மஜ.இக அரங்க கூட்ட அனுபவம் - பெரு மழையில் சிறு துளிகள்!

துரை. சண்முகம்

மஜ.இக அரங்க கூட்ட அனுபவம் - பெரு மழையில் சிறு துளிகள்!

இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை உணர முடிகிறதோ! இல்லையோ? தேர்தல் தொடர்பான இந்தக் கருத்தரங்கில் ஜனநாயக அரசியல் தன்மையை உணர முடிந்தது. இது தேவைப்படுகிறது.

மா.லெ. இயக்கங்கள் ஒருவருக்கு ஒருவர் பேச முடியாத இறுக்கங்கள் எனும் பண்பியில், பாறை போல இறுகி இருப்பதை  இடைவிடாத கருத்தியல் அலைகளால் மட்டுமே பொருள் பொதிந்த படிக்கட்டுகளாக செதுக்க முடியும். பொதுவாக இடதுசாரிகள் ஒன்று சேர வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை இதுபோன்று குறிப்பான பொருளின் மீது வாதங்களே ஐக்கியத்திற்கான 
அசைவுகளை யோசனைகளை வழங்க முடியும். உடனடியான பலன் இல்லாவிட்டாலும் கொள்கை கோட்பாட்டு அடிப்படையிலான தோழமை உறவுக்கான தடைகளை தகர்க்கும் காரணிகளை அனைவருக்குமே கண்ணுக்கு காட்டும்.

அப்படி ஒரு நிகழ்வாக நேற்று சென்னையில் நடந்த ம.ஜ.இ.க. வின் தேர்தல் தொடர்பான கருத்தரங்க நிகழ்வு இருந்தது.

நிகழ்ச்சியில் கருத்துரை ஆற்றிய அனைத்து தோழர்களுமே இந்த தலைப்பை பொறுப்போடும் மகிழ்வோடும் தங்களது நிலைப்பாட்டின் உறுதியோடும் அணுகியது சிறப்பான வெளிப்பாடாக இருந்தது. 

நாடாளுமன்ற ஜனநாயக முறை, முதலாளித்துவ நாடாளுமன்ற பங்கேற்பு, புறக்கணிப்பு, வரலாற்றின் வழியில் தொடங்கி பலரும் நாடாளுமன்ற பாதையை கையாண்ட முறை, அதை எவ்வாறு பயன்படுத்துவது? எதற்கு பயன்படுத்துவது? 
இப்போதைய தமிழக சூழலில் இதை எவ்வாறு பொருத்துவது? 
என்பதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களின் உரைகள் பயனுள்ள பகுதிகளை பார்வைக்கு தந்தது. 

தோழர் பாலன் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பாதை பற்றிய தொடக்க கால மா.லெ. குழுக்களின் கெட்டி தட்டிய தன்மை எவ்வாறு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகிறது எனும் விதத்தில் அதற்குரிய அனுபவத்தோடு வாதங்களை எடுத்து வைத்தார். நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் பாதையையும் பாசிசத்திற்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்! அவ்வாறு பார்க்க தவறுவது பிழை! என்றும் கருத்தரங்கின் தலைப்பு முன்வைக்கும் சீர்திருத்தங்கள் 
தேர்தல் பங்கேற்பிலிருந்து வருகிறதா? அல்லது புறக்கணிப்பில் இருந்து வைக்கப்படுகிறதா? எனும் தெளிவு வேண்டும் என வினா எழுப்பினார். 

தோழர் பாஸ்கர் அவர்கள் உரையும் தேர்தல் பங்கேற்பு மற்றும் அதை இயக்கவியலோடு பார்க்கத் தெரியாத குழப்பத்தில் பலரும் விழுந்து கிடக்கிறார்கள்! என வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து கருத்துகளை சொன்னார். சியாங்கே சேக் ஹிட்லருடன் கம்யூனிஸ்டுகள் அமைத்துக் கொண்ட ஒப்பந்தம், 
எதிரிகளுடனே குறிப்பிட்ட கட்டத்தில் இணைந்து கொண்ட செயல் தந்திரம் இவைகளின் மூலமாக தங்கள் லட்சியத்தை வென்றெடுத்த வரலாறு என்பதன் வழியாக இங்கும் தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாசிச சக்திகளை எதிர்க்க முதலாளித்துவக் கட்சிகளை எவ்வாறு கையாள வேண்டும்? 
எனும் சாரத்தில் கருத்துகளை பகிர்ந்தார். 

முக்கியமாக தோழர் மஞ்சுளா அவர்கள் தொகுதி வாரியோ, விகிதாச்சார தேர்தலோ இரண்டையுமே கம்யூனிஸ்டுகள் பயன்படுத்துவதற்கான சமூக செல்வாக்கும் அமைப்பு வளர்ச்சியும் இல்லாமல் எந்த மாற்றத்தையும் செய்து விட முடியுமா? என கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுயேச்சை பாத்திரத்தின் அவசியத்தை விலக்கி சிந்திக்க வைத்தார். 
மேலும் பாசிச எதிர்ப்பு எனும் ஒரு நோக்கத்தில் மட்டும் தேர்தலை அணுகுவது என்பது 
நம்முடைய நீண்ட கால போர்த்தந்திரத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று போர் தந்திரம் செயல் தந்திரம் பற்றிய
மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களை முன்வைத்து விவாத நோக்கில் அணுகினார். 

தோழர் வெற்றிவேல் செழியன் சமூக மாற்றம் இல்லாமல் தேர்தல் சீர்திருத்தம் முடியுமா? 
யார் வந்தாலும் திமுக கும்பலுக்கு எதிராக இந்த தேர்தல் மூலம் எதுவும் செய்து விட முடியாது. அதே நேரம் தேர்தல் புறக்கணிப்பு என்பதால் தனிமைப்பட்டு போவோம்! எனும் கருத்தை தெரிவித்தார். 

தோழர் பழனி அவர்கள் 
சற்று நேரம் அரங்கத்தை பொதுக்கூட்ட மேடை போல இடி மின்னல் ஆக்கினார். தேர்தல் நிரந்தர பங்கேற்பு நிரந்தர புறக்கணிப்பு என்பதன் பின்னால் உள்ள அரசியல் சரி தவறுகளை தோழர் லெனினிடமிருந்து எடுத்து விளக்கி ஓங்கிப் பேசினார். வர்க்க கண்ணோட்டம் இல்லாமல் பொதுவாக தேர்தல் சீர்திருத்தம் என்பது தவறு தடுமாற்றம் என்று தனது கருத்தை முன் வைத்தார்.
ம.ஜ.இ.க. இதை எந்த வகையில் வைத்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு ஒன்றுபட்ட கட்சி இல்லாமல் தேர்தலில் பாசிச எதிர்ப்பு என்பது சாத்தியமில்லை. இந்த முதலாளித்துவ அரசுகளின் பின்னால் சென்று பாசிசத்தை ஒழிக்க முடியாது! எனவே தேர்தல் பங்கேற்பு புறக்கணிப்பு என்பதை மார்சியல் லெனினிய கண்ணோட்டம் இல்லாமல் பயன்படுத்துவது தவறு!  எவ்வளவு கடினமாக கசப்பாக இருந்தாலும் ஒன்றுபட்ட கட்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி பாட்டாளி வர்க்கத்தை திரட்டி இடதுசாரிகள் கண்ணோட்டத்தில் மட்டுமே பாசிசத்தை ஒழிக்க முடியும் என உறுதிபட பேசினார்.

தோழர் கோபிநாத் இந்தத் தேர்தல் வழியில் பாசிசத்தை ஒழிக்க முடியாது! அதுவும் திமுகவை முன்னிட்டு இந்த கடமையை நிறைவேற்ற முடியாது! இந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் பாசிச எதிர்ப்புக்கு அது செய்த செயல் என்ன? இல்லை பாசிசத்தை எதிர்ப்பவர்களுக்கு அது வழங்கிய ஜனநாயகம் தான் என்ன? தேர்தல் புறக்கணிப்பு தான் நமது நிலைப்பாடு என தொகுத்து பேசினார். 

தோழர் ரெட் ஸ்டார் மனோகரன் அவர்களும் ஆர்எஸ்எஸ் பிஜேபி அதன் கூட்டணிகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையான முழக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். வலதுசாரி இடதுசாரி மட்டுமல்ல வலதுசாரிக்கு உள்ளேயே தீவிர வலதுசாரி எனும் பிரிவுகள் கூட இருக்கின்றன. எனவே மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் வலதுசாரி தன்மையை விட தீவிர வலதுசாரியை முதன்மை எதிரியாக பார்க்க வேண்டும். 
இன்றைய உலக அளவில் ஈரான் அமெரிக்கப் போரில் எப்படி ஈரான் சில பிரச்சனைகளை கொண்டிருந்தாலும் அமெரிக்காவை முதன்மை எதிரியாக பார்க்கிறோமோ! அப்படி இங்கு உள்ள பிரச்சனைகளை அணுக வேண்டும் என்று தேர்தல் பங்கேற்பின் அரசியல் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தோழர் செவ்வேள் அவர்கள் 
பாஜக பாசிசம் என்பது முதன்மையான அபாயமாக உள்ளது. ஆரிய மேலாண்மை கொண்டதாக உள்ளது. ஆரியம் திராவிடம் இரண்டையுமே இனவாதமாக சொல்வது வாதத்துக்குரியது. முதன்மை எதிரியான பாஜக தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்! அதற்கு இடதுசாரி கூட்டணிகளை ஆதரிப்பது தேவை! எனும் நிலையில் தேர்தல் பங்கேற்பின் அவசியத்தை பேசினார். 

தோழர் டாக்டர் சாந்தி அவர்கள் 
பல்வேறு தேர்தல் முறைகளை விளக்கப் படத்துடன் திரையில் திரையிட்டு அதன் வரலாறுகளை தொகுப்பாக பேசினார். பாசிச அபாயம் பாதிக்கப்பட்ட சூழலை, ஐ சி யு வில் உயிருக்கு போராடும் நோயாளியை எப்படியாவது கையாண்டு  பிழைக்க வைக்க போராடுவது போல இந்தத் தேர்தல் சட்டமன்ற முறைகளை பயன்படுத்தி பாசிசத்தை எதிர்கொள்ள வேலை செய்ய வேண்டி இருக்கிறது என விளக்கிப் பேசினார்.  

தோழர் தியாகு அவர்கள் முதன்மை எதிரியான பாசிசத்தை பாஜகவை முறியடிக்க இவருடன் சேரலாமா? அவருடன் சேரலாமா? என வினா எழுப்புவதை விட, வரலாற்றில் எதிரியுடனேயே ஒரு உடன்பாடு செய்து கொண்ட ஸ்டாலின் போன்ற மார்க்சிய வழிகாட்டலையும் மனதில் வைத்து செயல்படுவது தேவை என்றார். தோழர் லெனின் ரஷ்ய சூழலில் எவ்வாறு நாடாளுமன்ற முறையை பயன்படுத்தி வெற்றி கண்டார் என்பதை விளக்கினார். 
மேலும் ம.ஜ.இ.க. தேர்தல் தொடர்பான ஆவணத்தில் விவரப் பிழை மற்றும் தர்க்கப்பிழைகளை அரசியல் ரீதியாக சுட்டிக்காட்டி இதையும் ஒரு தொடராக வாதிக்கிறேன் பின்னர் எழுத்தில் என்றார். 

இறுதியாக ஏறக்குறைய எழுப்பப்பட்ட சந்தேகங்கள் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க போதிய நேரமில்லாமல் தோழர் சேல் முருகன் அவர்களுக்கு
நீதிமன்ற ஆணைப்படி சரியாக ஏழு மணிக்கு முடிக்க வேண்டும் எனும் நெருக்கடியும் சூழ்ந்து கொண்டது.  அரங்க உரிமையாளரும் வந்து உடனே முடிக்கச் சொல்லி அறிவுறுத்தும் படி ஆகிவிட்டது. 

இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் முன் வைத்திருக்கும் தேர்தல் சீர்திருத்தம் என்பது ஒரு தொடர் போராட்டத்திற்கான 
கருத்தின் ஒரு பகுதி எனும் சாரத்தில் விளக்கினார். குறைந்தபட்சம் இந்த நேரத்தில் இதிலிருந்து தொடங்கி இந்த ஜனநாயகத்தோடும் கூட எப்படி போராடி அடுத்த கட்டத்திற்கு நகர்வது எனும் விதத்தில் விளக்கினார்.

மேலும் நமது தோழர்கள் நமக்குள் என்றால் கொள்கை கோட்பாடுகளை வைத்து வாதம் செய்வதும், பாசிச எதிர்ப்பிற்கான கூட்டணி என்றால் கொள்கை கோட்பாடு தேவையில்லை என அணுகுவதும் எந்த வகையான அரசியல்? என அதன் அடிப்படைகளை தொட்டுச் சென்றார். உரை முழுமை பெற அரங்கின் சூழல் அமையாததால் சுருக்கமாக சில அடிப்படைகளை பேசி சென்றார்.

முக்கியமாக காலை 10 மணியிலிருந்து இரவு 8 வரை 
வந்திருந்த பார்வையாளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்து 
உரைகளை நிதானமாக கவனிக்கும் அளவுக்கான ஏற்பாட்டுச் சூழ்நிலையை ம.ஜ.இ.க. அமைப்பு தோழர்கள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. 

இடையிடையே தோழர்களின் 
பறை இசை நிகழ்வும் மக்கள் கலை மன்றத் தோழர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
ஆனால் பாடல்களை தெளிவாக கேட்கும் அளவுக்கான ஒலி அமைப்பு முறை குறைபாடாக இருந்ததால் அவ்வளவாக அது ஈர்க்கப்படவில்லை. மேலும் பாடலுக்கான கலைத்தன்மையிலும் தோழர்கள் போராட வேண்டிய நிலைமையை வெளிப்படுத்தியது. இதிலும் இந்தத் தோழர்கள் நிறைவு செய்வார்கள் எனும் நம்பிக்கை உள்ளது. 

முக்கியமாக நிகழ்ச்சிக்கு அரசு தரப்பில் இருந்து தடை ஏற்பட்ட போதும், நீதிமன்றம் சென்று போராடி அனுமதி வாங்கி நிகழ்வை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்கள் தோழர்கள். பங்கேற்ற அமைப்பின் தோழர்கள் இந்தக் கருத்தரங்கின் தேவையை அங்கீகரித்து தங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து உறுதியாக பேசியது ஒரே இடத்தில் பல்வகை அரசியல் பரிமாணங்களை எதிர்கொண்ட அனுபவத்தை தந்தது. 



* உரையாற்றிய தோழர்களைப் பற்றிய குறிப்புகள்-அமைப்புகள் புகைப்படத்தில் உள்ளன.

துரை. சண்முகம்

https://www.facebook.com/share/18R2cuYChz/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு