பாமக: ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? முழு விவரம்
பிபிசி தமிழ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக இன்று வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது இதுவரை இல்லாத வகையில் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காலில் விழுந்து அழுதார் அன்புமணி என ராமதாஸ் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
'பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு வற்புறுத்திய அன்புமணி'
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறி தன் கைப்படவே கடிதம் எழுதி, அன்புமணியிடம் கொடுத்தாக ராமதாஸ் கூறினார்.
" நீயே எடப்பாடியிடம் பேசு என்று எழுதினேன். அன்புமணி எடப்பாடியிடம் பேசினார். எடப்பாடியும் சி வி சண்முகத்திடம் சொல்லி ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நாள் பாஜகவுடன் தான் கூட்டணி போக வேண்டும் என்று அன்புமணி கூறினார். அதிமுகவுடன் சென்றால் மூன்று இடங்கள் நாங்கள் வென்றிருப்போம். அதிமுக ஆறு, ஏழு இடங்கள் வென்றிருப்போம். எங்களுக்கு சின்னம் கிடைத்திருக்கும்.
வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராமதாஸ்
"அன்புமணி தான் ஆட்டத்தை துவக்கி வைத்தவர். நான் போகிற போக்கில் சும்மா சொல்லவில்லை, ஆதாரத்துடன் ஒளிவு மறைவின்றி சொல்கிறேன்" என்று பேசிய ராமதாஸ் அன்புமணி செய்த தவறுகளை சொல்கிறேன் என்றார்.
"பாண்டி பொதுக்குழுவில் என்ன நடந்தது? நான் முகுந்தனை இளைஞரணி செயலாளர் என்று அறிவித்தேன். வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்பி வருவது போல மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியா? மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக மேடையில் வீசியது சரியான செயலா?ஒட்டு மொத்த பொதுக் குழுக் கூட்டமும் ஊடகமும் சேர்ந்தே அதிர்ச்சிக்குள்ளானீர்கள்.
மேடை நாகரிகம் சபை நாகரிகம் எதையும் கடைப்பிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என பொது வெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன், அங்கு வந்து பாருங்கள் என்றி கூறியது சரியான செயலா? நான்கு அறைக்குள் பேசி முடித்திருக்க வேண்டியது அது." என்றார்.
"வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" - ராமதாஸ்
மேலும் பேசிய ராமதாஸ், "அழகான ஆளுயர கண்ணாடி என்ற கட்சியை ஒரே நொடியில் உடைத்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லையே என்று பலரும் வருந்தினார்கள். அண்ணா சொன்னது போல கடமை , கண்ணியம் கட்டுப்பாடுடன் கட்சியை நடத்தி வந்தேன். அதற்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார். நான் சந்தித்த அவமானங்கள், அவலங்கள், ஏளனம், ஈட்டி போன்ற இழி சொற்களையும் எளிதில் கடந்து வந்துவிடுவேன். ஆனால் வளர்த்த கடா மார்பில் இடித்ததில் நிலை குலைந்து போய் விட்டேன். இதையும் கடந்து செல்வேன்" என்றார்.
"ஜி.கே.மணியின் மகனை நிராகரித்தார் அன்புமணி"
அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து வந்தார் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ் அதற்கான உதாரணத்தையும் எடுத்துக்காட்டுகிறேன் என்றார்.
"ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேசப்பட்டது, சினிமா துறையில் இருப்பவர்– அவரின் சினிமா உலக தொடர்புகள், விளம்பரம், பொருளாதாரம் ஆகியன இயக்கத்துக்கு உதவும் என்று பேசப்பட்டது. அவரை நியமனம் செய்து அவரிடம் நான் கடிதம் கொடுத்த உடன், நீ ராஜினாமா செய், கடிதத்தை கிழித்து போடு என்று அன்புமணி கூறினார். இரண்டு மாதங்கள் பொருத்துக் கொள் என்று தமிழ் குமரனிடம் கூறினேன்.
இரண்டு மாதங்கள் கழித்து நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு, தமிழ் குமரன் அவரது மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார். கூட்ட நாளன்று நான் காலையில் பல் துலக்கும் போது தமிழ் குமரன் அந்த பொதுக்குழுவுக்கு வரக் கூடாது என்று அன்புமணி கூறினார். நான் அதை தமிழ் குமரனிடம் சொல்ல, அவர் எவ்வளவு கலங்கியிருப்பார். பிறகு அவரை ராஜினாமா செய்துவிடு என்றேன். அதே செயல் தான் முகுந்தனுக்கும் நடந்தது. முகுந்தனுக்கு மேடையிலேயே நடந்தது. " என்றார்.
"நிர்வாகக் குழுக் கூட்டத்தில் யாரையும் பேச விட மாட்டார் அன்புமணி"- ராமதாஸ்
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் யார் கருத்துகளையும் கேட்பதில்லை, யாரையும் பேசவிடுவதில்லை என்று அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார் ராமதாஸ்.
"நிர்வாகக்குழுவில் உள்ள 19 பேரில் யாராவது பேசினால் உடனே பேசக் கூடாது என்பார். ஆனால், நான் செயற்குழு பொதுக்குழுக்களில் என்னை விமர்சனம் செய்யுங்கள், தவறு இருந்தால் திருத்திக் கொள்வேன் என்று கூறுவேன். இதை எந்த தலைவரும் சொல்ல மாட்டார்கள், என்னை விமர்சிக்க தயக்கமாக இருந்தால் கடிதம் மூலம் எழுதுங்கள். அப்படி எல்லாம் கட்சியை வளர்த்தேன். அன்புமணியிடம் உனக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை என்று நிர்வாகக் குழுவிலேயே கூறினேன்." என்றார்.
"எனக்கு மைக் வைத்துப் பேச தடை போட்டார் அன்புமணி" – ராமதாஸ்
கட்சி வளர்ச்சிக்காக தருமபுரி சேலம் மாவட்டங்களுக்கு சென்ற போது, தனக்கு அன்புமணி 'ஆர்டர்ஸ்' போட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ராமதாஸ்.
"எனக்குப் பிடித்த மாவட்டங்கள்- தருமபுரி, சேலம். அங்கு சென்ற போது, அங்கு நான் மைக் வைத்து பேசக் கூடாது, 200 பேருக்கு மேல் எனது கூட்டத்தில் கூடக் கூடாது, என்னை பார்க்க விரும்புகிறவர்கள் நான் தங்கியிருக்கும் விடுதியில் வந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். இத்தனை கட்டளைகள் யாருக்கு? கட்சியின் நிறுவனருக்கு. இவை நிறுவனருக்கு போட 'ஆர்டர்ஸ்'. யார் உழைத்த உருவாக்கிய கட்சி, யார் யாருக்கு கட்டளையிடுவது. 95 ஆயிரம் கிராமங்களுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற கால்கள் இவை. காடு மேடு, ஒத்தையடி பாதை என பயணித்துள்ளேன். குருவை இவ்வாறு நடத்தியது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இன்னும் பல." என்றார்.
"அன்புமணி கூட்டிய 14 பஞ்சாயத்துகள்"
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், "எனக்கு 14 'பஞ்சாயத்துக்கள்' வைக்கப்பட்டன. நான் 34 அமைப்புகளை உருவாக்கியிருக்கிறேன். எனக்கு பஞ்சாயத்து வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கட்சியை அய்யா பார்த்துக் கொள்ளட்டும், நீங்கள் மக்களை பாருங்கள் என்றனர். ஆனால் அவர் கேட்டை சாத்திக் கொண்டு மக்களை பார்க்காமல் உள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைத்தார்" என்றார்.
"பொய் சொல்வார் அன்புமணி" – ராமதாஸ்
அன்புமணி பொய் பேசுவார் என்று குற்றம்சாட்டிய ராமதாஸ் அதில் இரண்டு பொய்களை மட்டும் இப்போது கூறுகிறேன் என்றார். " 108 மாவட்டச் செயலாளர்களில் 100 பேருக்கு நேரடியாக கால் செய்து மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு போகாதீர்கள், என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடுக்கப் போகிறார்கள் என்று அன்புமணி கூறியுள்ளார். அப்படி பொய் கூறியதால் 100 பேர் கூட்டத்துக்கு வரவில்லை." என்றார்.
மேலும், "ஆறு பேர் அடியாட்களை கொண்டு நான் அடிக்கப் போகிறேன் என்று சமூக ஊடகப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களிடம் கூறியுள்ளார். இது மற்றொரு பொய். ஆனால் 100 பேர் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்" என்றார்.
"எட்டு நாட்களில் தலைவர் பதவி கொடுக்க வேண்டும்"
எட்டு நாட்களில் அன்புமணியை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மருமகள் சௌம்யா அன்புமணி தன்னை வந்து சந்தித்ததாக ராமதாஸ் கூறினார். சௌம்யா கூறிய உடன், அப்போது தலைவராக இருந்த ஜி கே மணியிடம் தெரிவித்ததாகவும், ஜி கே மணி ஒன்றரை மாத காலம் அவகாசம் கேட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். "தனியார் நிறுவனத்தில் வேலை செய்தால் கூட ஒரு பொறுப்பிலிருந்து விலக ஒரு மாதம் காலம் வழங்கப்படும். ஆனால் எட்டு நாட்களில் தலைவராக்க வேண்டும் என்று கேட்டனர். மண்டபம் எல்லாம் பார்த்துவிட்டேன் என்று சௌம்யா கூறினார்" என்றார்.
அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்ட கூட்டத்தை நினைவு கூர்ந்து பேசிய ராமதாஸ், "பிறகு பட்டாபிஷேகம் செய்து கட்டி பிடித்து கண்ணீர் வடித்தேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் பொறுப்புகளுக்கு வர மாட்டார்கள் என்று சத்தியம் செய்திருந்தேன். ஆனால் மத்திய அமைச்சர் பொறுப்பை அன்புமணிக்கு தர வேண்டும் என்று என் குடும்பத்தில் இருப்பவர்கள் என்னை வறுத்து எடுத்தார்கள், ஜி கே மணியும் வலியுறுத்தினார்" என்றார்.
இந்த பிரச்னைகாளுக்கான தீர்வு, "நிறுவனர் கொடுத்த செயல் தலைவர் பதவியை சந்தோசமாக ஏற்று பணி செய்வேன், செயல் தலைவர் இல்லை என்றாலும் கூட தொண்டனாக இருந்து கூட கட்சி வளர்ப்பேன் என்று கூறுவதே" என்றார்.
பாஜக கூட்டணி குறித்து கேட்ட போது, பாஜக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளன என்றார். மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டபோது, உறுப்பினர் தேர்தலில் நாங்கள் சீட்டு கேட்க கூடாதா நானே கூட தான் போட்டியிடுவேன் என்று பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c0r19v829dgo?at_campaign=ws_whatsapp
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு