இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -2)

ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ நெருக்கடியே!

இலங்கை பொருளாதார நெருக்கடி  (பகுதி -2)

(பகுதி -1 ன் தொடர்ச்சி)

 

 

சீனாவின் புதிய காலனியாதிக்கம்

 

2005-06ம் ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் துவங்கிய பொருளாதார மந்தநிலை 2008ஆம் ஆண்டு உலக முதலாளித்துவ நெருக்கடியாகப் பரிணமித்தது. அக்காலகட்டத்தில் இலங்கை, இந்தியா போன்ற காலனிய நாடுகளில் அமெரிக்காவின் அந்நிய மூலதனம் குறைந்தது மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த முதலீடுகளும் வெளியேறத் துவங்கின. இதே காலகட்டத்தில் அமெரிக்காவிற்குப் போட்டியாக உருவான சீனா-ரஷ்யா நாடுகள் தலைமையிலான ஷாங்காய் கூட்டமைப்பு அமெரிக்காவின் பலவீனமான பொருளாதார நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை உள்ளிட்ட புதிய காலனிய நாடுகளில் முதலீடுகள் செய்யத் துவங்கின. 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்சே கும்பல் சீனா-ரஷ்யாவுடனான உறவுகளைப் பலப்படுத்தத் துவங்கியது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடி காரணமாக இராணுவ உதவிகளைக் குறைத்துக் கொண்டதால், சீனா-ரஷ்யாவிடமிருந்து அதிகளவு ராணுவ உதவிகளைப் பெற்று புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ராஜபக்சே கும்பல் நசுக்கியது. சீனாவுடனான இலங்கையின் உறவு அமெரிக்காவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் ராஜபக்சே அரசின் மீது மனித உரிமை மீறல் பிரச்சனைகளை (இனப்படு கொலை என்றுக் கூறத் தயாரில்லை) ஐ.நா. சபையில் கிளப்பி 2007ல் அமெரிக்கா ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது. ராஜபக்சே கும்பல் சீனாவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறுவதற்கான 'இலங்கை - சீன ராணுவ ஒப்பந்தம்' ஒன்றில் 2007இல் கையெழுத்திட்டது. இது மட்டுமின்றி சீனாவுடனான வர்த்தக உறவுகளையும் அதிகரித்துக் கொண்டது. உள்கட்டமைப்பு, ஜவுளித் துறைகளில் சீனாவின் மூலதனத்தை அனுமதித்தது. எனவே ஏற்கனவே நிலவிவந்த வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரித்து அந்நிய செலாவணி கையிருப்பு வற்றத் துவங்கியது. நெருக்கடியைச் சமாளிக்க 2007 முதல் சர்வதேச பங்குச் சந்தையில் தன்னாட்சி பத்திரங்கள் (International Sovereign Bond) மூலமும், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் அதிகளவு கடன் பெறத் துவங்கியது.

 

ஏப்ரல் 2007ல் புலிகள் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை சீனாவிடமிருந்து 37.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களைப் பெற்றது. மிகவும் அதிநவீன முப்பரிமாண ரேடார் கருவிகளை (3D Radars) இலங்கைக்கு சீனா வழங்கியது; மட்டுமின்றி எப்-7 போர் விமானங்களையும் (F-7 Fighter Jets) வழங்கியது. சிங்களப் பேரினவாத பாசிச பக்சே கும்பல் இலங்கையின் இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 1,16,000லிருந்து 1,80,000 வரை பலப்படுத்தியது. சீனாவுடன் ரஷ்யாவும் இணைந்து சிங்கள ராணுவத்திற்கு ராணுவ பயிற்சிகளை அளித்தது. ரசியா 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களையும், 17 வகை போர் விமானம், பீரங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களையும், 158.5 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான விரைவு போர்க் கப்பல்களையும் ராஜபக்சே அரசுக்கு வழங்கியது. சீனா ஒரு பில்லியன் டாலருக்கும் மேலான மதிப்பில் இராணுவ உதவிகளைச் செய்தது. சீனா வழங்கிய முப்பரிமாண ரேடார்கள், எப்-7 ஜெட் விமானங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளின் முக்கியமான மூன்று விமான தளங்களை ராஜபக்சே அரசு அழித்தது. சீனா, ரஷ்யா மட்டுமின்றி இந்தியாவும் இராணுவ உதவிகளைச் செய்தே வந்தது. அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், சீன இலங்கை உறவுகள் பலப்பட்டதன் காரணமாகவுமே இராணுவ உதவியை 2007-இல் நிறுத்தியது. அமெரிக்காவுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்து இதே காரணங்களால் ஐநாவில் மனித உரிமை மீறல் பிரச்சினைகளைக் கிளப்பி இலங்கை அரசை பணிய வைக்க முயன்றன. ஐநாவில் ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுத்து ராஜபக்சே கும்பலைக் காப்பாற்றின. பாகிஸ்தான், வெனிசுலா, கியூபா போன்ற ரசிய-சீன எடுபிடி நாடுகளும் ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக வாக்களித்தன.

 

2008 இறுதி யுத்தத்தில், புலிகள் அமைப்பை மொத்தமாக அழித்தொழிக்கவும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவும் சீனாவும், ரசியாவும் ராஜபக்சே கும்பலுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்தன. இந்திய அமைதிப்படையில் இராணுவ உளவுப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்த ஆர். ஹரிஹரன் "விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு சீனா விலைமதிப்பற்ற இராணுவ உதவிகளை இலங்கை அரசுக்குச் செய்துள்ளது" என்று யுத்தம் முடிந்த பிறகு தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் (Spokeperson) உதயா நானயக்கரா (Udaya Nanayakkara) "கடந்த 3 ஆண்டுகளில் சீனாதான் எமக்கு அதிகளவு இரானுவ உதவிகளைச் செய்தது" என்று 2009-ல் யுத்தம் முடிந்த பிறகு தெரிவித்தார். ராஜபக்சே கும்பலும் இந்தியாவின் உதவிகளை (மன்மோகன் - சோனியா கும்பலின் உதவிகளை) புகழ்ந்து பேசியது. யுத்தம் முடிந்த பிறகு அதாவது புலிகள் அமைப்பின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டம் கருவறுக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா ராஜபக்சே அரசைப் பணிய வைக்கும் பொருட்டு, மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த மனித உரிமை மீறல் - ஜெனிவா தீர்மானங்களை சீனா - ரசியா நாடுகள் வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்தன. வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் சீனா-ரசியாவின் பக்கம் நின்று மாபெரும் இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை காப்பாற்றின. அதற்கு நன்றிக் கடனாகவே இலங்கையை சீனாவிற்கு ராஜபக்சே கும்பல் திறந்துவிட்டது. தெற்காசிய பிராந்தியத்தில் இராணுவம் மற்றும் கடல்வழி வர்த்தகத் துறைகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகத் திகழும் இலங்கை சீனாவிற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்டது. அதற்காகவே ராஜபக்சே கும்பலுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இவ்வாறாக, அமெரிக்க - இந்தியா மற்றும் சீனா - ரசியாவின் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிக்களமாக, வேட்டைக்காடாக இலங்கையை சிங்கள ஆளும் வர்க்கங்கள் மாற்றியமைத்தன. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மையமான காரணம் இதுவே ஆகும்.

 

சீனா,

1) கடுவட்டிக்கு கடன் தருவது;

2) உள்கட்டமைப்பு திட்டங்களுக்குக் கடன் தருவதன் மூலம் அவற்றைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது;

3) ஜவுளி துறை, வேளாண்மைத் துறையைத் தனது மூலதனத்தை சார்ந்து இயங்குமாறு மாற்றியமைப்பது;

4) வர்த்தக துறையில் ஆதிக்கம் செலுத்துவது;

 

போன்ற புதிய காலனிய முறைகளின் மூலம் இலங்கையைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் பொருள் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல. மாறாக அமெரிக்கா, சீனா இரண்டின் புதிய காலனியாகவும் இலங்கை நீடித்து வருகிறது என்பதே.

 

அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தின் கீழ் சூறையாடப்பட்ட இலங்கை, சீனாவின் புதிய காலனியாதிக்கத்தால் 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு (குறிப்பாக 2005க்குப் பிறகு) மேலும் சூறையாடப்பட்டது. 1980 - 2008 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியில் 40% வரை இராணுவத்திற்கு செலவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நியக் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 50% சதத்திற்கும் மேல் இருந்துள்ளது. அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை எதிர்மறை மதிப்புகளில் 1985ல் -209 மில்லியன் டாலர்களாகவும், 1995-ல் -980.6 மில்லியன் டாலர்களாகவும், 2005-ல் -1,885.3 மில்லியன் டாலர்களாகவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. அதாவது இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்து கொண்டே சென்றதால் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

 

இந்திய தரகு முதலாளிகள் இலங்கையின் தேயிலைத் தொழில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள், தொலைத் தொடர்புத் துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். ஒன்றுப்பட்ட இலங்கையின் சந்தை நலன்களிலிருந்துதான் ராஜீவ் அரசு அமைதிப்படையை அனுப்பி தமிழீழ மக்கள் மீது ஒடுக்குமுறையை நிகழ்த்தியது. புலிகளிடம் படுத்தோல்வி அடைந்து அமைதிப்படை   பின்வாங்கி ஓடியது. இந்தியாவுடன் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FDA 1998) மூலம் வர்த்தகம் செய்து வருகிறது. ஆயத்த ஆடைகள், மோட்டார் வாகனம், மின்னாற்றல் சாதனங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. டாட்டா நிறுவனம் தேயிலைத் துறையிலும், ரிலையன்ஸ் எண்ணெய், எரிவாயுத் துறையிலும் முதலீடு செய்து வருகின்றன.  இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 1999ல் (மைனஸ்)-463 மில்லியன் டாலர்களாகவும், 2005ல் (மைனஸ்)-879 மில்லியன் டாலர்களாகவும் 2010 (மைனஸ்)-2074 மில்லியன் டாலர்களாகவும், 2020ல் (மைனஸ்)-2404 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது.  

 

அமெரிக்கா, இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை இலங்கை - சீன வர்த்தக உறவுகளால் மேலும் அதிகரித்தது.

 

2007-ம் ஆண்டு ராஜபக்சே சீனாவிற்கு சென்ற பொழுது சீனாவுடன் இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 1) பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (Economical and Technical Co-operation agreement) 2) சீனாவின் குவாங்யூ மற்றும் இலங்கையின் ஹம்பந்தோடா நகரங்களுக்கு இடையிலான நட்புறவு நகர உடன்படிக்கை (Friendship City relationship agreement). இவை தவிர சீனாவின் கட்டுமான அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், ஒலிபரப்பு அமைச்சகம், செஞ்சிலுவைச் சங்கம், வேளாண் அறிவியல் கழகம் மற்றும் அயல்நாட்டுக் கல்விக்கான பல்கலைக் கழங்கள் போன்ற நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ராஜபக்சே கையெழுத்திட்டார்.

 

 (தொடர்ச்சி பகுதி -3 ல்)