சீரமைக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு

இந்து தமிழ் திசை

சீரமைக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு

இந்திய அரசமைப்பின் மிகச்சிறந்த கூறுகளில் ஒன்றாக மிளிர்வது நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை. தேர்தல் மறுசீரமைப்பு, தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) ஆகிய இரண்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நடத்துவதும், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதும் உள்ளபடியே சிக்கலான பிரச்சினைகள்.

அதிலும், தொகுதிகள் மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை தொடர்பான விஷயம் என்று எளிதில் கடந்து போய்விடக்கூடியதல்ல. குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், மாநில உரிமைகள், கூட்டாட்சி முறையின் கதியை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய விஷயம் இது.

அரசமைப்பும் தொகுதி மறுசீரமைப்பும்: ​வாக்​குரிமையின் மூலமாகவே குடிமக்​களுக்கான அரசியல் பிரதி​நி​தித்துவம் உறுதிப்​படுத்​தப்​பட்டு வருகிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வர்க்க பேதம், மதம், இனம், சாதி, மொழி, பாலினம் என அனைத்துப் பாகுபாடு​களையும் உடைத்​தெறிந்து (18 வயது பூர்த்தியான) குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பு கொண்ட வாக்குரிமையை (Equally Weighted Vote) இந்திய அரசமைப்பு வழங்கி​யிருக்​கிறது.

தொகுதி​களுக்கு இடையே நிலவும் மக்கள்தொகை வேறுபாடு காரணமாக வாக்கு​களின் மதிப்பு ஏற்றத்​தாழ்வு கொண்டதாக மாறிவிடக்​கூடிய நிலையும் ஏற்படலாம். அத்தகைய சீரற்ற பிரதி​நி​தித்துவ நிலையை (Malapportionment) அறிவியல்​பூர்வமான முறையில் கையாளுவதற்​காகவே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்​ளப்பட வேண்டி​யுள்ளது.

எனவே, ஒவ்வொரு பத்தாண்​டுகள் நிறைவுற்ற பிறகு, மக்கள்​தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) அடிப்​படையில் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்​ளப்​படு​கிறது; மக்கள்தொகை வளர்ச்சியின் அடிப்​படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்​ளப்​படு​கிறது. இந்திய அரசமைப்பின் பிரிவுகள் 81, 82, 170, 329, 330, 332, மறுசீரமைப்புச் சட்டம் (Delimitation Act) ஆகியவை இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உரிய அதிகாரத்தை​யும், வழிகாட்டு​தலையும் வழங்கு​கின்றன.

இவற்றின் அடிப்​படை​யில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள ஓர் உயர்நிலை அமைப்பு (Delimitation / Boundary Commission) அமைக்​கப்​படு​கிறது. இதுநாள்​வரையில் 1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டு​களில், அத்தகைய ஆணையங்கள் அமைக்​கப்​பட்டுத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்​ளப்​பட்டது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மூலமாக நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி​களின் எண்ணிக்கை முறையே 494, 520, 542, 543 என அதிகரித்தது.

1976ஆம் ஆண்டில், இந்திய அரசமைப்பின் 42ஆவது திருத்தச் சட்டத்​தின்படி, 2001ஆம் ஆண்டு வரையிலும் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்​திவைக்​கப்​பட்டது. பின்னர், 2001இல், இந்திய அரசமைப்பின் 84ஆவது திருத்தச் சட்டத்​தின்படி, 2026ஆம் ஆண்டு வரையிலும் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்​திவைக்​கப்​பட்டது. இருப்​பினும், 2001 மக்கள்​தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்​படை​யில், மாநிலத்​துக்கு உட்பட்ட தொகுதி​களின் (Constituencies within the States) மக்கள்​தொகைச் சமன்பாட்டை உறுதிப்​படுத்தும் விதமாக, ஒரு குறிப்​பிட்ட வரம்புக்கு உட்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்​கப்​பட்டது. எனினும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்​கப்​பட​வில்லை.

மக்கள்​தொகையும் பிரதி​நி​தித்து​வமும்: 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின்​போது, மொத்த வாக்காளர்​களின் எண்ணிக்கை 17.3 கோடி. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி​களின் எண்ணிக்கை 401 ஆக இருந்தது. 2024 ஜனவரி நிலவரப்படி, மொத்த வாக்காளர்​களின் எண்ணிக்கை 96.8 கோடி. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி​களின் எண்ணிக்கை 543 ஆக இருக்​கிறது. கடந்த 75 ஆண்டு​களில், வாக்காளர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்​துள்ளது. ஆனால், பிரதி​நி​தித்து​வத்தில் மக்கள்​தொகையின் பிரதிபலிப்பு சரியான விகிதத்தில் இல்லை.

தற்போதுள்ள நிலையில், இதர ஜனநாயக நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்​பினர்​களைக் காட்டிலும், நமது மக்களவை உறுப்​பினர்கள், மக்கள்தொகை அதிகம் கொண்ட - பரந்து விரிந்த தொகுதி​களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு​மிக்​கவர்களாக இருக்​கிறார்கள். 6.73 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்​டனில், நாடாளு​மன்றக் கீழவையின் (Lower House) மொத்த உறுப்​பினர் எண்ணிக்கை 650.

அதேபோல், 6.56 கோடி மக்கள்தொகை கொண்ட ஃபிரான்ஸில் மொத்த உறுப்​பினர் எண்ணிக்கை 577. 8.34 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனியில் மொத்த உறுப்​பினர் எண்ணிக்கை 736. எனவே, இந்திய மக்களவை உறுப்​பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்​திருப்பதை மறுக்க முடியாது. அவ்வாறு அதிகரிப்பதன் மூலம், குடிமக்​களுக்கான அரசியல் பிரதி​நி​தித்துவம் ஓரளவு மேம்படுத்​தப்​படு​வதுடன், தொகுதி மக்களின் நியாயமான தேவைகளையும் உறுப்​பினர்கள் திறம்பட நிறைவேற்றிட முடியும்.

இந்தியச் சூழலில் மறுசீரமைப்பு: அதேவேளை​யில், உலகின் இதர ஜனநாயக நாடுகளில் இருப்​பதைப் போல், மக்கள்​தொகையை மட்டுமே அடிப்​படை​யாகக் கொள்ளாமல், பன்மைத்து​வ​மிக்க இந்தியாவின் பிரத்​யேகமான சமூக அரசியல் பொருளா​தாரக் காரணி​களையும் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டியது அவசியம்.

முதலா​வதாக, மக்கள்​தொகைப் பெருக்கம் - கட்டுப்பாடு என்பது நாட்டின் அனைத்துப் பகுதி​களிலும் சீராக இல்லை; மேலும், நகரமய​மாக்கம், கல்வி, வேலைவாய்ப்​புக்​காகப் புலம்​பெயர்தல் ஆகிய சமூக இயங்கு​முறைகள் (Societal Dynamics), பட்டியல் சாதி - பழங்குடியின மக்களின் பிரதி​நி​தித்துவம் நெடுங்​காலமாக உயர்த்​தப்​ப​டாமல் இருப்பது, மக்கள்​தொகைப் பெருக்​கத்தைக் கட்டுப்​பாட்டுக்குள் வைத்திருக்கும் தென்னிந்திய மாநிலங்​களுக்கான பிரதி​நி​தித்துவம் குறைக்​கப்​படும் என்கிற நியாயமான அச்ச உணர்வு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை நடைமுறைப்​படுத்​துதல், சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்​ளப்பட வேண்டும் ​என்கிற கோரிக்கை எனப் பல்வேறு சமூக - அரசியல் - பொருளாதார அம்சங்களை அடிப்படை​யாகக் கொண்ட ஆய்வுகள், கலந்தாலோ​சனைகள், கருத்​தொற்றுமை மூலமாக இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்த அணுகு​முறையாக இருக்​கும்.

1970களில் இருந்து மத்திய அரசின் மக்கள்​தொகை பெருக்கம் -கட்டுப்பாடு தொடர்பான கொள்கை முடிவுகளை ஏற்று, அதற்கான சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்​படுத்திய காரணத்தால் தென்னிந்திய மாநிலங்​களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒப்பீட்​டு அளவில் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில் 15ஆவது நிதி ஆணையம் 1971ஆம் ஆண்டு மக்கள்​தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளுக்குப் பதிலாக 2011ஆம் ஆண்டின் தரவுகளைப் பயன்படுத்தி மாநிலங்​களுக்கான வரி வருவாய் பகிர்​வுக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.

இதன் காரணமாக, தென்னிந்திய மாநிலங்கள் பெரும் நிதி நெருக்​கடியை எதிர்​கொண்டு​வரு​கின்றன. இதுபோன்றே, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை​யிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் கடுமையான பாதிப்​புக்கு உள்ளாகும் என்கிற கருத்து நிலவு​கிறது.

தீர்வை நோக்கிய பயணம்... மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் நாட்டின் அனைத்துப் பகுதி​களிலும் ஸ்திரத்​தன்மையை அடையும்வரை 1971 மக்கள்​தொகையின் அடிப்​படை​யிலேயே நாடாளு​மன்றத் தொகுதிகள் மறுசீரமைக்​கப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டு​களுக்கு இந்த ஏற்பாடு தொடரும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்​தங்கள் கொண்டு​வரப்பட வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவ விகிதம் பாதுகாக்​கப்பட வேண்டும். அதே வேளையில், தொகுதி மறுசீரமைப்பு என்பதைத் தென்னிந்திய மாநிலங்​களின் பிரச்சினை என்கிற அளவில் சுருக்​கி ​வி​டாமல், குடிமக்​களுக்கான அரசியல் பிரதி​நி​தித்துவ பிரச்சினை என்கிற விழிப்பு​ணர்வை உருவாக்கிட வேண்டும்.

தற்போது ஏற்பட்​டுள்ள நெருக்கடி குறித்​தும், அதற்கான அறிவியல்​பூர்வமான தீர்வுகளை அடைந்திட விரிவான பொது விவாதங்கள் தேசம் தழுவிய அளவில் முன்னெடுக்​கப்பட வேண்டும். மக்கள்​தொகை கட்டுப்​பாடு, அரசியல் பிரதி​நி​தித்துவம், வரி வருவாய் பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு போன்ற முக்கி​யத்துவம் வாய்ந்த விஷயங்​களில் மாநில அரசுகளின் கருத்​துக்​களுக்கு மத்திய அரசு முக்கி​யத்துவம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசத்தின் ஒற்றுமையை, ஒருமைப்​பாட்டை நிலைநிறுத்​தி​யுள்ள கூட்டாட்சி முறையை​யும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்​பையும் ​பாது​காத்திட அனைத்து அரசியல் கட்​சிகளும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டியதும் மிகவும் அவசியம்!

(அருண் அசோகன்)

இந்து தமிழ் திசை

https://www.hindutamil.in/news/opinion/columns/1354142-about-delimitation-exercise-for-lok-sabha-seats-explained-4.html?fbclid=IwY2xjawI_YxdleHRuA2FlbQIxMQABHae6WuO2l-5O5B3B-PmUvWgv5x08iiUvQ1Nrkf8XLAvqnELY0XQpTIdfSA_aem_FI6ADN3LdqIdzeqqLVqbOw

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு