சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டதற்கு என்ன காரணம்? - சிபிசிஐடி-க்கு வழக்கு மாறிய பின்னணி
விகடன்

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டை சூறையாடிய ஒரு கும்பல், வீட்டுக்குள் மலம் கலந்த தண்ணீரை ஊற்றிவிட்டு சென்ற சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதர மூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவரின் அம்மா கமலா. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அதோடு கஞ்சா வழக்கும் அவர் மீது பதிவானது.
இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளியில் வந்த சவுக்கு சங்கர், தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 24-ம் தேதி சவுக்கு சங்கர் தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றவிட்டார். வீட்டில் அவரின் அம்மா கமலா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், வீட்டின் முன்பக்க கதவை தட்டியிருக்கிறது. வீட்டின் கதவை கமலா திறக்காததால் பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், கமலாவை அவதூறாக பேசியிருக்கிறது.
பின்னர், வீடு முழுவதும் மலம் கலந்த கழிவுநீரை ஊற்றியதோடு பொருள்களையும் சேதப்படுத்தி விட்டு அந்தக் கும்பல் சென்றது. அதுதொடர்பான சி.சி.டி.வியில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் தூய்மை பணியாளர்கள் சீருடை அணிந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் அம்மா கமலா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார், விசாரணை நடத்தி வந்தநிலையில் இந்தப் புகாரை சி.பி.சி.ஐடி விசாரிக்க டி.ஜி.பி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி என்ன?
இந்த வழக்கின் பின்னணி குறித்து சவுக்கு சங்கரும் அவரின் அம்மா கமலாவும் மீடியாக்களுக்கு பேட்டியளித்தனர். அதில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் எம்.எல்.ஏவுமான செல்வபெருந்தகையும் அவருக்கு உடந்தையாக சென்னை போலீஸ் கமிஷனர் அருணும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் மீதே குற்றம் சாட்டியதால்தான் இந்த வழக்கை டி.ஜி.பி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டிஜிபி சங்கர். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்து எதிர்கட்சிகள் முதல் தி.மு.க கூட்டணியிலிருக்கும் சில கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து சவுக்கு சங்கர் தரப்பு, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
``தூய்மை பணியாளர்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டன. அதோடு 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் பேசிய வீடியோவில், உண்மையான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்று சேரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் மற்றொரு நபரும் ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார். அதனால் செல்வபெருந்தகையில் தூண்டுதலின்படி தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டிருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ரன. இதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உடந்தையாக இருப்பதாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். அதனால்தான் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை பெண் ஒருவர் முகநூலில் லைவ் செய்திருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவரின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது. அதோடு வீடு சூறையாடபட்ட சம்பவத்தில் புளியந்தோப்பைச் சேர்ந்த ஒருவர் உள்ளார். சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவரின் அம்மாவின் செல்போன் பறிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அந்த செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை சவுக்கு சங்கர் தரப்பு நாட உள்ளது. அதனால் சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் நீதிமன்றத்தில் பதிலளிக்க தயாராகி வருகிறார்கள்" என்றனர்.
- விகடன்
https://www.vikatan.com/crime/savukku-sankar-house-destroyed-unknown-person
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு