கவிதை: கண் முன்னே இன்னொரு ஈழம் சாம்பலாகிறது...
கார்த்தி ஆதவன்

கேளாத செவிகள் கேட்கட்டும்!
பாராத கண்கள் பார்க்கட்டும்!
வானை பிளந்துக் கொண்டு வரும்
இஸ்ரேலின் குண்டுகளின் சத்தம்
உங்கள் செவிப்பறையை பிளக்கவில்லையா?
உங்கள் காதுகளில்
காசாவின் பிஞ்சுகளின்
மரண ஓலம் கேட்கவில்லையா?
உங்கள் காதுகளில்
பாலகர்களை இழந்த தாய்மார்களின்
அடிவயிற்றிலிருந்து எழும்
கூக்குரல் ஒலிக்கவில்லையா?
உங்கள் கண்களுக்கு
கண்களையும் காதுகளையும்
கைகளையும் கால்களையும்
இழந்து வயிறு கிழிந்து
சிறுகுடல் தொங்கும்
ஆண்களையும் பெண்களையும்
குழந்தைகளையும் தெரியவில்லையா?
பனிமலையில் நடுங்குவது
போன்று குண்டுவீச்சின் அதிர்ச்சியில்
நடுங்கிக்கொண்டிருக்கும்
பிஞ்சுக்குழந்தைகள்
உங்கள் கண்களுக்கு படவில்லையா?
குண்டுகளால் நொறுங்கிய
கட்டிடங்களின் சாம்பலை
உடலெங்கும் போர்த்திக்கொண்டிருக்கும்
பிஞ்சுக்குழந்தையை
இடுப்பில் சுமந்திருக்கும் இன்னொரு
பெண்குழந்தையைக்
கண்டதில்லையா?
உங்கள் காதுகளுக்கு
குண்டுவீச்சில் மரித்துபோன
பதினைந்தாயிரம் குழந்தைகளைப்
பற்றிய செய்தி எட்டவில்லையா?
மண்ணோடு மண்ணாக
புதைக்கப்பட்ட பல்லாயிரம்
பெண்களைப் பற்றி அறியவில்லையா?
இவையாவும் பாலஸ்தீனத்தின்
இயற்கை வளங்களை
கொள்ளையிடுவதற்காக என்று
உங்கள் காதுகளில் யாரும்
உரத்துக் கூறவில்லையா?
இவையாவும் ஏகாதிபத்திய
வல்லூறுகளின் கூட்டுச்சதி என
யாரும் உங்களுக்கு போதிக்கவில்லையா?
பின்னர் ஏன் இந்த கள்ளமும்
கனமும் நிரம்பிய மௌனம்?
பின்னர் ஏன் இந்த நிசப்தம்?
கண் முன்னே இன்னொரு ஈழம் சாம்பலாகிறது!
எழுந்திருங்கள்!
காசாவின் குழந்தைகளும் நமது குழந்தைகளே!
எழுந்திருங்கள்!
காசாவின் குழந்தைகளும் நமது குழந்தைகளே!
இரத்தம் கசிந்த
பாலஸ்தீன மண்ணின்
வாசனை நுகர முடிகிறதா?
இப்போதாவது உரக்கப் பேசுங்கள்
பாலஸ்தீன விடுதலையை!
-கார்த்தி ஆதவன்