சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடமும் (CPEC) ஜம்மு காஷ்மீரும்
தமிழில்: விஜயன்

முன்னுரை
பல்வேறு வழிகளிலும், பல்வேறு புவியியல் பரப்புகளிலும் சீனா தனது செல்வாக்கை விரிவாகமும், ஆழமாகவும் பரப்பி வருகிறது. பரந்து விரிந்த ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் அங்கமான கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் (CPEC) அப்பகுதி மக்களின் வாழ்வியலை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், காஷ்மீர் விவகாரத்தின் எதிர்காலப் போக்கை இது எங்ஙனம் புரட்டிப் போடக்கூடும் என்பதையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
பண்டைய பட்டுப் பாதையை மீளுருவாக்கம் செய்ய முனையும் சீனாவின் போர்த்தந்திரத் திட்டத்தின் நீட்சியாகவே கில்கிட் பால்டிஸ்தானில் சீனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை, சுருக்கமாக CPEC என்றழைக்கப்படும் இத்திட்டம், புதிய பட்டுப்பாதை பெருந்திட்டத்தின் அடிநாதமாக விளங்குகிறது. ஏறத்தாழ 54 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இது நிறைவேற்றப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்திற்கான விதை, 1963இல் கையெழுத்திடப்பட்ட எல்லை ஒப்பந்தத்தில் காணப்படுகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்பில், ஏறக்குறைய 5,000 சதுர மைல்களுக்கும் அதிகமான பகுதிகளைச் சட்டவிரோதமாகச் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.
ஏறத்தாழ 3,000 கிலோமீட்டர் தொலைவுக்குப் படர்ந்துள்ள சாலைகள், இரயில் பாதைகள் மட்டுமல்லாது குழாய் வழித்தடங்களை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு/வலைப்புத் திட்டமாக CPEC விளங்குகிறது. இந்த வலையமைப்பின் கணிசமான பகுதிகள் கில்கிட் பால்டிஸ்தான் நிலப்பரப்பினூடாக செல்கின்றன. இப்பகுதி, பாகிஸ்தானின் அரசியலமைப்பில் இன்றுவரை அதிகாரபூர்வமாக உள்ளடக்கப்படாததாக உள்ளது. 1947ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரிவினைக் காலம்தொட்டே, கில்கிட் பால்டிஸ்தான் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய பிராந்தியமாகவே நிடீத்து வருகிறது. முன்னதாக, இது பாகிஸ்தானின் 'வடக்குப் பகுதிகள்' என்றே அறியப்பட்டு வந்தது. பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பொறுத்தமட்டில் வடகோடியில் அமைந்துள்ள நிலப்பரப்பாக பால்டிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தானின் நிர்வாகப் பிடியில் இருந்தாலும், கில்கிட் பால்டிஸ்தான் பகுதியானது ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பிரச்சனையின் ஓர் அங்கமாகவே இன்றும் கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர், சீனாவின் பிடியிலுள்ள அக்சாய் சின் மற்றும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு, அத்துடன் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீரின் பகுதி என பரந்து விரிந்துள்ள காஷ்மீரின் முழு நிலப்பரப்புமே, 'காஷ்மீர் பிரச்சனை’ எனப்படும் தீராத பல்லாண்டுப் பிரச்சினையின் அங்கமாகவே திகழ்கின்றன. இந்த விவகாரம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்புப் பிணக்காகவே நீடிக்கிறது. கில்கிட் பால்டிஸ்தான் ஏறத்தாழ 30,000 சதுர மைல்கள் பரப்பளவை உள்ளடக்கிய மிக உயரிய மலைப் பிராந்தியமாகும். இங்கு சுமார் 20 இலட்சம் (2 மில்லியன்) பூர்வக் குடிகள் வாழ்கின்றனர். 1974ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அப்பகுதியில் கடைப்பிடித்து வந்த மாநிலக் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்தது. இது அப்பகுதியின் மக்கள்தொகை அமைப்பில் பாரிய மாறுதல்களுக்கு வழிவகுத்தது.
கில்ஜித் பால்டிஸ்தானின் சட்டப்பூர்வ நிலை
முதல் காஷ்மீர் போர் மூண்ட காலம் முதல், கில்ஜித் பால்டிஸ்தான் பகுதியைத் பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்து வருகிறது. ஆனால், கில்ஜித் பால்டிஸ்தான் ஒருபோதும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பகுதியாக முழுமையாக இணைக்கப்படவில்லை. மேலும், அது பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்டமைப்பிலோ அல்லது அதன் அரசியலமைப்பிலோகூட இடம் பெறவில்லை.
2009ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கம் கில்ஜித் பால்டிஸ்தானுக்கான அதிகாரமளித்தல் மற்றும் சுயராஜ்ஜிய அதிகாரம் வழங்கும் ஆணையை நிறைவேற்றியது. அன்றைய குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி இந்த ஆணையில் கையொப்பமிட்டார். இந்த ஆணை கில்ஜித் பால்டிஸ்தான் மக்களுக்கு ஓரளவுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் பயனாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கில்ஜித் பால்டிஸ்தான் சட்டமன்றப் பேரவையும், ஒரு கில்ஜித் பால்டிஸ்தான் மேலவையும் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக, கில்ஜித் பால்டிஸ்தான் ஒரு மாகாணத்தைப் போலவே செயல்படத் துவங்கியது. ஆயினும், அது பாகிஸ்தானின் அரசியலமைப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சனை தொடர்பான தனது சர்வதேச கடப்பாடுகளை இவ்வகையான இணைப்பு பாதிக்கும் என்பதால், கில்ஜித் பால்டிஸ்தான் பகுதியை நாட்டின் முறையான பகுதியாக அங்கீகரிக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறிவந்தது.
மறுபுறம், பாகிஸ்தானுக்குள்ளேயே கில்ஜித் பால்டிஸ்தானுக்கு ஒரு தெளிவான அரசியல் அந்தஸ்து இருப்பது மிகவும் முக்கியம் என சீனா வலியுறுத்துகிறது. கில்ஜித் பால்டிஸ்தானுக்கு அரசியல் அந்தஸ்து வழங்கினால், இஸ்லாமாபாத்தில் உள்ள மத்திய அரசுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராடிவரும் வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் என்றும், அதே வேளையில் இந்தியாவின் ஆட்சேபணைகளுக்கும் பதிலடியாக அமையும் என்றும் சீனா கருதுகிறது. இதன் பொருட்டு, பாகிஸ்தான் பிரதமர் கில்ஜித் பால்டிஸ்தானுக்கு உயரிய சட்டபூர்வமான நிலை வழங்குவது குறித்து ஆராய ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளார். அப்பகுதியில் சீனா செய்துள்ள பெருமளவிலான முதலீடுகளைப் பாதுகாப்பதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, பாகிஸ்தானின் அரசியலமைப்பில் முதல்முறையாக கில்ஜித் பால்டிஸ்தான் இடம்பெறும்; பாகிஸ்தானின் முழுமையான ஒரு மாகாணமாக மாறுவதற்கான வாய்ப்பை வேகப்படுத்தும்; காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பாகிஸ்தானின் வழக்கமான நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும். முன்னதாக, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகள் அரை-தன்னாட்சி பெற்றவை, அதாவது அவற்றுக்கு ஓரளவுக்குச் சுயேச்சை உண்டு என்றும், அவை பாகிஸ்தானின் முழுமையான பகுதி அல்ல என்றும் பாகிஸ்தான் கூறி வந்துள்ளது. முழுப் பிராந்தியத்திலும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இதுபோன்ற பகுதிகளை முழுமையாக இணைத்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் வலியுறுத்தி வந்துள்ளது.
எனினும், இந்த புதிய திட்டம் ஏற்கப்பட்டால், கில்ஜித் பால்டிஸ்தான் அரசியலமைப்பில் இடம்பெறுவதோடு, பாகிஸ்தானின் பிரதான நாடாளுமன்றத்திற்கு இரண்டு பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்கும். ஆயினும், இந்தப் பிரதிநிதிகள் வாக்களிக்கும் உரிமையின்றி, வெறும் பார்வையாளர் நிலையிலேயே இருப்பார்கள். அதாவது, கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க மட்டுமே முடியும், வாக்களிக்க இயலாது.
CPEC எதிர்ப்பு போராட்டங்களும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
கில்கிட் பல்டிஸ்தான் மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் வசிக்கும் பலர் சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களுக்கு (CPEC) எதிராகப் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். CPEC திட்டங்கள் பாகிஸ்தானுக்கும், குறிப்பாக அதன் பஞ்சாப் மாகாணத்திற்கும் பயனளிக்கக்கூடும் என்றாலும், இது கில்கிட் பல்டிஸ்தானில் உள்ள 10,000 க்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாக உள்ளது. சோஸ்டில் (கில்கிட் பல்டிஸ்தானில்) பகுதியிலிருந்து ஹவேலியனுக்கு (பாகிஸ்தானில்) உலர்ந்த துறைமுகம் இடமாற்றப்படுவதால் வேலைவாய்ப்பு இழப்புகளையும் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
கில்கிட் பல்டிஸ்தான் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், பொது உரிமைகள்கூட மறுக்கப்படுவதாக உள்ளூர் மக்களும், சர்வதேசப் பார்வையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், அவர்களுக்குப் பாகிஸ்தானின் மத்திய சட்டமன்றத்திலோ அல்லது வேறு எந்த மத்திய சட்டம் இயற்றும் அமைப்பிலோ முறையான பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதில்லை.
கில்கிட் பல்டிஸ்தானில் 22 க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளை சீனா அமைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இவை ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், கில்கிட் பல்டிஸ்தானின் பிற பகுதிகளில் இயற்கை கனிம வளங்களைத் சீனா தீவிரமாகத் தேடி வருகிறது, குறிப்பாக தங்க வேட்டையிலும் ஈடுபட்டுள்ளது. வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உள்ளூர் நில உரிமையாளர்கள் இந்த கனிமங்கள் தேடும் ஆய்வு பகுதிகளுக்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
கில்கிட் பல்டிஸ்தான் மக்கள் தங்கள் இயற்கை வளங்கள் மீதும், கனிம வளங்கள் மீதும் எவ்வித உரிமையுமற்ற நிலையில் உள்ளனர். காடுகள், மின்சாரம், சுற்றுலா, கனிமங்கள் குறித்த அனைத்து முடிவுகளும் கில்கிட் பல்டிஸ்தான் மேலாவையால்(கவுன்சிலால்) மட்டுமே எடுக்கப்படுகின்றன, இது பாகிஸ்தான் பிரதமரால் தலைமை தாங்கப்படுகிறது. அனைத்து சுரங்க உரிமங்களும் இஸ்லாமாபாத்திலிருந்து நேரடியாக வழங்கப்படுகின்றன. பாகிஸ்தானின் மத்திய அரசாங்கம் CPEC கட்டுமானப் பணிகள் குறித்த எந்தத் தேசியக் கூட்டங்களிலும் கில்கிட் பல்டிஸ்தான் அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை.
CPEC குறித்து முடிவெடுக்கும் எந்தவொரு செயல்பாட்டிலும் முற்றிலுமாகப் கில்கிட் பல்டிஸ்தான் மக்கள் புறக்கணிக்கப்பட்டதால், பாகிஸ்தான் இந்தப் பிராந்தியத்தை வளர்ச்சியின் பெயரால் சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டதாகத் தோன்றுகிறது. வழித்தடம் தங்கள் பிராந்தியத்தின் வழியாகச் சென்றாலும், கில்கிட் பல்டிஸ்தான் மக்களுக்கு CPEC மூலம் கிடைக்கும் பெரும் இலாபங்களில் எந்தப் பங்கும் கிடைக்காது.
இந்த வழித்தடம் கட்டப்படுவதால், கில்கிட் பல்டிஸ்தானின் சுற்றுச்சூழலும், இயற்கையும் பலவித பாதிப்புகளை எதிர்கொள்ன நேரிடும். கில்கிட் பல்டிஸ்தான் ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இவற்றில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மோசமான கழிவு மேலாண்மை, இயற்கை வள இழப்பு, காடழிப்பு, தாவர மற்றும் விலங்கின இனங்களின் இழப்பு, மட்டுமல்லாது குறிப்பாக பனிப்பாறைகள் உருகுதல் ஆகிய பிரச்சனைகளையும் எதிர்கெண்டு வருகிறது.
கில்கிட் பல்டிஸ்தானில் மிகுந்த நீர் வளம், பில்லியன் டாலர் மதிப்புடைய கனிம வளங்கள், சுற்றுலாவுக்கு சிறந்த தளங்களும் காணப்படுகின்றன. இங்கு செம்பு, நிலக்கரி, இரும்பு, வெள்ளி, மட்டுமல்லாது தங்க தாதுக்களும் ஏராளமாக உள்ளன. வழித்தடத்திற்காக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் இந்த கனிமங்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்திக் கொள்ளும், ஆனால் உள்ளூர் மக்களுக்கு அதற்காக எந்தவிதமான உரிமைத்தொகையும் (ராயல்டி) கிடைக்காது என்பது வருந்தத்தக்கது.
பிராந்தியத்தில் பெரும் அளவிலான யுரேனியமும் உள்ளது. கில்கிட் பல்டிஸ்தானில் குறைந்தது 5,000 பனிப்பாறைகள் உள்ளன; துருவப் பகுதிகளுக்கு வெளியே உலகில் காணப்படக்கூடிய மூன்று மிகப்பெரிய பனிப்பாறைகளும் இங்குதான் உள்ளன. சுமார் 2,500 பனிப்படல ஏரிகளும் உள்ளன. இப்பிராந்தியத்திலிருந்து 52,000 MW அளவிற்கு மின்சார உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர், ஆனால், உள்ளூர் மக்களுக்கு 150 MW மட்டுமே தேவைப்படுகிறது.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால், காரகோரம் பகுதகள், இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் நூறு ஆண்டுகளுக்குள் உருகிவிடும் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வழித்தடப் பணிகளில் பயன்படுத்தப்படும் கனரக போக்குவரத்து வாகனங்கள், கட்டுமானத்தின் போது வெளிவரும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள், இந்த பனிப்பாறைகளின் உருகுதலை மேலும் விரைவுபடுத்தும். இந்தப் பனிப்பாறைகள் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஆதாரங்களாகவும் விளங்குகின்றன.
2010 இல் ஹன்சா பகுதியில் (கில்கிட் பல்டிஸ்தானில்) ஏற்பட்ட நிலச்சரிவு, அட்டபாத் ஏரியாக உருமாறியது. மண் அரிப்பு, நிலநடுக்கங்கள், செங்குத்தான நிலப்பரப்பு, பனி உருகுதல், மழை, விவசாயம், மட்டுமல்லாது உருகும் பனிப்பாறைகளிலிருந்து ஆறுகளில் அடித்துச் செல்லப்படும் மண் ஆகியவை இந்த நிலச்சரிவுக்குக் காரணமென புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலச்சரிவு நூற்றுக்கணக்கான கிராமங்களை அழித்து, அவற்றை ஹன்சா ஆற்றின் கீழ் கொண்டு சென்று புதைத்துள்ளது; இந்த பேரழிவில் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்து போனது.
இந்த பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாகிஸ்தான் அரசு உரிய முறையில் உதவவோ அல்லது இழப்பீடு வழங்கவோ முன்வரவில்லை, இது உள்ளூர் மக்களின் கடுமையான போராட்டங்களுக்கு வித்திட்டது. அரசியல் ஆர்வலரான பாபா ஜான் இந்த போராட்டங்களை முன்னின்று வழிநடத்தினார். ஆகஸ்ட் 2011 இல், போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது, அப்போது ஆயுதமேதும் ஏந்தாத இரண்டு போராட்டக்காரர்களை - அஃப்சல் பைக் மற்றும் அவரது தந்தை ஷேர் உல்லா பைக் -பாகிஸ்தான் காவல்துறை கொடூரமாகக் படுகொலை செய்தது.
இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு, பாபா ஜான் மேலும் பல போராட்டங்களை நடத்தினார், இந்தக் கொடூரங்களுக்கு ஒரு நியாயமான விசாரணை நடத்தக் கோரி போராடினார். இதன் விளைவாக, பாபா ஜானும் அவரது சக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர், பின்னர் பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பாகிஸ்தானின் அரசியலமைப்பும் உச்ச நீதிமன்றமும் இந்தச் சட்டம் கில்கிட் பல்டிஸ்தான் பகுதிக்கு பொருந்தாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தன.
முடிவுரை
CPEC (சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை) திட்டம் சட்டவிரோதமானது மட்டுமல்லாது, சர்வதேசச் சட்டங்களுக்கும் முரணானது என்பதையே வரலாற்றுச் சான்றுகளும், தர்க்கரீதியான ஆய்வுகளும் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இராணுவ ரீதியான பலன்களைத் தரக்கூடியதாக இருப்பதோடு, 54 பில்லியன் டாலர் அளவிலான பெரு முதலீட்டைக் கொண்டதுமான இந்தப் பாதை அமைக்கும் முயற்சி, காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குரியதாக மாற்றுவத்தோடு, பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறுவதோடு, ஜம்மு & காஷ்மீர் மீதான சீனாவின் சட்டவிரோத ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும்.
கில்ஜித் பல்டிஸ்தானைத் தன் வசமாக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீர் பிரச்சினையின் அடிக்கூறுகளை மாற்றியமைப்பது மட்டுமல்லாது, இந்த சர்ச்சையில் சீனாவின் நிலையைப் பலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முதன்மையாகச் சீன நலன்களைப் பாதுகாப்பதிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் என இரு தரப்பினராலும் உரிமை கோரப்படும் ஒரு பகுதியின் ஊடாகச் அமைக்கப்படும் ஒரு பெரும் சாலையில் தனது பெரும் முதலீட்டைப் பாதுகாப்பது எளிதல்ல என்பது சீனாவிற்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். பாகிஸ்தானின் இத்தகைய நகர்வுகள், ஜம்மு & காஷ்மீர் மக்களின் விருப்பங்களையும், அவர்களது எதிர்கால நலன்களையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றன. பாகிஸ்தான் கில்ஜித் பல்டிஸ்தானை முழுமையாகத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சித்தால், ஜம்மு & காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கவும், அந்தப் பிராந்தியத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கவும், இந்தியாவுக்கு ஒரு வலுவான அரசியல் ரீதியிலான, தார்மீக ரீதியிலான காரணங்கள் உருவாகும். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கு, எந்தவொரு தீர்வையும் காண முடியாத நிலையையே இதுபோன்ற செயல்பாடுகள் உருவாக்குகின்றன. கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்த பிறகு, காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காணப்படுகிறபட்சத்தில், அங்கிருந்து வெளியேறும் எண்ணம் சீனாவுக்கு இருக்குமா என்ன?.
இந்த சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் சீனா செய்துள்ள பெரும் முதலீடு, வெறும் ஊகத்தின் அடிப்படையிலானதல்ல, அல்லது ஒரு துணிகரமான செயலும்(risk) அல்ல; மாறாக, அந்தப் பிராந்தியத்தில் தனது போர்த்தந்திர நலன்களைப் பாதுகாத்து, மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட நகர்வாகும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.efsas.org/publications/study-papers/china-pakistan-economic-corridor-and-jammu-and-kashmir/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு