JNU: 'பாசிசம்' குறித்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இடதுசாரி மாணவர் அமைப்புகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது

தமிழில்: விஜயன்

JNU: 'பாசிசம்' குறித்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இடதுசாரி மாணவர் அமைப்புகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது

JNU தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 'பாசிசம்' குறித்த கருத்து வேறுபாடு இடதுசாரி மாணவர் அமைப்புகளிடையே – SFI vs AISA - பிளவை ஏற்படுத்தியுள்ளது

 

இத்தகைய நிலைமை கல்லூரி வளாகத்தில் பயிலும் மாணவர்களிடையே தேசியவாதக் கருத்துக்களின் செல்வாக்கு வலுப்பெற்று வருவதையே பிரதிபலிக்கிறது என்று  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கப் பேரவையில் (JNUSU) பிரதான எதிர்க்கட்சி அணியாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ்.’ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கூறியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) மாணவர் சங்கத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசைப் பாசிச ஆட்சி என்று வரையறுக்கலாமா என்பது குறித்து நடந்து வரும் கடுமையான விவாதம் இடதுசாரிப் பிரிவினரிடையே ஒரு பிளவை உருவாக்கியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஜே.என்.யு மாணவர் சங்கப் பேரவையில் (JNUSU) இடதுசாரிகளின் கைகளே ஓங்கி இருந்தது.

இந்த பிளவு பல்வேறு பாடப் பிரிவுகாக அமைந்திருக்கும் பள்ளிகளில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களின்போது தெளிவாக வெளிப்பட்டது. இந்தக் கூட்டங்களில், மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள்; அவை பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்படும். இந்த வாக்கெடுப்புகளின் முடிவுகள்தான், ஒருங்கிணைப்பாளரின் செயல்திறன் மீதான நம்பிக்கையின் அளவீடாகவும், அவர்களது அமைப்பின் கொள்கைகளுக்கான ஏற்புடைமையாகவும் கருதப்படுகின்றன.

சமூக அறிவியல் பள்ளியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், CPM- கட்சியின் மாணவ அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) ஆதரவு பெற்ற ஒருங்கிணைப்பாளர் தீபஞ்சன் மண்டல் சமர்ப்பித்த அறிக்கை, 119 எதிர்ப்புகளுக்கு இடையில் வெறும் 80 வாக்குகளை மட்டுமே ஆதரவாக பெற்றதோடு, 168 பேர் வாக்களிக்காமல் விலகிய நிலையில், நிராகரிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், மண்டலின் அறிக்கை தேசிய அரசியல் நிலவரம் குறித்த தனது பகுப்பாய்வில் 'பாசிசம்' என்ற சொல்லை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தது.

ஜே.என்.யு மாணவர் சங்கப் பேரவையில் (JNSU) இடதுசாரிகளுக்கு முக்கியப் போட்டியாளராக விளங்கும் ஆர்எஸ்எஸ்’ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி, இடதுசாரி குழுக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடு "வளாகத்தில் தேசியவாதக் கருத்துக்களுக்கு அதிக ஆதரவு பெருகி வருவதையே காட்டுகிறது" என்று கூறியிருந்தது. 

"மோடி ஆட்சியின் பாசிசத் தன்மையை நாம் தெளிவாகக் கண்டறிந்து அம்பலப்படுத்தத் தவறினால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் மாணவர்களை நம்மால் ஒருங்கிணைக்க முடியாது... கடந்த சில ஆண்டுகளில், சில ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், ஏபிவிபிக்கும் இடையே நிலவும் நெருங்கிய தொடர்புகள், முன்பை விட அவர்களுக்கு அதிக அதிகாரத்தை அளித்துள்ளன. தங்களின் குறுகிய குறுங்குழுவாத மனப்பான்மையினால் எழும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இடதுசாரிகளும் பிற முற்போக்குக் குழுக்களும் இந்த அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவது ஒரு பெரும் வரலாற்றுத் தவறாக அமைந்துவிடும்" என்று சிபிஐஎம்எல்-லிபரேஷனின் மாணவர் பிரிவான AISA கூறியது.

 

மேலும், AISA கடந்த மாதம் நடந்த ஒரு போராட்டத்தின் போது SFI-உடன் தங்களுக்கு ஏற்பட்ட அண்மைய கருத்து வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியது. "ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி குறித்த SFI-இன் நீர்த்துப்போன நிலைப்பாடே இந்த குழப்பத்திற்குக் காரணம். கார்ப்பரேட்களுக்கான அரசு இயந்திரத்தால் ஆதரிக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், அதன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும், அவர்கள், வெளிப்படையாக 'பாசிசம்' என்று வரையறுக்காமல், அதைத் தவறாக 'நவ-பாசிசப் போக்குகள்' மட்டுமே வெளிப்படுவதாக கூறிவிட்டு எளிதாக கடந்து செல்கின்றனர். ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், எப்போதும் இடதுசாரிகளைத் தனது முதன்மை எதிரியாகக் கருதும் குழுவான பாப்ஸா(BAPSA-Birsa Ambedkar Phule Student’s Association), தற்போதைய ஆட்சியின் அபாயத்தைக் குறைத்துக் காட்டுவதில் இன்று SFI-உடன் கைக்கோர்த்துள்ளது," என்று AISA தெரிவித்தது.

சமீபத்தில் இடதுசாரிக் குழுக்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக , அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) மற்றும் ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) ஆகியவை பொதுக்குழு கூட்டத்தில் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டன.

கடந்த ஒரு மாதத்தில், சி.பி.எம். (CPM) மற்றும் சி.பி.ஐ.(எம்.எல்.) விடுதலை (CPIML-Liberation) கட்சிகளுக்கிடையேயான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. சி.பி.எம். சமீபத்தில் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில், மோடி அரசாங்கத்தை 'நவ-பாசிச' (neo-fascist) அரசு என வர்ணித்தது. அதாவது, மோடி அரசாங்கம் பாசிசத்தின் சில கூறுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறதே தவிர, முழுமையான பாசிசம் அல்ல என்று கூறியதற்கு மாறாக, சி.பி.ஐ.(எம்.எல்.) விடுதலை மற்றும் சி.பி.ஐ. (CPI) கட்சிகள், பா.ஜ.க. (BJP) தலைமையிலான இந்த அரசாங்கம் வெறும் பாசிசப் போக்குகளைக் வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், முழுமையாகப் பாசிசத்தைப் பின்பற்றி வருகிறது என்று வாதிடுகின்றன.

' ஏ.பி.வி.பி.யைத் தோற்கடிப்பதற்காக முற்போக்குக் அமைப்புகளுடன் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதே எங்கள் தேர்தல் குறிக்கோளாகும்.' 'சமூக அறிவியல் பள்ளி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானத்தை எதிர்த்த மாணவர்களை விட, அதை ஆதரித்தவர்களின் அல்லது நடுநிலை வகித்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.' 'இது, முற்போக்கு சக்திகள் இன்னும் பெரும்பான்மையாகவே உள்ளனர் என்பதைத் தெளிவாக நிரூபிக்கிறது,' என்று SFI அமைப்பின் ஜே.என்.யூ.எஸ்.யூ. (JNUSU) துணைத் தலைவர் அபிஜித் கோஷ், தி டெலிகிராஃப் நாளிதழிடம் தெரிவித்தார்.

கோஷ், ஆர்.எஸ்.எஸ். (RSS), பா.ஜ.க. (BJP), மற்றும் ஏ.பி.வி.பி. (ABVP) அமைப்புகளின் கூட்டணியை 'நவ-பாசிச சக்திகள்' என வர்ணித்தார். மேலும், அவர்களின் கருத்துக்கள் முசோலினி மற்றும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் சிந்தனைகளுக்கு ஒத்தவையாக இருப்பதாகத் தெரிவித்தார். 'தற்போதைய பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் தொடர்ந்து இத்தகைய அபாயகரமான போக்குகளை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராகப் போராட அனைத்து முற்போக்குக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்,' என்பதையும் அவர் சேர்த்துக் கூறினார்.

DSF மற்றும் SFI உறுப்பினர்கள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் புதிதல்ல என்றும், வேறுபாடுகள் இருந்தபோதிலும், இடதுசாரிக் குழுக்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வந்துள்ளன என்றும் தெரிவித்தனர்.

"தற்போதைய அரசாங்கம் பாசிசம் என்றே நாங்கள் மதிப்பிடுகிறோம். ஆனால், ஒருங்கிணைப்பாளரின் அறிக்கையில் நாங்கள் அனைவரும் உடன்படும் பல அம்சங்கள் உள்ளன. ஒரேயொரு வார்த்தைக்காக முழு அறிக்கையையும் நாம் நிராகரித்துவிடக் கூடாது," என்று CPI’ன் மாணவர் பிரிவான AISF-ஐச் சேர்ந்த JNUSU இணைச் செயலாளர் மோ சஜித் கூறினார்.

சிபிஎம் தனது மாநில அமைப்புகளை நேரடியாக 'பாசிசம்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'நவ-பாசிசம்' என்ற சொல்லைப் பயன்படுத்த அறிவுறுத்திய பிறகு, அதை விமர்சித்து சிபிஐஎம்எல்-விடுதலை கட்சியின் (CPIML-Liberation) தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். பிரபலமான பாப் டிலான் பாடலைக் குறிப்பிட்டு அவர் எழுதியதாவது: "இந்த அரசாங்கத்தை வெளிப்படையாகப் பாசிசம் என்று அழைக்கும் வரை, மக்கள் இன்னும் எவ்வளவு காலம்தான் அவதியுற வேண்டும்? ... சிபிஎம்-இன் வலுவான கோட்டைகளாக கருதப்படும் கேரளத்திலும், மேற்கு வங்காளத்திலும் அரசியல் ரீதியிலான, தேர்தல் அளவிலான சவால்களை எதிர்கொள்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும், இந்த மாநிலங்களில் குறுகிய கால தேர்தல் கணக்கீடுகளால் மட்டுமே இந்த ஆட்சியைத் வெளிப்படையாகப் பாசிசம் என்று வரையறுப்பதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை".

JNUSU வட்டாரங்கள் இந்த கருத்து வேறுபாடு மாணவர் அமைப்பிற்குள் புதிய முரண்பாடுகளை உருவாக்கியதாகக் குறிப்பிட்டன. AISA அமைப்பு 2006 ஆம் ஆண்டு SFIயிடம் இருந்து ஜேஎன்யுஎஸ்யூ தலைவர் பதவியை வென்று, 2019 ஆம் ஆண்டு வரை அதனைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருந்தது. வளாகத்தில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்த பிறகு, இந்த இரண்டு போட்டியிடும் குழுக்களும் 2016 இல் ஒன்றுசேர்ந்தன. 2019 தேர்தல்களில், AISAவுடன் இணைந்து செயல்பட்ட SFI அமைப்பு தலைவர் பதவியை வென்றது; கடந்த ஆண்டு, AISA மீண்டும் தலைவர் பதவியை மீட்டெடுத்தது. தற்போது, DSF மற்றும் AISF அமைப்புகளும் தலைமை குழுவில் அங்கம் வகிக்கின்றன. இக்குழு நான்கு முக்கிய தலைமை பதவிகளில் மூன்றில் அங்கம் வகிக்கிறது. பாப்ஸா(BAPSA) அமைப்பைச் சேர்ந்த பிரியான்ஷி ஆர்யா பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார்.

கடந்த மாதம் விடுதி வசதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நடந்த போராட்டங்களின் போது சமீபத்திய கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தது. அப்போது, SFI, AISF மற்றும் BAPSAவிடமிருந்து விலகி AISA தனித்து போராட்டங்களை நடத்தியது. அவர்கள் ஒரே பிரச்சினைகளுக்காக ஒரே நேரத்தில் போராடினாலும், தனித்தனியாக போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.telegraphindia.com/india/fascism-debate-splits-left-ahead-of-polls-at-jawaharlal-nehru-university-sfi-and-aisa-at-odds-prnt/cid/2093115

Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு