ஏன் வேண்டாம் மேகேதாட்டு அணை?
எழுத்தாளர் நக்கீரன்
“மேகேதாட்டு அணை என்பது ஒரு சமநிலை நீர்த்தேக்கம்தான் (Balancing Reservoir). எனவே, அச்சப்பட தேவையில்லை" என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் மாண்புமிகு டி.கே.சிவகுமார் அவர்கள்.
ஒரு சமநிலை நீர்த்தேக்கம் என்பது விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான வேறுபாடுகளை நிர்வகிக்க உதவும் ஒரு நீர்த்தேக்கம் ஆகும். அதாவது, பயன்பாடு குறைவாக இருக்கையில் உபரி நீரைச் சேமித்து, பயன்பாடு அதிகரிக்கும் நேரங்களில் அதை வெளியிடுவதாகும். கர்நாடகம் இதை செய்யும் என்பதற்கு எந்த நம்பத்தகுந்த சான்றுகளும் இதுவரை கிடையாது.
கடந்த காலங்களில் காவிரியைத் தடுத்து கர்நாடகம் பல நீர்த்தேக்கங்களை கட்டியுள்ளது. நீர்த் தேக்கங்களுள் இருவகைகள் உள்ளன. ஒன்று ‘தக்கவைக்கும் நீர்த்தேக்கம்’ (Retention Reservoir), மற்றொன்று ‘தடுப்பு நீர்த்தேக்கம்’ (Detention Reservoir).
தக்க வைக்கும் நீர்த்தேக்கம் என்பதற்கு நீரைச் சிறிது காலத்துக்குத் தேக்கி வைப்பதே நோக்கம். முழுவதும் தேக்குவதில்லை. எடுத்துக்காட்டாக மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சி. ஆனால் அதில் மூன்று முறை நீரை நிரப்பலாம். வெள்ளம் வருகையில் தேக்கி வைத்துத் தேவையானபோது திறந்து விடலாம். இப்படிதான் முன்பு 309 டிஎம்சி வரை நீரைப் பாசனத்துக்கு நாம் பயன்படுத்தி வந்தோம்.
தடுப்புத் நீர்த்தேக்கம் என்பது நேர்மாறானது. கீழ் மடையில் உள்ளவர்களுக்கு நீர் வழங்குவதை அது விரும்பாது. மொத்த நீரையும் தமக்கென தடுத்துத் தேக்குவதே அதன் நோக்கம். கர்நாடகாவின் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்ததே என்கிறார் முன்னாள் பாசனப் பொறியாளர், சி. மணவாளன்.
முறையான அனுமதி இன்றிக் கட்டப்பட்டுள்ள கர்நாடகா நீர்த் தேக்கங்களின் எண்ணிக்கை 19 என்றும், இவற்றில் 175 டிஎம்சி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள முடியும் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர், கோ.ஜோதி. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவும் (177 டிஎம்சி) ஏறக்குறைய இதே அளவுதான்.
எனவே, மேகேதாட்டு அணையும் உறுதியாக ஒரு தடுப்பு நீர்த் தேக்கமாகத்தான் அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. கடந்த கால வரலாறு அப்படி இருக்கையில் கர்நாடகா முதல்வர், “இதில் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டுக்குத்தான் பலன் அதிகம்” என்று கூறியிருப்பது அவல நகைச்சுவையே.
மேகேதாட்டுத் திட்டத்தைத் ‘தென்னிந்தியாவின் இதயம்’ என்று வருணிக்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார். அதை இப்படியும் சொல்லலாம். மேகேதாட்டு, ‘சுற்றுச்சூழலின் புற்றுநோய்.’
இப்படிதான் ஒருகாலத்தில் அணைகளை, ‘இந்தியாவின் நவீன ஆலயங்கள்’ என்று வருணித்தார் அன்றைய பிரதமர் ஜவர்கர்லால் நேரு. அக்காலத்தில் அதுதான் அறிவியல் பார்வையாக இருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் அறிவியல் வளர்ந்த பிறகு அந்த ஆலயங்கள் இன்று பெரும் எதிர்ப்புகளைச் சந்திக்கின்றன. ஓர் அணைக் கட்டுவதாக அறிவித்தாலே போதும், உடனே போராட்டங்கள் வெடிக்கின்றன. உலகம் முழுதும் இதே நிலைதான்.
அணைகளை பேரணைகள், சிற்றணைகள் என இரு பிரிவாகப் பிரிக்கலாம். 15 மீட்டருக்கு மேல் உயரமுள்ள அணைகள் பேரணைகள் என்ற வகைப்பாட்டில் வரும். அதேசமயம், 15 மீட்டருக்குக் கீழ் 5 மீட்டர் உயரம் வரை ஓர் அணை இருந்து அதன் கொள்ளளவு 30 இலட்சம் கனமீட்டருக்கு மேல் இருக்குமானால் அதுவும் பேரணையாகவே கணக்கில் கொள்ளப்படும். இந்த அளவீட்டின்படி உலகில் ஏறக்குறைய 45,000 பேரணைகள் உள்ளன.
கடந்த நூற்றாண்டில் மட்டும் மொத்தம் 8 இலட்சம் சிற்றணைகள் கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே சீனாவுக்கு அடுத்து இந்திய ஒன்றியத்தில்தான் அதிகமான அணைகள் உள்ளன. இவற்றில் விடுதலைக்குப் பிறகு கட்டப்பட்ட அணைகள் மட்டும் ஏறத்தாழ 3500 ஆகும்.
பேரணையின் கொள்ளளவு வரையறை முப்பது இலட்சம் கனமீட்டர். மேகேதாட்டு அணையின் உத்தேசக் கொள்ளளவு 67 டிஎம்சியாகும். அணையின் உயரம் என்று பார்த்தாலும் இது ஒரு 99 மீட்டர் உயர கான்கிரீட் புவியீர்ப்பு அணை என விளக்கப்பட்டுள்ளது. ஆக, இரு வகைகளிலும் இது பேரணை வகைப்பாட்டில்தான் வருகிறது.
இதுபோன்ற அணைகளால் ஏற்படும் சூழலியல், சமூக, பொருளாதார விளைவுகளை ஆய்வு செய்ய உலகளாவிய நிலையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ‘அணைகளுக்கான உலக ஆணையம்’ (WCD - World Commissions on Dams). இந்த ஆணையம் தன் ஆய்வுகளுக்குப் பிறகு, ‘அணைகள் அவை கட்டப்பட்ட நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை’ என்று அறிவித்தது.
ஆணையம், அணைகளின் வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது. அத்துடன் கட்டுமானத்தில் ஏற்படும் காலதாமதம், அதிகரிக்கும் செலவுகள், பராமரிப்புச் செலவு அதிகரிப்பு, சூழலியல் சிக்கல்களான நீர்த் தேங்குதல், உப்புநீர் ஊடுருவல் போன்ற பல சிக்கல்களை ஆணையம் கண்டறிந்தது.
அத்துடன், சுற்றுச்சூழல் சிக்கல்களான பல்லுயிர் செறிவுமிக்க இடங்களில் வெள்ளப்பெருக்கு, நீர்வாழ் உயிரிகளின் வலசைக்கும், ஊட்டச்சத்துச் சுற்றுக்கும் ஏற்படும் தடைகள், தடம் மாறுகின்ற வெள்ளப்பகுதிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஓர் அணை அது கட்டப்பட்ட நோக்கத்தை அடையாத வரை அது முழுமையற்ற அணையே ஆகும். அது கட்டுமானமாகவும் இருக்கலாம் அல்லது பாசன இலக்காகவும் இருக்கலாம். இவ்வகையில் உலகிலேயே கட்டி முடிக்கப்படாத அணைகள் அதிகம் இருப்பது இந்திய ஒன்றியத்தில்தான் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளுதல் அவசியம். இனி தமிழ்நாட்டில் அணைக் கட்டினாலும் இதுவே உண்மை.
மேலும், காலநிலை மாற்ற அபாயத்தில் நீர்த் தேக்கங்கள் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கின்றன. குறிப்பாக நம்மை போன்ற வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்கள், பசுமைக்குடில் வளி வெளியீட்டில் முதன்மைப் பங்கு வகிப்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், தேசிய கார்பன் பதிவுகள் இதைக் கணக்கில் கொள்வதே இல்லை. கர்நாடகா அரசும்தான்.
2007ஆம் ஆண்டிலேயே பிரேசில் ஆய்வாளர்கள் அணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வெளியீட்டில் மனிதரால் உருவாக்கப்படும் காலநிலை மாற்றத்தின் பங்கு ஏறக்குறைய 4% ஆக இருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளனர். இது அனைத்து மனிதர்களாலும் உருவாக்கப்படும் மீத்தேன் வெளியீட்டில் ஏறக்குறைய கால் பங்காகும்.
இதுபோன்ற சுற்றுச்சூழல் காரணங்களால் 1990லேயே ஐக்கிய அமெரிக்காவின் 3600 கோடி டாலர் மதிப்பிலான இருஃபோர்க்ஸ் அணைத்திட்டத்தை அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. நம் நாட்டிலோ சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு டாய்லெட் பேப்பர் மதிப்புக்கூட கிடையாது.
அணைகளை ‘நீர்ப்பாசனத் திட்டங்களின் தாய்’ என்பார்கள். அணைகள், அதற்கு மட்டும் தாயல்ல. நிலநடுக்கங்களுக்கும் அதுவே தாய். நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்களை ஆங்கிலத்தில் RIS (Reservoir – induced Seismicity) என்று குறிப்பிடுவர். ஒரு நீர்த்தேக்கத்தில் பேரளவில் செயற்கையாகத் தேக்கப்படும் நீர் அதைச் சுற்றியுள்ள நிலங்களின் நுண்துளைகள், நிலவெடிப்புகளில் தங்கி நிலத்துக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். அது நில நடுக்கங்களைத் தூண்டும் என்கின்றனர் புவி அறிவியலாளர்கள்.
ஓரிடத்தில் கனத்த நீரிடி (Cloud Bursting) பொழிந்தால்கூட அவ்விடத்தில் நில அழுத்தம் ஏற்பட்டு அது நில அதிர்வினை உண்டாக்கும் வாய்ப்புள்ளது என்பது புவி அறிவியல் பாடம். இமயமலை போன்ற புவியியல் நொய்மைப் பகுதிகளில் பொழியும் நீரிடிகள் இவ்வாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நீரிடிக்கே இந்நிலைமை எனில், மாபெரும் அணை நீரின் அழுத்தம் பற்றி யோசித்துப் பார்க்கவும்.
கண்டத்தட்டுக்களின் நகர்வால் நிலம் ஏற்கனவே அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், இதுபோன்ற செயற்கை உருவாக்கங்கள் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதுவே நில அதிர்வுகளுக்குக் காரணமாகிறது. தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருக்கும் கண்டத் தட்டுக்களின் நகர்வு நில அமைப்பில் பல திடீர் மாற்றங்களை உருவாக்குவது இயல்பு. நிலநடுக்கம், ஆழிப்பேரலை, ஆறுகளின் திசைமாற்றம், நிலப்பிளவு போன்றவை இதில் அடங்குகின்றன.
ஒரு காலத்தில் காவிரி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து இன்றைய பழவேற்காட்டுக்கு அருகே கடலில் கலந்துக் கொண்டிருந்தது என்பது புவியியல் வரலாறு. பின்னர் கண்டத்திட்டுகளின் நகர்வால் நம் நிலத்தின் ஓரிடத்தில் வடக்கு தெற்காக ஒரு பெரும் பிளவு ஏற்படுகிறது. அதனால், காவிரியின் நீரோட்டம் கிழக்கிலிருந்து தெற்கு திசைக்கு மாறி இன்றைய மேட்டூர் பகுதிக்குத் திரும்புகிறது. அந்த நிலப்பிளவுதான் இன்றைய ஒகனேக்கல் அருவி. இவை செய்மதி (செயற்கைக் கோள்) உதவியால் கண்டறியப்பட்டுள்ள புவியியல் . ஆய்வாகும். மேகேதாட்டு அணை ஒகேனக்கலில் இருந்து வெகு தொலைவில் இல்லை.
மீண்டும் நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்களுக்கு வருவோம். இத்தகைய நிலநடுக்கங்கள் உலகில் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளன. முதல் நிலநடுக்கம் ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ ஆற்றின் மீது கட்டப்பட்ட ஹூவர் அணையின் அருகே 1930-ல் பதிவானது. அது அமெரிக்காவில்தானே நமக்கென்ன என்று அலட்சியமாக நினைக்கலாம். இந்த RIS நிகழ்வு நமது இந்திய ஒன்றியத்திலும் நடந்துள்ளது. 1967 டிசம்பர் 10 அன்று மகாராட்டிரா மாநிலம் கொய்னாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அன்று அணைகளால் தூண்டப்பட்ட நிலநடுக்கத்திலேயே பெரியதாக இருந்தது என்கிறார் ஆய்வாளர் ஹெச்.கே. குப்தா. காரணம் அதில் 200 பேர்கள் உயிரிழந்தனர்.
உலகிலேயே அணைகளைத் தீவிரமாக காதலிப்பது சீன அரசாங்கம்தான். கடந்த 2008 மே 12இல் சீனாவின் சிப்பிங்பு அணையால் உருவான சிச்சுவான் நிலநடுக்கத்தில் 68,000 பேர் மரணம் அடைந்தனர். அப்போது இந்தியாவின் 200 என்ற பழைய எண்ணிக்கை சிறிய எண்ணாக மாறியது. அணையின் உயரம் 100 மீட்டருக்கு மேல் போனால் நிலநடுக்கம் உருவாவற்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் திட்டமிடப்பட்டுள்ள மேகேதாட்டு அணையின் உயரத்தை 99 மீட்டரோடு நிறுத்தி விட்டார்கள் போலும்.
மேகேதாட்டு அணை ஒரு நீர்மின் அணை (Hydroelectric Dam) என்கிறார் கர்நாடக முதல்வர். அதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்கிறார். முன்னொரு காலத்தில் நீர் மின்சாரமே முதன்மை ஆதாரமாக இருந்தது என்பது உண்மைதான். அதற்கெனவே பல அணைகளும் கட்டப்பட்டன. இன்று பல்வேறு காரணங்களால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.
பெரிய நீர்மின் திட்டங்களுக்கு எதிரான குறிப்பிடத்தக்க குறைபாடு, அதற்காகச் செலவிடப்படும் மாபெரும் தொகையாகும். திட்டமிடலில் ஏற்படும் தவறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழல் போன்றவற்றின் காரணமாக அணைகள் 44% காலத்தாமதத்தையும், 96% திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக செலவு மீறல்களையும் சந்திக்கின்றன என்கிறது Energy Policyயின் ஆய்வுக் கட்டுரை. மேலும், காலப்போக்கில் நீர்த்தேக்கங்களில் சேரும் வண்டல் மண் அதன் பராமரிப்புச் செலவை அதிகரிக்கிறது.
"2020ஆம் ஆண்டு நீர்ப் புத்தகம்" என்ற அறிக்கை, (Water Year Book: Central Asis and Around the Globe 2020) உலகிலுள்ள பெரும்பாலான நீர்மின் திட்ட மேம்பாடுகள் நிலைத்தன்மையற்றவை என்று கூறியுள்ளன. மேலும் அவை வளர்ச்சி நோக்கங்களுக்கு பாதகமாக நடைபெறுகின்றன என்பதையும் விளக்குகிறது. .
‘நீர்மின் திட்டங்களிலிருந்து விலகும் ஒரு கொள்கை முடிவு தேவைப்படுகிறது’ என்று ‘சர்வதேச ஆறுகள்’ அறிக்கை வலியுறுத்துகிறது. காரணம், நீர்மின் திட்டத்தை நம்பியிருந்த பல நாடுகள் நீர் வறட்சியின் காரணமாக மின் பற்றாக்குறையையும், கடும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றன. சான்றாக 66% நீர்மின் திட்டத்தைச் சார்ந்திருந்த கென்யா, வறட்சியினால் உருவான மின் பற்றாக்குறையை, ஜெனரேட்டர்களைக் கொண்டு ஈடுசெய்து வருவதால் தொடர்ந்து பொருளாதார இழப்புக்குள்ளாகி வருகிறது.
விக்கிபீடியாவில் தேடினாலே, ‘தோல்வியடைந்த நீர்மின் திட்டங்களின் பட்டியல்’ என்று உலகளாவிய பட்டியல் கிடைக்கும். அதில் கர்நாடகாவின் பக்கத்து மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்த ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. அதில் 1987-ல் ஓராண்டுக்கு மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது ஏன்? 2009 அக்டோபர் 2இல் அந்த அணைக்கு நேர்ந்த விபத்தின் காரணம் என்ன? போன்ற விபரங்கள் கிடைக்கும். இதையெல்லாம் கர்நாடக முதல்வர் அறிந்திருக்க மாட்டாரா என்ன?
வழக்கம் போலவே இதன் பின்னேயும் ஒரு கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது. பொதுவாக காலநிலை மாற்ற விளைவின் காரணமாக புவி நிலப்பரப்பில் உள்ள நீர் இருப்பு குறைந்து வருகிறது. இத்துடன் நீர்ப்பிடிப்பு பகுதிகள் சிதைந்த பின்னர் அணையின் கொள்ளளவும் கேள்விக்குள்ளாகிறது. அணையின் மீத்தேன் வெளியீடு காலநிலை மாற்றத்தைத் தூண்டுகிறது என்பது பொதுவாக நாம் அறிந்ததே.
இருப்பினும், இதுபோன்ற உண்மைகளுக்கு நேர்மாறாகக், ‘காலநிலை நெருக்கடியைத் தவிர்க்க நீர்மின் திட்டங்கள் ஒரு தீர்வு’ என்று சர்வதேச நீர்மின்சக்தி சங்கம் (IHA) தொடர்ந்து ஒரு பொய்யை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது International Rivers அமைப்பு. IHA அமைப்பு என்பது அணைத்தொழில் சார்ந்த ஒரு குழும அமைப்பாகும்.
IHA அமைப்பு வேறு சில குழுக்களுடன் இணைந்து உலகின் மொத்த நீர்மின் மின்சாரத்தின் அளவை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் சான்று, IPCC அறிக்கை உள்ளிட்ட சான்றுகளை அது கருத்திலேயே கொள்வதில்லை. அத்துடன் நீர்மின் திட்டத் தொழிலுக்குக் காலநிலை மாற்ற நிதியை மானியமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, மேகேதாட்டு அணை முதலில் யாருக்கு இலாபமாக இருக்கப் போகிறது என்ற கேள்வி முதலில் எழுகிறது. உண்மையில் கர்நாடக மக்களுக்கா? இதில் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்று கர்நாடகா முதல்வர் கூறுவது மற்றொரு வேடிக்கை. மனதுக்குள் இவ்வாறு மேலும் பல கேள்விகள் எழுகின்றன.
காரணம், இந்த கான்கிரீட் கனவின் திட்டத்தொகையான 9000 கோடி ரூபாய்.
மேகேதாட்டு அணையின் நீர், பாசனத் தேவைக்கு பயன்படுத்தப்படாது - அது பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்.
பெங்களூரு ஒரு காஸ்மோபாலிடன் நகரமாக மாறிவிட்ட நிலையில், அதன் கவர்ச்சியே இங்கு முன்வைக்கப்படுகிறது. வேளாண்மையும் அதன் வருவாயும் மங்கி வரும் சூழலில் முன்புபோல வேளாண்மைக்கு நீர் என்றால் பெரிய வரவேற்பு இருக்காது. அதனால்தான் மின்சாரம், பெங்களூருக்கு குடிநீர் போன்ற வசீகர வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. தவிர, அணைநீரை சட்டத்துக்குப் புறம்பாக எப்படி நீரேற்றுப் பாசனம் செய்வது என்பது கர்நாடகத்துக்கு கைவந்த கலையாகும்.
மத்திய அமெரிக்கவிலுள்ள ஒரு குட்டி நாடு ஹோண்டுராஸ். இதன் தலைநகரத்துக்கு கூடுதலாக 40% நீர் தேவைப்பட்டது. அதற்காக அணைக் கட்டாமல் சற்று மாற்றி யோசித்தது. அந்த யோசனை மழைமுகில்களை உற்பத்தி செய்வதாகும். அதற்காக செயற்கைமழைத் திட்டத்தை நாடவில்லை. மாறாக மழைப்பொழிவுக்குக் காடுகள்தான் உதவும் என்று தீர்மானித்து அதைக் காக்கும் நோக்கத்துடன் லா டைகரா தேசிய பூங்காவுக்குப் பாதுகாப்பு நிலையை உறுதி செய்தது. அதற்கு 5% மட்டுமே கூடுதலாகச் செலவழித்தது.
இங்கு மட்டுமல்ல ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்ட நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள 108 நகரங்களில் கடந்த 2003 ஆம் ஆண்டில் காடுகள் பாதுகாப்புத் தொடர்பாக உலகவங்கி ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 33 நகரங்கள் காடுகளைச் சட்டரீதியாகப் பாதுகாத்ததன் மூலம் குடிநீர் வழங்கலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது தெரிய வந்தது. மேகேதாட்டு பகுதி ஏற்கனவே ஒரு காட்டுப் பகுதிதான். அதை மேம்படுத்தாமல் அழிப்பதற்காக ஒரு திட்டம் வருகிறது.
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். சரி, பெங்களூரு நகரின் நீர்த் தேவை எவ்வளவு? அதன் எதிர்கால தேவையாக 4.75 டிஎம்சி தேவைப்படுகிறது என்கிறது அரசு. பின்னர் எதற்காக 67 டிஎம்சி கொள்ளளவில் அணை? வேறு என்ன மறைமுகத் தேவை இருக்கிறது? வேறு ஏதேனும் தொழிற்துறையின் தாகமா?
பெஙகளூருவில் போதுமான மழை பெய்வதால் மேகேதாட்டு திட்டம் தேவையில்லை என்கிறார் இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்சின் (IISc) சூழலியல் அறிவியல் மையத்தை சேர்ந்த பேரா. டி.வி. இராமச்சந்திரா. அத்துடன் ஏற்கனவே கிடைத்து வரும் காவிரி நீரையும் கழிவு நீர் மேலாண்மையால் கிடைத்து வரும் நீரையும் முறையாக பயன்படுத்தினாலே போதும் என்கிறார் அவர்.
இத்துடன் பெங்களூரு நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது TGHalli அணை. 1939இல் கட்டப்பட்ட இது அண்மையில் 230 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்குகிறது. அணைக்கான வரத்துநீரான மழைநீருடன் அர்காவதி ஆற்றிலிருந்தும் பெறப்படுகிறது. இந்த அர்காவதி ஆறு காவிரியுடன் இணையும் இடத்தில்தான் மேகேதாட்டுஅணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
டி.ஜி.ஹள்ளி அணை குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். இந்த அணையிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் 4 டிஎம்சி நீருக்குப் பிறகும் அணையில் தேங்கியிருக்கும் 2.2 டிஎம்சி நீர் பயன்படுத்தப்படாமல் ஆவியாகிக் கொண்டிருக்கிறது மொத்தமுள்ள 2700 ஏக்கரில் 2300 ஏக்கர் அளவுக்கு நீர்ப் பரவியிருக்கும் இந்த 74 அடி உயர அணையிலிருந்து ஏற்கனவே இயங்கும் நிலையில் குழாய் இணைப்புகள் உள்ளன. மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையில் பெங்களூரு நகர இணைப்புக் குழாய்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், டிஜிஹள்ளி அணைக்கும் பெங்களூரு நகரத்துக்கும் ஏற்கனவே உள்ள பயன்படுத்தப்படாத இணைப்புக் குழாய்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சொல்லப்போனால் IIScயின் அறிவுரைப்படி அணையின் நீர்த் தரம் மேம்படுத்தப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் பெங்களூரு நகருக்கு குடிநீர் விநியோகம் நடந்துள்ளது. ஆனால், பின்னர் அரசின் உத்தரவுப்படி ஏனோ அது நிறுத்தப்பட்டது. இப்போதும் 58 அடி உயரத்தில் தேவைகள் ஏதுமின்றி தேங்கியுள்ள ஏறத்தாழ இரண்டு டிஎம்சி நீரும் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை மேகேதாட்டு அணைக்காக அவை வலிய ஆவியாகிக் கொண்டிருக்கலாம்!
- எழுத்தாளர் நக்கீரன்
https://www.facebook.com/share/p/1Lzdq6FwTP/
https://www.facebook.com/share/p/1TRCvAFzsU/
https://www.facebook.com/share/p/1L7CGumijQ/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு