திமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் சிபிஐ-க்கு வெளிப்படையாக ஒரு கடிதம்
லிங்கம் தேவா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் (தோழர்?) முத்தரசன் அவர்களுக்கு வணக்கம்,
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் செய்தியாளர்களிடம் தாங்கள் தெரிவித்து வரும் கருத்துகள், உங்கள் செயல்பாட்டின் மீதும் நிலைப்பாட்டின் மீதும் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் மீதும் அதன் நிலைப்பாட்டின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளுக்கே முகம் கொடுக்க நேரம் இல்லாத அளவுக்கு ஆளும் திராவிட மாடல் அரசை புகழ்வதிலும் வாழ்த்துவதிலும் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முந்திக்கொண்டு பதில் சொல்லி ஆட்சியைக் காப்பாற்றுவதிலும் பிஸியாக இருக்கும் நீங்கள், எங்கோ ஒரு மூலையில் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் என்னுடைய கேள்விகளுக்கு முகம் கொடுப்பீர்கள் என்ற மூட நம்பிக்கை எனக்கில்லை. என்றாலும், தங்களின் தொடர் கருத்துகள் மற்றும் போக்குகள் இக்கேள்விகளை பொதுவில் வைக்க வேண்டிய நிர்பந்தத்தை எனக்கு உருவாக்கி உள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஜனசக்தி இதழில் தாங்கள் எழுதி வெளியிட்ட தலையங்கம் தொட்டு, இந்தக் கடிதத்தை நான் எழுத மிக முக்கியமான காரணமாக அமைந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் வரை பல்வேறு இடத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் மேம்போக்கான கருத்துக்களை நீங்கள் தெரிவித்து இருந்த போதிலும் மிகக் குறிப்பான ஒன்றிரண்டு நிகழ்வுகளை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரம் :
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்கம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் 7 ஆம் தேதி இந்திய அரசால் ஆப்பரேசன் சிந்தூர் துவங்கப்பட்டு அது போராக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் பொது மக்களின் இழப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை போன்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன.
- வடசென்னையைச் சேர்ந்த பட்டப்படிப்பு பெற்றிராத, நேரடி அரசியலில் ஈடுபடாத சாதாரண உழைக்கும் வர்க்கத்து பெண் ஒருவரிடம் youtube சேனலில் இருந்து இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்க வேண்டும். போர் என்றுமே மக்களுக்கு எதிரானது, ஆபத்தானது. அவர்களும் இதை விடணும், நாமளும் விடணும் எல்லாரும் உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டும். எங்க செத்தாலும் உயிர் உயிர் தானே ?' என்றாகப் பேசினார்.
- பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி போர் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். உள்நாட்டில் அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தமும் அச்சுறுத்தலும் இருந்த போதிலும், அவர்களின் தலைவர்களை அரசு கைது செய்து ஒடுக்கி வருகிறது என்றாலும் அவர்கள் குறுகிய தேசியவாதத்துக்கு பலி ஆகாமல், பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்று அறிக்கை அளித்து இருந்தார்கள். போர் என்பதை மார்க்சிய லெனினிய பார்வையில் நாம் எவ்வாறு பார்க்க வேண்டி இருக்கிறது என்றும், போர்கள் யாருக்கானவை என்றும், நாம் யாரிடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும் என்றும் பல்வேறு விஷயங்களை அது நினைவூட்டி இருந்தது.
- போர் குறித்து உலக அளவிலான செய்தி ஊடகங்களில் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் நடந்த இழப்புகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. பாகிஸ்தானில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்திய இந்திய இராணுவப்படை, அங்கு பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று சொன்ன போது, உலக அளவிலான ஊடகங்கள் அங்கும் குழந்தை ஒன்று உட்பட பலர் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பதிவு செய்தது.
- போருக்குப் பின்னரும் கூட பஹல்கம் தாக்குதல் தொடர்பாக அங்கு இருந்த பாதுகாப்பு குறைபாடு குறித்தும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் நிறைய கேள்விகள் பொதுமக்களிடம் இருந்தே எழுப்பப்பட்டன.
-காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி அவர்கள் போர் குறித்து ஏற்கனவே பாகிஸ்தானிடம் பேசினோம் என்று சொன்ன அதிகாரியின் கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.
* ஆனால், உழைக்கும் பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையில் இருக்கும் உங்களிடம் இருந்து பஹல்கம் தாக்குதல் குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. அது தொடர்பான விசாரணை குறித்தும் கேள்வி இல்லை. போர் குறித்து பாகிஸ்தானிடம் பேசியதாக சொன்னது பற்றியும் கேள்வி இல்லை. ட்ரம்ப் தலையீடு குறித்தும் கேள்வி இல்லை. போர் நடைபெறும் போது wire போன்ற ஊடகங்கள் முடக்கப்பட்டது குறித்தும் கண்டனம் இல்லை. வர்க்க ரீதியாக போரை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எந்த ஒரு தெளிவும் இல்லை. குறைந்தபட்சம் சித்தாந்த ரீதியாக நீங்கள் எடுத்த முடிவை விளக்கவும் இல்லை. மிக மேம்போக்காக எந்த ஒரு கேள்வியும் இன்றி, அறிவுறுத்தலும் இன்றி போரை உள்ளபடியே ஆதரித்து, பாராட்டி அறிக்கை விடுகிறீர்கள்.
* பாகிஸ்தானிலும் இழப்பு நடந்து இருக்கிறது என்று குறிப்பிட்டு அமைதியை கோரி தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதை screenshot ஆக வெளியே பகிர்ந்து, அந்த ஆசிரியையின் தனிப்பட்ட தகவல்களையும் இணையத்தில் வெளியிட்டு தமிழக பா.ஜ.க அவரை அச்சுறுத்தியது. அதைத்தொடர்ந்து அவர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த அச்சுறுத்தலை குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் வேடிக்கை பார்த்தது தமிழக அரசு. அங்ஙனமே அவர்களுடன் சேர்ந்து நீங்களும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இவ்வாறாக, அமைதி வேண்டி கருத்து தெரிவித்த ஒருவர் மீது கண்மூடித்தனமாக அடக்குமுறை அச்சுறுத்தல் நிகழும் போது, அது அத்தனை பொதுவில் நிகழ்ந்தும் அதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
* தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டிய நீங்கள், அவர்களது போர் ஆதரவு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறீர்கள்.
*மேலும் துவக்கத்தில் நீங்கள் வெளியிட்ட போர் ஆதரவு அறிக்கையில், ராணுவத்தை மெச்சிப் புகழ்ந்து பாராட்டுவதோடு, "பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது உண்மையெனில், இந்தியா ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கை மீது எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளீர்கள். இந்த மிரட்டல் கலந்த அறிவுறுத்தல் பாகிஸ்தானுக்கு மட்டுமா? இல்லை போர் நிறுத்தம், மற்றும் அமைதி குறித்து பேசிய இந்தியர்களுக்குமா ?
வேங்கை வயல் விவகாரம் :
டிசம்பர் 2022 இல் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழநாட்டில் பெரும் சர்ச்சையானது. ஏற்கனவே வேங்கை வயல் சுற்றிய பகுதிகளில் இரட்டைக் குவளை முறை, கோவிலுக்குள் அனுமதி இல்லாதது போன்ற பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளும் இருந்த நிலையில், ஊராட்சி மன்றத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அந்நிகழ்வு நடந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
- இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கிய முதலே, பாதிக்கப்பட்ட மக்கள்தான் குற்றவாளிகள் எனச் சித்தரிக்கும் போக்கு என்பது இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து குற்றத்தை ஒத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டியதாக அம்மக்கள் செய்திகளில் தெரிவித்தார்கள்.
- அறிவிக்கப்படாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. வெளியாட்கள் உண்மை அறியவும் மக்களுக்கு ஆதரவாகவும் உள்ளே வர முடியாத அளவுக்கு கிராமத்தை தனிமைப்படுத்தியது அரசு.
- வழக்கின் ஆரம்பம் தொட்டு எந்த ஒரு நிலையிலும் சட்ட நடத்தை விதிகள் பின்பற்றப்படவில்லை என வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோர் வெளிப்படையாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.
- 3 ஆண்டுகளாக தொடரும் அந்த வழக்கு, ஒவ்வொரு சூழலிலும் ஏதேனும் ஒரு அரசியல் நிகழ்வையொட்டி பேசுபொருள் ஆகி வந்தது. அது போல, டிசம்பர் மாதம் 2024 இல் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் தொடர்பாக பேசப்பட்டதும், அதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை மற்றும் அரசின் நடவடிக்கைகளும் அவர்கள் வெளியிட்ட முடிவுகளும் பேசுபொருளானது.
*2024 இல் டிசம்பர் 6, தவெக தரப்பில் இருந்து குற்றச்சாட்டு வைக்கிறார்கள். டிசம்பர் 7, அமைச்சர் ரகுபதி இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்கிறார். ஆனால், டிசம்பர் 10 இல் செய்தியாளர்கள் உங்களிடம் வேங்கைவயல் குறித்து கேட்கும் போது "வேங்கை வயலா ? அது பழைய விசயம். ரொம்ப நாள் ஆச்சே?" எனக் கூறி கடந்து சென்று உள்ளீர்கள். ரொம்ப நாள் ஆனது என்றால் அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று அர்த்தமா? அப்படிப் பார்த்தால் நீட், தொழிலாளர் நலச் சட்டம் போன்றவைகளும், ஏன் உழைப்புச் சுரண்டலுமே கூட இங்கு பழைய விசயம் தான். அவற்றையும் அப்படியே விட்டுவிட வேண்டுமா ?
- அதே வழக்கில் 2025 இல் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சாட்டும் விதமாக, முதலில் அந்த குற்றத்தை வெளியில் கொண்டு வந்த மூன்று இளைஞர்களையே குற்றவாளிகள் என்று விசாரணை முடிவை அறிவித்தனர். மக்கள் அந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டனர் என முதல்வர் ஸ்டாலின் அவர்களே சட்டமன்றத்தில் குறிப்பிட்டு இருந்த போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல வெளியானது காவல்துறையின் அந்த அறிவிப்பு.
* ஆதாரத்தை அழித்தது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியது, குடிநீர் விநியோகத்தில் எழுந்த சிக்கல், ஏற்கனவே அங்கிருக்கும் சாதிய சிக்கல், மக்களின் நிலத்திற்கு பட்டா வழங்கப்படாமல் இருந்தது, சரியான முறையில் விசாரணை நடத்தப்படாதது என எது குறித்தும் எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடாமல், வேங்கை வயலுக்கு நேரில் சென்று பார்க்காமல், நேரடியாக காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறீர்கள். இது வர்க்க ரீதியாக ஆளும் முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை உறுப்பாக இருக்கும் காவல்துறைக்கு கண்மூடித்தனமான ஆதரவு தெரிவித்து உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாக ஆகாதா ?
* மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் நீங்கள் எதுவும் தெரிவிக்கவில்லையே?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "அது அவர்கள் நிலைப்பாடு. நாங்கள் எதுவும் கேட்கவில்லை" எனக் கூறி உள்ளீர்கள். நீங்கள் எதற்குத்தான் கேட்ப்பீர்கள் ?
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை.
உண்மையில் இதனை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு என்று சொல்வதை விட மாணவிகளுக்கு நிகழ்ந்த தொடர் பாலியல் வன்கொடுமை என்று தான் குறிப்பிட வேண்டும். ஆரம்பம் முதலே நிறைய முரண்பாடுகளுடனும் கண்டிக்கக்கூடிய வகையிலும் தான் வழக்கின் விசாரணை சென்றது.
- இத்தகைய விவகாரம் நடைபெறும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததே கண்டனத்துக்கு உள்ளான நிலையில், மாணவியின் FIR தகவல் இணையத்தில் கசியவிடப்பட்டது.
- அதையொட்டி வெளியான எதிர்ப்புகளின் எதிர்வினையாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஆணையர் அருண் அவர்கள், விசாரணை அப்போதுதான் துவங்கி இருந்த நிலையில், ஒருவர் மட்டும் தான் குற்றவாளி என முடிவுரை எழுதினார்.
- அந்த குற்றவாளி மீது ஏற்கனவே பாலியல் சார்ந்த ஒரு வழக்கு பதியப்பட்டு இருந்த நிலையில். குற்றவாளி மீது இதுவரையில் வேறு எந்த பாலியல் புகாரும் இல்லை என உண்மைக்கு மாறாகத் தகவல் தெரிவிக்கிறார்.
- எந்த வித விசாரணை ஆதாரங்களும் இன்றி, FIR காவல்துறை தரப்பில் இருந்து வெளியே செல்லவில்லை என்கிறார்.
- பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் பறிக்கப்படுகின்றன
- குற்றவாளி சம்பவம் நடந்த நேரம் வேறொருவருடன் செல்போனில் சார் என அழைத்துப் பேசினான் என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியதை ஒட்டி, "யார் அந்த சார் ? " என்ற கேள்வி மிகப் பரவலாக அனைவராலும் கேட்கப்பட்டது. என்றாலும் காவல்துறையோ அரசோ அந்த கோணத்தில் எந்த விசாரணையும் செய்யாமல் செல்போன் flight mode இல் இருந்தது என முடித்துக் கொண்டார்கள்.
* அப்படியான பதட்டம் நிறைந்த சூழலில், அந்த மாணவியின் விவாகாரம் குறித்து உங்களிடம் கேட்டபோது "அது தான் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துவிட்டார்களே. பிறகு ஏன் நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும்" என நீங்கள் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி இருக்கிறது. இது உண்மையில் பொய்யாக இருக்க வேண்டும் என்றே நானும் எதிர்பார்க்கிறேன்.
- தற்போது அந்த வழக்கு முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரன் என்ற ஒருவர் தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார்கள். அதையொட்டி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்த வழக்கறிஞர் நேர்காணல்கள் வாயிலாக ஊடகங்களுக்கு தெரிவித்த தகவல்கள் சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதையே கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
- பெண்களுக்கான அவசர உதவி எண்ணை மாணவி பாதுகாப்பு வேண்டி சம்பவம் நடந்த அன்று இரவு தொடர்பு கொண்ட கொண்டுள்ளார். அப்போது எந்த வித உதவியும் அளிக்காமல் மீண்டிடும் மீண்டும் பல முறை சொல்லச் சொல்லியுள்ளனர். போனில் சொன்னது போதாது என கைப்பட புகார் எழுதி அதை போட்டோ எடுத்து வாட்சப் வாயிலாக அனுப்ப வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். மீண்டும் காலையில் போன் செய்து விசாரித்த போது, ஆரம்பத்தில் இருந்து திரும்பக் கேட்டு, இறுதியாக எங்களால் எதுவும் உதவ முடியாது எங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்கள்.
- மாணவி சைபர் க்ரைமில் புகார் அளிக்க முயற்சி செய்த போது, அவர்கள் இணையத்தில் புகார் பதிவு செய்து, ஆதாரங்களை இணைத்து அதன் பின் நேரில் வந்தால் தான் பார்க்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
- காவல்துறை உதவி எண்ணிற்கு வழக்கறிஞர் போன் செய்து பேசிய போது, பெண்ணை நேரில் சென்று விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதற்கு பெண் காவலர்களை மட்டுமே சீருடையில் இல்லாமல் அனுப்புமாறு மாணவி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி இருந்தாலும் அவரை அச்சுறுத்தும் விதமாகவும், அவரை மற்றவர்கள் கண்டு கொள்ளும் விதமாகவும் ஆண் காவலர்கள் சீருடையில் சென்று விசாரித்துள்ளார்கள்.
- ஆண் காவலர்கள், சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று என்ன நடந்தது மிக விரிவாக அனைத்தையும் கூறச் சொல்லி கேட்டுள்ளார்கள்.
- புகார் அளிக்க வேண்டாம் என்றும், அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் மிரட்டல் கலந்த மூளைச்சலவை செய்துள்ளார்கள்.
- அந்த சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள், அதே போல வேறு ஒரு மாணவியையும் ஞான சேகரன் மிரட்டி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், அந்த சம்பவம் குறித்து வழக்கோ விசாரணையோ எதுவும் நடத்தப்படவில்லை.
- சிறப்பு புலனாய்வு அதிகாரி விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரை ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார். அவரின் செல்போனை பறித்து அதில் அவர் மாணவியுடன் பேசி பெட்ரா தனிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களைத் திருடி உள்ளார்.
- மாணவி பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடாக ஒரு லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு தன் நிர்வாக குறைபாட்டுக்கு பொறுப்பேற்று எந்த விதமான இழப்பீடும் அறிவிக்கவில்லை.
- இவ்வாறாக, இத்தனை குழப்பங்களுடன் தெளிவான விளக்கம் எதுவும் இன்றி, நிர்வாக ரீதியான பிரச்சனைகளுக்கு எந்த நடவடிக்கையும் இன்றி, பிரச்சனை முடிந்தது. இனி இது குறித்து பேசக்கூடாது என தமிழ அரசு சார்ந்த வழக்கறிஞர் வழியாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
*இதில் ஒவ்வொரு நிலையிலும் நடந்துள்ள நிகழ்ச்சிகள் ஒட்டுமொத்த பெண்களுக்கான பாதுகாப்பு என்பதையே கேள்விக்கு உள்ளாக்கும் சூழல் நிலவுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்ந்த வழக்கறிஞருடன் பேசாமல், நிலவும் இத்தனை குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், நிர்வாக அலட்சியத்தை எதிர்க்காமல், பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல், முழுக்க முழுக்க அரசின் காவல்துறையின் brand ambassador ஆக மாறி, முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள்,
*உண்மையில் இதில் எதற்கு வாழ்த்து ? பெண்ணின் தகவல் வெளியிடப்பட்டதற்க்கா? புகார் எடுக்காமல் அலையவிடப்பட்டதற்கா? வழக்கறிஞர் மிரட்டப்பட்டதற்கா? பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவி குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மேற்கொண்டு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என விசாரிக்காமல் விட்டதற்காகவா?
*மேலும் அந்த அறிக்கையில் அந்தப் பெண் சொன்னபடி வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு சாரை கண்டு பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய கட்சிகளைக் குறிப்பிட்டு, "ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள்" என்கிறீர்கள்.
*மேலும் அரசியல் ஆதாயத்திற்கேனும், வழக்கு தொடர்பான Call Record ஐ எடுத்து அண்ணாமலை வெளியிட்டதை குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேட்கும் போது, "வழக்கு சீக்கிரம் முடிந்ததில் அவர்களுக்கு வருத்தம்" என்கிறீர்கள்.
நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் இதே உங்களச் சார்ந்த யாரேனும் ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால் அப்போதும் - அவர்கள் அத்தனை இழுத்தடிப்புகளை சந்தித்தாலும் - இப்படித்தான் வாழ்த்திக் கொண்டிருப்பீர்களா ?
--------------------------------------------
உண்மையில் என் கேள்வி விரிவானது. ஏனெனில், உங்கள் அறிக்கையில் நீங்கள் காவல்துறையை சரமாரியாகப் புகழ்ந்து, வழக்கறிஞரை மிரட்டிய சிறப்பு புலனாய்வுக் குழுவை, பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர் செல்போன்களை பிடுங்கி தகவல்களைத் திருடிய சிறப்பு குழுவினரை வாழ்த்தியுள்ளீர்கள்.
இதனை தனிப்பட்ட நபராகக் கூட அல்லாமல், மாநில செயற்குழு வரவேற்பதாகக் குறிப்பிடுகிறீர்கள்.
எனில், கட்சியின் நிலைப்பாடு என்பதே இது தானா? என்ற கேள்வி எழுகிறது.
* புகாரை வாங்காமல் இழுத்துப் பின் நிதி இல்லை என்று அவசர உதவிப் பிரிவு சொன்னது, சைபர் க்ரைம், FIR வெளியானது, ஆண் அதிகாரிகளை விசாரிக்க சீருடையுடன் அனுப்பியது, medical test வேண்டாம் என்றது, போன் பறிமுதல் செய்தது, வழக்கறிஞர் மிரட்டியது, முன்கூட்டியே முடிவுரை எழுதியது, பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவி குறித்துப் பேசாதது என எதையும் குறிப்பிடாமல் இந்த முதலாளித்துவ அரசின் காவல் துறையை புகழ்ந்து தள்ளுவது தான் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றால், இந்தக் கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் நீங்கள் பாட்டாளி வர்க்க மக்களுக்குத் தான் கட்சி நடத்துகிறீர்களா? இல்லை தி,மு.க வை காப்பாற்ற, அவர்களுக்குத் தொண்டு செய்ய கட்சி நடத்துகிறீர்களா?
* இதே போல, தெய்வச்செயல் என்ற தி.மு.க பொறுப்பாளர் ஒருவனால் பெண்கள் பாதிக்கப்பட்ட செய்து வெளியான போதும், அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணே வெளியில் வந்து கேட்பார் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடியதும் கூட அந்த நிர்வாகக் குழுவின் ஒருவர் காதுகளிலும் விழவில்லை போலும்?
* பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தினமும் ஒரு செய்தி பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வான் கொடுமை, கால் உடைத்து வன்புணர்வு என வந்து கொண்டே இருக்கின்றன. காப்பகத்தில் இருக்கும் அதிகாரிகளால் சிறப்புக் குழந்தைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள்; திருநெல்வேலியில் வஃபு சொத்தைக் காக்கப் போராடி, ஒரு வருடம் முன்பே உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என பாதுகாக்கக் கோரி வேண்டிக் கொண்டிருந்த சாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்; ஜெகபர் அலி கொல்லப்படுகிறார்; காவல் நிலையம் எதிரே, பொய் வழக்கில் இருந்து தங்கள் சகோதரனை மீட்கச் சொல்லி இரண்டு பெண்கள் போராடி விசம் அருந்தி அதில் ஒருவர் இறந்து போகிறார். இது போல தினம் தினம் பல்வேறு பிரச்சனைகளிலும் மக்கள் இந்த அரசால், இந்த அரசின் காவல்துறையால் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பாட்டாளி மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, நீங்கள் காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்து, அரசைக் குளிர வைத்துக் கொண்டுள்ளீர்கள்.
* மிகவும் தரம் தாழ்ந்து சென்று, தன் குடும்பத்தை சாராய ஊழலில் இருந்து பாதுகாக்க டெல்லி சென்று பிரதமரைத் தனியே சந்தித்துப் பேசி வந்த முதல்வரை, "சிங்கத்தின் குகைக்கே சென்று அதன் பிடரி மயிரை பிடித்து உலுக்கி விட்டு வந்திருக்கிறார்" எனப் பேசுகிறீர்கள்
தமிழக ஆளுநர் குறித்து ஒரு இடத்தில் விமர்சிக்கும் போது நீங்கள் குறிப்பிட்டது இது தான். "அவர் ஆளுநராக நடந்து கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக செயல்படுகிறார்". அதே போல, கடந்த சில மாதங்களாக நீங்கள் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான , உழைக்கும் மக்களை அடிப்படையாகக் கொண்ட, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மீட்டெடுக்கப் போகிற, சோஷலிச சமூகத்தை புரட்சியின் மூலம் அமைக்கப் போகிற, முதலாளித்துவ அரசுக்கு எதிரான உழைக்கும் மக்கள் கட்சியின் மாநில செயலாளராக இருந்து கொண்டு தி.மு.க வின் செய்தி தொடர்பாளராகவும் முதலாளித்துவ அரசின் பவ்வியமான ஆதரவாளராகவும் செயல்படுகிறீர்கள் என்பது தான் உங்கள் செயல்கள் உணர்த்துவதாக இருக்கிறது.
ஒவ்வொரு அறிக்கையும், செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் செயற்குழுவின் முடிவில் / உடன்பாட்டில் தான் வந்திருக்கின்றன என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வருத்தமும் அதிருப்தியும் மட்டுமே மிஞ்சுகிறது.
நன்றி வணக்கம் !
- லிங்கம் தேவா
https://www.facebook.com/share/p/1GJqmckV5A/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு
பின்குறிப்பு :
ஆதாரங்கள் படங்களாக - காணொளிகளாக கீழே:
https://www.youtube.com/watch?v=AqIKSutqmCk