போரில் அமெரிக்க AI சாதனங்களை பயன்படுத்தும் இஸ்ரேல் - இனி வாழ்வதும், மடிவதும் AI எடுக்கும் முடிவுகள்தான்
தமிழில்: விஜயன்

இன்று, யாரை உயிரோடு விடுவது, யாரைக் கொன்றொழிப்பது என்ற முடிவுகளை போரில் இஸ்ரேல் பயன்படுத்தும், அமெரிக்கத் தயாரிப்புச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நேரடியாகப் தீர்மானிக்கின்றன.
காசா மற்றும் லெபனானில், போராளிகள் எனக் கருதும் பலரைக் கண்டறிந்து, அவர்களை மிக விரைவாகக் கொல்வதற்குப் பெரிய பெரிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் சத்தமில்லாமல் உதவி வருகின்றன. இஸ்ரேல் தனது செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், கணினி சேவைகளின் பயன்பாட்டை மிகத் தீவிரமாக அதிகரித்தமையே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால், இதன் நேரடி விளைவாக, இஸ்ரேலால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை (சாதாரண மக்கள்) கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவு கருவிகளும் அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளனவோ என்ற கவலையும் பலரிடையே எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாகவே, இராணுவங்கள் தங்களுக்குத் தேவையான சிறப்புத் தானியங்கி ஆயுதங்களை உருவாக்குவதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு நிதியளித்து வந்துள்ளன. ஆனால், இஸ்ரேல் சமீபகாலங்களில் நடத்தி வரும் போர்களில் ஒரு புதிய, முக்கியமான போக்கு வெளிப்படுகிறது; அதாவது, அமெரிக்க நிறுவனங்களால் பொதுப் பயன்பாட்டிற்காகவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், யார் வாழ வேண்டும், யார் உயிரிழக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நோக்குடன் உருவாக்கப்படாதபோதிலும், இப்போது நேரடியாகப் போர்க் களத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இஸ்ரேலிய இராணுவம், செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, ரகசியச் செய்திகள், கண்காணிப்புக் காட்சிகள் உள்ளிட்ட பிரம்மாண்டமான தகவல் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்குரிய வகையில் பேசும் அல்லது செயல்படும் நபர்களைக் கண்டறியவும், அத்துடன் தனது எதிரிகளின் நகர்வுகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்துகிறது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் போராளிகள் நிகழ்த்திய பயங்கரமான திடீர் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் மைக்ரோசாஃப்ட் மற்றும் OpenAI கருவிகளின் பயன்பாட்டை கணிசமாக அதிகரித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த AI அமைப்புகள் இலக்குகளை எவ்வாறு தேர்வு செய்கின்றன, தவறான தரவுகளைப் பயன்படுத்துவது அல்லது செயலாக்கும் வடிவமைப்பில் உள்ள பிழைகள் போன்ற தவறுகளை அவை எவ்வாறு செய்யக்கூடும் என்பது குறித்த புதிய விவரங்களையும் அந்த பத்திரிகை செய்தி வெளிப்படுத்தியுள்ளது. ரகசிய ஆவணங்கள், ரகசிய தரவுகள் மட்டுமல்லாது இஸ்ரேலிய அரசு அல்லது அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தற்போது அல்லது முன்னர் பணியாற்றியவர்களுடனான தனிப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த பத்திரிகை செய்தி வெளிவந்திருந்தது.
"சாதாரண வணிகப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட கருவிகள் நேரடியாகப் போரில் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இதுவே எங்களிடம் உள்ள முதலாவது உறுதியான ஆதாரம்" என்று, AI Now இன்ஸ்டிட்யூட்டின் முன்னணி விஞ்ஞானியும், OpenAI நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புப் பொறியாளருமான ஹெய்டி க்லாஃப் (Heidy Khlaaf) குறிப்பிட்டார். மேலும் அவர், "இது மிகவும் முக்கியமானப் பிரச்சனை, ஏனெனில் எதிர்காலத்தில் மனிதகுலத்தின் நியாய தர்மங்களுக்கு எதிராக, சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான போரை நிகழ்த்த தொழில்நுட்பம் எவ்வாறு துணைபுரியக்கூடும் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என்றும் கூறினார்.
அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ள தகவல்கள் சில முக்கியமான கவலைகளை எழுப்புகின்றன. அதாவது, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் தானியங்கி சாதனங்களைப் பயன்படுத்தும் போர்களை சிலிக்கான் பகுதியிலுள்ள கர்ர்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு வடிமைக்கக்கூடும் என்பது பற்றிய கவலைகளை எழுப்புகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இஸ்ரேலிய இராணுவத்துடனான தனது தொழில் உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறது. மேலும், இஸ்ரேலில் என்ன நடந்தாலும், அது இந்த புதிய தொழில்நுட்பங்கள் பிற நாடுகளில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதையும் பாதிக்கக்கூடும்.
தனியார் நிறுவனத்தின் உள்விவகாரப் பதிவுகளில் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின்படி, இஸ்ரேலிய இராணுவம் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், ஓபன்ஏஐ நிறுவனமும் வழங்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என்பது கடந்த மார்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அக்டோபர் 7 தாக்குதலுக்கு முந்தைய ஒரு வாரக் காலப்பகுதியில் மட்டும், அதன் பயன்பாடு முன்னதாக இருந்த அளவை விட ஏறத்தாழ 200 மடங்கு அதிகமாகியிருக்கிறது. மேலும், அந்தக் காலகட்டத்திற்கும் ஜூலை 2024க்கும் இடைப்பட்ட காலத்தில், இஸ்ரேல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர்களில் சேமித்த தரவுகளின் அளவு இரு மடங்காகி, 13.6 பெட்டாபைட்டுகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த அளவு ஏறத்தாழ, அமெரிக்க நாடாளுமன்ற (லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்) நூலகத்திலுள்ள அனைத்துப் புத்தகங்களையும் சேமிப்பதற்குத் தேவைப்படும் டிஜிட்டல் இட அளவை விட 350 மடங்கு கூடுதலானதாகும். அத்துடன், போரின் முதல் இரண்டு மாதக் காலப்பகுதியில் மட்டும், மைக்ரோசாஃப்ட்டின் பிரம்மாண்டமான கணினிச் சேமிப்பு அமைப்புகளையும், செயலாக்க அமைப்புகளையும் இஸ்ரேல் பயன்படுத்துவது ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்காக அதிகரித்திருக்கிறது.
சுமார் 1,200 மக்களை படுகொலை செய்ததோடு, 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை நோக்கும் போது, இஸ்ரேலின் முதன்மையான நோக்கம் ஹமாஸை முழுமையாக அழித்தொழிப்பதுதான். இலக்குகளை மிக விரைவாகக் குறிவைப்பதற்கு செயற்கை நுண்ணறிவு உதவுவதால், இதை "போரின் போக்கையே மாற்றும் தொழில்நுட்பம்" (game changer) என்று இஸ்ரேலிய இராணுவம் வர்ணித்துள்ளது. காசா மற்றும் லெபனானில் உள்ள சுகாதாரத் துறைகளின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து, காசா மற்றும் லெபனான் இரண்டிலும் 50,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; மேலும், காசாவில் உள்ள கட்டிடங்களில் ஏறத்தாழ 70% தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவத்தில் தற்போது பணியாற்றுபவர்கள் அல்லது முன்னர் பணியாற்றிய ஆறு பேருடன் நடத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இவர்களில், துணை இராணுவப் படையில் (reservists) உள்ள மூன்று உளவுத்துறை அதிகாரிகளும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர், இரகசிய இராணுவப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாகப் பேச அனுமதி இல்லாத காரணத்தால் தங்கள் பெயர்களை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச ஒப்புக்கொண்டனர்.
மைக்ரோசாஃப்ட், OpenAI, கூகிள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் அல்லது முன்பு பணிபுரிந்த 14 பேருடனும் AP செய்தி நிறுவனம் பேட்டியெடுத்தது. தங்கள் பணியை இழக்கவோ அல்லது வேறு பின்விளைவுகளைச் சந்திக்கவோ நேரிடும் என்பதால் இவர்களில் பெரும்பாலானோர், தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். நிறுவனத்தின் உள் தரவுகளையும், ஆவணங்களையும் AP பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்தனர்; இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 133 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் விவரங்களைக் கொண்ட ஒரு ஆவணமும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்கள்.
இலக்குகளை அடையாளம் காண்பதற்கு உதவும் உளவுப் பிரிவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்றபோதிலும் கண்காணிக்கும் மனிதர்களும், உயர்மட்ட அதிகாரிகளும் இந்த இலக்குகள் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்பதை மிகுந்த கவனத்துடன் உறுதிசெய்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இலக்கைத் தாக்குவதால் கிடைக்கும் இராணுவப் பலனுக்கும், அருகாமையில் உள்ள பொதுமக்களுக்கோ பிறசொத்துக்களுக்கோ எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கும் இடையிலான ஒப்பீட்டாய்வுக்கூட மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எதிரிப் போராளிகளும், அந்தப் போராளிகளால் பயன்படுத்தப்படும் கட்டிடங்களும், அவற்றின் இருப்பிடமும் எங்கிருந்தாலும் அவை அனைத்தையுமே இராணுவத்தால் சட்டப்படி குறிவைக்க முடியும் என்று அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாகப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஓர் உயர்மட்ட இஸ்ரேலிய உளவு அதிகாரி கூறியுள்ளார். இவற்றில் செயற்கை நுண்ணறிவின் பங்கு இருந்தபோதிலும், பல நிலைகளில் இறுதி முடிவுகள் மனிதர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
"இந்த AI கருவிகள் உளவு நடவடிக்கைகளை மேலும் துல்லியமாகவும், திறம்படவும் மேம்படுத்த உதவுகின்றன" என்று இஸ்ரேலிய இராணுவம் AP- ஊடகத்திற்கு அளித்த ஓர் செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "அவை(AI கருவிகள்) அதிக எண்ணிக்கையிலான இலக்குகளை துல்லியத்தன்மை குறையாமல் மிக விரைவாகக் கண்டறிய உதவுகின்றன. இந்தப் போரின் பல சூழல்களில், பொதுமக்கள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவை உதவியுள்ளன". அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த AP-செய்தி நிறுவனம் எழுத்துப்பூர்வமாக, விரிவாக கேட்ட கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை.
இந்தச் செய்தி அறிக்கை குறித்து, மைக்ரோசாஃப்ட் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது வழங்கும் கிளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் பற்றி எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட விரிவான கேள்விகளுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பதிலளிக்கவில்லை. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் நேர்மறையான பயன்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகக் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான 40 பக்க 'பொறுப்பான AI வெளிப்படைத்தன்மை அறிக்கை'யில், செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின்போது எழும் அபாயங்களை, 'தீங்கு ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்' விதத்தில் செயல்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. ஆனால், அந்த அறிக்கையில் லாபம் கொழிக்கும் இராணுவ ஒப்பந்தங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.
OpenAI (ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனம்) உருவாக்கியவை உட்பட, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் எல்லாம் மைக்ரோசாஃப்ட்டின் அஜூர் (Azure) கிளவுட் தளம் வழியாகவே இஸ்ரேலுக்கு வழங்கப்படுகின்றன என்பதையே ஆவணங்களும் தரவுகளும் தெளிவாக உணர்த்துகின்றன. இந்தத் தளத்தைப் பயன்படுத்தியே இஸ்ரேலிய இராணுவம் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்கிறது. மேலும், மைக்ரோசாஃப்ட்தான் OpenAI-ன் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்குகிறது.
இஸ்ரேலிய இராணுவத்துடன் தங்களுக்கு எந்த நேரடி ஒப்பந்தமும் இல்லை என்று OpenAI கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளைப் பயன்படுத்தி ஆயுதங்களைத் தயாரிக்கவோ, கட்டிடங்களை இடிக்கவோ, அல்லது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ அனுமதி இல்லை என்று அதன் விதிமுறைகள் கூறுகிற போதிலும், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பே, தனது சேவை விதிமுறைகளை OpenAI மாற்றிவிட்டது. முன்னர், இராணுவப் பயன்பாட்டை அப்பட்டமாகத் தடை செய்வதாக அதன் விதிமுறைகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, பயன்பாட்டின் நோக்கங்கள் OpenAI-ன் குறிக்கோள்களுடன் பொருந்திப் போகிற பட்சத்தில், அதாவது 'தேசப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக' இராணுவப் பயன்பாட்டை அனுமதிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களில் எப்போது பிழைகள் நேர்கின்றன என்பதைத் துல்லியமாக அறிவது மிகக் கடினம். ஏனெனில், இந்த சாதனங்கள் பெரும்பாலும் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் போன்ற பிற வகையான நுண்ணறிவுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், இவை ஒருங்கிணைந்து செயல்படும்போது, பாதிக்கப்படவே கூடாத அப்பாவி உயிர்கள்கூட சில சமயங்களில் பலிகொடுக்கப்படும் நிலையும் உருவாகின்றன.
2023 நவம்பரில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையருகே மோதல் வெடித்தது; இஸ்ரேலியப் படைகளும், ஹமாஸை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் இந்த மோதலில் ஈடுபட்டிருந்தன. ஹோடா ஹிஜாஸி என்பவர் தனது மூன்று மகள்களுடனும், தனது தாயாருடனும் தாக்குதல் பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, அவர்களின் கார் மீது குண்டு வீசப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது.
வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு, மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலிய ட்ரோன்கள் குழந்தைகள் தங்களுடன் இருப்பதை கவனித்தால், குடும்பத்தினரை அச்சுறுத்தலாகக் கருதாது என்ற நம்பிக்கையில், பெரியவர்கள் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாடச் சொன்னார்கள். ஹோடாவும் அவரது குடும்பத்தினரும், இடதுசாரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய பத்திரிகையாளரான அவரது மாமா சமீர் அயூபுடன் சேர்ந்து காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஹோடா ஹிஜாஸி(மூன்று குழந்தைகளின் தாய்) தனது காரை சமீர் அயூபின் காருக்கு அருகிலேயே ஓட்டி வந்தார். அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களுக்கு மிக அருகில் மேலே பறந்த ஒரு ட்ரோனில் இருந்து மிக உரத்த, அதிவேக இரைச்சல் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்திலேயே, ஹோடா ஓட்டிச் சென்ற கார் வான்வழியாகத் தாக்குதலுக்கு உள்ளானது. கார் சாலையிலிருந்து விலகி, ஒரு சரிவில் உருண்டு, தீப்பிடித்து எரிந்தது. எரிந்து கொண்டிருந்த காரிலிருந்து ஹோடாவை வெளியே இழுத்து அவரது மாமா அயூப் காப்பாற்றினார். ஆனால், ஹோடாவின் தாயார்—அயூபின் சகோதரி—மற்றும் ஹோடாவின் மூன்று மகள்கள், ரிமாஸ் (14 வயது), டாலின் (12), மற்றும் லியான் (10), ஆகியோர் கொல்லப்பட்டனர்.
வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு, கொல்லையில் இருந்த பூனைகளை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு மகள் அடம்பிடித்ததாக ஹோடா ஹிஜாஸி நினைவு கூர்ந்து பேசினார். "ஒருவேளை நாம் பூனைகளை மீண்டும் பார்க்க முடியாமல்கூட போய்விடும், " என்பதால் அவள் என்னிடம் அடம்பிடித்ததாள்.
முடிவில் பாருங்கள், "பூனைகள் உயிர் பிழைத்தன, ஆனால் குழந்தைகள் கொல்லப்பட்டனர்" என்று ஹோடா ஹிஜாஸி கூறினார்.
ஒரு சிறிய கடையின் பாதுகாப்புக் கேமராப் பதிவில், தாக்குதலுக்குச் சற்று முன்பாக ஹூண்டாய் எஸ்யூவி வாகனத்தில் ஹிஜாஸி குடும்பத்தினர் காணப்பட்டனர். அந்தக் காணொளியில், தாயும் ஒரு மகளும் வாகனத்தில் தண்ணீர்க் கேன்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்ததை இஸ்ரேலிய ட்ரோன்கள் நிச்சயம் கண்டிருக்க வேண்டும் என்பதற்கு இந்த காணொளியே சாட்சி என்று அக்குடும்பத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர். தாக்குதல் நிகழ்ந்த அடுத்த நாள், இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் இடம்பெற்ற தருணத்தைக் காட்டும் காணொளியையும், அதனுடன் ஒத்துப்போகும் பிற காணொளிகளையும் புகைப்படங்களின் தொகுப்புடன் வெளியிட்டது. இந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்ட செய்தியில், இஸ்ரேலிய போர் விமானங்கள் "450க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய ராணுவக் காணொளியில் தென்பட்ட சாலையையும் அருகிலுள்ள அடையாளங்களையும், மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. அந்த இடம் கடையிலிருந்து சுமார் 1 மைல் (1.7 கிலோமீட்டர்) தொலைவில் இருந்தது தெரிய வந்தது.
ஒரு இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்குகளைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இந்நிகழ்விலும், அநேகமாகச் செயற்கை நுண்ணறிவு ஒரு வீட்டை இலக்காக அடையாளம் கண்டிருக்கக்கூடும், தகவல்களைச் சேகரிக்கும் பிற வழிகள் யாரோ(எதிரிகள்) உள்ளே இருந்ததைக் காட்டியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். அப்படியொரு தருணத்தில், அந்தக் கார் அவ்வீட்டிலிருந்து வெளியேறியிருக்கலாம்.
இலக்கு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்த அறையில் இருந்தவர்களே தாக்குதலைத் தொடங்குவதற்கான இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கக்கூடும். இந்தப் பிழை எந்தக் கட்டத்திலும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். ஒருவேளை, பிழையான தகவல் தவறான வீட்டைக் குறிவைத்திருக்கலாம் அல்லது தவறுதலாக வேறு வாகனத்தின் மீது அவர்கள் தாக்குதல் தொடுத்திருக்கலாம்.
இந்த வான்வழித் தாக்குதல் குறித்துத் தெரிந்திருந்த மற்றொரு நபரிடமிருந்த செய்தியையும் அசோசியேட்டட் பிரஸ் (AP) சேகரித்தது. அந்நபர் இது தவறுதலாக நடந்த தாக்குதல்தான் என்பதை உறுதிப்படுத்தினார், ஆயினும் மேலதிக விவரங்கள் எதையும் பகிரவில்லை.
இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், உண்மையான வான்வழித் தாக்குதலின் போது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இருப்பினும், AI இலக்கைத் தேர்வு செய்ய உதவியதா அல்லது AI அமைப்பில் ஏதேனும் குறுக்கீடு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியான பதில் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக இராணுவம் AP செய்தி நிறுவனத்திடம் கூறியதோடு, "ஏற்பட்ட விளைவுக்காக வருந்துவதாகவும்" தெரிவித்தனர்.
மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐ உட்படப் பல அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள், அண்மைய ஆண்டுகளில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் துணை நின்றுள்ளன.
கூகிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் "புராஜெக்ட் நிம்பஸ்" என அறியப்படும் ஒரு திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேகக் கணிம(கிளவுட் கம்ப்யூட்டிங்) சேவைகளையும், செயற்கை நுண்ணறிவு சேவைகளையும் அளித்து வருகின்றன. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஓர் ஒப்பந்மும் 2021ல் கையெழுத்திடப்பட்டது. இதே காலகட்டத்தில்தான் இஸ்ரேல் தனது சொந்த AI அடிப்படையிலான இலக்குகளைத் தீர்மானிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. சிஸ்கோ(cisco) மற்றும் டெல்லிடமிருந்து தரவு மையங்களையும் (பெரிய கணினி அமைப்புகள் பராமரிக்கப்படும் இடங்கள்) இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தியுள்ளது. IBM-இன் கீழ் செயல்படும் தனி நிறுவனமான ரெட் ஹாட், இஸ்ரேலிய இராணுவத்திற்கு கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் திட்டங்களில் மைக்ரோசாஃப்ட்டுடன் இணைந்து செயல்படும் பாலண்டீர் டெக்னாலஜிஸ், இஸ்ரேலுடன் ஓர் பிரத்யேக ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் போர்ப் பணிகளுக்கு உதவும் AI சாதனங்களை வழங்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவை (AI)ப் பொறுப்புணர்வுடன் உருவாக்கி, பயன்படுத்தி வருவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாங்கள் உருவாக்கும் AI கருவிகள் மக்களைப் பாதுகாப்பதோடு, உலகளாவிய வளர்ச்சிக்குப் பங்களித்து, ஒவ்வொரு தேசத்தின் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக நிற்கிறது என்று கூறியிருக்கிறது. இஸ்ரேல் உட்பட உலகின் அனைத்து அரசுகளுடனும், நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படும்போது, மிக உயர்ந்த அறநெறிமுறைகளையும் தரநிலைகளையும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் டெல் நிறுவனம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தங்களது வாடிக்கையாளர்கள், ரெட் ஹாட்டின் விதிமுறைகளையும் தத்தமது நாடுகளின் சட்டங்களையும் பின்பற்றிச் செயல்படும் வரையில், அவர்களைப் பற்றித் தாங்கள் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார் ரெட் ஹாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அலிசன் ஷோவால்டர்.
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பாலண்டீர், சிஸ்கோ, ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை. அமேசான் நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இஸ்ரேலிய இராணுவம், மைக்ரோசாஃப்ட்டின் அஸூர் (Azure) கிளவுட் அமைப்பைப் பயன்படுத்தி, பரவலான மக்கள் கண்காணிப்பின் மூலம் திரட்டப்படும் தகவல்களைச் சேகரித்து நிர்வகித்து வருகிறது என்று ஓர் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி கூறியிருக்கிறார். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் (SMS), குரல் பதிவுகள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன; இந்த AI அமைப்பு இத்தகவல்களை எழுத்துவடிவில் பதிவாக்கி மொழிபெயர்க்கவும் செய்கிறது. இவ்வாறு திரட்டப்படும் தரவுகள், இராணுவத்தின் இலக்குகளைத் தீர்மானிக்க உதவும் அவர்களது சொந்த AI அமைப்புகளுடன் பின்னர் ஒப்பிட்டு சரிப் பார்க்கப்படலாம். அதேபோல, இராணுவத்தின் இலக்குகளைத் தீர்மானிக்கும் அமைப்புகள் கண்டறியும் தகவல்களையும், திரட்டப்பட்ட தகவல்களோடு ஒப்பிடுவதும் நிகழலலாம்.
அஸூரைப் பயன்படுத்துவதன் மூலம், எண்ணிலடங்கா உரைத் தொகுதிகளில் உள்ள சொற்களையும் வடிவங்களையும் மிக விரைவாக கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக, ஐம்பது பக்க ஆவணத்தினுள் மறைந்து கிடக்கும் இருவருக்கிடையேயான உரையாடலையும் அஸூரால் அடையாளம் காண இயலும். மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது இடத்தைக் குறிக்கும் தருணங்களையும் இந்த அமைப்பு இனங்காண வல்லது. துல்லியமான இடங்களைக் கண்டறிய இராணுவத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுடன், இந்தத் தகவலை, ஒப்பிட்டுச் சரிபார்க்க முடியும் என்று அந்த அதிகாரி மேலும் விளக்கினார்.
அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) ஆய்வு செய்த தரவுகளின்படி, அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் பேச்சு மற்றும் எழுத்து வடிவத் தகவல்களைப் பதிவு செய்யும்(transcribe), மொழிபெயர்ப்பு (translate) செய்யும் கருவிகளையும், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளையும் பயன்படுத்தி வருகிறது. எனினும், அவர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட மாதிரிகள் எவை என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. பொதுவாக, மொழிமாற்றத்திற்கான, மொழிபெயர்ப்புக்கான செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் ஆங்கிலத்திலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. அரபிக் உட்பட பல மொழிகளிலும் பதிவுத்திறன், மொழிபெயர்ப்புத் திறன் கொண்ட, பரவலாக அறியப்பட்ட ஓப்பன்ஏஐயின் 'விஸ்பர்' (Whisper) கருவி, சில சமயங்களில் உண்மையில் சொல்லப்படாத வார்த்தைகளைத் தானாகவே சேர்த்துவிடுகிறது என்பதை ஓப்பன்ஏஐ நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. அது தற்செயலாக இனவெறி சார்ந்த அல்லது வன்முறை மொழியைக்கூட அதன் உள்ளீட்டில் புகுத்திவிடுகிறதாம்.
“செயற்கை நுண்ணறிவு தானாகவே உருவாக்குவதாகத் தோன்றும் விஷயங்களின் அடிப்படையில் நாம் ஏன் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கலிஃபோர்னியா, மான்டேரி நகரில் உள்ள கடற்படை முதுகலைப்பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராகப் பணிபுரியும் ஜோஷுவா க்ரோல் கேள்வி எழுப்புகிறார். இக்கருத்தை அவர் தனது தனிப்பட்ட பார்வையாகவே தெரிவித்தார்; இது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்படும் எந்தவொரு தொலைபேசி உரையாடலாக இருந்தாலும் சரி, அல்லது ஓர் இலக்கைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் எந்தவொரு உளவுத் தகவலாக இருந்தாலும் சரி, அவற்றை அரபு மொழி நன்கு தெரிந்த ஒரு அதிகாரியால் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. ஆயினும், இந்த இலக்கு நிர்ணயம் செய்யும் AI அமைப்புகளிலும், பிற தொழில்நுட்பங்களிலும் அனுபவம் வாய்ந்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படும்போது பல்வேறு காரணங்களால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஓர் உளவு அதிகாரி குறிப்பிட்டது போல், அரபியிலிருந்து ஹீப்ருவுக்கு நடந்த தவறான இயந்திர மொழிபெயர்ப்புகளால் இலக்கு நிர்ணயம் செய்வதில் பிழைகள் நேர்ந்ததைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.
சில சமயங்களில், ஒரு தனிநபரின் சுயவிவரத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பிழையாக அமையக்கூடும். உதாரணமாக, அரபு மொழியில், ஒரு ராக்கெட் லாஞ்சரின் குழாயைத் தாங்கிப்பிடிப்பதைக் குறிக்கும் சொல்லும், 'பணம் செலுத்துதல்' என்பதற்கான சொல்லும் ஒன்றே. ஒரு சந்தர்ப்பத்தில், இயந்திர மொழிபெயர்ப்பு இச்சொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டு மொழிபெயர்த்தது; அந்த மொழிபெயர்ப்பைச் சரிபார்த்தவரோ ஆரம்பத்தில் இப்பிழையைக் கவனிக்கத் தவறினார். இதன் காரணமாக, உண்மையில் பணப் பரிவர்த்தனைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தவர்கள்கூடத் தவறாக இலக்குகள் பட்டியலில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இப்பிழை நிகழ்ந்த சமயத்தில், தாம் அங்கு பணியில் இருந்ததாகவும், அதைத் தாமே கண்டறிந்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிடுகையில் தெரிவித்தார்.
வேறொரு சம்பவத்தில், கணினித் தகவல் தொகுப்பு ஒன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பட்டியலைச் போராளிகளாக இருக்கக்கூடும் எனத் தவறாக அடையாளம் கண்டதாக அந்த அதிகாரி கூறினார். பலரின் சுயவிவரங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஓர் எக்செல் கோப்பு, அரபு மொழியில் 'பைனல்ஸ்-Finals' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவோ காசாவின் ஒரு பகுதியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சுமார் ஆயிரம் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஆகும். இந்த நபர்களின் கோப்புகளுடன் இணைக்கப்பட்ட ஒரேயொரு 'ஆதாரம்' இது மட்டும்தான் என அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால் இதுவொன்றை வைத்து மட்டுமே போராளிகளாக இருக்கக்கூடும் என்று AI தவறாக அடையாளப்படுத்திவிட்டதாகக் கூறினார். அவர் இப்பிழையைக் கண்டறியத் தவறியிருந்தால், அந்தப் பாலஸ்தீனிய மாணவர்கள் தவறாக ஆபத்தானவர்களாகக் குறிவைக்கப்பட்டிருக்கக்கூடும்.
ஒரு தனிநபரின் சுயவிவரத்துடன் பதிவுசெய்யப்பட்டு இணைக்கப்படும் தொலைபேசி அழைப்புகளில், அழைப்பு நேரம், பேசியவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களும் அடங்கும். எனினும், அந்த அழைப்பின் முழுமையான சாராம்சத்தைப் புரிந்துகொள்ள, அதன் மூல ஒலிப்பதிவைக் கேட்பதோ அல்லது கூறப்பட்டவற்றின் மொழிபெயர்க்கப்பட்ட வடிவத்தைப் படிப்பதோ போன்ற மேலதிக முயற்சியும் தேவைப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இலக்குகளை அதிவிரைவாகக் கண்டறியும் அழுத்தத்திற்கு இளம் அதிகாரிகள் – அவர்களில் சிலர் இருபது வயதிற்கும் குறைவானவர்கள் – உள்ளாகக்கூடும் எனவும், போதுமான சரிபார்ப்பின்றி அவசரத்தில் முடிவுகளை எடுத்துவிடக்கூடும் எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
இலக்குகளை தீர்மானிக்கும் அமைப்புகளில் பணியாற்றிய மற்றொரு சிப்பாய் ஒருவர், செயற்கை நுண்ணறிவு மட்டும் பயன்படுத்துவது பிழையான தீர்மானங்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டார். உதாரணமாக, ஹமாஸுடன் தொடர்பில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான ஓர் இல்லத்தை - அந்நபர் தற்போது அங்கே வசிக்கவில்லை என்றாலும்கூட - அந்த இல்லத்தை குறிவைக்கப்பட வேண்டியவையாக செயற்கை நுண்ணறிவு அடையாளம் காட்டக்கூடும். அந்த இல்லத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, உள்ளே யார் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை மனிதர்கள் கட்டாயம் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும் என்று அந்தச் சிப்பாய் வலியுறுத்தினார்.
"நிச்சயமாக, நான் குற்ற உணர்விற்கு உள்ளாகாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன; எனினும், இலக்குகளை குறிவைத்துத் தாக்கும் சம்பவங்களில் நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டிய தருணங்களும் இருக்கத்தான் செய்தன" என்று அந்தச் சிப்பாய் அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "இதுதான் போர் — காரியங்கள் பிழையாகப் போகலாம், தவறுகள் நேரிடலாம்; மேலும், நாம் வெறும் மனிதர்கள் தானே" என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவத்தில் பத்தாண்டுகள் துணை இராணுவ சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய டால் மிம்ரான், போரில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்த மூன்று நேட்டோ பணிக் குழுக்களிலும் பங்கேற்றவராக அறியப்படுகிறார். கடந்த காலங்களில், ஒரேயொரு வான்வழித் தாக்குதலை மறுஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்கு, சுமார் இருபது பேர் கொண்ட குழுவுக்கு ஒரு முழு நாளோ அல்லது அதற்கும் அதிகமாகவோ ஆகக்கூடும் என்று அவர் கூறினார். ஆனால் இப்போதோ, செயற்கை நுண்ணறிவு கருவிகளின் துணையுடன், இராணுவம் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்கி வருகிறது.
மிம்ரானின் கருத்துப்படி, செயற்கை நுண்ணறிவை (AI) அதீதமாகச் சார்ந்திருக்கும் போக்கு, மக்களிடையே ஆழமாகப் பதிந்திருக்கும் ஒருபக்கச் சார்பான நம்பிக்கைகளை மேலும் வலுப்பெறச் செய்யும். இணையம் மற்றும் கணினி அமைப்புகளுக்கான விதிமுறைகள், நெறிமுறைகளைக் கற்பிக்கும் நிபுணரான மிம்ரான் தொடர்ந்து குறிப்பிட்டதாவது: "உறுதிப்படுத்துவதில் ஒருபக்க சார்புநிலை (Confirmation bias) என்ற மனக்கோணல் காரணமாக, மக்கள் சுயமாக ஆராய்ந்து தெளிவதைத் தவிர்க்கக்கூடும். அவர்களுள் சிலர் அந்த கூடுதல் முயற்சியைச் செய்யத் தயங்குவார்கள்; மறுபுறம் சிலரோ, தாங்கள் பிழைபட்டு விடுவோமோ எனும் அச்சத்தால், செயற்கை நுண்ணறிவுச் சுட்டிக்காட்டுதல்களுடன் மாறுபட அஞ்சுவார்கள்" என்றார்.
பெரும் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், இஸ்ரேலிய ராணுவத்துடன் பல ஆண்டுகளாக நெருங்கிய கூட்டணியைப் பேணி வந்துள்ளது.
ஹமாஸின் தாக்குதலுக்குப் பின்னர், அந்தத் தொழில்நுட்பக் கூட்டணி, பிற நிறுவனங்களுடனான தொடர்புகளுடன் இணைந்து, மேலும் வலுப்பெற்றது. இஸ்ரேல் போர்ச் சூழலுக்கு எதிர்வினையாற்றியபோது, அதன் சொந்தக் கணினி அமைப்புகள் மீது ஏற்பட்ட அதீதப் பயன்பாட்டுச் சுமையால், பெருமளவில் அந்நிய நிறுவனங்களைச் சார்ந்திருக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு ராணுவத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஆற்றிய உரையொன்றின் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது. காசாப் போரில் செயற்கை நுண்ணறிவு இஸ்ரேலுக்கு எவ்வாறு பேரளவில் உதவியது என்பதை அவர் விவரித்தபோது, அவரது பின்னணியில் அமைந்திருந்த பெரிய திரையில் மைக்ரோசாஃப்ட் அஸூர், கூகிள் கிளவுட் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் ஆகிய பகாசுர நிறுவனங்களின் சின்னங்கள் தெளிவாகத் தெரிந்தன.
"உண்மையிலேயே எங்கள் அமைப்புகள் இதனைச் சார்ந்தே இயங்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது," என்று கர்னல் ரஷேலி டெம்பிங்ஸ்கி கூறினார். இவர் இஸ்ரேலின் கணினி மற்றும் தகவல் அமைப்புகள் மையத்தின் (இதன் ஹீப்ரு சுருக்கப் பெயர் மம்ராம்) தலைவராக உள்ளார்.
2021 ஆம் ஆண்டில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு 133 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) ஆய்வு செய்த ஓர் ஆவணத்தின்படி, இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகளவில் மைக்ரோசாஃப்ட்டின் இரண்டாவது பெரிய இராணுவ வாடிக்கையாளராக மாற்றியிருந்தது. இஸ்ரேலிய இராணுவத்தை “S500” என்ற குறியீட்டில் முக்கிய வாடிக்கையாளராகப் மைக்ரோசாஃப்ட் வகைப்படுத்தியுள்ளது. உலகளவில் இராணுவ ரீதியாக மிக உயரிய முன்னுரிமை பெற்ற, மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒன்று என்பதனை இந்த வகைப்பாடு உணர்த்துகிறது.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் மைக்ரோசாஃப்ட்டிற்கும் இடையிலான சேவை ஒப்பந்தங்கள், குறைந்தது 635 தனித்தனி சந்தாக்களை உள்ளடக்கியுள்ளன. இச்சந்தாக்கள், குறிப்பிட்ட இராணுவத் துறைகள், அணிகள், இராணுவத் தளங்கள் அல்லது இரகசியத் திட்டப் பெயர்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏபி செய்தி நிறுவனம் ஆய்வு செய்த சந்தாப் பெயர்களில் “மம்ராம்”, “8200” போன்ற சிலவும் காணப்பட்டன. யூனிட் 8200 என்பது இஸ்ரேலிய இராணுவத்தில் இயங்கும் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களை கொண்டதற்காகப் பரவலாக அறியப்படும் ஒரு சிறப்புப் புலனாய்வுப் பிரிவாகும்.
அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு சுமார் இரண்டு வாரங்களில், மைக்ரோசாஃப்ட்டின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையான அஜூர் மூலமாக ஓர் அவசர ஆதரவுக் கோரிக்கை ஒன்றை இஸ்ரேல் இராணுவம் மைக்ரோசாஃப்ட்டுக்கு அனுப்பியது. போர் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால், திட்டமிடப்பட்டிருந்த எந்தப் பராமரிப்புப் பணிகளையும் இந்த ஆண்டு முடியும் வரைக்கும் தாமதப்படுத்துமாறு இந்தக் கோரிக்கையின் மூலம் மைக்ரோசாஃப்டிடம் கேட்டுக்கொண்டது. குறுகிய கால AI சாதனங்கள் செயலிழப்பு கூட, உயிர்காக்கும் முக்கிய அமைப்புகளை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்று இராணுவம் குறிப்பிட்டிருந்தது. இந்தக் கோரிக்கை “க்ளிலோட் – 8200” இலிருந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. க்ளிலோட் என்பது 8200 பிரிவு செயற்படும் ஒரு அதிக பாதுகாப்புமிக்க இராணுவத் தளமாகும். இப்பிரிவு, இரகசியப் பணிகளைக் கையாள்வதோடு, தகவல் தொடர்பு சிக்னல்களில் இருந்து தகவல்களைச் சேகரிப்பது, குறியீடுகளை உடைப்பது, இணையத் தாக்குதல்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது.
போரின் முதல் 10 மாதங்களில், இஸ்ரேலிய ராணுவத்திடமிருந்து சுமார் 130 நேரடிக் கோரிக்கைகளுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய அஸூர் ஊழியர் குழு தீர்வளித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஆலோசனை சேவைகள் பிரிவும் இஸ்ரேலிய ராணுவத்துடன் நெருக்கமாகச் செயல்படுகிறது. ஓர் உள் ஆவணத்தின்படி, ஆலோசனை சேவைகள் பிரிவின் மொத்த வருமானத்தில் பாதி ராணுவத்திடமிருந்தே கிடைத்துள்ளது.
இஸ்ரேலில், ராணுவத்தின் கணக்குகளை மட்டுமே கவனிப்பதற்காக, குறைந்தது ஒன்பது மைக்ரோசாஃப்ட் ஊழியர்களைக் கொண்ட பிரத்யேகக் குழு ஒன்று உள்ளது. இக்குழுவில், நன்கு அறியப்பட்ட இஸ்ரேலிய உளவுப் பிரிவான யூனிட் 8200இல் முன்பு 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒரு உயர்மட்ட மேலாளரும், ராணுவ உளவுத் துறையில் தகவல் தொழில்நுட்ப (IT) தலைவராக இருந்த மற்றொருவரும் பணியாற்றி வருகிறார். இது அவர்களின் ஆன்லைன் சுயவிவரங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.
மைக்ரோசாஃப்ட் தனது தரவுகளை, டெல் அவிவ் நகருக்குச் சற்று வெளியே அமைந்துள்ள பெரிய சேவையகக் கட்டிடங்களில் சேமிக்கிறது. இக்கட்டிடங்கள் பாதுகாப்பிற்காக உயரமான சுவர்களாலும் முள் கம்பிகளாலும் வேலியிடப்பட்டுள்ளன. மேலும், டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள ஹெர்லியாவில் 46,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரதான அலுவலக வளாகம் ஒன்றையும், தெற்கு இஸ்ரேலில் உள்ள காவ்-யாம் என்ற இடத்தில் மற்றொரு அலுவலகத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டுள்ளது. காவ்-யாம் என்ற இடத்தில் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது. 2021 இன் தொடக்கத்தில், கோஸ்பெல் எனப்படும் ஓர் AI அமைப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதிக அளவிலான டிஜிட்டல் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, தாக்குதலுக்கான சாத்தியமான இலக்குகளைப் பரிந்துரைக்கவும் இது உதவுகிறது. ராணுவத்தால் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பு லாவெண்டர் என அழைக்கப்படுகிறது. இது இயந்திர கற்றலைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வடிப்பான்களைக்(Filters) கொண்டு உளவுத் தரவுத்தளங்களில் தேடவும், தனிநபர்கள் உட்பட சாத்தியமான இலக்குகளின் குறுகிய, குறிப்பான பட்டியல்களை உருவாக்கவும் உதவுகிறது.
லாவெண்டர் அமைப்பைப் பயன்படுத்திய ஓர் உளவுத்துறை அதிகாரி உரைத்தபடி, ஒருவரைத் தீவிரவாதச் சார்பு கொண்டிருக்கக்கூடிய சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு 0 முதல் 100 வரை மதிப்பெண் வழங்கும் முறையைத்தான் லாவண்டர் என்கிறார்கள். அவ்வலுவலர் விவரித்தபடி, ஒருவரின் குடும்பப் பின்னணி - எடுத்துக்காட்டாக, தந்தையானவர் தீவிரவாதத் தொடர்புடன் அறியப்பட்டுச் சிறை சென்றிருத்தல் - மற்றும் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் போன்ற தரவுகளின் அடிப்படையிலும் இக்கணக்கீடு அமைகிறது. 2021 மே மாதத்தில், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மீது பதினொரு நாட்கள் நீடித்ததொரு குண்டுவீச்சு தாக்குதலைத் தொடங்கியது. இதனையே உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் 'முதல் செயற்கை நுண்ணறிவுப் போர்' என்று விவரித்தனர். அப்பொழுது, செயற்கை நுண்ணறிவின் (AI) துணையோடு, முந்தையச் சண்டைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வான்வழித் தாக்குதல்களை நடத்த முடிந்ததாகவும், இதன் வாயிலாகத் தமது நடவடிக்கைகள் பெரும் வீச்சையும் வலிமையையும் பெற்றதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் இணையப் பதிவினில், போரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் விளையும் பாரிய அபாயங்களையும் இஸ்ரேலிய இராணுவம் தெளிவுபடுத்தியது. 'இணைய விளம்பரமோ அல்லது காணொலி விளையாட்டுக்களோ போன்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், உளவுத் துறையில் பிழையான முடிவுகள் மனித உயிர்களைப் பலி கொள்ள வழிவகுக்கக்கூடும்,' என்று அப்பதிவு எடுத்துரைத்ததது. மேலும், மக்களின் உரையாடல்களில் பொதிந்துள்ள உணர்வு நிலைகளைப் பகுத்தறிய இராணுவம் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அதே பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருப்பினும், வட்டார வழக்குகள், சிறப்புக் கலைச்சொற்கள் அல்லது மக்கள் பேசும் தொனியில் உள்ள உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொள்வதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக, இம்முறை பெரும்பாலும் தோல்வியுறக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே நிலவும் தொடர்பு, அமெரிக்காவிலும் அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அங்கும் சில பணியாளர்கள், தங்கள் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரண்டு ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியது. மதிய உணவு இடைவேளையின் போது, பாலஸ்தீன அகதிகளுக்கு ஆதரவாக ஒரு சிறிய, அதிகாரப்பூர்வமற்ற நிகழ்வை ஏற்பாடு செய்ய அவர்கள் உதவியதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் நகரில் அமைந்திருக்கும் மைக்ரோசாஃப்டின் பிரதான அலுவலகத்தில் நடந்தேறியது. அப்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிறுவன விதிகளை அடிப்படையாகக் கொண்டே சில ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாகக் கூறியது. இருப்பினும், இது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் அது வெளியிடவில்லை.
மைக்ரோசாஃப்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஹோஸாம் நாசர், தற்போது “இனவெறிக்கு அஜூர் தேவையில்லை” (No Azure for Apartheid) என்ற பெயரிலான ஒரு குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவரும் மற்றவர்களும் இணைந்து, மைக்ரோசாஃப்ட் இஸ்ரேலிய இராணுவத்திற்கு அதன் கிளவுட் சேமிப்பு (cloud storage) சேவைகளையும், செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளையும் விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென போராடி வருகின்றனர். “கிளவுட் சேவையும், செயற்கை நுண்ணறிவும்தான் இன்றைய உலகில் புதிய ஆயுதங்கள்” என்று நாசர் குறிப்பிட்டுள்ளார். “மைக்ரோசாஃப்ட், பாலஸ்தீன மக்களைக் கொல்லவும், காயப்படுத்தவும், தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நிர்பந்திக்கவும் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் கருவிகளை இஸ்ரேலிய இராணுவத்திற்குக் கொடுத்து வருகிறது. இது, நமது காலத்தில் நிகழும் மிகத் தீவிரமான அறநெறிப் பிழைகளில் ஒன்று,” என்கிறார் நாசர்.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில், கூகிள் நிறுவனமும் சுமார் 50 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியது. இந்த ஊழியர்கள், காசாவில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கலிபோர்னியாவில் உள்ள கூகிளின் தலைமை அலுவலகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
கூகிள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த எமான் ஹசீம், பணியிலிருந்து நீக்கப்பட்ட பல ஊழியர்களில் ஒருவராவார். "சர்வசுதந்திர கிளவுட்" (sovereign cloud) சேவையகம் எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதைச் சோதனை செய்த குழுவில் தானும் ஒருவராக இருந்ததாக ஹசீம் கூறினார். இது, கூகிளின் பிரதான கிளவுட் வலையமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படும், அபரிமிதமான பாதுகாப்பு வசதிகள் கொண்ட சர்வர் கட்டமைப்பு ஆகும். அதில் சேமிக்கப்படும் தரவுகளை, கூகிள் நிறுவனம்கூட பார்க்கவோ, கண்காணிக்கவோ முடியாத விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர், இஸ்ரேலுக்காக இத்தகையதொரு சர்வசுதந்திரமான கிளவுட் கட்டமைப்பை கூகிள் உருவாக்கி வருவதை, ஊடகச் செய்திகள் மூலம் தாம் அறிந்துகொண்டதாக அவர் கூறினார். "அதாவது, வாடிக்கையாளர்கள் இந்த சேவையகத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை – அவர்கள் நியாயமற்ற முறையிலோ அல்லது தவறான வழியிலோ பயன்படுத்தினாலும் கூட – அத்தகையதொரு சேவையகத்தைக் வளர்த்தெடுக்கவே நாங்கள் அடிப்படையில் வேலை செய்து வருகிறோம் என்பது எனக்கு இன்னும் தெளிவாகப் புலப்பட்டது," என்று ஹசீம் தெரிவித்தார்.
பணிச்சூழலில் இடையூறுகளை விளைவித்ததோடு, சக ஊழியர்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்திய காரணத்தாலேயே பணியிலிருந்து சில ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்று கூகிள் நிறுவனம் விளக்கம் அளித்தது. இஸ்ரேலிய இராணுவத்திற்காக ஒரு சர்வ சுதந்திரமான கிளவுட் கட்டமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டதா என்பது குறித்தோ, அல்லது போரின் போது அதன் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படக்கூடும் என்பதற்கான வரையறைகளை விதிக்கப்பட்டதா என்பது குறித்தோ எழுப்பப்பட்ட பல்வேறு விரிவான கேள்விகளுக்கு கூகிள் நிறுவனம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தற்போதைய நிலையில், காசா தற்காலிகமான, ஏற்கத்தகாத ஒரு போர்நிறுத்தச் சூழலில் உள்ளது. ஆனால் அண்மையில், இஸ்ரேலிய அரசாங்கம், தனது இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டைப் பெருமளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதே வேளையில், அமெரிக்காவின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாஷிங்டனில் தங்கள் செல்வாக்கை ஆழப்படுத்தி வருகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக ஒரு மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்தது. கூகிளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அந்தப் பதவியேற்பு விழாவில் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். மேலும், ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற இரண்டாவது நாளில், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் அதிபரைச் சந்தித்து, செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்பை அமைக்க ஐநூறு பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யக்கூடிய ஒரு வணிகத் திட்டத்தை முன்வைத்தார்.
செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள புதிய புத்தகத்தில், பாலந்தீர்(Palantir) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் கார்ப் கூறுகையில், அமெரிக்க இராணுவமும் அதன் நட்பு நாடுகளும் சிலிக்கான் வேலியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆயுதங்களை உருவாக்கவும், மேம்படுத்தவும், வாங்கவும் வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார். இந்த ஆயுதங்களில், ஆளில்லா ட்ரோன் படைகளும் (drones), எதிர்காலப் போர்களில் பயன்படக்கூடிய ரோபோக்களும் உள்ளடங்கும்.
அசோசியேட்டட் பிரஸ் ஆய்வுசெய்த அப்புத்தகத்தின் முந்தையப் பதிப்பில், கார்ப் எழுதியுள்ளதாவது: "தங்களின் பாதுகாப்புத் துறைகள், உளவுத் துறைகள் புதிய சூழலுக்கு ஏற்ப எவ்வளவு விரைவாகத் தகவமைத்துக் கொள்கின்றனவோ அதைப் பொறுத்தே அமெரிக்காவின் மற்றும் அதன் நட்பு நாடுகளின் எதிர்காலம் அமையும்," என்கிறார் பாலந்தீர் நிறுவனத்தின் CEO. கடந்த ஆண்டு, ஓப்பன்ஏஐ நிறுவனம் தனது விதிமுறைகளைப் புதுப்பித்தபோது, அதன் AI கருவிகளை தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதித்தது. இந்த மாதம், கூகிளும் தனது பொது நெறிமுறைக் கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. முன்னர் செயற்கை நுண்ணறிவை ஆயுத உருவாக்கத்திற்கோ அல்லது உளவுப் பணிகளுக்கோ பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறியிருந்த ஒரு பகுதியை அது நீக்கியுள்ளது. அவர்கள் இன்னும் செயற்கை நுண்ணறிவை மிகுந்த பொறுப்புடன் உருவாக்குவதே தங்களின் நோக்கம் எனவும், அது "மக்களைக் காக்கும் வகையிலும், உலகளாவிய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும், தேசியப் பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் அமையும்" என்றும் கூகிள் நிறுவனம் கூறிவருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இராணுவ ஒப்பந்தங்களைப் பெறத் தீவிரமாகப் போட்டியிட்டுக் கொண்டிருக்கையில், தத்தம் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்துத் துயருற்றிருக்கும் மக்கள் என்ன நடந்தது என்பதைக்கூட இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
“இந்த அளவிற்கு தாங்க முடியாத வேதனை என் நெஞ்சைப் ரணப்படுத்தி வருகிறபோதிலும், நான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரே கேள்வி: ஏன் என்பதுதான்?” என்று தெற்கு லெபனானில் ஒரு காரில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் தந்தையான மஹ்மூத் அட்னான் சூர் வேதனையுடன் கூறினார். அவர் ஒரு பொறியாளர்; அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கிருக்கவில்லை. “என் அருமைக் குழந்தைகளின் மழலைக் குதூகலச் சிரிப்பொலி எப்போதும் அந்தக் காரின் ஜன்னல்கள் வழியே கேட்டுக்கொண்டிருக்கும்; அந்தக் காரை ஏன் ட்ரோன்கள் குறிவைத்தது?” என்று அவர் அழுது புலம்பினார்.
- விஜயன் (தமிழில்)