சிபிஎம்-ஐ உச்சி முகரும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம்
ராஜ சங்கீதன்

மோடி, அதானி, பினராயி விஜயன் ஆகியோர் விழிஞ்ஞம் துறைமுகத்தை தொடங்கி வைத்த அற்புதமான காட்சி சில நாட்களுக்கு முன் அரங்கேறியது.
அதிலும் சுவாரஸ்யம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், அந்த நிகழ்வை 'இமாலய சாதனை' என மெச்சி தீக்கதிரில் அன்வர் உசேன் (அவரேதான்) கட்டுரை வடித்ததுதான். மிக அடிப்படையான அரசியல் புரிதல் கொண்டவருக்குக் கூட, அதானி யார் என்பது தெரியும், இடதுசாரி யார் என்பதும் தெரியும். ஆனால் அந்தப் புரிதலுக்குள் புகுந்து திரித்து இடதுசாரிகளை ஏமாற்றப் பார்க்கிறது தீக்கதிர் கட்டுரை.
குறிப்பாக "Public Private Partnership" (PPP) எனப்படும் அரசு - தனியார் கூட்டுக் கொள்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, படுபாவி உம்மன்சாண்டிதான் இம்முறையில் கையெழுத்திட்டு அதானியை கொண்டு வந்து எங்கள் தலைகளில் கட்டி விட்டார். மற்றபடி நாங்கள்தான் அக்மார்க் கம்யூனிஸ்ட்டாக்கும். இப்போது கேரளாவில் தொழிற்புரட்சி எப்படி நடக்கிறது பார்த்தேளா?" எனக் கேட்டு சிலாகிக்கிறது கட்டுரை. அதையும் நம்மூர் புரட்சிக்காரவாள் பகிர்ந்து கண்களை துடைத்துக் கொள்கிறார்கள்.
உம்மன்சாண்டிக்கு முந்தைய, அச்சுதானந்தன் தலைமையிலான
இடது முன்னணி காலத்தில், அரசு நிறுவனமாகதான் இந்த துறைமுகம் திட்டமிடப்பட்டது என பச்சைப் புளுகு புளுகியிருக்கிறது கட்டுரை.
உண்மை என்னவெனில் அச்சுதானந்தன் தலைமைலான அரசு, நவம்பர் 2009ல் சர்வதேச நிதி மையத்துடன் (International Finance Corporation) ஒப்பந்தம் போடுகிறது. துறைமுக திட்டம் குறித்து ஆய்வு ஒன்றை சமர்ப்பிக்கக் கேட்டு போடப்பட்ட ஒப்பந்தம் அது. சுவாரஸ்யம் என்னவென்றால் International Finance Corporation (IFC) அமைப்பு, உலக வங்கியின் உறுப்பு என்பதுதான். ஏன் இடதுசாரிய அரசு உலக வங்கியிடம் ஒப்பந்தம் போடுகிறது என கேட்டு விடக் கூடாது. கேட்டால் அபச்சாரம்.
இந்த நாடகத்தின் பின்னணியை 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' படித்த எவராலும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
எதிர்பார்த்தபடி IFC ஆய்வு முன் வைத்த யோசனைதான் அரசு - தனியார் கூட்டு. எனவே தனியார் இத்திட்டத்தில் வருவது CPI(M)-க்கு தெரிந்திராத முடிவுமல்ல, அதானி வருவதும் தெரியாததல்ல.
தீக்கதிரின் 'இமாலைய சாதனை' கட்டுரை, இமாலயப் புரட்டுக் கட்டுரை மட்டும்தான்.
ஒருவேளை, வாதத்துக்காக கட்டுரை சொல்வது போல, 'உம்மன்சாண்டிதான் PPP கூட்டை கொண்டு வந்து விட்டார், CPI(M)-க்கு உடன்பாடு இல்லை' என வைத்துக் கொண்டால், கடந்த வருடம் கொல்லத்தில் நடந்த கட்சி மாநாட்டில், கேரள பொதுத்துறையை மீட்க PPP கூட்டு வேண்டும் என வலியுறுத்தும் 'நவகேரளம்' ஆவணத்தை பினராயி விஜயன் ஏன் சமர்ப்பித்தார் என அன்வர் உசேன் விளக்குவாரா?
அதானி துறைமுகத்துக்கு கேரள இடதுசாரி அரசு பட்டுக் கம்பளம் விரித்து மீனவ சமூகங்களை கடற்கரையிலிருந்து வெளியேற்றி, நாட்டின் முதல் காலநிலை அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட துயரம் குறித்தும் முதலாளிய அரசுக்கு நிகராக இடது முன்னணி சூழலியலை அழித்தது குறித்தும் Stolen Shoreline என்ற ஆவணப்படம் சில வருடங்களுக்கு முன் வெளியானது. இப்படம் குறித்து மூன்று வருடங்களுக்கு முன் கட்சியில் இருக்கும்போதே (தீக்கதிர் அடிவருடிகள் போலல்லாமல்) கட்சியை விமர்சித்து எழுதியிருந்தேன். செல்வா உள்ளிட்ட பலரும் கண்டித்து, அதை நீர்த்துப் போக வைக்க முயன்றனர்.
அக்கட்டுரையின் சில பத்திகள்:
கிட்டத்தட்ட 590 கிலோமீட்டருக்கு நீண்டக் கடற்கரையை கேரளா கொண்டிருக்கிறது.திருவனந்தபுரக் கடற்கரை 79.3 கிலோமீட்டர் நீளம். திருவனந்தப்புரக் கடலோரத்தில் பல மீனவக் கிராமங்கள் இருந்தன. அவற்றில் பல கடலரிப்பை எதிர்கொண்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றன.
மீனவக்குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் முகாம்களில் பெரும் வசதிகள் இல்லை. இருக்கும் ஒரே வசதி தலைக்கு மேலே ஒரு கூரை, அவ்வளவுதான். முகாம்கள் வீடுகளாக இருப்பதில்லை. ஒரு பெரிய அரங்கு தடுப்புகள் கொண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம். இதுதான் முகாம். கடலை ஆளும் மீனவக் குடிகள் அறைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
அதானி துறைமுகத்துக்கான வேலைகள் 2015ம் ஆண்டு துவங்கப்பட்டன. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி. அரசு-தனியார் கூட்டில் 7,525 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் கட்டத் திட்டமிடப்பட்டது. 2018ம் ஆண்டில் முடிக்கப்படும் என உறுதிக் கொடுக்கப்பட்டது. திட்டத்தின் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இடது ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது. 2016ம் ஆண்டு ஆட்சி மாறியது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது. காட்சி மட்டும் மாறவில்லை. அதானியின் துறைமுகத் திட்டம் தொடர்ந்தது. 2018ம் ஆண்டும், வந்து சென்றது. துறைமுகக் கட்டுமானம் முடியவில்லை.
துறைமுகம் கட்டுமானத்துக்கென கேரள அரசு 360 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. மட்டுமின்றி கடலின் 130 ஏக்கரையும் அதானி குழுமம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. கடலரிப்பு மற்றும் மீனவர் வாழ்வாதார பாதிப்பை அதானி துறைமுகமும் அதற்கான கடல் நீர் தடுப்புகளும் அதிகரிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
துறைமுகக் கட்டுமானத்துக்காக 6 லட்சம் டன் கிரானைட் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவற்றின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கொண்டு வரப்பட்டவை. திட்டத்தைக் கட்டி முடிக்க மொத்தம் 1 கோடி டன் கிரானைட் தேவைப்படுமாம்.
ஆனால் அரசின் தரப்பும் அதானி நிறுவனமும் துறைமுகக் கட்டுமானம் சூழல் சீர்கேடு எதையும் ஏற்படுத்தவில்லை என்றே சாதித்துக் கொண்டிருக்கின்றன.
சரி, சூழலியலை விடுவோம். பொருளாதாரம், வளர்ச்சி என்கிறார்களே.. அது என்னவென சற்று பார்ப்போம்.
துறைமுகக் கட்டுமானச் செலவான 7,525 கோடி ரூபாயில் அதானி குழுமத்தின் பங்கு 2,454 கோடிகள் மட்டுமே . ஒன்றிய அரசின் பங்கு 1,635 கோடிகள். கேரள அரசின் பங்கோ 3,436 கோடி ரூபாய். (இது தற்போது மாறியிருக்கிறது. துறைமுக தொடக்க விழாவில் பேசிய பினராயி விஜயன், திட்டத்தின் மொத்த செலவு ரூ.8687 கோடி என்றும் அதில் கேரள அரசின் பங்கு ரூ.5370 கோடி என்றும் அதானியின் பங்கு ரூ. 2497 என்றும் ஒன்றிய அரசின் பங்கு ரூ. 818 என்றும் குறிப்பிட்டார். ஆறுதல் ஏதும் இல்லை. இப்போதும் கேரள மக்களின் பணம்தான் அதிகம்) அதானியின் துறைமுகம் 40 வருடங்களுக்கு இயங்கும். 20 வருடங்களுக்கு உரிமத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் கேரள அரசு, துறைமுக வருமானத்திலிருந்து ஒரு பங்கைப் பெற 50 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனம் (CAG), திருவனந்தபுர துறைமுகத்தின் கட்டுமானச் செலவு திட்டமிட்டதைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டிருப்பதாக கணித்திருக்கிறது. தற்போதைய நிலையில் கட்டுமானம் முடிந்தாலும் கேரள அரசுக்கு நஷ்டமே நேரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
செப்டம்பர் 2021-ல் அதானி குழுமம் திருவனந்தபுர விமான நிலைய நிர்வாகத்தை 50 வருடக் குத்தகைக்கு வாங்கியது. ஒன்றிய அரசின் அந்த நடவடிக்கையை கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு கடுமையாக எதிர்த்தது. கடலரிப்பு தொடர்ந்தால் அது திருவனந்தபுர விமான நிலையத்தையும் விட்டு வைக்காது என்கிறது ஆவணப்படம். மேலும் இதன் மூலம் ஒரு முக்கியமான வணிக ஆதாயத்தை அதானி குழுமம் பெறும். உலகிலேயே துறைமுகத்தையும் விமானநிலையத்தையும் ஒருங்கிணைத்து இயங்கும் தனியார் நிறுவனமாக அதானி நிறுவனம் மாறும்.
ஆவணப்படம் உருவாக்கும் பெரும் அதிர்ச்சிகளில் முக்கியமானது இடது முன்னணியும் சூழலியலைப் பொறுத்தவரை பிற கட்சிகளிலிருந்து பெரிய பேதம் கொண்டிருக்கவில்லை என்கிற விஷயமே. இந்திய ஒன்றியத்தின் அரசமைப்பின்படி பிரமாணம் எடுத்து இயங்கும் நிலையில் இருக்கும் எல்லா மாநில அரசாங்கங்களும் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியாக வேண்டும் என்பதுதான் கட்டாயம். அந்தக் கட்டாயத்துக்கு இடதுசாரிகள் ஒன்றும் விதிவிலக்காக இருக்கவில்லை என்கிற யதார்த்தமே ஆவணப்படம் பார்க்கும்போது நம்மை உறுத்தும் விஷயமாக இருக்கிறது.
இடதுசாரிகளுக்கு எதிரான பிரசாரத்துக்கு உலக மூலதனம் வழங்கும் பெரும் நிதியின் ஒரு பகுதியாகதான் இத்தகைய ஆவணப்படங்கள் என இடதுசாரிகள் வாதிடலாம். இக்கட்டுரையை எழுதும் நானும் இடதுசாரிதான்.
உலகளாவிய பல நாடுகளில் பசுமை இடதுசாரியம் உருவாகி இருக்கிறது. பசுமை இடதுசாரிகளின் குரலை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாற்றான வாழ்க்கையை, பொருளாதாரத்தைப் பசுமை இடதுசாரிகள் முன் வைக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் அதிகாரமும் வழங்கியிருக்கின்றனர்.
காலநிலை மாற்றம் தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட உற்பத்தி முறை மாற்றத்தைப் பற்றியோ முதலாளித்துவ அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றியோ பேச மறுப்பது மார்க்சியம் காட்டிச் சென்ற சூழலியல் சிந்தனையை மறுப்பதற்கு ஒப்பாகும்.
இக்கட்டுரை வெளியாகி மிக சமீபத்தில் ஆவணப்பட இயக்குநர் ஷாஜியை சந்தித்து பேசினேன். மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கு, அகம்பாவமும் மூர்க்க அறியாமையும் கொண்டதாக வேகமாக மாறிக் கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார். ஆவணப்படத்துக்கு பிறகு மீனவக் குடும்பங்களை முகாம்களிலிருந்து வெளியேற்றி விட்டது இடது அரசு என்றார்.
நவதாராளவாதம் உலகம் முழுக்கவே சிக்கலைதான் தந்து கொண்டிருக்கிறது. மார்க்சிய கட்சிகள் அதற்கு தகவமைக்கக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்கவில்லை. அறிவையும் திரட்டுவதாக இல்லை. வெட்டி வீம்பை மட்டும் கொண்டு கதையடித்து ஏமாற்றி விடலாமென நம்புவதற்கு பெயர் மார்க்சியம் இல்லை, வலதுசாரியம்!
கொஞ்ச நாட்களுக்கு முன் கூட ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியை குற்றஞ்சாட்டியதும் அதானியை கண்டித்து சென்னை பாரிமுனையில் போராட்டம் செய்து கொண்டிருந்தார் செல்வா. இனி என்ன செய்வாரோ, அந்தோ பரிதாபம்!
'இடதுசாரி அரசின் அமைச்சர் அதானியை பார்ட்னர் எனக் கூறுகிறார். இது போன்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா' என பெருமை பொங்கப் பேசுகிறார் மோடி. RSS பத்திரிகை Organizer CPI(M) கட்சியை பாராட்டுகிறது.
CPI(M) கட்சியை பாஜகவும் RSS-ம் வெளிப்படையாக மெச்சி உச்சி முகருவது இது இரண்டாவது முறை.
10% இட ஒதுக்கீட்டுக்கு ஓட்டு போட்டபோது, முதல்முறை.
-ராஜ சங்கீதன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு