நவதாராளமயமாகும் சூழலியல் சட்டங்கள்

இந்து தமிழ் திசை

நவதாராளமயமாகும் சூழலியல் சட்டங்கள்

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், காற்று, நீர் மாசு தடுப்புச் சட்டங்களில் பல திருத்தங்களை முன்வைத்து சட்ட வரைவுகளைக் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்தத் திருத்தங்கள் நவதாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளன.

தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்:

எந்த ஒரு தொழிற்சாலையும் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்பதே தற்போதைய நடைமுறை. இந்த அனுமதிகள் பல்வேறு ஆய்வுகள், சட்டவிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் மூலமும், மாநில அரசுகள் காற்று (மாசுபாடு தடுப்பு கட்டுப்பாடு) சட்டம் 1981, நீர் (மாசுபாடு-கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு சட்டங்கள் மூலமும், தொழிற்சாலைகளுக்கான முன் அனுமதிகளை வழங்குகின்றன.

குறிப்பாக, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான இசைவு ஆணை, இயக்குவதற்கான இசைவு ஆணை, இசைவு ஆணைகளைப் புதுப்பிப்பது, ரத்துசெய்வது, மறுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த அதிகாரங்களைக் கொண்டுதான் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களை மாநில அரசு மூடியது. அதேபோல காவிரி டெல்டா வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கும் இந்தச் சட்டங்களே காரணமாக அமைந்தன.

மாநில அரசுகளின் இந்த அதிகாரங்களைப் பறிக்கின்ற வகையில் தற்போதைய சட்ட வரைவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி ஆணையிலேயே மாநில அரசின் அனுமதிகளும் இடம்பெற வைக்க இந்தத் திருத்தங்கள் முயல்கின்றன. மேலும், மாநில அரசின் அனுமதிகளை வழங்குவது மறுப்பதற்கு உண்டான அதிகாரங்களையும் மத்திய அரசே முடிவுசெய்யும் எனத் திருத்தங்கள் கூறுகின்றன.

மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில் மற்றுமொரு சட்ட வரைவையும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவில், மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அதிகாரி இடம்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் பணிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

வெள்ளை நிற வகைப்பாடு கொண்ட தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுவுவதற்கான இசைவு ஆணை பெறுவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கும் திருத்தமும் உள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 36 வகையான தொழிற்சாலைகளை வெள்ளை நிறத் தொழிற்சாலைகளாக வகைப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு இனி மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி தேவை இருக்காது.

'தேவை'க்கு ஏற்ப மாற்றம்:

மாநில அரசுகளின் சுற்றுச்சூழலியல் சட்ட அதிகாரங்களை ஏன் மத்திய அரசு பறிக்க முயல்கிறது? 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த உடன், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், இந்தியச் சூழலியல் சட்டங்களை ஆய்வுசெய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம், காற்று (மாசுபாடு தடுப்பு கட்டுப்பாடு) சட்டம், நீர் (மாசுபாடு கட்டுப்பாடு) சட்டம், இந்திய வனச் சட்டம் ஆகிய ஆறு சூழலியல் சட்டங்களை 'தற்போதைய தேவை'க்கு (நவதாராளமயம்) ஏற்ப ஆய்வுசெய்வதே குழுவின் நோக்கமாகக் கூறப்பட்டது.

தேசியச் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் என்கிற புதிய அமைப்பை உருவாக்க இக்குழு பரிந்துரை செய்தது. அதாவது, வன அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக் கட்டுப்பாடு அனுமதி, கடலோர ஒழுங்காற்று அனுமதி ஆகிய அனுமதிகளைப் பெறத் தனித்தனியாக உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒற்றை அமைப்பு மூலம் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறியது. சுருக்கமாக 'ஒரே நாடு, ஒரே அனுமதி' முறை. இதன் மூலம் 'சுதந்திர வர்த்தகம்' சுதந்திரமாகச் செயல்படும் என்பது இதன் பின் உள்ள அரசியல். 2015ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக் குழுவால் இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், பாரதிய ஜனதா அரசு, சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையை மறைமுகமாகத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, 2020இல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டவிதிகளில் பல மாற்றங்களைக் கூறியது. மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், தனித்தனித் திருத்தங்களாக இன்றுவரை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் கருத்துக் கூறும் உரிமையை மறுக்கின்றன. தேசிய அளவில் முக்கியத்துவமான திட்டங்களுக்கு மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் மூலம் பழங்குடிகளிடம் கருத்துக் கேட்கும் உரிமை மறுக்கப்பட்டது.

அதிகரிக்கும் ஆபத்து:

தடையற்ற வர்த்தகச் செயல்பாடுகள் இருக்கும் வண்ணம் அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நவதாராளமயக் கொள்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, பெருநிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கனிமங்களைச் சுரண்டுவதையும், உற்பத்தியைப் பெருக்குவதையும், சூழலியல் பார்வையில் கட்டுப்படுத்தக் கூடாது என மறைமுகமாக அறிவுறுத்துகிறது.

காலநிலை மாற்றப் பாதிப்புகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு இடையிலான காலநிலை மாற்றக் குழு கூறுகிறது. இதனைச் சூழலியல் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுதான் நிறைவேற்ற முடியும்.

நாட்டின் இயற்கை வளப் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கின்ற வகையில், அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 39 (b) கூறுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள 1 சதவீத மக்கள், 40 சதவீத வளங்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என (World Inequality Lab, March, 2024) ஓர் ஆய்வு கூறுகிறது. மத்திய அரசின் புதிய சட்ட வரைவுகள் இந்த நிலையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

- இந்து தமிழ் திசை

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு