பாரதி யார்? அவரை இப்போது இன்னும் பிடிக்கிறது - கட்டுரை தொகுப்புகள்

துரை. சண்முகம் - இரா. முருகவேள் - த.சிவக்குமார் - கதிர் நிலவன் - தெய்வசுந்தரம் நயினார் - சாவித்திரி கண்ணன் - வி.எஸ்.கே

பாரதி  யார்? அவரை இப்போது இன்னும் பிடிக்கிறது - கட்டுரை தொகுப்புகள்

1
பாரதி  யார்?

இலக்கியம் குறிப்பாக கவிதை மீதான எனது உள்ளுணர்வின் தொடக்கம் முதலே பாடப்புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் அறியப்பட்ட நூல்களின் வழி பாரதியார் எனக்கு நெருக்கமானார்.

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் பல பழைய நூல்களை புரட்டிய என்னுடைய ஆர்வமான நாட்கள் பாரதியாரின் கட்டுரைகள் பேச்சுகள் கவிதைகள் என அனைத்தையும் ஒரு பறவை பார்வையில் பார்த்தபோது இன்னும் ஈர்த்தது. 

முதலில் முக்கிய காரணம் 

அவருடைய கவிதை உணர்ச்சி வீச்சும் வாழ்வின் அனைத்தின் மீதான பற்று உறுதியும் என்னுடைய இளைய கனவுகளுடன் இணைந்து உத்வேகமூட்டியது. 

பிறகு மார்க்சிய லெனினிய தொடர்பு வந்த நாட்களில் 

அமைப்பில் இயங்கிய காலங்களில், பாரதி பற்றிய அரசியல் ரீதியான உரையாடல்கள் அவ்வப்போது குழு தோழர்களிடம் நடப்பதுண்டு. குறிப்பாக சி.பி.எம் போன்ற கட்சிகள் பாரதியை தூக்கிப் பிடித்து கொண்டாடுவதை பார்த்து பாரதியை புரட்சிக்கவிஞர் என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத அடிப்படை கொண்டது எனும் வாதங்கள் நடப்பதுண்டு.

இதன் தாக்கம் என்னையும் ஆட்கொண்டது . அந்தக் கால பிழைப்புவாதிகளை போல தன் பிழைப்புவாதத்தில் மூழ்காமல் தெளிவான தத்துவ அடிப்படை இன்றி இந்து தேசிய பார்வையில் இருந்து சில முற்போக்கான கவிதைகளும்  பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பும் குறிப்பிடத்தக்க பங்களிப்போடு இருந்தாலும், மக்களுக்கான தெளிவான அரசியல் பாதை இன்றி அவலமாக முடிந்தவன் பாரதி! எனும் அளவிலான அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேன் நான். 

இத்தகைய விமர்சன எல்லைகளை கடந்து பிற்பாடு மதிமாறன் போன்ற நபர்களின் பார்ப்பன ஆர். எஸ். எஸ். காவி கவிஞன் எனும் அளவுக்கு பாரதியை திட்டமிட்ட எதிரியாக கட்டமைத்த வாதங்களை என்னால் அடிப்படை இன்றி ஏற்க முடியவில்லை. 

திராவிட இயக்க வளர்ச்சியின் பித்தலாட்ட பிழைப்புவாத அரசியலை விமர்சிக்கும் போது திராவிடம் பேசிக்கொண்டே இதை செய்யலாமா? என்றால் பெரியார் வேறு அண்ணாவுக்கு பிறகு வேறு என்று பேசுவதும், பாரதி என்று வரும்போது மட்டும் சனாதன ஆதரவு தத்துவ கண்ணோட்டம் இருந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பார்ப்பன கும்பலோடு முழு சரணாகதியாக வாழாத நடத்தையும் கொண்ட பாரதியை எந்த அளவோ! அந்த அளவு! விமர்சனமாக பார்ப்பது இல்லை இவர்கள். திராவிடத்தை ஆதரிப்பவர்கள் வேறுபாடு உண்டு. இந்து மத்தை ஆதரிப்பவர்களில் வேறுபாடே கிடையாது எனும் மட்டையடி பார்வை இது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, பார்ப்பனர்கள் பக்கம் முரண்பட்ட, வாழும் காலத்தில் அவர்களால் வெறுக்கப்பட்ட பாரதியை ஆர் .எஸ் .எஸ் இந்துவாக நிறுவத் துடிக்கும் வெறுப்பு அரசியலின் மறுபக்கம் இது.

மேலும் பாரதியின் சிறந்த கவிதைகளுக்காகவும் குறிப்பிட்ட அளவு ஏகாதிபத்திய எதிர்ப்பு பண்புக்காகவும் பாராட்டுவதை கூட,  அப்படி சொல்பவர்களையும் சேர்த்து பார்ப்பன அடிமைகள் ஆர்எஸ்எஸ் அடிமைகள் என்று பழிதூற்றும் அளவுக்கு வரலாற்று முரண்களை வகைப்படுத்தத் தெரியாத காரியவாத தற்குறிகளின் கருத்தை மார்க்சிய கண்ணோட்டம் உள்ளவர்கள் ஏற்க இயலாது.

சேகர் பாபு செந்தில் பாலாஜி போன்ற பித்தலாட்ட திராவிட கொழுந்துகளை  பற்றி கண்டிக்கவும் எதிர்க்கவும் வாய் தவறி பேசவும் கறார் காட்டாத இந்த பேர்வழிகள், இவர்களே சொல்லிக் கொள்ளும் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து சாதி சங்க மாநாட்டில் பட்டம் சூட்டிக் கொள்ளும் திமுக அமைச்சர்களை பற்றி பொதுவெளியில் பேசத் துணியாத இந்த பேர்வழிகள், பாரதியை குறிப்பிட்ட கவித்திறன் செயல்களுக்கு ஆதரித்தால் கூட பார்ப்பன அடிமைகள் என்பது  வசை பாடி திரிப்பது ஆர்.எஸ்.எஸ் பாணி திராவிட கூச்சலே.

தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்டுகள் மீது தனது கொள்ளிக்கண் பார்வையை மறைக்க கூலிங் கிளாஸ் போட்டு அலைந்த பிறவி எதிரி ராஜாஜியை மூதறிஞர் என்று உறவாடியதை எல்லாம் அது வேறு இது வேறு என வகை பிரிக்க தெரிந்த இந்த வாழும் கலை வல்லுநர்களுக்கு, பாரதியை விமர்சனத்துடன் ஆதரித்தால் கூட உலக மகா தவறு போல கம்பு சுற்றுவது நகைப்புக்குரியது. 

இந்தச் சூழலில் 

பாரதி யார்? என்று புரிந்துகொள்ள  முரண்பாடுகளின் அறிவியலை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் விட இலக்கிய கூட்டம் என்பதே மால.லெ. குழுக்களில் இல்லாத இந்த நேரத்தில், செந்தளம் வலைதளம்  ஏற்பாடு செய்திருக்கும் இந்த இணைய வழி கூட்டம் தெரிந்து கொள்ள ஒரு நல் வாய்ப்பு! 

https://meet.google.com/hub-rpox-cwd

வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுங்கள்! 

    தோழமையுடன் 

         துரை.  சண்முகம்

https://www.facebook.com/share/p/1BmechGu3L/

==========================================================================

2
பாரதியாரைப் போல பெரியாரை சங்கிகள் தொட முடியவில்லை என்று சந்தோசப்படுகிறார்கள் சிலர் 

உண்மைதான் 

சங்கிகளின் பிற்போக்கு மத அரசியலுக்கு பெரியார் தேவைப்படவில்லை. எதிர் கருத்தாக இருக்கிறார் என்பதால் அவர்கள் தொடுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால்,

கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கடுப்பிலும் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் வெவ்வேறு அடிமை நோக்கத்திலும் கருத்தியல் ரீதியாக ஒன்றுபடக் கூடியவர்கள் இரு முகாமும்.

பாரதியாரை மட்டுமல்ல பகத்சிங், சந்திரசேகர ஆசாத், திருவள்ளுவர், அம்பேத்கர், வள்ளலார் வரை கூட தன தாக்கிக் கொண்டு புகழ்பாடுகிறது சங்கி கூட்டம். 

செத்த பிறகு அபாயமற்ற பூசையறை படங்களாக பயன்படுத்துவது என்பது இதுதான்.

சங்கிகள் பெரியாரை நெருங்க முடியவில்லை! என்று பெருமை பேசுபவர்கள் அம்பேத்கரை நெருங்கியது பற்றி, பாரதியைப் பார் என்பது போல பார்! பார்! அம்பேத்காரைப் பார்! என்று உண்மையை பேசுவதில்லை.

ஏனென்றால் இவர்களிடம் வெறுப்பு விருப்பு அற்ற சமூக இயக்கவியல் அரசியல் பார்வை இல்லை. ஆகையால் தமக்கு பிடித்தமான ஒரு பகுதியை மட்டும் பேசுவது இயல்பாக அனிச்சை செயலாக இருக்கிறது. 

ஆனால் மார்க்சிய கண்ணோட்டம் என்பது இது அல்ல. 

மார்க்சோ லெனினோ மாவோவோ மத நம்பிக்கை தத்துவ கருத்துகள் உள்ள துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் விமர்சனத்துடன் அணுகி அரசியல் போக்கில் நில உடமை இறுக்கமற்ற ஜனநாயகப் போக்குகளை அங்கீகரித்தார்கள்.

இங்குள்ள சூத்திர கும்பலுக்கு பார்ப்பானை தவிர மற்ற இடைநிலை ஆதிக்க சாதி எல்லாம் பரிசுத்தவான்கள் என்ற போலித்தனம். அடிமைத்தனம்!

இதில் இரண்டு கும்பலுமே உழைக்கும் மக்களுக்கு எதிரானது எனும் மூன்றாவது நிலைப்பாடு எடுத்தால், அவர்களையும் பார்ப்பன ஆதரவு என கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதே இவர்களின் வாடிக்கை.

விவாதித்த விசயத்தில் உள்ளடக்கம் என்னவெனில்,

ஆளும் வர்க்கத்தின் இந்துத்துவ பிற்போக்கப் பிரிவு பெரியாரை ஏற்கவில்லை. 

அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தின் வேறு முதலாளித்து ஏகாதிபத்திய பிரிவு பெரியாரை ஏற்றுக்கொள்கிறது. 

ஆளும்வர்க்க கருத்தியல் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது பெரியாருக்கு? உழைக்கும் மக்களுக்கு எதிர் நிலையில் இருக்கிறார் என வேதனைபடத்தான் வேண்டும். 

சங்கிகளும் பிற முதலாளித்துவ மங்கிகளும் நெருங்க முடியாத தத்துவம் மார்க்சியம் மட்டுமே! 

அதுவும் இந்தியாவில் நக்சல்பாரி அரசியல் என்றால்,

பார்ப்பன பார்ப்பனரல்லாத இரண்டு சுரண்டும் வர்க்க கும்பலுக்கும் "பாட்டம்" எரியும்! 

கோவத்தில் கோவணத்தை கிழித்துக் கொண்ட கதையாக, பல ஆளும் வர்க்க பகுத்தறிவுகள் பாரதியாரை கிழிக்கிறேன் பேர்வழி எனும் பெயரில் தங்களது அரசியல் அம்மணத்தை அறிய தருகிறார்கள்! 

பாட்டாளி வர்க்க நோக்கில்
தள்ளுவதை தள்ளி கொள்ளுவதை கொள்வோம்!
இவர்களிடமும் பயனுள்ள கருத்து இருந்தால்! 

   துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=888360687204062&id=100080904177819&rdid=SlPMWQRgOCD6jj6X

=========================================================

3
பாரதி பாதை! – அறிஞர் அண்ணா

( அய்யய்யோ 'ஆரிய பாரதியாரை' போற்றிய அண்ணாவை திராவிட தேனீக்கள் என்ன கடி கடிக்க போறாங்களோ! 

இதெல்லாம் நாம சொன்னா சங்கி பட்டம்! அண்ணா சொன்னா அறிஞர் பட்டம்! 

சின்னவர் கிட்ட போயி அறிஞர் அண்ணா இப்படி எல்லாம் சனாதனத்துக்கு வேல செய்கிறார்னு  சொல்லி திராவிட இனமான உணர்ச்சியோட போராடுவாங்களான்னு பாப்போம்)

பாரதி பாதை! – அறிஞர் அண்ணா

எட்டையபுரத்திலே, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முக்கிய மண்டபம் அமைத்து, சீரிய முறையில் விழா நடத்தினர்.

பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வத்தீ கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன், வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப் புதுப்பாதை வகுத்தார் பாரதியார்.

அவருக்குக் ‘காணிக்கை’ செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது,ஆச்சாரியார் வந்தார் – ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடினர் – ஆசைவாணர்கள் – கலைவாணர்கள் – எழுத்தாளர்கள் பற்பலர்.

‘கல்கி’ ஆசிரியர், இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார் – விழாச் சொற்பொழிவுகளில், நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.தூரன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறினார், “அதிகாரமற்ற கரம் ஆஸ்திவாரக்கல் நாட்டுக்கிறதே என்று ஆயாசப்பட்டேன் – இன்றோ, ஆளும் கரம், மணி மண்டபத்தைத் திறந்து வைக்கிறது கண்டு அகமகிழந்தேன்” என்று உண்மை வங்கமாளும் ஆச்சாரியார், மணி மண்டபத்தைத் திறந்தார் – வறுமையாளராகக் கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்டு, நலிவுற்றிருந்த பாரதியாருக்கு நாடு முழுவதும் கொண்டாடும் அளவினதான விழா நடந்தேறியது.

பாரதியாரின், கவிதைத் திறன், அதனால் பயன், மறுக்க முடியாதன. பாரதியாரின் தனிப்பண்புகளை, அவரை அந்நாளில் அறிந்தவர்கள் கேட்டால், புது உலகு காணவிழைபவர்களின் ஆகமெல்லாம் மகிழும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களிலே ஓர் புத்தொளி காணலாம்.

பாரதியாரின் காலம் வேறு, இக்காலம் வேறு எனவே, இன்றுள்ள எண்ணங்களை எல்லாம், அவர் அன்றே ஏய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய – திராவிட பிரச்சனையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர். ‘ஆரியர்’ என்ற சொல்ல, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக்காலம், நாமெல்லாம், பள்ளிகளில் ஆரிய மத ஊபாயக்யானம் எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நமது தலைவர், தமிழ்நாட்டுக் காங்கிரசிலே பெருந்தலைவராக இருந்த காலம்.

ஆரியர் – திராவிடர் பிரச்சனை, ஒரு ஆராய்ச்சி – வரலாறு – இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.

ஆரியம் ஓர்வகைக் கலாச்சாரம் – வாழ்க்கை முறை.

திராவிடம், அது போன்றே, தனியானதோர், வாழ்க்கை முறை.

இது, இன்று, விளக்கமாக்கப்படுவது போல, பாரதியாரின் நாட்களிலே கிடையாது.

பல ஜாதி – பல தெய்வ வணக்கம் – பற்பல விதமான மூடநம்பிக்கைகள் – தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு – இவைகள் தான், ஆரியம்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் இது திராவிடம்.

இரண்டிலே எது நல்லது, எந்தக் கலாச்சாரத்துக்கு, நீர் ஆதரவு தருவீர், என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை கேட்டிருந்தால், நிச்சயமாக அவர், திராவிட கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில் – பிற்காலப் பகுதிகளில் – இந்தச் சூழ்நிலை இருக்கக் காணலாம்.

பாரதியார் விஷயத்திலே பகுத்தறிவாளர்களுக்குள்ள, மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி, அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிவர் அருளாலோ, பஞ்சாட்சர உபதேச பலனாகவோ, பாட ஆரம்பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான்.

IMG_0530நாமகளைத் துதித்தார் – நாலைந்து ஆண்டு – பலன் இல்லை – பிறகோர் நாள், ஆம்மே! இனி நான் உயிர்வாழேன் என்று கூறி நாவை அறுத்துக் கொள்ளக் கிளம்பினார், உடனே களுக்கென ஓர் சிரிப்பொலி கேட்டது, ஆம்மை பிரச்சன்னமாகி பாலகா! பாடு! என்றாள் – உடனே அவர் பாடலானார் – பாடினார், பாடினார், பார் முழுதும் பாடல் பரவும் வரை பாடினார், என்று பாரதியார் புராணம் கட்டாத வரையில் நமக்கெல்லாம், மிகக் களிப்பு. நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதியாருக்கே உண்மையில், பெருமை, அவர், நாமகள், பூமகள், ஆலலது வேறோர் தேவனன் அருள் பெற்றவரல்ல, அவர் ஓர் கவி, சிந்தினையில் பட்டதைச் செந்தமிழில் கவிதையாக்கினவர் என்பதனால் தான்.

கூடுமானவரையில், பாரதி விழா சொற்பொழிவாளர்கள், அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைக்கையில், ‘புராணம்’ பேசாதிருந்ததுபற்றி, நாம் மகிழ்கிறோம். அன்பர் ஆச்சாரியார் மட்டும், பாரதியாரை, ஓர் ‘முனிவர்’ என்று கூறினார். ஆனால் அதற்கும் அவர், வழக்கமான பொருள் கூறத் துணியார்.

பாரதியாருக்குள்ள பெருமை முதலில் இது. மற்றோர் பெருமை, அவர் தம்முடைய நாட்களிலே, மற்றவர்களைவிட வேகமாக முன்னேற்றக் கருத்துக்களைப் பாடி, அதன் பயனாக, அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, ‘பார்ப்பன மேதைகள்’ ஏன்போரால் அலட்சியப்படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனமானாரே, அந்தப் பண்பு.

அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுகளை உடைத்தெறியக் கூடியதாக இருந்தது என்பது அவருடைய கவிதைகளிலே பல, ரசமான இடங்களில் தெரிகிறது.

அவருடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும், அந்த நாட்களில் நையாண்டி செய்யப்பட்டது, இன்று, அவருக்கு, மகாகவி என்ற பட்டம் தரவும், பளிங்கு மண்டபம் கட்டவும், தமிழகம் முன் வந்தது. கவிஞரைப் போற்றும் மாண்புக்கும், தைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக் காட்டிய கல்கியின் திறமைக்கும், நமது பாராட்டுதல்.

“பாரதி மண்டபத்தை விழாவுக்காகப் போடப்பட்ட பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று, அன்று ஆச்சாரியார் பேசினார்.

மண்டபத்தை, பந்தல் மறைக்கிறது!

மண்டபத்தை மட்டுமல்ல! தேசீயக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே, பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால், பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி, மறைக்கப்படுகிறது.

பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினார். ஆனால், தேவார திருவாசகமும், திருவாய் மொழியும் பாடியான பிறகு பாடினார் – எனவே, அவருடைய கவிதைகளிலே, தோத்திரப் பகுதி, முக்கியமோ, அவருடைய பெருமைக்குச் சான்றோ இகாது, வைதீகர்களின் நோக்கத்தின்படியே கூட.

பாரதியார், வேதாந்தப் பாடல்கள் பல பாடியுள்ளார் – ஆனால் அவருக்கு முன்னர், தாயுமானாரும், பட்டினத்தாரும், வள்ளலாரும், பாடிவிட்டனர் – எனவே, அந்தப் பகுதியும், பழைய பதிப்ப போன்றதுதான்.

அவருடைய நாட்டுப்பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளிலே, மிக முக்கியமான, மற்றக் கவிகள் பாடாத, காலத்திற்கேற்ற, பலன் அளித்த பகுதி.

விடுதலைப் போர் புரிய, அவருடைய கவிதைகள், தக்க கருவியாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.

ஆச்சாரியார் சொன்னார், “அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல கவிகள் பாடலகள் இயற்றினர். தமிழர்களுக்கு, தமிழ்க் கவிதைதானே பயன்பட முடியும். பாரதியார் அந்த வகையிலே, தமிழருக்குப் பயனபட்டார்” என்று.

ஆக, பாரதியாரின் பக்திப் பாடல், வேதாந்தப்பாடல் இவைகளைவிட, நாட்டுப்பற்றுப் பாடல் மகதத்தன பலன் தந்தது. விழா கொண்டாடின அன்பர்கள், இந்தப் பகுதியைத் தான் விளக்கினார்கள் விஸ்தாரமாக. மதுரை முஸ்லீம் தோழர் ஒருவர் “பாரதியாரின் பாடல் ஆங்கிலரை ஓட்டிய அணுகுண்டு” என்று கூறினார். தமிழகத்திலே, காங்கிரசின் வெற்றிக்கு பாரதியார் பாடல், மிகமிகத் தாராளமாகப் பயன்பட்டது. பயன்படுத்திக் கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர். பாரதியாரை ஐதோ ஓர் சமயத்திலே மட்டும் எண்ணுவதுடன் இருந்தனர், இக்குறையைப் போக்கி, கவிஞரின் நினைவுக்குறியாக ஓர் ஆழகிய மண்டபத்தை, அமைத்தார் கல்கி.

ஆச்சாரியார் சொன்னாரே, பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று, அதுபோல, பாரதியாரின் தேசீயப் பாடல்களை மட்டுமே, பரப்பிய காரணத்தால், நாட்டவருக்கு, பாரதியாரின் முழு உருவம் தெரியவில்லை இனியாவது தெரியுமா என்றால், தெரியச் செய்தாலொழியத் தெரிவதற்கில்லை என்று கூறலாம்.

முடுவோமே பள்ளுப் பாடுவோமே!

வந்தே மாதரம் ஏன்போம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே

தாயின் மணிக்கொடி பாரீர்,

ஜெய ஜெய பாரத

இப்படிப்பல தேசியப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டு வந்துள்ளனர். பாரதியார், அவ்வளவுதானா? அல்ல! பாரதியாரின் முழு உருவம் அது அல்ல! அடிமை நிலைபோக வேண்டும் என்ற கோபிநலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத்தாண்டி, நாட்டு உள் நிலை, மக்கள் மனநிலை, இவைகளைக் கண்டு, மனம் நொந்து வேதனைப்படும் பாரதி இருக்கிறார், மக்களின் மந்த மதியினைக் கண்டு அவர்களைத் திருத்த வேண்டும் என்று ஆவல் கொண்டுதுடிக்கும் பாரதி இருக்கிறார், நாடு எப்படி எப்படி இருக்க வேண்டும், சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும் என்று இலட்சியம் கூறும் பாரதி இருக்கிறார். தேசிய பாரதியின் உருவம், இத்தனை பாரதிகளை மறைக்கிறது – ஆச்சாரியார், பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல.

பெரிய பந்தல், விழாவுக்காக, மண்டபமோ, கவியின் பெருமைக்குரிய சினனம். விழா முடிந்ததும் பந்தலைப் பிரித்து விடுவார்கள். மண்டபம், நின்று அழகளிக்கும். அதுபோல் பாரதியாரின் தேசிய கவிதை அன்னியரை ஓட்டும் அரும்பணிக்காக மட்டுமே அமைவது – அந்தக் காரியம் முடிந்தால் இனி, அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை, அவசியமில்லாததால், அது ஏடுபடும் அது ஏடுப்பட்ட பிறகுதான், பாரதியாரின் மனம், தெரியும். பாரதியாரின் முழு உருவமும் தெரிய அவருடைய கவிதா சக்தியின் முழுப் பயனைப் பெற, அப்போதுதான் முடியும்.

இனியும், மேடைகளிலே ஏறி தாயின் மணிக்கொடி பாரீர் போன்ற, தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிப பயனில்லை.

தாயின் மணிக்கொடி பார்க்கிறோம், இங்கே காயும் வயற்றையும் காண்பீர் – என்று மக்கள் – முழக்கமிடுவர். எனவே, எந்தப் பகுதியை மட்டுமே, அதிகமாகப் போற்றி நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசியப் பாடல் பகுதிக்குள்ள, பயனும், ஜொலிப்பும் இனி இராது. ஆகவே, பாரதி பயன் இல்லையா? அல்ல, அல்ல! பயனுள்ள பகுதி, பலரறியா பாரதி, மறைக்கப்பட்ட பாரதி, இனித்தான் மக்களுக்குத் தெரியவேண்டும். தேசிய கவிக்கு அப்பால், நிற்கிறார் அந்தப் பாரதி. அந்தப் பாரதி ஆங்கிலேயனை, ஆரிய பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல! நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்டவேண்டுமென்று கூறும் பாரதி. மேடைகளிலே இதுவரை, நிறுத்தப்படாத பாரதி! தேசபக்தர்களின் நாவிலே நின்று இதுவரை நர்த்தனமாடாத பாரதி! மறைந்திருக்கிறார், பொன்னாலான பெட்டிக்குள் முத்துமாலை இருப்பதுபோல, அந்தப் பாரதியை நாம் அறிமுகப்படுத்தினால், விழா கொண்டாடியவர்களிலேயே பலருக்கு, முகமும் அகமும் சுருங்கக்கூடும். ஆனால் அந்த பாரதி நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளி வந்தாலோ, இன்று அவரை வந்திருக்கும் பலரே, நிந்திக்கவும் கூடும். இதோ அந்த பாரதி – பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம்.

பண்டைப் பெருமை – பழங்கால மகிமை – அந்த நாள் சிறப்பு – என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களை நாம், எவ்வளவோ, கௌரமாகத்தானே, கேட்கிறோம் ஐயா! பழைய காலத்தைக் கட்டிப்பிடித்தழுகிறீரே, இது சரியா? என்று.

பலருக்குத் தெரியாத, முழுப் பாரதி, அவர்களை, இலேசில் விடவில்லை! மூடரே! என்று அவர்களை விளிக்கிறார், கேட்கிறார் அவர்களை,

முன்பிருந்ததோர் காரணத்தாலே

மூடரே பொய்யை மெய்யென லாமோ?

முன்பெனச் சொலும் காலமதற்கு

மூடரே, ஓர்வரை துறையுண்டோ?

முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்

மூன்றுகோடி வருடமு முன்பே

முன்பிருந்த தெண்ணிலாது புவிமேல்

மொய்த்த மக்களெலா முனிவோரோ?

நீர்பிறக்குமுன் பார்மிசை மூடர்

நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?

பார்பிறந்தது தொட்டின்று மட்டும்ட

பலபலப்பல பற்பல கோடி

கார்பிறக்கு மழைத்துளி போலே

கண்ட மக்களனைவருள்ளேயும்

நீர்பிறப்பதன் முன்பு மடமை

நீசத் தன்மை இருந்தனவன்றோ?

பழமை விரும்பி, என்ன எண்ணுவார், பாரதியாரைப் பற்றி!

சென்றதினி மீளாது மூடரே, நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற ஆசைத்துக கொண்டு

தின்றுவிளை யாடிஇன்புற் றிருந்து வாழ்வீர்

தீமையெலாம் அகன்றுபோம் திரும்பி வாரா.

மற்றுமோர் சாட்டை! வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு, வகையாகத் தருகிறார் சாட்டை! சென்றது இனி மீளாது, மூடரே! மனுதர்மம் இருந்ததே! அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது வலக்கரத்திலே ஆக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும், மற்றவர்களுக்கெல்லாம், பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப்பெறுமோ என்றெல்லாம், எண்ணி எண்ணி எங்காதீர், சென்றது இனி மீளாது, என்று திட்டமாகக் கூறுகிறார், கூறுகிறேன் கேளுங்கள், மூடர்களே! என்று இடித்துரைத்துப் பேசுகிறார். இந்தப் பாரதி, மேடையிலே தோன்றாத பாரதி.

செத்தபிறகு சிவலோகம் வைகுண்டம்

சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பார் பித்தமனிதர்.

சாதிக்கொடுமைகள் வேண்டாம் அன்பு

தன்னிற் செழித்திடும் வையம்.“அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரம் தொழில் செய்திடு வீரே!

பெரும்புகழ் உமக்கே ஆசைக்கின்றேன்

பிரமதேவன் கலையிங்கு நீரே”

பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்

பின்னிந்த ஊகினிலே வாழ்க்கை இல்லை.

தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள, புரட்சிக் கவிஞர் தெரிகிறார், இன்னும் தெளிவாக.

“நெஞ்சு பொறுக்கு திலையே இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”

என்று சோகிக்கிறார் பாரதி! ஏன் நிலைகெட்டுவிட்டது? தேசியக் கவியாக மட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்ட பாரதநாடு பரதவித்தது என்று மட்டுமே கூறுவார். ஆனால் பலருக்குத் தெரியவிடாதபடி மறைக்கப்பட்டிருக்கும் முழுப்பாரதி பேசுவதைக் கேளுங்கள்.

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்களென்பார் இந்த

மரத்திலென்பார் – அந்தக் குளத்திலென்பார்.

குஞ்சுது முகட்டிலென்பார் மிகத்

துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!

மந்திரவாதி யென்பார் – சொன்ன

மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்

யந்திர சூனியங்கள் – இன்னும்

எத்தனையாயிரம் இவர்துயர்கள்

சாடுகிறார், சாடுகிறார், மூட நம்பிக்கைகளை!

கொஞ்சமோ பிரிவினைகள்?

ஒரு கோடி யென்றால் அது பெரிதாமே?

ஐந்து தலைப்பாம்பென்பான் அப்பன்

ஆறுதலையென்று மகன் சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை, மனதிலே உள்ள தளைகளை, மூடக்கொள்கைகளைத் தாக்குகிறார், தமது கவிதா சக்தியைக் கொண்டு.

பாரதியாரா? என்று ஆச்சரியத்துடன் நாடு கேட்கும், அவர் சொன்தத்தனையையும் சொல்லப்போனால் ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடுபட்டு மறைத்திருக்கிறார்கள்.

பார்ப்பானை ஐயனென்ற

காலமும் போச்சே

என்ற ஒருவரியைக்கூட அவர் சொன்னதாகச் சொல்ல, அஞ்ச மறைத்தனர் – அருந்தமிழ் நாட்டவர்தான்! பாரதியார் அந்தச் சமுதாயத்தை மேலும் என்னென்ன கூறினார் என்று தெரிந்தால்தானே, பாரதியாரின் முழு உருவம் தெரியும்.

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்

அவர்எது செய்தும் காசுபெறப் பார்ப்பார்

பிள்ளைக்குப் பூணூலா மென்பான்

நம்மைப் பிச்சுப்பணம் கொடெனத் தின்பான்

பேராசைக் காரனடா பார்ப்பான்

ஆனால் பெரியதுரை என்னில்

உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை செய்வான்.

பணம் ஆள்ளி இடவில்லை யெனில் வைவான்.

மகாகவி பாரதியின் வாக்கு, பேராசைக்காரனடா பார்ப்பான்! என்பது மேடைகளிலே, கேட்டதுண்டா! பாரதி சிறப்புவிழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தாரா? இல்லை! அவர், மறைந்திருக்கிறார், மண்டபம், பந்தலால் மறைக்கப்பட்டிருப்பதுபோல விழா முடிந்தது பந்தலும் பிரிக்கப்பட்டது! மண்டபம் தெரிகிறது! என்பதுபோல, வெள்ளையர் வெளியேறும் விழா முடிந்தது, இனி, தேசியக் கவிதை அலங்காரத்தைக் கடந்து நிற்கும், பாரதி காண விரும்பிய புது சமுதாயம்.

ஏழை என்றும் அடிமை என்றும்

ஏவனுமில்லை, ஜாதியில் இழிவு கொண்ட

மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே!

என்ற இலட்சியம், உடேறிய நிலை பெற்ற சமுதாயம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமில்லாத சமுதாயம் பழைமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிலுள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி நிற்கிறார். ஆனால் அவரைப் பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது! அவரை, நாட்டுக்குத் தெரியவிடாதபடி செய்வதில் பலருக்கு இலாபம் இருக்கிறது. எனவே, தேசியக் கவி மட்டுமே தெரியவேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வர். ஆனால் அந்த எண்ணமும் உடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஓட்டாது அவர்கள் மறைத்துவைத்துள்ள பாரதியார், உண்மையில் மறைந்து விடவில்லை. ஆதோ பாடுகிறார் கேளுங்கள்.

இருட்டறையில் உள்ளதடா உலகம்

சாதி இருக்கின்றதென் பானும்…

அது பாரதிதாசன் குரல் அல்லவா? என்கிறீர்களா? ஆம்! பாரதிதாசன்தான்! அவர்தான், மணிமண்டபத்தைவிட விளக்கமாக, முழு பாரதியை தமிழகத்துக்குத் தரும் அரும் பணியாற்றுகிறார். ஆவரிடம் நாங்கள, முழுப்பாரதியாரைக் காண்கிறோம், களிக்கிறோம் – வாழ்த்துகிறோம்.

அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்

உடலினை உறுதி செய்

எண்ணுவதுயர்வு

ஏறுபோல் நட

ஒற்றுமை வலிமையாம்

ஓளடதங் குறை

கற்ற தொழுகு

காலமழியேல்

குன்றென நிமிர்ந்து நில்

கூடித் தொழில் ùய்க

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்

சரித்திரத் தேர்ச்சிகொள்

சாவதற்கஞ்சேல்

சிதையா நெஞ்சுகொள்

சூரரைப் போற்று

சோதிடந்தனையிகழ்

தெய்வம் நீ என்றுணர்

தையலை உயர்வு செய்

தொன்மைக்கஞ்சேல்

நினைப்பது முடியும்

நூலினைப் பகுத்தணர்

நெற்றி சுருக்கிடேல்

பிணத்தினைப் போற்றேல்

புதியன விரும்பு

பேய்களுக்கஞ்சேல்

போர்த்தொழில் பழகு

முனையிலே முகத்துநில்

மேழி போற்று

யாரையும் மதித்துவாழ்

இவை பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி! புதிய பாதை! பாரதி பாதை தேசியமணி மண்டபத்தோடு முடிந்து விடுவதல்ல. அதற்கு அப்பாலுள்ள சமதர்மபுரிக்குப் போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் அரும்பணியாற்றும் நாம் பாரதியார் பெற்ற சிறப்புக்கண்டு பெருமையடைவதுடன் பாரதியாரின் முழு உருவமும், மக்களுக்குத் தெரியச் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டுள்ளோம். பாரதி காட்டிய பாதையை நாடு நன்கு அறியவேண்டும்! பரங்கியை ஓட்டிவிடுவது மட்டுமல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ளதனைத்தையும் ஓட்டி, புதிய சமூக அமைப்பாக்கும் பாதை. அந்தப் பாரதி பாதையை, நாம் போற்றுகிறோம்.

(திராவிட நாடு – 19-10-47)

துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/890913350282129/?rdid=zQ0VDbXWdEbVmXRo

=======================================================================

4
'பெரும்புலவன் பாரதி" என்று சொன்னதற்காக ஸ்டாலினையும் சீமான் என்று சீண்டுவார்களா? 

அப்பாலிக்கா எவனாவது பாரதி கீரதின்னு பேசினிங்க

டப்பா டான்ஸ் ஆடும்! என்று

பாரதியை ஏற்பவர்களிடமும் கம்யூனிஸ்டுகள் இடமும் வந்து

கம்பு சுற்றும் இனமான போராளிகள் யாரும் மு. க ஸ்டாலின் அவர்கள் பாரதியைப் பற்றி வானளாவ புகழ்ந்து வழங்கிய திட்டங்களைப் பற்றி

கண்டன அறிக்கை விட்டதாக ஒரு செய்தியும் காணோம்!

கலைஞர்தான் பாரதியின் எட்டயபுர இல்லத்தை நினைவில்லம் ஆக்கிய பணியைச் செய்து சிறப்பித்தவர்.

கலைஞர் மட்டுமல்ல திராவிட கொள்கை பேசும் செந்தலை கௌதமன் போன்றவர்கள் கூட

பாரதியை உரிய மதிப்பீட்டுடன் தான் அணுகுகிறார்கள்.

பாரதிதாசனின் பாரதி பற்றிய மதிப்பீட்டை ஏற்பவர்களும் இருக்கிறார்கள்.

பாரதியை தொட்டான் !கெட்டான்! என 'சமரசம்' அற்ற சில இன போராளிகள்

பாரதியை பாராட்டியதற்காக

அதற்காக கலைஞர் சமாதியில் போய் அட சங்கீ ! என்று அலறியதாகவும் தகவல் இல்லை.

அண்ணா அறிவாலய பாதையில் கிடந்து உருண்டு சாலை மறியல் வேண்டாம்!

youtube திண்ணையில் உட்கார்ந்து கூட ஆரிய பார்ப்பானுக்கு இப்படியா அள்ளிக் கொடுப்பது! இனி உங்கள் கையால் கிள்ளி கொடுத்தாலும் எந்த விருது கொடுத்தாலும் வாங்க மாட்டோம்! என்று பல்லி விழும் பலன் சொல்லும் அளவுக்கு கூட இவர்கள் வாயைத் திறக்கவில்லை.

இது என்ன ராஜதந்திரமோ?

பலிக்கும் வரை பார்ப்பனியம் என கேள்விப்பட்டதுண்டு,

பலிக்கும் வரைதான் திராவிடமும் போல!

இந்த பாராட்டுரையில் 'பெரும்புலவன் பாரதி" என்று சொன்னதற்காக ஸ்டாலின் அவர்களையும் சீமான் என்று சீண்டுவார்களா பார்ப்போம்.

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்!

அரசியல் காரணங்கள் ஆயினும்

ஆனாலும் ஜனநாயக ரீதியாக மு .க .ஸ்டாலின் அவர்களின் இந்த மதிப்பீடு சரியே!

சிறப்பு செய்ததும் சரிதான்!)

தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார்: பாரதியார் பெருமையைப் போற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்11:42 am Dec 11, 2022 |

சென்னை: மகாகவி பாரதியார் பிறந்த நாளான இன்று, தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் பெருமையை போற்றினார்.

பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா” என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார். இப்படிக் கவிமணிகளையே பாடவைத்தப் பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார் அவர்கள்.

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு; நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடு கமழும் கற்பூரச் சொற்கோ; கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம் பாட வந்த மறவன்; புதிய அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்; என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்” என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர்தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

தேசப் பற்று - தெய்வப் பற்று தமிழ்ப் பற்று மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டிச் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் அவர்கள் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில் 1947ஆம் ஆண்டே பாரதியாரை மக்கள் கவி என்று எழுதியும் பேசியும் தொடங்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் - இன்னொரு பக்கம் சனாதனம் - இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா அவர்கள் எழுதினார்கள். அதனால்தான் கழக அரசு அமைந்து, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரானபோது எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார்கள்.

அன்றைய அமைச்சர் மரியாதைக்குரிய சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார்கள். சின்னமாக அறிவித்து

இதன் தொடர்ச்சியாகப் பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

1. மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மூத்த ஆய்வாளர் திரு. சீனி. விசுவநாதன் அவர்களுக்கும், பேராசிரியர் மணிகண்டன் ய, அவர்களுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கௌரவிக்கப்படும்.

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்தக் கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வைச் சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள், பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

6. பாரதியாரின் நூல்கள், அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்துப் பாரதி குறித்த நிகழ்வுகள் பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்றப் பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி திரையில் பாரதி என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துரை. சண்முகம்
======================================================


பாரதியாரை இப்போது இன்னும் பிடிக்கிறது

நேற்று பாரதியார் பிறந்த நாளை ஒட்டி செந்தளம் இணையதளம் ஒரு zoom மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக பாரதியாரின் வாழ்வை திருப்ப படித்ததில் எத்தனை ஆச்சரியங்கள்.

நிவேதிதா( விவேகானந்தரின் சீடர்) பாரதியாரிடம் மனைவியை அழைத்து வரவில்லையா என்று கேட்டது பெரிதாக பேசப் 

படுகிறது. ஆனால் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் விஷயத்தில் நழுவிய விவேகானந்தரை பாரதியார் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். வெளி நாட்டில் ஒரு மாதிரியும், இந்தியாவில் மடத்து ஆடகளுக்காக ஒரு மாதிரியும் பேசுவதாக சாடுகிறார்.

இந்த அன்னி பெசண்ட் அம்மையார், தியாசபிகல் சொசைட்டி பற்றி பொன்வால் நரி என்று ஆங்கிலத்தில் ஒரு கதையை நாட்டுப்புற கதைகள் வடிவில் எழுதி இருக்கிறார். இந்தியர்கள் மீது உளவியல் ஆதிக்கம் செலுத்த அன்னி பெசண்ட் முயல்வதாக

கூறுகிறார். தவிர ஜே கிருஷ்ணமூர்த்தியை கடவுள் என்று மார்க்கெட் செய்ய முயன்றதற்கு கடுமையான விமர்சனம் வைத்து இருக்கிறார். அன்னி பெசண்ட், தியாசபிகல் சொசைட்டி விவகாரம் எப்போதும் மர்மக் கதை போன்றது.

சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோர்தான் காங்கிரஸ் கட்டமைப்பை விரிவு படுத்தினார்கள் என்கிறார்கள். 

அரசியல் தளத்தில் களப்

பணியாளராக இருந்திருக்கிறார், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட பாரதியாரின் ஆளுமையில் ஒரு முகம்தான் அரிசியை காக்கை குருவிக்கு போட்ட கவிஞன். 

ஆழ்ந்து சிந்திக்கும், முகமூடிகளை ஊடுருவி பார்க்கும் அரசியல் முகம் ஒன்று அவருக்கு இருந்திருக்கிறது. 

நமது பல நண்பர்கள் தோழர்கள், பாரதியாரை திட்டித் தீர்க்கும் போதே எனக்கு அவரைப் பிடிக்கும். இப்போது இன்னும் பிடிக்கிறது.

இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10215499846325360/?rdid=AT5ppPOUpnEZiNzM

===============================================================

6
பாரதி கைதுக்கு பயந்து தப்பியோடிய சிறைக்குப் பயந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்த ஒரு கோழையா? எது வீரம்? பிரிட்டிஷ் போலீசில் கைதாவது வீரமா? தப்பியோடி விடுதலைப் போராட்டத்தை தொடருவது வீரமா?

பாரதி பிரிட்டிஷ்காரனின் கைதுக்கு பயந்து பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடினார் என்றும் அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும் பாரதிக்கு எதிரான வெறுப்பும் கேலியும் கிண்டலும் கலந்த பிரச்சாரங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக, சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக இருந்த தலைவர்களை பின்தொடரும் பலர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். "பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்" என்று புத்தகம் எழுதி அதன் பயனாக இன்று திமுகவிற்கு இச்சகம் பாடிப் பிழைத்துவருபவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் மதிமாறன் போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இது பிரதானமாக பாரதி பிறந்த பிராமண ஜாதியை அடிப்படையாக வைத்து பரப்பப்படும் ஜாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டும் ஜாதிய மன நிலையில் இருந்து எழும் அடிப்படையற்றதும் வரலாற்றுப் புரிதலற்றதுமான விமர்சனம் ஆகும்.

இந்த பாரதிக்கு எதிரான ஜாதி துவேஷ பிரச்சாரத்தில் தீவிர இடதுசாரி கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஆனால் கம்யூனிசத்தின் அடிப்படையே தெரியாத பல இடதுசாரிகளும் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இவர்களை பொருத்தவரை கம்யூனிஸ்ட் என்றால் பிராமண எதிர்ப்பு இருந்தால் தான் கம்யூனிஸ்ட் என்று யாரோ இவர்களது மண்டைக்குள் புகுத்தி விட்டதால் சுய சிந்தனை அற்ற இவர்கள் பாரதிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகின்றனர்.

மகாகவி பாரதியார் திலகர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த சுதேசி இயக்கத்தில் முனைப்போடு பங்கெடுத்த முன்னணி விடுதலை போராட்ட வீரர்களின் ஒருவர். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டிஷ்  இந்தியாவில் இருந்த பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தேசிய முதலாளி வர்க்கங்களும் நாம் நமது மொழி பேசும் மக்களின் சந்தையை கைப்பற்றி, அதை நாமே பயன்படுத்த, தனித்தனியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, இந்திய தேசியம் என்ற பரந்த தேசிய உணர்வுடன் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு எதிராக போராடினால் மட்டுமே தனது சொந்த தேசிய சந்தை நலனை பாதுகாக்க முடியும் என்று உணர்ந்து கொண்ட காலகட்டமே பாரதி வாழ்ந்த காலம். 

அவ்வாறு இந்திய தேசிய முதலாளிகள் தங்கள் சந்தை நலனை முன் வைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சுதேசி இயக்கம் என்ற பெயரில் முன்னெடுத்தனர்.

அதாவது "சுதேசிப் பொருட்களையே (இந்திய பொருட்களையே)  வாங்க வேண்டும்; வெள்ளைக்காரனின் அந்நியப் பொருட்களை பரிஷ்கரிக்க வேண்டும்" என்ற முழக்கமே சுதேசி இயக்கத்தின் முழக்கம். இதன் பொருள் இந்திய சந்தையை இந்திய தேசிய முதலாளிகளே பயன்படுத்த வேண்டும்; வெள்ளை ஏகாதிபத்தியம் எங்கள் நாட்டு சந்தையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே. 

சுதேசி இயக்கத்தின் நோக்கம் இந்திய தேசிய முதலாளிகளின் சந்தை நோக்கமாக இருந்தாலும் அது வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான - காலனி ஆட்சிக்கு எதிரான  பரந்துபட்ட மக்களின் விடுதலைப் போராட்டம் என்பதால் அது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான போராட்டமாக இருந்தது. அதனால் அந்தப் போராட்டத்தில் ஆங்கில கல்வி அறிவு பெற்ற பாரதி போன்ற அறிவுஜீவிகளும் சாதாரண மக்களும் ஈர்க்கப்பட்டனர். விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை முதல் முறையாக கோகலே போன்ற பிரிட்டிஷாரிடம்  மனு கொடுக்கும் மிதவாத தலைமையிடம் இருந்து திலகர் போன்று தீவிரவாத போராட்டத் தலைமையின் கைக்கு மாறியது.  அன்றைய சென்னை மாகாணத்தில் திலகரின் தீவிரவாத போக்கின் ஆதரவாளர்களாக வ உ சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார், ஆர்யா போன்றவர்கள் சுதேசி இயக்கத்தின் போராட்டக் களத்தில் முன்வரிசையில் நின்றார்கள். 

இதன் அடிப்படையில்  வங்கப் பிரிவினைக்கு எதிராக துவக்கப்பட்ட போராட்டம் அதை தாண்டி நாடு முழுவதும் சுதேசி இயக்கமாக பரவியது. பல சுதேசி தொழில்களும் தொழிற்சாலைகளும் உருவாகின. பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஈவிரக்கம் இன்றி ஒடுக்கியது. அதன் முன்னணி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது; நாடு கடத்தியது. திலகர் அந்தமான் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். போராட்டக்காரர்களுக்கு வெடிகுண்டு செய்து கொடுத்துக் கொண்டிருந்த அரவிந்த கோஷ் கைது செய்யப்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து அரசியலை துறந்து பாண்டிச்சேரியில்  ஆசிரமத்தை உண்டாக்கி அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார். ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில் கிறித்தவத்திற்கு மதம் மாறி கிறிஸ்தவ பாதிரியார் ஆகி விட்டார். வ உ சி சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானார். சுப்பிரமணியம் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தொழு நோயாளியாய் நோயுற்று யாரும் தொட்டுப் பழகவும் அஞ்சி அருவருக்கும் அவலமான நிலைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆளானார். 

இதையெல்லாம் கண்ணுக்கு முன்னால் பார்த்த பாரதியார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் கைதாகி விடுதலைப் போராட்ட அரசியலையே கைவிடும் சூழல் ஏற்படுவதை விட, அந்தக் கைதில் இருந்து தப்பி எங்கிருந்து இந்த வேலையை - தனது எழுத்து மூலமாக கவிதைகள் மூலமாக சுதந்திரப் போராட்ட உணர்வை தட்டி எழுப்பும் வேலையை - செய்ய முடியுமோ அந்த பிரெஞ்சு பிரதேசமான பாண்டிச்சேரிக்கு செல்வதே இந்த சுதேசி இயக்கத்தை தொடர்வதற்கான வழி என்று கண்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கண்ணில் மண்ணைத் தூவி பாண்டிச்சேரி எல்லைக்குள் புகுந்தார். பாண்டிச்சேரியில் இருக்கும் ஒருவருக்கு இந்தியா பத்திரிக்கையை விற்றது போல்  ஆவணங்கள் தயார் செய்து அச்சு எந்திரம் உள்ளிட்ட இந்தியா பத்திரிக்கையின் அனைத்தையும் பாண்டிச்சேரிக்கு கொண்டு வந்த சேர்த்தார். சென்னையிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை பாண்டிச்சேரியில் இருந்தும் செய்தார். தொடர்ந்து இந்தியா பத்திரிக்கையில் வெள்ளைக்காரனுக்கு எதிராக எழுதி வந்தார். அப்பத்திரிக்கைகளை ரகசியமாக பிரிட்டிஷ் இந்தியாவிற்குள்  அனுப்பி சுதந்திர வேள்வியை அணைய விடாமல் தீ மூட்டி கொழுந்து விட்டு எரியச் செய்து கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி பாரதியை கைது செய்யுமாறு அல்லது கைது செய்ய உதவுமாறு கோரியது. பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசாங்கம், எங்கள் நாட்டுச் சட்டப்படி எங்கள் அரசுக்கு எதிராக அவரது எழுத்துக்கள் இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது.

இன்று பாரதியார் ஒரு கோழை; கைதுக்கு பயந்து தப்பி ஓடிய ஒரு பயந்தாங்கொல்லி என்று, இன்று சமூக விடுதலைக்காக ஒரு நாள் கூட சிறையில் இருப்பதற்கு தயாராக இல்லாத சுயநல பிண்டங்கள் பலர் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

பிரிட்டிஷ்காரனை எதிர்த்து போராடுவது தான் வீரமே ஒழிய, பிரிட்டிஸ்காரனிடம் சிக்கி கைது ஆவது வீரமல்ல. தப்பி ஓடி மீண்டும் பிரிட்டிஷ் காரனை எதிர்த்துப் போராடுவது தான் வீரனுக்கு அழகு. அவர் பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடி அரவிந்தரைப் போல் ஆசிரமம் நடத்தி அரசியலில் இருந்து ஒதுங்கி வில்லை. அங்கிருந்து பிரிட்டிஷ்காரனுக்கு எதிராக பத்திரிக்கை நடத்தினார்; தனது விடுதலை போராட்டத்தை தொடர்ந்தார். பாண்டிச்சேரியில் இருந்த அரவிந்தரை சந்தித்து அவரையும் சுதந்திரப் போராட்டத்திற்குள் இழுக்க முயன்றார். ஆனால் அரவிந்தர் ஆன்மீகத்திலேயே கவனம் செலுத்தியதால்  அவர் சுதந்திரப் போராட்டத்தை காட்டி கொடுத்து இளைஞர்களை தவறான வழியில் நடத்துகிறார் என்று கோபம் கொண்ட பாரதி "அரவிந்தப் பாம்பே..." என்று அரவிந்தரை விமர்சித்து ஒரு கவிதையே புனைந்தார்.

சுதேசி இயக்கம் தோல்வி கண்டு ஒட்டுமொத்த தலைவர்களும் கைதாகி நாடு கடத்தப்பட்டு அந்த இயக்கம் முடிவுக்கு வரும்வரை பாரதி பாண்டிச்சேரியில் இருந்து பிரிட்டிஷ்காரனுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார்.

சுதேசி இயக்கம் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பலவீனமடைந்து வந்த நிலையில், முதல் உலகப்போர் துவங்கியது. முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஈடுபட்டிருந்த வேளையில் அதன் ஒட்டுமொத்த உற்பத்தியும் போர்முயை நோக்கி ராணுவ தளவாட உற்பத்திகளை நோக்கி திருப்பப்பட்டதால் ராணுவத்திற்கு தேவையான ஆடைகள் உள்ளிட்ட லாஜிஸ்டிக் எனப்படும் போர்படையின் பின்புல தேவைகளை பூர்த்தி செய்யும் உற்பத்தி துறை இந்திய முதலாளிகளுக்கு சில நிபந்தனைகளோடு திறந்து விடப்பட்டது. அதுவரை பஞ்சாலை நெசவாலை தொழில்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முதலாளிகள் மட்டுமே ஏகபோகமாக இருந்து வந்த நிலை மாறி இந்திய தேசிய முதலாளிகளும் பஞ்சாலைகளும் நூற்பாலைகளும் துவக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்திய தேசிய முதலாளிகளின் சுதேசி தொழில்களுக்கும் ராணுவ தேவைகளுக்கான ஆடை உற்பத்திக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் இந்திய தேசிய முதலாளிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு ஒரு தற்காலிக சமரசத்தை செய்து கொண்டனர். அவர்கள் சுதேசி இயக்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதையும் நிதி அளிப்பதையும் நிறுத்திக் கொண்டனர். 

தேசிய முதலாளிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய தோடு சமரசம் செய்து கொண்டாலும், சுதேசி இயக்கம் தேசிய முதலாளிகளின் நேரடி ஆதரவை இழந்தாலும் களத்தில் நின்ற பாரதி வ.உ.சி போன்ற அறிவுஜீவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் தமது போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு குறைந்து போராட்டம் தோல்வியை சந்திப்பதை கண்டு, நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று மனம் நொந்து போனாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தம்மால் இயன்ற கடைசி வாய்ப்பு வரை போராடினார்கள். ஆனாலும் சுதேசி இயக்கம் தோல்வியை தழுவியது. அது முற்றாக முடிந்து போனது. மீண்டும் காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவக்கப்படும் வரை இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு கனமான, துயரம் தோய்ந்த அமைதி காலகட்டத்திற்குள் சென்றுவிட்டது.

ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கமே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், எதுவும் செய்யாமல் பாண்டிச்சேரியில் இருந்து  ஒரு பயனும் இல்லாமல் உண்டு உறங்கி வாழ்ந்து கொண்டு இங்கே முடங்கி கிடப்பதை விட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் சமரசம் பேசி, அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுபட்டு சுதந்திர மனிதனாக பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் பிரவேசித்து விட வேண்டும் என்று பாரதி முடிவு செய்தார். பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் சிறைவாசம் இன்றி அவரை மன்னிப்பதற்கு தயாராக இல்லை. கடலூர் சிறையில் அடைத்தது. பின் மன்னித்து  அவரை விடுதலை செய்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக பாரதி பட்ட கஷ்டங்கள் துயரங்கள்  அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் மறைத்துவிட்டு, அவர் பாண்டிச்சேரிக்கு ஒரு கோழையைப் போல் ஓடினார்; மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார் என்று இன்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. யார் இதை பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு சேர்ந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அம்பேத்கரை புரட்சியாளர் என்று ஏற்றுக் கொள்பவர்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவாளராக சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக இருந்த ஈவேரா பெரியார் போன்றவர்களையும் தலைவராக போற்றுபவர்கள் தான் இதை செய்கிறார்கள்.

ஆனால் இந்தப் போராட்ட காலகட்டத்தில் இன்று புரட்சியாளர்களாக போற்றப்படும் பாரதியை விட  பன்மடங்கு மேலான புரட்சியாளர்களாக பிரச்சாரம் செய்யப்படும் ஈவேரா ஈ.வெ.ரா #பெரியார், #அம்பேத்கர் போன்றவர்கள் அன்று அரசியல் களத்திற்கே வரவில்லை என்பதை இவர்கள் மக்களிடம் இருந்து மறைத்து விடுகிறார்கள். 

1882ல் பிறந்த பாரதி தனது 28 வயதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திற்கு எதிராக தன்னலமற்று போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் பெரியாரும் அம்பேத்கரும் பாரதியைப் போலவே இளமை முறுக்கேறிய இளம் காளைகள் தான். சிறுவர்கள் அல்ல. ஆனால் சுதந்திரப் போராட்ட உணர்வு சிறிதும் இல்லாமல் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறுவதையே குறியாகக் கொண்டிருந்தனர்.

சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்த 1910 காலகட்டத்தில் 1879ல் பிறந்த பெரியாருக்கு வயது 30; 1891ல் பிறந்த அம்பேத்கருக்கு வயது 20. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் வீரத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பாரதியை கைதுக்கு பயந்து தப்பி ஓடிய - சிறைக்குப் பயந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கோழை என்று அம்பேத்கரையும் பெரியாரையும் புரட்சியாளர்கள் என்போர் பாரதியை விமர்சிக்கும் இவ்வேளையில், அதே காலகட்டத்தில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறுவதையே குறியாகக் கொண்டிருந்த பெரியாரும் அம்பேத்கரும் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற வரலாற்று புரிதல் இங்கு நமக்கு அவசியமான ஒன்றாகும்.

ஆனால் இப்படிப்பட்டவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கும் இவர்கள் பாரதியின் மீதான இந்த விமர்சனத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? 

பாரதி சுதந்திர போராட்டத்திற்காக பாடுபடாவிட்டாலும் பரவாயில்லை கைதாகி சிறையில் அடைபட்டுச் செத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? அல்லது 

சுதந்திரப் போராட்டமே முடிவுக்கு வந்து இந்தியா முழுவதும் போராட்டங்களே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் பாரதி வெறுமனே சுகபோகமாக பாண்டிச்சேரியில் காலம் கழித்து அங்கேயே செத்து மடிந்தாலும் மடிந்திருக்க  வேண்டுமே ஒழிய மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து தமிழ்நாட்டிற்கு வந்து அவர் குடும்பத்தோடும் ஆத்ம நண்பர்களோடும் இருந்ததும் சென்னைக்கு வந்து தனது 39 ஆவது வயதில் வறுமையால் மாண்டதும் தவறு என்று சொல்கிறார்களா?

நம் சமூகத்தின் சாபக்கேடு என்னவென்றால் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியை கூட ஜாதி அடிப்படையில் வெறுப்பதும் கிண்டல் செய்வதும் எனற அளவிற்கு ஜாதிய மன நிலையில் ஊறிப் போயிருக்கிறது நம் சமூகம்.

அதனால் தான் பிரிட்டிஷ்காரனுக்கு சாமரம் வீசிக்கொண்டு பிரிட்டிஷ்காரனுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து தன் வெள்ளை ஏகாதிபத்திய ஆதரவு காரணமாக விடுதலைப் போராட்டத்திலே கலந்து கொள்ளாத அம்பேத்கர் அதற்காக இவ்வாறு கேலி செய்யப்படுவதில்லை; மாறாக அவர் இன்று புரட்சியாளர் என்று கொண்டாடப்படுகிறார்.  ஏனென்றால் அதுவும் அவரது ஜாதி அடிப்படையிலான உயர்ச்சி தான். 

நியாயமாக பார்த்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்காக போராடிய பாரதியை அந்தப் போராட்டத்தை கைவிட்டு கைதாகாமல் தப்பி ஓடியதும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து போராட்டத்தை கைவிட்டதும் குற்றம் என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் இவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான விடுதலைப் போராட்டத்திலேயே கலந்து கொள்ளாத அம்பேத்கரையும் பெரியாரையும் அதைவிட கடுமையாகத்தானே விமர்சித்திருக்க வேண்டும். 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய பாரதியை அவன் பயந்து ஓடினான் என்று கேலி செய்கிறார்கள். ஆனால் அம்பேத்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கு பயந்து அவர்களுக்கு ஆதரவாளராகவே மாறினார் என்று இவர்கள் ஏன் சொல்வதில்லை? 

காரணம், அவரவர் பிறந்த ஜாதி. 

பாரதி பிறந்தது பிராமணர் ஜாதி என்பதால் அவர் இந்த மக்களுக்காக எந்த தியாகம் செய்தாலும் அவர் தூற்றப்படுவார்; அம்பேத்கரும் பெரியாரும் பிராமண ஜாதியில் பிறக்கவில்லை அதாவது பிராமணர் அல்லாதவர்கள் என்பதால் அவர்கள் இந்த மக்களுக்கு துரோகம் செய்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள்.

ஜாதி அடிப்படையில் ஒருவரை தாழ்த்துவதும் ஜாதியவாதம் தான்; ஜாதி அடிப்படையில் ஒருவரை உயர்த்துவதும் ஜாதியவாதம் தான்.

இதைத்தான் பாரதி அன்றே குழந்தைகளுக்குச் சொன்னான்: 

"குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொலல் பாவம்"

அன்று பாரதி பாவம் என்று சொன்ன பாவத்தைத் தான் இன்று பாரதியின் விஷயத்தில் இந்த முற்போக்கு முகமூடிகள் செய்து கொண்டுள்ளனர். 

த.சிவக்குமார்

https://www.facebook.com/share/p/1Etnewvbw6/

==============================================================

7
தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு  இல்லையே...!  நெல்லூர் மாஹானசபையில் வந்தே மாதரம்கூட  பாடவில்லை....! 'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் வேதனை!

சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீ வெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது. ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.

பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ?

தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன. 

நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.

பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.

நமது பாஷையில் "கவனம்", (ஆழ்ந்து நோக்குதல்) "ஜொகுஸு", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", "கொஞ்சம்" முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன....

 இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள். ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை. உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது.

 இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.

இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள். தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள். 

சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.

சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது..

 கொஞ்ச காலத்துக்கு முன்பு  கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் 'வந்தே மாதரம்' பாட்டுக் கூடப் பாடவில்லை யென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.

இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:

1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.

3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும். அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு. கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.

4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்றொரு பகுதி. இரண்டாவது தாய்ப்பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும். என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது...

மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை.

 தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி... 

தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை...

மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் 'தெலுங்க மஹா சபை' எனும் தலைப்பில் 'சக்தி தாஸன்' எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது. 

சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. 

அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் 'ஆந்திர மகாசபை' அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். 

ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது. 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு 'திராவிட நாடு' பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. 

தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.

 சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!)

'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் 11.12.1882.

கதிர் நிலவன் 

www.Tamilthesiyan.wordpress.com

https://www.facebook.com/story.php?story_fbid=122203336964297431&id=61558922956619&rdid=5055fnseUvuXZ6t6

=======================================================================

8
பாரதிபற்றி 

போராளிக் கவிஞன் பாரதி ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அவரைப்பற்றிப் பல அவதூறுகள் தற்போது பரப்பப்பட்டுவருகின்றன.

பாரதி தன்னை ஒருபோதும் மார்க்சியவாதி என்று கூறியவர் கிடையாது!

தன்னை ஒரு நாத்திகர் என்று கூறியது கிடையாது!

ஆனால் . . .  ஆங்கிலேய அரசியல் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர்!

செக்கிழுத்த செம்மல் வ உ சி-யுடன் இணைந்து நின்றவர்! 

தன் அரசியலை விலைபேசி விற்றவர் இல்லை!

சோவியத் ரசியாவில் ஜார் மன்னன் வீழ்ச்சியடைந்ததும் மகிழ்ச்சியால் பாராட்டியவர்! 

தீண்டாமையே எதிர்த்து நின்றவர்!

பெண்ணடிமையைச் சாடியவர்! பெண்கல்வி, விதவைத் திருமணம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியவர்! 

தேவையற்ற மூட நம்பிக்கைகளை விமர்சித்தவர்! 

இந்திய நாடு தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்று கூறியவர்! 

மத நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தியவர்! 

தமிழ்மொழியின் சிறப்பை மிகப் பெரிய அளவில் எடுத்துக்கூறியவர்! 

செந்தமிழ் நாடு என்று தமிழ்நாட்டின் பெருமையைப் பற்றிப் பாடியவர்! 

வெறும் வாய்ப்பேச்சு வீரர் இல்லை அவர்! களத்தில் நின்றவர்! ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு உட்பட்டவர்! 

இவ்வாறு தன் இலக்கியப் புலமையையும் சமுதாயப் புரட்சியையும் இணைத்துப் பணியாற்றியவர்! 

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்! 

 சமுதாய உணர்வோடு . . .  சமுதாய நடைமுறையோடு . . .  செயல்பட்டவர்!

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி காலூன்றுவதற்குமுன்பே . . .  பொதுவுடைமைபற்றிப் பாடியவர்! 

ஒரு பரந்துபட்ட உலகக் கண்ணோட்டத்தை உடையவர்!

எனக்குத் தெரிந்தவரையில்  . . .  இன்றுவரை பாரதியைப்போன்ற ஒரு சமுதாயக் கவிஞர் . . .  போராட்டக் களத்தில்  நின்று பாடியவர் . . .  சமுதாயத்திற்காகப் பாடியவர் . . .  யாரும் இல்லை என்பதே உண்மை! 

தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் . . .  அன்றைய காங்கிரசின் தவறான நடைமுறை, வழிகாட்டுதல் போன்றவற்றால் அரசியலில் சோர்வடைந்தார் என்பது உண்மை! அது விமர்சனத்திற்கு உட்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! 

ஆனால் ஒருபோதும் அவர் நாட்டிற்கு . . . தமிழ் இனத்திற்கு . . .  தமிழுக்குத் துரோகியாக மாறவில்லை! 

அவ்வாறு இருக்கும்போது . . .  வரிந்துகட்டிக்கொண்டு அவரைப்பற்றி அவதூறுகளை அள்ளிவீசுவது தவறு என்பதே எனது கருத்து. நண்பர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களைப் பாராட்டலாம்! ஆனால் அதற்காகப் பாரதிபற்றி அவதூறு செய்யாதீர்கள்! நண்பர்கள், தோழர்கள் என் கருத்தில் மாறுபடலாம்! அது அவர்கள் உரிமை!

தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/100004424580477/posts/3492612987562820/?rdid=QfJFWNRXGUWvi6cA

============================================================

9
பாரதியைப்பற்றிய தேவையற்ற விமர்சனங்களுக்கு எனது பதிலுரை 

ஒருவரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லது பின்பற்றுபவர்கள் அவரைப் பாரட்டுவது அல்லது பின்பற்றுவது அவர்களது உரிமை. இது தவறு இல்லை. அவருடைய கொள்கைகளின் சிறப்புகளை எடுத்துக்கூறலாம். அவரது வாழ்க்கையை அல்லது சமுதாயத்திற்காக அவர் செய்த பணிகளை உயர்த்திக்கூறலாம். இதில் தவறு இல்லை!

ஆனால் . . . அதற்காகச் சமுதாயத்திற்காக உழைத்த மற்றவர்களைக் குறைத்து அல்லது தாழ்த்திப் பேசவேண்டிய தேவை இல்லை! அவ்வாறு பேசுவதன்மூலம்தான் தங்கள் தலைவர்களின் புகழைத் தக்கவைக்கவேண்டுமென்பது இல்லை!

போராளிக் கவிஞர் பாரதியார் . . . மகாகவி என்பதைவிட . . . தான் வாழ்ந்த சமுதாயத்தின் சமூகக் கொடுமைகளைத் தோலுரித்துக்காட்டியவர் சமூகப் போராளி. தான் வாழ்ந்த காலகட்டத்தில் தனது நாட்டை அடிமைப்படுத்திச் சுரண்டிய அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர். மத நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தியவர். மூட நம்பிக்கைகள் இல்லாத, பெண் அடிமை இல்லாத , பொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பியவர். 

எந்தவொரு விருதுக்காகவும் போராடியவரோ அல்லது பாடியவரோ இல்லை! காசுக்காக விலை போனவர் இல்லை. அவரது இறுதி வாழ்க்கையில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளுக்கு உறுதியாக அவர் காரணம் இல்லை! அவர் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நிலைபாடே காரணம்!

இவ்வளவு பெருமை வாய்ந்த ஒருவரை . . . தேவை இல்லாமல் . . . தரக்குறைவாக விமர்சனம் செய்வது எந்தவகையிலும் சரி இல்லை! தனது கொள்கைக்காகவும் நடைமுறைக்காகவும் அவரும் அவரது குடும்பமும் எந்த அளவு இன்னல்களுக்கு உட்பட்டனர் என்பது வரலாறு அறியும்!

அவர் ஒரு பழுத்த ஆத்திகர் . அன்று சமுதாயத்தில் சாதி, பண்பாட்டு ஆதிக்கத்தைக் கைகளில் வைத்திருந்த பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். அதனாலேயே அவரது சமூகப் பணிகளைக் கணக்கில் கொள்ளாமல், அவரைத் தாழ்த்திப்பேசுவது எந்தவகையில் நியாயம்?

என்னைப்பொறுத்தவரையில் . . . தமிழ்நாட்டில் உண்மையில் அன்றைக்கு முதன்மையான பணியாக இருந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் இரண்டுபேர். ஒன்று வ உ சி! மற்றொன்று பாரதி! வாஞ்சிநாதன்போன்று உயிர் அர்ப்பணிப்பு செய்த சிலரும் உண்டு! வ உ சியும் பாரதியும்தான் கடுமையாக ஆங்கிலேய அரசால் பாதிக்கப்பட்டார்கள்! 

அப்படிப்பட்ட ஒரு போராளியை . . மிகச் சாதாரணமாக . . . தரக்குறைவாக விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம்? அவரது நிறைகுறைகளைச் சமூக ஆய்வுக்கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து, கருத்து கூறுங்கள்! சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சனம் செய்வது தவறு!

பாரதியாரின் எழுத்துகளை முழுமையாகப் படியுங்கள். அவரது விடுதலைப்போராட்டப் பங்கைத் தெரிந்துகொள்ளுங்கள்! உங்களுக்குப் பிடித்த கொள்கைகளையும் தலைவர்களையும் உயர்த்திப்பிடியுங்கள்! ஆனால் அதற்காகப் பாரதியைத் தாழ்த்திப் பேசாதீர்கள். அவ்வாறு பேசுவதாலேயே உங்களுக்குப் பிடித்த தலைவர்களின் சிறப்பும் புகழும் வெளிப்படும் என்று கருதவேண்டாம்! அவர்களின் கொள்கைகளும் நடைமுறைகளும் சமுதாயத்திற்குப் பயன்பட்டிருந்தால், அவர்களது புகழையும் சிறப்பையும் யாரும் எதனாலேயும் மறைக்கமுடியாது! அவற்றை எடுத்துக்கூறுங்கள்! அதுவே உங்களுக்குச் சிறப்பு!

நான் புரிந்துகொண்ட மார்க்சியக் கண்ணோட்டத்தில் (நான் ஒரு நாத்திகனும்கூட!) என்னைப் பொறுத்தவரையில் பாரதி அவர் வாழ்ந்த காலகட்டத்துச் சமூகக் கடமைகளைச் செய்தவர். அதனால் பாதிக்கப்பட்டவரும்கூட! அவர் சிறப்பு எப்போதும் தமிழக வரலாற்றில் நிலைத்துநிற்கும்! யாராலும் மறைக்கமுடியாது!

தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/100004424580477/posts/3496626050494847/?rdid=igbje5Pxen1lfhk6

===================================================

10
பாரதியார் இன்று இருந்திருந்தால், அவரைத் தான் வலதுசாரிகள் தங்கள் முதல் எதிரியாக கருதி கருவறுத்திருப்பார்கள்…!

பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது,

 – குறிப்பாக எட்டையபுரம் பாரதி மணிமண்டபத்தில் நடக்கும் விழாவாகட்டும், 

-சென்னை பாரதியார் இல்லத்தில் நடக்கும் விழாவாகட்டும்… 

வலதுசாரி இந்துத்துவ ஆளுமைகள் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. நடைமுறையில் இவர்கள் பாரதியாருக்கு எதிரான கருத்தியலில் மூழ்கி திளைப்பவர்கள்!

தங்கள் வாழ்க்கையில் படு பிற்போக்காக இருந்து கொண்டு, சனாதன சாக்கடைக்குள் நெளியும் புழுக்களான இத்தைய எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரதியார் இன்று இருந்திருந்தால், அவரைத் தான் தங்கள் முதல் எதிரியாக கருதி கருவறுத்திருப்பார்கள்…!

இன்றைக்கு இவர்களின் சனாதன முகத்தை மறைத்துக்  கொள்வதற்கு பாரதியாரை முகமுடியாக்கிக் கொள்கிறார்கள். நடிப்புச் சுதேசிகள், பிழைப்புவாதிகள்.

எப்பேற்பட்ட எழுத்தாளுமையான பாரதியாரை வெறும் உதவி ஆசிரியர் என்ற அளவில் தான் சுதேசமித்திரனில் கடைசி வரை சுருக்கி வைத்திருந்தனர்…!

சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்த தன்னால் நினைத்ததை எழுதமுடியவில்லை என்று தான் நண்பர்கள் உதவியுடன் சுதந்திர வேள்விக்காக இந்தியா வார இதழை ஏற்படுத்தி, ஆவேசமாக எழுதி வந்தார், பாரதியார்.

ஒரு கட்டத்தில்  இந்தியா வார இதழின் அறச்சீற்றம் காரணமாக அந்தப் பத்திரிக்கை தடை செய்யப்பட்டு, பாரதியாரை கைது செய்ய ஆங்கிலேயே அரசு ஆணையிட்ட நிலையில், நவம்பர்-16, 1908 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில் வந்த தலையங்கம் பாரதியார் எழுத்துக்களை ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது;

’’இந்தியா பத்திரிகையில் ராஜதுவேஷ குற்றமுள்ள வியாசங்கள் தோன்றின. அதன் பிரசுரகர்த்தரான ஸ்ரீனிவாசய்யங்காருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் ஓடிப்போய்விட்டார். பொதுவாக இப்படி விதிக்கப்படுமென்றே எதிர்பார்க்கப்பட்டது. துவக்கத்திலேயே கவர்மெண்டார் எச்சரித்து இருப்பார்களேயானால், அவைகளால் விளையும் தீமை குறைந்திருக்கும்.’’என எழுதப்பட்டு இருப்பதன் மூலம், பாரதியின்  அறம் சார்ந்த கருத்துக்கள் தீமை விளைவித்தன..’’ என சுதேசமித்திரன் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக எழுதியதை கவனிக்க வேண்டும்.

அதாவது, பிரிட்டிஷாருக்கு வலிக்காமல் சுதந்திரம் கேட்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இன்றும் இது தான் ஊடகங்களின் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்களை அண்டிப் பிழைத்துக் கொண்டு, அவர்களை பாதிக்காமல் நியாயம் கேட்பதாக பாசாங்கு செய்ய வேண்டும்…என்பதே  ஊடகங்களின் எழுதப்படாத ஊடக அறமாக உள்ளது.

பாரதியார் உயிரோடு இருக்கும் வரை அவரை கடுகளவும் மதிக்காதவர் கல்கி. பாரதி இறந்து பத்தாண்டுகள் வரையும் கூட கல்கியின் நிலைபாடு அப்படித்தான் இருந்துள்ளது என்பதற்கு பாரதிதாசன் 1949 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி பாரதி விழாவில் பேசியதே சான்றாகும். 

’’பாரதியாரை ஆச்சாரமில்லாதவன், ஆபாசக் கவிஞர், அத்துமீறும் வார்த்தைகளில் ஆங்கிலேயரை எதிர்ப்பவர் என்றெல்லாம் வசைபாடிய கல்கி தான் இன்று பாரதியார் விழாக்களின் நாயகனாக இருக்கிறார்,. பாரதியார் விழாவிற்கு பெரும்பாலும் யாரும் என்னை பேச அழைப்பதில்லை. ஏனென்றால், நான் உண்மையான பாரதியாரை பேசிவிடுவேன். சாதிகளற்ற சமூகத்தை காண விழந்த பாரதியை - பெண் விடுதலையை பாடிய பாரதியை - தீண்டாமைக் கொடுமைகளை தீ போல சாடிய பாரதியை தான் நான் அதிகம் பேசுவேன். அதனால் தவிர்க்கிறார்கள்’’ என்றார், பாரதிதாசன்.

சமரசங்களின்றி எழுதப்படும் சமகாலத்து நேர்மையான எழுத்துக்களை அன்றும் சரி, இன்றும் சரி, என்றுமே மக்கள் பெரிதாக ஆதரித்து விடுவதில்லை. ஆதரிப்பதால், தங்களுக்கு நஷ்டம் வராது என்றான பிறகு, காலம் கடந்த நிலையில் ஆதரித்து, தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/33793162406941228/?rdid=ptoiOFD1H2mIGawH

===============================================

11
காரிருளில் தள்ளப்பட்ட கவிதைச் சூரியன்!

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தின் வேர்களில் நீர் பாய்ச்ச வாராது வந்துதித்த மாமணியாய் வந்தவரே பாரதியார்! அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துக்கள் ஆதரிக்கப்பட்டதை விடவும் அதிகம் நிராகரிக்கப்பட்டது.  வணங்காமுடியாய் இருந்த அவரை வறுமை தின்று கொன்றது குறித்த ஒரு அலசல்;

காட்டாற்று வெள்ளமாக பாய்ந்த அவரது கவிதைப் பயணத்தால் சோர்ந்திருத்த தமிழ் பயிர்கள்  தழைத்தோங்கின!

சொல் புதிது, சிந்தனை புதிது, பார்வை புதிது, கற்பனை புதிது..அவரது நடை, உடை, பாவனை, செயல் அனைத்துமே முற்றிலும் புதிது.

இந்தப் புதியவனை ஏற்கும் மன நிலை அன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு இல்லை. இந்தியா பத்திரிகை ஆசிரியராக இருந்து இடி, மின்னல் போல அவர் பிரிடிஷாரை எதிர்த்து எழுதிய போது, அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்ததால் புதுச்சேரி சென்று தொடர்ந்து இயங்கினார்.

பிறவிக் கவிஞர் எட்டு வயதிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்று இருந்தார்.  தமிழ்ப் புலவர்களுக்கே உரிய செல்வந்தர்களிடம் தாழ்ந்து பணிந்து தங்களின் புரவலர்களாக்கிக் கொள்ளும் குணம் அவரிடம் அறவே இல்லாதிருந்தது.

பாரதியார் தன் மதிப்பீட்டில் நீதி, உயர்ந்த மதி, கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று கறாராக வரையறுத்திருந்தார்.

இவை இல்லாதவர்கள் எந்த ஒரு உயர்பதவி வகிப்பினும், எவ்வளவு செல்வாக்கோடு இருந்தாலும் அவர் தலை வணங்கமாட்டார்! உண்மையான தகுதி ஒரு எளியவரிடத்து கண்டாலும், சிரம் தாழ்த்துவார்.  தமிழ்ச் சமூகத்தில் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஏற்றம் காண்பது ஒரு போதும் சாத்தியமில்லை  என்பது அன்று மட்டுமல்ல, இன்றும்  கூடத்தான்.

பாரதியாரின் இந்தியா பத்திரிகை மிகக் குறைந்த வாசகர் பரப்பின் ஆதரவையே பெற்று இருந்தது. அன்றைக்கு பெருவாரியான மக்கள் சுதேசமித்திரன், இந்து போன்ற வெகுஜன பத்திரிகைகளையே வாங்கி, ஆதரித்தனர். ஒரு முறை டிராம் வண்டியில் ஒரு அரசாங்க உத்தியோகஸ்தரான தமிழர் இந்தியா வார இதழை வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்த பாரதியார், அவர் அருகே சென்று.. ’’என்ன எழுதப்பட்டிருக்கிறது? எனத் தெரியாதவர் போல கேட்ட போது, அவர், ’’எவ்வளவு ராஜதுவேஷமாக எழுதுறாங்க. இப்படியானவர்களை அவசியம் தண்டித்தே ஆக வேண்டும்’’ எனக் கூறி உள்ளார்.

சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்த தன்னால் நினைத்ததை எழுதமுடியவில்லை என்று தான் நண்பர்கள் உதவியுடன் சுதந்திர வேள்விக்காக இந்தியா வார இதழை ஏற்படுத்தி, ஆவேசமாக எழுதி வந்தார்.

ஒரு கட்டத்தில் அதன் அறச்சீற்றம் காரணமாக இந்தியா பத்திரிக்கை தடை செய்யப்பட்டு, பாரதியாரை கைது செய்ய ஆங்கிலேயே அரசு ஆணையிட்ட நிலையில் நவம்பர்-16, 1908 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில் வந்த தலையங்கம் பாரதியார் எழுத்துக்களை ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது;

’’இந்தியா பத்திரிகையில் ராஜதுவேஷ குற்றமுள்ள வியாசங்கள் தோன்றின. அதன் பிரசுரகர்த்தரான ஸ்ரீனிவாசய்யங்காருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் ஓடிப்போய்விட்டார். பொதுவாக இப்படி விதிக்கப்படுமென்றே எதிர்பார்க்கப்பட்டது. துவக்கத்திலேயே கவர்மெண்டார் எச்சரித்து இருப்பார்களேயானால், அவைகளால் விளையும் தீமை குறைந்திருக்கும்.’’ என எழுதப்பட்டு இருப்பதன் மூலம், பாரதியின்  அறம் சார்ந்த கருத்துக்கள் தீமை விளைவித்தன..’’ என சுதேசமித்திரன் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக எழுதியதை கவனிக்க வேண்டும்.

அதாவது, பிரிட்டிஷாருக்கு வலிக்காமல் சுதந்திரம் கேட்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இன்றும் இது தான் ஊடகங்களின் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்களை அண்டிப் பிழைத்துக் கொண்டு, அவர்களை பாதிக்காமல் நியாயம் கேட்பதாக பாசாங்கு செய்ய வேண்டும்…என்பதே  ஊடகங்களின் எழுதப்படாத ஊடக அறமாக உள்ளது.

சமகாலத்து நேர்மையான எழுத்துக்களை சமரசங்களைவிடுத்து மக்கள் என்றுமே பெரிதாக ஆதரித்துவிடுவதில்லை.  ஆதரிப்பதால் தங்களுக்கு நஷ்டம் வராது என்றான பிறகு, காலம் கடந்த நிலையில் ஆதரித்து, தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

புதுச்சேரிக்கு சென்ற போது முன்பின் தெரியாத ஊரில் அவர் அடைந்த துன்பங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, ஆறு மாத அல்லல் வாழ்க்கைக்கு பிறகே அங்கிருந்து இந்தியா இதழை நடத்துகின்ற சூழல் உருவாகிறது. பின் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்த போது முதலில் தம்பு செட்டித் தெருவில் அவர் தங்கி ஒண்டு குடித்தன வீட்டில் இருந்த போது, அவரது சுதந்திரச் செயல்பாடுகளால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக அவர் இருந்தது தான் பார்த்தசாரதி கோவில் பின்புறம் உள்ள இல்லம்.

பாரதியார் வாழ்ந்த காலத்தில் வெகு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டார். அதிலும் மிகச் சிலரால் மட்டுமே ஆதரிக்கப்பட்டார். அவருடைய சொந்தச் சாதியில் பதவியிலும், பணத்திலும் கொடி கட்டிப் பறந்தவர்களாலும், ஆச்சார அனுபூதிகளாலும் அவர் புறம் தள்ளப்பட்டார். ஆயினும்  ஞாயிறுச் சுடரென ஒளிர்ந்த ஞானக் கிறுக்கன் பாரதியாரை எந்த எதிர்பார்ப்புகளுமற்று, ஆதரித்து  அவரை  அனுசரித்தவர்களிலும் பெருமளவு அவர் சாதியினரே அதிகம் இருந்தனர்.

வற்றாத அறிவாற்றல் இருந்தும், வறுமையில் உழன்ற பாரதியார் கடைசி காலத்தில் எழுதி வைத்த ஒரு குறிப்பு ஒன்றை சொல்லி, இந்தக் கட்டுரையை கண்ணீருடன் நிறைவு செய்கிறேன்;

வயிறு வேதனை செய்கிறது. உஷ்ணமிகுதியால் புகையிலை சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. உடல் படுத்துக் கொண்டது. கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்துகலந்தது. வைத்தியனுக்கு கொடுக்க பணமில்லை. குழப்பம்! குழப்பம்; தீராத குழப்பம். எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

1904 ல் தொடங்கிய  பாரதியின் எழுத்து வேள்வி 18 ஆண்டுகள் மட்டுமே தொடர முடிந்ததை எண்ணி தமிழ்ச் சமூக குற்றவுணர்வு கொள்ளுமா?

சாவித்திரி கண்ணன்

(அறம் இணைய இதழ்)

https://aramonline.in/23479/bhathiyar-great-poet-poverty-life/

=================================================================

12
பாரதிதாசன் காட்டிடும் உண்மையான பாரதியார்!

திராவிட இயக்கத்தார் சிலர் பாரதியாரை சாதியப் பார்வையுடன் விமர்சிக்கிறார்கள். பாரதி பிறந்த குலம், அவரது பக்திப் பாடல்கள், தேசியக் கண்ணோட்டம் ஆகியவற்றை வைத்து அவரை தமிழ்ச் சமூகத்திடம் அன்னியப்படுத்துகின்றனர்.  இதோ உண்மையான பாரதியாரை பாரதிதாசன் அன்றே துல்லியமாகப் படம் பிடித்து  காட்டியுள்ளார்;

பாரதிதாசன், கனக சுப்புரத்தினமாக இருந்த இளமைக் காலத்தில் பக்திப் பாடல்களும், சிறுசிறு தனி பக்திபாடல்களும், இலாவணி போன்ற பாடல்களும் எழுதிக் கொண்டிருந்த பள்ளிக் கூட தமிழாசிரியர் மட்டுமே. பாரதியின்  பேச்சுக்களும், பழக்கமும், சிந்தனை போக்குகளும் படிப்படியாக பாரதிதாசனை பெரிதும் ஈர்த்து, பிறகு தான் கனக சுப்புரத்தினம் ஒரு இலட்சியக் கவிஞர் பாரதிதாசனாக மாறுகிறார்.

புதுச்சேரி வந்த பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் கனக சுப்புரத்தினம் இருபது வயது இளைஞன். சிலம்பம், மற்போர் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் முரட்டுக் காளையாக இருந்துள்ளார்.

கையில் தங்கக் காப்பும், கழுத்தில் கறுப்புக் கயிறும், நெற்றியில் பட்டை நாமமும்,  மல் ஜிப்பா அணியும் பக்தி பாகவதராக தீவிரக் கடவுள் பக்திமிக்கராக பஜனை மடங்களில் பாடிக் கொண்டிருந்த  இளைஞரான கனக சுப்பு ரத்தினம் படிப்படியாக மாற்றம் கண்டு புரட்சிக் கவிதைகளை எழுதும் பாரதிதாசனாக மாற்றம் கண்டார்.

இது குறித்து பாரதிதாசனின் பேட்டியே பதிவாகி உள்ளது.( ஆதாரம்; முருகு சுந்தரம்)

”பாரதியாரின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னையறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப் போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். சுப்புரத்தினமாக இருந்த நான் பாரதி தாசனாக மாறத் தொடங்கினேன். பாரதியார் இல்லையென்றால், இந்த பாரதிதாசன் இல்லை. கனக சுப்புரத்தினமாக ஒரு சாதாரண தமிழ் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இன்று எங்கேனும் ஒரு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு செய்து கொண்டிருந்திருப்பேன்” என்கிறார்.

”பாரதியார் சாதியை உண்மையாகவே எதிர்த்தார். அப்படி அவர் சாதியை எதிர்த்து பல  கவிதைகள் பாடிய பல்லாண்டுகளுக்கு பிறகே பெரியார் இயக்கம் தோன்றியது..’’ என்றும் பாரதிதாசனே  குறிப்பிட்டு உள்ளார்.

பாரதிதாசன் பல சீர்திருத்த கருத்துக்களை, முற்போக்கான பார்வையில் எழுதினார். அவரை நாம் புரட்சிக் கவிஞர் என்று கொண்டாடினோம். அப்படிப்பட்ட பாரதிதாசன் 1961 ஆம் ஆண்டு வந்த குயில் இதழில் இவ்வாறு எழுதுகிறார்;

அன்றைக்கு பாரதியார் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ, அதைத் தான் இன்று நான் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பாரதியார் இன்றைக்கு இருந்தால் என்னைப் போல், ஏன் என்னைவிட சிறப்பாக எழுதி  இருப்பார்’’ என்கிறார்.

இதையே பாரதிதாசன் கவிதையாகப் பாடியும் உள்ளார்.

மேலும் பாரதிதாசன் கூறுகிறார்;

“பாரதியைப் போல் நானும் அன்று நெஞ்சில் பக்தி நிறைந்திருந்த ஆத்திகன். ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடியவன். அப்போது நானும், பாரதியும் ஆன்மீகவாதிகள் என்றாலும், பாரதி படிப்படியாக சீர்திருத்தவாதியாக அவர் மாறி வந்ததை கண்ணாரக் கண்டேன். பாரதி உயிரோடிருந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்திருப்பார்.” எனக் கூறியுள்ளார்!

பாரதியார் குறித்து கருப்பு சட்டைக்காரர்கள் ஏதேனும் சொன்னால் துடித்துப் போய்விடுவார் பாரதிதாசன். சொன்னவனை உண்டு, இல்லை என துவைத்து எடுத்து விடுவார்! அவ்வளவு ஈடு இணையற்ற குருபக்தி அவருக்கு இருந்தது. கண்கள் சிவக்க, ”அவரைக் குறை சொல்லும் தகுதி உங்களில் எவருக்கும் இல்லை…’’ என்பார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் வழியே பாரதியாரை காண்போம்;

திறம்பாட வந்த மறவன் – புதிய

அறம்பாட வந்த அறிஞன்!- நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!

பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

என்கிறார், பாரதிதாசன்.

மேலும் அவர், ‘’பாரதியார் எதைப் பேசினாரோ, எதை எழுதினாரோ அதன்படியே வாழ்ந்தவர். சொல்லொன்றும், செயலொன்றுமாக வாழத் தெரியாதவர். இதற்கொரு சம்பவம் சொல்கிறேன். பாரதியார் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஒரு இஸ்லாமியரின் தேனீர் கடையில் தேனீர் வாங்கித் தருவார். நாங்கள் வீதியின் நின்றபடி தேனீர் குடித்து பேசிக் களிப்போம்.

அப்போது பாரதியாரும் நானும் பேசியதை அப்படியே சொல்கிறேன்.

”சுப்புரத்தினம் எனக்கொரு ஆசை?”

”என்ன ஆசை என்று சொல்லும் ஐயரே”

”என மகள் பறைசாதி இளைஞனை காதலிக்க வேண்டும்”

”அப்படியா..?”

”ஆம், காதலித்து கரம்பிடித்து கண்காணா தேசம் சென்றுவிட வேண்டும்”

”இதென்ன சொல்கிறீர்?”

”இங்கே இருந்தால் வாழ விடுவார்களா? அதனால் பீஜி தீவு போன்ற ஒன்றுக்கு சென்று அங்கிருந்து, அப்பா நான் இன்னாரை காதலித்து மணந்து கொண்டேன். தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என அங்கிருந்து எனக்கு கடுதாசி போட வேண்டும். அதைப் படித்து நான் ஆனந்தக் கூத்தாட வேண்டும்”என்றார்.

நானும் நண்பர்களும் ஐயர் பேசியதைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டோம். இது தான் உண்மையான பாரதி. எப்போதும் புரட்சிகரமாகவே சிந்தித்தும், செயல்பட்டுக் கொண்டும் இருந்தார். இதை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த பாரதி விழாவில் பேசியுள்ளார் பாரதிதாசன்! (ஆதாரம்;  யாமறிந்த புலவன்; கடற்கரை மத்த விலாச அங்கதம்)

மேலும் பாரதிதாசன் சொல்கிறார். பாரதியார் சாதிக் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பார். சாதி ஒழிப்பதும், தமிழ் வளர்ப்பதுமே அவரது தலையாய கொள்கைகளாக இருந்தன.

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால்-மற்றப்

பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி- நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்!

சாதிப் பிணிப்பற்ற தோளே.நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார் என்னிடத்தில்” என்று பாரதி என்ற புரட்சிக்காரனை புடம் போட்டு நம் கண் முன் நிறுத்துகிறார் புரட்சிக் கவிஞர். பாரதியோடு ரத்தமும், சதையுமாக நெருங்கி சுமார் பத்தாண்டுகள் பழகிய பாரதிதாசன் தன் அனுபவத்தில் கண்டு சொன்ன பாரதியாரை விட  உண்மையான பாரதியாரை வேறு யார் சொல்ல முடியும்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23593/bharathi-dhasan-bharathiar/

====================================================================

13
"[புது] வேதம் படிப்போம்!"

ஜெயஸ்ரீஅவர்களுக்கு நன்றி!

வெற்றி அவர்களுக்கு நன்றி!

வெற்றி ஒரு பதிவு போட்டு, யார் எழுதியது இந்தக் கவிதை எனஒரு கவிதையைக் கேட்காவிட்டால்,

ஜெயஸ்ரீஅவர்கள் வந்து, 'பாரதியா' எனச் சொல்லா விட்டால்,

நான் பாரதியை இன்று முழுதும் புரட்டியிருக்க மாட்டேன்!

அப்படிப் புரட்டிய போது கண்ணில் பட்டது இந்தக் கவிதை!

இன்று "விடாது கருப்பு" முதல், "வஜ்ரா சங்கர்" வரை அலசப்படுகின்ற ஒரு தலைப்பின் கருத்தை அன்றே பாரதி எவ்வளவு தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கிறான் என்பதைப் படிக்கையில்,

நெஞ்சம் இறுமாப்புறுகிறது!

உவகையுறுகிறது!

வருந்துகிறது...

....இது இன்றுவரை அதிகம் கவனிக்கப்படாமல் போனதை நினைத்து!

இதைப் படித்த பின்னராவது, தமிழ்மணத்தில் ஒரு ஒருமித்த கருத்து வரவில்லையெனில், நான் பெரிதும் வருந்துவேன்!

குறைந்த பட்சம், பாரதியைப் பழிக்காதீர், இனிமேலும்!!

இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" சொல்ல முடியாது என்பதால், மேலும் முன்னுரையைத் தவிர்த்து, உங்களின் பார்வைக்கும், படிப்பிற்கும், எண்ணத்திற்கும் இதனைப் படைப்பதில் பேருவகை அடைகிறேன்!

.

இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!

வாழ்க நீ எம்மான்! வாழ்க நீ பாரதி!

"உயிர் பெற்ற தமிழர் பாட்டு!"

"பல்லவி"

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி

வில்லை, குறையும் கவலையும் இல்லை.

"ஜாதி"

மனிதரில் ஆயிரம் ஜாதி -- என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;

கனிதரும் மாமரம் ஒன்று -- அதில்

காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

பூவில் உதிர்வதும் உண்டு -- பிஞ்சைப்

பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு;

நாவிற்கினியதைத் தின்பார் -- அதில்

நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்.

ஒன்றுண்டு மானிட சாதி -- பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;

இன்று படுத்தது -- உயிர்த்

தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்,

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த

நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,

எந்தக் குலத்தின ரேனும் -- உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

"இன்பத்திற்கு வழி"

ஐந்து புலனை அடக்கி -- அரசு

ஆண்டு மதியைப் பழக்கித் தெளிந்து

நொந்து சலிக்கும் மனதை -- மதி

நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.

"புராணங்கள்"

உண்மையின் பேர் தெய்வம் என்போம் --அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;

உண்மைகள் வேதம் என்போம் -- பிறிது

உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்

கடலினைத் தாவும் குரங்கும் -- வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்ததத னாலே -- தெற்கில்

வந்து சமன் செய்யும் குட்டை முனியும்

நதியி னுள்ளே முழு கிப்போய் -- அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த -- திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் -- ஒன்றில்

உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் -- அதில்

நல்ல கவிதை பலப்பல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும் -- அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

"ஸ்மிருதிகள்"

பின்னும் [ஸ்]மிருதிகள் செய்தார் -- அவை

பேணும் மனிதர் உலகினில் இல்லை;

மன்னும் இயல்பின் வல்ல -- இவை

மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

காலத்திற் கேற்ற வகைகள் -- அவ்வக

காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞால முழுமைக்கும் ஒன்றாய் -- எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை,

சூத்திர னுக்கொரு நீதி -- தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;

சாத்திரம் சொல்லிடு மாயின் -- அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

"மேல்குலத்தார் எவர்?"

வையகம் காப்பவ ரேனும் -- சிறு

வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்

பொய்யக லத்தொழில் செய்தே -- பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

"தவமும் யோகமும்"

உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்

நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.

பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்

பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

ஒக்கத் திருந்தி உலகோர் -- நலம்

உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,

"யோகம், யாகம், ஞானம்"

ஊருக் குழைத்திடல்யோகம்: -- நலம்

ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்

போருக்கு நின்றிடும் போதும் -- உளம்

பொங்கல் இலாத அமைதிமெய்ஞ் ஞானம்.

"பரம் பொருள்"

எல்லையில் லாத உலகில் -- இருந்

தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்

எல்லையில் லாதன வாகும் -- இவை

யாவையு மாயிவற் றுள்ளுயிராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று -- தான்

இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே

சொல்லுவர் உண்மை தெளிந்தார் -- இதைத்

தூவெளியென்று தொழுபவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம் -- இந்த

நீல நிறங் கொண்ட வானமும் ஆங்கே.

ஓயுதல் இன்றிச் சுழலும் -- ஒளி

ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.

சக்திகள் யாவும் அதுவே -- பல்

சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே.

நித்திய மாவிவ் வுலகில் -- கடல்

நீரில் சிறுதுளி போலும்இப் பூமி.

இன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு

இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்,

துன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு

தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

"முக்தி"

தோன்றி அழிவது வாழ்க்கை -- இதில்

துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்

மூன்றில் எதுவரு மேனும் -- களி

மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி

வில்லை, குறையும் கவலையும் இல்லை.

இதையே இனித் தமிழ் வேதம் எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்!

வாழ்க பாரதி!

வி.எஸ்.கே.

(ஆத்திகம் வலைப்பூ)

https://aaththigam.blogspot.com/2006/09/blog-post.html?m=1

=========================================================================

14
*தமிழ்க்கவி பாரதி மீது பெரியாரிய தோழர்களுக்கு ஏன் இந்த வன்மம் ?

ஆர் எஸ் எஸ் அமைப்பின் மேடையில் இருந்து சீமான், பாரதியை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தி பேசியதைத் தொடர்ந்து சீமானை விமர்சிப்பது என்று தொடங்கி பாரதியை சங்கி என்று பெரும்பாலான பெரியாரிய சிந்தனையாளர்கள் பேசிவருகின்றனர். இன்னும் ஒரு படி மேல் சென்று திராவிட youtubers பாரதியை 'சல்லி பயல், கஞ்சாக் குடி' என்று பேசி மகிழ்கின்றனர். 

இரு மாதத்திற்கு முன்னர் இன்னொரு விடுதலைப் போராட்ட வீரரும்  கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் ஜீவாவை இதே வன்மத்தோடு இவர்கள் தான் வசைபாடினார்கள். 

நவீன தமிழ் இலக்கியத்திற்கு பாரதி ஆற்றிய பங்கு குறித்து பாரதிதாசனை வாசித்தால் போதுமானது. ஆங்கிலேயர் எதிர்ப்பு விடுதலை போராட்டக் களத்தில் காந்தி வருவதற்கு முன்பே களமாடியவர் பாரதி.  வேதபுராணங்களையும் சமஸ்கிருதத்தையும் புகழ்ந்து பாடினார் என்ற விமர்சனங்கள் அவர் மீது உண்டு. ஆனால், அக்காலக்கட்டத்திலேயே  தான் பிறந்த பார்ப்பன சாதியினரின் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து செயல்பட்டார், பார்ப்பனர்களால் வெறுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார் என்பது கவனத்தில்கொண்டு தான் பாரதியின் வாழ்க்கையை மதிப்பிடவேண்டும். 1921 ஆம் ஆண்டு தனது 39வது வயதில்  அனாதை போல் இறந்தார் என்பது வரலாறு.  

பெரியாரியக் கருத்தியலில் உள்ள மூன்று சிக்கல்கள்:

பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக  விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகிய திராவிட வரலாறு* 

காந்தி தலைமையிலான காங்கிரஸ், பிறகு கம்யூனிஸ்ட்கள் என்று விடுதலை போராட்டத்தில் ரத்தம் சிந்தி போராடியவர்கள் மீது தந்தை பெரியார் கொண்ட விமர்சனம் என்பது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதி தீண்டாமை உள்ளிட்ட சமூக சீர்திருத்தத்திற்கு அவர்கள் கவனம் கொடுப்பதில்லை என்பதும்தான். அதேவேளையில் சோவியத் புரட்சிக்கு பின்னர் ரஷ்யா சென்றுவந்து சமதர்ம கொள்கையை கையிலெடுத்த தந்தை பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியின் அழுத்தத்தின் காரணமாக அதனை கைவிட்டது மட்டுமின்றி விடுதலைப் போராட்டத்தில் இருந்து தன்னை முற்றிலும் விளக்கிக் கொண்டு 'பார்ப்பன அல்லாதோர் இயக்கத்தில் கவனம் செலுத்தியது தான் வரலாறு. இந்த இடத்தில தான் பாரதி தனித்து நிற்கிறார். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சாதி மறுப்பு சமூக சீர்திருத்தத்தையும் இணைத்து ஜனநாயக குரலாக ஒலித்தார், 

 *100 ஆண்டுகால பார்ப்பன எதிர் வெள்ளாளிய சாதி அரசியல்** 

திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை என்பது பிரிட்டிஷ் காலத்தில் கோலோச்சிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை. அதனை சாத்தியப்படுத்திதற்கு ஒரு முக்கிய காரணம் நாயக்கர் ஆட்சி காலம் முதல் வெள்ளாள உயர் சாதிகள் (வெள்ளாளர், செட்டி, முதலியார், ரெட்டி, நாயுடு உள்ளிட்ட சாதிகள்) பெரும் நில உடமையாளர்களாகவும் செல்வந்தர்கள் ஆகவும் இருந்து நீதி கட்சியைத் தொடங்கி பார்ப்பன அல்லாதார் அரசியலை முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியே பார்ப்பனர்களிடம் இருந்து அதிகாரம் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள வெள்ளாள உயர் சாதிகளிடம் கைமாறியது. பெரியாரிய இயக்கம் சாராம்சத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு வெள்ளாள சாதி ஆதரவு என்ற நிலையை கொண்டுள்ளது என்பதை கீழ்வெண்மணி தொடங்கி வேங்கைவயல் வரை நமக்கு உணர்த்துகிறது இன்றும் விவசாய நிலம், தொழில் - வணிக மூலதனம், அரசு அதிகாரம் என்று அனைத்திலும் வெள்ளாள சாதிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை மறுக்க இயலாது. சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்தில் ஒரு வழக்கமான நிகழ்வாக நடந்துகொண்டிருப்பதும் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் உத்தர பிரதேசம் பிஹாரை விட தமிழம் வளர்ந்த மாநிலம் எனும் பெருமை பேசுவதை காண்கிறோம்,  

பாரதியை போல் ‘சுய சாதி’  எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டிய இடத்தில தான் இன்று பெரியாரிய  தோழர்கள் உள்ளிட்ட அணைத்து ஜனநாயக சக்திகளும் உள்ளோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 மதம், கடவுள் குறித்த அறிவியலுக்குப் புறம்பான கொச்சையானப் பார்வை

‘Charlie Hebdo’ என்ற பிரான்ஸ் நாட்டு பத்திரிகை நாத்திகத்தை வரட்டுத்தனமாகவும் மதம் - கடவுள் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும் கார்ட்டூன் வெளியிட்டு வந்தது, 2015 இல் நபிகள் நாயகத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதைத் தொடர்ந்து பத்திரிகை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்து 12பேர் கொல்லப்பட்டனர். 2020இல் ‘Charlie Hebdo’ போலவே முருகனை கொச்சைப்படுத்தி ஆபாசமாக வர்ணித்து காணொளி வெளியிட்டது பெரியாரிய சிந்தனை கொண்ட கறுப்பர் கூட்டம் youtube channel. நல்லவேலை அந்த காணொளிகள் தமிழக அரசால் நீக்கப்பட்டது. ஏனெனில் தற்போது பாஜக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவை இடித்து மலையை கைப்பற்ற துடிக்கும் இந்த சூழலில் கறுப்பர் கூட்டம் காணொளி அவர்களுக்கு கிடைத்திருந்தால் அதையே ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி இந்துத்துவ வெறியை வளர்த்திருக்கக் கூடும். 

 *இறுதியாக* , சாதியை ஒழிக்க மதத்தை ஒழிக்கவேண்டும் என்ற அறிவியலுக்குப் புறம்பான பார்வை, இந்துத்துவ தேசியத்தை 'பார்ப்பன ஆதிக்கம் என்ற ஒற்றைப்புள்ளியில் சுருக்குவது, ஏகாதிபத்திய பொருளாதார கொள்கையை ஆதரிப்பது என்கிற பெரியாரியக் கருத்தியல், பிஜேபி - ஆர்.ஸ்.ஸ்'யை வீழ்த்த எந்தளவுக்கு உதவப்போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.

-சிறிராம்

9500056554

19.12.25

https://www.facebook.com/story.php?story_fbid=25512920438304792&id=100000405596948&rdid=3sQwSUyTEfY7HVlA

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு