எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையிலான முரண்

செந்தளம்

எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையிலான முரண்

தொழில்நுட்ப பாசிச சக்திகளிடையிலான முரணும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகமும்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில், அரசியல் அதிகார கும்பலும் நிதி மூலதன கும்பலும் கைகோப்பது ஒன்றும் புதியதல்ல. ஆயினும், டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையிலான கூட்டணி, ஒரு படி மேலே சென்று, ஒரு நவீன ‘தொழில்நுட்ப பாசிசத்தை’ (Techno-Fascism) நிறுவுவதற்கான அப்பட்டமான, அபாயகரமான கூட்டணியாக உருவெடுத்தது. மக்களின் அடிப்படை நலன்களைக் காலில் போட்டு மிதித்து, பொதுச் சொத்துக்களைச் சூறையாடி, பெருநிறுவனங்களின் எல்லையற்ற லாபவெறிக்கு சேவை செய்வதையே ஒரே நோக்கமாகக் கொண்ட இந்த புனித கூட்டணி, வெறும் ஏழு மாதங்களில் அதன் பலனையடைய பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. இந்த வீழ்ச்சி, இரண்டு தனிநபர்களின் அகந்தையினால் வந்த மோதலல்ல; இது, அமெரிக்காவின் மக்கள் விரோத கார்ப்பரேட் அரசியலின் - ஏகபோக நிதிமூலதன கும்பலின் அசிங்கமான உள்ளியல்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வரலாற்று நிகழ்வாகும்.

எலான் மஸ்க் எனும் உலகின் முதல் நிலை கொள்ளையாளர்

வீட்டுக்குகூட வாடகை கொடுக்க முடியாமல் ஒரு அறை கொண்ட அலுவலகத்திலேயே தங்கி வாழ்க்கை நடத்திய எலான் மஸ்க், தன் சகோதரர்களுடன் சேர்ந்து zip2 என்ற நிறுவனத்தை அரம்பித்து, பின்னர் பே-பால் Pay-pal நிறுவனத்தை அரம்பித்து, இவ்விரு நிறுவனங்களையும் விற்று இலாபம் பார்த்தார். அதன் பிறகு சோலார் சிட்டி (Solar City), ஸ்டார் லிங்க் (Star link), டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் - எக்ஸ் (Space-x) நிறுவனங்களை அரம்பித்து அமெரிக்க அரசு தயவில் பில்லியன் கணக்கான வர்த்தக பலனை தொடர்ந்து அடைந்து வருகிறார். இப்போது நியூரலிங்க் (Neuralink), The Boring Company, X (Twitter), xAI போன்ற நிறுவனங்களை கொண்டு அமெரிக்க அரசு மற்றும் பல்வேறு அரசின் மூலோபாய துறைகளையே கட்டுப்படுத்தும் சக்தியாக மாறியிருக்கிறார். எலான் மஸ்க் எனும் இந்த உலகப் பணக்காரர் 15 வருடத்தில் உலகின் முதல் பணக்காரராக மாறியிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற அனைத்து கார்ப்பரேட் கும்பலின் தொழில் திறமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் தொழில் திறமை என்பது அரசுடன் இணைந்து ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலாக உருவெடுப்பது என்பது பெரும்பாலும் மக்கள் வரிப்பணத்தில் பெரும் மானியங்கள், ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு சலுகைகளாக ஒரு பக்கம் வாரி சுருட்டுகின்றனர். மற்றொரு பக்கம் தனது நிறுவனத்தில் பணிப்புரியும் சாதாரண உழியர்களின் உழைப்பை சுரண்டி இலாபம் பார்க்கின்றனர். இன்னொரு பக்கம் ஏகபோகத்தை (Monopoly) நிறுவி வியாபாரம் எனும் பெயரில் மக்களிடையே தனது பொருளை உச்சபட்ச இலாபத்திற்கு (Ultra-Profit) விற்று மக்களின் உழைப்பைத் திருடி, சுரண்டி கொழுக்கின்றனர். இதன் மூலம் உலகப் பணக்காரர்களாக அதாவது டிரில்லியனர்களாக, பில்லியனர்களாக மாறுகின்றனர். அந்த வரிசையில் உலகில் முதல் இடத்தில் இருப்பவர் அமெரிக்கரான எலான் மஸ்க். 

பாசிசத்தின் கூட்டு:  

2010ம் ஆரம்பத்தில் டிரம்ப்பை எதிர்ப்பது போல் ஒரு போலி நாடகமாடிய எலோன் மஸ்க், 2016ல் மஸ்க் வெளிப்படையாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்தார். ஆனால் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அரச அதிகாரத்தின் நிழலில் சாய்வதே தனது நிறுவனங்களின் கட்டுக்கடங்காத வளர்ச்சிக்கு உகந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்த அவர், வெள்ளை மாளிகையின் ஆலோசனை வாரியங்களில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டதைக் காரணம் காட்டி, சில மாதங்களுக்குப் பிறகு 2017 ஜூன் மாதம் மஸ்க் அந்த பதவிகளை விட்டு வெளியேறினார். "காலநிலை மாற்றம் உண்மையானது. பாரிஸை விட்டு வெளியேறுவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லதல்ல" என்று அவர் ட்வீட் செய்தார். இந்த காலநிலை மாற்ற கொள்கையை பயன்படுத்திதான் தனது டெஸ்லா நிறுவனத்திற்கு அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து மானியம் என்ற பெயரில் சுருட்டி வந்தார். 2024 தேர்தல் நெருங்கியபோது, இந்தக் கூட்டணி அதன் கோர வடிவத்தை அடைந்தது. மஸ்க், சமூக ஊடகமான ட்விட்டரை (X) கைப்பற்றி, அதை வெறுமனே ஒரு தளம் என்பதைத் தாண்டி, டிரம்ப்பின் பாசிசக் கருத்துக்களைப் பரப்புவதற்கான சக்திவாய்ந்த பிரச்சாரப் பீரங்கியாக மாற்றினார். டிரம்ப்பின் தடை செய்யப்பட்ட கணக்கை மீண்டும் செயல்படுத்தியது, பேச்சுரிமையின் மீதான அக்கறையால் அல்ல; அது ஜனநாயக விழுமியங்களை நசுக்கி, பாசிசக் குரல்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் ஒரு கபட நாடகமே.

"நான் முன்பு ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன், ஆனால் அவர்கள் பிளவு மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டனர்" என்று மஸ்க் கூறியது, தனது கார்ப்பரேட் நலன்களுக்கு முழுமையாகச் சேவை செய்யும் குடியரசுக் கட்சியின் பக்கம் வெளிப்படையாகச் சாய்வதற்கான ஒரு நயவஞ்சகமான நியாயப்படுத்தல் மட்டுமே. மஸ்க் தனது X சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தி டிரம்ப்பின் மறுதேர்தல் முயற்சிகளை தீவிரமாக ஊக்குவித்தது மட்டுமல்லாமல், கணிசமான நிதி ஆதரவையும் வழங்கினார். மஸ்கின் டிரம்ப் ஆதரவு செலவினக் குழுவான 'அமெரிக்கா PAC', தேர்தலில் வெற்றி பெறக்கூடிய மாநிலங்களில் வாக்காளர்களை அணிதிரட்டுவதிலும் பதிவு செய்வதிலும் ஒரு முக்கியப் பங்காற்றியது. தி கார்டியன் நாளிதழ், மஸ்க் டிரம்ப்பிற்கு ஆதரவாக கிட்டத்தட்ட $300 மில்லியன் செலவிட்டதாகத் தெரிவித்தது. இந்த செய்திகள், இந்த ஜனநாயக விரோதக் கூட்டணி எவ்வளவு ஆழமாகவும் திட்டமிட்டும் கட்டமைக்கப்பட்டது என்பதற்கான மறுக்க முடியாத சான்றுகளாகும். பொதுவாகவே எல்லா கார்ப்பரேட்டுகளும் தேர்தல் நன்கொடைக்கு ஈடாக பல்வேறு ஒப்பந்தங்களையும் சலுகைகளையும் ஆட்சி அமைத்தபின் பெறுவதற்கான கடவுச் சீட்டாக பயன்படுத்துகின்றன.

கார்ப்பரேட்களின் பொற்காலம்: மக்கள் நலன் சூறையாடல்

டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்தத் தொழில்நுட்ப பாசிசத் திட்டம் அதன் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது. மஸ்க், புதிதாக உருவாக்கப்பட்ட "அரசாங்கத் திறன் துறைக்கு" (DOGE) தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பெயரில் இருந்த ‘திறன்’ என்பது, மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப் போகச் செய்வதிலும், அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதும், தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதிலும்தான் காட்டப்பட்டது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மக்கள் பணம், வரிச்சலுகைகளாகவும், மானியங்களாகவும் பெருநிறுவனங்களுக்கு, குறிப்பாக மஸ்க்கின் நிறுவனங்களுக்கே நேரடியாக மடைமாற்றம் செய்யப்பட்டது. "ஒரு ஆண் இன்னொரு ஆணை நேசிப்பது போல்" டிரம்ப்பை நேசிப்பதாக மஸ்க் பொதுவெளியில் கூறியது, அவர்களின் தனிப்பட்ட நெருக்கத்தை அல்ல, மாறாக அவர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளில் இருந்த முழுமையான கருத்தொற்றுமையையும், அதன் மூலம் அடையவிருந்த கொள்ளை இலாபத்தையும் குறித்தது. வெள்ளை மாளிகையின் புல்வெளியை, டெஸ்லா மகிழுந்து கண்காட்சிக் கூடமாக மாற்றியது, அரசின் சின்னத்தையே ஒரு கார்ப்பரேட் விளம்பரப் பலகையாக மாற்றியதன் மூலம், இந்த ஆட்சியின் உண்மையான எஜமானர்கள் யார் என்பதை உலகுக்கு உணர்த்தியது. இந்த DOGE அமைப்பு மூலம், அனைத்து அரசு துறைகளையும், அமெரிக்காவின் அத்தனை இரகசிய தகவல்களையும் தனது தனிப்பட்ட மற்றும் அவர் நிறுவங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதன் அனைத்து நிருவாக உறுப்புகளையும், DOGE என்ற தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்திற்கு கீழ் மண்டியிட அதிபர் ட்ரம்பின் சிறப்பு அதிகாரத்தின் ஒற்றை மனிதரின் கையெழுத்தில் தீர்மானிக்கப்படுவதுதான் ஏகாதிபத்திய ஜனநாயகம். அனைத்து அரசு நிர்வாகத்தையும் DOGEக்கு கீழ் கொண்டுவரப்பட்டவுடன் 65 ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 2 இலட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டும், விறுப்ப ஓய்வு கொடுக்கப்பட்டம் அனுப்பப் பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றது.  டெஸ்லாவின் பங்குதாரர்களும் மஸ்கின் அரசியல் ஈடுபாட்டினால் அதிருப்தி அடைந்துள்ளனர். நியூயார்க் நகர கட்டுப்பாட்டாளர் பிராட் லாண்டர், நியூயார்க் நகர பொது ஓய்வூதிய அமைப்பு டெஸ்லாவில் முதலீட்டில் ஒரே நாளில் $150 மில்லியனுக்கும் மேலாக இழந்துள்ளதாகக் கூறியுள்ளார். மக்கள் ஓய்வூதிய தொகையும் எப்படி கார்ப்பரேட் நலன்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்று பாருங்கள்.

முரண்பாட்டின் உண்மைக் காரணம்: கொள்ளைப் பங்கீட்டில் மூண்ட தகராறு

இந்தக் கொள்ளைக் கூட்டணியில் விரிசல் ஏற்படக் காரணம், மக்கள் மீதான அக்கறையோ, கொள்கை வேறுபாடோ அல்ல. மாறாக, சூறையாடிய செல்வத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட முரண்பாடுதான். டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த "ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்" (One Big Beautiful Bill) என்ற பிரம்மாண்ட அமெரிக்காவின் பட்ஜெட் குறித்த மசோதா, ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அது மஸ்க்கின் வர்த்தக நலன்களுக்கு பெரும் சேவை செய்வதாக அமையவில்லை. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான மானியங்களைக் குறைப்பது, மற்ற எரிசக்தி நிறுவனங்களுக்கு மறைமுகமாகச் சாதகம் செய்வது போன்ற அம்சங்கள், டெஸ்லாவின் லாபத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை மஸ்க்  உணர்ந்தார்.

அதுவரை, DOGE மூலம் சுற்றுச்சூழல் சட்டங்களையும், தொழிலாளர் நலன்களையும் வெட்டிச் சுருக்கியபோது மௌனம் காத்த மஸ்க், தனது சொந்த கஜானாவுக்குப் பாதிப்பு என்றதும், திடீரென "பட்ஜெட் பற்றாக்குறை" குறித்தும், "காங்கிரஸின் வீண் செலவுகள்" குறித்தும் நீலிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார். "இந்த அருவருப்பான, பன்றிகள் போல் நாற்றமெடுத்த சரத்துகள் நிரப்பப்பட்ட  மசோதாவை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்று அவர் ‘X’ தளத்தில் சீறியது, தேசத்தின் மீதான அக்கறையால் அல்ல; தனது லாபப் பங்கில் கைவைக்கப்பட்டதன் ஆத்திரத்தில்தான்.

டிரம்ப்பின் எதிர்வினையும் ஒரு ஏகாதிபத்தியத் தலைவருக்கே உரிய மிரட்டலாக இருந்தது. "இந்த மசோதாவின் உள் வேலைகளை எலோன் நன்கு அறிந்திருந்தார். அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. திடீரென்று அவருக்குப் பிரச்சினை வந்துவிட்டது," என்று டிரம்ப் கூறியிருக்கிறார். அதாவது இந்த செலவு குறித்த மசோதாவை, இந்த அழுகுச் சிலையை, அவர் கூட இருந்து செதுக்கியிருக்கிறார் எலான் மஸ்க். ஆனால் அவர் நிறுவனங்களின் வர்த்தக நலங்கள் அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவருக்கு இது அருவருப்பான சிலையாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட பிணக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' எனும் சமூக வளைதள பதிவில்  "எலானின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதே பட்ஜெட்டைச் சேமிப்பதற்கான எளிதான வழி" என்று பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். இது மிரட்டல் மட்டுமல்ல; இதுதான் பரிபூரண உண்மையும் கூட. DOGE என்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த புனித கூட்டாளிகள் கூறிய மிக முக்கிய காரணம் அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்துவதுதான். ஆனால் இங்கே பெரும் தொகை செலவுகளாக வாரி இறைக்கப்படுவது கார்ப்பரேட்டுகளுக்குதான். அதை கட்டுப்படுத்தினாலே பல ட்ரில்லியன் டாலர்களை சேமிக்கலாம் என்பதை கோபத்தில் தங்களுக்குள் மைண்ட் வாய்சில் பேசிக்கொள்வதாக நினைத்து பொதுவெளியில் பேசிவிட்டார். ஏகாதிபத்திய கார்ப்பரேட் கூட்டாளிகள் எப்படி மக்களை கொள்ளையடிக்கின்றனர் என்பதற்கும், அரசுக்கும் இந்த கார்ப்பரேட் நிறுவன நிதி மூலதன கும்பலுக்கும் இடையிலான உறவுகளின் சிறந்த உதாரணம்தான் இந்த நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது. இது நட்பு ரீதியான எச்சரிக்கை அல்ல; இது ஒரு பாசிச அரசின் அதிகார மிரட்டல். 

நசுக்கப்படுவது மக்கள் நலனே

இந்த இரு ஏகாதிபத்திய சக்திகளின் மோதலில், டெஸ்லாவின் சந்தை மதிப்பு $150 பில்லியன் சரிந்ததும், மஸ்க்கின் சொத்து மதிப்பு $34 பில்லியன் குறைந்ததும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. அரசின் கொள்கைகளைத் தனக்குச் சாதகமாக வளைத்து, மக்கள் வரிப்பணத்தில் (மானியங்கள், வரிச்சலுகைகள், ஒப்பந்தங்கள்) கொழுத்த ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யம், அரசின் கோபத்திற்கு ஆளாகும்போது எவ்வளவு பலவீனமாக மாறும் என்பதன் துல்லியமான அடையாளம் இது. டெஸ்லாவை எடுத்துக்கொண்டால், 2007 ஆம் ஆண்டு முதல் 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வரிச் சலுகைகளையும், அரசாங்க ஊக்கத்தொகைகளையும் பெற்றுள்ளது. ஆனால் டிரம்ப் இந்த சலுகைகளை ரத்து செய்துவிட்டார். டெஸ்லாவின் லாபம் சமீபத்திய காலாண்டில் 71% சரிந்தது, விற்பனை இரண்டு இலக்க சதவீதத்தில் சரிந்தது. டிரம்ப்பின் முன்மொழியப்பட்ட செலவு மற்றும் வரி மசோதா, மின்சார வாகனத்தின் மீதான  $7,500 கூட்டாட்சி வரிச் சலுகையை முடிவுக்குக் கொண்டுவந்ததால் டெஸ்லாவின் இந்த ஆண்டு லாபத்தில் சுமார் $1.2 பில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரை, மஸ்க்கின் அனைத்து நிறுவனங்களும் அமெரிக்க அரசின் தயவில்தான் இயங்குகின்றன. மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் பெரும் ஆபத்தில் உள்ளது. இது நாசா போன்ற அமெரிக்க விண்வெளி முகமைகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை தயார்செய்து வழங்குகிறது. 2008 ஆம் ஆண்டு முதல், ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கிட்டத்தட்ட $21 பில்லியன் பெற்றுள்ளது. மேலும், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையே $90 பில்லியனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்பேஸ்எக்ஸ் நாசாவின் நிலவு திட்டத்திற்கு முக்கியமானது, அமெரிக்க விண்வெளி வீரர்களை பறக்க விடுகிறது, மற்றும் அரசாங்க செயற்கைக்கோள்களைக் கையாள்கிறது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் பல சலுகைகளை பெறுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறிக்கொள்ளும் அந்த அரசின் கார்ப்பரேட் கொள்கைகளினால் பெருமளவில் சுரண்டி கொழுக்கின்றன. $21 பில்லியனுக்கும் அதிகமான அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ள ஸ்பேஸ்எக்ஸ், $3 பில்லியன் மானியங்களைப் பெற்றுள்ள டெஸ்லா ஆகியவை, இந்த முரண்பாட்டின் காரணமாக டிரம்ப்பால் பாதிக்கப்படலாம். 

இன்னொரு பக்கம் மஸ்கின் வணிகங்கள் தற்போது பல ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் விசாரணையில் உள்ளன. FAA (கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம்) கடந்த காலத்தில் உரிமத் தேவைகளை மீறியதற்காக ஸ்பேஸ்எக்ஸுக்கு அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்பையும் ஸ்பேஸ்எக்ஸ் எதிர்கொள்கிறது. நியூராலிங்க், மஸ்கின் மூன்றாவது வணிகமான மூளை உள்வைப்புகளை உருவாக்கும் நிறுவனம், சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் உள்ளது. டெஸ்லாவும் அமெரிக்க கார் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் அதன் ஓட்டுநர் உதவி அமைப்புகள் குறித்து விசாரிக்கப்படுகிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) ட்விட்டரை மஸ்க் வாங்கியது தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடர்ந்தது.

 மஸ்க் "ஒரு நண்பரை (கொள்ளை கூட்டாளியை) மட்டுமல்ல, ஒரு சட்டப் பாதுகாப்புச் சுவரையும் இழந்துள்லார்" என்பது, அவர் இதுவரை அனுபவித்துவந்த சட்டமீறல்களுக்கான பாதுகாப்பும், ஒழுங்குமுறை தளர்வுகளும் இனி பறிக்கப்படலாம் என்பதையே அப்பட்டமாகக் குறிக்கிறது. மஸ்க் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசின் தயவு ஏன் தேவைப்படுகிறது என்பதை இந்த தரவுகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

சிலிக்கான் பள்ளத்தாக்கின் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த மோதலில் அமைதி காப்பது, அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதனால் அல்ல. டிரம்ப்-மஸ்க் கூட்டணி உருவாக்கிய கார்ப்பரேட் சாதகமான சூழலின் பலனை அவர்களும் அனுபவிக்கிறார்கள். H1B விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்கள், அறிவியல் மானியங்களுக்கான வெட்டுக்கள் மற்றும் டிரம்ப்பின் வரிகள் போன்ற கொள்கைகளில் டிரம்ப் கும்பலுக்கு – சிலக்கன் பல்லத்தாக்கு ஏகபோக் நிறுவனங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. ஆனாலும் அவர்களின் நோக்கம், இந்த மோதலில் சிக்காமல், தங்களுக்குரிய பங்கைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமே. மஸ்க் போன்ற ஒரு கணிக்க முடியாத நபர் வீழ்வது, தங்களின் நிழல் அதிகாரத்தை மேலும் ஆழமாக்கி தொடர அவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.

மோதலில் – மக்கள் கற்கும் பாடம்

டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான மோதல், ஒரு தற்காலிகப் பிளவா அல்லது நிரந்தரப் பிரிவா என்பது இங்கு முக்கியமல்ல. இந்த நிகழ்வு அம்பலப்படுத்தும் உண்மைதான் அதிர்ச்சியானது. அமெரிக்காவில் அரசியல் அதிகாரம் எப்படிப் பெருநிறுவனங்களுடன் இணைந்து ஒரு மக்கள் விரோத, ஜனநாயக விரோத அமைப்பைக் கட்டமைக்கிறது என்பதை இது அப்பட்டமாகக் காட்டுகிறது. அவர்களின் கூட்டணி, மக்கள் நலனுக்காக அமையவில்லை; அது பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகக் கட்டப்பட்டது. அவர்களின் இன்றைய மோதலும் மக்கள் நலனுக்காக எழவில்லை; அது கொள்ளைப் பங்கீட்டில் ஏற்பட்ட தகராறே.

இந்த இரண்டு மாபெரும் சக்திகளும் மோதிக்கொள்ளும்போது, இழப்பு அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் அதிகாரப் போட்டியின் நிழலில், உரிமைகளும், நலன்களும் பறிக்கப்பட்டு, அமைதியாக நசுக்கப்படும் கோடிக்கணக்கான அமெரிக்க மக்களுக்கும் அமெரிக்காவை சார்ந்திருக்கும் மூன்றாம் உலக நாட்டின் மக்களுக்குதான் உண்மையான பேரிழப்பு. இந்தத் தொழில்நுட்ப பாசிசக் கூட்டணியின் விளைவுகள், இதுபோன்ற அபாயகரமான கார்ப்பரேட்-நிதி மூலதன கூட்டணிகளுக்கு எதிரான உலகளாவிய மக்கள், அதாவது வர்க்க  போராட்டத்தின் அவசியத்தையே நமக்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறது.

- செந்தளம்