புதின் காண்பித்து வருவதுபோல் ரஷ்ய-சீன உறவுகள் அவ்வளவு ஆரோக்கியமானதாக விளங்கவில்லை
தமிழில்: விஜயன்

மே 9 அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில் சீனப் படைவீரர்கள் பங்கேற்றதை நோக்கும் போது, புதினுடனான "எல்லையற்ற கூட்டணியில்" விடாப்பிடியான ஈடுபாட்டைக் ஜி ஜின்பிங் கொண்டிருப்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டதன் பகுதியாக அமைந்த இந்த அணிவகுப்பில் ஜி ஜின்பிங்’ன் நேரடிப் பங்கேற்பு என்பது, ரஷ்யாவிற்கு வெறுமனே ஆதரவு தெரிவிப்பதோடு மட்டும் சீனா நின்றுவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. மாறாக, உக்ரைன், அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளுக்கும் சீனாவின் இந்த ஆதரவு பட்டவர்த்தனமாகத் தெரிய வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்டுகிறது.
ஜி ஜின்பிங் மாஸ்கோவிற்கு நேரில் விஜயம் செய்ததும், செஞ்சதுக்கத்தில் தனது படைவீரர்களை அணிவகுக்கச் செய்ததும் திடீரென, கடைசி நிமிடத்தில் எடுத்த முடிவுகள் அல்ல. இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்ட பல்வேறு ஒப்பந்தங்களும், அவர்களது கூட்டு அறிக்கையும் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல. மாறாக, இவை ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஆழமடைந்துவரும் உறவுகளின் தொடர்ச்சியான, இயல்பான போக்கின் வெளிப்பாடுகளாகும்.
பிப்ரவரி 2022-இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சிலான போரைத் தொடங்கியதிலிருந்து இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் சீனா ரஷ்யாவிற்கு அளிக்கும் ஆதரவின் அளவு, தற்போதைய சூழல் மட்டுமல்லாது உலக அரங்கில் நிகழ்ந்து வரும் பெரும் மாற்றங்களுடன் தெளிவான தொடர்பு கொண்டுள்ளது. குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அதிபராக பதவியேற்றதிலிருந்து இந்த மாற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
நிலையற்ற சந்தைகளால் கலக்கமடைந்திருக்கும் டிரம்ப் நிர்வாகம், நிலையான தன்மையை மீட்க முயன்றிருக்கக்கூடும். சீனாவும் அமெரிக்காவும் மாறிமாறி விதித்துள்ள காப்பு வரிகளைக் குறைப்பதில் உடன்பாடு கண்டுள்ளனர். ஆயினும், கவலைகள் தொடர்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா, சீனா மட்டுமல்லாது ரஷ்யாவிற்கும் இடையேயான சிக்கலான உறவுகள் எவ்வாறு பரிணமிக்கும் என்பதும், இது உலகின் பிற பகுதிகளுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறித்து பெரும் ஐயம் நிலவுகிறது.
மே 8 அன்று மாஸ்கோவில் ஜி ஜின்பிங்’ம் புதினும் சந்தித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் சீனாவும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. உலகளவில் போர்த்தந்திர அளவிலான நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் மட்டுமல்லாது தங்கள் திட்டங்களின் ஒருங்கிணைப்பைச் செம்மைப்படுத்தவும், தங்களது நடைமுறை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், அத்துடன் இந்தத் துறையில் காணப்படும் பொதுவான சவால்களையும் அச்சுறுத்தல்களையும் கூட்டாக எதிர்கொள்ளவும் இரு நாட்டுத் தலைவர்களும் உத்தேசித்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின்போதும் இந்த முடிவை மீண்டும் அவர்கள் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினர். தானும் ஜி ஜின்பிங்’ம் ரஷ்யா-சீனா கூட்டணியின் அனைத்துக் கூறுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மட்டுமல்லாது சர்வதேச விவகாரங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக செய்தியாளர்களிடம் போசியபோது புதின் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து சீனத் தரப்பு வெளியிட்ட அறிக்கையும் இரு நாடுகள் எந்த அளவுக்கு நெருக்கமாக இணைந்து செயலாற்றுகின்றன என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது. "ஒருதலைப்பட்சமான எதிர்மறைப் போக்கு, மிரட்டல் போக்கு, ஆதிக்க போட்டி அரசியல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்போது, முக்கிய நாடுகள் என்ற நிலையிலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற நிலையிலும் எழும் சிறப்புப் பொறுப்புகளை ஏற்பதில் சீனா, ரஷ்யாவுடன் கைகோர்த்துச் செயல்படுகிறது," என்று ஜி ஜின்பிங் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவும் சீனாவும் எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றன –புதினும் ஜி ஜின்பிங்’ம் தனிப்பட்ட முறையில் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். ரஷ்யாவைப் பொறுத்தவரை, மேற்குலக நாடுகள் அதை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எடுபடவில்லை என்பதைக் காட்டுவது இப்போதும் முக்கியமானதாகும். சீனாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான தனது வலுவான உறவைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவிற்கான முக்கிய எச்சரிக்கை விடுப்பதாகவும் விளங்குகிறது. அமெரிக்கப் விவாத நிகழ்ச்சித் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் நவம்பர் 2024-ல் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது, இந்த இரு நாடுகளையும் 'பிரித்தெடுக்க' (un-unite) வேண்டியது அவசியம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்தத் தொடர்பைத் துண்டிக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பெரும்பாலும் எடுபடவில்லை என்பதைச் சீனா திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஆயினும், மாஸ்கோவில் நடைபெற்ற கண்கவர் கொண்டாட்டங்களின் பின்னணியில், புதின் மக்களை நம்பச் செய்ய விரும்புவது போல், ரஷ்யாவிற்கான நிலைமை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஜி ஜின்பிங்’க்கும் புதினுக்கும் இடையே பகிரங்கமான நட்பு பாராட்டுதல் நிகழ்ந்த போதிலும், இரு நாடுகளுக்குமிடையேயான உறவு இன்னமும்கூட மிகவும் சமமற்றதாகவே நீடிக்கிறது.
உக்ரைனுக்கு எதிரான போரைச் சீனாவின் உதவியின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ரஷ்யாவால் இயலாது. ரஷ்யாவின் இராணுவப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது 2024-ல் ஏறத்தாழ 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. அவற்றின் வர்த்தகம் 2021 ஆம் ஆண்டிலிருந்து 60% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, ஆனால் 2023 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைந்த அளவு மட்டுமே அதிகரித்துள்ளது.
சர்வதேச அரசியலில் சீனாவின் செல்வாக்கும், ரஷ்யாவிற்குப் பயனுள்ளதாய் உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராகத் சீனா சமரசமின்றி பேசியிருந்தால், வளரும் நாடுகளின் தலைவர்களில் மிகச் சிலரே புதினை ஆதரித்திருப்பார்கள். அது நடந்திருந்தால், ரஷ்யா மீண்டும் ஒரு வல்லரசாக மாறும் கனவை நோக்கிச் செல்வதற்கான களங்களாக கருதப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு, வளரும் நாடுகளின் பிரிக்ஸ் போன்ற கூட்டமைப்புகளை இழந்திருக்கக்கூடும். அவ்வாறில்லாமல் தனது இலக்கை அடைவதில், புதின் சில வெற்றிகளைக் கண்டுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற நாட்டின் தலைவர்கள் ரஷ்யாவின் வெற்றி நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அக்டோபர் 2024-ல் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை விடக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த விருந்தினர்களே வெற்றி நாள் நிகழ்வில் பங்கேற்றனர்.
இரு முனையும் கூர்தீட்டப்பட்ட வாள்
மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்ட நிகழ்வுகளில் ரஷ்யாவின் முக்கிய கூட்டாளிகளான வட கொரியா மட்டுமல்லாது ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நாடுகளுடன் 2024 ஜூன் மற்றும் 2025 ஜனவரியில் முக்கிய கூட்டணிக்கான ஒப்பந்தங்களில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளது.
ஈரான் இந்நிகழ்விற்காக தனது தூதரை மட்டுமே மாஸ்கோவிற்கு அனுப்பியிருந்தது. இருப்பினும், நடைமுறையில் இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த வேறொரு வகையில் ஈரான் புதினுக்கு ஆதரவு அளித்திருக்கக்கூடும். பத்திரிகையில் வந்த தகவல்களின்படி, ரஷ்யாவிற்கு ஏவுகணை செலுத்தும் சாதனங்களை (launchers) அனுப்ப ஈரான் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் ரஷ்யா ஏற்கனவே கடந்த ஆண்டு பெறப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும். இந்த நடவடிக்கை, உக்ரைனுக்கு எதிராக ஈரானிய இராணுவ தளவாடங்களை கூடுதலாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ரஷ்யாவிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. இது பெரும்பாலும் ஈரானியத் தயாரிப்பான ஷாஹெட் ட்ரோன்களின் பரவலான பயன்பாட்டின் மூலம் வெளிப்படையாகத் தென்படுகிறது.
மூன்று நட்சத்திர அந்தஸ்தில் உள்ள படைத்தளபதி கிம் யோங்-போக் தலைமையிலான ஓர் இராணுவக் குழுவை வட கொரியா அனுப்பியிருந்தது. ஆகஸ்ட் 2024-ல், உக்ரேனியப் படைகள் குர்ஸ்க் பிரந்தயத்தில் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. எதிர்காலத்தில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளின்போது பேரம் பேசும் ஒரு கருவியாகப் இப்பிரதேசம் பயன்படக்கூடும். மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிடும் வட கொரியப் படைகளின் தளபதியாக கிம் யோங்-போக் இருந்து வருகிறார். தனது உயர்மட்ட படைத்தளபதி வலேரி கெராசிமோவ் உடன் கவனமாகத் திட்டமிட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சந்திப்பின் போது, குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகள் தோல்வி அடைந்துவிட்டதாக கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் வட கொரியப் படைகள் பங்கேற்றதை புதின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
ரஷ்யா தனது மூன்று முக்கிய கூட்டாளிகளான – சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவுடனான – நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதென்பது இரு முனையிலும் கூர்தீட்டப்பட்ட கத்தியை கையாள்வது போன்றதாகும். ஒருபுறம், உலக அரங்கில் புதின் தனித்து விடப்படவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது என்றாலும், மறுபுறம், ரஷ்யாவை மீண்டும் ஒரு மாபெரும் உலக வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற புதினின் கனவை விட, இந்த உறவுகளில் ரஷ்யா மிக அதிகமான சார்புநிலையில் சிக்குண்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு யதார்த்தங்களும் உக்ரைனுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் பெரிய அளவில் ஆறுதல் அளிப்பதாக இல்லை.
ஸ்டெஃபான் வொல்ஃப் என்பவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்புத் துறை பேராசிரியராக உள்ளார்.
இந்தக் கட்டுரை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் தி கன்வர்சேஷன் ஊடகத்திலிருந்து மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
- விஜயன் (தமிழில்)