மூலமொழி நடைமுறையில் நீடிக்கிற அல்லது நீடித்த மொழி இல்லை. ஆய்வில் முன்வைக்கப்படுகின்ற ஒன்றே!

தெய்வ சுந்தரம்

மூலமொழி நடைமுறையில் நீடிக்கிற அல்லது நீடித்த மொழி இல்லை. ஆய்வில் முன்வைக்கப்படுகின்ற ஒன்றே!

'புதிய தலைமுறையின்' "The Federal" ஊடகத்திற்கு நான் அளித்த பேட்டிக்கு அடிப்படையான கருத்துகள்.

--------------------------------------------------------------------------

வீடியோவினைப் பார்க்க:

தமிழ் - கன்னடம் உறவு தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சூழலில் - மேற்குறிப்பிட்ட ஊடகத்தினர் என்னையும் பேட்டி கண்டனர். மொழியியல் மாணவன் என்ற முறையில் எனக்குக் கற்பிக்கப்பட்ட  ஒப்பீட்டு மொழியியல் (Comparative Linguistics) - ஒப்பீட்டுத் திராவிட மொழியியல் (Comparative Dravidian Linguistics) அடிப்படையில் கூறப்படுகிற கருத்துகளைக் கூறினேன். 

மேற்குறிப்பிட்ட மொழியியல் பிரிவில், மனித மொழிகளுக்கிடையே இடையே நிலவுகிற ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில்...  குறிப்பிட்ட மொழிகள் எல்லாம் நெருங்கிய தொடர்பு உடையவையா என்பதை ஆய்வுசெய்வதற்காக முன்வைக்கப்படுகிற ஒரு மொழியியல் பிரிவே ஒப்பீட்டு மொழியியல்.  

இந்த ஆய்வுமுறையில் குறிப்பிட்ட மொழிகளில் நெருங்கிய தொடர்பு உடைய - உச்சரிப்பு ( sounds or phones) அல்லது சொல் வடிவமைப்பு அல்லது சொற்பொருண்மை ஆகியவற்றில் தொடர்பு உடைய - சொற்கள் (Cognates) தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் அவற்றில் உள்ள பொதுவான பேச்சொலிகள் அல்லது ஒலியன்கள் அடிப்படையில் - தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் காணப்படும் ஒரே ஒலியன்கள் (Phonemes) அல்லது பேச்சொலிகளைக் (Sounds / phones) கொண்டு , ஒரு 'மூல வடிவத்தை (Proto-form) ' வடிவமைப்பார்கள். இந்த மூல வடிவம் ஆய்வுசெய்யப்படுகிற எந்த மொழியிலும் இருக்காது. 

இதுபோன்ற பல மூல வடிவங்களைக்கொண்ட ஒரு மொழியைச் செயற்கையாக முன்வைப்பார்கள். இவ்வாறு முன்வைக்கப்பட்ட மொழி, ஆய்வுக்கு உட்பட்ட எந்தவொரு மொழியாகவும் இருக்காது. ஆய்வு அடிப்படையில் - ஒரு ஒழுங்கு அடிப்படையில் - முன்வைக்கப்படுவதே இந்த மொழி.  இந்த மொழிதான் 'மூல மொழி (Proto-language)  என்று அத்துறையில் வழங்கப்படுகிறது. இந்த வடிவமைக்கப்பட்ட மூலமொழி நடைமுறையில் நீடிக்கிற அல்லது நீடித்த மொழி இல்லை. ஆய்வில் முன்வைக்கப்படுகின்ற ஒன்றே ( Hypothetical Common Ancestor)

ஆக, 'மூலச் சொல் வடிவமோ' அல்லது 'மூல மொழியோ' உண்மையில் நிலவாத ஒன்று. இவ்வாறு ;மூலச் சொல்வடிவம்' 'மூல மொழி' ஆய்வுக்கு உட்பட்ட மொழிகளைத் தொடர்புடைய மொழிகள் என்று அழைப்பார்கள். அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட குடும்பமொழிகள் (languages of a single family) என்று கூறுவார்கள்.

இந்த வகை ஆய்வில் இந்தியாவில் நான்கு மொழிக்குடும்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

(1) இந்தோ-ஐரோப்பியக் குடும்பம் (2) திராவிடக் குடும்பம் (3) ஆஸ்ட்ரோ- ஆசியக் குடும்ப் (4) சீன - திபெத்தியக் குடும்பம்.

திராவிட மொழிக்குடும்பத்தில் 26 மொழிகள் அடங்கியுள்ளன. இவற்றை மூன்றாகப் பிரிப்பார்கள். 

(1) வட திராவிடம் - பிராஹுயி, மால்டோ, கூடுக்

(2) நடு திராவிடம் -கோண்டி, கொண்டா, கூயி, ரண்டா, பர்ஜி, கதபா, கோலமி, பெங்கோ, நாய்க்கி , கூவி, 

தெலுங்கு. 

(3) தென்திராவிடம் - தமிழ், துளு, கன்னடம், கொடகு, தோடா, கோடா, மலையாளம்

ஒரு கட்டத்தில் தென் நடு மொழிகள் என்று ஒரு பிரிவு முன்வைக்கப்பட்டு, அதில் தெலுங்கு உள்ளடக்கப்பட்டது. 

இங்கு ஒரு கருத்தை நான் முன்வைக்க விரும்புகிறேன். சமூக அறிவியல் துறைகளில் முன்வைக்கப்படுகிற சில ஆய்வுகளில் தத்துவ, அரசியல் கண்ணோட்டங்களுக்கு இடம் உண்டு. வரலாறு, பொருளாதாரம், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகளுக்கு இது பொருந்தும். இதுபற்றிப் பின்னர் ஒரு தனிப்பதிவில் விளக்குகிறேன்.

https://www.facebook.com/share/19HGE77nJ3/

========================

'மூலமொழி' 'பெற்றோர்மொழி'  கொள்கை சரியா?

ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி, இன்றைய ஆட்சியிலும் சரி, தேசிய இனங்களைப் 'பிரித்து ஆளும்' சூழ்ச்சியே தொடர்ந்து நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக, மக்கள் தங்களது அடிப்படையான பிரச்சினைகளான விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் - ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடவேண்டிய ஒரு சூழலில் - மதம், சாதி, இனம் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு சூழ்ச்சியே இது. தமிழ் - கன்னடம் பிரச்சினை இப்போது தேவையில்லாத ஒரு பிரச்சினை. திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு திரைப்பட நடிகர் (அதிகாரப்பூர்வமாக 300 கோடிகளுக்குமேல் சொத்துள்ள ஒரு 'ஏழை') கூறிய ஏதோ ஒன்றை அடிப்படையாகக்கொண்டு, கர்நாடகத்தில் தேவையில்லாத போராட்டங்கள்! இதனால் யார் ஆதாயம் அடைகிறார்கள்?  

ஒன்றிய அரசானது தேசியக் கல்விக்கொள்கை, இந்தித் திணிப்பு. சமஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை மேற்கொண்டுவருகிற ஒரு சூழலில் இது தேவையா? மேலும் மேலும் இப்பிரச்சினையைத் 'தீவிரமாக்க' இரண்டு பக்கங்களும் நாள்தோறும் பேட்டிகள், அறிக்கைகள்! தேசிய உணர்வுக்குப் பதிலாகத் தேசிய வெறி; இன உணர்வுக்குப் பதிலாக இனவெறி; மொழி உணர்வுக்குப் பதிலாக மொழிவெறி. இவ்வாறு செயல்பட்டால்தான் பலவீனமான இந்திய ஆளும்வர்க்கங்கள் தனது இறுதி முடிவைத் தள்ளிவைக்கமுடியும்! 

'தாய் - மகள்' என்று இரண்டு தேசிய இனங்களின் மொழிகளைக் கூறியதனால்தான் தற்போது இந்தப் பிரச்சினை! 

தமிழ் - தமிழர் உணர்வு வேறு! மற்ற தேசிய இனங்களின் மொழிகளைப்பற்றிய கருத்துகள் கூறுவது வேறு. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்! 

முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருந்தேன் . . .  ''மூலமொழிக்கொள்கை'' என்பது மொழி ஆய்வில் ஒரு குறிப்பிட்ட கொள்கையே ஆகும். இது அனைவரும் ஏற்றுக்கொண்ட  கொள்கை என்று கொள்ளமுடியாது. இதற்குப் பின்னால் வர்க்க அரசியல் இருக்கிறது. 

திராவிடமொழிகள்பற்றிய தமது ஆராய்ச்சியில் கால்டுவெல் 'மூல திராவிட மொழியை' ஐரோப்பிய குடும்பத்தின் ஒரு மொழியின் 'குழந்தையாகப்' பார்த்தார். இந்தோ - ஆரியன் மொழிகளும் ஐரோப்பிய குடும்பத்தின் குழந்தையாகத்தான் சித்தரிக்கப்படுகின்றன! ஆக, மொத்தத்தில் அனைத்து மொழிகளும் 'ஐரோப்பிய மொழியின்' குழந்தைகளே! இதுதான் எல்லீஸ், வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் கருத்துகள்! இவர்கள்கூட எந்தவொரு மொழியையும் 'தாயாகவும்' மற்ற மொழிகளையெல்லாம் இதனுடைய 'குழந்தைகளாகவும்' கூறியதாகத் தெரியவில்லை!  'மூலமொழி' என்பது உண்மையில் நிலவாத . . .  ஆய்வுக்காக மீட்டுருவாக்கம் (Hypothetical reconstructed language) செய்யப்பட்ட ஒன்றே என்று கூறியுள்ளார்கள்! 

இவ்விடத்தில் மார்க்சியவாதியான ஸ்டாலின் , ரசியாவில் மொழி ஆய்வாளர் மார் என்பவரின் மொழிக்கொள்கையை விமர்சித்தபோது கூறிய சில கருத்துகளை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன். 

'மூலமொழிக்கொள்கை' பற்றிய தமது விமர்சனத்தில் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார் :

'மூலமொழிக்கொள்கை , ஒரு மொழிக்குடும்பமானது ஒரு பொதுவான, புராதன மூலமொழியில் இருந்து பிரிந்து உருவான கிளைமொழிகளை  உள்ளடக்கியது எனும் இந்தோ ஐரோப்பியச் சிந்தனைப் பள்ளியின் கொள்கையைக் குறிக்கும். 

உதாரணமாக, நவீன இத்தாலிய, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீசிய , ரூமேனிய மொழிகள் எல்லாம் இலத்தீன் மொழியிலிருந்து கிளைத்த சகோதரி மொழிகள் ஆகும். ஆரம்பத்தில் இவை வேறுபட்ட கிளை மொழிகளாகவே இருந்தன. பெரும்பாலான நவீனகிளைமொழிகள் அல்லது மொழிகளின் மூலமொழி ஒன்று இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லாதபோதும், இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் அனுமானத்தின் அடிப்படையில் ஒரு மூலமொழியை உருவாக்கினார்கள். இவர்களது பிரதான நோக்கம், ஒலிமாற்றங்களின் விதிகளுக்கு விளக்கம் அளிக்க வசதியாக இருக்கும் என்பதே ஆகும். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபிக்கச் சான்றுகள் ஏதும் இல்லை'.

'எல்லா மொழிகளும் மனித மூளையிலிருந்தே உருவானதால், மொழிகளுக்குள் ஒற்றுமைக் கூறுகள் - பொதுவான அமைப்புக்கூறுகள்  - உச்சரிப்புகள் இருப்பதாலேயே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி உருவாகும் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்குப் புறம்பானதாகும். இவை காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் இனவியல் - மொழியியல் கோட்பாடுகளை ஆகும் என்பதில் ஐயம் இல்லை. '

'மூலமொழிக் கொள்கை அல்லது மொழிக்குடும்பக் கொள்கை என்பது இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்திற்குப் புறம்பானது'. 

மொழிகளின் 'பெற்றோர் மொழி'  என்று ஒன்று கிடையாது என்று தெளிவாகக் கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட மொழியைப் 'பெற்றோர் மொழி' என்று கூறுவதன்மூலம் அந்த மொழியின் 'மேன்மைத் தத்துவம்' உருவாக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். 

'மூலமொழி' 'பெற்றோர் மொழி' என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட மொழியின் 'மேன்மையை' உயர்த்திப்பிடிக்கவே ஆகும். 

ஆகவே, 'மூலமொழியாக' 'பெற்றோர் மொழியாக ' திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்துதான் பல்வேறு 'மொழிகள்' உருவாகின என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்பது ஸ்டாலின் அவர்களது மொழிபற்றிய கருத்து ஆகும். 

ஒப்பீட்டு மொழியியல் என்பது மொழிகளுக்கிடையே உள்ள உறவுகளைக் கண்டறியவே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட மொழியைப் 'பெற்றோர் மொழியாக' ஆக்குவதற்காகப் பயன்படுத்தக்கூடாது என்பது ஸ்டாலின் கருத்து ஆகும்.  

ஆளும் வர்க்கங்கள் தேசிய இனங்களுக்கு இடையே மொழி அடிப்படையில் மோதல்களை உருவாக்கி, அதில் குளிர் காய்வதற்கே 'மூலமொழி' 'பெற்றோர் மொழி' போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆகவே தமிழ் உட்பட 26 மொழிகளும் சகோதரி மொழிகளே என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. இந்த அடிப்படையில்தான் ஒப்பீட்டு மொழியியல்' தொடரப்படவேண்டும். 

நமது தமிழ் உணர்வை வெளிப்படுத்த, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்து முன்வைக்க, தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல . . .  உண்மையில் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அடுத்தவர்களைத் தீண்டித்தான் நம்மை உயர்த்தவேண்டும் என்பது இல்லை!

'''மூலமொழி' - அதாவது ஒரு குறிப்பிட்ட மொழியிருந்துதான் மற்ற மொழிகள் பிறந்தன என்பதே சரியான கருத்து இல்லை என்பது எனது கருத்து'' என்று எனது முந்தைய பதிவொன்றில் கூறியிருந்தேன்.

https://www.facebook.com/share/p/1FoH5t3eej/

- தெய்வ சுந்தரம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு