உயர் கல்வியில் மத்திய அரசின் தலையீடுகளும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அரசியல்மயமாக்கலும்
தமிழில்: வெண்பா

ஹார்வர்ட்டிலிருந்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரை, கல்விசார் சுதந்திரம் குறித்த விவாதங்கள் உலகளாவிய அளவில் ஒலிக்கின்றன. இதில் ஒரு உண்மை பளிச்சிடுகிறது: ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு, அதன் அடிப்படை நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாய் விளங்க வேண்டும். கல்விச் சுதந்திரம் என்பது மாநிலங்களும் கல்வி நிறுவனங்களும் தங்கள் கல்விப் பாதைகளைத் தாமே வகுக்கும் உரிமையாகும். ஆனால் இன்று, "சீர்திருத்தம்" என்ற மாயச்சொல்லின் நிழலில், மத்திய அரசு இந்த உரிமையை சீரழிக்கிறது. "முன்னேற்றம்" என்ற முகமூடியின்கீழ், மையப்படுத்துதல் வலுப்பெறுகிறது; சுதந்திரத்தை மையப்படுத்தலுக்கு பலிகொடுக்கப்படுகிறது.
மாநில உரிமை மறுப்பு:
மார்ச் 17, 2025-ல் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் தெரிவித்த பதில் ஏகாதிபத்திய மனோபாவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எம்.பி. பிரணிதி சுஷில்குமார் ஷிண்டேவின் 2698வது கேள்விக்கு அமைச்சகம் அளித்த பதில், அதிகாரப்பூர்வ மொழிநடையில் சிக்கல்களை மறைத்தாலும், மாநிலங்களின் கல்வி உரிமைகளை மதிக்க மத்திய அரசு தயங்குவதையும், உயர்கல்வி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் மூர்க்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இது துணைவேந்தர்களின் தேர்வு அல்லது விதிமுறைகள் மட்டுமின்றி, இந்திய கல்வியின் எதிர்காலத்தை யார் வடிவமைப்பது என்பதற்கான அதிகார மோதலாகும்.
சீர்திருத்தம் எனும் போர்வையில் கூட்டாட்சிக்கு வேட்டு
பல்கலைக்கழக மானியக் குழு (UGC), கல்வித் தரத்தைக் காப்பதற்கான நடுநிலை அஸ்திவாரமாக இருக்கவேண்டும். ஆனால் காலப்போக்கில், இது மத்திய அரசின் கட்டளைகளை நிறைவேற்றும் கருவியாக சீரழிந்துள்ளது. 2025 UGC விதிகள் கூட்டாட்சி அதிகாரப் பகிர்வை ஆதரிப்பதாக அரசு கூறினாலும், செயல்கள் முரண்பாடாக உள்ளன. துணைவேந்தர் தேர்வு உள்ளிட்ட இதன் விதிகள், மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளை பறித்து, அவற்றை மைய அமைப்புகளுக்கு வழங்குகின்றது.
அரசியல் நியமனங்களின் முகமூடி:
"நடுநிலைக் குழுக்கள்" மூலம் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நடைமுறையில், இது மத்திய அரசின் அரசியல் விருப்பத்திற்கேற்ப நியமனங்களை நியாயப்படுத்தும் கருவியாக மாறுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு முரணானது; கல்வியில் மாநிலங்களின் பங்களிப்பை காலி செய்கிறது. குழு உறுப்பினர்களின் தேர்வு முறை, நியாயமான பிரதிநிதித்துவம் குறித்த விளக்கங்களை அரசு தவிர்க்கிறது. இத்தெளிவின்மை, அரசியல் செல்வாக்கை நிலைநாட்டும் சூழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
விளைவுகள்:
- மாநிலங்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
- உள்ளூர் கல்வித் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
- ஒற்றைக் கருத்தியலை (வலதுசாரி சிந்தனையை) வலியுறுத்தும் தலைவர்கள் பதவியேறுகின்றனர்.
"சீர்திருத்தம்" என்பது உண்மையில், ஒரு குறிப்பிட்ட கருத்தியலை கல்வியில் கட்டாயப்படுத்தும் கருவியாக மாறியுள்ளது. கல்வியாளர்கள் அல்லாதோரை துணைவேந்தர்களாக நியமிப்பது இதற்கொரு எடுத்துக்காட்டு. "புதுமுகத் திறன்கள்" என்ற பெயரில், அரசியல் இணக்கமுள்ள அதிகாரிகள், முன்னாள் காவல்துறையினர் பல்கலைக்கழக மேலாண்மையில் ஊடுருவுகின்றனர். இவர்களில் பலர் ஆராய்ச்சிச் சுதந்திரம் அல்லது கல்வி மரபுகளின் நுண்ணிய தன்மைகளை அறியாதவர்கள்.
வலதுசாரிக் கருத்தியலின் ஊடுருவல்:
இத்திட்டமிடப்பட்ட மாற்றங்கள், 2020 தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) முரணானவை. NEP, கல்வியை மாநிலங்களுக்கு அதிகாரமளித்து, நெகிழ்மையாக்குவதாக உறுதியளித்தது. ஆனால் UGC விதிகள், இக்கொள்கையின் வார்த்தைகளை பயன்படுத்தி, கல்வியை மையப்படுத்தி, ஒற்றைக் கருத்தியலை திணிக்கின்றன. "உலகத் தரம்", "சிறப்பு" போன்ற பொருளற்ற முகமூடி சொற்களால் கல்வியை வலதுசாரி கருத்தியலின் பரப்புரைக் கருவியாக மாற்றுவது எனும் அதன் இலக்கு தெளிவாகிறது.
பாடத்திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கண்ணோட்டத்தை திணித்தல், வளாகங்களில் பன்முக கருத்துகளை ஒடுக்குதல், மாணவர் செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவை இதன் பிரதிபலிப்புகள். இந்தியப் பல்கலைக்கழகங்கள் விமர்சன சிந்தனையின் களங்களாக இருக்கவேண்டுமே தவிர, அரசியல் கருவிகளாக அல்ல.
மீட்பிற்கான வழிமுறைகள்:
1. கூட்டாட்சி சமநிலை: மாநிலங்களின் கல்விக் கூறுகளை அங்கீகரிக்கும் UGC விதிகள்; மாநில பிரதிநிதிகள் உள்ளடக்கிய தேர்வுக் குழுக்கள்.
2. UGC சுதந்திரம்: அரசியல் தலையீடுகளிலிருந்து மானியக் குழுவை விடுவித்தல்; கல்வியியல் நிபுணர்களின் ஆலோசனையை முன்னிறுத்தல்.
3. தெளிவான தேர்வு முறைகள்: துணைவேந்தர் பதவிகளுக்கு கல்வி, ஆராய்ச்சி சாதனைகளை மட்டுமே அடிப்படையாக்குதல்.
4. பங்கேற்பு முறைகள்: மாநிலங்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கருத்துகளை வெளிப்படையான கலந்துரையாடலில் UGC இணைக்க வேண்டும்.
5. கொள்கை ஒத்திசைவு: NEP 2020-ன் பன்முக, கூட்டாட்சி சிந்தனைகளை நடைமுறைப்படுத்துதல்.
கல்வியின் மீதான இந்த அரசியல் ஊடுருவல், இந்திய ஜனநாயகத்தின் அறிவார்ந்த முதுகெலும்பை சீரழிக்கும் திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். "ஒருமைப்பாடு" என்ற பெயரில் பன்முகத்தன்மையை அழிப்பது, நாட்டின் அறிவாற்றல் வளர்ச்சியைத் தடுக்கும். பல்கலைக்கழகங்கள் விமர்சன சிந்தனையின் களங்களாக, சுதந்திர ஆய்வுகளின் கோவில்களாக விளங்க வேண்டும். இவற்றை அரசியல் கருவிகளாக மாற்றுவது, இந்தியாவின் எதிர்காலத்தை சுதந்திரமற்றதாக்கும் ஒரு செயலாகும்.
இந்தியா, கல்வியை சுதந்திர அறிவின் கோவிலாக்குமா, அல்லது அடிமைத்தனத்தின் மணியோசையாக்குமா? இதற்கான பதில், நாம் எத்தகைய நாட்டை விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்தும்.
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.newsclick.in/higher-education-how-centre-undermining-state-autonomy-politicising-ugc
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு