அண்ணாவின் மனசாட்சியாக ராஜாஜிக்கு கட் அவுட் வைத்த திருமாவளவன்

துரை. சண்முகம்

அண்ணாவின் மனசாட்சியாக ராஜாஜிக்கு  கட் அவுட் வைத்த திருமாவளவன்

அன்று 

ராஜாஜிக்கு சொல்வெட்டு வைத்தார் அண்ணா!

இன்று

கட்டவுட் வைத்தார் திருமா!

சந்தர்ப்பவாத அரசியலில்

இதெல்லாம் சகஜமப்பா!

................................................

கீழ் கண்ட பகுதி :

 (திண்ணை.காம் வலைதளத்திலிருந்து)

.

காஞ்சிபுரம் தொகுதியில் இறுதி நாள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜாஜியின் முன்னிலையில் பேசிய அண்ணா, “ராஜ கோபாலாச்சாரியாரும் நானும் சேர்ந்திருப்பதைக் கூடா நட்பு என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களேதான் முன்பு “அறிவாளியான இந்த அண்ணாத்துரை ராஜாஜியிடமல்லவா இருக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். இப்பொழுது நாங்கள் ஒன்றாகச் சேர்ந்திருப்பதைக் கண்டதும், இது கூடா நட்பு என்கிறார்கள். உண்மையில் இது தேடாமலே அமைந்த நட்பு. காங்கிரசை வீழ்த்தும் பணியில் நாங்கள் ஒரு சாலையில் சென்றுகொண்டிருகையில் வேறு ஒரு சாலை வழியாக அதே நோக்கத்துடன் ராஜாஜி அவர்கள் வந்தார்கள். ஒரு கட்டத்தில் இரு சாலைகளும் இணைந்து, அந்தச் சந்திப்பில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். ஆகையால் இது கூடா நட்பு அல்ல, தேடா நட்பு. தேடாமலேயே கிடைத்த நட்பு. இதை நட்பு என்று கூடச் சொல்லமாட்டேன். ஏனென்றால் இன்னதைச் செய் என்று சொல்கிற வயதில் அவரும், அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்கிற வயதில் நானும் இருக்கிறோம். இது தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக ஏற்பட்ட உறவு அல்ல. இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடக்க வேண்டும், நீண்ட நேரம் நடக்க வேண்டும்’ என்று அண்ணா சொல்லி வருகையில் ராஜாஜி குறுக்கிட்டு, “நல்ல தமிழில் பேசுகிற கூட்டமாகவும் இருக்க வேண்டும்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லவும், அண்ணாவும் மற்றவர்களும் சிரித்துக் கொண்டார்கள். அண்ணாவின் தமிழ்ப் பேச்சு மிகவும் சிறப்பாக அமைவதைப் பாராட்டும் முகமாகத்தான் ராஜாஜி அவர்கள் அப்படி மறைமுகமாகக் கூறினார்கள்.

ராஜாஜி காங்கிரசை மிக மிகக் கடுமையாகத் தாக்கி வருவதால் என்ன இப்படிப் போட்டுத் தாக்குகிறாரே என்று காங்கிரஸ்கார்கள் வருத்தப்படுவதாகக் கூறிய எம் அண்ணா, அதை விளக்குவதற்காக ஒரு வேட்டியின் கதை சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள்.

” சிலருக்கு ஒரு சுபாவம். கட்டும் போது நல்ல வெளுப்பான சலவை வேட்டியாகத்தான் எடுத்துக் கட்டுவார்கள். அது கால் பக்கம் அழுக்காகும்போது அது மேல்பக்கம் வருமாறு கால் பக்கத்தை இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அதுவும் அழுக்கானால் கட்டிய வேட்டியின் உள்பக்கம் வெளியே தெரியும்படி திருப்பிக் கட்டிக் கொள்வார்கள். உனக்கு எப்படி இது தெரியும் என்று கேட்டீர்களானால் எனக்கே அது பழக்கம். எனக்கு எப்படிப் பழக்கம் என்றால் என் குருநாதன் அருள் பெரியார் ராமசாமிக்கு அது பழக்கம்’ என்று அண்ணா சொன்னார்கள்.

“இப்படி அழுக்கான வேட்டியை வெளுக்கப் போட்டு, ஆற்றோரத்தில் வெளுப்பவர் அதை ஓங்கி ஓங்கி அடிக்கும் போது “அப்பா அது ஆறே முக்கால் ரூபாய்க்கு வாங்கிய வேட்டி. அதை இப்படிப் போட்டு அடிக்கிறாயே என்று சொல்வோமானால் அதற்கு அவர் என்ன சொல்வார்? “நீ செய்துவைத்திருக்கிற அழுக்குக்கு வெள்ளாவியில்தான் வைக்க வேண்டும். அடித்துத் தோய்க்காமல் என்ன செய்வது’ என்பார். அதைப்போலத்தான் எல்லாப் பக்கங்களிலும் அழுக்கேறிப் போன காங்கிரசை ராஜாஜி இந்த அடி அடிக்கிறார்’ என்று அண்ணா விளக்கினார்கள்.

இறுதியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் ஒரு உண்மையை அண்ணா சொன்னார்கள்:

“ராஜாஜி அவர்களே, நான் ஒரு தலைவருக்கு என் உழைப்பையெல்லாம் கொடுத்தேன். அவரிடம் என் உள்ளத்தையெல்லாம் பறி கொடுத்தேன். அவருக்கு உண்மையான தொண்டனாக இருந்தேன். ஆனால் அவரிடமிருந்து கிடைக்காத வாழ்த்தை, அவரிடமிருந்து வராத நல்லெண்ணத்தை நான் காலமெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த உங்களிடமிருந்து பெறுகிறேன். இதுதான் உலகின் மிகப் பெரிய விசித்திரம்’ என்றார் அண்ணா.

“ராஜாஜி அவர்களே, இவனுக்கு கீதை கூடத் தெரியுமா என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு நிஷ்காம கர்மமாகப் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். என்னோடு இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? போயும் போயும் அண்ணாத்துரையின் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாரே என்கிற ஏச்சுத்தான் கிடைக்கிறது’ என்று அண்ணா சொன்னார்கள்.

ராஜாஜிஅண்ணா உறவு 1967 தேர்தலில் உச்ச கட்டத்தை எய்தியது. தேர்தலுக்குப்பின் தி.மு.க. அரசு அமைத்த பிறகு, அரசின் ஏதோவொரு செயலை ராஜாஜி விரும்பாத நிலை ஏற்பட்டபோது, நிருபர்கள் அதுபற்றிக் குறிப்பிட்டு, அவரது கட்சிக்குள்ள தி.மு.க.வுடனான உறவு பற்றிக் கேட்டார்கள். அப்போது “தேனிலவு முடிந்துவிட்டது’ என்று ராஜாஜி சொன்னார்கள்.

நிருபர்கள் அண்ணாவைச் சந்தித்த பொழுது, “ராஜாஜி என்ன இப்படிச் சொல்கிறாரே’ என்று கேட்டார்கள். அண்ணாவுக்கா பதில் சொல்லத் தெரியாது?

“ஆமாம், தேனிலவு முடிந்த பிறகு குடும்பம் நடத்தத் தொடங்குவதுதானே வழக்கம். அவ்வாறில்லாமல் தொடர்ந்து தேனிலவிலேயேவா இருப்பார்கள்?’ என்று அண்ணா தமது வழக்கமான குறும்புப் புன்னகையுடன் திருப்பிக் கேட்டபோது செய்தியாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

அண்ணா அவர்கள் சொன்ன பதிலை பத்திரிகையில் படித்த ராஜாஜியும் அண்ணாவின் புத்தி சாதுரியத்தைப் பாராட்டிச் சிரித்தார்களாம்.

- துரை. சண்முகம் (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0idk9ttFc7dsfur7tiSwmViJe6pdWMYGCVUen6F6DaZ2BXdm1hXjs6DG5HkkPYye8l&id=100080904177819&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு