SIR அமலாக்கம் - கட்டுரை தொகுப்புகள் பகுதி -2

தமிழில்: வெண்பா

கேரள சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திட்டமிட்டபடி நடைபெறுகிறது - கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி, கேரளாவில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்ளப்பட்டு வருவதாக நவம்பர் 15 அன்று கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேல்கர், சுமார் 85 சதவீத கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்தப் பணி நவம்பர் 25-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், எஸ்.ஐ.ஆர்-இன் கீழ் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலிலிருந்து வேறுபட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“எஸ்.ஐ.ஆர்-இன் பிரதான நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஆகும். இது உள்ளாட்சித் தேர்தல்களைப் பாதிக்காது,” என்றும் அவர் தெரிவித்தார்.

சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers) மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் எஸ்.ஐ.ஆர் நடத்தப்பட்டு வருவதாக கேல்கர் கூறினார்.

இதற்கிடையில், பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த பிறகு எஸ்.ஐ.ஆர் ஒத்திவைத்து நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சி.பி.ஐ(எம்) தலைவர் எம். வி. ஜெயராஜன், கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களைப் பாதிக்கும் நோக்கத்துடன் எஸ்.ஐ.ஆர் நடத்தப்படுவதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவின் கருவியாகச் செயல்படுகிறதாகவும். குற்றம் சாட்டினார்.

“எல்.டி.எஃப் (LDF) வெற்றியை தடுக்கும் நோக்கில், கேரளாவில் தேர்தல் காலத்தில் எஸ்.ஐ.ஆர்-ஐ நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தை பாஜக தூண்டி உள்ளது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றும் அவர் கூறினார்.

மாநில அரசு எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைக்கக் கோரி சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் அந்த மனுவைப் பரிசீலிக்காமல்,  உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு மாநில அரசை அறிவுறுத்தியது.

https://theprint.in/india/sir-is-being-held-as-per-schedule-says-kerala-chief-electoral-officer/2784979/

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வங்காளத்தில் தொடங்கியது; வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் செயல்பாட்டை நடத்த மொத்தம் 80,681 BLO-கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

செயல்முறை குறித்த விவரங்கள்:

“இந்த மாநிலத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்காக இதுவரை 7.66 கோடி கணக்கெடுப்புப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்படும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) இரண்டு படிவங்களிலும் கையொப்பம் இடுவார். அதில் ஒரு படிவத்தை இந்திய தேர்தல் ஆணையத்திற்காக அந்த அலுவலர் வைத்துக்கொள்வார். இரண்டாவது படிவத்தை, எதிர்காலக் குறிப்புக்குப் பயன்படும் வகையில், முத்திரையிடப்பட்ட ஒப்புகைச் சீட்டுடன் திருப்பி அளிப்பார்,” என்று செயல்முறை குறித்து விளக்கமளித்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

நடைமுறை மற்றும் உதவி மையங்கள்:

வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிக்கும் பணி தொடங்கியதில் இருந்து எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். “இந்தச் செயல்முறை மாநிலம் முழுவதும் சீராக நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார். மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர்களின் (DEOs) அலுவலகங்களில் SIR தொடர்பான உதவி மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

கால அட்டவணை:

வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் இந்த ஒரு மாத காலச் செயல்முறை டிசம்பர் 4 வரை தொடரும்.

வரைவுப் பட்டியல்கள் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும்.

உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை எழுப்பலாம்.

அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விசாரணைகளும் சரிபார்ப்புகளும் டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.

https://theprint.in/india/sir-of-electoral-rolls-commences-in-bengal-with-blos-visiting-voters-residences/2776659/

சிறப்பு சுருக்க திருத்தம் (SIR) கணக்கெடுப்பு தமிழகத்தில் தொடங்கியது 

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் பகுதியாக, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நவம்பர் 4 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடுகளுக்குச் சென்று, கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகம் செய்தனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெடூரு மற்றும் இயக்குநர் கிருஷ்ணா குமார் திவாரி ஆகியோர், இப்பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 4 அன்று தமிழகம் வந்தனர். திரு. யெடூரு பிற மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, சுமார் 68,700 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஒரு வீடு பூட்டப்பட்டதாகவோ அல்லது மூடப்பட்டதாகவோ கண்டால், அவர் குறைந்தது மூன்று முறையாவது அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றார்.

வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்புப் படிவங்களை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையவழியிலும் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, படிவத்தின் ஒரு நகலில் ஒப்புகைச் சீட்டை வழங்குவார்கள் என்றும், அதனை வாக்காளர் தன்னுடன் வைத்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி சமர்ப்பிப்புகளும் கூட, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வீடு தேடிச் செல்லும் ஆய்வின்போது சரிபார்க்கப்படும்.

முந்தைய சிறப்பு சுருக்க திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் பெயர் அல்லது பெற்றோர் அல்லது தாத்தா அல்லது பாட்டியின் பெயர்கள் குறித்த விவரங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்யலாம் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விவரங்களைப் பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.

வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும்போது, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் முறையாகச் சமர்ப்பித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

முழுமையான விவரங்களை வழங்காத வாக்காளர்களுக்கு, அதிகாரிகள் விசாரணை தொடங்குவார்கள், மேலும் வாக்காளர்கள் அந்த விசாரணை சமயத்தில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/sir-begins-in-tamil-nadu-with-house-to-house-enumeration/article70240771.ece

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் திருத்தம்: குழப்பமும் கவலைகளும்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குடிமக்களை எப்படி குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தென் சென்னை பொறுப்பாளர் வேல்முருகன், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் இருந்து கிட்டத்தட்ட 40,000 பெயர்களைச் சலித்து, தன் பெயரை மட்டுமே கண்டுபிடிக்க மூன்று நாட்களைச் செலவிட்டதாக கூறுகிறார். இது எமர்ஜென்சியை எதிர்கொள்வது போல இருந்தது என்று அவர் தெரிவித்தார். “தேர்தல் அரசியலில் தீவிரமாக உள்ள என்னைப் போன்ற ஒருவருக்கே இவ்வளவு கடினமாக இருந்தால், சாமானியனின் நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று அவர் கூறினார். வாக்காளர் பட்டியலை ‘சுத்திகரிக்கும்’ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) முயற்சியாக சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைபெற்று வரும் நிலையில், வேல்முருகனின் விரக்தி போலவே தமிழ்நாடெங்கும் பொதுவான கவலை உருவாகியுள்ளது.

வாக்காளர் கணக்கெடுப்பு செயல்முறை தமிழ்நாட்டில் நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 அன்று முடிவடையும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக நடைபெறும் SIR செயல்முறை, மாநிலம் முழுவதும் மோசமான நிர்வாகம், தொழில்நுட்ப சிக்கல்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பல வாக்காளர்கள், குறிப்பாக ஓதுக்கட்டப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். வெளிப்படைத்தன்மை இல்லாமை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLOs) போதுமான பயிற்சி அளிக்கப்படாமை, மற்றும் மாவட்ட அதிகாரிகளின் மோசமான தகவல் தொடர்பு ஆகியவை SIR-ஐ சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல் நடவடிக்கைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளன.

களத்தில்: குழப்பமும் கவலைகளும்

தகுதியுள்ள வாக்காளர்களின் தகவல்களைச் சரிபார்ப்பதற்கான அடிப்படை ஆவணங்களாக 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களைத் தேர்தல் ஆணையம்  கொடுத்துள்ளது. ஆனால், வேல்முருகனைப் போன்ற வாக்காளர்கள் பெரும்பாலும் 2002 அல்லது 2005 பட்டியலில் தங்கள் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில், வேல்முருகன் சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் நான்கு முறை வீடுகளை மாற்றியதால், பழைய வாக்காளர் பட்டியலில் தன் பெயரைக் கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதன் பொருள், அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த பூத்தில் தன் பெயரைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. ஆனால், 2007 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் காரணமாக, அந்தப் பகுதியின் சட்டமன்றத் தொகுதிகள் மாற்றப்பட்டுவிட்டன.

“கடைசியாக, 2002 ஆம் ஆண்டுப் பட்டியலில் ஆலந்தூர் தொகுதியில் என் பெயரைக் கண்டுபிடித்தேன்,” என்று அவர் கூறினார். அதேபோல், அம்பத்தூரைச் சேர்ந்த சுதீர் என்பவர், 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து தனது தகவல்களை அணுக முடியவில்லை என்று கூறினார். “நான் என்னுடைய EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) எண்ணைக் கண்டுபிடிக்க முயன்றேன், ஆனால் இணையதளம் ‘தரவு இல்லை’ (No Data Found) என்று காட்டியது. பெயரையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையோ வைத்துத் தேடும் விருப்பத்தை நான் முயற்சித்தேன், ஆனால் இணையதளம் புதுப்பிக்கப்படாததால் எதுவும் வேலை செய்யவில்லை,”. மதுரையைச் சேர்ந்த மற்றொரு வாக்காளர், 2002 ஆம் ஆண்டுப் பட்டியலில் தன்னுடைய பெயருடன் ஒத்துப் போகும் பல பெயர்களைக் கண்டறிந்ததாகவும், ஆனால் அதற்கான EPIC எண் வழங்கப்படாததால், அவர் பட்டியலில் உள்ள தன் பெயரை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

ECI இணையதளத்தில் உள்ள 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களை ஆய்வு செய்ததில், அந்தத் தரவு அணுக முடியாத நிலையில் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. பதிவேற்றப்பட்டிருப்பது, மோசமாக ஸ்கேன் செய்யப்பட்ட பட்டியலின் படங்கள் ஆகும், இது கணினியால் படிக்கக்கூடியதாக இல்லை. மேலும், அந்தப் பட்டியலில் அனைத்து வாக்காளர்களுக்கும் EPIC எண்கள் இல்லை. சில சந்தர்ப்பங்களில், ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் மங்கலான அல்லது கிழிந்த பக்கங்களாக உள்ளன, முக்கியமான தகவல்கள் விடுபட்டுள்ளன. இதற்கிடையில், வாக்காளர் விவரங்களைத் தேடப் பயன்படுத்தப்படும் தமிழ்நாடு வாக்காளர் சேவை இணையதளத்தில், EPIC எண் மூலம் தேடும் விருப்பம் அப்போது இல்லை.

சுதீர், தான் தேவையான தகவல்களான 2002 ஆம் ஆண்டு பூத் மற்றும் பகுதி விவரங்களை அணுக முடியாததால், முழுமையற்ற கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறினார். “நான் என் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், மற்றும் தந்தையின் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, அதை BLO-விடம் கொடுத்தேன். BLO-வுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுக்கு அதிக வேலைகள் உள்ளன,” என்றும் அவர் கூறினார். “என் பெயர் வரைவுப் பட்டியலில் (draft roll) இல்லாவிட்டால், நான் வாக்களிக்க விரும்புவதால் அதை ஆர்வத்துடன் பின்தொடர்ந்து உரிமை கோருவேன். எத்தனை பேர் அப்படிச் செய்ய முடியும்? என் மனைவி என்னிடம், ‘அப்படி பின்தொடர்வது அவசியமா?’ என்று கேட்கிறாள்,” என்றும் சுதீர் மேலும் கூறினார்.

ECI இணையதளத்தில் மோசமாக ஸ்கேன் செய்யப்பட்ட பட்டியல் மட்டும் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் அல்ல - மேலும் பல சிக்கல்கள் உள்ளன. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கசாமி, 2011 ஆம் ஆண்டில்தான் தனது வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றார். “என் பெற்றோர் 1996 இல் காலமானார்கள், அதனால் அவர்கள் 2002 பட்டியலில் இல்லை. படிவத்தின் இரண்டாம் பகுதியில் நான் எதைப் போடுவது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார். அவரும் முழுமையற்ற படிவத்தையே சமர்ப்பித்தார். 41 வயதான தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஜமீலுக்கு, கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வார இறுதி நாள் முழுவதும் தேவைப்பட்டது. “2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் என் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை”. இதற்குக் காரணம், சென்னையில் கடைசியாக SIR 2005 இல் நடத்தப்பட்டது. “என் பெயர் 2005 SIR பட்டியலில் கிடைத்தது,” என்று அவர் தெரிவித்தார்.

BLO-க்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்பட்டதா?

இதை ஒரு யூடியூப் வீடியோ மூலம் தான் தெரிந்து கொண்டதாக அவர்  கூறினார். மேலும் BLO-க்களுக்கே இது தெரியவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். களத்தில், BLO-க்கள் போதிய வசதிகள் இல்லாமல் அதிக பணிச்சுமையுடன் உள்ளனர். அரசியல் கட்சிப் பணியாளர்களும் வாக்காளர்களும், BLO-க்களுக்குப் பயிற்சி இல்லை என்றும் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் (procedures) குறித்துத் தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினர். கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிக்கும்போது சிலர் மட்டுமே கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள் என்று மக்கள் கூறினர். கணக்கெடுப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பல BLO-க்களைத் தொடர்புகொண்டபோது, பெரும்பாலானோர் தாங்கள் இரண்டு நாட்கள் பயிற்சி பெற்றதாக உறுதிப்படுத்தினர். “எங்களுக்கு இரண்டு நாட்கள் ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டது, மேலும் புதிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன,” என்று ஒரு BLO கூறினார்.

பெரும்பாலான BLO-க்கள் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு முற்றிலும் புதியவர்கள், எனவே ஒவ்வொரு வாக்காளரையும் கண்டுபிடிப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள ஒரு BLO-வான தனலட்சுமிக்கு, 1,200 படிவங்களை விநியோகிக்கப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. “சுமார் 400 வாக்காளர்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளனர். ஆனால் படிவங்கள் என்னிடமே உள்ளன, எனவே பலர் படிவத்தைப் பெற என்னிடம் வருகிறார்கள். ஆனால் சிலர் வரவில்லை, அவர்கள் தங்கள் வாக்குகளை இழக்க நேரிடும். 1,200 வாக்காளர்களுக்கு தலா இரண்டு படிவங்கள் – வெறும் படிவங்களை வரிசைப்படுத்துவதற்கே இரண்டு அல்லது மூன்று பேர் தேவை,” என்று அவர் கூறினார்.

அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இல்லாததால், தனலட்சுமிக்கு அந்தப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் அரசியல்வாதிகள் உதவி செய்கிறார்கள். “இரண்டு நாட்களுக்குள் படிவ விநியோகத்தை முடிக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி, நவம்பர் 12 நிலவரப்படி, தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில், 5.67 கோடி பேர் கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுள்ளனர், இது 78.09% ஆகும். BLO-க்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு தொகுப்புக் கணக்கெடுப்புப் படிவங்களை ஒப்படைக்க வேண்டும். ஆனால் சில பகுதிகளில், ஒரு படிவம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற வாக்காளர், “நாங்கள் மற்றொரு படிவத்தைக் கேட்டபோது, பின்னர் தருவதாக BLO எங்களிடம் கூறினார். ஆனால் அது எப்போது எங்களிடம் கொடுக்கப்படும் அல்லது எப்போது நாங்கள் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கூறினார்.

தொழில்நுட்பப் பிரச்சினைகள்

ECI இணையதளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் (Technical glitches), வாக்காளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அதிகரித்துள்ளன. வீடுகளுக்குச் செல்லும் BLO-க்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி செயல்முறையை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர். சில BLO-க்கள் அடிப்படைப் போன்களை மட்டுமே வைத்துள்ளனர், மற்றவர்களுக்கு இணைய இணைப்பு இல்லை, பெரும்பாலான நேரங்களில், தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாகச் செயல்முறை தோல்வியடைகிறது. படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வாக்காளர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. “BLO-க்கள் இன்னும் எங்கள் பகுதிக்கு வரவில்லை என்பதால், நாங்கள் கணக்கெடுப்புப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய முயன்றோம். நாங்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தோம், ஆனால் முடிவில், மின்னணு கையொப்பம் (e-sign) இட வேண்டிய கட்டத்தில், தளம் தொடர்ச்சியாக செயலிழந்து கொண்டே இருந்தது,” என்று கொட்டூர் கார்டன்ஸ் பகுதியைச் சேர்ந்த பூமா கூறினார்.

கணக்கெடுப்புச் செயல்முறை நவம்பர் 4 அன்று தொடங்கிய போதிலும், சரியாக ஒன்பது நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 13 அன்றுதான், ஆன்லைனில் கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த அனுராதா, “நான் 2002 மற்றும் 2005 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வாக்களித்தேன், ஆனால் என் பெயர் பட்டியலில் இல்லை. உறவினர்களும் யாரும் உயிருடன் இல்லை. BLO-வுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு வீடியோவும் புதிதுபுதிதாக ஏதோ ஒன்றைக் கூறுகிறது,” என்றார்.

அனுராதா ஆதார், பெயர், மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை மட்டுமே பூர்த்தி செய்ததாகக் கூறினார். படிவங்களைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, வேறு சில பிரச்சினைகளும் அனுராதாவுக்கு நேர்ந்தது. “என் வீடு 244 வது பூத் எண்ணின் கீழ் வருகிறது, ஆனால் என் படிவம் 245 வது பூத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் என் BLO-விடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்க வேண்டும் என்று தனக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தக் குழப்பங்களைச் சரிசெய்யத் தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் எங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும், ஆனால் ஒரு வாரத்திற்குள் படிவத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

விழிப்புணர்வு இல்லாமை

தமிழ்நாட்டில் SIR செயல்முறை தொடங்கி கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகும், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஏதும் அறியாதவர்கள் பலர் உள்ளனர் என்று சேப்பாக்கத்தைச் சேர்ந்த BLO தனலட்சுமி கூறினார். சில சமயங்களில், வாக்காளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தை, பொதுவாக வாக்குப்பதிவுக்கு முன் அவர்களிடம் வழங்கப்படும் ‘வாக்குச் சீட்டு’ (voting slip) என்று கூட நினைக்கிறார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர், சில பகுதிகளில், குடியிருப்பாளர்களுக்கு இந்தச் செயல்முறை குறித்து BLO-க்கள் விளக்கத் தவறிவிட்டனர் என்று கூறினார். திருநெல்வேலியிலும் இதே போன்ற கவலைகள் எழுந்துள்ளன, அங்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் நிலைச் செயல்பாட்டாளர் ஒருவர், SIR குறித்துக் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தார். “SIR-க்கு எதிரான போராட்டத்திற்கு கூடக் குறைந்த அளவிலேயே மக்கள் திரண்டனர்,” என்றும் அவர் கூறினார்.

SIR குறித்துக் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாததால், BLO-க்கள் வீடுகளுக்குச் செல்லும்போது, வாக்காளர்கள் பெரும்பாலும் அங்கு இருப்பதில்லை, இது விநியோகச் செயல்முறையை மேலும் கடினமாக்கியுள்ளது.

ஒதுக்கட்டப்பட்டவர்களுக்கு இது அச்சுறுத்தலான நடைமுறை

ஒதுக்கப்பட்ட  மக்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் தகவல்களை அணுகும் வாய்ப்பு இல்லாததால் சிக்கல் அதிகரித்துள்ளது. வட சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு சேரி வாசியான பாளையம், “எனக்கு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படிப் பூர்த்தி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் பகுதியில் அதை எப்படிச் செய்வது என்று தெரிந்த ஒருவர்தான் இருக்கிறார், அதனால் நான் அவரை காத்திருந்து அணுக வேண்டும்,” என்று கூறினார்.

இந்தச் செயல்முறை எங்கள் வாக்குரிமையை பறித்துவிடுமோ என்று அச்சம் கொள்கிறார். “எனக்கு 60 வயதாகிறது, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். இப்போது இந்த படிவங்களைப் பூர்த்தி செய்யச் சொல்கிறீர்கள், இதற்குப் பிறகு எங்கள் வாக்குகள் நீடிக்குமா என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றும் பாளையம் கூறினார்.

சிறுபான்மையினரிடையே அச்சம்

பீகாரில், குறிப்பாக கோசி-சீமாஞ்சல் பகுதியில், முஸ்லிம் மற்றும் பெண் வாக்காளர்களைப் பெரிய அளவில் நீக்கியது, தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினரிடையே வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தை அது ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக தலைவர்கள் அனைத்து மட்டங்களிலும் SIR விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். வாக்குரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் மக்கள் இந்த நடைமுறையில் பங்கேற்க வேண்டும் என்று தேவாலயங்களிலும் மசூதிகளிலும் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி (MMK) போன்ற அமைப்புகள், கொள்கையளவில் SIR-க்கு எதிராக இருந்தாலும் - வாக்காளர் பட்டியலை ‘சுத்திகரிப்பது’ என்ற போர்வையில் இந்தியர்களின் குடியுரிமையை ‘சரிபார்க்கிறது’ என்று தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டினாலும் - கணக்கெடுப்புச் செயல்பாட்டில் பங்கேற்பதைத் தவிர வேறு வழியில்லை. MMK-ன் தலைவரான பேராசிரியர் MH ஜவாஹிருல்லா, “எல்லா மாவட்டங்களிலும் உள்ள எங்கள் கட்சி ஊழியர்களுக்கு, அனைத்து வாக்காளர்களும் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், மக்கள் படிவங்களைப் பூர்த்தி செய்து சரியான நேரத்தில் சமர்ப்பிக்க உதவவும் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். மக்களுக்கு உதவ முகாம்களை ஏற்பாடு செய்யத் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் சமூக உறுப்பினர்கள் SIR-இல் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்துள்ளன. செங்கல்பட்டு பிஷப் A நீதநாதன், கத்தோலிக்க அமைப்பின் கீழ் உள்ள தேவாலயங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடங்கவும், தங்கள் சமூக உறுப்பினர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.

திமுக கள அளவில் செயல்பாடுகளைத் தொடங்கி விட்டது

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தவிர, தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் SIR-க்கு எதிராக உள்ளன. அதில் திமுக முன்னணியில் உள்ளது. அக்கட்சி தலைமையிலான மாநில அரசு இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளது.

இருப்பினும், களத்தில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் அனைத்துத் தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்தத் தேர்தல் இயந்திரங்களை முடுக்கிவிட்டுள்ளது. திமுக தனது தொண்டர்களை SIR-க்காக சில மாதங்களுக்கு முன்பே தயார் செய்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் சட்டப் பிரிவுச் செயலாளருமான என். ஆர். இளங்கோ தலைமையிலான சிறப்புக் குழுக்கள், திமுகவின் பூத் முகவர்களுக்கு (பூத் நிலை முகவர்கள்-2, அல்லது BLA-2) பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டது. SIR-இன் போது BLA-2 முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைப் பட்டியலிடும் ஒரு கையேட்டையும் கட்சி தயாரித்தளித்தது.

தேர்தல் ஆணைய தரவுகளின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான BLA-2 முகவர்களைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. மாநிலத்தில் 68,467 பூத்கள் உள்ளன. சுமார் 2.11 லட்சம் BLA-2 முகவர்கள் பலம் உள்ளது. இத்துடன், பூத் நிலை செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் தொழில்நுட்பம் தொடர்பான புதுப்பிப்புகளைக் கையாள்வது முதன்மைப் பொறுப்பாகக் கொண்ட பூத் டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) என்ற ஒரு பதவியையும் திமுக உருவாக்கியுள்ளது. திமுக 10 உறுப்பினர்களைக் கொண்ட பூத் நிலை குழுக்களையும் (BLC) அமைத்துள்ளது. ஒவ்வொரு நபரும் 100 வாக்குகளுக்குப் பொறுப்பாளராக உள்ளார். மேலும் திமுக வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது குழு உறுப்பினர்களின் பணி. மாநிலத்தில் முதன்மைக் எதிர்க்கட்சியான AIADMK-வும் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, அதன் பூத் குழு உறுப்பினர்கள் மற்றும் BLA-2 முகவர்களை BLO-க்களுடன் உடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், திமுக பூத் நிலை அலுவலர்களை (BLO) செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டுகிறார். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான BLO-க்களாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM), மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள துணை செவிலியர்கள், சில பகுதிகளில் ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். “இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானோருக்குப் போதுமான நிபுணத்துவம் இல்லை, அவர்கள் திமுகவால் செல்வாக்கு செலுத்தப்படுகிறார்கள். தேர்தல் ஆணைய கூட்டத்தின்போது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவைக்கும், களத்தில் நடப்பதற்கும் வேறுபாடு உள்ளது. SIR-ஆல் நிறைய குழப்பங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன” என்றும் தியாகராஜன் குற்றம் சாட்டினார். “நாங்கள் புகார் அளிக்க விரும்பினாலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்புக்கு கூட கிடைப்பதில்லை”.

வாக்காளர் உதவி எண்கள்

மாநில அளவில், SIR தொடர்பான விஷயங்களுக்காகப் பிரத்தியேகமான உதவி எண்ணை திமுக தொடங்கியுள்ளது. கட்சிச் செயல்பாட்டாளர்கள் மற்றும் அதன் சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் சேர்ந்த குழு வாக்காளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. “சராசரியாக, நாளொன்றுக்குக 2,500 தொலைபேசி அழைப்புகளை நாங்கள் பெறுகிறோம். 2002 மற்றும் 2005 SIR பட்டியலில் தங்கள் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், படிவங்களைப் பூர்த்தி செய்வது எப்படி என்று தெரியாதவர்கள் ஆகியோரிடமிருந்தும் புகார்கள் வருகின்றன” என உதவி குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அழைப்புகள் பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களிடமிருந்தும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியிலிருந்தும் வருவதாகவும் அவர் கூறினார். “சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கணக்கெடுப்புப் படிவங்கள் தொடர்பான தகவல்களைத் தேடி எங்களைத் தொடர்பு கொள்கின்றனர். திருப்பூர், கரூர், நாமக்கல் மற்றும் பிற பகுதிகளில் இருந்து இன்னும் படிவங்கள் கிடைக்காதவர்களும் உதவி கேட்டு அழைக்கின்றனர்” என்றார்.

இந்த உதவி குழு, மேலதிக உதவிக்காகக் களத்தில் உள்ள 3.5 லட்சம் BLA, BDA, மற்றும் BLC முகவர்களுக்கு கேள்விகளை கொண்டு செல்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் செல்வாக்குள்ள பகுதிகளில் குழுக்களை அமைத்துள்ளன. அவர்களது தொண்டர்கள் போதுமான அளவுத் தயாராக இருப்பதை உறுதிசெய்ய தமிழ்நாடு முழுவதும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. “இதில்  மிகப்பெரிய சவால் கணக்கெடுப்புச் செயல்முறை அல்ல. மாறாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, நீக்கங்களையும் சேர்க்கைகளையும் ஆய்ந்து விடுபட்ட வாக்காளர்களைச் சேர்ப்பதில் விழிப்புடன் இருக்க எங்கள் தொண்டர்களை நாங்கள் தயார்படுத்த வேண்டும்,” என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டு வரும் CPI(M) செயல்பாட்டாளர் தெரிவித்தார்.

SIR-இன் இரண்டாவது மற்றும் மிக முக்கியமான கட்டத்தைச் சமாளிக்கக் கட்சி ஊழியர்களையும் தொண்டர்களையும் தாங்கள் தயார் செய்வதாக MMK-ன் ஜவாஹிருல்லா கூறினார். “வரைவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, நீக்கங்களும் புதிய வாக்காளர்களின் சேர்க்கைகளும் வெளிச்சத்துக்கு வரும். அதுதான் உண்மையான சவாலாக இருக்கும்,”.

https://www.thenewsminute.com/tamil-nadu/tamil-nadu-how-election-commissions-sir-has-left-citizens-confused-and-anxious

பீகார் தேர்தல்: வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக ஆதார் நீங்கலாக 11 ஆவணங்களை ECI பட்டியலிடுகிறது; என்ன தேவை என்று சரிபார்க்கவும்

மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த செயல்முறை சட்டபூர்வமானது என்று ECI கூறினாலும், எதிர்க்கட்சிகள் இது "லட்சக்கணக்கான" உண்மையான வாக்காளர்களை, குறிப்பாக ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் விளிம்புநிலை மக்களை நீக்குவதற்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டுகின்றன.

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த திருத்தம் அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்குட்பட்டு உள்ளது என்று EC கூறியிருந்தாலும், எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மிக அருகாமை நாட்களில் நடத்துவது சந்தேகத்திற்குரியது. இது "வாக்காளர் பட்டியலை சிதைக்க" கூடும் என்றும் கூறுகின்றன.

"ஒரு ஜனநாயகத்தில் சட்டத்தை விட வெளிப்படையானது வேறு எதுவும் இல்லை. சிலரின் அச்சங்கள் இருந்தபோதிலும், SIR தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும்," என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் கூறினார்.

பட்டியல் திருத்தும் செயல்முறையின் பகுதியாக, வாக்காளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி வரும். அவர்களுடையதை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணமும் அந்த நபர், அவருடைய தந்தை, தாய் என அனைவரும் தனித்தனியாக சுய சான்றொப்பமிட்டு (Self-attested) சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பினும், ஒரு பெரிய ஆறுதல் உள்ளது: ஒரு நபரின் பெயர் ஜனவரி 1, 2003 தேதியிட்ட பீகார் வாக்காளர் பட்டியலில் இருப்பின், அதுவே போதுமான ஆதாரமாகக் கருதப்படும். அவ்வாறிருப்பின் கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இங்கே:

எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு அல்லது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் (PSU) ஊழியர்/ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ஓய்வூதியக் கட்டண ஆணை (Pension Payment Order).

ஜூலை 1, 1987 க்கு முன்னர் அரசு/உள்ளூர் அதிகாரிகள்/வங்கிகள்/அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் இந்தியாவில் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/சான்றிதழ்/ஆவணம்.

தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.

கடவுச்சீட்டு (Passport).

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/ பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன்/ கல்விச் சான்றிதழ்.

தகுதியான மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்.

வன உரிமைச் சான்றிதழ்.

தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட OBC/SC/ST அல்லது ஏதேனும் சாதிச் சான்றிதழ்.

தேசிய குடிமக்கள் பதிவேடு.

மாநில/உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு (Family Register).

அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.

இந்த வாக்காளர் திருத்தச் செயல்முறைக்கான ஆவண பட்டியலிலிருந்து ஆதார் விலக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி, பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு, தேர்தல் ஆணையம் "அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

"எப்பொழுதெல்லாம் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்கிறதோ, அதன் முகமைகள் அத்தகைய நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன," என்று அவர் கூறினார். "இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த வாக்காளர்களே இப்போது தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது விசித்திரமானது. இந்த வாக்காளர் திருத்தச் செயல்முறையிலிருந்து ஆதாரை நீக்கியதன் மூலம், எட்டு கோடி மக்கள் தங்களிடம் இல்லாத ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்," என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

EC 2003 பட்டியல்களைப் பதிவேற்றி, பெரும்பாலான வாக்காளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகிறது

பதட்டத்தைத் தணிக்கும் முயற்சியாக, பீகாரின் 7.89 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 4.96 கோடி பேர் திருத்தத்தின் போது பெற்றோரின் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று EC இந்த வாரம் தெளிவுபடுத்தியது. இது ஏற்கனவே 2003 வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டவர்கள் அல்லது அத்தகைய வாக்காளர்களுக்குப் பிறந்தவர்களை உள்ளடக்கியது.

சாவடி நிலை அதிகாரிகள் (BLOs) மற்றும் வாக்காளர்கள் இருவருக்கும் தகவல்களை எளிதாக அணுகுவதற்காக 2003 பீகார் பட்டியல்களை EC அதன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த திருத்தம் ஏழைகள், புலம்பெயர்ந்தோரை குறிவைக்கிறது என்று கூறுகின்றன

புதன்கிழமை, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), திரிணாமுல் காங்கிரஸ் (TMC), திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), சமாஜ்வாடி கட்சி (SP), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) மற்றும் இடது கட்சிகள் உட்பட 11 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து, இந்த திருத்தத்தை "பேரழிவு" என்று அழைத்தனர். ஒரு தொகுதியில் ஒருவர், அங்கு வசிப்பவர்தானா என்பதைச் சரிபார்க்கும் ECயின் வழிகாட்டுதல்கள், பீகாரின் வாக்காளர்களில் பெரும்பகுதியினராக இருக்கும் புலம்பெயர்ந்தோரின் பெரும்பான்மையோரை தகுதியிழக்கச் செய்யலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

தேர்தலுக்கு மிக அருகில் செய்யப்படும் இத்தகைய திருத்தம் ECயின் நோக்கங்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது என்று எதிர்க்கட்சி வாதிட்டது. ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால், வெளியில் பொதுவாக எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு, இந்த கட்சிகள் SIR கள செயல்பாட்டில் தீவிரமாக உடன் இணைந்துள்ளன; அதை கண்காணிக்க ஆயிரக்கணக்கான சாவடி நிலை முகவர்களை (BLAs) நியமித்துள்ளன.

அனைத்து கட்சிகளின் பாரிய கள செயல்பாடுகள்

தங்கள் எதிர்ப்புகளுக்கு மாறாக, எதிர்க்கட்சிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 47,143 சாவடி நிலை முகவர்களை (BLAs) நியமித்துள்ளது, இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) 51,964-க்கு அடுத்தபடியாக உள்ளது. காங்கிரஸ் 8,586 பேரை நியமித்துள்ளது, அதே சமயம் CPI(ML), CPM மற்றும் CPI போன்ற இடதுசாரி அமைப்புகள் தங்கள் சொந்த முகவர்களை அனுப்பியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தரப்பில், JDU, LJP மற்றும் RLSP ஆகியவை மொத்தம் 30,000 க்கும் மேற்பட்ட சாவடி நிலை முகவர்களை நியமித்துள்ளன.

அரசியலமைப்பின் சரத்து 326-ஐ பின்பற்றத் தீர்மானித்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இந்த சரத்து, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ஒரு தொகுதியில் வழக்கமாக வசித்துவரும் இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

“SIR ஆனது சரத்து 326 க்கு உட்பட்டு உள்ளது. (SIR ஐ விமர்சிக்கும் கட்சிகளிடம்) நீங்கள் சரத்து 326 உடன் உடன்படுகிறீர்களா இல்லையா என்பது நேராக கேட்கப்பட வேண்டிய கேள்வி," என்று மூத்த தேர்தல் அதிகாரி கூறினார்.

https://timesofindia.indiatimes.com/india/bihar-polls-eci-lists-11-documents-for-voter-roll-update-aadhaar-not-included-check-whats-required/articleshow/122242104.cms

பீகார்  SIR  ‘தேர்தல் முறையைச் சீர்குலைக்கும் செயல்’ என்று முன்னாள் உயர்மட்ட IAS அதிகாரிகள் எச்சரிக்கை

அரசியலமைப்பு நடத்தை குழுவின் (Constitutional Conduct group - CCG) உறுப்பினர்களான 90க்கும் மேற்பட்ட முன்னாள் உயர்மட்ட குடிமைப் பணி (IAS) அதிகாரிகள், பீகாரில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால்  மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இந்த செயல்முறையானது “வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை - அதாவது குடிமகனின் வாக்களிக்கும் உரிமை எனும் நமது ஜனநாயக அடித்தளத்தின் மீதான தாக்குதலாக உள்ளது” என்று ஆட்சேபித்துள்ளனர்.

IAS அதிகாரிகளின்  அறிக்கையில், தாங்கள் பல ஆண்டுகளாக “தேர்தல்களை நடத்துதல், மேற்பார்வையிடுதல், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் உட்பட, நமது பரந்த ஜனநாயகத்தில் இவற்றைச் செய்வதில் உள்ள சிக்கல்களை நன்கு அறிந்தவர்கள்” என்று கூறியுள்ளனர். மேலும், SIR-இன் “வாக்காளர் பட்டியலைச் சுத்தகரிப்பதன் நோக்கம், பெருமளவிலான வாக்காளர்களை, குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை (அவர்களின் குடியுரிமைக்கு ஆதாரமாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால்) வாக்குரிமை இழக்கச் செய்வதில் கொண்டு நிறுத்தும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

பீகாரில் SIR நடத்தப்படும் விதத்திற்கு எதிரான பல்வேறு மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஜூலை 28 அன்று, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைச் சேர்க்குமாறு ECI-யிடம் கேட்டுக் கொண்டது. சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர். SIR தொடர்பான இந்த மனுக்களை ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் மனுதாரர்களிடம் உறுதியளித்ததுடன், “பெரும்பாலானோர் நீக்கப்பட்டால், நாங்கள் தலையிடுவோம்” என்றும் தெரிவித்தது.

பீகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்த CCG-இன் திறந்த அறிக்கை - 29 ஜூலை 2025

நாங்கள் எங்கள் பணிக் காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றிய அகில இந்திய மற்றும் மத்திய சேவைகளின் முன்னாள் குடிமைப் பணி அதிகாரிகளின் குழு ஆவோம். ஒரு குழுவாக, எங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை, நாங்கள் பாரபட்சமின்மை, நடுநிலைமை மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கான கடமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள்.

நமது ஜனநாயக அடித்தளத்தின் -  - அதாவது வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை - குடிமகனின் வாக்களிக்கும் உரிமை - மீதான தாக்குதலாகத் தோன்றுவதைப் பற்றி நாங்கள் எங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த இன்று எழுதுகிறோம். இந்தத் தாக்குதல் நயவஞ்சகமான ஒன்றாகும்; ஏனெனில் வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிப்பதன் நோக்கம், பெருமளவிலான வாக்காளர்களை, குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை (அவர்களின் குடியுரிமைக்கு ஆதாரமாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால்) வாக்குரிமை இழக்கச் செய்வதில் கொண்டுபோய் நிறுத்தவுள்ளது.

முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட கடந்த 73 ஆண்டுகளாக, இந்தியாவில் உள்ள ஏழைகளில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இந்திய ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள மிக அடிப்படையான பங்காகக் கருதுகின்றனர். ஒருவர் தங்கள் நிலையை ஆட்சேபிக்காத வரையில், அவர்கள் குடிமக்களாகக் கருதப்படுவார்கள், மேலும் அனைவரும் வாக்காளர்களாகச் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பின்பற்றப்பட்ட கொள்கையாகும். உண்மையில், ‘புதிய’ இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். கடந்த காலத்தில், எந்த ஒரு வயது வந்த இந்தியரும் வாக்குரிமை வழங்கும் செயல்முறையிலிருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதே முயற்சியாக இருந்தது. மேலும், ECI, நாட்டின் தொலைதூர மூலைகளில் வசிக்கும் மக்களையும், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு விளிம்புநிலையில் இருந்தாலும், வாக்காளர்களாகச் சேர்ப்பதை தனது புனிதமான பொறுப்பாகக் கருதியது. தகுதியின்மை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விலக்கி வைப்பதில் அல்லாமல், சேர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

பெரும்பாலான இந்தியர்களிடம் தங்கள் குடியுரிமை நிலையை நிலைநாட்டுவதற்குப் போதுமான ஆவணங்களோ சான்றிதழ்களோ வழங்கப்படவில்லை என்பதை முழுமையாக அறிந்திருந்ததால்தான் இதுவரை, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் குடியுரிமைக்கான ஆவண ஆதாரங்களுக்கு தாராளமான மற்றும் நெகிழ்வான அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஏழைகள் அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்களை அணுகுவதில் குறிப்பாகத் துயருற்றவர்கள் என்றும், எனவே அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த முன்கூட்டிய நடவடிக்கைகள் தேவை என்றும் அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை இப்போது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது, இதனால் ஆவணங்களை அணுகுவதில் சிரமம் உள்ளவர்கள் தங்கள் வாக்குரிமைகளை இழக்க நேரிடும்.

ECI, 2003 வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, SIR 2025-இன் கீழ், “2003 வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயரைக் காட்டும், சம்பந்தப்பட்ட பகுதியின் நகல்” தவிர வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. 2003 ஆம் ஆண்டின் பட்டியல்களில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் குழந்தைகளுக்கும் தங்கள் தகுதியை நிரூபிக்க இந்த வழியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக ECI-இன் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. அடுத்த இரண்டு தசாப்தங்களில் ECI ஆல் வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர் பட்டியல்களையும் விட, 2003 வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இத்தகைய சலுகை அளிப்பது நியாயமற்றது, அது பாகுபாடு தன்மை கொண்டது.

SIR ஆனது அரசியலமைப்பின் கீழ் ECI-க்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கான  நடைமுறையாகக் கூறப்பட்டாலும், அது உண்மையில் செய்வதாவது கொள்கையையும் நடைமுறையையும் தலைகீழாக மாற்றுவதாகும்:

● குடியுரிமையில்லாதவர் என்ற அடிப்படையில் ஒருவரை ஏன் நீக்கினார்கள் என்பதை அதிகாரிகள் நிரூபிக்க வேண்டியதற்குப் பதிலாக குடியுரிமையை நிரூபிக்கும் சுமையை வாக்காளர் மீதே சுமத்துவது; 

● குடியுரிமை உரிமைகளை வழங்க அல்லது பறிக்க எந்த அரசியலமைப்பு ஆணையும் இல்லாதபோதும், அந்த அதிகாரத்தை (உள்துறை அமைச்சகத்திற்குப் பதிலாக) ECI தனதாக்கிக் கொள்வது;

● வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிக்கும் சாக்கில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) மறைமுகமாக செயல்படுத்துவது;

● தற்போது பயன்பாட்டில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் (2024 மக்களவைத் தேர்தல்களில் கூட) கலப்படம் கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது என்ற சாக்குப்போக்கின் மூலம், அவற்றை தந்திரமாக நிராகரித்து, புதிய பட்டியலை உருவாக்குவதை நியாயப்படுத்துவது;

● 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தும், இப்போது அவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் இல்லாததால், இலட்சக்கணக்கானோருக்கு வாக்குரிமையை மறுப்பது;

● தன்னிச்சையான மற்றும் விசித்திரமான நிர்வாக ஆணையின் மூலம் ஆவணங்களின் பட்டியலைக் குறிப்பிடுவது, பெரும்பாலான மக்கள் அவற்றை சரியான நேரத்தில் பெறுவதை சாத்தியமற்றது ஆக்குவது;

● வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிப்பது எனும்  சாக்கில், தன்னிச்சையான அதிகாரத்துவ முடிவுகளை பூர்த்தி செய்ய முடியாத இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவது (எ.கா. திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை போன்றவை);

● வாக்காளர்களை நீக்குவதற்கோ அல்லது சேர்ப்பதற்கோ பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அசாதாரணமான தன்னிச்சையான அதிகாரங்களை அளித்து, ஊழலில் ஈடுபட வழிவகுப்பது;

● முழு செயல்முறையையும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும் மாற்றியுள்ளது.

சீர்திருத்தம் என்ற போர்வையில் தேர்தல் முறையைச் சீர்குலைக்கக்கூடிய SIR-ஐப் பணித்தது போதாதென்று, அது செயல்படுத்தப்பட்ட மின்னல் வேகமும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (Booth Level Officers - BLOs) வழங்கப்பட்ட சாத்தியமற்ற காலக்கெடுவும், தரவை டிஜிட்டல் மயமாக்குவதற்கு வழங்கப்பட்ட மோசமான கட்டமைப்பு போன்றவைகளும் ECI வகுத்துள்ள மிக விரிவான நடைமுறைகளையே கேலிக்குள்ளாக்கிவிட்டன.

ஊடகங்களின் பல அறிக்கைகளை, குறிப்பாக புகழ்பெற்ற பத்திரிகையாளர் அஜித் அஞ்சுமின் யூடியூப் வீடியோக்களை பார்க்கையில், பாரிய அளவில் மோசடியும் கள்ளத்தனமும் நடந்திருப்பது தெளிவாகிறது. வாக்காளர் படிவங்கள் வாக்காளர்களால் அல்லாமல், அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருக்கும் BLO-களால் மொத்தமாக நிரப்பப்பட்டுள்ளன என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் கையொப்பங்கள் திட்டமிட்டு போலியாகப் போடப்பட்டுள்ளன. பல வாக்காளர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிவங்கள் மற்றும் கையொப்பங்கள் (அவர்களின் குடும்பத்தில் இறந்தவர்களின் படிவங்கள் உட்பட) அவர்களின் ஒப்புதல் மற்றும் அறிவு இல்லாமல் ECI இணையதளத்தில் நிரப்பப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. யாரும் சேர்க்கைப் படிவத்தின் வாக்காளர் நகலையோ அல்லது ஒப்புதல் ரசீதுகளையோ பெறவில்லை என்று அறிக்கைகள் வெளிவந்தபோது, கிராமப்புறப் பெண்கள் வரிசையில் நின்று, ஒப்புதலுக்கான ஆதாரமாகப் படிவங்களின் நகல்களை வைத்திருக்கும் புகைப்படங்கள் அவசர அவசரமாக எடுக்கப்பட்டன. அதே பெண்களை விசாரணை நிருபர் - அஜித் அஞ்சும் - மீண்டும் சந்தித்தபோது, அதிகாரிகள் அவர்களுக்குப் படிவங்களைக் கொடுத்து, அவர்கள் அவற்றைப் பிடித்துக் கொண்ட படங்களை எடுத்து, அவற்றைப் பிரசுரித்துவிட்டு, பின்னர் அந்தப் படிவங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறினர்.

ஜூன் 21, 2025 அன்று பாட்னாவில் நடந்த ஒரு ஜன்சுன்வாயில் (பொது விசாரணை), வஜாத் ஹபிபுல்லா (இந்தியாவின் முன்னாள் தலைமை தகவல் ஆணையர்) மற்றும் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் (பாட்னா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடுவர்களாக இருந்தனர். 14 கிராமங்களைச் சேர்ந்த 25 பேர், பல எழுத்தறிவற்ற பெண்களும் உட்பட, SIR செயல்பாட்டின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை விவரித்தனர்.  அவர்களின் விரிவான வாக்குமூலங்கள் SIR என்ற பெயரில் எவ்வளவு பெரிய மோசடி நடத்தப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. இந்த விரிவான செயல்முறையின் முதல் கட்டத்திலேயே தேர்தல் ஆணையம் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாவட்ட அமைப்பை நெறிமுறைகளை கைவிடும்படி கட்டாயப்படுத்துகிறது என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும். SIR செயல்முறையின் முதல் கட்டத்திலேயே இத்தகைய மோசடிக்கு ஆதாரம் இருப்பதானது, முழு SIR செயல்முறையையும் கேள்விக்குள்ளாக்குகின்றது. தேர்தல் ஆணையம், தான் பின்பற்றுவதாகக் கூறும் அரசியலமைப்பு செயல்முறைகளையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இந்த மோசடி ECI-இன் நேரடி மேற்பார்வையின் கீழேயே செய்யப்படுவது, புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனத்தை மோசமான இழிவுக்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போதுள்ள தரவுகளை ECI-இன் வழக்கமான அட்டவணைச் செயல்பாடுகளில் புதுப்பித்தல் மட்டுமே தேவைப்படும் சூழலில், இந்த பயனற்ற செயல்முறையைத் தொடர்வதும், நாட்டின் பிற பகுதிகளுக்கு இதை நீட்டிக்க முன்மொழிவதும், இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும், அதுவும் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை நிலைநிறுத்த வேண்டிய நிறுவனத்திடமிருந்தே இந்த அச்சுறுத்தல் வருகிறது.

தேர்தல்கள் தொடர்பான பல விஷயங்களில் ECI-க்கு நாங்கள் அளித்த பல்வேறு மனுக்களும் முறையீடுகளும் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு, அலட்சியமாக நிராகரிக்கப்பட்டதால், இந்தத் திறந்த கடிதத்தை ‘மக்களாகிய உங்களிடம்’ நாங்கள் சமர்ப்பிக்கிறோம், இதனால் பொதுக் கருத்து திரட்டப்பட்டு, தேர்தல் ஆணையத்திறகு சரியான நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த விஷயத்தை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏனெனில், CCG உறுப்பினர்களாகிய நாங்கள், தேர்தல்களை நடத்துதல், மேற்பார்வையிடுதல், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் உட்பட, நீண்ட அனுபவம் கொண்டவர்கள். மேலும் நமது பரந்த ஜனநாயகத்தில் இதைச் செய்வதில் உள்ள சிக்கல்களை நன்கு அறிந்தவர்கள்.

SATYAMEVA JAYATE

Yours faithfully Constitutional Conduct Group (93 signatories as indicated below)

1. Anita Agnihotri IAS (Retd.) Former Secretary, Department of Social Justice Empowerment, GoI

2. Anand Arni RAS (Retd.) Former Special Secretary, Cabinet Secretariat, GoI

3. G. Balachandhran IAS (Retd.) Former Additional Chief Secretary, Govt. of West Bengal

4. Vappala Balachandran IPS (Retd.) Former Special Secretary, Cabinet Secretariat, GoI

5. Gopalan Balagopal IAS (Retd.) Former Special Secretary, Govt. of West Bengal

6. Chandrashekar Balakrishnan IAS (Retd.) Former Secretary, Coal, GoI

7. Sushant Baliga Engineering Services (Retd.) Former Additional Director General, Central PWD, GoI

8. Rana Banerji RAS (Retd.) Former Special Secretary, Cabinet Secretariat, GoI  

9. Sharad Behar IAS (Retd.) Former Chief Secretary, Govt. of Madhya Pradesh

10. Aurobindo Behera IAS (Retd.) Former Member, Board of Revenue, Govt. of Odisha

11. Madhu Bhaduri IFS (Retd.) Former Ambassador to Portugal

12. Pradip Bhattacharya IAS (Retd.) Former Additional Chief Secretary, Development & Planning and Administrative Training Institute, Govt. of West Bengal 13. Nutan Guha Biswas IAS (Retd.) Former Member, Police Complaints Authority, Govt. of NCT of Delhi

14. Meeran C Borwankar IPS (Retd.) Former DGP, Bureau of Police Research and Development, GoI

15. Ravi Budhiraja IAS (Retd.) Former Chairman, Jawaharlal Nehru Port Trust, GoI

16. Maneshwar Singh Chahal IAS (Retd.) Former Principal Secretary, Home, Govt. of Punjab

17. R. Chandramohan IAS (Retd.) Former Principal Secretary, Transport and Urban Development, Govt. of NCT of Delhi

18. Ranjan Chatterjee IAS (Retd.) Former Chief Secretary, Govt. of Meghalaya & former Expert Member, National Green Tribunal

19. Kalyani Chaudhuri IAS (Retd.) Former Additional Chief Secretary, Govt. of West Bengal

20. Purnima Chauhan IAS (Retd.) Former Secretary, Administrative Reforms, Youth Services & Sports and Fisheries, Govt. of Himachal Pradesh

21. Gurjit Singh Cheema IAS (Retd.) Former Financial Commissioner (Revenue), Govt. of Punjab

22. F.T.R. Colaso IPS (Retd.) Former Director General of Police, Govt. of Karnataka & former Director General of Police, Govt. of Jammu & Kashmir

23. Anna Dani IAS (Retd.) Former Additional Chief Secretary, Govt. of Maharashtra

24. Vibha Puri Das IAS (Retd.) Former Secretary, Ministry of Tribal Affairs, GoI

25. P.R. Dasgupta IAS (Retd.) Former Chairman, Food Corporation of India, GoI

26. Pradeep K. Deb IAS (Retd.) Former Secretary, Deptt. Of Sports, GoI

27. Nitin Desai Former Chief Economic Adviser, Ministry of Finance, GoI

28. M.G. Devasahayam IAS (Retd.) Former Secretary, Govt. of Haryana

29. Kiran Dhingra IAS (Retd.) Former Secretary, Ministry of Textiles, GoI

30. Sushil Dubey IFS (Retd.) Former Ambassador to Sweden

31. A.S. Dulat IPS (Retd.) Former OSD on Kashmir, Prime Minister’s Office, GoI

32. K.P. Fabian IFS (Retd.) Former Ambassador to Italy 33. Prabhu Ghate IAS (Retd.) Former Addl. Director General, Department of Tourism, GoI

34. Suresh K. Goel IFS (Retd.) Former Director General, Indian Council of Cultural Relations, GoI

35. S.K. Guha IAS (Retd.) Former Joint Secretary, Department of Women & Child Development, GoI

36. H.S. Gujral IFoS (Retd.) Former Principal Chief Conservator of Forests, Govt. of Punjab

37. Meena Gupta IAS (Retd.) Former Secretary, Ministry of Environment & Forests, GoI

38. Sajjad Hassan IAS (Retd.) Former Secretary, Govt. of Manipur

39. Rasheda Hussain IRS (Retd.) Former Director General, National Academy of Customs, Excise & Narcotics

40. Kamal Jaswal IAS (Retd.) Former Secretary, Department of Information Technology, GoI

41. Najeeb Jung IAS (Retd.) Former Lieutenant Governor, Delhi

42. Sanjay Kaul IAS (Retd.) Former Principal Secretary, Govt. of Karnataka

43. Gita Kripalani IRS (Retd.) Former Member, Settlement Commission, GoI

44. Ish Kumar IPS (Retd.) Former DGP (Vigilance & Enforcement), Govt. of Telangana and former Special Rapporteur, National Human Rights Commission

45. Subodh Lal IPoS (Resigned) Former Deputy Director General, Ministry of Communications, GoI

46. Sandip Madan IAS (Resigned) Former Secretary, Himachal Pradesh Public Service Commission

47. P.M.S. Malik IFS (Retd.) Former Ambassador to Myanmar & Special Secretary, MEA, GoI

48. Harsh Mander IAS (Retd.) Govt. of Madhya Pradesh 49. Amitabh Mathur IPS (Retd.) Former Special Secretary, Cabinet Secretariat, GoI

50. Aditi Mehta IAS (Retd.) Former Additional Chief Secretary, Govt. of Rajasthan

51. Avinash Mohananey IPS (Retd.) Former Director General of Police, Govt. of Sikkim

52. Satya Narayan Mohanty IAS (Retd.) Former Secretary General, National Human Rights Commission 53. Sudhansu Mohanty IDAS (Retd.) Former Financial Adviser (Defence Services), Ministry of Defence, GoI 54. Jugal Mohapatra IAS (Retd.) Former Secretary, Department of Rural Development, GoI

55. Ruchira Mukerjee IP&TAFS (Retd.) Former Advisor (Finance), Telecom Commission, GoI

56. Anup Mukerji IAS (Retd.) Former Chief Secretary, Govt. of Bihar

57. Deb Mukharji IFS (Retd.) Former High Commissioner to Bangladesh and former Ambassador to Nepal

58. Shiv Shankar Mukherjee IFS (Retd.) Former High Commissioner to the United Kingdom

59. Gautam Mukhopadhaya IFS (Retd.) Former Ambassador to Myanmar

60. T.K.A. Nair IAS (Retd.) Former Adviser to Prime Minister of India

61. Ramesh Narayanaswami IAS (Retd.) Former Chief Secretary, Govt. of NCT of Delhi

62. P. Joy Oommen IAS (Retd.) Former Chief Secretary, Govt. of Chhattisgarh

63. Amitabha Pande IAS (Retd.) Former Secretary, Inter-State Council, GoI

64. Maxwell Pereira IPS (Retd.) Former Joint Commissioner of Police, Delhi

65. R. Poornalingam IAS (Retd.) Former Secretary, Ministry of Textiles, GoI

66. N.K. Raghupathy IAS (Retd.) Former Chairman, Staff Selection Commission, GoI

67. V. Ramani IAS (Retd.) Former Director General, YASHADA, Govt. of Maharashtra

68. M. Rameshkumar IAS (Retd.) Former Member, Maharashtra Administrative Tribunal

69. K. Sujatha Rao IAS (Retd.) Former Health Secretary, GoI

70. Satwant Reddy IAS (Retd.) Former Secretary, Chemicals and Petrochemicals, GoI

71. Vijaya Latha Reddy IFS (Retd.) Former Deputy National Security Adviser, GoI

72. Julio Ribeiro IPS (Retd.) Former Director General of Police, Govt. of Punjab

73. Aruna Roy IAS (Resigned)

74. Deepak Sanan IAS (Retd.) Former Principal Adviser (AR) to Chief Minister, Govt. of Himachal Pradesh

75. G.V. Venugopala Sarma IAS (Retd.) Former Member, Board of Revenue, Govt. of Odisha

76. N.C. Saxena IAS (Retd.) Former Secretary, Planning Commission, GoI

77. Abhijit Sengupta IAS (Retd.) Former Secretary, Ministry of Culture, GoI

78. Aftab Seth IFS (Retd.) Former Ambassador to Japan 79. Ashok Kumar Sharma IFoS (Retd.) Former MD, State Forest Development Corporation, Govt. of Gujarat

80. Ashok Kumar Sharma IFS (Retd.) Former Ambassador to Finland and Estonia

81. Aruna Sharma IAS (Retd.) Former Secretary, Steel, GoI

82. Navrekha Sharma IFS (Retd.) Former Ambassador to Indonesia

83. Raju Sharma IAS (Retd.) Former Member, Board of Revenue, Govt. of Uttar Pradesh

84. K.S. Sidhu IAS (Retd.) Former Principal Secretary, Govt. of Maharashtra

85. Mukteshwar Singh IAS (Retd.) Former Member, Madhya Pradesh Public Service Commission

86. Padamvir Singh IAS (Retd.) Former Director, LBSNAA, Mussoorie, GoI

87. Tara Ajai Singh IAS (Retd.) Former Additional Chief Secretary, Govt. of Karnataka

88. Tirlochan Singh IAS (Retd.) Former Secretary, National Commission for Minorities, GoI

89. Prakriti Srivastava IFoS (Retd.) Former Principal Chief Conservator of Forests & Special Officer, Rebuild Kerala Development Programme, Govt. of Kerala

90. Anup Thakur IAS (Retd.) Former Member, National Consumer Disputes Redressal Commission

91. P.S.S. Thomas IAS (Retd.) Former Secretary General, National Human Rights Commission

92. Geetha Thoopal IRAS (Retd.) Former General Manager, Metro Railway, Kolkata

93. Ashok Vajpeyi IAS (Retd.) Former Chairman, Lalit Kala Akademi.

https://www.newsclick.in/bihar-sir-process-capable-subverting-electoral-process-warn-former-top-civil-servants

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு