அழுகிக் கொண்டிருக்கிற சட்டமன்ற ஜனநாயகம் நாறாமல் மணக்குமா?

துரை. சண்முகம்

அழுகிக் கொண்டிருக்கிற சட்டமன்ற ஜனநாயகம் நாறாமல் மணக்குமா?

எப்போதுமே வாழாதவனைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை! 

வாழ்ந்து கெட்ட குடும்பம் நொடித்துப் போனாலோ! அங்கு ஒரு எழவு விழுந்தாலோ!

ஒரு தாங்க முடியாத சோகத்துக்கு சமூகத்தையே உள்ளாக்கும் அளவுக்கு படம் காட்டும் சமூகம் இது.

அப்படித்தான் இருக்கிறது சட்டமன்ற சீரழிவுக்கான  ஜனநாயகவாதிகளின் புலம்பல்.

முதலாளித்துவ ஜனநாயகமே அழுகிக் கொண்டிருக்கிறது, பாசிசம் புழு வைக்கிறது! என்று கோட்பாடாக பேசிவிட்டு, ஐயோ சட்டமன்றம் நாறுகிறதே என்றால்! 

இந்த ஜனநாயகம் நாறாமல் மணக்குமா?

விஜய் மூலமாகவும் இப்போது வெளிப்படுகிறது. மற்றபடி இதை தனி நபரின் குணமாக சித்தரிப்பது இந்த அமைப்பு முறையைச் சுற்றியே காலத்தை ஓட்ட விரும்புபவர்களின் வேலை. ஒரு தனி நபரின் வரலாற்றுப் பாத்திரம் எனும் ஒரு அம்சத்தை தவிர மற்றபடி முதலாளித்துவ அரசின் இயல்பு முதலாளித்து வர்க்கத்தின் ஆட்சி அமைப்பின் மூலமாக வெளிப்படவே செய்யும். 

இந்தக் சட்டமன்ற முறையே மக்களுக்கு லாயக்கற்றது என்று இருக்கும் போது, மேலும் மேலும் ஜனநாயகம் சூம்பிப் போய்க் கொண்டிருக்கும் இந்த நாடாளுமன்ற சட்டமன்ற சூப்பிப்போன வாதத்தில் முன் விட்டை பின் விட்டைக்கு பொங்கி எழுவது பொருத்தமல்ல.

சகல பகுதிகளையும் தழுவி விமர்சிக்கும் துணிவைப் பெற வேண்டும். 

உடமை வர்க்கங்களுக்கு இடையிலான அரசியல் பிளவுகளை பாட்டாளி வர்க்க நோக்கில் பயன்படுத்த இதில் திமுக தவெக என எந்த பக்கத்தையும் ஆதரிக்க தேவையில்லை.

கெட்டழியும் முதலாளித்துவத்தை மக்களுக்கு மேலும் விளக்குவதற்கான அரசியல் சந்தர்ப்பத்தை, கண்ணோட்டத்தை வெளிப்படுத்த பயன்படுத்துவது தான் நமக்கான அரசியல். 

மற்றபடி மிசா காலத்தில்   திமுகவினர் மீது இந்திராகாந்தி கையாண்ட ஒடுக்குமுறை, அதை குறைத்து மதிப்பிடுவது மலினப் படுத்துவது என்பது அரசு ஒடுக்கு முறையை சகஜப்படுத்தும் ஆதரிக்கும் ஒடுக்கு முறைக்கான கருத்து என்ற வகையில் கண்டிக்கத்தக்கது. மேலும் மிசாவை, இந்தச் சட்டத்தை ஆதரிக்காமல் திமுக நின்றதும் ஆட்சி கலைக்கப்பட்டதும் வரலாறு.

ஆனால் வரலாற்றின் ஒரு கட்டத்தில் பாசிச பேய் ஆட்டம் ஆடிய அதே இந்திராகாந்தியை 

"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக!" என்று சகஜப்படுத்திய குற்றத்திற்கு உரிய பிரிவாக திமுக ஆனதும் அந்த வரலாற்றில் அதன் வர்க்க அரசியல் தொடர்ச்சி.

தனது முதலாளித்துவ வர்க்க நலனின் தேவைக்கேற்ப ஏராளமான பாதிக்கப்பட்டவர்களின் கொடுமையை திமுகவே கேவலமாக தேவைக்கு ஏற்ற மாதிரி நேரத்துக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திக் கொள்ளும் போது அதை இழிவு செய்வதற்கான அடிப்படையையும் அது தோற்றுவிக்கிறது எனும் அரசியல் பின்னணியையும் காணத்தவறக் கூடாது. 

முதலாளி வர்க்க ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்குள் உள்ள முரண்களை வெளிப்படுத்துவதற்கான அரசியலாக இதை காணத் தர வேண்டும். தோள் கண்டேன் தோளே கண்டேன்! என கம்பனைப் போல புகழ் பாடி,  திமுக பின்னே போவது அல்ல முற்போக்கு கண்ணோட்டம்

மிசா கொடுமையின் பரிமாணத்தை திமுக கட்சியினர் மீது நடந்த தாக்குதலாக சுருக்கி வாதிப்பதும் நடக்கிறது. அந்த இருண்ட காலத்தில் கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் இந்தியா முழுக்க வேட்டையாடப்பட்டது வரலாறு. 

நாடாளுமன்ற சட்டமன்ற வாத அறிவீனத்தை வரித்துக் கொண்ட  தேர்தல் கம்யூனிஸ்டுகள் உட்பட 

திமுகவைப் போலவே வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றுகிறது.

மிசா காலகட்டத்துக்கு முன்பு 1950 களிலேயே சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு , இந்த நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகத்தின் வர்க்க ஒடுக்கு முறை பாத்திரத்தை காட்டி நிற்கிறது.

உழைக்கும் மக்களுக்காக போராடிய நக்சல்பாரி களை சட்ட விரோதமாக சுட்டுக் கொன்றும் அழித்தொழித்தும் காணாமல் செய்தும் ! மக்கள் விரோத தன்மை கொண்டது தான் இந்த சட்டமன்ற ஜனநாயகத்தின் வரலாறு. 

மிசா கொடுமையை நாம் கண்டிக்கிறோம். எந்த ஓட்டு கட்சியாவது கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய இந்த ஜனநாயக படுகொலையை கண்டிக்கிறார்களா? அல்லது சகஜமாக கடந்து போகிறார்களா? 

ஏனென்றால், ஆளும் கட்சிகள் எதுவாயினும் போராடும் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிப்பதை தனி நபராக பார்ப்பது இல்லை. மாறாக போராடும் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கும் வர்க்க கண்ணோட்டத்தில் தெளிவாக பார்க்கிறது. அந்த வரலாறுகளை மூடி மறைக்கிறது. 

ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் ஸ்டாலின் உதயநிதிக்கு ஒன்று என்றால் ஆவி துடிக்கும் எத்தனை பேர்வழிகள், அநியாயமாக கொல்லப்பட்ட அப்பு பாலன் சீராளன் இதர கம்யூனிஸ்டு களுக்காக துடித்து வெடித்து அன்றாடம் எழுதுகிறார்கள்! 

வர்க்க கண்ணோட்டம் காயடிக்கப்பட்டவர்களிடம் பொதுவான ஜனநாயக கூப்பாடு தவிர குறிப்பான அரசியல் பார்வையே இழந்து நிற்கும்படி ஆகிவிட்டது.

உடமை வர்க்கங்களுக்கு இடையேயான பிளவுகள் போட்டி பொறாமை கழுத்தறுப்பு கழிசடைத்தனம் அனைத்தையும் அதன் ஆட்சி வடிவம் பிரதிபலிக்கவே செய்யும்! 

வரலாற்று வழியில் சூம்பிப்போன இந்த ஜனநாயகத்தின் சூப்பர் ஸ்டாராக இப்போது விஜயின் வருகை!

எதிர்ப்பது சரி! ஆனால் திமுக எனும் நரியை பரியாக்கும் அரசியலையும் சேர்த்து அம்பலப்படுத்தத்தான் வேண்டும்.

மக்கள் மன்றத்தின் உழைக்கும் வர்க்க அரசியல்தான் இதற்கு மாற்றே ஒழிய, வசந்த் அண்ட் கோ விளம்பரம் போல "அந்தக் காலம்" என பாட்டு பாடிக்கொண்டு இந்த சட்டமன்ற புனிதத்தை சுற்றி வருவது நமது வேலை அல்ல. 

விஜய்×  உதயநிதி லாவணி கச்சேரி அல்ல!

தொழிலாளர் வர்க்க மக்கள் மன்றம்× தொழிலாளர் விரோத சட்டமன்றம் 

இந்த முரண்பாட்டில் யார்? யார்? பக்கம் நிற்கிறார்கள்! என்பதுதான் கவனிக்கத்தக்க முக்கியமான வாதிக்கப்பட வேண்டிய விசயம்.

இதை நோக்கி செலுத்தப்பட வேண்டிய அரசியலை கடந்த 10 ஆண்டுகளாக திமுக× பாஜக என்று முதலாளி வர்க்க அரசியலின் ஒரு பிரிவாக புரட்சிகர சக்திகள் கரைக்கப்பட்டது போலவே, தவெக× திமுக எனும் ஆளும் வர்க்க செட்டிங்க்கு உள்ளே 

பலரும் நாடகப் பாத்திரங்களாக ஆவதுதான் அவலம்.

சட்டமன்ற நாடாளுமன்ற பேச்சுகளும் நடவடிக்கைகளுமே சமூக நிகழ்ச்சி போக்கை நிர்ணயிப்பதாக மாயை கொண்டு

வர்க்கப் போராட்டத்தின் எதார்த்தங்களை புறக்கணிப்பதும், 

சிக்கலான வர்க்க உறவுகளை வர்க்கப் போராட்டங்களை தொழிலாளர் வர்க்க பார்வையில் மக்களிடம் அரசியல் ஆக்க போராடாமல் மட்டையடியாக அடியாக ஒத்தையா? ரெட்டையா? பார்வையில் ஆளும் வர்க்க பிரிவு அரசியலுக்கு வால் பிடிக்கும் கிளுகிளுப்பும்தான்! சட்டமன்ற ஆபாசத்தை விட மோசமானதாக இருக்கிறது.

நிகழ்ச்சிகள் விவரங்கள் அதன் விகாரங்கள் எதுவாக இருப்பினும் அவை மேலும் மேலும் முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தை செம்மை செய்யும் அரசாகவே அது இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தத்தான் அரசியல் தேவை. 

மேலும் மேலும் உழைக்கும் மக்களுக்கு விரோதமாக போய்க் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறையையே கேள்விக்குள்ளாக்கும் அரசியலை எல்லா சந்தர்ப்பங்களிலும் முதன்மைப்படுத்துவோம்!

துரை. சண்முகம்

https://www.facebook.com/share/p/19ec1EF1Er/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு