இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் ஜெ.வி.பி, இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பு.ஜ வின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு

ஏஎம்கே

இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் ஜெ.வி.பி,  இடது, வலது  கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்  பு.ஜ வின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு

ஜெ.வி.பி ஒரு சிங்களப் பேரினவாத அமைப்பு. அது என்றுமே தமிழீழ மக்களுடன் சேர்ந்தது இல்லை.

1971-ல் அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியபோதும் தமிழர்களை நம்பக் கூடாது என்று சொல்லிச் சிங்கள மக்களைத் தான் திரட்டியது. அதற்குப் பிறகும் அதன் கொள்கைகளை மாற்றிக்கொண்டதில்லை.

இந்திய 'அமைதிப்படை' தமிழீழ மக்களை ஒடுக்கியபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததா? இல்லை. இந்திய - இலங்கைத் துரோக ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்கு அளிக்கப்பட்ட கேடுகெட்ட சலுகைகளைக் கூட அது எதிர்த்தது.

இத்தகைய சிங்களப் பேரினவாதக் கொள்கைகள் அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இரண்டாவது, இராணுவத் துறையில் செகுவாரா வாதத்தைக் கடைபிடித்தது. மக்கள் பாதையை அது ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே அதன் தோல்விகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழி சுமத்துவதில் பயனில்லை.

இலங்கை மேலாதிக்கத்தையும் இந்திய 'அமைதிப்படை'யின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டுப் போராட முடியாமற் போனதற்குக் காரணம் என்ன?

இந்தியப் படை இலங்கையை விட்டு (என்று சொல்வதை விட ஈழத்தை விட்டு என்று சொல்லலாம்) வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் ஒரு போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலை ஏன் ஏற்பட்டது.

சிங்கள பேரினவாத இலங்கை அரசு பல ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுத்து வருகின்ற ஒடுக்குமு றைகளை எதிர்த்து ஜெ.வி.பி அமைப்போ அல்லது வேறு எந்த முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ போராடியது உண்டா? அல்லது வேறு எந்த சிங்கள உழைக்கும் இயக்கமாவது நடத்தப்பட்டதுண்டா? இல்லையே.

ஜெ.வி.பி இலங்கையில் இந்திய 'அமைதிப்படையின்' தலையீட்டை எதிர்த்தது. ஆனால் இந்திய 'அமைதிப்படை' ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஜெ.வி.பி எதிர்த்ததுண்டா ? இல்லையே.

இந்திய 'அமைதிப்படை' ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பை மற்ற எந்தச் சிங்களக் கட்சியும் எதிர்க்கவில்லை. இலட்சோப இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள கடல் கடந்து உலக நாடுகளிலெல்லாம் தஞ்சம் புகுகிறார்கள்! 

நீங்கள் ஏன் அன்னிய நாடுகளுக்குச் சென்று அவதியுற வேண்டும்? சிங்களமும் உங்களுக்குச் சொந்தமானது தான். இங்கே வாருங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று எந்த ஒரு சிங்கள அமைப்பாவது சொன்னதுண்டா?

ஒடுக்கப்படும் தமிழீழத் தேசிய இனத்தின் மீது ஒடுக்கும் சிங்கள தேசிய இனமும் அத்தேசிய இன ஒடுக்கு முறையாளர்களின் அரசும் அடக்குமுறை தொடுப்பதை எதிர்த்து ஒடுக்கும் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவதோ அல்லது அவர்களை ஓர் அணிக்குள் கொண்டு வருவதோ சாத்தியமானது அல்ல.

=======================================================================================

முன்குறிப்பு

ஈழத் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பது என மக்கள் யுத்தக் குழு 1983-ல் தீர்மானித்தது. தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதற்கான காரணத்தை அத்தீர்மானம் பின்வருமாறு விளக்குகிறது.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தனித்தன்மைகளும் தீர்வும்:

இலங்கையில் இன்றுள்ள அரசின் வரலாற்றுப் பின்னணியையும், தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி நாட்டிலுள்ள அந்நிய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களின் கொள்கைகளையும், இவ்விஷயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளையும் பற்றிய ஆய்விலிருந்து இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையான கூறுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இன்றைய இலங்கை அரசு இரு இனங்களுக்கு சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியமல்ல. சிங்கள - தமிழ் இன ஐக்கியம் மக்கள் விரும்பி தாங்களாகவே செய்து கொண்டதல்ல. சிங்களப் பேரினம் சிறுபான்மை இனத்தினரான தமிழ் பேசும் மக்களை ஒடுக்குகின்றது.

இலங்கை ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாறிய பிறகு, இரு இனங்களுக்குமிடையில் தொடர்ந்து பூசல்களும் மோதல்களுமாகவே இருந்து வருகிறது.

இலங்கையை ஆளும் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ அரசு தவிர்க்க முடியாதவாறு சிங்கள பேரின வாதத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. சிறுபான்மை மக்களின் மீது - "தமிழினத்தின்" மீது - நடத்தப்படும் ஒடுக்கலை இவ்வரசு தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டின் அரைகாலனித்துவ அரசின் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் கூட தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறுவது ஒரு முன்னிபந்தனையாகிறது.

சிங்கள இனத் தொழிலாளி வர்க்கம் பெருந்தேசிய இன்வாதத்திற்கு இரையாகி சிறுபான்மை இனங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருமே இவ்வரசின் இன ஒடுக்கலுக்கு ஆளாக்கப்பட்டாலும் இவர்களில் ஒரு பிரிவினரான வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பாரம்பரிய தமிழரும் மற்றொரு பிரிவினரான மலையகத்தில் வாழும் தமிழரும் ஆகிய இருபிரிவினரும் இருவேறு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவராகவும், பூகோள ரீதியில் தொடர்பற்ற இருவேறு பிரதேசங்களில் வாழ்பவராகவும் உள்ளனர்.

இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் தேசிய இன மக்களும் இன்னும் பிறநாடுகளில் வாழும் தமிழரும் ஆக உலகெங்கும் வாழும் ஏழரைக் கோடி தமிழர்கள் ஒரே தேசிய இனத்தவர் அல்லர். இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழர் ஒரு தனி தேசிய இனத்தவர் ஆவார்கள். இலங்கையின் மலையகத்தில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் இனச் சிறுபான்மையினர் ஆவர். மேற்கூறப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கூறுகள் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை நிர்ணயம் செய்கிறது.

தமிழ் பேசும் மக்களது போராட்டம் நியாயமானதே!

இன்றைய சிங்களப் பேரினவாத, புத்த மதவாத அரசு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாக கொண்டிருக்கிறது. இவ்வரசின் பேரினவாதக் கொள்கையால் சிங்கள இனத்திற்கும் ஈழத்தமிழ் இனத்திற்கும் மற்றும் பிற தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் பூசல்களும், மோதல்களுமாக இருக்கிறது. இன்றுள்ள நிலைமைகளில் வர்க்கப் போராட்டம் தடையின்றி நடப்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழ் இனம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. சிங்கள தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் பேரினவாதத்திற்கு இரையாகி ஈழத்தமிழ் இனம் மற்றும் பிற தமிழ் பேசும் மக்களின் மீதும் சிங்கள ஆளும் வர்க்கம் நடத்தும் இன ஒடுக்கு முறைகளுக்குத் துணைபோகிறது. இந்நிலையில் தமிழ் ஈழத் தனி நாட்டுக்கான போராட்டமும் மலையக மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டமும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஜனநாயக போராட்டமும் நீதியானதும் உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் ஆதரிக்கத் தகுந்ததுமாகும்.

மக்கள் ஜனநாயகப் புரட்சியும் தேசிய இனப் பிரச்சினையும்

மேலும் தமிழ் இனம் சுயநிர்ணயம் பெறுவது இலங்கையின் அரைக்காலனித்துவ அரசின் வீழ்ச்சிக்கு ஒரு நிபந்தனையாக இருப்பதாலும், தமிழ் விவசாயிகளின் நிலப்பிரச்சினையுடன் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினை இணைக்கப் பட்டிருப்பதாலும், இத்தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் - தமிழ்ஈழ விடுதலைப் போராட்டம் - ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தன்மையுடையதாகும். எனவே, பாட்டாளி வர்க்கம் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கான திட்டதுடன் இந்த சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தலைமைதாங்க கடமைப்பட்டிருக்கிறது. இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் ஒரு பிரிவினரான பாரம்பரிய தமிழர்களும் (தமிழ்ஈழம்) மற்றொரு பிரிவினரான மலையக மக்களும் இருவேறு வரலாற்றுப் பின்னணியை உடையவர்களாகவும், பூகோள ரீதியில் தொடர்பற்ற இருவேறு பிரதேசங்களில் வாழ்பவராகவும் உள்ளனர். பாரம்பரிய பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கென பிரத்யேக நலன்கள் காரணமாகவும் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு மிகச் சிக்கலானதாக உள்ளது. இப்பிரச்சினைக்கான தீர்வு பின்வருமாறு அமையலாம்.

தமிழ் இன பிரச்சினைக்கான தீர்வுகள்

பாரம்பரிய தமிழர்கள் தமிழ் ஈழ தனிநாடு காண்பது. 

மலையக மக்களுக்குக் குடியுரிமை அளிப்பதுடன் ஒரு சுயாட்சி உரிமை கொண்ட மாநிலமாக்குவதும் அவர்கள் தமிழ்ஈழத்துடன் இணைவதா அல்லது சிங்கள தேசிய இனத்துடன் இருப்பதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அளிப்பது.அவர்கள் தமிழ்ஈழத்துடன் இணைய விரும்புவது இயல்பானதாகும். அவ்வாறு அவர்கள் இணைய விரும்பினால் இரு பகுதியினரும் தொடர்பு கொள்ள சிங்கள தேசிய இனம் உத்தரவாதம் செய்வது.

தமிழ் முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் அமைய இருக்கும் தமிழ் ஈழ நாட்டிற்குள் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைவது, முப்பிரிவினரின் பிரச்சினையும் அவர்களின் ஒன்றிணைந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியினால் மட்டுமே சாதிக்கக் கூடியதாகும்.

இலங்கைவாழ் தமிழ் பாட்டாளிவர்க்கம் இன்று இப்போராட்டத்தின் தலைமையை கைப்பற்றிக் கொண்டுள்ள தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை - அமிர்தலிங்கம் தலைமையில் உள்ள சமரசவாதிகளை - தனிமைப்படுத்தி விட்டு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வென்றெடுப்பதின் மூலமே இப்போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியும். சிங்கள தேசிய இனத்து பாட்டாளி மக்களையும் உண்மையான ஜனநாயகவாதிகளையும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக திரட்டுவது இவ்வெற்றியை உத்தரவாதம் செய்யும்.

இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலைமைகளில் மாற்றம் ஏற்படுமானால் அரசியல் தந்திரத்திலும் மாற்றம் ஏற்படலாம். சிங்களத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் இரு இனங்களுக்கிடையிலான பூசல்களுக்கும், மோதல்களுக்கும் முடிவு கட்டி தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் திட்டத்துடன் இலங்கையின் மக்கள் ஜனநாயக புரட்சியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை முன் வைத்து அதை நிறைவேற்றும் சக்தியுடனும் நேர்மையுடனும் போராட முன் வருவார்களானால் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான தந்திரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

மேற்குறிப்பட்டது தீர்மானத்தின் ஒரு பகுதி.

டிசம்பர் 1983 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் யுத்தம், தமிழ்நாடு குழுவால் வெளியிடப்பட்ட 'தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம், இந்திய அரசின் இராணுவ தலையீட்டை எதிர்ப்போம்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

=======================================================================================

விடுதலைப் புலிகள் மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடை இந்திய அரசின் பாசிச பயணத்தின் ஒரு வெள்ளோட்டமே

நரசிம்மராவ் அரசாங்கம் இவ்வாண்டு மே14 ஆம் நாளன்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின்மீது தடை விதித்தது. அதற்கு அடுத்த ஒரு வாரத்தில், ராஜீவ் காந்தியின் முதலாவது நினைவு நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) யின் பிரிவுகளில் ஒன்றான மக்கள் யுத்தக் குழுவின் ஆந்திர மாநில கமிட்டியின் மீதும், அதன் தலைமையின் கீழ் இயங்கிவந்த மக்கள் திரள் அமைப்புகள் மீதும் ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. நரசிம்மராவ் ஆட்சி நாட்டை அடகு வைக்கும் தேச விரோத, மக்கள் விரோத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துகிறது. இதன் விளைவாக ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து ஆளும் வர்க்கங்களை மீட்கும் பொருட்டும், இக்கொள்கைகளை அமல்படுத்துவதால் எழக்கூடிய மக்களின் எதிர்ப்புகளை நசுக்குவதற்காகவும் அது பாசிச ஆட்சி முறையை நோக்கி பயணம் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டது. இவ்விரு அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் நரசிம்மராவ் கும்பல் உருவாக்க விரும்பும் பாசிச ஆட்சி முறைக்கு முன் தயாரிப்புகள் ஆகும் என்பதை நாட்டு மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

விடுதலை புலிகள் தடை - மீண்டும் தலையிடவா?

இவ்வாண்டு மே 14- ஆம் நாளன்று விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பதியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ்காந்தியின் கொலையைத்தான் தடை விதிக்க வேண்டுமென்பதற்கு காரணமாகக் கூறுகிறது. காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் ஏன் தடை செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் சவாணை கேட்டபோது, 'ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார் என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு விடுதலைபுலிகளின் இயக்கத்தை தடை செய்ய முடியாது; ஆகையால் போதுமான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னார். ஒருபுறம் உள்துறை  அமைச்சர்  தடை  செய்வதற்கு  ஆதாரம் தேடிக்கொண்டிருந்தார். மறுபுறம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தும் வேலையில் இறங்கியது. விடுதலைபுலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் திரு.எம்.என்.ஜா கொழும்பிலிருந்து வெளியிடப்படும் சண்டே ஐலண்ட் (Sunday Island) என்ற பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

'இலங்கைத் தீவில் வடகிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசு இந்தியாவின் தலையீட்டை (the good offices of India)  ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. எங்கள் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை' என்று சொன்னார். இத்துடன் அவர் நின்றுவிடவில்லை. 'இலங்கைத் தீவின் இனச் சிக்கலை தீர்ப்பதில் இந்தியா வெறும் பார்வையாளன் அல்ல' என்றும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசாங்கம் தடைவிதித்த பிறகு திரு.எம்.என்.ஜா வெளியிட்ட கருத்துகள், எந்த நோக்கத்திற்காகத் தடை விதிக்கப்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. எல்.டி.டி.இ யுடன் பேச்சு வார்த்தையைத் துவக்குவதற்கு முன்னர் கொழும்பு எதார்த்தமாக சிந்திக்க வேண்டும் என்றும், 'இலங்கையின் இனச்சிக்கலைத் தீர்க்கும் விசயத்தில் இந்தியா ஒரு உரிமையற்ற அதற்கு சம்பந்தமில்லாத தரப்பினர் அல்ல; இதில் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பாத்திரம் உண்டு' என்றும் அவர் பேசியிருக்கிறார்.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் திரு.ஜா.வின் பேச்சுகள், இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்காகவும், இலங்கையின் இனச் சிக்கலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் உள்விவகாரத்தில் மீண்டும் தலையிடுவதற்காகவும், ஈழத்தமிழரின் விடுதலைப் போரையும், விடுதலைபுலிகள் இயக்கத்தை நசுக்குவதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை திணிக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது என்பதையும் காட்டுகிறது.

1983 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அரசாங்கம் இலங்கையின்மீது தனது மேலாதிக்கத்தை திணிப்பதற்குப் பல தந்திரங்களை கையாண்டிருக்கிறது.

இலங்கை அரசுக்கும் ஈழப் போராளிக் குழுக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்தல் (உதாரணம்: திம்பு பேச்சு வார்த்தை) என்ற வழக்கமான இராஜதந்திர வகைகளை இந்திய அரசாங்கம் கையாண்டது.

போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மறைமுகமாக தலையிடும் தந்திரத்தை அது கையாண்டது.

இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் நேரடியாகத் தலையிடும் தந்திரத்தையும் இந்திய அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

இந்திய அமைதிப்படை வெளியேறவேண்டும் என்பதில் இலங்கை பிரேமதாச அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதன் விளைவாக பிரேமதாச அரசாங்கம் இலங்கையிலிருந்து அமைதிப்படை வெளியேற வேண்டும் என்று கோரியது. அதன் விளைவாக அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் போர் ஓய்வு ஏற்பட்டது. ஆனால் அந்தப் போர் ஓய்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இலங்கை அரசு மீண்டும் புலிகள் மீது ஒரு யுத்தத்தை தொடுத்தது.

இந்திய 'அமைதிப்படை' இலங்கையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட பிறகு, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் துவங்கியதும், உள்நாட்டு அரசியல் ஸ்திரமான நிலைமை இல்லாததின் காரணமாக, இந்தியா நடுநிலை வகிப்பதாக பாசாங்கு செய்தது. அதேசமயம், இலங்கையரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் சொன்னார். இந்திய -இலங்கை ஒப்பந்தம் அங்கே அமலில் இருக்கிறது என்றும் அவர் சொன்னார். இலங்கையின் உள் விவகாரத்தில் மூன்றாம் நாடுகள் தலையிட முடியாது என வெளிவிவகார அமைச்சராக இருந்த குஜ்ரால் கூறினார். இவ்வாறு இந்திய அரசாங்கம் இலங்கையின் மீது தனக்கு மேலாதிக்கம் செலுத்தும் உரிமை உண்டு என்று கூறிவந்தது. மீண்டும் ஒரு முறை இலங்கையில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தது.

இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் நடைபெற்று வந்த யுத்தத்தில் ஒரு இழுபறியான நிலைமை (stalmet) ஏற்பட்டது. அதாவது, இரு தரப்பினரும் யுத்தத்தில் இறுதி வெற்றி பெற முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் பிரேமதாச அரசாங்கம் இப்பிரச்சினைக்கு இராணுவ முறையில் தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில் தீர்வு காணவேண்டும் என்றும் பேசி வந்தது. அதே சமயம் அது ஒருபுறம் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதும், மறுபுறம் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளைத் தொடுப்பதும் என்ற இரட்டைத் தந்திரத்தைக் கையாண்டுவந்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு பேச்சுவார்த்தை என்றும், ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக தற்காப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற முறையைக் கடைப்பிடித்து வந்தனர். விடுதலைபுலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காணமுடியாத நிலையில் பிரேமதாச அரசாங்கம் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராயிற்று.

இந்தியாவைப் புறக்கணித்து விட்டு இலங்கை அரசும், விடுதலைபுலிகள் இயக்கமும் பேச்சு வார்த்தை மூலம் தங்களுக்குள் இலங்கையின் இனச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதை இந்திய அரசு அனுமதிக்கத் தயாராயில்லை. இதை அனுமதித்தால் இலங்கை மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடியாமல் போய்விடும் என அது கருதியது. ஆகையால் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடு செய்வதற்கு ஆதாரமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறது. அது இன்னும் இலங்கையில் அமலில் இருப்பதாகக் கூறுகிறது. அத்துடன் இந்தியாவின் மேலாதிக்க நோக்கத்திற்கு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடையாக இருப்பதாக, இந்திய அரசாங்கம் கருதுகிறது. ஆகையால் தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமைப் போரையும், விடுதலை புலிகள்  இயக்கத்தையும்  நசுக்க  விரும்புகிறது.  இந்த நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்கிறது.

ஆனால் இந்த நோக்கங்களைச் சொல்லி தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிப்பதற்கு இந்திய  ம க்களின்  ஒப் புதலை  அதி லும்  குறிப்பாக தமிழக மக்களின் ஒப்புதலைப் பெற முடியாது என்பதை நரசிம்மராவ் அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. ஆகையால் தடை விதிப்பதற்கு இதைக் காரணமாகச் சொல்லவில்லை. அத்துடன் இந்திய அரசாங்கத்தின் தேச விரோதமான-நாட்டை அடகு வைக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்போரையும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக போராடுவோரையும் ஒடுக்குவதற்கு புலிகள் மீது விதிக்கப்படும் தடையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் நரசிம்மராவ் அரசாங்கம் விரும்புகிறது. அதற்கான அணுகுமுறையை உருவாக்க வேண்டியிருந்தது. ஆகையால் தடை விதிப்பதற்கான ஆதாரங்களைத் தேடுவது என்ற பெயரால் தடைவிதிப்பதற்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டது. மே 14 அன்று, அதுவும் மாநிலங்கள் அவைக் கூட்டத்தின் கடைசி நாளன்று தடையை அறிவித்தது.

நயவஞ்சகமே உன் பெயர்தான் நரசிம்மராவ் அரசாங்கமா? 

விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வதற்காக உள்துறை அமைச்சர் திரு. சவாண் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்:

தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வந்த விடுதலைபுலிகள் தங்கள் நோக்கத்திலிருந்து விலகி, இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகச் செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட உல்ஃபா இயக்கத்துடன் புலிகள் தொடர்பு கொண்டனர்.

தமிழகத்தில்  தீவிரவாதிகளுக்கு,  புலிகள்  இயக்கம்  ஊக்கத்தையும் ஆதரவையும் தந்து வருகிறது.

தமிழ்த் தேசிய மீட்புப்படை என்ற பெயரில் பிரிவினைவாத இயக்கத்தைத் தோற்றுவித்து, அதில் தமிழக இளைஞர்களைச் சேர்த்து, அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப்பயிற்சி கொடுத்து தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பினர். இதன் நோக்கம் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பதோடு, இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டைப் பிரிந்து, தனித் தமிழ்நாடு அமைப்பதாகும்.

ராஜீவ்காந்தி படுகொலையைப் புலிகளே திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்பதை புலனாய்வுத்துறை ஐயத்திற்கு இடமின்றி தக்க ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள காரணங்களின் சாராம்சம்:

1.இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டுக் கும் இறையாண்மைக்கும் விடுதலைபுலிகளின் இயக்கம் அச்சுறுத்தலாக இருக்கிறது.

2. அசாம், தமிழகம் போன்ற இனங்கள் இந்தியாவிலிருந்து தனிநாடு அமைத்துக் கொள்வதை புலிகள் இயக்கம் ஆதரிக்கிறது.

3. ராஜீவ் காந்தியை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்தனர்.

நாட்டை அடகு வைப்பதை மூடி மறைக்கவா இந்தக் குற்றச்சாட்டு?

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக புலிகள் இருக்கிறார்கள் என்பது உண்மையா? இந்தியாவின் அரைகுறை சுதந்திரம் கூட யாரிடம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவைத் தனது மேலாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை, குறிப்பாக அந்நிய செலாவணி நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ள உலகவங்கி மற்றும் சர்வதேசிய செலாவணி நிதியம் மூலம் கடன் தருவதற்கு அரசியல் மற்றும் இராணுவ நிபந்தனைகள் உள்ளிட்ட எல்லா விதமான நிபந்தனைகளை விதிப்பதின் வாயிலாக இந்தியாவை தனது மேலாதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

டங்கல் திட்டம் மற்றும் சிறப்பு 301 பிரிவு போன்றவற்றை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது. கடந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க வர்த்தக சட்டத்தின் சிறப்பு 301 பிரிவின் கீழ் இந்தியாவுக்கு எதிராகச் சில வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்தது. உடனே நரசிம்மராவ் அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டது. அதன் விளைவாக இப்போது புதிய பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவது சம்பந்தமாக இந்திய, அமெரிக்கத் தொழிற்துறை உயர்நிலை அமைப்புகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியத் தொழில் வர்த்தக சபையின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் வி.எல்.தத், இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர் வில்லியம் கிளார்க் ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்கள். சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு என்ற அமெரிக்க அரசின் நிறுவனம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. இனி 'பாரத மாதா' வின் கருப்பை அமெரிக்க மூலதனத்திற்கு அகலமாக திறந்து விடப்படும். இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் விதிக்கும் நிபந்தனைகளையும் ஆணைகளையும் நரசிம்மராவ் அரசாங்கம் ஏற்று, அவற்றை விசுவாசத்துடன் அமல்படுத்துகிறது.

இந்துமகா சமுத்திரம் ஒரு அமைதி மண்டலம் என்ற யுத்ததந்திர கருத்தாக்கத்தை நரசிம்மராவ் அரசாங்கம் கைவிட்டு விட்டது. அதாவது, இந்துமகா சமுத்திரம் அணு ஆயுதங்கள் தாங்கிய அந்நிய கடற்படை கப்பல்களின் நடமாட்டத்திலிருந்து சுதந்திரமானது என்ற நிலைபாட்டைக் கைவிட்டு விட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு துணையான பாத்திரத்தை ஆற்றுவதை ராவ் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்க கடற்படையுடன் இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சி செய்கிறது. இந்திய - அமெரிக்க படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக இருபடைகளின் பிரதிநிதிகள்கொண்ட ஒரு  கூட்டு  ஆணைக்குழு  உருவாக்கப்பட்டிருக்கிறது. சுருங்கக்கூறின், அமெரிக்க - இந்திய ராணுவ ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்காக கள்ளத்தனமாக ராவ் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. மேற்கூறப்பட்டவை எல்லாம் சில உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ நடவடிக்கைகள் திரைமறைவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நரசிம்மராவ் அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சோரம் போவதால்தான் இந்தியாவிற்கு இருக்கும் அரைகுறை சுதந்திரம் கூட பறிபோய்க் கொண்டிருக்கிறது.

இந்த துரோகச் செயல்களை மக்கள் கண்களில் படாமல் மறைப்பதற்கும், அவர்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்புவதற்கும் நரசிம்மராவ் அரசாங்கம் முயலுகிறது. தான் செய்யும் திருட்டுத்தனம் வெளியாகி எங்கே கையும் களவுமாக பிடிப்பட்டு விடுமோ என்று அஞ்சி, பக்கத்திலிருப்பவரைப் பார்த்து 'திருடன், திருடன்' என்று கூக்குரலிடும் ஒரு திருடனைப் போல, நரசிம்மராவ் அரசாங்கம் 'இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக செயல்படத் துவங்கிவிட்டனர்' என்று விடுதலை புலிகள் இயக்கத்தினர் மீது குற்றுஞ்சாட்டுகிறது. தனது தேசத்துரோக, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்போரை, புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி அவர்களை இந்த சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்காக புலிகள் மீது தடைவிதிப்பதற்கு இத்தகைய ஒரு காரணத்தைக் கூறுகிறது.

சுயநிர்ணய உரிமை கோருவோரை ஒடுக்குவதை நியாயப்படுத்தவா?

தடைவிதிப்பதற்காக கூறப்படும் மற்றொரு காரணம், அசாம், தமிழகம் போன்ற இனங்களை இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடு அமைத்துக்கொள்ள போராடுவோருக்கு விடுதலைபுலிகள் இயக்கம் ஆதரவு தருகிறது என்பதாகும்.

பாகிஸ்தானில் இராணுவத் தலையீடு செய்து, அந்நாட்டிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்து அதை தனி நாடாக உருவாக்கிய இந்திய அரசாங்கம், இலங்கையின் தேசிய இனச்சிக்கலில் தலையிட தனக்கு உரிமை கொண்டாடுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு 'அமைதி படையை' அனுப்பிய இந்திய அரசாங்கம், விடுதலைபுலிகள் அமைப்பு மீது இத்தகைய ஒரு குற்றச்சாட்டை சுமத்துவது விந்தையாகத் தான் இருக்கிறது.

தவிர இந்தியாவிலுள்ள எந்த ஒரு தேசிய இனம் சுய உரிமை கோரினாலும் அதற்கு அந்நியர் தூண்டுதல்தான் காரணம் என்ற ஒரு எண்ணத்தைக் கற்பிப்பது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது. உண்மை என்னவென்றால், அரை காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவின் எதேச்சதிகார அரசு அமைப்பு தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமையை மறுக்கிறது.

இந்தியாவில் இத்தகைய ஒரு எதேச்சதிகார அமைப்பு நிலவுவதின் காரணமாகவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைகள் எழுகின்றன. ஆயினும், இது வரையில் இந்தியாவை ஆண்ட அரசாங்கங்கள், கட்சி வேறுபாடின்றி, அனைத்து தேசிய இன இயக்கங்களை தேசத்துரோக இயக்கங்களாகச் சித்தரித்து வந்திருக்கின்றன. தேசிய இன சுயநிர்ணய உரிமை கோரிக்கையே தேச விரோதமானது என்று சொல்லிவருகின்றன. இக்கோரிக்கைக்கான இயக்கங்களை ஜனநாயக விரோதமான முறையில் நசுக்கி வருகின்றன.இன்றும் காஷ்மீர், அசாம் மற்றும் பிற இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை நரசிம்மராவ் அரசாங்கம் ஜனநாயக முறையில் தீர்க்க மறுத்துவிட்டு, இராணுவ நடவடிக்கைகள் மூலமே தீர்க்க முயல்கிறது. தமிழகத்தில் சுயநிர்ணய உரிமை கோரி பிரச்சாரம் செய்வதைக் கூட அனுமதிப்பதில்லை. நரசிம்மராவ் அரசாங்கம் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களின் மீது அரசு பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. இத்தகைய ஜனநாயக விரோத, அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காகவும், அவற்றை நியாயப்படுத்துவதற்காகவும் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதற்கு இதை ஒரு காரணமாக கூறுகிறது.

ராஜீவ் காந்தி கொலை - எதற்கெல்லாம் இதைப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ஒரு காரணமாகக் கூறுவது ஏற்கத் தகுந்ததா என்பதைப் பரிசீலனை செய்வதற்கு முன்னர் மத்திய மாநில அரசாங்கங்களும் காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகளும் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ராஜீவ்காந்தி கொலையை காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க வும் தேர்தல்களில் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், தங்களின் எதிரிகளைத் தனிமைப்படுத்தி தாக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொண்டன. ராஜீவ் காந்தியைக்  கொலை  செய்ததாக  விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றம் சாட்டின. ஆனால் இந்திய அரசாங்கம் இக்கொலையுடன் விடுதலைப்புலிகளை மட்டும் தொடர்புப் படுத்திப் பேசவில்லை உள்துறை அமைச்சர் சவாண், ராஜீவ் கொலையுடன் சி.ஐ.ஏ.வை தொடர்புப்படுத்தி பேசினார். பிறகு பாகிஸ்தானையும் தொடர்புபடுத்தினார். ஆனால் இத்தொடர்புகளைப் பற்றிய தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. அரசாங்கம் இக்கொலைபற்றி அதற்குக் கிடைத்துள்ள முழு தகவல்களையும் வழக்கு மன்றங்களுக்கோ மக்களுக்கோ தெரிவிக்கத் தயாராக இல்லை. அரசாங்கம் இக்கொலையை ஒரு மர்மமாகவே வைத்திருக்க விடும்புவதாகத் தெரிகிறது.இவ்வாறு மர்மமாக வைத்திருப்பதால் பலவிதமான அரசியல் நோக்கங்களுக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்கம் விரும்பினால் எவரையும் குற்றம் சாட்டலாம். இதற்கெல்லாம் அப்படி வைத்திருப்பது வசதியாக இருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் ரகசியமான முறையில் இவ்வழக்கைச் விசாரணை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தது. இந்த விசாரணை முறையும் இவ்வழக்கைச் சூழ்ந்துள்ள மர்மத்தை காப்பாற்றப் பயன்படுகிறது. அத்துடன் இவ்வழக்கைப் பயன்படுத்தி தமிழகத்தில் தடா சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. மத்திய மாநில அரசாங்கங்கள் ராஜீவ் கொலையையும், தடா சட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் தேசிய இன சுயநிர்ணயயுரிமை கோருகின்றவர்களையும், ஜனநாயக வாதிகளையும். புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் ஒடுக்குகின்றன. ஜெயலலிதா தனது எதிரிகளை ஒடுக்குவதற்கும் தடா சட்டத்தைப் பயன்படுத்துகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்யும் முறை மிகவும் கொடுமையானது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். பகிரங்க விசாரணை கிடையாது. ரகசியமான விசாரணைதான். தடா சட்டத்தின்படியும் கூட நிரூபிக்கப்பட்டால்தான் தண்டனை. ஆனால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை துவங்குவதற்கு முன்னரே, இக்கொலையை  விடுதலைப்புலிகளே  திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்பதை புலனாய்வுத் துறை ஐயத்திற்கு இடமின்றித் தக்க ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இதையும் ஒரு காரணமாகக் காட்டி விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்கிறது. அப்படி என்றால் இந்த வழக்கில் வைத்திருக்கிற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக எடுத்துக்கொண்டு விட்டது. அப்படி என்றால் இந்த விசாரணை எதற்கு? இவ்வாறு அரசாங்கம் ஒரு முடிவுக்கு வருவது வழக்கு மன்றத்தை அவமதிப்பதாக ஆகாதா? இதைப்பற்றியெல்லாம் இந்த வழக்கு மன்றமோ, நீதித்துறையோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே எத்தகைய ஒரு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கு ராஜீவ் காந்தி கொலையை ஒரு காரணமாகக் காட்டுவது பொருத்தமா? ஏற்கத் தகுந்ததா? என்பதைப் பார்ப்போம்.

இலங்கை மீது இந்திய அரசாங்கம் மேலாதிக்கம் செய்ய விரும்புவதையும், ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்த அக்கிரமமான செயல்களை நியாயப்படுத்துவதற்காகவும் ராஜீவ்காந்தி கொலையை இந்திய அரசாங்கம் பயன்படுத்துகிறது. ராஜீவ் பக்தியையும் அதாவது ஆளும் வர்க்கத்தின் தலைவன் மீதுள்ள பக்தியையும், தேசபக்தியையும் இந்த அரசாங்கம் சமன்படுத்துகிறது. இதனால் தேசபக்தியையும் சிறுமைப்படுத்துகிறது. அராசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்ப்பவர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்ற ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குவதற்காக ராஜீவ் கொலை வழக்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது.

ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தணு (வெடி குண்டு வெடித்து மரணமடைந்தவர்) இந்திய அமைதிப் படையினால் பலமுறை கற்பழிக்கப்பட்டவர் என்றும், அதன் காரணமாகவே தன்னையே அழித்துக் கொள்ள திட்டம் தீட்டி, ராஜீவ்காந்தியை கொலை செய்ய அவர் முன்வந்தார் என்றும், மத்திய புலனாய்வுக் குழுவின் குற்றப்  பத்திரிக்கையில்  கூறப்பட்டிருந்தது.  கடைசி நேரத்தில் இக்காரணம் குற்றப் பத்திரிக்கையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. என்றாலும் இந்திய 'அமைதிப்படை' ஈழத்தில் செய்த அக்கிரமச் செயல்களைப் பற்றிய தகவல்கள் செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். இந்திய 'அமைதிப்படை' செய்த கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் சூறையாடல்கள் இன்னும் சொல்லத்தகாத செயலகளைப் பற்றி பல தகவல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. தனது தாயகத்திற்கும், தாய்க் குலத்திற்கும் மக்களின் தன்மானத்திற்கும், ஒரு அந்நியப்படை அநீதி இழைப்பதையும், மக்களின் உடமை, உயிர் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மீது ஒரு அந்நியப்படை தொடுக்கும் தாக்குதல்களைக் கண்டும் தன்மானமுள்ள எவரும் வெகுண்டெழுவது இயல்பானதே. இத்தகைய அக்கிரமச் செயல்களைச் செய்யும் ஒரு படைக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் படைத்த ஒரு அரசுத் தலைவன் அதற்கெல்லாம் பொறுப்பானவன் என்று நியாய புத்தி படைத்தவர்கள் கருதுவதும் இயல்பானதே. இத்தகைய ஒரு நியாய புத்தியால் உந்தப்பட்டு, தனது நாட்டிற்கு செய்யப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் பொறுப்பான ஒருவருக்கு தண்டனை தரும் வடிவத்தில் இக்கொலை செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் இக்கொலையை ஒரு அரசியல் நடவடிக்கையாகச் கருதவேண்டுமே ஒழிய, ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதுவதற்கில்லை. இது ஒரு பயங்கரவாதச் செயலா என்று கேட்டால், அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு தனி நபர் பயங்கரவாதச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இது அரசு பயங்கரவாதத்தினால் எழுந்த செயல்தான். அதன் எதிர் விளைவுதான். ஆகையால் இதற்கு குற்றவியல் சட்ட நடவடிக்கையின் மூலம் தீர்வு காண முடியாது. அரசியல் நடவடிக்கையின் மூலம்தான் தீர்வு காண வேண்டும். ஆகையால் ராஜீவ் கொலையை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறுவது ஏற்கத்தகுந்ததல்ல. இதை ஒரு காரணமாக ஏற்பது இந்திய அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அரசு பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துவதாகவும் ஆகிவிடும்.

எனவே, இந்திய அரசாங்கம் கூறும் காரணங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்வது நீதியானதுமல்ல, ஏற்கத் தகுந்ததும் அல்ல.

இதுவரையில் மத்திய, மாநில அரசாங்கங்கள், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவு தந்தோரையும், இந்திய அரசாங்கத்தின் விஸ்தரிப்பு வாதம் மற்றும், மேலாதிக்கக் கொள்கைகளையும் விமர்சித்து வந்தோரையும், தங்களின் தேச விரோத மக்கள் விரோத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்போரையும், மாநில ஆட்சிக்கு எதிர்தரப்பில் இருந்த பூர்ஷ்வா அரசியல் கட்சியையும், தேசிய சுயநிர்ணய உரிமைகோரி பிரச்சாரம் செய்து வந்தோரையும் ஒடுக்குவதற்காக, தமிழகத்தில் தடா சட்டத்தைப் பயன்படுத்தி வந்தன. மக்களிடமிருந்து தான் தனிமைப்பட்டு வருவதை தமிழக முதல்வர் கண்டார். இனிமேல் கருப்புப் பூனைப்படையும் தடாவும் போதாது என அவர் கருதுகிறார். அத்துடன் இந்த அம்மையாருக்கு விடுதலைபுலிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்து குவிந்து விட்டதாம். உயிருக்கு எந்த நேரமும் ஆபத்தாம். நாடு எக்கேடு கெட்டால் என்ன? தான் வாழ்கின்ற காலம் வரை ஆயிரம் கார் பவனி வந்து ஆபூர்வ சிந்தாமணி போல் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற முடிவுக்கு வந்தார் இந்த மகிளாசிரோன்மணி. ஆகையால் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்தை நிர்பந்தித்தார். இலங்கையின் மீது தனது மேலாதிக்க நோக்கத்தை கருதியும், தமிழீழ விடுதலைப் போரையும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் நசுக்குவதற்காகவும் உள்நாட்டில் தனது ஆட்சிக்கு வளர்ந்துவரும் எதிர்ப்பை அடக்குவதற்காகவும், குறிப்பாக தேசிய சுயநிர்ணய உரிமை கோருவோரையும், புரட்சிகர அமைப்புகளையும் நசுக்குவதற்காகவும், நரசிம்மராவ் அரசாங்கம் 1967ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது தடைவித்தித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் ஒரு கருப்புச் சட்டமே!

இந்திய அரசியல் சட்டம் வழங்குவதாகச் சொல்லப்படும் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பல சட்டங்களில் ஒன்றுதான், இந்த 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். இந்திய ஜனநாயகத்தின் தனித்தன்மை என்னவென்றால், இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதாகச் சொல்லும். ஆனால் அவற்றை அமல்படுத்துவதற்கு அதில் எந்த உத்திரவாதமும் செய்யப்படவில்லை. அதற்கான வழிமுறையும் அதில் இல்லை. அதே சமயம், அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றி அந்த அடிப்படை உரிமைகளைப் பறித்துக் கொள்வதற்கு இந்த அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் ஜனநாயகம், ஒரு போலி ஜனநாயகம்.

ஒரு அமைப்பை தடை செய்வதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த கருப்புச் சட்டம் ஒரு வழிமுறையைக் கூறுகிறது. அதையாவது இந்த அரசாங்கம் முறையாகக் கடைப்பிடிக்கிறதா? இந்த சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை தடை செய்வதாக அறிவித்தால், அத்தடை அறிவிப்பை வெளியிட்ட ஒரு மாதத்திற்குள் ஒரு டிரிபூனல் அமைக்கப்பட வேண்டும் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது சரியா, தவறா என்பதை விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து பிறகு அந்தத் தடை உத்தரவு சரியானது என்று டிரிபூனல் கருதினால், அத்தடை உத்தரவு செல்லத் தக்கது என்று அது கூற வேண்டும், ஆறு மாதத்திற்குள் இந்த விசாரணை முடிந்துவிடவேண்டும். தடை உத்தரவு சரியானது - செல்லத்தக்கது எனில் அரசிதழ் பதிவேட்டில் அது வெளியிடப்பட வேண்டும். இது தொடர்பாக கைது செய்யப்படுகிறவர்களை விசாரிக்கத் தனிக் கோர்ட் அமைக்க வேண்டும். சட்டநிலை இதுதான், ஆனால் அறிவிப்பு வந்ததும் வாராததுமாக இருக்கும்போதே தமிழ்நாட்டில் 25  அமைப்புகளின்  பட்டியல்  தயாரிக்கப்பட்டு  அந்த  அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முன்னணியினரை போலீசார்  கண்காணிக்க  ஆரம்பித்து விட்டார்கள். எப்படியெல்லாம், எதற்காகவெல்லாம் இந்த தடை பயன்படுத்தப்படும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

விடுதலை புலிகள்மீது தடையும் அரசியல் கட்சிகளின் நிலைபாடும்!

விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைக் குறித்து பல்வேறு அரசியல் சக்திகளின் நிலைப்பாடு என்ன? பாரதீய ஜனதா கட்சி, ஜனதாதளம், இடது -வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய நாடாளுமன்றவாத, அகில இந்திய கட்சிகள் விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஆதரிக்கின்றன. இக்கட்சிகள் அத்தடையை ஆதரிப்பதற்கு காரணங்கள் என்ன? இந்தக் கட்சிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. இந்திய அரசாங்கம் "அமைதிப்படையை" இலங்கைக்கு அனுப்பியதையும் ஆதரித்தன. "அமைதிப்படை" அனுப்பப்பட்டதின் நோக்கம், நேசக்கரத்தை நீட்டுவதற்காக அல்ல. தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதற்காகவும், இலங்கையின் இன சிக்கலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின்மீது மேலாதிக்கத்தை திணிப்பதற்காகவும்தான் அனுப்பப்பட்டது.

இதை ஆதரிப்பதின் மூலம் இந்திய அரசின் மேலாதிக்கக் கொள்கைகளை இக்கட்சிகள் ஆதரித்தன. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதை இக்கட்சிகள் எதிர்ப்பதில்லை. இலங்கையின் இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்றும் மூன்றாம் நாடுகள் இதில் தலையிட இந்தியா அனுமதிக்காது என்றும் இந்திய அரசாங்கம் கூறும் நிலைப்பாட்டை இக்கட்சிகள் எதிர்ப்பதில்லை.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இக்கட்சிகள் ஆதரிக்கவில்லை. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் எழுப்பும் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை இந்திய அரசாங்கம் ஜனநாயக முறையில் தீர்ப்பதற்கு மாறாக இராணுவ முறையில் தீர்க்க முயற்சிப்பதை இக்கட்சிகள் ஆதரிக்கின்றன. காஷ்மீர், அசாம், பஞ்சாப் மாநிலங்களில் இந்திய அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.  இந்திய  அரசாங்கம்  கடைபிடிக்கும்  மேற்கூறப்பட்ட கொள்கைகள் இக்கட்சிகளின் கருத்தின்படி தேசியக் கொள்கைகளாகும். அதாவது, கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கவேண்டிய கொள்கைகள், இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள், ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களின்-ஆளும் வர்க்கங்களின் கொள்கைகள் என கருதக்கூடாது என்பது வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைபாடாகும்.

இந்திய அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பதற்கு பின்வரும் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன.

1. இலங்கையின் இனச்சிக்கலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் மீது இந்திய அரசு தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதற்கு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடையாக இருக்கிறது. ஆகையால் பிரேமதாச அரசாங்கத்திற்கும் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சு வார்த்தையைத் தடுத்து நிறுத்த வேண்டும். விடுதலைபுலிகள் இயக்கத்தை நசுக்க வேண்டும்.

2. விடுதலைபுலிகள்  இயக்கத்துடன்  தொடர்பு  வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோரையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு புலிகள் மீது விதிக்கப்படும் தடை ஓர் ஆயுதமாக இருக்கும்.

மேற்கூறப்பட்ட இரண்டு நோக்கங்கள் இக்கட்சிகளுக்கு உடன்பாடுடையவை. ஆகையால் இந்த நாடாளுமன்றவாத அகில இந்திய கட்சிகள் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்ததை ஆதரிக்கின்றன.

தமிழ் ஈழத்திற்கும் விடுதலைப் புலிகள் தடைக்கும் திராவிட நாடுதானா!

திராவிடர் கழகம் தமிழீழத் தனிநாடு கோரிக்கையையும், விடுதலைப் புலிகளையும் ஆதரித்து வந்தது. தமிழீழ தனிநாடு கோரிக்கை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தி.க அதை ஆதரிக்கவில்லை. தமிழ் பேசும் மக்கள் தனிநாடு கோருகிறார்கள் - பிரிவினை கோருகிறார்கள் என்ற காரணத்தால் தி.க அதை ஆதரித்தது. இதற்குக் காரணம் தி.க.வின் இனக் கொள்கை ஒரு வர்ண இனக் கொள்கையாகும். ஒரு பொது மொழியையும் பொதுவான பொருளியல் வாழ்வியலையும், பொதுவான பண்பாட்டையும், பொதுவான வரலாற்றையையும், பொதுவான தேசிய உளப் பாட்டையும் கொண்டு வரலாற்றடிப்படையில் உருவாகிய நிலையான சமூகமே தேசிய இனம் (நாடு) என்பதாகும் என்ற வரையறையை பெரியாரும், தி.க.வும் ஏற்றுக் கொண்டதில்லை. அதற்கு மாறாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பேசுவோரை உள்ளடக்கி, ஒரு வர்ண இனம் என்ற அடிப்படையில் திராவிட இனம் (திராவிட நாடு) என்பது பெரியாரின் வரையறையாகும். தேசிய இனக் கோட்பாட்டையோ அல்லது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டையோ தி.க ஏற்றுக்கொண்டதில்லை.

திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி அல்லவென்றும், அது ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கம் என்றும் பெரியார் வரையறை செய்தார். ஆனால் திராவிட நாடு பிரிவினை அதாவது இந்திய அரசிலிருந்து பிரிந்து ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ளும் பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையாகும். ஆகையால் திராவிடர் கழகம் திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்துப் பேசி வந்தாலும் அதனுடைய சமுதாய சீர்திருத்தப் பாதை அதனை அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இட்டுச்சென்றது. தேசிய இன உணர்வின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்களை மொழி அடிப்படையில் உள்ள மாநிலங்களாக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் விளைவாக இந்திய மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாக அமைக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் மாநிலமாக தமிழ்நாடு அமைந்தது. தேசிய இன உணர்வின் வளர்ச்சியும், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டதும், குறிப்பாக தமிழ்நாடு ஒரு மாநிலமாக அமைந்ததும், வர்ண அடிப்படையில் எழுப்பப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை வலுவிழக்கும்படி செய்துவிட்டது. இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறைகள், தேசிய இனங்களைத் தட்டி எழுப்ப ஆரம்பித்தது. இதனால் வர்ண இன அடிப்படையில் எழுப்பப்பட்ட திராவிட நாடு கோரிக்கை பொருளற்றதாகிவிட்டது. இதனால் திராவிடர் கழகத்திற்கு அரசியல் குறிக்கோள் இல்லாமல் போய்விட்டது. இதன் விளைவாக சமூகச் சீர்திருத்தம் ஒன்றே தி.கவின் பணியாகிவிட்டதால், அதன் சமுதாய சீர்திருத்தப் பாதை அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை திடப்படுத்தி விட்டது. 1952-54 சென்னை மாநில ஆச்சாரியார் அரசாங்கம் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தபோது மட்டும்தான் பெரியார் ஆட்சியை எதிர்த்தார். அதற்குப் பிறகு தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதை ஆதரிப்பது பெரியாரின் கொள்கையாக இருந்தது, பெரியாருக்குப் பிறகு வீரமணியும் 'தி.க. ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கம்' என்று சொல்லிக்கொண்டு வருகின்ற ஆட்சிகளை எல்லாம் ஆதரித்து வருகிறார். இப்போது ஜெயலலிதா ஆட்சியை ஆதரிக்கிறார். இப்போது அவர் பெரிய கல்வி வியாபாரியாகி விட்டார் அல்லவா? பத்திரமான அரசியலை நடத்தி வருகிறார். அவர் எப்படி மத்திய, மாநில ஆட்சிகளை எதிர்ப்பார்? ஆகையால் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்ப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை விடுகிறார். முன்னர் இவர் விடுதலைபுலிகளை ஆதரித்ததும்கூட, இந்திராகாந்தியும் எம்.ஜி.ஆரும் புலிகளுக்கு ஆதரவு தந்ததால்தான் இவரும் ஆதரித்தார். இப்போது புலிகளை ஆதரிப்பதற்காக எப்படி அவரால் ஆட்சியை எதிர்க்க முடியும்? தடையை எதிர்த்துப்போராட முடியும்? இந்திய அரசாங்கம் இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதற்காக மேற்கொள்ளும் கொள்கைகளை தி.மு.க எதிர்ப்பதில்லை. பாகிஸ்தானில் தலையிட்டு வங்காள தேசத்தைப் பிரித்து, அதை ஒரு தனி நாடாக அமைத்து தந்ததைப் போல், இந்திய அரசாங்கம் இலங்கையில் தலையிட்டு தமிழீழத்தை அதிலிருந்து பிரித்து, அதை ஒரு தனி நாடாக அமைத்துத் தரவேண்டும் என்பது தி.க, தி.மு.க ஆகியவற்றின் விருப்பம். இந்த விருப்பதிலிருந்துதான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தி.க, தி.மு.க ஆகியவை ராஜீவ் காந்தி அரசாங்கத்திடம் கோரின. இந்திய அரசின் விஸ்தரிப்புவாதம் மற்றும் மேலாதிக்கக் கொள்கைகளை எதிர்ப்பவர்களாக இருந்தால் கருணாநிதி அப்படி கோரியிருக்க மாட்டார். இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்ததைக் கண்டபிறகு, இந்தியப்படை அவ்வாறு நடந்து கொள்ளும் என்று, தான் எதிர்ப்பார்க்கவில்லை என தனது கோரிக்கைக்கு விளக்கம் தந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் ஈழத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டது. அவ்வாறு இருந்தும் கருணாநிதி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் போராடவில்லை. தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தை தடை செய்த பிறகு தமிழீழ மக்களைக் காப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது எனக் கேட்கிறார். இலங்கையின் உள் விவகாரங்களில் இந்திய அரசாங்கம் தலையிடுவதற்கு தி.மு.க எதிராக இல்லை என்பதைத்தானே அவருடைய பேச்சு தெரிவிக்கிறது. இதிலிருந்தே தி.மு.க இந்திய அரசாங்கத்தின் மேலாதிக்கக் கொள்கைகளை எதிர்க்கவில்லை என்பதைக் காணலாம்.

தமிழீழ தனிநாடு கோரிக்கைக்கு தி.மு.க தரும் ஆதரவும், அதற்கு தி.க தரும் ஆதரவைப் போன்றதுதான். இனப் பிரச்சனையில் தி.க.வின் கோட்பாடுகளைத் தி.மு.கவும் பின்பற்றுகிறது. தி.க.விற்கும் தி.மு.க.விற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தி.மு.க ஒரு அரசியல் கட்சி, தி.க.வைப் போன்றே தி.மு.கவும் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை ஆதரிக்கவில்லை. அதாவது, ஒடுக்கும் தேசிய இனத்திடமிருந்து (அதன் அரசிடமிருந்து) ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பது இரு கழகங்களின் கொள்கை அல்ல. இதுவரை தி.மு.க தமிழீழ தனிநாடு கோரிக்கையை ஆதரித்து வந்திருக்கலாம். இப்போது இந்திய அரசாங்கம் தனிநாடு அமைப்பதற்காகப் போரிடும் விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்திருக்கிறது. இங்கே பிரிவினை தடைச் சட்டம் வந்ததும், திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார்கள். அதைப்போலவே தமிழீழ தனிநாடு கோரிக்கைக்குப் போராடும் அமைப்பின் மீது தடைவிதித்திருப்பதால் அதற்கு ஆதரவு தருவதை தி.மு.க கைவிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை தி.மு.க ஆதரிக்கவில்லை. தமிழகத்திற்கும் சுயநிர்ணய உரிமை கோரவில்லை. காஷ்மீர், அசாம், மற்றும் பிற தேசிய இனங்களின் போராட்டங்களை ஆதரிப்பதுமில்லை. அவற்றின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதுமில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோரையும், புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு புலிகளின் மீது விதிக்கப்படும் தடையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென்பது தடைவிதிப்பதற்கான மற்றொரு காரணமாகும். தி.மு.க சுயநிர்ணய  உரிமை  கோராதபோது,  அது  புலிகளை தடைசெய்வதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோரை நசுக்குவதை ஏன் எதிர்க்க வேண்டும்? தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை குறிப்பாக தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை பிரச்சினைப் பற்றிய தி.மு.கவின் கொள்கைதான், விடுதலைபுலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பற்றிய தி.மு.கவின் அணுகுமுறையை தீர்மானிக்கிறது. தனது தாய் தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடாத தி.மு.க., எப்படி ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும்? விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கிற தடையை எப்படி எதிர்க்கும்?

தடையை எதிர்த்து பா.ம.க உறுதியாகப் போராட வேண்டும்! 

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் உணர்வு மற்றும் தமிழர் என்ற உணர்வின் அடிப்படையில் ஈழத் தமிழரின் விடுதலைக் கோரிக்கையை ஆதரிக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தமிழீழம் காண்பது ஒன்று மட்டுமே சரியான தீர்வாகும் என்றும், தமிழீழத்தை மத்திய அரசு அங்கீகரிக்க அனைத்து வழிகளிலும் பாடுபடும் என்றும் அது கூறுகிறது. உலகில் எந்த ஒரு தேசிய இனமாக இருந்தாலும் அது ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனமாக இருந்தால் அது தன்னை ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் பா.ம.க தமிழீழ தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள், ஆகவே அந்தத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்போம் என்ற முறையில் ஆதரிக்கிறது. ஒரு முழு நிறைவான ஜனநாயக உணர்வில் அது ஈழத் தமிழரின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. பங்கும்-பங்காளி உணர்வில் அது தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கிறது.

இந்த உணர்வின் அடிப்படையில் வேறு ஒரு நாட்டில் வேறு மொழி பேசும் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியாது. அதே போல இந்த உணர்வின் அடிப்படையில்தான் தேசிய இன சுயநிர்ணய பிரச்சினைக்கு ஆதரவு அளிப்பதா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமென்றால், இந்தியாவிலுள்ள மற்ற தேசிய இனங்களை ஈழத் தமிழரின் கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்ட முடியாது - பல தேசிய இனங்களைக் கொண்ட நாடான இந்தியாவின் மத்திய அரசு இந்த உணர்வின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்றால், ஈழத் தமிழரின் தனி நாடு கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதில்லை. அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற ஒரு முழுநிறைவான ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில்தான் மத்திய அரசை ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி கோர முடியும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் வெல்ல முடியும். நமது கடந்த பத்தாண்டு அனுபவமும் இதைத்தான் காட்டுகிறது. தமிழக மக்கள் பெரும் திரளானோர் முதலில் ஈழத்தமிழரின் கோரிக்கையை நாமும் தமிழர் அவர்களும் தமிழர் என்ற உணர்வின் அடிப்படையில்தான் ஆதரித்தனர். பங்காளி உணர்வோடுதான் ஆதரித்தனர். ஒரு ஜனநாயக உணர்வின் அடிப்படையில் அல்ல.

பின்னர் இந்திய ஆளும் வர்க்க கட்சிகளும், தமிழக ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவைச் சேர்ந்த கட்சியும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழீழத்தையும் எதிர்க்கத் துவங்கியதும் இன்று இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் தமிழக மக்களை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரண்டு முகாம்களாக பிரித்து விட்டது. பங்காளி உணர்வோ, அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று முரணற்ற ஜனநாயக உணர்வுக்கு வேறுபட்ட வெறும் இன உணர்வோ தமிழன் என்ற உணர்வோ தமிழின மக்களிடம் ஜனநாயகம் உணர்வை ஏற்படுத்திவிடாது.

அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வழி, அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழின மக்களையும், இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த அனைத்து தேசிய இன மக்களையும் திரட்டுவதே ஆகும். பங்காளி உணர்வும் வெறும் தமிழன் என்ற உணர்வும் ஊசலாட்டங்களுக்கும், தமிழர்களிடையில் பிளவுக்கும்தான் வழி வகுக்கும். மத்திய அரசின் மேலாதிக்கம், மற்றும் பெரும் தேசிய வெறிக் கொள்கைக்களுக்கு எதிராக இக்கோட்பாட்டின் அடிப்படையில் பிற தேசிய இன மக்களை திரட்டவும் முடியாது. அதை தோற்கடிக்கவும் முடியாது. 

மத்திய அரசை ஈழத் தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை அங்கீகரிக்கச் செய்வதில் வெற்றி பெற முடியாது. ஆகவே, பங்காளி உணர்வு, தமிழன் என்ற உணர்வுக்கு மாறாக அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் -அதாவது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒடுக்கும் தேசிய இனம் - அதன் அரசிலிருந்து பிரிந்து ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்க முன் வரவேண்டும். இதைத்தான் முரணற்ற ஜனநாயகவாதிகள் பா.ம.க விடம் கோருவார்கள்.

இந்திய அரசு ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் இலங்கையை தனது மேலாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிப்பதற்கும் காரணம், அது ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்ற பெரும் தரகுமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் கூட்டு சர்வாதிகாரமாக இருப்பதுதான். இதைப் போலவே இந்தியாவிலுள்ள தேசிய இனங்களை ஒடுக்குவதற்கும் காரணம் இதுதான். ஆகையால் இந்திய அரசின் மேலாதிக்கக் கொள்கைகள் மற்றும் தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கையை எதிர்த்தும், அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரித்தல் என்ற கோரிக்கை உள்ளிட்ட ஒரு ஜனநாயக திட்டத்திற்காகப் போராடுவதற்கு அனைத்து ஜனநாயக வர்க்கங்களின் முன்னணியை உருவாக்கும் கொள்கையை ஏற்று அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் வர வேண்டும்.

பா.ம.க "தேசிய சுயநிர்ணய உரிமை" கோருகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வழங்கும் வகையிலும் மத்திய அரசுக்கு வெளியுறவு, பாதுகாப்பு, செய்திப் போக்குவரத்து நாணயம் அச்சிடுதல் முதலிய குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டும் வழங்கும் வகையில் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பா.ம.க கூறுகிறது. 

இந்தியாவின் வலிமையும், ஒற்றுமையும் இந்த பன்மொழி தேசிய தன்மைகளை அரசியல் முறையில் சமமாக அங்கீகரிப்பதில்தான் அடங்கியுள்ளது என்றும் அது கூறுகிறது. ஆனால் தேசிய சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? என்ற விளக்கம் பா.ம.க தரவில்லை. இந்தியாவில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது இந்திய அரசிலிருந்து பிரிந்து சென்று, தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமையா? அல்லது பிரிவினையா? இதில் எது சுயநிர்ணய உரிமை என பா.ம.க கருதுகிறது என்பதைப் பற்றி விளக்கம் இல்லை. எத்தகைய ஒரு நிலைமைகளில் பிரிவினை கோரவேண்டியது அவசியமாகி விடும் என்பதைப் பற்றியும் விளக்கம் இல்லை.

தேசிய இனங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒரு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அது கூறுகிறது. இந்த அதிகாரப் பகிர்வை அதாவது மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் என்பதைத்தான், சுயநிர்ணய உரிமை என்று கருதுகிறதா? அப்படி என்றால் தி.மு.க விற்கும் பா.ம.க விற்கும் உள்ள வேறுபாடு என்ன? இப்போது இருக்கும் அரசியல் சட்டவரம்பிற்குள்தான் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று காஷ்மீர், அசாம் மற்றும் பிற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோருக்கு இந்திய அரசு தரும் பதிலாக இருக்கிறது.

இந்திய அரசு இத்தகைய ஒரு எதேச்சதிகார அரசு அமைப்பாக இருக்கும்போது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடிய ஒரு புதிய அரசியல் சட்டத்தை இயற்றுவது சாத்தியம் என கருதுவதற்கில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் பிற தேசிய இனங்களின் ஆதரவு இன்றி தமிழகப் பிரதிநிதிகள் மட்டும் தனித்து நின்று ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களிலும் சுயநிர்ணய உரிமை கோருவோர் ஒன்றுபட்டால்தான் அதைச் சாதிக்க முடியும். புதிய அரசியல் சட்டத்தின் மூலமாக அல்லது வேறு ஒரு புரட்சிகரமான முறையில் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்றாலும், இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த ஜனநாயகவாதிகள் - சுயநிர்ணய உரிமை கோருவோர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால்தான் தமிழினம் உள்ளிட்டு அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியும். எனவேதான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றால் ஒரு தேசிய இனம் தன்னை ஒடுக்கும் அரசிலிருந்து பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமை என தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதை சாத்தியமாக்குவதற்காக எல்லா தேசிய இனங்களிலும் உள்ள ஜனநாயகவாதிகள் - சுயநிர்ணய உரிமை கோருவோர் ஓர் அணியில் திரண்டு போராடும் ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க.விடம் முரணற்ற ஜனநாயகவாதிகள் கோருவார்கள்.

எந்த ஒரு அமைப்பும் சுயநிர்ணய உரிமைக்கும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை தெளிவான ஒரு கோடு போட்டுக்கொண்டு, பிரிந்துபோகும் உரிமை என வரையறை செய்யாவிட்டாலோ, பிற தேசிய இனங்களின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைப் பற்றி பாராமுகமாக இருந்தாலோ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நரசிம்மராவ் அரசாங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து ஊசலாட்டமின்றி உறுதியாக போராட முடியாது. பா.ம.க விடுதலைப் புலிகள் மீது நரசிம்மராவ் அரசாங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. புலிகள் இயக்கம் தடை செய்திருப்பதைக் கண்டித்து மத்திய அமைச்சர்களுக்கு கருப்பு கொடிக் காட்டுவதென தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு கருப்புக் கொடியைக் காட்டியுமிருக்கிறது, முரணற்ற ஜனநாயகவாதியின் விமர்சனங்களுக்கு செவிமடுத்து அனைத்து ஜனநாயகவாதிகளுடன் ஒன்றுப்பட்டுப் போராடுமானால் பா.ம.க இப்போராட்டத்தில் அதற்கே உரித்தான பங்காற்ற முடியும்.

விஸ்தரிப்பு வாதத்தையும் விடுதலைப் புலிகளின் மீதான தடையையும் புரட்சியாளர்கள் எதிர்க்கிறார்கள்

முரணற்ற ஜனநாயகவாதிகள் என்ற முறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)வைச் சேர்ந்த புரட்சிகர குழுக்கள் தமிழீழ விடுதலைப் போரை ஆதரித்து வருகிறார்கள். இந்திய அரசு 'அமைதிப் படை'யை இலங்கைக்கு அனுப்பியதை எதிர்த்தார்கள். அதைத் திரும்பப் பெறச்சொல்லி கோரினர்.  இந்திய 'அமைதிப் படையை' எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய நீதியான போருக்கு ஆதரவளித்தார்கள். இலங்கையை தனது மேலாதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்காக இந்தியா மேற்கொள்ளும் அக்கிரமமான, இழி செயல்கள் அனைத்தையும் எதிர்க்கின்றனர். தமது சர்வதேச கடமையெனக் கருதி இவற்றைச் செய்கின்றனர். தம் தாய்நாட்டை விடுதலை செய்யவேண்டுமென்ற வேட்கையும், அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்கிற பாட்டாளி வர்க்கப் புரட்சிகர உணர்வும், சோசலிச தாகமும் அவர்கள் தமிழீழ விடுதலைப் போருக்கு ஒரு உறுதியான ஆதரவை அளிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கின்றது.

இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களின் திட்டத்தில் உள்ள கோரிக்கைகளில் ஒரு அடிப்படையான அம்சமாகும். காஷ்மீர், அசாம் மற்றும் பிற தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் பிற தேசிய இனங்களின் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அரசு பயங்கரவாத நடவடிக்கைகளையும், இராணுவ ஒடுக்கு முறைகளையும் எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொலை வழக்கைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் தடா சட்டத்தை அமல் படுத்துவதை எதிர்க்கிறார்கள், தடாநாயகி ஜெயலலிதா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும், அவர்களை அடக்குவதாகச் சொல்லி தமிழக மக்களையும் ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும் ஒரு கருப்புச் சட்ட ஆட்சியை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை மீட்பதற்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

நரசிம்மராவ் அரசாங்கம் அமல்படுத்தி வரும் நாட்டை அடகு வைக்கும் அரசியல் பொருளாதார கொள்கைகள்; அண்டை நாட்டை தனது மேலாதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்காக அது கடைப்பிடிக்கும் விஸ்தரிப்புவாத கொள்கைகள்; தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடக்க அது மேற்கொள்ளும் கொள்கைகள் ஆகியவைதான் இந்த அரசாங்கம் கருப்புச் சட்டங்களை இயற்றுவதற்கு காரணங்களாக இருக்கின்றன. இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும், மக்கள் யுத்தக்குழுவின் ஆந்திர மாநில கமிட்டியின் மீதும் அதன் தலைமையின் கீழ் செயல்படும் மக்கள் திரள் அமைப்புகள் மீதும் தடை விதிப்பதற்கும் நரசிம்மராவ் அரசாங்கம் கடைபிடிக்கும் மேற்கூறப்பட்ட கொள்கைகளே காரணங்களாக இருக்கின்றன.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோருவோரையும்; நாட்டை  அடகு வைக்கும் அரசியல் பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போரயும் பாட்டாளிவர்க்க புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்குவதற்காக விடுதலை புலிகள் மீது விதிக்கும் தடையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தவேண்டும் என்பது இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது தடைவிதிப்பதற்காக நோக்கங்களில் ஒன்றாகும்.

இலங்கையின் மீது இந்திய அரசின் மேலாதிக்கத்தை திணிக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கும்  பேச்சு  வார்த்தை  நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதும், தமிழீழ விடுதலைப் போரையும், விடுதலைபுலிகள் இயக்கத்தையும் நசுக்குவதும் மற்றொரு நோக்கமாகும்.

ஆகையால், விடுதலைப்புலிகள் இயக்கதின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையைத் திரும்பப் பெறச் செய்வதற்காகப் போராட வேண்டியது இன்று பாட்டாளிவர்க்க புரட்சியாளர் முன்னுள்ள ஒரு கடமையாகும். ஜனநாயக சக்திகளுடன் ஓரணியில் நின்று இந்தத் தடையை திரும்பப் பெறச் செய்வதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு தடை!

விடுதலைப்  புலிகள்  இயக்கத்தின்  மீதும்,  மக்கள் யுத்தக்குழுவின் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் நாட்டு மக்கள்மீது இந்திய அரசாங்கம் பாசிசத் தாக்குதலை தொடுக்கத் துவங்குவதற்கு ஒரு வௌ்ளோட்டம்தான். ஆகையால் இந்தத் தடைச் சட்டங்களை எதிர்த்துப் போரிட புரட்சியாளர் ஜனநாயகவாதிகளுடன் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை ஏற்பது இவ்விரு தடைகளும் ஒரு வௌ்ளோட்டம் என்பதை உணர்வதில் அடங்கியிருக்கிறது.

ஆனால், தேசிய இன பிரச்சினை குறித்து பாட்டாளிவர்க்கப் புரட்சிகர அமைப்பு மேற்கொள்ள வேண்டிய மார்க்சிய -லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த நிலைபாடுபற்றி புதிய ஜனநாயகம் குழுவின் கருத்துகள் புரட்சிகர சக்திகளும், ஜனநாயக சக்திகளும், ஓரணியில் திரள்வதற்குத் தடையாக இருக்கின்றன.

1. "தேசிய  இன  பிரச்சனை  என்பது  தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல." (16-31, ஜனவரி - 90, புதிய ஜனநாயகம். பக்கம் - 11)

2. ஒரு தேசத்துக்கோ, நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்கிறோம். (16 - 31, ஜனவரி 90, புதிய ஜனநாயகம் பக்கம் - 11)

3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16 - 31 ஜனவரி - 90, புதிய ஜனநாயகம் பக்கம் - 10) என்பன அத்தகைய கருத்துகளாகும்.

அதைப் போலவே,

1. இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு பிரேமதாச அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது குறித்து பு.ஜ.வின் நிலைப்பாடும்... (16-31 ஜனவரி 90, புதிய ஜனநாயகம்)

2. ஈழத்தில் பிரேமதாச அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மீண்டும் போர் தொடங்கியபோது தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடுவதன் கூடவே,  அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும் பாசிச, அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்த வளர்ச்சிப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும்." என்ற பு.ஜ. வின் நிலைபாடும்.... (1-15 ஜூலை 90, புதிய ஜனநாயகம், பக்கம் - 19).

புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்கு தடையாக இருக்கின்றது.

புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதை சாத்தியமாக்கும் பொருட்டு மேற்கூறப்பட்ட கருத்துகளை  விமர்சனம்  செய்வது  அவசியம் எனக் கருதுகிறோம்.

தேசிய இனப் பிரச்சினை பாட்டாளிவர்க்கத்தின் பிரச்சினை இல்லையா?

முதலாவதாக, தேசிய இனச்சிக்கல் குறித்து அரசியல் கோட்பாட்டு பிரச்சினைகளை எடுத்துக் கொள்வோம். தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்று கூறுவது சரியா? சரியல்ல. அவ்வாறு கூறுவது மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைக்கு உடன்பட்டதல்ல. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தேசங்களில் தோன்றும் தேசிய இன பிரச்சினையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய வேண்டும் என லெனினியம் கூறுகிறது. முதலாளித்துவம் எழுச்சியுறும் நிலைகளில் தேசியப் போராட்டம் முதலாளிகள் தங்களுக்கிடையில் நடத்தும் ஒரு போராட்டமாகவே இருந்தது என ஸ்டாலின் கூறினார். 1912 ஆம் ஆண்டு இறுதியில் 'மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்' என்ற நூலில் 'முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருக்கும் போது நடைபெறும் தேசியப் போராட்டம் பூர்ஷ்வா வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டம்' என்று அவர் சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு சர்வதேசிய நிலைமைகளில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்பட்டது. ஒரு புறத்தில் உலகப் போரும், மறுபுறத்தில் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் வெற்றியும், இதுவரை பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த தேசிய இனப் பிரச்சினையை உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாற்றிவிட்டது. 1916 ஆம் ஆண்டில் "சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்தின் சாராம்சம்" என்ற தனது நூலில் லெனின் தேசிய பிரச்சினையின் முக்கிய அம்சமும், சுயநிர்ணய உரிமையும் பொதுவாக ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக இதுவரை இருந்து வந்தது முற்றுப் பெற்றுவிட்டது என்றும், அது பொதுவாக பாட்டாளிவர்க்க சோசலிசப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக ஏற்கெனவே மாறிவிட்டது என்றும் கூறினார். இவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்று இடைநிலைக் காலகட்டத்தின் மூலமாகத்தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற - அதாவது பிரிந்து போவதற்கு சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் கட்டத்தின் மூலம்தான் தவிர்க்க முடியாத வகையில் ஒருமைப்படுத்துவது என்ற நிலையை அடைய முடியும்" என அவர் எடுத்துரைத்தார் அதற்குப் பிறகு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவம், தேசிய இனப் பிரச்சினையின் சாராம்சம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆகையால் ஸ்டாலின் 1912ஆம் ஆண்டில் கூறிய சூத்திரம் பொருந்தாததாக ஆகிவிட்டது. ஒரு நாட்டின் உள்நாட்டு அரசின் பிரச்சினையாக இருந்து வந்த தேசிய இனப் பிரச்சினையை ஒரு பொதுவான பிரச்சினையாக சர்வதேசப் பிரச்சினையாக, ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்து காலனி நாடுகளை, ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் உலகப் பிரச்சினையாக லெனினியம் மாற்றிவிட்டது என்று ஸ்டாலின் கூறினார்.

யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செமிச் என்பவர் தேசிய இனப்பிரச்சினை அந்நாட்டிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களின் பூர்ஷ்வாக்களுக்கிடையில் நடைபெறும் போராட்டம் என்று சொன்னார். இந்த தவறான கருத்துகளை ஸ்டாலின் "மீண்டும் ஒரு முறை தேசிய இனப்பிரச்சினை பற்றி" என்ற நூலில் விமர்சனம் செய்தார். ஒரு சார்பு நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை அந்நாட்டிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களின் பூர்சுவாக்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாக மட்டுமே குறுக்கிவிடக்கூடாது என்றும், தேசியப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகள் பிரச்சினையாகும் என்றும் எடுத்துக் காட்டினார்.

எனவே, நவகாலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள அரைக் காலனிய சார்பு நாடுகளில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை, அந்நாடுகளில் உள்ள தரகு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. அத்துடன் இந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்த கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆகையால் இந்நாடுகளிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு இடையிலான போராட்டமாக மட்டுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைக் குறுக்கிவிட முடியாது.

ஏகாதிபத்தியவாதிகளும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தேசிய இனங்களை அடிமைப்படுத்துதல் மற்றும் பண்பாட்டுத் துறையில் சீரழித்தலை எதிர்த்தும், ஏகாதிபத்தியவாதிகளின் நிதி மூலதனச் சுரண்டலை எதிர்த்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பரந்துபட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில்தான் தேசிய இனப்பிரச்சினையின் சாரம் அடங்கியுள்ளது. இந்நாடுகளிலும், அவற்றின் பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள பரந்துபட்ட மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை ஏகாதிபத்தியவாதிகள் ஒடுக்கிச் சுரண்டுவதின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் அவர்கள் இழுத்து வரப்படுகிறார்கள்; இதன் மூலம் அவர்கள் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கூட்டாளிகளாக மாறிவிடுகிறார்கள். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை, இந்நாடுகளில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலே நடைபெறும் போராட்டமாக மட்டுமே நாம் குறுக்கிவிடுவோமானால், தேசிய இனப்பிரச்சினையை சாராம்சத்தில் ஒரு விவசாயப் பிரச்சினையாக  கருத முடியாது. தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினை என கருதாமல், அதை வெவ்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலான ஒரு போராட்டமாக மட்டுமே கருதுவதற்குக் காரணம் தேசிய இனப்பிரச்சினையின் உள்ளார்ந்த வலிமையை குறைத்து மதிப்பிடுவதே ஆகும்.

தேசிய இனப் பிரச்சினையும், விவசாயிகள் பிரச்சினையும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்பதும் உண்மையே. ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையில் விவசாயிகள் பிரச்சினைக்கு கூடுதலான தேசிய பண்பாடு தேசிய அரசு என்பன போன்ற பிற பிரச்சினைகளும் அடங்கியுள்ளன. எனினும் விவசாயிகள் பிரச்சினைதான் தேசிய இனப் பிரச்சினைக்கு அடிப்படையும், அதன் சாராம்சமும் ஆகும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. விவசாயிகள்தான் தேசிய இயக்கத்தின் படையாக அமைகின்றனர். விவசாயிகளின் படையின்றி சக்தி வாய்ந்த ஒரு தேசிய இயக்கம் தோன்றவே முடியாது என்ற உண்மை இதைத் தெளிவுபடுத்தும். தேசிய இனப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினையாகும் என்று சொல்லும்போது இந்தப் பொருளில்தான் சொல்லப்படுகிறது.

சீனாவில் தேசிய இனப் பிரச்சினை குறித்து 1924-ல் டாக்டர் சன்யாட்சன் கோமிங்டாங்கின் முதலாவது தேசிய மாநாட்டின் கொள்கை அறிக்கையில் முன்வைத்த கருத்துகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முழு உடன்பாடு கொண்டுள்ளது என மாவோ கூறினார். அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.

"கோமிங்டாங்கின் தேசியக் கோட்பாட்டிற்கு இரட்டை அர்த்தம் உண்டு. முதலாவது, சீன தேசத்தின் விடுதலை. இரண்டாவது, சீனாவில் எல்லா தேசிய இனங்களுக்கும் சமத்துவம்."

அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையில் இரண்டு கோட்பாடுகள் இருப்பதைக் காணலாம். ஒன்று, தேசிய சுயநிர்ணய உரிமை உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்ட பிறகு, இந்நாடுகளின் சுயநிர்ணய உரிமையும் உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறி விட்டது ஆகையால் இந்நாடுகளின் சுயநிர்ணய உரிமை புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக ஆகிவிட்டது. இரண்டாவது, அந்நாடுகளின் தேசியக் கோட்பாட்டுக்கு இரட்டை அர்த்தங்கள் உண்டு. ஒன்று, இந்நாடுகளின் தேசிய விடுதலை; மற்றொன்று, இந்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்குச் சமத்துவம் - அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

ஆகையால், தேசிய இனப்பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கம்தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்று கூறுவது மார்க்சிய லெனினியத்திற்கு உடன்பாடானது அல்ல.

ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போகும் பிரச்சினை எழும்போது பாட்டாளி வர்க்கம் நடுநிலைதான் வகிக்க வேண்டுமா?

அடுத்ததாக, ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினை குறித்து புதிய ஜனநாயகம் பின்வருமாறு கூறுகிறது:

"ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியத்தின் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையானதாக எடுத்துக் கொள்வோம்."

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் சரியானவைதானா என பரிசீலிப்போம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரச்சினையையும் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து ஒரு தனிநாடு - தனி அரசு அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற பிரச்சினையையும் பற்றி லெனினியம் என்ன கூறுகிறது என பார்ப்போம்.

தேசங்களின்  சுயநிர்ணய  உரிமை  என்பது  ஒடுக்கும் தேசத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசம் அரசியல் ரீதியில் பிரிந்து போவதற்கான உரிமையைக் குறிக்கிறது - அதாவது அரசியல் சுதந்திரம் பெறும் உரிமையைக் குறிக்கிறது. ஒடுக்கப்படும் தேசம் பிரிந்துபோவதற்கு கிளர்ச்சி செய்ய முழு சுதந்திரம் வேண்டும், பிரிந்து போவது பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்துவதற்கு சுதந்திரம் வேண்டும் என்பது மேற்கூறப்பட்டதின் உட்பொருளாகும். இவ்வாறுதான் சுயநிர்ணய உரிமை பற்றி லெனினியம் தரும் விளக்கம் இருக்கிறது.

அடுத்தது, ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பற்றி முதலாளித்துவ வர்க்கம் எவ்வாறு அணுகுகிறது? லெனினியம் எவ்வாறு அணுகுகிறது? ஒவ்வொரு தேசிய இன விசயத்திலும் பிரிந்து போவது சரி அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டும் என்பது முதலாளித்து வர்க்கத்தினரின் வாதமாகும். அவ்வாறு பதில் சொல்வதுதான் ஆக்கப் பூர்வமானது நேர்படித்தானது என்று அவர்கள் கூறுகின்றனர். லெனினியம் அவ்வாறு கருதவில்லை.

முதலாளித்துவம் எப்பொழுதும் தேசியக் கோரிக்கையை முதன்மைப்படுத்துகிறது, அதை நிபந்தனையற்ற முறையில் முற்றான ஒன்றாக முன் வைக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சினையை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்படுத்தியே அதைப் பார்க்கிறது. ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதன் மூலம் ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறுமா? அல்லது அனைத்து தேசிய இனங்களும் சமத்துவம் பெறுவதில் ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறுமா என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. இந்த இரண்டு முடிவுகளில் எதுவொன்றாய் இருப்பினும் பாட்டாளி வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்திற்கு முக்கியமானது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்திற்கோ அதனுடைய தேசிய இனத்தின் குறிக்கோளுக்கு பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோளை கீழ்ப்படுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் அபிவிருத்தியை தடை செய்வதே அதன் நோக்கமாக இருக்கிறது.

எனவே ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து போவதைக் குறித்து இரண்டு விதமான நிலைபாடுகள் உள்ளன. ஒன்று, முதலாளித்துவ நிலைபாடு, மற்றொன்று பாட்டாளி வர்க்க நிலைபாடு - லெனினிய நிலைபாடு இவ்விரு வர்க்கங்களின் நலன்களிலிருந்தே இவ்விரு நிலைபாடுகள் தோன்றுகின்றன.

தங்களின் சொந்த தேசிய இனத்துக்கு விசேஷமான உரிமைகளையும், விசேஷமான ஆதாயங்களையும் முதலாளித்துவ வர்க்கத்தினர் அடைய விரும்புகின்றனர். முதலாளித்துவ நலன்களிலிருந்து அவர்கள் ஒரு தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினையை அணுகுகின்றனர்.

தங்களின் தேசிய இனத்துக்கு விசேஷ உரிமைகளும் விசேஷ ஆதாயங்களும் அளிக்கப்படவேண்டும் என்பதை பாட்டாளிவர்க்கம் எதிர்க்கிறது. தேசிய அமைதியையும், சம உரிமையையும் பெறுவதற்காகவும், வர்க்கப் போராட்டத்திற்கு சிறந்த நிலைமைகளை தோற்றுவிப்பதற்காகவும்தான் தொழிலாளி வர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் பூர்ஷ்வாக்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்கிறது.

எந்த தேசிய இனத்திற்கும் உத்தரவாதம் செய்யாமலும், இன்னொரு தேசிய இனத்துக்கு எதையும் செய்வோம் என்ற உத்தரவாதம் அளிக்காமலும், சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்மறை கோரிக்கையுடன் தன்னை நிறுத்திக்கொள்கிறது என்றார் லெனின்.

ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? மார்க்சிய லெனினியவாதிகளிடமிருந்து பின்வருவன கோரப்படுகின்றன என்பது அதன் பொருளாகும்.

அ) அரசியல் ரீதியில் பிரிந்து போக விரும்புகின்ற ஒரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற இனமோ அல்லது அரசோ எந்த வடிவத்தில் பலாத்காரத்தை பிரயோகித்தாலும் அதை மார்க்சிய- லெனினியவாதிகள் நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும். நடுநிலை வகிப்பது அல்ல இரு தரப்பினரையும் சமப்படுத்துவதல்ல.

ஆ) ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து போக வேண்டும் என்ற பிரச்சினை எழும்போது அப்பிரச்சினை ஒரு வெகுஜன, நேரடி சமவாக்கு என்ற அடிப்படையில் அப்பிரதேச மக்களிடம் ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என மார்க்சிய லெனினியவாதிகள் கோர வேண்டும்.

இ) பிற்போக்கான தேசியவாதிகள் தேசிய இனங்கள்மீது கொண்டு வருகிற ஒடுக்குமுறையை அல்லது ஒரு ஒடுக்கு முறைக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவை எதிர்த்து மார்க்சிய-லெனினியவாதிகள் போராட வேண்டும். குறிப்பாக பிற்போக்கு தேசியவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எதிர்த்து தளாராமல் தொடர்ந்து போராட வேண்டும்.

அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறை கோரிக்கையுடன் பாட்டாளி வர்க்க இயக்கம் தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவதன் பொருள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவது - தனிநாடு (தனிஅரசு) அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எல்லா விசயங்களிலும், விதிவிலக்கின்றி, நிபந்தனை இன்றி எதிர்க்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது நடுநிலை என்று கொள்ள வேண்டுமென்றோ, ஆதரிக்கவே கூடாது என்றோ பொருள் கொள்ளலாமா? இதைப் பற்றி மார்க்சிய லெனினியம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

ஏதாவது ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பற்றி பிரச்சினை எழும்போது, பாட்டாளி வர்க்க இயக்கம் தேசிய இனங்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், எல்லா விதமான விசேஷ உரிமைகளையும், எல்லாத் தனித்துவ போக்குகளையும் அகற்றிவிடும் நோக்கத்துடன் அப்பிரச்சினையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என லெனினியம் கோருகிறது.

ஒவ்வொரு தனி வழக்காக எடுத்துக் கொண்டு, ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பொருத்தமானதுதானா என்பதை பாட்டாளி வர்க்க இயக்கம் ஒரு சுயேச்சையான மதிப்பீட்டை செய்ய வேண்டும் என லெனினியம் கோருகிறது.

ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவது என பாட்டாளிவர்க்க இயக்கம் தனது சுயேச்சையான மதிப்பிட்டின் அடிப்படையில் தீர்மானிக்கும்பட்சத்தில், அத்தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவதை ஆதரிக்க வேண்டும்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை ஒரு தனித்து இயங்கும், தன்னோடு நின்று கொள்ளும் ஒரு பிரச்சினை அல்லவென்றும், அது தொழிலாளி வர்க்க புரட்சி என்ற பொதுப் பிரச்சினையின் ஒரு பகுதியே ஆகும் என மார்க்சிய லெனினியம் கூறுகிறது. பகுதி முழுமைக்கு கீழ்படிந்துதான் இருக்க வேண்டும் என்பதால், பொது பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே இப்பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும். அரசியல் சுதந்திரம், அரசியல் ஜனநாயகம் என்பதற்கு ஒரு தேசத்தின் பிரிவினை சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்க்சிய லெனினியம் கூறுகிறது. சான்றாக சென்ற நூற்றாண்டில் மார்க்ஸ் ஹங்கேரி, போலந்து தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்தார். செக், தெற்கு ஸ்லாவியர்கள் தேசிய இயக்கங்களை எதிர்த்தார். ஏனெனில் ஐரோப்பிய புரட்சி இயக்கத்திற்கு ஜாரிய எதேச்சதிகாரம் பரம எதிரியாக இருந்தது. முன்னர் கூறப்பட்ட இரண்டு தேசிய இயக்கங்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடின. பின்னர் கூறப்பட்ட இரண்டும் ஜாரிய எதேச்சதிகாரத்தின் புறக்காவல் நிலையங்களாக இருந்தன. அயர்லாந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். அதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு கூறினார்.

"அயர்லாந்தை விட்டுத் தொலைக்கும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது... இங்கிலாந்தில் பிற்போக்கு வாதத்துக்கு மூலகாரணம் அது அயர்லாந்தை அடிமைப்படுத்தியதுதான்."

ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து போனதைப்பற்றி லெனின் பின்வருமாறு கூறினார்; "நவீன பொருளாதார அரசியல் உறவுகளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போதல் நடைமுறைச் சாத்தியமாகிறது. உண்மையில் ஏற்படுகிறது என்பதையும், அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்கிற நிலைமைகளில் சில சமயங்களில் பிரிவினை எந்த வடிவத்தைக் கொடுக்கிறது என்பதையும் இந்த உதாரணம் நமக்குக் காண்பிக்கிறது."

எனவே, ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவது என்ற பிரச்சினை வரும்போது ஒரு பாட்டாளி வர்க்க இயக்கம் நடுநிலை வகிக்கும் பிரச்சினைக்கே இடமில்லை. அப்பிரச்சினை பற்றிய சுயேச்சையான மதிப்பீட்டிலிருந்து அதை எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று மார்க்சிய லெனினியம் கோருகிறது.

ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியத்தின் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையானதாக எடுத்துக் கொள்வோம் என்று சொல்வதும் சரியானதல்ல. ஏனெனில் அரைக்காலனித்துவ, சார்பு நாடுகளில் தேசிய சுயநிர்ணய உரிமை கோரிக்கை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானது ஆகும்.

மேற்கூறப்பட்ட தவறான கருத்துகள் வறட்டுவாதத்துக்கும், குதர்க்க வாதத்துக்கும் இட்டுச் செல்கிறது. தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் புரட்சிகர சக்திகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதற்கு தடையாக இருக்கின்றது.

சிங்கள இனவெறி அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் சமப்படுத்துவது சரியா?

1989ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றியும், 1990 ஜூன் மாதத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் துவங்கிய பிறகு தமிழீழப் பாட்டாளிவர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் வழியைக் குறித்தும் பு.ஜ.வின் நிலைபாடுகள் நாம் விமர்சனம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் இரண்டாவது பிரச்சினையாகும். அவை இரண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டு இடைக் கட்டங்களின் அரசியல் செயல்தந்திரங்களை பற்றியதாகும்.

இந்திய "அமைதிப் படைக்கும்" விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய "அமைதிப் படைக்கு" எதிராக (இந்திய மேலாதிக்க வாதிகளுக்கு எதிராக) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரேமதாச அரசாங்கத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டதற்காக விடுதலை புலிகள் அமைப்பை பு.ஜ.விமர்சனம் செய்கிறது. அந்த ஒப்பந்தம் செய்து கொண்டது சரியானது என்பது நமது நிலைபாடு. ஆகையால் பு.ஜ. நம்மைச் சாடுகிறது. இது முதலாவது பிரச்சனை.

இலங்கையில் பிரேமதாச அரசாங்கத்துக்கும் விடுதலைபுலிகள் இயக்கத்துக்கும் 1990 ஜூன் மாதத்தில் போர் தொடங்கிய போது, தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்குச் சற்றும் குறைவில்லாமல், புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், பாசிச, அராஜகவழி முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்த வளர்ச்சியில்தான், இந்தப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள இன ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும் என்பது பு.ஜ.வின் நிலைபாடு. நாம் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறோம். இது இரண்டாவது பிரச்சினை.

இவ்விரண்டு பிரச்சினைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதலாவது, விடுதலைபுலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பிரச்சினையாகும். அந்த ஒப்பந்தத்தைப் பற்றி பு.ஜ.வின் விமர்சனம் பின்வருமாறு உள்ளது.

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைபுலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெ.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் - இராணுவமும் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்கு பலமளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்கமலே அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே ஈழத்துக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன் வரலாம். இதை ஏற்பது ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத்தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது." (புதிய ஜனநாயகம் 1631 – ஜனவரி 1990)

எடுத்துக் காட்டப்பட்டுள்ள மேற்கோளிலிருந்து பு.ஜ. விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது பின்வரும் விமர்சனங்கள் (குற்றச்சாட்டுகள்) செய்திருப்பதைக் காணலாம்.

1. அ) இலங்கை அரசு விடுதலைபுலிகளை நிராயுத பாணியாக்கமலே, அதன் ஆயுத பலத்தை அங்கீகரித்து, ஈழத்தமிழ் மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசினார்கள்.

ஆ) இலங்கை அரசு விடுதலைபுலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறது.

அதை ஏற்றுக்கொள்வது சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதாகும். அநேகமாக புலிகளும் அதற்குத் தயாராய் இருப்பதாகத் தெரிகிறது.

இலங்கை அரசுடன் விடுதலைபுலிகள் இந்த ஒப்பந்தத்தை செய்துக் கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டு ஜெ.வி.பி அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது. அல்லது, இதை மிகவும் வெளிப்படையாகவும், கொச்சையாகவும் சொன்னால் ஜெ.வி.பி.யை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலைபுலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இந்திய  அரசாங்கம்  விடுதலைபுலிகள்  இயக்கத்தைத் தடை  செய்வதற்காக  கூறும்  குற்றச்சாட்டுகளைவிட, பு.ஜ., விடுதலைபுலிகள் அமைப்பின் மீது சுமத்தும் இக்குற்றச்சாட்டுகள் கடுமையானதும், கேவலமானதும் ஆகும். எனவே அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதுமாகும்.

இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் மீது விடுதலைபுலிகளுக்கும், பிரேமதாச அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேறியது. இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையில் ஓர் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பு.ஜ. மேலே எடுத்துக்காட்டப்பட்டது போல விமர்சனம் செய்கிறது. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் பற்றி பு.ஜ. வெளியிடும் கருத்துக்களும், சோ, 'ரா' வெளியிடும் கருத்துக்களும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விடுதலைபுலிகள் இலங்கை அரசுடன் செய்துக் கொண்ட இந்த ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் விடுதலைபுலிகள் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் நடந்த காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் இலங்கை இந்தியாவின் நவ காலனியாகிவிட்டது என்றும், இந்திய ராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என்றும் பு.ஜ. வரையறை செய்தது. இக்காரணத்தால் இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாசிஸ்டு புலிகள், பாசிஸ்ட் ஜெ.வி.பி. அமைப்பு முடியுமானால் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கக் கூடிய இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் உட்பட, இன்னும் பலருடன் ஒரு பரந்த அணியை உருவாக்கும் பொருட்டு, "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக்கொண்டு, ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடனும் இணைந்து போராடுவது" என்ற முழக்கத்தை முன்வைக்கவேண்டும் என பு.ஜ. கூறிற்று.

ஆகையால், இந்தியப் படை வெளியேற வேண்டும் என்பதின் அடிப்படையில் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துக் கொள்வதை ஒரு துரோகச் செயல் என்று பு.ஜ. குற்றம் சாட்ட முடியாது. விடுதலைபுலிகளின் அமைப்பு துரோகம் செய்து விட்டது என்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்க முடியாது. வழக்கமாக பு.ஜ. சொல்லும் ஒரு குற்றச்சாட்டு இருக்கவே இருக்கிறது. அதுதான் புலிகள் பேரம் பேசுகிறார்கள் என்பது.

தேசிய இனப்பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினது அல்ல என்று கூறும் பு.ஜ.வால், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்கள் சக்தியின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியாதது இயல்பானதுதான். எனவே பேரம் செய்துக் கொள்கிறார்கள் என்ற ஆயுதத்தை மீண்டும் ஒருமுறை விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது வீசுகிறது. "இந்த நிலையில் புலிகளை நிராயுத பாணியாக்கமலே அதன் ஆயுத பலத்தை அங்கீகரித்தே ஈழ மக்களுக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதை ஏற்பது ஈழ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது" என பு.ஜ.கூறுகிறது.

ஈழ மக்களுக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க சிங்கள இனவெறி அரசு தயாராக இருந்ததாம். ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ள விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக பு.ஜ.வுக்கு தெரிகிறதாம்.

பு.ஜ. இந்த ஆரூடத்தைக் கூறிய சில நாட்களுக்குள் சிங்கள பேரினவாத அரசு தமிழீழத்தின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீது ஒரு கொடிய யுத்தத்தைத் தொடுத்து விட்டது. பிரேமதாச தொடுத்த தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்து தமிழீழ விடுதலைபுலிகள் யுத்தத்தை தொடுத்ததன் மூலம் பு.ஜ.வின் பொய்யையும், புனைசுருட்டையும் அவர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள். பு.ஜ.ஏன் 'பேரம், பேரம்' என்று புலம்புகிறது.

இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வதை துரோகம் என்று கண்டனம் செய்ய முடியாது. ஆனால் அதே சமயம், விடுதலைபுலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்த வேண்டியதைத் தனது 'புனிதமான' கடமையாக பு.ஜ. நினைக்கிறது. ஆகையால் எப்படியாவது புலிகளை அமபலப்படுத்திவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறது. ஏனெனில், புலிகள் தனிநாட்டுக்காகப் போராடும் இனவாதிகள். அவர்களை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும். அப்போதுதான் சுயநிர்ணய உரிமையை பகுதியாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னுக்கு கொண்டு செல்ல முடியும் என பு.ஜ. எண்ணுகிறது. ஆனால் இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட தமிழீழ தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டது என்பதை பு.ஜ. பார்க்க மறுக்கிறது. ஆகையால் புலிகளை பேரம் பேசுகிறார்கள் என்று சொல்லி அவர்களை அம்பலப்படுத்துவது தொலை நோக்குப் பார்வையுடன் செய்யக்கூடிய நடவடிக்கையாக அது கருதுகிறது. அதாவது அடுத்தக் கட்டத்திற்காக இந்தக் கட்டத்திலேயே தயாரிக்கப்பட வேண்டியவையாக புலிகளை அம்பலப்படுத்துதலைக் கருதுகிறது. ஆகையால், அமபலப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அகவிருப்பங்களிலிருந்து (subjective) நிகழ்வுப் போக்குகளை மதிப்பீடு செய்யும் முறையை பு.ஜ கையாள்கிறது. இதனால் எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஆரூடம் கூறுவது பு.ஜ.வுக்கு ஒரு வழக்கமாகி விட்டது. அவ்வாறு செய்வதற்கு அதன் கைவசம் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு கைச் சரக்கு "பேரம் பேசுகிறார்கள்" என்று கூறுவதுதான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் புலிகளின் 'பேரம்' பற்றிய ஆருடம் கூறுவதைப்பார்க்கும்போது, இவ்வாறு கூறுவது பு.ஜ வுக்கு ஒரு வழக்கமாகி விட்டது என்று சொல்வதைவிட, அது ஒரு வழியாகவே ஆகிவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என கருத வேண்டியுள்ளது. இவ்வாறு சொல்வதற்கு சான்றுகள் பல தர முடியும். ஆயினும், இடப் பற்றாக்குறையை கருதி ஒரு சான்று தருகிறோம். இப்போது இந்திய அரசாங்கம் புலிகள் மீது விதித்துள்ள தடைக்கான காரணத்தை பு.ஜ. கூறுவதை பாருங்கள்.

"புலிகளுடன் பிரேமதாச கும்பல் அவ்வப்போது நடத்தும் பேரம் - சமரச முயற்சிக்கு, பாதகமாக இத்தடை விதிப்பு அமைந்தது. அதனால் இலங்கை அரசு இதை மதிக்காமல் போகலாம். தானே புலிகளுடன் பேரம்-சமரசம் பேசும் வாய்ப்பு வரலாம் என்பது போன்ற காரணங்களால் இந்திய அரசு இதுவரை தடை விதிக்காமல் இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் தனது தெற்கு ஆசியப் பிராந்திய ஆதிக்கத்துக்கு புலிகள் அமைப்பை இனி மேலும் நம்பமுடியாது என்கிற முடிவுக்கு இப்போது இந்திய அரசு வந்து விட்டது. ஆகவே புலிகளுடன் இனி எவ்வித பேரமும் நடத்துவதைத் தடுக்கவும், ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கவும் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளது" (புதிய ஜனநாயகம் 1-15 ஜூன் 1992)

பு.ஜ. சொல்வதைப் பாருங்கள், 'பேரம், பேரம்' இதுதான். ஆனால் பு.ஜ.வின் கண்களுக்கு இந்திய அரசு புலிகள் மீது தடை விதிப்பதற்கான நோக்கங்களில் முக்கியமான ஒன்று, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதும், தமிழீழ தேசிய விடுதலை இயக்கத்தை நசுக்குவதும், இதனால் இலங்கையின் மீது இந்திய அரசு தனது மேலாதிக்கத்தை திணிக்க முயல்வதுமாகும் என்பது மட்டும் ஏன் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இவ்வாறு பு.ஜ. ஆரூடம் கூறிய சில நாட்களில் இலங்கை அரசு இதற்கு முன் எப்போதுமில்லாத அளவிற்கு ஒரு பெரும் இராணுவத் தாக்குதலை விடுதலைபுலிகள் மீது தொடுத்துவிட்டது. வழக்கம் போல் இப்போது பு.ஜ. கூறிய ஆருடம் பொய்த்துவிட்டது.

முதலாளித்துவ வாதிகள் தேசிய நலன்களுக்கு விரோதமாக பேரமே பேச மாட்டார்கள் என்பதல்ல நமது வாதம். அதை அம்பலப்படுத்த வேண்டியது பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முக்கியமான பணி என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். பு.ஜ.வின் மீது நமது விமர்சனம், இலங்கையில் இன்றுள்ள வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகக் கோரிக்கை, தமிழீழ இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டது என்பதைப் பார்க்க தவறுவதன் காரணமாக, புலிகளை எப்படியாவது அம்பலப்படுத்திவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், புலிகள் பேரம் பேசுகிறார்கள் என்று சொல்வதை ஒரு வழியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டது; ஒரு அக விருப்பங்களிலிருந்து மதிப்பீடு செய்யும் முறையை (Subjective Method) கையாள்கிறது என்பதே ஆகும். இதை புரிந்து கொண்டால், இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, ஈழத்தமிழ் மாகாணத்திற்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை தங்களுக்குத் தரவேண்டும் என பேரம் பேசினார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பு.ஜ.வின் அடுத்த குற்றச்சாட்டைப் பார்ப்போம். ஜெ.வி.பி.யை அடக்குவதில் இலங்கை அரசு - இராணுவம் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்கு பலமளிப்பதாக உள்ளது என பு.ஜ.கூறுகிறது. இலங்கை அரசுடன் விடுதலைபுலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஜெ.வி.பி.யை அடக்குவதற்காக இலங்கை அரசுக்கு பலம் சேர்ந்ததாகி விட்டது என்று பு.ஜ. கூறுவதன் பொருள் - இதை இன்னும் வெளிப்படையாகவும், கொச்சையாகவும் கூறுவதென்றால் ஜெ.வி.பி.யை அடக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள் இயக்கம் துணைபோனது அல்லது ஜெ.வி.பி.யை அது காட்டிக் கொடுத்து விட்டது என்பது பு.ஜ. கூறவதின் பொருளாகும். ஜெ.வி.பி. அடக்கப்பட்டு விட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு ஜெ.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாத அமைப்பு. அது என்றுமே தமிழீழ மக்களுடன் சேர்ந்தது இல்லை. 1971-ல் அது ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை நடத்தியபோதும், தமிழர்களை நம்பக் கூடாது என்று சொல்லி, சிங்கள மக்களைத்தான் திரட்டியது. அதற்குப் பிறகும் அதன் கொள்கைகளை மாற்றிக் கொண்டதில்லை.

இந்திய "அமைதிப்படை" தமிழீழ மக்களை ஒடுக்கியபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததா? இல்லை. இந்திய - இலங்கை துரோக ஒப்பந்தத்தில் ஈழத் தமிழருக்கு அளிக்கப்பட்ட கேடுகெட்ட சலுகைகளைக் கூட அது எதிர்த்தது. இத்தகைய சிங்கள பேரினவாதக் கொள்கைகள் அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இரண்டாவது, இராணுவத் துறையில் செகுவாரா வாதத்தைக் கடைப்பிடித்தது. மக்கள் பாதையை அது ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே அதன் தோல்விகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழி சுமத்துவதில் பயனில்லை.

இந்தியாவின் மேலாதிக்கத்தையும், இந்திய "அமைதிப்படை" யின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டுப் போராட முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? இந்தியப் படை இலங்கையை விட்டு (என்று சொல்வதைவிட ஈழத்தைவிட்டு என்று சொல்லலாம்) வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலைபுலிகள் இலங்கை அரசுடன் ஒரு போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலை ஏன் ஏற்பட்டது?

சிங்கள பேரினவாத இலங்கை அரசு பல ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுத்து வருகின்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஜெ.வி.பி. அமைப்போ அல்லது வேறு எந்த முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ போராடியது உண்டா? அல்லது வேறு எந்த சிங்கள உழைக்கும் இயக்கமாவது நடத்தப்பட்டதுண்டா? இல்லையே. ஜெ.வி.பி இலங்கையில் இந்திய 'அமைதிப் படை'யின் தலையீட்டை எதிர்த்தது. ஆனால் இந்திய 'அமைதிப் படை' ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஜெ.வி.பி எதிர்த்ததுண்டா? இல்லையே. இந்திய "அமைதிப்படை" ஈழத் தமிழ்மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பை மற்ற எந்த சிங்களக் கட்சியும் எதிர்க்கவில்லை. லட்சோப லட்சம் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள கடல் கடந்து உலக நாடுகளிலெல்லாம் தஞ்சம் புகுகிறார்கள்! நீங்கள் ஏன் அந்நிய நாடுகளுக்குச் சென்று அவதியுற வேண்டும்? சிங்களமும் உங்களுக்குச் சொந்தமானது தான். இங்கே வாருங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று எந்த ஒரு சிங்கள அமைப்பாவது சொன்னதுண்டா? ஒடுக்கப்படும் தமிழீழ தேசிய இனத்தின் மீது ஒடுக்கும் சிங்கள தேசிய இனமும், அத்தேசிய இன ஒடுக்கு முறையாளர்களின் அரசும் அடக்குமுறை தொடுப்பதை எதிர்த்து ஒடுக்கும் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவதோ அல்லது அவர்களை ஓர் அணிக்குள் கொண்டு வருவதோ சாத்தியமானது அல்ல.

எனவே, இந்திய மேலாதிக்கத்தையும் – இந்திய "அமைதிப்படை"யின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து இரு தேசிய இன மக்கள் சேர்ந்து போராட முடியாதத்திற்கு காரணம், சிங்களப் பெரும் தேசிய இன மக்கள் ஈழத் தமிழ் மக்களின் மீது இந்திய ஆக்கிரமிப்பு படைதொடுத்த யுத்தத்தை எதிர்காததுதான். எனவே, பு.ஜ. விடுதலைபுலிகள் இயக்கத்தைப்  பற்றி  செய்யும்  விமர்சனம்  சிங்களப் பேரினவாதத்துக்கு சேவை செய்வதாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து விடுதலைபுலிகள் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது சரியானதுதான். அவ்வாறு செய்யாதிருந்தால் தமிழீழத்தின் விடுதலை இயக்கம் நசுக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கக் கூடும். ஆகையால் விடுதலைபுலிகள் அமைப்பு, இந்த கட்டத்தில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டைச் சரியாகத்தான் கையாண்டுள்ளது. இந்த கட்டத்தில் அது இலங்கை அரசுடன் போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து கொண்டது ஒரு சரியான செயல்தந்திரமாகும்.

நாம் இவ்வாறு சொல்வதற்காக பு.ஜ. நம்மீது புழுதிவாரி தூற்றுகிறது. உண்மையில் பு.ஜ.வின் நிலைபாடுதான் வறட்டுத்தனமானது, சந்தர்ப்பவாதமானது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதுதான் பிரதானப்பணி என்று வரையறை செய்வதும் அதே சமயம், இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைபுலிகள் இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாடு செய்து கொண்டதற்காக விமர்சிப்பதும் குதர்க்கவாதமே ஆகும்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் இடையில் ஒரு யுத்தம் துவங்கியது. இந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழ் பாட்டாளிவர்க்க இயக்கம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் செயல்தந்திரம் குறித்து பு.ஜ.வின் நிலைபாட்டிற்கும் நமக்கும் இடையில் உள்ள முரண்பாடு பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் போரின் இக்கட்டத்தில் பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் தந்திரம் பற்றி பு.ஜ பின்வருமாறு கூறுகிறது:

"தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்குச் சற்றுக் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், பாசிச அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். தமிழீழ ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் தோள் கொடுக்க வேண்டும். இந்த வளர்ச்சியில்தான், இந்தப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும்" என்பது பு.ஜ வின் அரசியல் செயல்தந்திரம்.

நாம் பு.ஜ.வின் இந்த அரசியல் செயல்தந்திரம் தவறானது எனக் கருதுகிறோம். இதற்கு மாறாக, ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில் ஈழத்தமிழ் பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் செயல்தந்திரம் பின்வருமாறு இருக்கவேண்டும் என்பது நமது நிலைபாடு.

ஈழத்தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளிவர்க்க இயக்கத்தினரும், ஜனநாயக சக்திகளும் பிரேமதாச அரசின் பாசிச இன ஒடுக்கு முறையை எதிர்த்து, இந்த நீதியான போரில் ஊக்கமாகப் பங்கு கொள்வதுடன் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பது அவர்கள் கடமையாகும்.

அதே   நேரத்தில்,   சமரசப்   போக்குகளைத் தோற்கடிப்பதற்காகவும், ஈழ தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபடுதல், தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை வேண்டும் என போராடுதல், மக்கள் கமிட்டிகளுக்கு அதிகாரம் என்ற கோட்பாட்டிற்கு ஆதரவாகத் திரட்டுதல், இலங்கை அரசின் பாசிச ஒடுக்குமுறையால் அவதியுறும் மலையகத் தமிழர்கள், சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஆகியோரின் சிங்கள இனவெறி அரசை எதிர்த்த போராட்டத்தை ஆதரித்தல்; ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள பாசிச அரசை எதிர்த்த மக்களின் போராட்டத்தையும் ஒன்றுபடுத்துதல்; தமிழீழ விடுதலைப் போராளிச் சக்திகளின் ஒற்றுமையையும் ஆதரவையும் ஈழத்தமிழ் நாட்டின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பெறுதல் என்ற கொள்கைக்குப் போரிடுதல் போன்றவையே அவர்களின் கடமையாக இருக்கிறது.

ஒரு குறிப்பான திட்டத்தை முன் வைத்து, விடுதலைபுலிகள் அமைப்புடன் ஒரு ஐக்கிய முன்னணியை நிறுவுவதற்கான போராட்டத்தை நடத்துவது புரட்சியாளர்களினதும் ஜனநாயகவாதிகளினதும் கடமையாக உள்ளது.

விடுதலைபுலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஊன்றி நிற்கும்வரை "பிரேமதாச அரசு தொடுத்துள்ள தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தை ஆதரிப்போம். தேசிய இன போராட்டத்தில் விடுதலைபுலிகள் அமைப்புடன் ஒன்றுபடுவோம்;  ஜனநாயகத்திற்காக  அதனுடன்  போராடுவோம்" என்பதே அனைத்து ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டச் சக்திகளின் முழக்கமாக அமைய வேண்டும்.

நாம், ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிக்கிறோம்.

பு.ஜ. தமிழ் ஈழம் பிரிந்து போகும் உரிமையை மட்டுமே ஆதரிக்கிறது. தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரிக்கவில்லை. சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது, தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிப்பது என்ற இரண்டு வேறுபட்ட முழக்கங்களின் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட யுத்தத்தந்திரங்கள் அமைகின்றன. இரு அமைப்புகளும் தத்தம் யுத்ததந்திரம் வெற்றி பெறச்செய்யும் பொருட்டு தத்தம் செயல்தந்திரங்களை வகுத்து வந்திருக்கின்றன. 1983 இல் இருந்து 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் யுத்தம் துவங்கும் வரையில் பு.ஜ.வும் நாமும் எவ்வாறு செயல்தந்திரங்கள் வகுத்து வந்திருக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.

ஈழத் தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் 1984-ல் ஒரு தேசிய விடுதலை யுத்தம் என்ற வடிவத்தை எடுத்துக் கொண்டது. அதிலிருந்து அது பல்வேறு இடைக் கட்டங்களைக் கடந்து, 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையில் ஓர் உள்நாட்டு யுத்தம் என்ற வடிவத்தை எடுத்துக் கொண்டது. விடுதலைப் போராட்டத்தின் 1990 ஜூனில் துவங்கிய உள்நாட்டு யுத்தம் என்ற கட்டம் இதற்கு முன்கட்டமான இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்ப்பதிலிருந்து மாறுபட்டது. 1990 ஜூனிலிருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் 1983-ல் இருந்து 1987-ல் இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிடும் வரையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திலிருந்து வேறுபட்டது. இந்த விடுதலைப் போரில் ஒவ்வொரு காலகட்டமும் அதன் அரசியல் சக்திகளின் அணி சேர்க்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும், அதன் இராணுவ நடவடிக்கைகளில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும் வேறுபட்டன. எனவே இப்போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் குறிக்கோளும் முழக்கங்களும் வேறுபட்டவையாக இருந்தன. இதன் காரணமாக பு.ஜ.வும் நாமும் இந்த இடைக் கட்டங்களில் அவரவர் அரசியல் குறிக்கோள் - யுத்த தந்திரங்களுக்கு ஏற்ப அரசியல் செயல் தந்திரங்களை முன் வைத்திருக்கிறோம்.

ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை தனது ஒரு அங்கமாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் ஜனநாயக புரட்சி என்ற திட்டத்தை ஆதரிப்பதாக பு.ஜ சொல்கிறது. ஆனால் அது அகில இலங்கை பாட்டாளிவர்க்க இயக்கத்தின் செயல்தந்திரங்களின் அடிப்படையில் ஈழத் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு செயல்தந்திரங்கள் வகுத்தது இல்லை.

ஒடுக்கும் சிங்கள இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தமிழீழ தேசிய இனம் பிரிந்துபோவது பொதுப் பிரச்சினைக்கு முரணானது - அரசியல் சுதந்திரம் அரசியல் ஜனநாயகம் என்பதற்கு ஈழத் தமிழினத்தின் பிரிவினை சேவை செய்யாது - என்பதே பு.ஜ வின் முடிவானால், அது ஈழத் தமிழினத்தின் பிரிவினையை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஆனால் பு.ஜ அவ்வாறு செய்யவில்லை. ஈழத்தமிழ் இனம் பிரிந்து போவதை ஆதரிக்கிறதா அல்லது இல்லையா என்று வெளிப்படையாக அறிவிக்காமலே, ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொல்லி, பு.ஜ. தனது செயல் தந்திரங்களை முன் வைக்கிறது.

இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம் ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டது என்பது நமது நிலைபாடாகும். ஆகையால் தமிழீழம் தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரித்து ஒவ்வொரு இடைக் கட்டத்திற்கும் அரசியல் செயல்தந்திரங்களை முன் வைக்கிறோம்.

சிங்கள இராணுவத்திற்கு எதிரான போர்; இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிரான போர்; இந்திய கைக்கூலியான துரோகிகளான தமிழ் தேசிய இராணுவத்துக்கு எதிரான போர்; 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையிலான போர் ஆகிய இடைக் கட்டங்களில், செயல்தந்திரங்களை பு.ஜ.முன் வைத்திருக்கிறது. 1983 லிருந்து 1987 வரை சிங்கள இராணுவத்திற்கு எதிரான போர்க் காலப் பகுதியில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்தது. ஈழத் தமிழ் தேசிய இனம் பிரிந்து போவதை எதிர்த்துப் போராடவில்லை. ஈழத் தமிழ் போராளிக் குழுக்கள் பிரிவினைக்காகப் போராடுகின்றன. ஆனால் அப்போராளிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லி போராடவும் இல்லை, பிரச்சாரமும் செய்யவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப்., பிளாட், டெலோ, ஆகிய அமைப்புகள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி கும்பலிடம் பேரம் பேசுகின்றனர், ஆயுத உதவியும் பயிற்சியும் பெறுகின்றனர் என்று சொல்லி வந்ததே தவிர அவர்கள் தனி நாட்டுக்காக பிரிவினைக்காக போராடுகிறார்கள் என்று அவற்றை விமர்சனம் செய்ததில்லை. அதேபோல் விடுதலைபுலிகள் எம்.ஜி.ஆரிடம் பெரும் தொகையாக பணத்தைப் பெற்றுக்கொண்டனர்; ராஜீவ் காந்தியிடம் பேரம் பேசுகின்றார்கள்; பாசிஸ்டுகள் என்றுதான் பிரச்சாரம் செய்து வந்தது. விடுதலைபுலிகள் பிரிவினைவாதிகள் ஆகவே அவர்களை எதிர்க்கிறோம் என்று சொன்னதில்லை. ஈழத்தமிழ் குழுக்கள் பிரிவினைவாதக் குழுக்கள். ஆகவே இக்குழுக்களை ஆதரிக்கக் கூடாது என்று தமிழக மக்களுக்குச் சொன்னதில்லை. அவர்களுக்கு இந்நாட்டில் தஞ்சம் புகுவதற்கு உரிமையுண்டு என்ற அரசியல் ஜனநாயக உரிமையை ஆதரிப்பதென்றால், அவர்களுக்கு அந்த அடிப்படையில் ஆதரவு தர வேண்டும். அவர்களின் பிரிவினை வாதத்துக்கு ஆதரவு தரக்கூடாது என்று தமிழக மக்களுக்கு பு.ஜ. சொல்லியிருக்க வேண்டும். தமிழீழம் பிரிந்து தனி நாடு அமைத்து கொள்வதை ஆதரிக்கிறதா? இல்லையா? என்று சொல்லாமலே, ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லி, ஈழத் தமிழ்நாடு பிரிவினையை - ஈழத் தமிழர் தனிநாடு அமைத்துக் கொள்வதை தாமும் ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை பு.ஜ. உருவாக்கி வந்தது. இத்தகைய ஒரு சந்தர்ப்பவாத செயல்தந்திரத்தை இக்காலத்தில் பு.ஜ. செயல்படுத்தி வந்தது.

1983 ஜூன் கலவரத்திற்குப் பிறகு, நாம் தமிழ் ஈழ தனிநாடு என்ற முழக்கத்தை ஆதரித்தோம். இந்திய அரசு தனது மேலாதிக்க நோக்கத்தை அடையும் பொருட்டு திம்புவில் இலங்கை அரசுக்கும் ஈழப் போராளி குழுக்களுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இலங்கை அரசிலிருந்து - ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனம் பிரிந்து செல்லாமலும், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இராணுவ வழியில் அல்லாமல் அரசியல் வழியில் தீர்வுகாண வேண்டும் என்று இந்திய அரசாங்கம் திம்பு பேச்சுவார்த்தையின்போது கூறிற்று. மேலும் ஈழத் தமிழரின் இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு சுயநிர்ணய உரிமைக்கு மாற்றாக, இந்தியாவில் மாநிலங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தைப் போன்ற சுயாட்சியும், அதிகாரத்தை கீழ் மட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் முறையும் ஈழத்தமிழர்களுக்குத் தரவேண்டும் என்ற ஓர் தீர்வை இந்திய அரசு முன் வைத்தது. திம்பு பேச்சுவார்த்தையின் போது "ஈழத் தமிழர்கள் தனிநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களும் அவசியமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன" என்று நாம் எடுத்துக் காட்டினோம். அதே நேரத்தில் ஈழத்தமிழர் விடுதலை இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரத்தை பின்வருமாறு எடுத்துக் காட்டினோம்.

"இலங்கைவாழ் இரு தேசிய இனங்களும் ஒரே அரசுக்குள் இணைந்து வாழ வேண்டும் என்றால், ஈழத் தமிழினத்துக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்குவதைத் தவிர வழியில்லை." அத்துடன் இப்பேச்சுவார்த்தையின் போது, போராளி அமைப்புகள் பின்வரும் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினோம். "ஈழத் தமிழரின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் இவ்வரசிற்குள் வாழ்வது சகிக்க முடியாதது எனக்கருதி பிரிந்து போக விரும்பினால் அவர்களிடையில் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்" இது, இந்திய ஆளும் வர்க்கத்தினர் முன் வைத்த தீர்வை அம்பலப்படுத்துவதற்காக நாம் முன்வைத்த தீர்வாகும். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு, தனிநாடு முழக்கம் இக்கால கட்டம் முழுவதும் நமது முழக்கமாக இருந்தது.

இந்தக் கட்டத்தில் பு.ஜ.வின் முழக்கம் ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்பதாக இருந்தது. நமது முழக்கம் ஈழத் தமிழ்நாடு - தனிநாடு என்பதை ஆதரிக்கும் முழக்கமாக இருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிட்டபோது, பு.ஜ முன்வைத்த அரசியல் செயல்தந்திரம் பின்வருமாறு இருந்தது. இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிட்ட  பிறகு  இலங்கை  இந்தியாவின்  நவீன காலனியாகிவிட்டது என்றும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது என்றும் பு.ஜ வரையறை செய்தது. "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடன் இணைந்து போரிடுவது" என்கிற முழக்கம் பு.ஜ.வின் செயல்தந்திர முழக்கமாக இருந்தது.

இந்தக் கட்டத்தில் நாம் முன் வைத்த செயல்தந்திரம், இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதும், ஈழத் தமிழ் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை, இக்கட்டத்தில் மேலாதிக்கத்தை எதிர்ப்போர் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக, ஈழத் தமிழரின் கோரிக்கை தடையாக இல்லாமல் இருக்கும் பொருட்டு ஈழத்தமிழ் தனிநாடு கோரிக்கைக்கு மாறாக சுயநிர்ணய கோரிக்கை என மாற்றி வைத்துக் கொள்வது நமது நிலையாக இருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தப் போராட்டத்தில் இரு அமைப்புகளின் செயல் தந்திரங்களில் ஒற்றுமை இருந்த போதிலும், இவ்விரண்டு செயல்தந்திரங்களும் இரண்டு வேறுபட்ட யுத்ததந்திரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை ஆகும். தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பது, சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது என்ற இரண்டு வேறுபட்ட யுத்த தந்திர நோக்கங்களின் காரணமாக 1990 ஜூன் மாதம் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் பொருட்டு, விடுதலைபுலிகளின் இயக்கத்தின் மீது மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தத்தைத் துவங்கியதும், அந்த யுத்தத்தின் தன்மையைப் பற்றி வரையறை செய்வதிலும், அரசியல் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், அந்த யுத்தத்தில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரதானப் பணியைத் தீர்மானிப்பதிலும் பு.ஜ.வுக்கும் நமக்கும் கருத்து வித்தியாசங்கள் தோன்றிவிடுகின்றன. அதிலிருந்து இரண்டு முரண்பட்ட செயல் தந்திரங்களை பு.ஜ.வும், நாமும் வகுத்துக்கொள்கிறோம். ஆனால் பு.ஜ. எந்த யுத்ததந்திரத்தை வெற்றிபெறச் செய்வதற்காக இந்த கட்டத்தின் செயல்தந்திரம் வகுக்கப்பட்டிருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதைத் தெளிவாக எடுத்துக் காட்டவே முன் இரண்டு கட்டங்களில் இரண்டு அமைப்புகளும் எவ்வாறு செயல்தந்திரங்களை வகுத்துக் கொண்டன என்பதை எடுத்துக் காட்டினோம். இலங்கையரசுடன் விடுதலைபுலிகள் செய்து கொண்ட போர் ஓய்வு ஒப்பந்தம் குறித்து பு.ஜ. செய்த விமர்சனம் பற்றிய விவாதத்தை நினைவில் கொண்டால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

"ஈழப்போர் இப்போது மூன்றாவது கட்டத்தை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். சிங்கள ராணுவத்திற்கு எதிரான போர், இந்திய ராணுவ ஆக்கிரமிப்புப் போர் ஆகிய முதலிரு கட்டங்கள் என்றும், இந்திய கைக் கூலியான, துரோகிகள் தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான போர்" என்று பு.ஜ. குறிப்பிடுகிறது. (பு.ஜ 16 - 31 ஜனவரி 90) ஆனால் 1990 ஜூனில் துவங்கிய போர் யாருக்கு எதிரான போர் என்றும், ஈழப்போர் இப்போது நான்காவது கட்டத்தை அடைந்திருக்கிறதா என்றும் இந்தப் போரைப் பற்றி குறிப்பிடவில்லை. வேறு விதமாகச் சொன்னால், ஈழ மக்களின் விடுதலைப் போரின் நான்காவது கட்டம் என்று கருதுகிறதா? இல்லையா? எனத் தெரியவில்லை, முன் மூன்று கட்டங்களிலும் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்று சொல்லி வந்தது. "ஈழம் மீண்டும் போர்" ஈழ தமிழருக்கு தீர்வு எப்போது? (பு.ஜ 1-15 ஜூலை 90) என்ற தலைப்பிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறது:

"தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிலும், தோள் கொடுப்பதிலும் நாம் எவருக்கும் சளைத்தவர் அல்ல. தமிழீழத்தின் விடுதலையை சாதிக்கப் போவதாக ஆயுதம் தாங்கிய அமைப்புகள் துரோகிகளாகவும் ஆதிக்கத்தின் சின்னங்களாகவும் மாறுவதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கம் என்பதை எச்சரிப்பது போராடும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்யும் கடமையாகும். தமிழீழ மக்கள் தொடர்ந்து ரத்தம் சிந்துவதும், உயிர்த்தியாகம் செய்வதும் இன ஒடுக்கு முறையிலிருந்து மீள்வதற்குத்தானே அன்றி மீண்டும் ஆதிக்கத்தளையில் வீழ்வதற்கல்ல."

இதிலிருந்து பார்க்கும் போது, ஈழப்போரின் முதல் மூன்றுகட்டங்களோடு சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்ற முழக்கத்தை முடித்துக் கொண்டு விட்டது என்பதும் இந்தக் கட்டத்தில் சுயநிர்ணய உரிமையை முன் வைக்கவில்லை என்பதும் மேலே எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோளிலிருந்து தெரிகிறது. இந்தக் கட்டத்தில் அந்த முழக்கத்தை முன் வைக்காததற்கு அது கூறும் காரணம் என்ன? துரோகிகளும் அதிகாரத்தின் சின்னங்களும் ஒன்றுதான், அதாவது இந்திய மேலாதிக்கவாதிகளின் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்குக் கைக்கூலிகளாகி விட்ட தமிழ் தேசிய இராணுவத்தினரும், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி வெளியேற்றிவிட்டு இன்று தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்காக யுத்தம் தொடுத்துள்ள, சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடும் விடுதலைபுலிகள் இயக்கமும் ஒன்றுதான். ஆகையால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக யுத்தம் தொடுத்துள்ள சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடாதீர்! ரத்தம் சிந்தாதீர்! இவ்வாறு பு.ஜ. சிங்கள அரசு தொடுத்திருக்கின்ற யுத்தத்தைப் பற்றிய தனது அணுகுமுறையை தீர்மானித்திருக்கிறது. யுத்தத்தைக் குறித்த அணுகுமுறையிலிருந்து, தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுவதன் கூடவே, அதற்கு சற்றும் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறது. இதன் மூலம் புலிகளையும், சிங்கள இனவெறி அரசையும் சமப்படுத்துகிறது. இப்போது சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்கு சற்றும் குறைவில்லாமல் புலிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறுகிற பு.ஜ. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியபோது அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று சொன்னது ஏன்? இலங்கை இந்தியாவின் நவகாலனியாக ஆகிவிட்டதென்றும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என்றும் கூறி, இக்காரணத்தால், இந்திய ராணுவத்திற்கு எதிராக, பாசிஸ்ட் விடுதலைப்புலிகள், பாசிஸ்ட் ஜெ.வி.பி முடியுமானால் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க கூடிய இலங்கை ஆளும் வர்க்கங்களின் ஒருபகுதியினர் உள்ளிட்டு, இன்னும் பலருடன் ஒரு பரந்த அணியை உருவாக்கும் பொருட்டு, "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடன் இணைந்து போராடுவது" என்ற முழக்கத்தை முன் வைக்கவேண்டும் எனப் பு.ஜ.கூறிற்று.

இந்திய  'அமைதிப்படை'  இலங்கைக்குச் செல்லும் வரையில் அதாவது இந்திய ஆக்கிரமிப்பு வரையில் விடுதலைபுலிகள் இயக்கத்தைப் பற்றி பு.ஜ என்ன சொல்லி வந்தது? விட்டெறிந்த காசுக்கு விலை போனவர்கள் என்றும், பாசிஸ்டுகள் என்றும், இனவெறியர்கள் என்றும், இன்னும் பலவற்றையும்தானே பு.ஜ. சொல்லி வந்தது? அப்படியிருக்கும் போது, பாசிஸ்ட் புலிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்று கூறியதற்குக் காரணம் என்ன? இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என அது கருதியதுதான் காரணமாகும். சிங்கள இனவெறி அரசு தமிழீழ தேசிய இனத்தின் மீது ஒரு உள்நாட்டு யுத்தத்தை தொடுத்து விட்டபோது, சிங்கள இனவெறி அரசையும், தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தையும் சமப்படுத்துவதற்கும், ஒரு தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்தும் சிங்கள இனவெறி அரசை எதிர்த்தும் போராடுவதுடன் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலிகளை, எதிர்த்துப் போராட வேண்டும் என்று பு.ஜ. சொல்வதற்குக் காரணம், தேசிய இன ஒடுக்கு முறையை எதிர்ப்பதும், தமிழீழத்தின் அரசியல் சுதந்திரம் - அதாவது தனித் தமிழீழம் அமைத்துக் கொள்வதும் பிரதான பணி என பு.ஜ கருதவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

எனவே சிங்கள ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத்தமிழினம் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழீழம் பிரிந்து போவதை ஆதரிக்க கூடாது. அதை ஆதரிப்பது இனவாதம். ஆகையால் பாசிச பேரினவாத இலங்கை அரசை எதிர்த்து விடுதலைபுலிகள் இயக்கத்துடன் 'ஜனநாயகத்தை முன் நிபந்தனையாக கொண்டு' இணைந்து போராடக் கூடாது என்பது பு.ஜ.வின் தர்க்கம். இதனால்தான் இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்திற்கு எதிராக விடுதலைபுலிகளுடன் நிபந்தனையுடன் இணந்து போராடக்கூடாது என்றும் இலங்கை அரசையும் புலிகளையும் சமப்படுத்த வேண்டும் என்றும், பு.ஜ. செயல்தந்திரம் வகுத்துக் கொள்வதற்கு உண்மையான காரணம், தமிழீழம் பிரிவதை ஆதரிக்கக் கூடாது என்கிற அவர்களின் நிலைபாடே தவிர அவர்கள் சொல்வதுபோல் புலிகள் பாசிஸ்டுகள் என்று கருதுவதால் அல்ல.

ஒரு இனம் என்ற முறையில் ஈழத் தமிழினத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்பது இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. 1983 ஆம் ஆண்டிலேயே இலங்கை அரசு தமிழீழ விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக அந்த இனத்தின்மீது யுத்தத்தைத் தொடுத்துவிட்டது. இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினைக்கான போராட்டம் - தனி தமிழீழம் அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் ஒரு நீண்ட யுத்தம் என்கிற வடிவத்தை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு  ஒடுக்கும்  சிங்கள  இன  அரசுக்கும்  ஈழத்  தமிழிழனத்திற்கும் யுத்தம் துவங்கிவிட்ட பிறகும்கூட பு.ஜ குழு ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை - பிரிந்து போகும் உரிமையைத்தான் அங்கீகரிக்கிறது, பிரிவினையை - தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரிக்கவில்லை. அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை பிரிவினை வடிவத்தை - தமிழீழம் தனிநாடு அமைப்பது என்ற வடிவத்தை எடுத்துக்கொண்ட பிறகும்கூட பிரிவினயை ஆதரிக்க மறுப்பது-தமிழீழம் தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிக்க மறுப்பது தமிழீழத்தின் அரசியல் சுதந்திரம் என்ற கோரிக்கையை கைவிடுவதாக ஆகி விடுகிறது. அரசியல் சுதந்திரத்தை கைவிட்டு, பிற ஜனநாயக கோரிக்கைகளுக்கு மட்டுமே போராடுவதை தனது நோக்கமாகக் கொள்வதாக ஆகிவிடுகிறது. இவ்வாறு அரசியல் சுதந்திரம் என்ற குறிக்கோளை இழந்து விடுவதன் விளைவாக சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதுடன் அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலைபுலிகளின் இயக்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று கூறுகிறது. ஒடுக்குவோரையும், ஒடுக்கப்படுவோரையும் சமப்படுத்தும் அளவிற்கு தாழ்ந்து விடுகிறது. எங்கே மக்கள் விடுதலை உணர்வு பெற்று ஒடுக்கப்படுவோனை எதிர்த்துப் போராடாமல் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 'அதற்கு சற்றும் குறைவில்லாமல்' என்று சொல்லி அதற்கு அழுத்தம் தருகிறது.

இந்த யுத்தத்தில் போரிடும் இலங்கை அரசையும், விடுதலைபுலிகள் இயக்கத்தையும் சமப்படுத்தும் முடிவுக்கு பு.ஜ. எப்படி வந்து சேர்ந்தது?

1. தேசிய  இனப்  பிரச்சினை  என்பது  தேசிய முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்ற வறட்டுத்தனமான கோட்பாட்டை அது கடைபிடிப்பதாலும்;

2. ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினை எழும்போது பாட்டாளிவர்க்க இயக்கம் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பவாத கோட்பாட்டை அது வகுத்துக் கொண்டதாலும்;

3. இலங்கையில் தற்போதுள்ள நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்ட பிறகுகூட, சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது என்ற அளவிற்கு தனது குறிக்கோளை குறுக்கிக் கொண்டு விட்டதாலும்,

4. சிங்கள பேரினவாத அரசின் கொள்கைகளால் சிங்கள இனத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் இடையில் பூசல்களும், மோதல்களும் இருந்து வந்ததின் தொடர்ச்சிதான், இப்போது இலங்கை அரசுக்கும், விடுதலைபுலிகளுக்கும் நடைபெறுகின்ற யுத்தம் என்பதைப் பார்க்க மறுப்பதாலும்;

5. அரசியல்  சுதந்திரத்திற்கு  எதிராக  ஜனநாயக  கோரிக்கைகளை எதிர்நிலைப்படுத்தும் அதன் குதர்க்க வாதத்தினாலும்;

6. விடுதலை இயக்கத்தைவிட சிங்கள பேரினவாத அரசு ஒரு படுகேவலமான பாசிஸ்ட் அரசு என்பதை பு.ஜ. சௌகர்யமாக மறந்து விடுவதாலும், அது இலங்கை அரசையும், விடுதலைபுலிகளையும் சமப்படுத்துகிறது.

எனவே இரண்டு வெவ்வேறு யுத்ததந்திரங்களும், அவற்றின் அடிப்படையில் வகுக்கப்படும் வெவ்வேறு செயல்தந்திரங்களும்தான், நமக்கும் பு.ஜ.வுக்கும் இடையில் உள்ள உண்மையான முரண்பாடாகும். தமிழீழம் தனிநாடு அமைப்பதை நாம் அரசியல் யுத்ததந்திரம் செயல்தந்திரங்கள் வகுப்பதற்கு அடிப்படையாகக் கொள்கிறோம். பு.ஜ. தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே ஆதரிப்பதையும் - பிரிந்து போகும் உரிமையை மட்டும் ஆதரிப்பதையும் - தமிழீழம் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்வதை எதிர்ப்பதையும் தனது அரசியல் யுத்ததந்திரம் மற்றும் செயல்தந்திரங்களை வகுப்பதற்கு அடிப்படையாகக் கொள்கிறது. இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு நாம் புலிகளின் பாசிசத்திற்கு துணை போகிறோம் என்றும், பிற புரட்சிகர குழுக்கள் புலிகளை விமர்சனமே செய்யக்கூடாது என்கிறார்கள் என்றும் பு.ஜ. கூறுவது உண்மை அல்ல. உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக்காட்டுகிறோம்.

விடுதலைபுலிகள் அமைப்பு யுத்தத்தில் ஊன்றி நிற்பதில் அதன் பலமும், பலவீனமும் பற்றி நாம் என்ன சொன்னோம்.

"ஈழத் தமிழினம், தேசிய இன விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதிலுள்ள பிரச்சினை, விடுதலைபுலிகள் அமைப்பு மட்டுமே யுத்தத்தை தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும். இந்திய மேலாதிக்கத்திற்கு - இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு சேவை செய்த அமைப்புகள் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, பிளாட் ஆகியவையாகும். இவைகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்த்த பிற அமைப்புகள் இன்றைய உள்நாட்டு யுத்தத்திலும் பிரேமதாச அரசுடன் சேர்ந்து கொண்டு ஈழ தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப் ஐப் பொறுத்தவரையில் இப்போது நடக்கும் யுத்தத்தை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தனிப்பட்ட யுத்தமாகப் பார்க்கிறது. தனது அமைப்பு இந்த யுத்தத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறது.

விடுதலைபுலிகள் அமைப்பு இன்றைய யுத்தத்தில் தனித்து நின்று போரிடுவதற்கு இது ஒரு காரணமாகும். பிற அமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு சிதறுண்டு போய் விட்டன. இதன் காரணமாக விடுதலைபுலிகள் தனித்து நின்று போரிடுவது ஈழத்தமிழின விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குச் சாதகமானதே தவிர பாதகமானதல்ல. விடுதலைபுலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார போக்கும், அதன் ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிச கொள்கையும் ஆகும்.

இதன் விளைவாகவே இன்றைய விடுதலைப் போரில் பங்காற்ற வேண்டிய பிற புரட்சிகர சக்திகளும், ஜனநாயகவாதிகளும் இதில் பங்கு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பரந்துபட்ட மக்களும் கூட ஜனநாயக மறுப்பின் காரணமாக (அமைப்பு ரீதியாக போராட முடியாமல்) அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டு, அவ்வமைப்புகளின் பலத்தை சார்ந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போரிட முடியாமல், வெறும் பார்வையாளர் நிலையில் வைக்கப்படுகின்றனர். எந்தவொரு தேசிய விடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தமாகும். எனவே இக்கொள்கை ஈழத் தமிழினம் தேசிய விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குப் பாதகமான ஒன்றாகவும், சமரசத்திற்குப் பணிந்து போவதற்கு வாய்ப்பை உருவாக்கும் ஒன்றாகவும் இருக்கிறது."

மேலும் புலிகள் தனிநாடு கோரிக்கைக்காக ஊன்றி நிற்கிறார்கள் என்பதை எந்தப் பொருளில் கூறுகிறோம் பாருங்கள்.

"முன் கூறப்பட்ட காலப் பகுதியில், இலங்கை அரசை எதிர்த்த தமிழீழத் தேசிய இன உரிமைப் போராட்டத்தில் சமரசப் போக்குடைய, பாராளுமன்றவாத டி.யூ.எல்.எப் முதல் எல்.டி.டி.இ வரையிலான பல்வேறு வகைப்பட்ட அரசியல் சக்திகள் பங்குகொண்டன. ஆனால் இப்போது இலங்கை அரசை எதிர்த்து நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை எல்.டி.டி.இ (விடுதலைப்புலிகள் அமைப்பு) மட்டுமே தனியாக நடத்துகிறது. அன்று 1983 - 87 போராட்டத்தின் போது அதில் பங்கு கொண்ட அரசியல் சக்திகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் தனிநாடு கோரிக்கையை உறுதியாக ஆதரித்தவை அல்ல. டி.யூ.எல்.எப் அமைப்பு 1983 ஜூன் கலவரத்திற்கு முன்பே தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டது. எல்.டி.டி.இ யைத் தவிர பிற போராளி அமைப்புகள் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதில் ஊசலாட்டம் அல்லது கைவிடும் நிலையில் இருந்தவைதான்."

பு.ஜ. இதை எவ்வாறு திரித்துக் கூறுகிறது என்பதைப் பாருங்கள்.

"தேசிய இன விடுதலை யுத்தத்தில் புலிகள் மட்டுமே ஊன்றி நிற்கிறார்கள்" என்பது அப்பட்டமான பொய் - இரண்டு வகையில். முதலாவதாக, அதற்காக ஊன்றி நின்ற குழுக்களுக்கு, அவை சிறியவையானாலும், தடை விதித்து, அவற்றிலிருந்த போராளிகளை புலிகள் கொன்றதன் மூலமே, "புலிகள் மட்டுமே" என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது.

இரண்டாவதாக, இந்தக்காரியத்தை செய்ததன் மூலம் "தேசிய இன விடுதலை" யுத்தத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி சிங்களப் பேரின ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக துணை போனார்கள் புலிகள்.

சக போராளிகளை கொன்றதன் மூலம் போரில் ஊன்றி நிற்பவர்கள் புலிகள்தான் என்பதும், அதுவே புலிகளின் பலம் என்றும் சொல்வது (பார்க்க சமரன் வெளியீடு) எவ்வளவு கொடூரமும், வக்கிரமும் நிறைந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அடுத்து, தேசிய இன விடுதலை யுத்தத்தில் புலிகள் ஊன்றி நிற்பதாகக் கூறுவதும் அப்பட்டமான பொய். புலிகள் போடும் சொந்த குழு ஆதாயத்துக்கான நிபந்தனைகளை இந்திய, இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்கவில்லையே தவிர, மற்றபடி அவை ஏற்கப்படுமானால் தேசிய இன விடுதலைக்குத் துரோகமிழைக்கப் புலிகள் எப்போதுமே தயார்தான்! புலிகளின் வாக்குமூலப்படியே இந்திய உளவுப்படையான "ரா" விடம் இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பதில் மற்ற ஈழத் துரோகி அமைப்புகளுடன் புலிகளும் கலந்து கொண்டனர். ஈழ விடுதலை இயக்கத்தார் மீது பலவீனம் ஏற்படும் வகையில் "ரா" வின் போதனைகளைக் கேட்டு சிங்கள சிவிலியன் மக்களைக் கொன்றனர். சக போராளிகளைக் கொன்றனர். ஈழ தேசிய இன விடுதலை - சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு, தமது குழு உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கைக்காக ஈட்டுத் தொகை பேரம் நடத்தி, பலகோடி ரூபாய்க்கு எதிரிகளிடம் ஒப்பந்தம் போட்டு, முதல் தவணை கையூட்டும் பெற்றனர். இது போன்றதொரு பேரத்துக்குப் புலிகள் எப்போதுமே தயார் என்ற நிலையில் இன விடுதலை யுத்தத்திற்கு அவர்கள் ஊன்றி நிற்பதாக எப்படி ஏற்பது? இந்த விவரங்களை எல்லாம் மூடி மறைத்து விட்டுத்தான் மேற்படிக் கேள்விகள் எழுப்புபவர்கள் பிரசுரம் போடுகிறார்கள்." (பு.ஜ. 16 - 28 பிப்ரவரி 91, பக்கம் 10)

ஒன்று, நாம் விடுதலைபுலிகள் அமைப்பு மட்டும் யுத்தத்தை தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் பு.ஜ. பலம் என்பதை மட்டுமே சொல்வதாகச் சொல்லி பித்தலாட்டமாக திரித்துக் கூறுகிறது. பிற ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவதை நாம் விமர்சனம் செய்திருந்தும், அதை மூடி மறைத்துவிட்டு நாம் விமர்சனம் செய்யாதது போல் திரித்துக் கூறுகிறது.

இரண்டு, தனிநாடு கோரிக்கையை மேற் சொன்ன அமைப்புகள் கை விட்டுவிட்டன. இப்போதும் விடுதலைபுலிகள் தனிநாட்டுக்காக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்லுகிறோம். தனி நாட்டு கோரிக்கையைப் பற்றி பு.ஜ. நிலை என்ன? அதைப் பற்றி சொல்லாமல் பு.ஜ. தேள் கொட்டிய திருடனைப்போல் மௌனம் சாதிப்பது ஏன்?

மூன்றாவது, "தேசிய இன விடுதலைக்குத் துரோகமிழைக்கப் புலிகள் எப்போதும் தயார்தான்" என்பது பு.ஜ வழக்கமாகக் கூறிவரும் ஆரூடம்தான். ஆனால் சிங்கள இனவெறி அரசுக்கும் விடுதலைபுலி இயக்கத்திற்கும், இடையில் இப்போதும் ஈழ தனிநாடு கோரிக்கைக்காகத்தான் யுத்தம் நடக்கிறது என்பது உண்மை. பேரம் நடத்தி பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றனர் என்று பு.ஜ சொன்ன பிறகுதான் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து விடுதலைபுலிகள் யுத்தம் நடத்தினர். அந்த யுத்தத்தில் "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு" இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களுடன் இணைந்து போராடலாம் என்று பு.ஜ. சொன்னது. இந்த யுத்தத்திற்கு முன்னாலும் விட்டெறிந்த காசுக்கு விலைபோனார்கள் என்றுதான் விடுதலைபுலிகளைப் பற்றி பு.ஜ சொன்னது. இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அதைப்போல்தான் சொல்கிறது. இப்போது சொல்லுங்கள். உண்மைகளை மூடி மறைப்பது யார்? நாமா? பு.ஜ.வா?

அரசியல் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்நிலைப்படுத்தும் குதர்க்கவாதமும் பு.ஜ.விடம் தலை விரித்தாடுகிறது. தமிழீழம் தனிநாட்டுக்காக - தமிழீழத்தின் அரசியல் சுதந்திரத்துக்காக போராடுவோரை ஜனநாயகத்தின் பெயரில் கொச்சைப்படுத்தும் நிலைக்கு பு.ஜ தான் சென்றுவிடுகிறது.

தடைகளைக் கடப்போம்! ஒன்றுப்பட்டுப் போராடுவோம்!

பு.ஜ.வின் விமர்சனங்களுக்கு நமது நிலை பற்றிய விளக்கம் அளிப்பதும், பு.ஜவை விமர்சனம் செய்வதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஒன்றுப்பட்ட நடவடிக்கைக்கு அவசியமானது எனக் கருதியே இதை எழுதுகிறோம். விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதும், மக்கள் யுத்தக் குழுவின் ஆந்திர மாநில கமிட்டியின் மீதும், அதன் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் திரள் அமைப்புகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை திரும்பப் பெறச்செய்வது புரட்சிகர சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையைக் கோருகிறது. மேலும் இது நம் அனைவரின் தவிர்க்க முடியாத கடமையாகவும் இருக்கிறது. எனவே தடைகளைக் கடந்து ஒன்றுபட்டு மக்களிடம் செல்வது அவசர அவசியமானதாகும். மக்கள் நம்மிடம் இதைத்தான் கோருகிறார்கள். தடைகளைக் கடந்து ஒன்றுபட்டு போராடுவோம். புலிகள் மீதும் மக்கள் யுத்தக் குழுவின் மீதும் நரசிம்மராவ் கும்பல் விதித்துள்ள தடைகளை திரும்பப் பெறச் செய்ய உறுதி கொள்வோம்.

மக்கள் யுத்தக் குழுவின் மீது தடை ஏன்?

ஆந்திர  மாநில அரசாங்கம் இ.க.க (மா.லெ)  யின் ஒரு பிரிவான மக்கள் யுத்தக் குழுவின் மீதும், அதன் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் திரள் அமைப்புகள் மீதும் தடை விதித்திருக்கிறது. அவ்வமைப்பு இரயில் கவிழ்ப்பு நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும், அரசு அதிகாரிகளை கடத்திச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் காரணம் காட்டி அதை தடை செய்திருப்பதாக நரசிம்மராவ் கும்பல் கூறுகிறது. ஆந்திர மாநில அரசாங்கம் அவ்வமைப்பின் போராளிகளை மோதலில் ஈடுபட்டதாகச் சொல்லி கொன்று குவித்து வந்தது. தடா மற்றும் கருப்புச் சட்டங்களின் கீழ் அவ்வமைப்பின் எண்ணிலடங்கா செயல் வீரர்களைக் கைது செய்து வைத்துள்ளது. இதனால் மக்கள் திரள் அமைப்புகளின் அடிப்படை உரிமைகளை பறித்திருக்கிறது. மனித உரிமைக்காகப் போராடுவோரையும், பண்பாட்டுத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் பாடல் கலைஞர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது. மிகச் சாதாரணமாக ஜனநாயக முறையில் செயல்படக் கூடியவற்றையெல்லாம் கருப்புச் சட்டங்கள் மூலமும், அரசாங்க நடவடிக்கைகள் மூலமும் சட்ட விரோதமாக்கி விடுகிறது. பிறகு அச்செயல்கள் எல்லாம் சட்டவிரோதமானது என்று சொல்லி அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. இதுவரை அரசு செய்து வந்த சட்ட விரோதமான செயல்களுக்கெல்லாம் சட்ட வடிவம் தருவதற்காக இப்போது அந்த அமைப்புகளின் மீது தடை விதித்திருக்கிறது.

பெருகி வரும் பட்டினிச் சாவுகள், சமூக ஒடுக்குமுறைகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நிலப்பிரபுத்துவ சாதி வெறியர்கள் தொடுத்துவரும் தாக்குதல், கந்து வட்டிக்காரர்களின் கொடுமை, முதலாளித்துவத்துக்கு முந்தைய பொருளாதார ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் காரணமாக கிராமப்புற உழைக்கும் மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுகின்றனர். அவர்களை எல்லாம் அமைப்பு ரீதியாக திரட்டுவதை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆந்திர மாநில அரசாங்கம் இந்த தடையை ஒரு ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒரு புரட்சிகர அமைப்பை தடை செய்திருப்பது ஏதோ  ஒரு  தீவிரவாத  அமைப்பின்  மீது தடையாக பார்ப்பது நாட்டில் நிலவும் சூழ்நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டதாக ஆகாது. தான் அமல்படுத்தி வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள், பிற்போக்கு அரசியல்கொள்கைகள், இன ஒடுக்குமுறைக் கொள்கைகள், விஸ்தரிப்புவாதக் கொள்கைகளின் விளைவாக அரசியல் பொருளாதார நெருக்கடி ஆழப்படும் என்பதை நரசிம்மராவ் கும்பல் உணர்ந்திருக்கிறது. ஆகவே அது பாசிச ஆட்சி முறையை நோக்கி பயணம் செய்ய தயாராகி வருகிறது. அதற்கான வெள்ளோட்டம்தான் ஆந்திர மாநில மக்கள் யுத்தக் குழுவின் மீதும், விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீதும் நரசிம்மராவ் கும்பல் விதித்துள்ள தடைகள். இத்தடைகளை திரும்பப் பெறச்செய்வது அனைத்து ஜனநாயகவாதிகளின் கடமையாகும். அனைத்து ஜனநாயக சக்திகளும், ஆளும் வர்க்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்குகளை எதிர்த்துப் போராடுவதில் மக்கள்யுத்தக் குழுவின் செயல்தந்திரங்களும், நடைமுறைப் பணிகளும் அனைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே அது புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும். இதை மக்கள்யுத்தக் குழு உணர்ந்து அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றுபடுவதற்கு முன்வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இத்தடைகளை அனுமதிப்பது அரசு பயங்கரவாதச் செயல்களை அது மேலும், மேலும் நாடுவதற்கு இடமளிப்பதாகும், ஆகையால் விடுதலைபுலிகள், ஆந்திர மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடைகளை திரும்பப்பெறு என குரல் கொடுக்கும்படி அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

* விடுதலைபுலிகள், மக்கள் யுத்தக்குழு மீதான தடை பாசிசத்திற்கான பயணமே!

* விடுதலைபுலிகள் மீதான தடையை திரும்பப் பெறு!

* ஈழ விடுதலைப் போரை ஆதரிப்போம்!

* ஆந்திர மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடையைத் திரும்பப் பெறு!

* விவசாயப் புரட்சி இயக்கம் வெல்க!

ஏஎம்கே
ஜூலை-1992

ஏஎம்கே தேர்வு நூல்கள் , தொகுதி - 2 (பக்கம் 214 -287)