ரஃபேல் போர் விமான விவகாரத்தில் இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையே முற்றிய வாக்குவாதம்
தமிழில்: செந்தாரகை

வான் படை வல்லமையில் இந்தியாவுக்கு நிகர் எவருமில்லை என்று உலகமே நம்பியிருந்த சூழலில், பாகிஸ்தானின் PL-15 ஏவுகணைகள் வெளிப்படுத்திய அபாரமான செயல்திறனுக்குப் இந்திய விமானப்படையின் (IAF) உள்ளார்ந்த போதாமைகள் மட்டுமே காரணமென கருதுவது, போதுமான விளக்கமாக அமையாது. இந்த நிகழ்வுகள் மேலும் சில அதிர்ச்சிகரமான செய்திகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பிரான்சிடமிருந்து மிகப்பெரும் தொகைக்கு இந்தியா கொள்முதல் செய்திருந்த ரஃபேல் போர்(ஜெட்) விமானங்கள், பாகிஸ்தானுடனான அண்மையப் போர் களத்தில் எதிர்பார்த்த திறனை வெளிப்படுத்தத் தவறின. இந்த ஏமாற்றமளிக்கும் செயல்திறன் காரணமாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்களுக்கிடையே ஒரு பெரும் புகைச்சல் மூண்டுள்ளது. அதிநவீனத்தின் சிகரம் எனப் போற்றப்பட்ட ரஃபேல் ஜெட்டுகள், மோதலின் ஆரம்பத் தருணங்களிலேயே எதிர்பார்த்தபடி ஜொலிக்கத் தவறியது, உலக நாடுகளின் பாதுகாப்பு வட்டாரத்தில் பல்வேறு தரப்பினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பிரான்சிடமிருந்து ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்துள்ள பிற நாடுகளும், தங்கள் முடிவுகள் குறித்து ஆழ்ந்த கவலைகொள்ளத் தொடங்கியுள்ளன.
உதாரணமாக, இந்தோனேசியா சமீபத்தில் மேற்கொண்ட ரஃபேல் கொள்முதல் குறித்து ஒரு முழுமையான மறுஆய்வை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
அரசு தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் தரப்படாதபோதிலும், பெரும்பாலானோரால் அற்ப பலம் கொண்டதாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் விமானப்படைக்கு எதிராக இந்திய ரஃபேல் ஜெட்டுகள் நிலைகுலைந்தன? என்பதைக் கண்டபின், இந்தோனிசியா ஆழ்ந்த கவலை கொண்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாகத் தெரிகிறது.
பிரெஞ்சு அரசாங்கம், ரஃபேல் போர் விமானத்தின் நற்பெயருக்குக் களங்கம் நேராமல் காக்கும் பொருட்டு விமானத்தின் உள்ளார்ந்த பிழைகளை மறைத்து, இந்தியாவில் நிகழ்ந்த மோசமான பராமரிப்பையும், விமானிகளின் தவறுகளை மட்டுமே இந்நிகழ்வுகளுக்கு காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது.
ரஃபேல் விமானங்களை ஆய்வு செய்ய பிரெஞ்சு நிபுணர்களுக்கு இந்தியா அனுமதி மறுப்பு
இந்தியத் தரப்பால் கவனிக்கப்படாமல் விடுபட்டுப் போன ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கக் கூடும் என்பதைத் துல்லியமாக அறியும் பொருட்டு, டசால்ட் நிறுவனம் இந்த விமானங்களை முழுமையாகப் பரிசோதிக்க ஆர்வம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை நுட்பமாக ஆய்வு செய்ய டசால்ட் நிறுவனத்தின் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக சமூக ஊடகப் பதிவுகளும், செய்திகளும் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் பதற்றம் இயல்பானது மட்டுமல்ல, அதற்கான காரணமும் புரிந்துக்கொள்ளக் கூடியதே. ஏனெனில், ரஃபேல் விமானங்களின் செயல்திறன் பின்தங்கியதற்கு இந்திய விமானப்படையின் (IAF) மீது பழி சுமத்துவதற்கே, பிரெஞ்சுத் தரப்பினர் இந்த ஆய்வை மேற்கொள்ள விழைகிறார்கள், இதுவே இதன் பின்னால் உள்ள உண்மையான சூழ்ச்சி என்று இந்தியா உறுதியாகக் கருதுகிறது.
போர் துவங்கிய கட்டத்தில், ஒரு ரஃபேல் போர் விமானத்தை இழந்ததையடுத்து, இந்த இழப்பிற்குக் காரணமானவை ரஃபேல் விமானங்கள் அல்ல என சில தரப்பினர் வாதிட்டனர். மாறாக, இந்திய விமானப்படையில் (IAF) நிலவிய தரமற்ற விமானிப் பயிற்சியும், போதிய பராமரிப்பின்மையுமே இதற்குக் காரணமாக அமைந்தன என அவர்கள் குறிப்பிட்டனர். இக்கூற்றை இந்தியா உறுதியாக மறுக்கிறது. அக்குறைபாடுகளும் ஒரு பங்குகாரணமாக இருந்திருக்கலாம் என்ற போதிலும், ரஃபேல் ஜெட் விமானங்கள் அதிகச் சிக்கல்தன்மை வாய்ந்தவை என்பதும், பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் மலிவான சீனத் தயாரிப்பு ஜெட் விமானங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டவை அல்ல என்பதும்தான் இதற்கான எளிய விளக்கம் எனச் சிலர் நம்புகின்றனர். ஆகவே, பிரெஞ்சுத் தரப்பினர் தங்கள் மீதான பழியிலிருந்து தப்பிக்கவே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலும்.
பல ஆண்டுகளாகவே இந்திய விமானப்படை போதிய தயார்நிலையற்றுத் திகழ்ந்து வருகிறது.
இருப்பினும் , பிரெஞ்சுக்காரர்களின் வாதத்தில் நியாயம் இல்லாமலில்லை. 2024 டிசம்பரில், இந்தியாவின் அதிகாரபூர்வ தணிக்கை அமைப்புகளான – தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) மற்றும் நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழு – இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டன.
விமானிகளின் கடுமையான பற்றாக்குறையை இந்திய விமானப்படை எதிர்கொண்டுள்ளதை அந்த அறிக்கைகள் உறுதிபடுத்தின. 2015-இல் 486 ஆக இருந்த இந்தப் பற்றாக்குறை, 2021-இல் 596 ஆக உயர்ந்தது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அதிக விமானிகளைச் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவ்வாறு தோல்வியடைந்தன? என்பதைப் 2024 டிசம்பர் 20 அன்று இந்தியா டுடே இதழில் வெளியான ஷிவானி ஷர்மாவின் கட்டுரை, அம்பலப்படுத்தியது. இந்திய விமானப்படை மேலும் 222 பயிற்சி விமானிகளை தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டது, ஆயினும் அது முழுமையடையவில்லை.
மேலும், போதுமான பணியாளர்கள் இன்மையால், பிலாடஸ் PC-7 Mk-II போன்ற பயிற்சி விமானங்களில் உள்ள குறைபாடுகளைச் சீர் செய்ய இந்திய விமானப்படையால் இயலவில்லை. ஒரு போர் மூளும் பட்சத்தில், செயலற்ற நிலையில் உள்ள பயிற்சி விமானங்களும், போதுமான அளவு பயிற்சி பெற்ற விமானிகளும் இல்லாத சூழலில், இந்திய விமானப்படை பலவீனமானதொரு நிலைக்குத் தள்ளப்படும்.
அதாவது ஒரு போர் வெடிக்குமானால், அதை எதிர்க்கொள்ள இயலாத நிலையில் தேசத்தின் பாதுகாப்பு நிலைமை மிகவுமே பலவீனமாக இருந்தது.
நாடாளுமன்றக் குழுவின் கூற்றுப்படி, ஒரு தீவிரமான போரை எதிர்கொள்ள, ஒரு விமானத்திற்கான விமானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இந்திய விமானப்படையிடம் (IAF) 31 போர் விமானப் படைப்பிரிவுகளே இருந்தன; ஆனால், அதிகாரபூர்வத் தேவையோ 42 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், பழைய ஜெட் விமானங்களை உரிய நேரத்தில் புதியவற்றால் மாற்றீடு செய்ய தவறியதும், நிலைமையை மேலும் படுமோசமாக்கியது.
இந்தச் சிக்கல்கள், போருக்கு முன்னரே நன்கு அறியப்பட்டிருந்தன. ஆயினும், இந்தியா மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் அவற்றை முழுமையாகத் தீர்க்கவில்லை. ஆகையால், போர் மூண்டபோது, அதை எதிர்க்கொள்ள இந்தியா சிறிதும் தயாராக இருக்கவில்லை.
ஆகவே, இங்கு எழும் தலையாய கேள்வி இதுவே: சீன PL-15 ஏவுகணைகளப் பயன்படுத்திய பாகிஸ்தான் ஜெட் விமானங்களால் எப்படி ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரத்தோடும், மிக உயர்ந்த விலைக்கும் வாங்கப்பட்ட பிரெஞ்சு ஜெட் விமானங்களின் தன்மைதான் இதற்குக் காரணமா அல்லது இந்தியாவின் இராணுவம் போதிய தயார்நிலையில் இல்லாதது இதற்குக் காரணமா?
மேம்பட்டதாகக் கருதப்பட்ட இந்திய ஜெட் விமானங்களுக்கு எதிராகப் பாகிஸ்தானின் சீன ஏவுகணைகள் இவ்வளவு திறம்படச் செயல்பட்டதற்கு இந்திய விமானப்படையின் (IAF) உள்ளார்ந்த பிரச்சினைகள்தான் காரணம் என்று கூறுவது முழுமையான விளக்கமாக இராது. ஆகையால், இந்தியாவின் தயார்நிலை குறைபாட்டுடன் இருந்ததை ஏற்பது, பிரெஞ்சு ஜெட் விமானங்களிலும் குறைபாடுகளும் இருந்துள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.
சீனா தனது ஆயுதத் துறையில் மாபெரும் முன்னேற்றங்களைச் சாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாத உண்மையே. சில சமயங்களில், அவற்றின் படைக்கல அமைப்புகள் மேற்கத்திய நாடுகளின் தயாரிப்புகளுக்கு நிகரானதாகவும் —சிலவேளைகளில் அவற்றை மிஞ்சியதாகவும் கூட— திகழ்கின்றன; ஏனெனில், மேற்கத்தியப் படைக்கலன்கள் பெரும்பாலும் அதிக விலை கொண்டவையாகவும், கையாளுவதற்குச் சிரமமானவையாகவும் இருக்கின்றன.
ரஃபேல் போர் விமானங்களின் மூலக் குறியீட்டு நிரல்களை டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு ஏன் வழங்க மறுக்கிறது?
டசால்ட் நிறுவனத்தின் மீது இந்தியா வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிக்காட்டி வருகிறது. இந்தியா நீண்டகாலமாகவே அதன் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளராகத் திகழ்ந்த போதிலும், ரஃபேல் போர் விமானங்களின் மூலக் குறியீட்டு நிரல்களை வழங்க டசால்ட் நிறுவனம் மறுப்பதே அதிருப்திக்கான பிரதான காரணமாகும்.
டசால்ட் நிறுவனம் தனது தொழில்நுட்ப ரகசியங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு செயல்படுகிறது என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆயினும், இந்த ஜெட் விமானங்களைச் சீராகப் பராமரிப்பதற்கும், அவற்றின் மென்பொருளைத் திறம்படக் கையாள்வதற்கும், பல்வேறு ஆயுத அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இந்தியாவுக்கு மூலக் குறியீடு(Source Code) அவசியமாகிறது. அது இல்லாமல், இந்திய விமானப்படையால் (IAF) ரஃபேல் ஜெட் விமானங்களை முழுமையாகப் பயன்படுத்தவோ, குறிப்பாகப் போர்க்காலங்களில் அவற்றின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவோ இயலாது; இது ஒரு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
அப்படியிருக்க, டஸ்ஸால்ட் நிறுவனம் ஏன் வழங்க மறுக்கிறது? இது தங்கள் தொழில்நுட்பம் திருடுபோவதைத் தடுக்கவா? அல்லது, பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்தப் பொருள், அதன் உண்மை மதிப்பைக் கொண்டதல்ல என்பதை இந்தியா அறிந்துகொண்டுவிடுமோ என அஞ்சுகிறார்களா?
இப்பிரச்சினைகளைக் கண்டு சீனர்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில், ரஃபேல் மென்பொருளை இந்தியாவால் முழுமையாக பயன்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை என்ற செய்தி வெளியான அதே வேளையில், சேதமடையாத நிலையில் இருந்த ஒரு பிஎல்-15 ஏவுகணையை இந்தியா கைப்பற்றிய தகவலும் வெளிவந்தது. அப்போது, சீன அரசின் அதிகாரி ஒருவர் “ரஃபேல் விமானம் ஒன்றுக்கு இந்தியா 288 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது! ஆனால், அதன் மென்பொருள் குறியீடு கூட இவர்களுக்குச் சொந்தமில்லை. அழிக்கப்பட்ட பிஎல்-15 ஏவுகணையிலிருந்து மென்பொருளைப் பிரித்தெடுப்போம் என்று ஆர்ப்பரிக்கும் இவர்களால் தங்களது சொந்த ஜெட் விமானங்களைக் கூட முழுமையாக கட்டுப்படுத்த, பயன்படுத்த முடியாதா?” என்று, X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இந்தியாவை குறிப்பிட்டு ஏளனமாக பதிவிட்டிருந்தார்.
அந்தக் கருத்து வன்மையானதாக இருந்தபோதிலும், அது ஒரு நியாயமான கேள்வியை எழுப்பியது. இந்தியா தன்னை ஒரு வலிமைமிக்க இராணுவ சக்தியாகப் பறைசாற்றிக் கொள்வதற்கும், உண்மை நிலைக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளியை இதுவே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தியாவிடம் வலிமை வாய்ந்த இராணுவத் தளவாடங்கள் உள்ளன, ஆனால் அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்தியா தனது ஆயுதப் படைகளை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
இந்த விவகாரத்தின் அடிநாதம் இதுதான்: போர் மூண்ட வேளையில், இந்தியா ஒரு கடுமையான போர் நெருக்கடியைச் சந்திக்கத் இருந்தது. இதன் காரணமாகவே, பாகிஸ்தானை முந்திக்கொள்ளும் நோக்குடன் இந்திய அரசு மோதலை விரைந்து தீவிரப்படுத்த முனைந்தது.
இறுதியில், அளவுக்கு அதிகமாக விலை நிர்ணயித்து, அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத மேற்கத்திய நிறுவனங்களிடமிருந்து, இந்தியா பொருத்தமற்ற இராணுவத் தளவாடங்களை வாங்கியிருக்கக்கூடும். பிரான்ஸும் இந்தியாவும் பரஸ்பரம் பழி சுமத்திக்கொண்டாலும், போரின் ஆரம்பகட்டத் தோல்விகளுக்கு இருவருமே பொறுப்பாவர்.
ஆகவே, கால அவகாசம் இருக்கும்போதே இந்தியா துரிதமாகச் செயல்பட்டு, தனது பாதுகாப்பு வியூகத்தை மாற்றியமைக்க வேண்டியது அத்தியாவசியமாக மாறியுள்ளது.
- செந்தாரகை (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு