ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் - எங்கு கொண்டு செல்லும்?

செந்தழல்

ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் - எங்கு கொண்டு செல்லும்?

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வந்ததும் "மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக மாற்றுவேன்" எனக் கூறி உலக நாடுகளின் மீது வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளார். பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான அளவில் வரிகளை உயர்த்தி உள்ளார். பல்வேறு நாடுகளுக்கும் 10% முதல் 145% வரை வரிகளை உயர்த்தி உள்ளார்.

அமெரிக்காவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 145% வரியை ட்ரம்ப் விதித்துள்ளார்; பிறநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை 90 நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளார்; ஆனால் சீனாவின் மீதான வரிகளை மட்டும் தள்ளி வைக்கவில்லை. அதன் மூலம் சீனாவை வர்த்தக நெருக்கடிக்குள் தள்ளி, அதை வீழ்த்த நினைக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கை ஒட்டு மொத்தமாக உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி பல நாடுகள் அவருடைய வரிவிதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரித்துள்ளன. சீனா ட்ரம்பின் வரிவிதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125% இறக்குமதி வரி விதித்துள்ளது. கனடாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்த இரண்டு நாடுகளும் சர்வதேச வர்த்தக விதிகளை மீறி அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organisation) முறையிட்டுள்ளன. பல தரப்பு வர்த்தக விதிகளை மதித்து அமெரிக்கா நடந்து கொள்ள வேண்டுமென 40 நாடுகள் ஒன்றுசேர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கட்டுப்படுத்தும் நிலையில் உலக வர்த்தக அமைப்பு இன்று இல்லை. எனவே இந்த நாடுகளின் முறையீடுகளும் வேண்டுகோள்களும் அமெரிக்காவை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தப் போவதில்லை.

ஆனால் இந்தியா அந்த 40 நாடுகளுடன் சேரவில்லை. தெற்கு உலகின் பிரதிநிதியாக இந்தியா இருக்கிறது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி இந்த நாடுகளுடன் ஒன்று சேரவில்லை; ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 26% வரி விதித்துள்ள நிலையிலும் அதை எதிர்த்துச் சிறு முணுமுணுப்பைக் கூட வெளியிடவில்லை; இந்த வர்த்தகப் போரில் தனக்கு என்ன இலாபம் கிடைக்கும், அதற்காகக் காய்களை எவ்வாறு நகர்த்தலாம் என இந்திய ஆட்சியாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்; எரிகிற வீட்டில் பிடுங்கினது எல்லாம் இலாபம் எனச் சமயம் பார்த்துக் காத்திருக்கின்றனர். அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருப்பது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிதான். 1990 களில் ஏகபோக மூலதனங்கள் தமது இலாபத்தை அதிகரிக்கவும், மூலதனத்தைப் பெருக்கவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய கொள்கைகளை மேற்கொண்டன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்த ஏக போக மூலதனங்கள் பெரும் இலாபம் சம்பாதிப்பதற்கான பெரும் வாய்ப்புகளை சீனா, இந்தியா, வங்காள தேசம், வியட்நாம், கம்போடியா போன்ற கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழங்கின. இந்த நாடுகளில் நிலவி வரும் மலிவான கூலி உழைப்பு, தொழிற்சங்கங்கள் இல்லாத நிலைமை, தொழிற்சங்கங்கள் இருந்தாலும் பலவீனமாக இருக்கும் நிலைமை, சுரண்டல் மீது எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாத நிலைமை ஆகியவை ஏக போக மூலதனங்களின் கொள்ளை இலாபத்துக்கு வழிவகுத்தன.

அமெரிக்காவிலிருந்த மூலதனங்கள் பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததால் அந்த நாட்டின் தொழிற்துறை உற்பத்தியில் படு வீழ்ச்சி ஏற்பட்டது. தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்ததால் பல நகரங்கள் மக்களே வசிக்காத பேய் நகரங்களாக மாறின. 2000 - 2009 க்கும் இடையில் மட்டும் அமெரிக்காவில் தொழிற்துறையில் 50 இலட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வேலை இழந்தோர்களின் ஒரு பகுதிக்கு சேவைத் துறையில் வேலை கிடைத்தாலும் அவை குறைவான சம்பளத்தை வழங்கும் வேலைகளாகவே உள்ளன.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு தொழிற்துறைப் பொருள் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருந்த அமெரிக்கா அந்த இடத்தை இழந்துவிட்டது. இன்று உலக உற்பத்தியில் அதன் பங்கு 13% ஆகக் குறைந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதே சமயத்தில் சீனாவின் பங்கு 35% ஆக உயர்ந்து முதலிடத்திற்குச் சென்றுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு தொழில்கள் இடம் பெயர்ந்ததால் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களில் வீழ்ச்சி ஏற்பட்டது. சேவைத் துறை வர்த்தகத்தில் அமெரிக்கா வர்த்தக மிகையைக் கொண்டிருந்தாலும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தில் பெரும் அளவு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.2024ல் அதன் வர்த்தகப் பற்றாக்குறை 91800 கோடி டாலராக உள்ளது. அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 3.1% ஆகும். சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மெக்சிகோ, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரும் அளவிலான உற்பத்திப் பொருட்கள் இந்தப் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்துள்ளன.

அதிக அளவிலான வர்த்தகப் பற்றாக்குறை மட்டுமல்லாமல் உலகிலேயே அதிகமான தேசக் கடனையும் நிதிப்பற்றாக் குறையும் கொண்ட நாடாக இன்று அமெரிக்கா உள்ளது. இந்த ஆண்டு (2025)ஏப்ரலில் அமெரிக்காவின் தேசக் கடன் 36.214 இலட்சம் கோடி டாலராக உள்ளது. 2024 நிதி ஆண்டில் அதனுடைய நிதிப்பற்றாக்குறை 1.83 இலட்சம் கோடி டாலராக இருந்தது. அந்த நாட்டின் தேசக் கடனின் வளர்ச்சி அதனுடைய உள்நாட்டுப் பொருள் உற்பத்தி வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது.

பொருளாதார நெருக்கடிகள் சமூகப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்குக் காரணமாகின. வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் கூலி உயர்வில் ஏற்பட்ட தேக்கமும் அடித் தட்டில் உள்ள உழைக்கும் மக்களையும் நடுத்தர மக்களையும் கடுமையாகப் பாதித்தன. குடும்பங்கள் உடைந்தன; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்; குற்றங்களும், போதை மருந்துப் பயன்பாடுகளும் அதிகரித்தன; இன்று எளிய, உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் அமைதியாக, மகிழ்ச்சியுடன் வாழ முடியாத ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது.

இன்று அமெரிக்கச் சிறைகளில் 18 இலட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் அமெரிக்காவை விட சுமார் நான்கு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனாவிலோ 17 இலட்சம் பேர் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கச் சமூகத்தின் துயரமும் அவலமும் நிறைந்த வாழ் நிலையைப் படம் பிடித்துக்காட்ட இந்த உண்மை ஒன்றே போதுமானது.

இந்த நிலையில்தான் "அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக்குவோம்" என்ற முழக்கத்துடன் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப், வந்தவுடன் தன்னுடைய கும்பலுடன் சேர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். அந்த நடவடிக்கைகள் உண்மையில் அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக மாற்றுமா?

இறக்குமதிப் பொருட்களின் மீதான ட்ரம்ப்பின் கடுமையான வரிவிதிப்பு அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்கானது என அவர் கூறிக் கொண்டாலும் அவருடைய முதன்மையான நோக்கம் இன்று உலகில் தொழிற்துறை உற்பத்தித் துறையிலும் செயற்கை நுண்ணறிவு, மின் வாகன உற்பத்தி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியிலும் முதன்மை பெற்று தனக்குச் சவாலாக நிற்கும் சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்துவதுதான். அதனால்தான் சீனப் பொருட்களின் மீது 145% வரியை விதித்துள்ளார். மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பிலிருந்து 90 நாட்கள் விலக்கு அளித்திருந்தாலும் சீனப் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கவில்லை.

ஆனால் ட்ரம்ப்பின் வரி விதிப்பு சீனாவில் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்களையே அதிக அளவு பாதிக்கும். எடுத்துக்காட்டாக, சீனாவில் ஐ-போன்களைத் தயாரித்து அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஆப்பிள் (Apple) நிறுவனம் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் 90% ஐ-போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஐ-போனின் விலையில் 2% மட்டுமே கூலியாக சீனாவிற்குச் செல்கிறது. அதன் விலையில் 58.5% ஐ ஆப்பிள் மொத்த இலாபமாகப் பெறுகிறது. எனவே அமெரிக்க நிறுவனங்கள் ட்ரம்ப்பின் வரிவிதிப்புக்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின. உடனே ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தொழில் நுட்ப நுகர்வுப் பொருட்கள் மீதான வரி விதிப்பை நீக்கி உள்ளார். அவை மட்டும் சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களில் 22% ஆக உள்ளன.

இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில் நுட்பப் பொருட்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் ஐ-போன், ஐ-பேட் போன்ற பொருட்கள் தயாரிப்பதற்கு அவசியமான உள்ளீட்டுப் பொருட்கள் மீதான வரிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அவசியமான உள்ளீட்டுப் பொருட்களில் 56% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்காவில் உள்ள பொருள் உற்பத்தியாளர்களின் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. அதனால் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் போன்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளும் உயரும். மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறைக்கடத்திகள் (Semi Conductor) மீது போடப்பட்டுள்ள வரிகள் ஆப்பிள் நிறுவனத்தையும் பிற நிறுவனங்களையும் பாதிக்கும்.

அமெரிக்கா 2024ல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் துணி மற்றும் ஆயத்தஆடைகளில் 24% ம், மரச்சாமான்களில் 28%ம், மின்னணுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களில் 21%ம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அமெரிக்கா கணிசமான அளவுக்குப் பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் அவற்றின் மீது போடப்பட்டுள்ள வரிகள் அவற்றின் விலைகளைக் கடுமையாக உள்நாட்டில் அதிகரிக்கச் செய்யும். ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள், தோல் பொருட்கள், திறன் கைப்பேசிகள், மடிக் கணினிகள், காணொலி விளையாட்டுகள்(video games) ஆகியவற்றுடன் அரிசி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கும். வரும் மாதங்களில் அரிசியின் விலை 10.3% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலைவாசி ஏற்றங்கள் அமெரிக்க மக்களின் குடும்பச் செலவுகளில் கடுமையான சுமைகளை ஏற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதியாகும் பொருட்களின் மீது உயர்த்தப்பட்டுள்ள அதிக வரிகளின் காரணமாக ஆசிய நாடுகளில் தொழில்களை நடத்தி வரும் அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்களும், பிற கார்ப்பரேட்களும் அமெரிக்காவின் வரிகளைத் தவிர்ப்பதற்காக தமது மூலதனங்களை அமெரிக்காவிற்கு இடம் பெயரச் செய்யும் என ட்ரம்ப்பும் அவருடைய கூட்டாளிகளும் கருதுகின்றனர். அதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தொழிற்துறைப் பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்துக்கு வர முடியும் எனக் கருதுகின்றனர். அவ்வாறு முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு மான்யங்கள் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர்.

எவ்வளவு வரி விதித்தாலும் ஆசிய நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குத் தமது முதலீடுகளைக் கொண்டு வராது. முதலாளிகளுக்கு இலாபத்தின் மீதும், மூலதனப் பெருக்கத்தின் மீதும் தான் பற்று அதிகமே தவிர நாட்டுப் பற்று அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். ஏற்கனவே, அமெரிக்கக் கார்ப்பேரட் நிறுவனங்கள் இலாப வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகத்தான், இலாப வீதத்தை அதிகரிக்கவும் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மலிவான கூலியுழைப்பு நிலவும் நாடுளுக்குத் தங்கள் மூலதனத்தைக் கொண்டு சென்றன. இந்த நிலையில் மீண்டும் தமது மூலதனத்தை அமெக்காவிற்குக் கொண்டு வந்து நட்டமடையத் தயாராக இருக்க மாட்டா.

ஒரு வேளை அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு மூலதனத்தைக் கொண்டு வந்து வர்த்தகப் பற்றாக்குறையை இல்லாமல் ஆக்கும் அளவுக்கு தொழிற்துறை உற்பத்தியைப் பெருக்கினாலும் தொழிற்துறை உற்பத்தியில் வேலை வாய்ப்பு இப்பொழுது உ ள்ள 8% விருந்து அதிகபட்சம் 9% அளவுக்குத்தான் உயரும் என வால்ஸ்ட்ரீட் பத்திரிகை கூறுகிறது. ஏனென்றால் தொழிற்துறை உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் ரோபோட்களும் பயன்படுத்தும் நிலையில் வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கு வழி இல்லை என்பது தான்.

1944ல் பிரட்டன் வுட்ஸ் (Bretton Woods System) அமைப்பின்படி தங்கத்தின் மதிப்பை மையமாகக் கொண்டு டாலரின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில் 1971 ல், அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த நிக்சன் டாலரின் மதிப்புக்கும் தங்கத்துக்கும் இருந்த பிணைப்பை நீக்கினார். ஏனென்றால் பிற நாடுகளின் கைகளில் வர்த்தகத்தின் மூலம் குவிந்த டாலர்களின் மதிப்பு அமெரிக்காவின் கையிருப்பில் இருந்து வந்த தங்கத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தது. அதன் விளைவாக டாலரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு, அமெரிக்கப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்தது. டாலரின் மதிப்புக்கும் தங்கத்துக்கும் இருந்த பிணைப்பு நீக்கப்பட்டாலும் டாலர் தொடர்ந்து உலகச் செலாவணியாக நீடித்து வருகிறது. வர்த்தக மிகையால் டாலர்களைக் குவித்து வைத்துள்ள பிற நாடுகள் தங்களிடம் அந்நியச் செலாவணியாக உள்ள டாலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள சொத்துகளில் முதலீடு செய்து வருகின்றன. உலகச் செலாவணியாக நிலவும் டாலரைத் தன் நாணயமாகக் கொண்டிருப்பதால் அமெரிக்கா உலக அளவில் வர்த்தகம், முதலீடு, நிதிச் சந்தை ஆகியவற்றில் தனிச் சலுகை பெற்று செல்வாக்கு செலுத்தி வருகிறது.

ஆனால் இன்று ட்ரம்ப்பின் வரி விதிப்பினால் முதலாளியப் பொருளுற்பத்தியில் நடைபெற்று வந்த சுற்றோட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையின் நிலையற்ற தன்மை உற்பத்தியைப் பாதித்துள்ளது. உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. பத்திரங்களின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையற்ற தன்மை உலக அளவில் முதலீட்டைப் பாதிக்கும்; பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து பொருளாதார மந்தத்தை உருவாக்கும்.

நிலையற்ற தன்மையினால் உலகச் செலாவணியாக இருக்கும் டாலர் ஆட்டம் கொண்டுள்ளது. பல நாடுகளும் டாலருக்கு மாற்றான அந்நியச் செலாவணி பற்றிச் சிந்தித்து வருகின்றன. உலகச் செலாவணி என்ற இடத்தை டாலர் இழக்குமானால், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு முடிவு ஏற்பட்டு விடும். அதனால்தான் டாலருக்கு மாற்றாக வேறு அந்நியச் செலாவணி பற்றிப் பேசும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என ட்ரம்ப் மிரட்டி வருகிறார்.

ஒரு பக்கம் ”அமெரிக்காவை மீண்டும் வலிமையுடைய நாடாக ஆக்குவேன்'' எனக் கூறி இறக்குமதி மீதான வரிகளைக் கடுமையாக உயர்த்தி உள்ள ட்ரம்ப், அந்நியர்கள் தமது இளைஞர்களின் வேலைகளைப் பறித்து விட்டனர் எனக் கூறி, புலம் பெயர்ந்து வந்தவர்களை அவரவர்களின் சொந்த நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வருகிறார். ஆனால் உண்மையில் அவருடைய நோக்கம் அவருடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில்லை. மாறாக அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றுவது தான்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மான்யங்கள் வழங்குவதற்காக அரசின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் ட்ரம்ப் இறக்குமதி மீதான கட்டணங்களைப் பன்மடங்கு அதிகரித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மான்யங்கள் வழங்குதவற்கு ஏதுவாக அரசாங்கத்துக்கு ஏற்பட்டு வரும் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வருகிறார். அதற்காக அரசாங்கத்தின் திறனை அதிகரிப்பதற்கு என்ற பெயரில் ஒரு தனித்துறையை (Department of Goverment Efficiency) கார்ப்போரேட் முதலாளி இலான் மஸ்க் தலைமையில் ட்ரம்ப் நிறுவியுள்ளார். அத்துறை 20 இலட்சம் ஊழியர்களுக்கு 'அவர்களுடைய வேலை அரசாங்கத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?' என்பதை நியாயப்படுத்துமாறு கடிதம் அனுப்பியுள்ளது. பல்லாயிரம் பேர்களை அரசாங்க வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

உலக அளவில் செயல்பட்டு வந்த சர்வதேச மேம்பாட்டிற்கான முகமையைக் கலைத்து (US Agency for International Development) அதில் பணிபுரிந்து வந்த அனைவரையும் வேலையிலிருந்து நீக்கி உள்ளது. அந்த நாட்டு மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்விக் கடன்களையும், கல்வி உதவித் தொகைகளையும் நிறுத்தி உள்ளது. . மாணவர்களின் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வரும் நிதிகளை நிறுத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பாசிச அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

ட்ரம்பின் மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என மக்களின் அனைத்துப் பகுதியினரையும் போராட்டங்களில் ஈடுபட வைத்துள்ளன.

இந்த நிலையில், ட்ரம்பின் இறக்குமதி மீதான வரிவிதிப்புகள் அமெரிக்காவை மீண்டும் வலிமை உள்ள நாடாக மாற்றாது. மாறாக, அமெரிக்காவை மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தான் வீழ்த்தும். கடந்த கால வரலாறு இதைத்தான் கூறுகிறது. 1930ம் ஆண்டு அமெரிக்கா தன்னுடைய நாட்டில் உள்ள முதலாளிகளைக் காப்பாற்ற ஸ்மூத் - ஹவுளி (Smoot-Hawley Tariff Act 1930) இறக்குமதி வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இறக்குமதி செய்யப்படும் 20,000 க்கும் மேலான பொருட்களின் மீது வரியை உயர்த்தியது. இதற்குப் பதிலடியாக பிறநாடுகளும் வரிகளை உயர்த்தின. அதன் காரணமாக உலக வர்த்தகத்தில் 65% விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டது. இது ஏற்கனவே நிலவி வந்த பொருளாதார மந்தத்தை மேலும் மோசமாக்கியது, அமெரிக்காவின் ஏற்றமதியில் 33% வீழ்ச்சி ஏற்பட்டது. ஏற்றுமதியைச் சார்ந்திருந்த தொழில்கள் பாதிக்கப்பட்டதால் அவற்றில் வேலை செய்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. நாடு பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது. அன்று இருந்ததை விட இன்று உலக வர்த்தகம் பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் பாதிப்புகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கப்போவதாகக் கூறும் ட்ரம்ப்பின் கனவு நிறைவேறப் போவதில்லை.

அமெரிக்காவின் சரி செய்ய முடியாத வர்த்தகப் பற்றாக்குறையும், பெரும் அளவிலான தேசக் கடனும், தொடர்ந்து வளர்ந்து வரும் நிதிப் பற்றாக்குறையும் அந்த நாட்டை மீள முடியாத நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளன. அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை வேகப்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் முதலாளியத்தைக் காப்பாற்றி வரும் போலீஸ்காரனாகச் செயல்பட்டுவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி உலகம் முழுவதும் முதலாளியத்துக்குச் சாவுமணி அடிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 மு.வசந்தகுமார்

உதவிய கட்டுரைகள்:

1. Michael Roberts, Tariffs, Triffin and the dollar-Michael Roberts Blog.

 2.Michael Roberts, Trump's slump - Michael Roberts Blog.

3. Trumponomics deserves to be taken seriously - T.T.Ram Mohan, The Hindu, dated: 18.4.'25.

4. Calling out American Trade Illegality-Prabash Rajan, The Hindu, dated: 21.4.'25

- செந்தழல் இணைய தளம்

https://senthazhalmagazine.blogspot.com/2025/04/blog-post_26.html?m=1&fbclid=IwY2xjawKCbD9leHRuA2FlbQIxMQABHmwXZFn4JOH-YZVpe-YmWpjfO02HmSRWl7IK_DuuLcX4XYR9L7jBceJVKfdy_aem_F-1AmnNX3OJLwfYh0XC0Ng

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு