பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் கைகோர்த்து தவெக அரசை வெளுத்து வாங்குகிறார்கள்!
சாவித்திரி கண்ணன்
என்ன ஆச்சரியம் பாருங்கள்!
பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தமிழக பாஜகவும், இந்துத்துவ இயக்கங்களும், திமுகவும் கைகோர்த்து தவெக அரசை வெளுத்து வாங்குகிறார்கள்!
ஆனால், இந்த நில மோசடி அதிரடியாக நடந்ததல்ல. இதற்கான வித்து சென்ற ஆட்சியிலேயே விதைக்கப்பட்டது என்பதை நடந்துள்ள சம்பவங்களை ஒருங்கிணைத்து பார்த்தால் அறிய முடிகிறது.
பழனி முருகன் கோவிலுக்கு பாத்தியமான 100 கோடி பெறுமான நிலம் அதிகார பலத்துடன் களவாடப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு இந்து அறநிலையத் துறை, பத்திர பதிவுத் துறை, நீதித் துறை மூன்றும் காரணமாகின்றன..என்பதோடு, நிலத்தை விற்றவர்களுக்கும் கோவிலுக்கும் தொடர்பில்லை. வாங்கிய நபர்களும் தங்கள் பணத்தில் வாங்கவில்லை என்பது போன்ற பல மர்மங்கள் குறித்த அலசல்;
பழனி கோவிலுக்கு பாத்தியமான 1.35 ஏக்கர் நிலத்தைப் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போராடித் தான் செப்டம்பர் 2025 ல் இந்து அறநிலையத் துறை வசம் வந்தது. அப்போது தொடங்கி பலமுறை அந்த இடத்தை யாருக்கும் ரிஜிஸ்டர் செய்யக் கூடாது என்று பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மூலமாக சார் பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதங்கள் மூன்று முறை அனுப்பப்பட்டுள்ளன.
இதை மீறி கடந்த மார்ச் 27-ந் தேதி திமுக ஆட்சியில் இருக்கும் போது, இதே நிலத்தை மீண்டும் பத்திரப் பதிவு செய்ய முயற்சி மேற் கொண்டனர். மோசடியான பத்திரம் மூலம் இந்த பத்திர பதிவு முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அப்போதைய சார் பதிவாளர் பத்திரப் பதிவு செய்ய மறுத்து ”ரெஃப்யூசல் ஸ்லிப்” வழங்கினார். இந்த ஸ்லிப் ஏப்ரல் 1-ந் தேதி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மோசடி நபர்கள் ஏப்ரல் 10-ந் தேதி, மதுரை உயர்நீதிமன்றத்துக்கு சென்றதில் தனிநீதிபதி “ஆவணங்களை சரி பார்த்து சரியாக இருக்கும் நிலையில் பத்திரப் பதிவு செய்யலாம் (Can be considered )” என உத்திரவு போடுகிறார்.
நியாயமாக அந்த நிலத்திற்கு பாத்தியதையுள்ள கோவில் இணை ஆணையரிடம் நீதிபதி விளக்கம் கேட்டுத் தான் ஒரு தீர்ப்பைத் தர வேண்டும். இது ஒரு அவசியமான நடைமுறை. அதை செய்யாததோடு இந்த பத்திர பதிவை ஒரு வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆக, இந்த குற்றத்திற்கான பிள்ளையார் சுழி தனி நீதிபதி ஒருவரால் தான் போடப்பட்டுள்ளது என்ற கசப்பான யதார்த்தத்தை நாம் புறம் தள்ள முடியாது.
இந்தச் சூழலில் அன்றைய இந்து அறநிலையத் துறை என்ன செய்திருக்க வேண்டும்? இது போன்ற மோசடிப் பதிவுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடை பெறுவதை கருத்தில் கொண்டு, அந்த தனி நீதிபதி தந்த மிகத் தவறான அறிவுறுத்தலை மறுத்து, நீதிமன்றத்தில் ஒரு சூட் போட்டு இருந்தால், அந்த நிலத்தை உரிமை கொண்டாடும் தைரியம் யாருக்கும் வராது. அப்படியே வந்தாலும் அதை நீதிமன்றம் அனுமதிக்காது.
அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதரும் இதை உடனடியாக செய்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் வாளாவிருந்ததற்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
சரி, புதிய அரசு பதவி ஏற்கிறது. இந்தத் துறைக்கு முற்றிலும் புதியவரான இளைஞர் ரமேஷ் பொறுப்பு ஏற்கிறார். அதே சமயம் இந்து சமய அற நிலையத்துறையில் ஏற்கனவே ஆணையராக இருந்து மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ள இன்றைய இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபன் அவர்களுக்கு இந்த விவகாரம் நன்கு தெரிந்திருக்குமே.
இந்த பிரச்சினை குறித்து பழனி கோவில் இணை ஆணையர் அடிக்கடி தடை மனு போட்டு வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒரு சூட் போட்டிருக்கலாம். அவரே பத்திர பதிவிற்கும் ஆணையராக இருப்பதால், இது குறித்து ஒரு நிலைத்த, வலுவான அறிவுறுத்தலையும் திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர்களுக்கு தந்திருக்க வேண்டும். இரு துறைகளுக்குமே ஆணையராக உள்ள குமரகுருபன் நிச்சயமாக நடந்துள்ள மோசடிகளுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர் என்பதில் சந்தேகமே தேவையில்லை.
இந்த நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு ஜூலை 3-ந் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலரிடம் மோசடி நபர்கள் சென்று பத்திரப் பதிவு முயற்சியை செய்கிற காலகட்டம் மிகவும் முக்கியமானது.
ஜூலை 2-ந் தேதி பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மேற்படி நிலத்தை பதிவு செய்யக் கூடாது என மீண்டும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் தந்துள்ள நிலையில், அடுத்த நாளான 3 ஆம் தேதியே பதிவு செய்யப்பட்டது தான் கொடுமை.
தமிழக அரசு, சார் பதிவாளர்களை ஜூலை 1-ந் தேதி பணியிடம் மாற்றம் செய்திருந்தது. அதனடிப்படையில் புதிய சார் பதிவாளர், பணியில் சேர வேண்டும். ஆனால் அப்புதிய சார் பதிவாளர் ஈஸ்வரி பணியில் சேராமல் காலதாமதம் செய்கிறார்.
இதன் காரணமாக சத்திரப்பட்டியில் உள்ள சார் பதிவாளர் பாலச்சந்திரன் என்பவர் அன்றைய ஜுலை 3 ஆம் தேதி பணிக்கு வந்து பாதி பத்திர பதிவை செய்து தந்துவிட்டுச் செல்கிறார். அதன் பிறகு கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் ஜுலை 6 ஆம் தேதி அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு மோசடி பத்திரப் பதிவை நிறைவு செய்கிறார்.
எவ்வளவு சிஸ்டமேட்டிக்காக ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.
இதில் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் மட்டுமே இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாலச்சந்திரன் இது வரை தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும், மோசடியை தடுத்து வந்த மாரிகமுத்து சரியாக அதே மூன்றாம் தேதி பதவி உயர்வு வழங்கியதற்கும் குமரகுருபன் விளக்கம் தருவாரா?
இந்த பத்திரப் பதிவு விவரம் தெரிந்த உடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், இது சட்ட விரோதமானது என தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பவே ஒரு வார காலகட்டம் எடுத்துக் கொண்டது ஏன்? எனத் தெரியவில்லை.
இந்த மோசடி பத்திரப் பதிவை தொடர்ந்து தடுத்து வந்த மாரியப்பன் ஜுலை 3 ஆம் தேதி பதவி உயர்வு கிடைக்கப்பெற்றாலும் ஜுலை 9 ஆம் தேதி தான் சென்னையில் பணியில் சேர்கிறார். இடைப்பட்ட காலம் அவரும் மெளனித்தே இருந்துள்ளார்.
இந்த விவகாரம் புதிய அரசின் கவனத்திற்கு வரும் முன்பே இந்துத்துவ அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவை கையில் எடுத்து போராடுகின்றன…!
திமுக ஐ.டி.விங் புதிய ஆட்சிக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக இதைக் கையில் எடுக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உறவினர்களுக்கு இந்த நிலம் பதிவு செய்யப்பட்டதாக இந்துத்துவ அமைப்புகளும், திமுக ஐ.டி.விங்கும் ஒரு சேரப் புரளியை பரப்புகின்றன. பாஜகவின் பிரச்சார பிரங்கி மாரிதாஸ் திமுக அரசுக்கு ஆதரவாகப் பேசி தவெக அரசை தாழித்து எடுப்பது வினோதமாக உள்ளது.
தவெக அரசு கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள்' (Indian Political Democratic Strategies - IPDS) என்ற பாஜக சார்பு திருநாவுக்கரசு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக வலம் வந்தவர்.
இவர் தான் தற்போது தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு செந்தில் பாலாஜியின் தூதுவராக செயல்பட்டுள்ளார்.
ஆக, தவெகவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பாஜகவின் தீவிர ஆதரவாளர் எப்படி களம் இறங்கினார் என்பது கவனிக்கதக்கது.
ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் சுதாரித்துக் கொண்டது போல தவெக அரசு விழித்துக் கொண்டு இந்த பழனி கோவில் நில மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய நீதிமன்றத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.
மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், “கோவில் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தையே ஏமாற்றித் திட்டமிட்டு உத்தரவு பெற்றுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியதோடு, “அரசு வகுத்துள்ள விதிகளைத் திட்டமிட்டே மீறி, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் எவ்வாறு இது போன்ற பிரம்மாண்ட முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்? அதிகாரிகள் முறைகேடு செய்தது எப்படி?” என்று தங்களின் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த விவகாரத்தை ஆழமாக பார்க்கும் போது, இந்த இடத்தை விற்ற மோசடி பேர்வழியான விழுப்புரத்தைச் சார்ந்த முருகதாஸ் என்ற நபர் சென்ற ஆட்சியில் இருந்தே இதற்காக ஸ்கெட்ச் போட்டு மார்ச் 27-ல் இது போல முயற்சித்ததில் தெரிய வருகிறது. அப்போதே இந்த மோசடி பேர்வழி கைது செய்து சிறையில் தள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த நிலத்தை வாங்கிய சேதுபதி வெள்ளைத்துரை ஆகியோர் மிகச் சாதாரண நடுத்தரவர்க்கத்தினர். ஒரு சில லட்சம் கூட இல்லாத இவர்கள் தலா ரூ50 லட்சம் கொண்ட நான்கு செக் தந்து ருபாய் 2 கோடிக்கு நிலத்தை பெற்று உள்ளனர். சந்தை மதிப்பு 100 கோடி என்றாலும், அரசின் வழிகாட்டு மதிப்பு எப்படியும் 10 கோடிக்கு குறையாது. அப்படி இருக்க எப்படி இது நடக்கிறது…?
உண்மையில் எய்தவர்கள் யாரோவாகத் தான் இருக்க வாய்ப்புள்ளது. இந்த அம்புகளை எய்த செல்வாக்கான பிரமுகரின் பாதுகாப்பில் தான் இந்த குற்றவாளிகளும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். நிச்சயமாக, இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி வலை இருக்க வாய்ப்புள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் திருச்செந்தூர் முருகன் கோவில் அதிகாரி ஒருவர் மரணத்தை துருப்புச் சீட்டாக்கி கலைஞர் எம்.ஜி.ஆரின் தூக்கத்தைக் கெடுத்து, கடும் நெருக்கடி தந்தார். அதே பாணியில் இன்றைக்கு பழனி கோவில் நிலத் திருட்டு தவெக அரசுக்கு தற்காலிகத் தலைவலியாகி உள்ளது.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/38074264012164358/?rdid=bp2LXgspaTFcD5Vp
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு