கவிதை: பிள்ளைக்கறியுண்ணும் சாத்தான்கள்
கார்த்தி ஆதவன்

உங்கள் ராணுவமோ
மழைத்துளிகளைப் போல அடர்த்தியுடன்
குண்டுகளை வீசுகின்றது
நீங்கள் குண்டுகளால் பொசுக்கிய
எங்கள் அறுபதாயிரம் பெண்களையும்
பிஞ்சு சகோதர்களையும்
மொட்டு போன்ற மகள்களையும்
நீங்கள் பறிக்கத்துடிக்கும்
எங்கள் பாலஸ்தீன
மண்ணில்தான் புதைத்திருக்கின்றோம்
நீங்களோ பிள்ளைக்கறி தின்கிறீர்கள்
நீங்கள் தின்றது போக
மீதமிருக்கும் பிள்ளைகளோ
விரல்கள் கரண்டியென
சோற்றை சுரண்டி வழிக்கின்றன
தீ ஜுவாலையென
கொழுந்துவிட்டெரியும் பசியில்
குண்டுகளால் கொன்ற
பல்லாயிரக்கணக்கானவர்கள் போக
எஞ்சிருப்பவர்களை இப்போது பட்டினியாலும்
கொல்ல முடிவெடுத்துவிட்டீர்கள்
பத்துவயது கூட நிரம்பாத
எங்கள் குழந்தைகள்
கைகளும், கால்களுமிழந்து
துடிக்கின்றன வேதனையில்
அவர்கள் உடலோடு கழிக்கும்
மலமூத்திரங்கள் நாற்றமடிக்கவில்லை
நீங்கள்வீசிய குண்டுகளின்
கந்தக வாசனையில்
அச்சத்தால் உடல் நடுங்கி
குண்டுவீச்சால் இடிந்த
ஒரு கட்டிடத்தின் இருட்டறையில்
பதுங்கிக் கொண்டிருக்கிறது
நீங்கள் வணங்கும் கடவுள்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
இரத்தம் குடித்த
இதுபோன்ற சாத்தான்களை
அது எப்போதும் கண்டதில்லையென்பதால்!
- கார்த்தி ஆதவன்
Disclaimer: இந்தப் பகுதி கவிஞரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு