கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?

BBC News தமிழ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
குறிப்பு : நிச்சயமாக இந்த உயிர்பலிகளுக்கு காரணம் திமுக அரசுதான். ஆனால் பிபிசியின் இச்செய்தி கட்டுரை காவல்துறையை மட்டுமே காரணம் காட்டுகிறது என்ற விமர்சனத்துடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் - செந்தளம் செய்திப்பிரிவு 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவட்ட தலைநகரிலேயே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி? என்ன நடந்தது?

கள்ளச்சாராயம் அருந்தியதால் அடுத்தடுத்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர்.

ஆனாலும், நேற்று (19/06/2024) நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன.

அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்(29), சுரேஷ்(46), மற்றொரு சுரேஷ்(45), சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மணி(58), கிருஷ்ணமூர்த்தி(62), இந்திரா(48) ஆகிய 3 பேர் இறந்தனர்.

மேலும் 47 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக மேலும் பலரும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு

சாராய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

  • மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா,
  • திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி
  • கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன்
  • காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்

"காவல்துறையின் கவனக்குறைவே காரணம்"

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அடுத்தடுத்து நேரிடும் உயிரிழப்புகளால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், "மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது. a

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு

சிபிசிஐடி போலீசார் விசாரணை

விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் பெயரில் விழுப்புரம் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இந்த விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்க உள்ளனர்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?

இந்த உயிரிழப்புகளுக்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம்.

"கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.

அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.

அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார்.

(மாயகிருஷ்ணன் கண்ணன்)

- பிபிசி நியூஸ் தமிழ்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு