒரு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று 10 ஆண்டுகளாக அவர்களை அடக்கி வருகிறார்.
மேலும் இந்த மகா பணக்காரர்களான சிறுகுறு வணிகர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மீது ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம் மறைமுக வரிகள் அதிகரித்தல் மூலமும், பாசிச கருப்புச் சட்டங்கள் மூலமும் 200க்கும் மேற்பட்ட பாசிச மசோதாக்கள் மூலமும் இந்த பணக்கார கும்பலை ஒடுக்கி, சுரண்டி வாழ வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கும் ஏழை எளிய அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவே இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பாஜக ஆட்சியிலில்லாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உரிய நிதிகளை ஒதுக்க மறுக்கிறது.
எனவே அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும், அவர்களின் சொத்துக்களை பன்மடங்கு உயர்த்தும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும்; வறுமை, வேலையின்மை விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் மீது சுமத்தப்படும் நெருக்கடிகளுக்கு எதிராகவும்; தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களையும் பறித்து இந்திய நாட்டை பெரும்பான்மை மக்களின் சுடுகாடாக மாற்றும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்திற்கும் ராணுவ பொருளாதாரத்திற்கும் சேவை செய்யும் தாராளமயக் கொள்கைகளையும், மக்கள் விரோத தேச விரோத பட்ஜெட்டை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் ஒன்றுபட்டு போராடுவோம்.
- சமரன்
(ஏப்ரல் - மே 2025)