வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

அறம் இணைய இதழ்

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்;

கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள்

காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற  தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்லை. அப்படி எண்ணாததாலேயே இன்று நாமெல்லாம் அவர்களை இன்று நம் முன்னோடிகளாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம்.

ஆனால், அரசியலில் வாரிசை அதிகாரப்படுத்த நினைத்தவர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படாமல், அவமானம் கொள்ளாமல் இருந்ததில்லை.

இந்திராகாந்தி; சஞ்சய்காந்தியை தன் வாரிசாக கொண்டு வந்தார். காங்கிரசின் கொள்கை, கோட்பாடு, லட்சியங்கள் பற்றி ஏதும் அறியாத சஞ்சய்காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களை அவமானப்படுத்தினார். அரசாங்க அதிகாரிகளை இஷ்டம் போல ஆட்டுவித்தார். குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தக் கூறி நிர்பந்தித்ததில் கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஆபரேஷன்கள் செய்யப்பட்டு நாடு அல்லோகலப்பட்டது.  இந்திராகாந்தி தன் மகனி கட்டுபடுத்த முடியாமல் திணறினார். இறுதியில் விமான சாகஸத்தில் சஞ்சய்காந்தி மர்ம மரணம் அடைந்தார்.

கருணாநிதி; தமிழ்நாட்டில் கருணாநிதி முதன்முதலாக தன் மகன் மு.க முத்துவை அரசியல் வாரிசாக்க நினைத்து முதலில் மக்கள் செல்வாக்கை பெற அவரை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் நடிக்க வைத்தார். மு.க.முத்து அரசியல் மேடைகளில் பிரச்சார பாடகராக வளம் வந்தார். ஆயினும் அவரால் அரசியலை உள்வாங்க முடியவில்லை. ஆனால், குடிப்பழக்கம் அவரை உள்வாங்கி வீணாகிப் போனார்.

அடுத்ததாக மு.க.ஸ்டாலினை வாரிசாக்க படிபடியாய் தயாராக்கினார். எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ,அமைச்சர், துணை முதல்வர் என தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார். ஆனபோதிலும், பொது நலன் சார்ந்த நாட்டம், தீமையை எதிர்க்கும் போர்குணம் ஏதுமற்றவராகவே ஸ்டாலின் உருவானார். மகனுக்கு போட்டியாக இருப்பவர்களாகக் கருதியவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரையிலும் தன் மகனிடம் பொறுப்பை நம்பி ஒப்படைக்க முடியாதவராகவே கருணாநிதி இருந்தார். இதனால் அப்பாவிற்கும் – பிள்ளைக்கும் பல உள் மோதல்கள் நடந்தன. எனினும், அதிகாரத்தை கடைசி வரை தன்னிடமே வைத்திருந்ததால் மற்றவர்கள் அனுதாபப்படக் கூடிய நிலைமை உருவாகாமல் தப்பித்துக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின்;  வாரிசு அரசியலால் அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் சுயசிந்தனையோ, ஆளுமைப் பண்போ இல்லாத ஒரு  பொம்மை முதலமைச்சர் என்று பெயர் எடுத்துள்ளார். அதிகாரிகளின் விருப்பப்படி ஆட்சி நிர்வாகம் கொண்டு செலுத்தப்படுகிறது. அரசியலில் தலைமைப் பண்பு இல்லாத காரணத்தால் மத்திய பாஜகவிடம் மறைமுகமாக மண்டியிட்டு அவர்களின் மக்கள் விரோத கல்வி கொள்கை, தொழிலாளர் கொள்கை, சுற்றுச் சூழல் கொள்கை, விவசாயக் கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் காலத்தில் தான் பாஜக என்ற இந்துத்துவ மதவெறிக் கட்சி தமிழகத்தில் காலூன்றும் வலிமை பெற்றது.

சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த தன் மகன் உதயநிதியை இளைஞர் அணித் தலைவராக்கினார். எம்.எல்.ஏ ஆக்கினார்.பிறகு அமைச்சர் ஆக்கிய ஸ்டாலின். அவசரகதியில் துணை முதல்வராகவும் ஆக்கிவிட்டார். நிர்வாகத்தின் அரிச்சுவடி கூட அறிய முடியாதவாராகவே இன்று வரை அதிகாரத்தில் வளைய வருகிறார் உதயநிதி.

உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதற்காக கல்வித் துறை அமைச்சராக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கல்வித் துறை சீரழிந்து கொண்டுள்ளது. இவர்களின் நண்பர் வகையறாக்களான சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன், ரித்தீஸ் ஆகியோர் பெரும் கோடீஸ்வரர்களாகி அமலாக்கத் துறையால் தேடப்பட்டனர்.  பெரியார், அண்ணா, ,திராவிடக இயக்கத்தின் பகுத்தறிவு, சுய மரியாதை, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவைக் குறித்த அடிப்படை புரிதல்களின்றி தீடீரென்று உச்சத்திற்கு உயர்த்தப்பட்ட உதயநிதி, கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் அறவே இல்லாதவராக உள்ளார். இது வரையிலான தமிழக ஆட்சிகளிலேயே மிக மோசமான நிர்வாகத்தை கொண்ட நிர்வாகமாக ஸ்டாலின் – உதயநிதி நிர்வாகம் உள்ளது.

டாக்டர் ராமதாஸ்; மிக முற்போக்கானவராகவும், நேர்மையானவராகவும் தோற்றம் காட்டியவர் ராமதாஸ். வன்னிய குல அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் சேர்ந்து இவரை முன்னிறுத்தி தலைவராக்கினார்கள். முதலில், ’தேர்தல் பாதை, திருடர் பாதை’என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி,  ’’நானும், என் குடும்பமும் அரசியலில் ஒரு போதும் அதிகார பதவிக்கு வரமாட்டோம்’’ என்றார். பிறகு, தான் இது போலக் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறி தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கினார். மகன் ஊழல் முறைகேடுகளில் திளைத்து கோடிக்கோடியாய் பொதுப் பணத்தை சுருட்டியதை பார்த்து புளகாங்கிதம் அடைந்து கட்சியின் தலைவர் பொறுப்பையும் தாரை வார்த்தார்.

கட்சித் தலைமை பொறுப்பை தந்தவுடன் மகன் அன்புமணி, தந்தையை ’சற்று ஒதுங்கி நில்லுங்கள்’ என கட்டளை இட்டார். மகனுக்கு நிர்வாகம் போதாது. உழைக்கும் பண்பும் இல்லை. கட்சியினரை அரவணைத்து செல்லும் பக்குவமும் இல்லை என்ற யதார்த்தங்களை அறிந்தும், மிகப் பெரிய பொறுப்பை தந்தார். இது கட்சியை குடும்ப சொத்தாக கருதியதால் ஏற்பட்ட மனநிலையாகும். இப்படி சில வருடங்கள் கடந்த நிலையில் மகன் அப்பனிடமே தன் தில்லாலங்கடி வேலைகளை செய்து திடுக்கிடச் செய்தார். குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட அனுசரித்து அரவணைத்து போக முடியாத அளவுக்கு மூர்க்கமான மகனால், தானே பாதிக்கப்பட்டார் ராமதாஸ்.

நிறுவனரான அப்பாவிற்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ ராமதாஸுக்கு அதிகாரமில்லை என தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், அன்புமணி. தந்தை ராமதாஸுக்கு வயதானதால், எப்படியும் மகனிடம் மட்டுமே அதிகரத்தை தந்துவிட்டுச்  செல்பவராகவும் இருப்பதால், தங்களின் எதிர்காலம் கருதி கட்சி நிர்வாகிகளில் 80 சதவிகிதமனோர் மகன் அன்புமணி பக்கம் சென்றுவிட்டனர். மருமகள் பிடியில் மகன் சென்றுவிட்ட நிலையில், தனி பெரும் தலைவராக வலம் வந்த ராமதாஸ், தற்போது கையறு நிலையில் மனதளவில் மிகவும்  சோர்வடைந்துவிட்டார். பாவம், இன்னும் என்னென்ன அவமானங்களை மகனிடம் பெற உள்ளாரோ..? இதனால், இந்தக் கட்சியும் மக்களிடம் மிகவும் செல்வாக்கு இழந்துவிட்டது.

வைகோ; வாரிசு அரசியலுக்கு சவால் விட்டதால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவரான வைகோ, பெரும் தொண்டர்கள் பலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு சிறப்பாக குரல் கொடுத்தார். அறிவும், ஆற்றலும், சலிக்காத உழைப்பும், போராட்ட குணமும் நிறைந்தவரான வைகோ, காலப் போக்கில் கட்சிக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்காமல் தளபதிகள் பலரை பறிகொடுத்தார்.

தனது வயது மூப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக தளர்வுற்ற வைகோ, கட்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக தன் மகனை உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். ஆரம்பம் தொடங்கி கொள்கை பற்றுள்ளவராக மகனை கட்சிக்குள் கொண்டு வந்து பயிற்சி தந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவரை பெரிய வியாபாரியாக்கி தான் அழகு பார்த்திருந்தார். அதனால் வைகோ மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததை எதிர்த்து பல கொள்கைப் பற்றாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். மகன் துரை வைகோவோ, கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அப்பாவை கலந்து ஆலோசித்து செயல்படுவதில்லை.

கம்பெனி உரிமையாளராக ஊழியர்களை வேலை வாங்கி பழக்கப்பட்ட மகன் துரை வையாபுரி கட்சிக்குள்ளும் மூத்த நிர்வாகிகளை அவ்விதமே நடத்த தலைபட்டு பிரச்சினைகள் வெடித்தன. தற்போது இருக்கும் திமுக கூட்டணிக்குள் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் துரைவைகோ. அப்பாவின் கட்டளையை மீறி,சமீபத்திய பொதுக் குழுவில் திமுகவிற்கு எதிராக முன்னணி நிர்வாகிகளை காரசாரமாக பேசவைத்துவிட்டார் துரைவைகோ. இதனால் மிகவும் அதிருப்தியுற்ற ஸ்டாலின், இது நாள் வரை மதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருபவர்களை ஊக்கப்படுத்தி கட்சியில் இணைக்காமல் தவிர்த்து வந்த நிலையை மாற்றி, மதிமுக அதிருப்தியாளர்களை அள்ளி கட்சிக்குள் இணைக்க மும்முரமாக செயல்பட கட்சியினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மிக பலவீனமாக இருக்கும் மதிமுக இன்னும் பலவீனப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், துரைவைகோ பாஜக தரப்பில் கூட்டணி காண பேச்சுவார்த்தையை மறைமுகமாக செய்து வருவதை எண்ணி அதிர்ச்சி அடைந்தாலும் ஏதும், செய்ய இயலாதவராக கையறு நிலையில் உள்ளார், அப்பா வைகோ. கடைசி காலத்தில் தன் மகனின் கட்சியை கரைத்து பாஜகவில் ஐக்கியமாக்கிவிடுவார்களே அந்தப் பாவிகள்… என மனம் பதறினாலும் அவரால் என்ன செய்ய இயலும்?

மேற்படி மூன்று கட்சிகளும் குடும்ப அரசியலால் பலம் இழந்துள்ளதும், தேக்க நிலையில் திணறுவதும், எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உழல்வதும் தெளிவு. கொள்கை வழிப் பயணிப்போர், குடும்ப வாரிசு அரசியல் எனும் படுபாதாள சகதிக்குள் சிக்குவதில்லை.

(சாவித்திரி கண்ணன்)

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/21988/failure-of-succession-politics/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு