பரந்தூர் விமான நிலையத் திட்டம் சட்ட விரோதமானது!
அறம் இணைய இதழ்

சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகளை சில தனி நபர்கள் செய்தால் அதை தடுத்து நிறுத்துவது அரசின் கடமை. ஆனால், இதையே வளர்ச்சி என்ற பெயரால் கார்ப்பரேட்களின் நலன்களுக்காக அரசே செய்வது தான் பேராபத்தாகும். எந்த சட்டபூர்வ வழி முறைகளிலும் பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வர முடியாது; ஒரு அலசல்;
தமிழகத்தில் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து வருவது போல் SURFACE நீர் வள பரப்பளவும் கரைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஊழல், லஞ்சம், கொள்ளை, சுரண்டல் என்றெல்லாம் பணத்தை குறிப்பிட்டே பேசுகிற நாம், சுரண்டலிலேயே மிகவும் கொடியதும் கண்ணுக்கு தெரியாததுமான நிலத்தடி நீர் வளச் சுரண்டல் குறித்து யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை. பொது வெளியில் விவாதிக்கப்படுவதும் இல்லை.
தமிழக மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தின் விளைவால் நம்மிடம் நிரந்தரமானது ஜல்லிக்கட்டு. 13 பேரின் உயிர் தியாகமும் 100 -க்கும் மேற்பட்டோரின் இரத்தம் சிந்துதலும் ஸ்டெர்லைட்டுக்கு முடிவு கட்டியது. மக்களை அந்நியப் படுத்தும் சாகர் மாலா திட்டமான சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நீதிமன்றங்களால் நின்று போனது.
மக்கள் விரோத பரந்தூர் விமான நிலைய திட்டத்தை விரைந்து செயல்படுத்து துடிக்கிறது திராவிட மாடல் திமுக அரசு. தமிழகத்தின் ஏரிகள் நிறைந்த மாவட்டமான, காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வரத் துடிக்கும் இத்திட்டம் குறித்து விரிவாய் அலசுவோம்.
அரசின் திட்டங்கள் மக்களின் பெயரால் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய அரசமைப்பு ச்ட்டம் இந்த திட்டத்தை நிராகரித்து இதற்கு எதிராக போராடும் உரிமையை வழங்குகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் பரந்தூரில் விமான நிலையம் வந்து விட்டால், அது சுற்றுச் சூழலுக்கு மீட்டெடுக்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தும். பெருமழை பெய்யும் போது சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தை வெள்ளக்காடாக்கிவிடும்.
இயற்கை சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி, மேம்படுத்துவது குறித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்த, ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையையும், மாநில அரசின் கட்டாய கடமையையும், மேற்கோள் காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்து விட்டன.
கடந்த 50 ஆண்டு கால இந்திய வரலாற்றில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள் எவ்வாறெல்லாம் உச்ச நீதிமன்றத்தால் சீர்தூக்கி பார்க்கப்பட்டன என்பதை பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில், உச்ச நீதிமன்றத்தின் மிகப்பெரிய அமர்வின் தீர்ப்பாய் இன்று வரை நிலைத்து நிற்பது, கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்காகும். இந்த வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 1973-ஆம் ஆண்டு ஏப்ரல், 24 -ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அவற்றில், ஏரிகளுக்கு அருகில் கட்டுமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அவசியம் என்கிற தீர்ப்பும், ஏரிகளை சுற்றி 75 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை சுற்றுச் சூழல் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும் என்கிற தீர்ப்பும் இக் கட்டுரைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
இத்தகைய தீர்ப்புகள் அனைத்தும் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 -ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலவுடைமை ஆவணங்களுக்கே பொருந்தும். தமிழகத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது 1962 Survey மற்றும் 1926 Re-Settlement Register Survey நிலவுடைமை ஆவணங்கள் தான்.
ஆனால், நாம் 1979-86 UDR Survey ஆவணங்களை தூக்கிக் கொண்டு சுற்றி வந்தமையால், 214 ஏக்கர் ஒரிஜினல் பரப்பளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரி, இன்று 21 ஏக்கர் பரப்பளவை கூட எட்ட முடியாத நிலையில் உள்ளது. நாளை என்னவாகும் என்றே தெரியாத நிலையில் சென்னை சதுப்புநில காடுகள் உள்ளன.
கடந்த 25 வருட சட்டப் போராட்டம் நடத்தியும், கரூர் மாவட்டம் முதலைப்பட்டி 198.42 ஏக்கர் நான்காம் வகுப்பு ஸ்பெஷல் ரேட் நீர்ப்பிடிப்பு ஏரி தற்போது மிகவும் சுருங்கிவிட்டது.
ஆட்சியாளர்களால் முன்மொழியப்பட்ட ஒரு திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன், அதற்கான விரிவான திட்ட அறிக்கை Detailed Project Report உருவாக்கப்பட்டு, அதன் மீதான நிபுணர் குழுவின் FEASIBILITY REPORT இறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பொதுப் பார்வைக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். பிறகு இதன் பொருட்டு ஆட்சேபனைகள் எழுகின்றனவா?, நீதிமன்றங்களில் பொது நல வழக்குகள் தாக்கல் ஆகின்றனவா? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு, அதற்கென கால அவகாசம் தந்து, அதன் பிறகே எல்லை வரையறைக்கான நிலம் அளவீடு எனும் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க வேண்டும். ஆனால், பரந்தூரில் இவையெல்லாம் நடந்ததா?
பரந்தூரில் திட்டம் இறுதி செய்யப்பட்டமைக்கான FEASIBILITY REPORT- உள்ளதா? அதில் தான் CHALLENGING FACTORS எல்லாம் குடி கொண்டிருக்கும். நிலம் சார்ந்து மாற்று இடம், திட்டம் சார்ந்து மாற்று வழித்தடம், என்பதில் தொடங்கி,
DISTRICT MINERAL FOUNDATION Act 1957,
ANCIENT MONUMENTS and ARCHAEOLOGICAL SITES and REMAINS Act, 1958,
GROUND WATER EXPLOITATION COMMITTEE 1979,
BIOLOGICAL DIVERSITY Act 2002,
Environmental Impact Assessment (EIA),
Social Impact Assessment (SIA),
Health Impact Assessment (HIA),
Economic Impact Assessment (EcIA)
இது போன்ற முப்பது நாற்பது வில்லங்கங்களுக்கு சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.
பிரத்யேகமாக திட்டம் சார்ந்து மாற்று வழித் தடம் எனும் விமான சேவையை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கும் சேலம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று உள்நாட்டு விமான நிலையங்களுக்கும் பிரித்து கொடுக்க முடியுமா? என்பது குறித்தான பார்வை இந்த Feasibility Report – இல் விரிவாய் இடம் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை கணக்கின்படி தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளின் மொத்த எண்ணிக்கையே 14,098 – தான், மேலும் 34 பிரதான ஆற்றுப் படுகைகளை தன் கணக்கில் கொண்டுள்ளது.
இந்த வயலூர் ஏரியை அழித்து தான் விமான நிலையம் கட்டுவீர்களா?
இவ்வாறான சூழ்நிலையில், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு, 36,635 எண்ணிக்கையிலான மரங்களை வெட்டிவிட்டு, 1,425 ஏக்கர் பரப்பளவு நீர்நிலைகளை நாசமாக்கி, 3,424 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தியும் அழித்தும், அதன் மேல் 5,367 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் திட்டம் தான் GREENFIELD பரந்தூர் விமான நிலையம்.
திட்டம் இறுதி செய்யப்பட்டமைக்கான Feasibility Report வெளிவருவதற்கு முன் மத்திய அரசு எதன் அடிப்படையில் ஒப்புதல் அளித்தது ? நிலம் கையகப்படுத்துதல் குறித்தான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது ஏன் ?
செயலாக்கம் குறித்து STANDARD OPERATING PROCEDURE பின்பற்றப்படுவதில் ஆட்சியாளர்கள் முரண்பாடுகளையே கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும், அது தூக்கிப் பிடிக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளும் கோட்பாடுகளும் தங்களால் உதாசினபடுத்தபடவில்லை என்பதனை நிரூபிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திராவிட மாடல் திமுக அரசுக்கு உண்டு.
பரந்தூர் விமான நிலையம் திட்டம் குறித்தான FEASIBILITY REPORT வெளிவந்தால் நீதிமன்றத்தின் கதவுகள் பலரால் தட்டப்படும்.
(அ. வை. தங்கவேல்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/21640/parandur-airport-ecological-disaster/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு