அமெரிக்க பாலியல் புரோக்கரும், அகில உலகத் தலைவர்களும்!

அறம் இணைய இதழ்

அமெரிக்க பாலியல் புரோக்கரும், அகில உலகத் தலைவர்களும்!

அமெரிக்காவின் பொதுச் சமூகம் எப்படி விழிப்புணர்வுடன் அரசியல் தலைவர்களை அணுகுகிறது என்பதற்கு இந்த பாலியல் குற்றவாளியும், புரோக்கருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் அம்பலப்பட்டதே சாட்சியாகும். சுப்பிரமணியசாமியை தடுக்கலாம், அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தி வருகிறதே! டிரம்ப்பே தப்ப முடியவில்லை. மோடி எம்மாத்திரம்?

உலகப் பிரச்சித்தி பெற்ற பாலியல் குற்றவாளியாக தற்போது அறியப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2005-ல் முதன்முறையாக கைதாகும் வரை அகில உலக அளவில் நிதியாளராகவே அறியப்பட்டார்.

பல மிகப் பெரிய நிறுவனங்களுக்கு நிதி திரட்டி தருவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் அதற்காக வங்கிகள் மற்றும் தனி நபர் தொடர்புகளைக் கொண்டிருந்தார். அத்துடன் தன் மாளிகையிலும், ஸ்டார் ஹோட்டல்களிலும் அடிக்கடி பல கேளிக்கை விருந்துகளை இவர் நடத்தி வந்தார். இந்த கேளிக்கை விருந்துகளில் பிரபல அழகிகளை அழைப்பதோடு அரசியலிலும், சினிமாவிலும், தொழில் துறையிலும் உள்ள உச்சபட்சமானவர்களையும் அழைத்துள்ளார். இந்த நிலை வரையிலும் அவர் மீது யாரும் குற்றம் சொல்லவில்லை.

2005 ஆம் ஆண்டு ஒரு 14 வயது சிறுமி தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டினார். அது பல கட்ட விசாரணையில் நிருபணமாகி 2008 ஆம் ஆண்டு சிறை சென்றார். அதன் பிறகு இவர் மீது பல பெண்கள் புகார் சொல்ல துணிவு பெற்றனர். அந்தப் பெண்கள் ”இவரால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு சீரழிக்கப்பட்டோம்” என்றனர். எனவே, இவர் மீண்டும் கைதானதில் விசாரணை வேகப்பட்டது.

‘இந்த நபர் தொடர்பாக அனைத்து விபரங்களையும் அள்ளி சேகரியுங்கள். எந்த அரசியல் அழுத்ததிற்கும் அடிபணிய வேண்டியதில்லை’ என அமெரிக்க நீதித் துறை கட்டளையிட்டது. ஆயினும் அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் இருக்குமா? அதையும் கடந்து பல்லாண்டுகளாக அமெரிக்க FBI பல ஆவணங்களை திரட்டியது. சர்வதேச அளவில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புகள் இருந்ததால் 35 லட்சம் பக்கங்கள் வரக் கூடிய அளவுக்கு ஆதாரங்கள் சிக்கின. இதில் 1,80,000 புகைப்படங்கள், மற்றும் 2,000 வீடியோக்கள் சிக்கின.

இதில் பல பிரபலங்களின் பெயர்கள் இருந்தன. டொனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரோ, டான்சர் மைக்கேல் ஜாக்சன்… அதனால் நீதித் துறை ஒன்றை தெளிவுபடுத்தியது. ”குற்றவாளியின் விருந்தில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் குற்றவாளிகள் அல்ல. அதே சமயம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 லேயே இறந்துவிட்ட நிலையில், அவரது வாக்குமூலத்தை பெற வழியில்லை. அப்படி தொடர்பில் இருந்தவர்கள் ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் என்ன உதவி பெற்றனர் என்பதைக் கொண்டே நாம் முடிவுக்கு வர முடியும்” என்றதை அனைவரும் ஏற்றனர்.

‘பிரபல கோடீஸ்வரர் பில்கேட்ஸுக்கு ரஷ்ய பெண்களின் மீது ஆசை இருந்தது. அவருக்கு நான் ரஷ்ய பெண்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்’ என்பதாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன் டைரியில் எழுதி உள்ளான். அவன் டிரம்ப்பையும் விட்டு வைக்கவில்லை. டிரம்ப் பல முறை என் விருந்திற்கு வந்துள்ளார் எனக் கூறியுள்ளான். டிரம்ப் அதை மறுக்கவில்லை. ”அவனை எனக்கு 1987 முதல் தெரியுமே. ஆனால், 2004 –க்கு பிறகு அவனோடு எனக்கு தொடர்பில்லை” என்றார்.

அமெரிக்க விர்ஜின் தீவுகளில் இரண்டை வாங்கியுள்ளார், ஜெஃப்ரி எப்ஸ்டீன் 1998ல் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் என்ற தீவையும், 2016-ல் கிரேட் செயின்ட் ஜேம்ஸ் தீவையும் வாங்கிய பிறகு அவற்றை பல பிரபலங்களின் காமகளியாட்டங்கள் அரங்கேற உதவியுள்ளார். தானும் அவ்விதமே காமகளியாட்டங்களில் திளைத்துள்ளார். இந்த தீவுகளில் தான் அவர் பெண்கள், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டு முதல் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் வைத்து 13 அல்லது 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை டிரம்ப் பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாக அதிலுள்ள ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது. இந்த நிகழ்வில் அந்தச் சிறுமி தற்காப்புக்காக டிரம்ப்பைக் கடித்ததாகவும், அதற்காக அவர் அந்தச் சிறுமியின் முகத்தில் தாக்கியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் அமெரிக்க அரசியல் களத்தையும், சமூகத்தையும் சூடுபடுத்தி உள்ளது. இது மட்டுமின்றி இந்த சம்பவம் குறித்த அந்தப் பெண்ணின் தோழி, ”டிரம்ப் தகாத முறையில் உறவு கொள்ள நிர்பந்தித்தால் என் தோழி கடிக்கக் கூடாத இடத்தில் கடித்ததில் டிரம்ப் ஆத்திரத்தில் அவளைக் குத்தினார்” என்றும் எப்.பி.ஐயிடம் வாக்கு மூலம் தந்துள்ளார்.

ஆனால், இந்த ஆவணம் டிரம்பை சிக்க வைக்க போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்ற வாதங்களும் எழுந்துள்ளன. ”நான் பயப்படவில்லை. விசாரித்து உண்மையை வெளியிடுங்கள்…” என்று சொன்னார் டிரம்ப். ”சொன்னால் போதாது. அனைத்தையும் அம்பலப்படுத்த, அதற்கான தனிச் சட்டம் நிறைவேற்றுங்கள்” என்றது, அமெரிக்க சிவில் சமூகம். டிரம்பும் கையெத்திட்டார், நவம்பர் 2025-ல். அந்த சட்டத்தின் மூலம் டிசம்பர் -19 தொடங்கி பல உண்மைகள் அம்பலப்பட்டு அகில உலகமே அதிர்ந்து கொண்டுள்ளது.

அதில் இந்தியப் பிரதமர் மோடியைக் குறித்தும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதி உள்ளார். மோடியைக் குறித்த ஜெஃப்ரி எப்ஸ்டீனின் இ மெயில் மற்றும் வாட்ஸ் அப் சார்ட்டுகள் இவருக்கும் நெருங்கிய உறவும், ஆழமான பிணைப்பும் உள்ளதை உறுதிபடுத்துகின்றன. மோடியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டதோடு அல்லாமல் மோடியிடம் சீனா தொடர்பான அமெரிக்க வெறுப்பையும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விதைத்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார். பாகிஸ்தான் தொடர்பான மோடியின் கோபங்களையும் தான் அவதானித்தாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் உரையாடல் தெரிவிக்கிறது. ஆக, இவன் பாலியல் புரோக்கர் மட்டுமல்ல, அதையும் தாண்டி அமெரிக்க நலன்களுக்காக இந்திய பிரதமரை பயன்படுத்திக் கொள்ளவே காய் நகர்த்தி உள்ளான் என்பதை நாம் உணரலாம்.

தன்னுடைய ஆலோசனையின் பேரில் நரேந்திர மோடி 2017-ஆம் ஆண்டு (ஜுலை மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை) இஸ்ரேல் சென்று அமெரிக்க அதிபரின் நலனுக்காக பாட்டுப்பாடி டான்ஸ் ஆடினார் என்றும், அது பலனளித்தது என்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறிப்பிட்டு உள்ளார்.

இதைத் தான் இங்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. ’’பிரபல பாலியல் புரோக்கர் ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் ஏன் மோடி ஆலோசனை பெற்றார்? அவர் கூறியபடி இஸ்ரேல் சென்று டான்ஸ் ஆட வேண்டிய அவசியம் ஏன் வந்தது, மோடிக்கு? அது எந்த விதத்தில் டிரம்பிற்கு பலன் அளித்தது?  இது ஏதோ தனிப்பட்ட நபர் குறித்த விவகாரமல்ல, இந்தியாவின் கெளரவம் சம்பந்தப்பட்டது. ஆகவே நாட்டு மக்களிடம் மோடி விளக்கமளிக்க வேண்டும்…’’ என காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் செய்தி வெளியாவதற்கு முன்பே நம்ம ஊரு சுப்பிரமணியசாமி மோடியை இது குறித்து குற்றம் சாட்டியது கவனிக்கதக்கது. மோடி பிரம்மச்சாரி. இந்திய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்று பிரச்சாரம் செய்து அவருக்கு ஒரு புனித பிம்மத்தை கட்டி எழுப்பினார்கள். ஆனால், மோடிக்கு பல அமெரிக்க பெண்களுடன் தொடர்புகள் உள்ளது. அவருக்கு மட்டுமின்றி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்பூரிக்கும் இது போன்ற சட்டவிரோத பாலியல் தொடர்புகள் உள்ளது. மோடி அமெரிக்க பெண்களுடன் மோடி சேர்ந்துள்ள  போட்டோக்கள் அமெரிக்க ஏஜென்சியிடம் உள்ளன. இதைக் கொண்டு பிளாக்மெயில் அரசியல் செய்வார்கள். மோடி அமெரிக்க அழுத்தங்கள் அனைத்திற்கும் பணிந்து போவதற்கு இதுவே காரணம். இது இந்தியாவை பாதிக்கக் கூடியது என்றார், சுப்பிரமணியசாமி.

மோடி பிரம்மசாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என பகிரங்கமாகச் சொல்லிய சுப்பிரமணியசாமி என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

சுப்பிரமணியசாமியின் வாயை அடைத்தாகிவிட்டது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்கா மேலும் சில தகவல்களை அம்பலபடுத்தும் போது மோடியின் நிலை என்னவென்று பார்ப்போம்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23900/jeffrey-erstein-trump-modi/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு