ஆப்பரேஷன் காகர்: கார்ப்பரேட் கொலை களம் - பாஜக ஆட்சியின் நாஜி முகாம்
சமரன் சிறப்புக் கட்டுரை

மோடி-அமித்ஷா தலைமையிலான இந்துத்துவ பாசிச பாஜக அரசு, சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக 'இறுதி நடவடிக்கை' (Operation Kagaar) என்ற பெயரில் ஒரு கொடூரமான அரசு பயங்கரவாத யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பழங்குடி மக்களின் நிலங்களை, இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக இலட்சக்கணக்கான துணை இராணுவப் படையினரை களமிறக்கி சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலை செய்கிறது. அங்கு அவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கிற மாவோயிஸ்ட் அமைப்பை ஒடுக்குகிறது. மாவோயிஸ்டுகளை காட்டி பழங்குடிகளை வேட்டையாடுவதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளார் தோழர் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 பேரை ஒரு தலைப்பட்சமான பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்திருந்த சமயத்தில் மத்திய-மாநில இரட்டை எஞ்சின் நாஜி இராணுவம் போலி என்கவுண்டரில் கொன்றிருக்கிறது.
பிரிட்டிஷ் தனது ஆட்சி அதிகாரத்தை கைமாற்றிய பிறகு இந்தியாவில் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் கடந்த 77 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே பஞ்சம், பசி, பட்டினிச் சாவுகளால் அவர்களின் வாழ்க்கை உருக்குலைந்துவிட்டது. அதனுடன் சேர்ந்து வனத்துறையும் காவல்துறையும் அம்மக்களின் வாழ்க்கையை சூரையாடிவிட்டது. பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்காக லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் நிலத்தைப் பிடுங்கி அவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியது. சோனியா-மன்மோகன் சிங் காங்கிரஸ் பாசிச கும்பல் பச்சை வேட்டை நடவடிக்கை என்ற பெயரில் இப்பகுதியில் கொடூரமான படுகொலைகளை நிகழ்த்தியது. அவையும் அடங்காமல் அரசே கூலிப்படைகளை உருவாக்கி, ஒரு இரத்தக் களறியையே நிகழ்த்தியது. இப்போது இந்த பாசிச மோடி-அமித்சா கோர மாமிச கும்பல் மிச்சம் மீதி ஒட்டியிருந்த பழங்குடிகளின் உயிரையும் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி ஆபரேசன் ககர் "இறுதி நடவடிக்கை" என்று பகிரங்கமாக பெயர் சூட்டி வேட்டையாடி வருகிறது.
காங்கிரசு ஆட்சி தொடங்கி வைத்த பழங்குடிகளின் மீதான அரசு பயங்கரவாதம்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2009ஆம் ஆண்டு "பச்சை வேட்டை" நடவடிக்கையின் போது கொடிய படுகொலைகள் நிகழ்ந்தன. "சல்வா ஜூடும்" என்ற கூலிப்படை உருவாக்கப்பட்டு, இரத்தக் களறியாய் அந்த பகுதிகள் மாற்றப்பட்டன. இந்தச் நரவேட்டையில், சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் இரண்டு ஆண்டுகளில் 644 கிராமங்கள் எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சட்டவிரோதக் கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெற்றன. 2009இல், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், "நக்சலைட்டுகள் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அபாயம்" எனக் கூறியதையும், "ஆப்ரேஷன் அனகொண்டா" எனும் பெயரில் பழங்குடிகளை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் மறக்க முடியாது.
காங்கிரசின் பாதையில் இன படுகொலை செய்யும் பாஜக அரசு
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக, மாவோயிஸ்டுகளை முற்றிலும் இல்லாதவாறு அழித்தொழிப்பதே இலக்கு என அமித்ஷா பகிரங்கமாக அறிவித்தார். அது முதல் தனது நரவேட்டையை தீவிரமாக வெறிக்கொண்டு எந்தவித வரைமுறையும் இல்லாமல் பழங்குடிகளின் மீதான தனது இன படுகொலையைத் தொடங்கியது இந்த பாசிச மோடி ஆட்சி. தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகள் எனத் தொடங்கி, தெலுங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம் வழியாக நேபாள வரையிலான மலைக்காடுகள் இயற்கை மற்றும் கனிம வளங்களால் மிகுந்துள்ளன.
இந்த பகுதிகளில் வாழும் சந்தால், முண்டா, கோண்டு போன்ற பழங்குடிகளை அப்புறப்படுத்தி, அப்பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான பாசிச அரசு செயல்படுகிறது. இந்த பழங்குடிகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்றிக்கொண்டே இயற்கை வளங்களை கைப்பற்றும் திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.
அதற்காக 2016ல் ஜார்கண்டில் தொடங்கிய "ஆப்பரேஷன் ஹில் விஜய்", 2017ல் சதீஷ்கரில் தொடங்கிய "பிரஹார்", அதன் பிறகு 2019ல் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட "ஆப்பரேஷன் தண்டர்" என தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக பழங்குடிகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அதை விரிவுப்படுத்தி "ஆப்பரேஷன் சமாதான் - பிரஹார்" நடவடிக்கையை தொடங்கினார்கள். இங்கு மிகப் பெரிய அளவில் பழங்குடிகளை வேட்டையாடியது இந்த பாசிச பாஜக ஆட்சி.
அதன் பிறகு பாசிச மோடி ஆட்சி தொடங்கிய பழங்குடிகளை அப்புறப்படுத்தும் மிகப்பெரிய திட்டமே இந்த ஆப்பரேஷன் ககர். அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "மாவோயிஸ்ட் இயக்கமே வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது" என அறிவிக்கிறார். "மாவோயிஸ்டுகளை அழித்து, நாட்டின் செல்வங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்போம்" என்று பகிரங்கமாக கார்ப்பரேட் கட்டப்பாவாக கூவுகிறார். மேலும், "அடுத்த பொதுத் தேர்தல்கள், மாவோயிஸ்ட் இல்லாத நாட்டில் நடைபெறும்" என வெளிப்படையாக அறிவிக்கிறார்.
சொந்த நாட்டு மக்களை கொல்வதற்கு ஊக்கத் தொகை
இந்த உள்நாட்டு இனப்படுகொலைக்கு வைத்த பெயர்தான் "இறுதி நடவடிக்கை" (ஆபரேஷன் ககர்). பாஜக அரசு, ஒரு லட்சம் கோடிக்கு மேல் இந்த கொலைவெறி ஆட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, 80,000க்கும் மேற்பட்ட மைய துணை இராணுவப் படைகளை களமிறக்கியுள்ளது. ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைக்கோள்கள் மூலம் பழங்குடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. மாவோயிஸ்டுகளை கொன்றால் ஒரு தலைக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை என அறிவித்து அவர்களுக்கு வழங்குகிறது. சொந்த நாட்டு மக்களை இனப் படுகொலை செய்வதற்கு ஊக்கத் தொகையாம்.
இவ்வாறு கொலைகளை ஊக்குவிப்பதன் விளைவாக, காஷ்மீர், மனிப்பூர், நாகாலாந்து போன்ற பகுதிகளில் அரசுப் படைகள் கோரத் தாண்டவம் ஆடியதை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவரை கொன்றாலே அவர் மாவோயிஸ்ட் என அறிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் மீது எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை. தேசபக்தியின் பெயரில் சொந்த மக்களையே வேட்டையாடும் நாஜி மாதிரியான இராணுவம் உருவாக்கப்பட்டுள்ளது.
பழங்குடிகளின் மரணத்தையும் வணிகமாக்கும் கார்ப்பரேட் பாசிசம், தேடித்தேடி வேட்டையாடும் நாஜிப் படைகள்
2022 அக்டோபரில் ஹரியானாவில், மாநில உள்துறை அமைச்சர்கள், காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், "புதிய இந்தியா"வை உருவாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அந்த புதிய இந்தியா, மக்களின் இரத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கான சொர்க்கபுரியை உருவாக்கும் திட்டமே. இந்த நரவேட்டை திட்டமிட்டவிதமாக நடைபெற்று வருகிறது. 2023 புத்தாண்டன்று சதீஷ்கர் பிஜாப்பூர் மாவட்டம், கங்கலூர் அருகிலுள்ள முத்தும் கிராமத்தில் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தியதில், தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த மங்லி என்ற பச்சிளம் குழந்தையும், அந்தத் தாயும் கொல்லப்பட்டனர்.
மூகுவெண்டியில் ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு, அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது இரத்தம் தோய்ந்த கருவை எடுத்து இது "மாவோயிஸ்ட்" எனக் காட்டி கெக்கலித்திருக்கிறது பாசிச பாஜக இராணுவம். இது, குஜராத்தில் நடந்த கூட்டு மதவெறி கலவரத்தில் இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். - பாஜக காடையர்கள் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்முறை நிகழ்த்தி, அதன் ஆத்திரம் அடங்காமல் அப்பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை எடுத்து வெட்டி கொன்ற அதே வெறியை இப்போது இந்திய இராணுவத்திற்கு ஊட்டியிருக்கிறது.
இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு விவசாயி கொல்லப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்களாக அறிவிக்கப்பட்டனர். கம்பூர் காட்டுப் பகுதியில், பிடியா, செப்புருபட்டி, கோர்சோலி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டு, அவர்கள் வன்முறையாளர்கள் என்றும், அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் சிவப்பு இலக்கியங்கள் இருந்ததாக கதையளந்தார்கள்.
2023 ஏப்ரல் 7ல் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்தர் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனகட்டா மற்றும் ஜப்பகட்டா கிராமங்களில், ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர்களில் இருந்து இயந்திரத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இது 2021 முதல் 2023 வரை நடந்த நான்காவது விமானத் தாக்குதலாகும்.
2023 ஏப்ரல் 16 அன்று சதீஷ்கர் அபுஜ்மாட் பகுதியில் 26 பேர் உள்ளிட்ட 12 பெண்கள் - பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். கான்கர் மாவட்டத்தில் உள்ள சோட் பெதியா காடுகளில் பாதுகாப்புப் படையினர் 29 பேரை மாவோயிஸ்டுகள் எனக் கூறி கொன்றிருக்கிறது. அதற்கு வெகுமதித் தொகையாக ரூ.5.29 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்ததற்காக மட்டும் ரூ.7.55 லட்சம் அளிக்கப்பட்டது.
மே 23 அன்று "ஆபரேஷன் ஜல் சக்தி" என்ற பெயரில் நடத்தப்பட்ட மற்றொரு நரவேட்டையில், மொத்தமாக ரூ.31 லட்சம் மதிப்பிலான வெகுமதித் தொகைகள் கொல்லப்பட்டதற்கு வழங்கப்பட்டன. ரேகாவயா பகுதியில், 38 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நான்கு மைனர்கள் உட்பட பத்து பேர் "சரணடைந்த மாவோயிஸ்டுகள்" எனக் கூறப்பட்டனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் என்ற பொருள்பட கோண்டி மொழியில் "லோன் வர்ராட்டு" என்று எழுதப்பட்ட டி-சர்ட்களை அணியச் செய்து நடிக்க வைத்த பின்னரே அவர்களை விடுவித்திருக்கிறார்கள். ஏன் என்றால், சரணடையும் பட்டியலை கொடுத்தால் அதற்கும் பணம். பழங்குடிகளை எல்லாம் மாவோயிஸ்டுகளாக அறிவிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
2023 ஜூன் மாதம் மட்டும் பஸ்தார் பகுதியில் 38 என்கவுண்டர்களில் 141 பேர் கொல்லப்பட்டனர். இதில் 20 பேரின் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானவை போலி என்கவுண்ட்டர்களாக இருக்கலாம். இப்படி சொல்வதற்கு காரணம், ஊர்மிளா ஜூரி என்பவர் "என் கணவர் போட்கா கிராமத்தில் மஹுவா சேகரிக்கச் சென்றிருந்தபோது, அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்," என்று கூறியிருக்கிறார். போரோபாட்கோவிலில் பாதுகாப்புப் படையினர் கிராமத்தைத் தாக்கப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு பயந்து அக்கிராமத்தினர் அனைவரும் காட்டுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். அங்கிருந்த புகுர், மங்குவும் மற்ற குடும்ப உறுப்பினர்களும், பாதுகாப்புப் படையினரின் கைகளில் சிக்கிய பிறகு, அவர்கள் என்கவுண்டர் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள், அதே குடும்பத்தைச் சேர்ந்த சோனுவும், கோராவும் தப்பித்து ஓடும் போது குண்டு துளைத்து படுகாயம் அடைந்தார்கள். இவை முழுவதும் ஸ்க்ரால் இணையதளத்துக்கு அங்குள்ள கிராமவாசிகள் நேரடியாகவே கூறியுள்ளார்கள்.
அரசு, பழங்குடிகளை வேட்டையாடுகிறது. வளர்ச்சி திட்டங்களின் பெயரில் கார்ப்பரேட் திட்டங்களை எதிர்ப்பவர்களை தேசத் துரோகிகள் எனக் குற்றம்சாட்டுகிறது. குழந்தைகள் வரை சுடப்படுகின்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடைபெற்றிருக்கின்றன. சித்தரவதைகளுக்குள்ளாகி பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
"எங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்" என்று பழங்குடி மக்கள் வீதிகளில் போராடுகிறார்கள். ஆனால், இந்த நரவெறி நடவடிக்கைகளை, இந்த நாஜி வதை முகாம்களை மூடி மறைத்து இவர்கள் பயங்கரவாதிகள்தான் என்று கார்ப்பரேட் ஊடகங்களும் தன் பங்கிற்கு ஜனநாயகத்துக்கு சங்கு ஊதுகிறது. படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.
பழங்குடிகளுக்காக போராடுபவர்களையும் படுகொலை செய்யும் மோடி அரசு
எதிரி நாடுகள் மீது பயன்படுத்தும் வான்வழி குண்டுகளை போட்டும் பழங்குடி மக்களை கொத்து கொத்தாக கொல்கிறது. சதீஷ்கரில் மட்டும் 2023 டிசம்பரில் விஷ்ணுதேவ் சாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இரட்டை எஞ்சின் அரசு என்று சொல்லிக்கொண்டு இதுவரையில் 450 க்கும் மேற்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் என கூறி படுகொலை செய்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், சிலர் காணாமல் போயினர். 2024ல் மட்டும் 219 பேர் கொல்லப்பட்டனர். 2025ஆம் ஆண்டு இதுவரையில் 108 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்திய நாட்களில் இந்த இரத்தவெறிக்கொண்ட மோடி-அமித்ஷா கும்பல் ஒரு அரசு பயங்கரவாத நடவடிக்கையை செய்திருக்கிறது. மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் நம்பல கேசவராவ் என்ற பசவராஜூ மற்றும் அவருடன் இருந்த தோழர்கள் 27 பேரை சுட்டுக் கொன்றுள்ளது.
முதல் கட்டத்தில் மாநில பாஜக அரசு கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்து பழங்குடிகளையும் மாவோயிட்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இராணுவத்தை ஏராளமாக குவித்து சுற்றி வளைத்தே இந்த நிபந்தனையை முன்வைத்தது. அச்சமயம் இந்த நிபந்தனையை பழங்குடிகளும் மாவோயிட்களும் ஏற்கவில்லை. மாவோயிஸ்ட்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவே விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில்தான் அவர்களுக்கு உரிய பதிலளிக்காமல் பசப்பிக் கொண்டே இன்னொருபுறம் ஒரு லட்சம் இராணுவத்தை கொண்டு இந்த படுகொலையை அரங்கேற்றியிருக்கிறது அமித்ஷா கும்பல்.
பாசிச பாஜகவின் பழங்குடிகளின் மீதான இந்த கோரத்தாண்டவம் ஏன்?
பாதுகாப்பு, மின்னணுவியல், மின்சார வாகன மோட்டார்கள், சுகாதாரம், மருத்துவ சாதனங்கள், விண்வெளி மற்றும் காற்றாலை, சோலார் பேனல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் பல்வேறு தொழில்களுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிக்க அருமண் தனிமங்கள் தேவைப்படுகிறது. அருமண் தனிமங்களான (Rare Earth Elements - REE) லித்தியம், கிராஃபைட், வனேடியம், கோபால்ட், மாங்கனீசு, டங்ஸ்டன், நிக்கல், மாலிப்டினம், பாஸ்போரைட், பொட்டாஷ், க்ளுகோனைட் போன்ற தனிமங்களுக்கான தேவை அதிகரிப்பதால் இந்த மூலப்பொருள்களை கைப்பற்றுவதற்கான போட்டி கடுமையாக மாறியிருக்கிறது.
அத்தனிமங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளது. இதை கைப்பற்றுவதற்காக உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும், ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளும் யுத்தவெறிக் கொண்டு அலைகிறது.
சத்தீஸ்கர்: கனிமங்களை கைப்பற்றும் போட்டி
சத்தீஸ்கரில் உள்ள ஜென்ஜா மற்றும் கட்கோரா பகுதிகளில் காணப்படும் லித்தியம் இருப்புகளை கைப்பற்ற வேதாந்தா, ஜிண்டால், அதானி ஓலா எலெக்ட்ரிக், ஸ்ரீ சிமெண்ட், ஓரியண்ட் டால்மியா, மற்றும் ருங்தா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அங்கு பால்கோ நிறுவனம் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் அரசு, மேற்கு கோர்பா எனர்ஜி கம்பெனி லிமிடெட்டை நிறுவ நிலம் கையகப்படுத்தி வருகிறது. இந்த நோக்கத்திற்காக அந்நிலத்தினை கைப்பற்ற அவந்த் குழுமம் ஈடுபட்டுள்ளது.
சதீஸ்கர் ஹஸ்தியோ-அரண்ட், இந்தியாவின் மிக அழகான மற்றும் தொடர்ச்சியான காடுகளில் ஒன்றாகும். இங்கு சுமார் ஒரு பில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி படிமம் உள்ளது. வன உரிமைகள் சட்டம் மற்றும் அட்டவணையிடப்பட்ட பகுதிகளுக்கான பஞ்சாயத்து விரிவாக்க சட்டம் (றிணிஷிகி) ஆகியவை, அந்தக் காடுகளில் வாழ்ந்த மக்களுக்கு சட்டப்படி உரிமைகளை வழங்கின. எனினும், இந்த உரிமைகள் செயல்பாடுகளில் செல்லாக்காசாகவே மாறிவிட்டன.
பார்சா கிழக்கு மற்றும் கேட் பாசன் நிலக்கரித் தொகுதிகள் தொடர்பான இரண்டாவது கட்ட நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்காக, சமீபத்தில் 137 ஹெக்டேருக்கு மேல் காடுகள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்விடங்களில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மேற்கொள்ளும் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக, மக்கள் சுமார் 13 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மூல வளங்கள்
இந்தியாவின் மொத்த நிலக்கரி கையிருப்பில் 27.3% பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த இரும்புத் தாது கையிருப்பில் 26% ஜார்கண்டில் உள்ளது. இந்தியாவின் மொத்த தாமிரத் தாது கையிருப்பில் 18.5% பங்கைக் கொண்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ஜடுகுடா (Jaduguda) பகுதியில் யூரேனியம் சுரங்கம். லோஹர்தாகா (Lohardage, லேடேஹர் (Latehar), கும்லா (Gumla) மாவட்டங்களில் பாக்சைட் சுரங்கம் ஆகியவை உள்ளது.
இதில் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமானது விரிந்து உள்ளது. டெஸ்லா குழுமம் பேட்டரி உற்பத்தியை செய்கிறது. ஸ்பெயின் நாட்டின் சிட்ரான் (Zitron), நோவார்கி & கிரான்சோலார் (Novargi & Gransolar) ஆகியவை, IVL ஸ்வீடிஷ் பசுமை ஆராய்ச்சி நிறுவனம், தீஸ் மைனிங் (Thiess Mining, ஆஸ்திரேலியா) ஆகியவை அங்கு தனது நிறுவனங்களை விரிவுபடுத்தியிருக்கிறது. ஷாங்காய் இன்ஜினியரிங் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் (SEPCO, சீனா) அனல் மின் நிலையத்தை அபிஜீத் குழுமத்தின் கார்ப்பரேட் பவர் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது.
உள்நாட்டு ஒட்டுண்ணி கார்ப்பரேட்டுகளான JSW குழுமம்: ஜார்கண்டில் இரண்டு தாமிர சுரங்கங்களை அபிவிருத்தி செய்ய 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஹிந்தல்கோ (Hindalco): மூரியில் அலுமினா சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளது. டாடா ஸ்டீல் (Tata Steel): ஜம்ஷெட்பூரில் 6.5 மில்லியன் டன் திறனுடன் உற்பத்தி நிறுவனத்தை அமைத்துள்ளது. SAIL: போகாரோவில் ஸ்டீல் ஆலை மற்றும் இரும்புத் தாது சுரங்கங்க திட்டத்தை செயல்படுத்துகின்றது. இப்படி தற்போதைய மூலப்பொருட்களின் தேவையும், அதன் நிறுவனத்திற்கான தேவையும் அதிகம். அதனால் இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்காக கையகப்படுத்த அங்கு வசிக்கின்ற பழங்குடிகளை உள்ளிட்ட அனைத்து மக்களையும் வெளியேற்றுகிறார்கள். நாடோடிகளாக மாற்றுகிறார்கள்.
மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மூல வளங்கள்
மணிப்பூரின் உக்ரூல், தேங்நௌபால் மற்றும் சந்தேல் போன்ற மாவட்டங்களில் சுமார் 20 மில்லியன் டன் சுண்ணாம்புக்கல், குரோமைட், நிக்கல், தாமிரம், மேலகைட், அசுரைட், மாக்னடைட் மற்றும் பிளாட்டினம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை கையகப்படுத்த கார்ப்பரேட்டுகள் பழங்குடிகளை அங்கிருந்து வெளியேற்றுகிறது. சொந்த நாட்டிலேயே அம்மக்களை அகதிகளாக மாற்றுகிறது.
தேசிய சமையல் எண்ணெய் உற்பத்தி திட்டத்தின் கீழ் திரிபுரா-மணிப்பூர் மாநிலங்களில் பாமாயில் பயிரிடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் பிடியில் உள்ளது.
மூலவளங்களை கொள்ளையடித்து கொழுக்கும் கார்ப்பரேட்டுகள்
வேதாந்தா லிமிடெட் (Vedanta Ltd): சுரங்கத் துறையில் ஒரு பெரிய நிறுவனம் பல்வேறு கனிமங்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் வனேடியம் மற்றும் கிராஃபைட் சுரங்கங்களையும், கர்நாடகாவில் கோபால்ட் மற்றும் மாங்கனீசு சுரங்கங்களையும் உள்ளடக்கிய நான்கு முக்கியமான கனிமத் தொகுதிகளைப் கையகப்படுத்தியுள்ளது. ஒடிசா அரசு, வேதாந்தாவுக்கு கலஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களின் சிஜிமாலி மலைப்பகுதியில் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான குத்தகை வழங்கியுள்ளது
ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc): வேதாந்தாவின் துணை நிறுவனம். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் டங்ஸ்டன் கனிமத் தொகுதிகளைப் பெற்றுள்ளது.
ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited - OIL): அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராஃபைட் மற்றும் வனேடியம் தொகுதியை வென்றுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric): மின்சார வாகனங்களுக்கு பெயர் பெற்ற ஓலா எலக்ட்ரிக், EV பேட்டரிகளுக்கான மூலப்பொருட்களைப் பெறுவதற்காக ஏலங்களில் பங்கேற்றுள்ளது.
மைக்கி சவுத் மைனிங் பிரைவேட் லிமிடெட் (Maiki South Mining Private Limited): கொல்கத்தாவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற - மூன்று ஆண்டுகள் மட்டுமே அனுபவம் பெற்ற நிறுவனம். சத்தீஸ்கரில் லித்தியம் தொகுதியை எடுத்த இந்தியாவின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
சாகர் ஸ்டோன் இண்டஸ்ட்ரீஸ் (Sagar Stone Industries): உத்தரபிரதேசத்தில் பாஸ்போரைட் தொகுதியை கையகப்படுத்தியுள்ளது.
அக்ரசென் ஸ்பாஞ்ச் பிரைவேட் லிமிடெட் (Agrasen Sponge Private Ltd): ஒடிசாவில் 45.7 கோடி டன்னுக்கான இரண்டு கிராஃபைட் மற்றும் மாங்கனீசு தாதுத் தொகுதிகளை ஏலத்தில் வென்றது.
டால்மியா பாரத் ரெஃப்ராக்டரிஸ் (Dalmia Bharat Refractories): தமிழ்நாட்டில் இலுப்பகுடி கிராஃபைட் தொகுதியை ஏலத்தில் பெற்றது.
குண்டன் கோல்ட் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Kundan Gold Mines Private Limited): ஒடிசாவில் உள்ள அக்கர்கட்டா கிராஃபைட் தொகுதியை 13.05% குறைந்த பிரீமியம் தொகைக்கு பெற்றது.
முதல் சுற்று ஏலங்கள்: 2023ஆம் ஆண்டு 20 முக்கியமான கனிமத் தொகுதிகளுக்காக தொடங்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 56 ஏலங்கள் பெறப்பட்டன.
இரண்டாம் சுற்று ஏலங்கள்: 2024 மார்ச் மாதம் சுமார் ரூ. 30 டிரில்லியன் (சுமார் $362 பில்லியன்) மதிப்புள்ள 18 முக்கியமான கனிமத் தொகுதிகளுக்கு தொடங்கப்பட்டது. இந்தத் தொகுதிகளில் டங்ஸ்டன், வனேடியம், கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற கனிமங்கள் எட்டு மாநிலங்களில் அடங்கும்.
இந்த மூலப் பொருட்களை ஏலத்தின் மூலம் அடைந்த லாபத்தின் அளவே கார்ப்பரேட்டுகளின் கோரப்பசியை எடுத்துக்காட்டும். கடந்த 8 ஆண்டுகளில்,
சத்தீஸ்கர் வருவாய் 620% உயர்ந்துள்ளது.
ஜார்கண்ட் - 425% உயர்ந்துள்ளது,
கர்நாடகா - 316% உயர்ந்துள்ளது,
என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகிறார்.
மத்திய பிரதேசம் - ரூ.38,100 கோடியும், ஜம்மு காஷ்மீர் - ரூ.45,000 கோடியும் ஒரு ஏலத்தில் மட்டும் லாபம் பெற்றது.
அமெரிக்க நலனிலிருந்தே அரிய கனிமங்கள் இந்தியாவிலிருந்து அபகரிக்கப்படுகிறது
வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி அரிய கனிமங்களின், மூலப்பொருள்களின் தேவையை அதிகமாக்கியிருக்கிறது. இன்று அருமண் தனிம மூலப்பொருளில் 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய REE உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் பங்காக இருந்தது (356 kt இல் 240 kt). அமெரிக்கா 12.2% பங்கைக் கொண்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய ஏற்றுமதி மதிப்பில் 64% மற்றும் அதன் அளவில் 86% சீனா பங்களிக்கிறது. இதிலிருந்தே சீனாவின் ஆதிக்கத்தை அறியமுடியும். தனது கனிம ஏகபோகத்தை தக்கவைத்துக்கொள்ள சீனா ஆப்பிரிக்கா உட்பட பல தென் அமெரிக்க நாடுகளையும், ஆசிய நாடுகளையும் கடன் வலையில் வீழ்த்தியும், ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக சீனா அருமண் கனிமங்களின் விலைகளை சர்வதேச சந்தையில் ஏற்றிக்கொண்டே வருகிறது.
அமெரிக்கா அருமண் தனிம உற்பத்தியில் 2023ல் 12.2% பங்கை மட்டுமே கொண்டிருந்தது. தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள சீனாவை மையப்படுத்தி தனது இராணுவக் கொள்கைகளை வகுத்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பே இந்த போட்டி கடுமையாக மாறியது. அதற்குப் பிறகு ஏற்பட்ட மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடி மூலப் பொருளுக்கான போட்டியை கடுமையாக்கியது. சீனாவிற்கு போட்டியாக, மாற்றாக கனிம வளங்களுக்கு தாய்லாந்தை தன் பிடியில் கொண்டுவர கடும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது. மாற்று கனிம வளங்கள் அதிகமாக கொட்டிக் கிடக்கிற குவாட் கூட்டமைப்பின் மூலம் ஆஸ்திரேலியாவையும், ஜப்பான் மூலம் இந்தியாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியது.
டிரம்ப் ஆட்சி 2.0 க்குப் பிறகு, அமெரிக்கா-சீனா இடையிலான அருமண் கனிம கைப்பற்றலுக்கான போட்டி மேலும் தீவிரமான மற்றும் மூர்க்கமான கட்டத்துக்குச் சென்றுள்ளது. "அமெரிக்காவே முதன்மை" என்ற கொள்கையின் கீழ், டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான டெக்-பாசிச ஆட்சி சீனாவின் மேலாதிக்க முயற்சியை முறியடிக்க தனது வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. சீனாவின் மீது கடுமையான வரி விதிப்பை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இதற்குப் பதிலாக, சீனா தனது மேலான்மையை பாதுகாப்பதற்காக, முக்கியமான கனிமங்கள் மற்றும் உயர் செயல்திறன் காந்தங்களின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவின் ஆட்டோமொபைல், விமானம், குறைக்கடத்தி தொழில், இராணுவ ஒப்பந்த நிறுவனங்கள், ட்ரோன்கள், ரோபோக்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட பல தொழில்துறைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் மேலும் கடும் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்க இந்தியாவின் மீது மேலதிக நெருக்கடியை அதிகமாக்குகிறது. ஏற்கெனவே பார்த்தது போல் சதீஸ்கர், ஜார்கண்ட், மனிப்பூர் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் இந்த அருமண் தனிமங்கள் நிறைந்துள்ளது. அமெரிக்கா அதைக் கைப்பற்ற கடும் முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே சதீஸ்கர், ஜார்கண்ட், மணிப்பூர் போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள அருமண் தனிமங்களை கைப்பற்றுவதற்கு இப்போது புதிய கொள்கைகளை அமெரிக்கா வகுத்து திணித்து வருகிறது.
அதன் அண்மை ஒப்பந்தமான இந்தியா - அமெரிக்க கூட்டு அறிக்கை (பிப்ரவரி 13, 2025)யில் வெளிப்படையாகவே திணித்திருக்கிறது. அதில் 22வது ஏற்பானது:
"வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கு முக்கியமான கனிமங்களின் போர்த்தந்திர முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இந்தியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பை துரிதப்படுத்தும் மற்றும் முழு முக்கியமான கனிம மதிப்புச் சங்கிலியிலும் முதலீட்டை ஊக்குவிக்கும், அதே போல் அமெரிக்காவும் இந்தியாவும் உறுப்பினர்களாக உள்ள கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மை மூலம், முக்கியமான கனிமங்களின் ஆய்வு, நன்மை பயக்கும் தன்மை மற்றும் செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. இதற்காக, அலுமினியம், நிலக்கரி சுரங்கம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற கனரக தொழில்களில் இருந்து முக்கியமான கனிமங்களை (லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய மண் உட்பட) மீட்டெடுத்து செயலாக்குவதற்கான ஒரு புதிய அமெரிக்க-இந்தியா திட்டமான மூலோபாய கனிம மீட்பு முயற்சியைத் தொடங்குவதாக" தலைவர்கள் அறிவித்தனர்.
மேற்கண்ட அமெரிக்காவின் தேவையிலிருந்து வேகமாக அரிய தனிம கனிமங்களை கைப்பற்ற வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் பாலஸ்தீனமாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும் வேட்டையாட வேண்டும். அடிபணியும் இந்தியா போன்ற நாடுகளை ஒப்பந்தம் மூலமாகவும், நிதிமூலதன ஆதிக்கத்தின் மூலமாக கைப்பற்றுவது என்ற கொள்கையை அமெரிக்கா செயல்படுத்துகிறது.
இராணுவ மோதலை செய்து கொண்டே பேச்சுவார்த்தை நாடகமாடும் பாசிச மோடி ஆட்சி
பிஜேபியின் அரசாங்கம் மரங்களை வெட்டுவதுடன், சுரங்கங்களைத் தோண்டுவதற்கான இரண்டாம் கட்ட முயற்சிகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமூக வன வள உரிமைகள் (CFRR) இரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். போலியான கிராம சபை கூட்டங்கள் மூலம் சுரங்கங்களுக்கு அனுமதி பெறுவது வழக்கமாக உள்ளது. நிர்வாகத்தில் எங்களால் முடிந்தவரை அனைவரையும் நாங்கள் சந்தித்துள்ளோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.
சத்தீஸ்கர் பகுதியில் பல லட்சம் கோடி வருமானம் தரும் இயற்கை வளங்களை சுரண்ட எளிய பழங்குடி மக்களிடமிருந்து நிலங்களைப் பறிக்க முடியவில்லை. பழங்குடி மக்கள் தங்கள் நலன்களுக்காக மட்டுமல்ல, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இந்த நாட்டு மக்களின் நலன்களுக்காகவுமே இரத்தம் சிந்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வுக்கானப் போராட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. அதனால் ஒரு அரசு பயங்கரவாத யுத்தத்தை பாசிச பாஜக அரசு மூர்க்கமாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் பெயரில் அப்பாவி பழங்குடிகள் கொல்லப்படுகின்றனர். பழங்குடி மக்களின் சொத்துக்களை அழிப்பதன் மூலம் அவர்களை வெளியேற்ற முடியும் என்று கருதி அவர்களின் சொத்துக்களை அழிக்கிறது, கிராமங்களை கொளுத்துகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் இராணுவ நடவடிக்கைக்கு செலவழிக்கும் இந்த பாஜக அரசு அதில் ஒரு சிறு பகுதியை கூட பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒதுக்கவில்லை. இந்த பாசிச ஆட்சிக்கு நோக்கம் அதுவல்ல. தனது லாப வேட்டைக்கு தடையாக இருந்தால் இந்துவும் ஒன்றுதான், இஸ்லாமியர்களும் ஒன்றுதான் என்கிறது பாசிச மோடி கும்பல்.
ஏற்கெனவே மனிப்பூரில் "கிழக்கை நோக்கி செயல்படு" என்ற பெயரில் அதானியிடமும், அம்பானியிடமும், ஜப்பான் ஏகாதிபத்திய நிறுவனங்களிடமும் இயற்கை வளங்களை ஒப்படைக்க குக்கி பழங்குடிகள் உட்பட பல பழங்குடிகளை மதவெறியைத் தூண்டி வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் விதவிதமாக இந்துத்துவ மதவெறியைத் தூண்டி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது. அதே காரணத்திற்காகவே சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், மாவோயிஸ்ட் இயக்கம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதே சமயத்தில், "மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்" என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார். கூடவே பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக "கார்ப்பரேட்டுகள் தமது சுரங்கப் பணிகளை செய்வதற்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும்" என்று முதலமைச்சர் நாடகமாடினார். மறுபுறம் இராணுவத்தைக் கொண்டு வான் வழியாக ஹெலிகாப்டர், டிரோன் மூலம் மத்திய பாசிச பாஜக அரசு தனது தாக்குதலை நடத்தியது. இதுதான் இரட்டை எஞ்சின் சர்க்கார்.
பழங்குடிகளை வேட்டையாடுவதை எதிர் கட்சி என்று சொல்லிக்கொள்கின்ற காங்கிரசும் பாஜகவின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறது. இது காங்கிரசின் கடந்த கால கொள்கைதான் என்றும் இதைத்தான் பாஜக பின்பற்றுவதாக பெருமை பேசுகிறது. இது தண்டகாரன்யா முழுவதும், கிழக்கு மாநிலங்களிலும் இதே கொள்கையை கடந்த காலங்களில் காங்கிரஸ் செயல்படுத்தியது. மனிப்பூரில் "கிழக்கை நோக்கி" என்ற பெயரில் செயல்படுத்தியது.
இந்த நிலையில்தான் இந்திய பாசிச மோடி ஆட்சிக்கு உடனடியாக சதீஸ்கர், ஜார்கண்ட், கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைகள், காடுகள் உட்பட அனைத்து இடங்களையும் உடனடியாக கைப்பற்றி கார்ப்பரேட்டிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்கா கொடுக்கிறது. மலை, காடுகளில் வாழும் இந்தியாவின் பழங்குடி மக்களுக்கு எதிரான ஒரு புதிய வன்முறைச் சுற்றுச்சூழலை உருவாக்குகிறது. மலை, காடுகளில் வாழும் மக்களை வேறிடங்களுக்கு நகர்த்துதல், அவர்களின் உரிமைகளை பறித்தல், எதிர்ப்பின் பெயரில் அவர்களை தாக்குதல் அல்லது படுகொலைக்கு உள்ளாக்குவது போன்ற செயல்களை செய்கிறது. தன் தேவைக்கு எதையும் அழிப்பதற்கு இந்த ஏகாதிபத்தியங்கள் தயங்கப் போவதில்லை. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆபரேஷன் ககர் நடவடிக்கையை பார்க்கவேண்டும். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவைக்காக இங்குள்ள தரகு முதலாளிகளோடு கைக்கோர்த்துக் கொண்டு வேகமாக கனிமங்களை சுரண்டுவதற்கு கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் நடவடிக்கையே. எல்லா அடிப்படை வர்க்கமும் ஒடுக்கப்படுவதும், சுரண்டப்படுவதும் ஏகாதிபத்திய நலனிலிருந்தும், அவர்களுக்கு சேவை செய்யும் உள்நாட்டு கார்ப்பரேட் நலனிலிருந்துமே செய்கிறது.
அனைத்து வர்க்கங்களும் ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆப்பரேசன் ககர் என்பது ஏதோ பழங்குடிகளின் பிரச்சினையாக நினைத்து ஒதுங்கிவிட முடியாது. அது இந்திய நாட்டை அந்நிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்வது. கார்ப்பரேட்டுகளின் பிடியில் இந்திய நாட்டை ஒப்படைப்பது. அதற்கு தனது ஆக்டோபஸ் கரங்களால் பாசிச ஒடுக்குமுறையை ஏவி ஒடுக்கும் இந்த பாசிச பாஜக அரசையும், அதற்கு சேவை செய்யும் மாநில அரசு அதிகாரத்தையும் எதிர்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்பை மையப்படுத்தி சமரசமில்லாமல் போராடுவதற்கு நாடுமுழுவதும் ஒரு பரந்தப்பட்ட வெகுஜன இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலமே அரசு பயங்கரவாதத்தை பாசிச ஆட்சியினை முறியடிக்க முடியும். இன்னொரு சுதந்திரப் போருக்கு நாட்டு மக்களை தட்டி எழுப்ப வேண்டும். அப்போதுதான் அரசின் அனைத்துவிதமான பங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.
- சமரன்
(ஜூன் -ஜூலை இதழில்)