சுப்ரமணிய சிவா: பிறந்த நாள்

சுதந்திர வேட்கை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு லட்சியங்களை உயர்த்தி பிடிப்போம்

சுப்ரமணிய சிவா:  பிறந்த நாள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாக சீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்படக் காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் 'சிவம்' என்றும், 'சிவா' என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் வைத்த பெயர் சுப்பராமன். 1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்த்ததால் சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். 1893 திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுசெட்டி மண்டபத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். பின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பாரதிக்கு மாணவனாகச் சேர்ந்து படித்தார். வறுமை காரணமாகத் திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் உணவு கூடத்தில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். தமது சிறுவயதிலே, 1899-இல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார், பின்னர் நாட்டின் விடுதலையில் நாட்டம் கொண்டவராக திருவனந்தபுரம் சென்றார்.

1904-1905 காலகட்டத்தில் ரசியாவில் லெனின் தலைமையில் எழுந்த பாட்டாளி வர்க்க புரட்சிகர எழுச்சியானது, உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் எழுச்சியைக் கொண்டு வந்தது. 1905 இல் கர்சன் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தேமாதரம் எனும் முழக்கங்கள் எழுந்தன.

தனது 19வது வயதிலே ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதேசிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சிவா 1906-07 திருவனந்தபுரத்தில் 'தர்ம பரிபாலன சமாஜம்’ அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டி சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டினார். அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தேசிய உணர்வை ஊட்டினார். இவர் தூத்துக்குடிக்கு வந்தபொழுதுதான் அங்கு வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார். 1908 இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சுதேசிய உணர்வை பரப்பினார். தெற்கே சுதந்திர கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி., சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. கடும் தண்டனை பெற்றதும், மேல்முறையீட்டில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். இவர் ஆறாண்டுக் காலம் கடுங்காவல் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 1908 முதல் நவம்பர் 1912 வரை அவரது முதல் சிறைவாழ்க்கையாகும். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்த துன்பம் சொல்ல முடியாத துயரங்களாகும். சிறை இவருக்கு அளித்த கொடை எவரொவரும் அஞ்சும் தொழுநோயாகும். இதனை அவர் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912 இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்து கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்குக் கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சாரம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். பிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலைக் கைக்கொள்ளக் கருதி, ’ஞானபாநு’ என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916 இல் 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் 'நாரதர்' என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.

1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 இல் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். ஸ்வதந்த்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். நவம்பர் 17, 1921இல் இரண்டாவது முறையாக, தேசவிரோத குற்றத்திற்காக சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் தொழு நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் ஜனவரி 12, 1922 இல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஓராண்டுக்காலம் நன்னடத்தை பிணை கேட்டு அரசு வழக்குத் தொடுத்தது. 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் கோவை, தருமபுரி, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிவாவின் நெருங்கிய நண்பர் பாப்பாரப்பட்டி வள்ளல் தியாகி சின்னமுத்து முதலியார் கொடுத்த பொருளுதவி மூலம் 6 ஏக்கர் நிலம் வாங்கி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன்தாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 22.7.1925 இல் வந்தடைந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடி, கால்நடைப் பயணம் இவற்றில் ஓய்ந்து போனார். இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் காங்கிரசும் கைவிட்டது. ஆனாலும், தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவும் நாட்டின் விடுதலைக்காவும் போராடி, இறுதியாக 23-7-1925இல் தம்முடைய 41ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்! இவ்வாறே வ.உ.சியும் பாரதியும் தனது இறுதிக் காலம் வரை சுதந்திரத்திற்காகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் போராடி மக்களின் மனதில் நீங்காத சுதந்திர வேட்கையை விதைத்துச் சென்றுள்ளனர். சுப்பிரமணிய சிவா அவரின் பிறந்த நாளில், அம்மூவர்களின் இலட்சியங்களை உயர்த்திப் பிடிப்போம், அவர்களின் கனவுகளை நினைவாக ஏகாதிபத்திய மறுப்பங்கிட்டுக்கான போரை முறியடிப்போம், புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க அனைத்து மக்களும் ஓரணியில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! வென்றெடுப்போம் வாருங்கள்!!..