அமெரிக்காவில் நுழைய 12 நாட்டவருக்கு தடை ஏன்? யாருக்கெல்லாம் விதிவிலக்கு?
பிபிசி தமிழ்

தேசிய பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படலாம் என்ற காரணத்தால், 12 நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கும் ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அந்த 12 நாடுகளுடன் சேர்த்து கூடுதலாக பிற ஏழு நாடுகளுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் குடிமக்கள் குறிப்பிட்ட அளவிலான பயணக் கட்டுப்பாடுகளை மட்டும் எதிர்கொள்வார்கள்.
"பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டால்", இந்தப் பட்டியல் திருத்தப்படலாம். மேலும், உலகம் முழுவதும் இருந்து புதிய அச்சுறுத்தல்கள் தோன்றும்போது கூடுதல் நாடுகளும் சேர்க்கப்படலாம்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்குத் தடை விதித்து, டிரம்ப் இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டில், தனது முதல் பதவிக் காலத்திலும் டிரம்ப் இதேபோன்ற ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார்.
எந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன?
ஆப்கானிஸ்தான்
மியான்மர்
சாட்
காங்கோ குடியரசு
எக்வடோரியல் கினியா
எரித்திரியா
ஹைட்டி
இரான்
லிபியா
சோமாலியா
சூடான்
ஏமன்
மேற்குறிப்பிட்டுள்ள 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா செல்வதைத் தடை செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு இந்த 12 நாடுகளுடன் சேர்த்து வேறு ஏழு நாடுகள் மீதும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை,
புருண்டி
கியூபா
லாவோஸ்
சியரா லியோன்
டோகோ
துர்க்மெனிஸ்தான்
வெனிசுலா
இந்த ஏழு நாடுகளும் முழுமையான தடையை அல்லாமல், குறிப்பிட்ட சில தடைகளை மட்டும் எதிர்கொள்கின்றன. இந்தத் தடையானது திங்கட்கிழமை காலை 12:01 (05:01 BST) முதல் அமலுக்கு வருகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னெச்சரிக்கை ஏதுமின்றி இதேபோன்ற ஒரு தடையை அமல்படுத்தியபோது நாடு முழுவதும் விமான நிலையங்களில் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்க, முன்னதாகவே இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை எப்போது வரை நீடிக்கும் என்று எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால், தடை குறித்து அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டது ஏன்?
இந்த "பொது அறிவு அடிப்படையிலான கட்டுப்பாடுகள்", அமெரிக்கர்களை "ஆபத்தான வெளிநாட்டவர்களிடம் இருந்து பாதுகாக்கும்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொலராடோவில் உள்ள போல்டரில் சமீபத்தில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாதத் தாக்குதல், "சரியாகப் பரிசோதிக்கப்படாத" வெளிநாட்டு குடிமக்கள் ஏற்படுத்தும் "தீவிரமான ஆபத்துகளைத் தெளிவாகக் காட்டுகிறது" என்று ட்ரூத் சோசியல் எனும் சமூக ஊடகத்தில் டிரம்ப் ஒரு வீடியோவை பதிவிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமையன்று கொலராடோவில், இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு ஆதரவாகச் ஒன்றுகூடிய குழுவின் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.
அவர், தீ பற்ற வைக்கும் சாதனங்கள் இரண்டை வீசியும், தற்காலிகமாக செய்யப்பட்ட தீ பற்ற வைக்கும் சாதனத்தையும் கொண்டு அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் எகிப்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால், தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் எகிப்து இடம்பெறவில்லை.
எகிப்து தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன், டிரம்ப் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார். கடந்த காலங்களில் டிரம்ப் அவரை "தனக்குப் பிடித்த சர்வாதிகாரி" என வர்ணித்துள்ளார்.
யாருக்கெல்லாம் விதிவிலக்கு?
பின்வரும் விதிவிலக்குகளின் காரணமாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பலரும் அமெரிக்காவுக்குள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது:
2026 உலகக்கோப்பை அல்லது 2028 ஒலிம்பிக் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்காகப் பயணிக்கும் விளையாட்டு வீரர்கள்
"இரானில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கான குடியேற்ற விசா" வைத்திருப்பவர்கள்
சிறப்பு புலம்பெயர்ந்தோர் விசாக்களை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்
அமெரிக்காவின் "சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள்"
பயணத் தடையில் சேர்க்கப்படாத நாடுகளில் குடியுரிமை பெற்ற இரட்டை குடிமக்கள்.
மேலும், ஒரு நபர் "அமெரிக்காவின் தேசிய நலனுக்கு சேவை செய்வதாக" கருதப்பட்டால், அந்த நபர் தடை செய்யப்பட்ட நாட்டில் இருந்து வந்திருந்தாலும், அவரை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கும் அதிகாரம் வெளியுறவுத் துறை செயலருக்கு உண்டு. அவரால் "ஒவ்வொரு வழக்குக்கும்" தனிப்பட்ட முறையில் விதிவிலக்குகளை வழங்க முடியும்.
தடை குறித்தான எதிர்வினை என்ன?
சட்டரீதியான சவால்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டிரம்பின் சமீபத்திய உத்தரவு, அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் உடனடி எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா, அமெரிக்காவுடன் இணைந்து பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதைத் தீர்க்க உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா உடனான "நீண்ட கால உறவைத் தனது நாடு மதிக்கிறது" என்று அமெரிக்காவுக்கான சோமாலிய தூதர் தாஹிர் ஹசன் அப்டி, ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்காவில் இருப்பது வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் பெரும் ஆபத்தாக இருக்கலாம்" என்று வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"டிரம்பின் முதல் காலத்தில் இருந்த இஸ்லாமியர்களுக்கான தடையை விரிவுபடுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் நம்மை மேலும் தனிமைப்படுத்தும்" என்று வாஷிங்டனை சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் (அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்) பிரமிளா ஜெயபால் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டான் பேயர், அமெரிக்காவை நிறுவிய தலைவர்களின் கொள்கைகளை டிரம்ப் "வஞ்சித்தார்" என்று கூறியுள்ளார். மனித உரிமை அமைப்புகளும் இந்தத் தடையை விமர்சித்துள்ளன.
"பாரபட்சமான, இனவெறி மிக்க மற்றும் முழுமையாக கொடூரமான அறிவிப்பு" என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அமெரிக்க பிரிவு இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது.
மறுபுறம், அதிபர் "மற்றொரு குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தண்டனை நடவடிக்கையை எடுத்துள்ளார்" என்று அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பான 'ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்ட்' தெரிவித்துள்ளது.
கடந்த முறை என்ன நடந்தது?
கடந்த 2017இல் முதல் முறையாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற போது, பயணத் தடைக்கு உத்தரவிட்டார்.
சமீபத்திய பயணத் தடையில் பட்டியலிடப்பட்டுள்ள இரான், லிபியா, சோமாலியா போன்ற நாடுகள் மீது கடந்த முறையும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட ஏழு நாடுகள் இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகளாக இருந்ததால், விமர்சகர்கள் இதை "இஸ்லாமிய தடையாக" குற்றம் சாட்டினர். பின்னர், அமெரிக்கா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் உடனடியாக இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
அதன் பின்னர் வெள்ளை மாளிகை அந்தக் கொள்கையைத் திருத்தி, இறுதியில் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் அல்லாத இரண்டு நாடுகளான வடகொரியா மற்றும் வெனிசுலாவை அந்தத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்தது.
அதை உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. டிரம்புக்கு பிறகு அதிபராகப் பதவியேற்ற அதிபர் ஜோ பைடன், 2021இல் அந்தத் தடையை ரத்து செய்து, அதை "எங்கள் தேசிய மனசாட்சி மீதான ஒரு கறை" என்று குறிப்பிட்டார்.
(எழுதியவர், விக்டோரியா போர்ன்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு