ஏகாதிபத்தியமும் போரும் பற்றி லெனின்

அ.கா.ஈஸ்வரன்

ஏகாதிபத்தியமும் போரும் பற்றி லெனின்

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் ஆறாம் வகுப்பு இது.)

வகுப்பின் வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்

ஏகாதிபத்தியமும் போரும் பற்றி லெனின் கூறிய கருத்துக்களை, அவரது இரண்டு படைப்புகளைக் கொண்டு தொகுத்துப் பார்ப்போம்.

முதல் படைப்பு  1916ஆம் ஆண்டு எழுதிய “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” இரண்டாம் படைப்பு 1914ஆம் ஆண்டு எழுதிய “போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்.”

“ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலை முதலில் பார்ப்போம்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் தனது வளர்ச்சியில் ஒரு புதிய ஏகாதிபத்தியக் கட்டத்தினுள் நுழைவதைப் பற்றி இந்த நூலில் லெனின் விளக்கியுள்ளார்.

இந்த நூலை லெனின் எழுதுவதற்கு, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞரின் நூலை பெரிதும் பயன்படுத்திக் கொண்டதாக, நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார்.

ஏகாதிபத்தியக் கட்டத்து மார்க்சியம் லெனினியம் என்கிறோம். அதனால் ஏகாதிபத்தியத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மார்க்சினுடைய “மூலதனம்” நூலைப் படிக்காமல் இன்றைய முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டையும் அதற்கானத் தீர்வையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்டது. அடிப்படைப் புரிதலுக்கு “மூலதனம்” நூலைப் படித்தாலும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலைப் படித்தே ஆக வேண்டும். இன்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையில்தான் முதலாளித்துவம் செயல்படுகிறது.

முதல் உலக ஏகாதிபத்தியப் போரைப் புரிந்து கொள்வதற்கும், அன்றைய அரசியல் நிலைமைகளைப் தெரிந்து கொள்வதற்கும், லெனினியத்தைப் புரிந்து கொள்வதற்கும் லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலை கட்டாயம் படிக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாது ஏகாதிபத்திய நெருக்கடிக் காலக்கட்டம் என்பது சோஷலிசப் புரட்சிக்கானது என்கிறார் லெனின். இதனைப் புரிந்து கொண்டு லெனினது தலைமையில் செயல்பட்ட, ருஷ்ய போல்ஷிவிக் கட்சி புரட்சியை சொன்னபடி நடத்திக் காட்டியது. ஆனால் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், சொந்த நாட்டு முதலாளிகளின் தேசிய வெறிக்குள் அகப்பட்டு சோஷலிசக் கடமையை புறக்கணித்தது.

புரட்சிக்கான புறநிலையைப் பற்றி மார்க்சியம் பேசியுள்ளது. புறநிலையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அகநிலையான கம்யூனிஸ்ட் கட்சியும் உழைக்கும் மக்களும் புரட்சியை நடத்திட முடியாது.

புரட்சிக்கான புறநிலை இருந்தாலும் அகநிலைக்கானத் தயாரிப்பு இல்லை என்றால் புரட்சி நிகழாதுபோகும் என்கிற உண்மையினையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்திய காலக்கட்ட வரலாறு நமக்கு இதையே உணர்த்துகிறது. அனைத்து வகையிலும் இந்த நூல் அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

லெனின் இந்த நூலை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வகுப்பில் பத்து அத்தியாயங்களின் சுருக்கத்தையும் சாரத்தையும் பார்க்கலாம். தலைப்பைப் பார்த்தாலேயே அதில் பேசப்படும் பொருளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

1) உற்பத்தியின் ஒன்றுகுவிப்பும் ஏகபோகங்களும்

2) வங்கிகளும் அவை ஆற்றும் புதிய பங்கும்

3) நிதி மூலதனமும் நிதியாதிக்க கும்பலும்

4) மூலதன ஏற்றுமதி

5) முதலாளித்துவக் கூட்டுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

6) வல்லரசுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

7) முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம்

8) முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சிதைவும்

9) ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம்

10) வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடம்

இந்தப் பத்து அத்தியாயத்தில் லெனின் கூறியதை முதலில் சுருக்கமாக முதலில் பார்ப்போம்.

ஏகாதிபத்தியத்தை ஏகபோக முதலாளித்துவம் என்கிறார் லெனின். ஏகபோகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், ஏகாதிபத்தியமாகக் காட்சி அளிக்கிறது. நிதி மூலதனத்தின் தோற்றமும் ஏற்றுமதியும் ஏகாதிபத்தியத்தின் முக்கியத் தன்மைகளாகும்.  இந்த மூலதன ஏற்றுமதியே உலகை மறுபங்கீடு செய்வதற்கு ஏகாதிபத்தியத்தைப் போராட வைக்கிறது. போராட்டம் போராக வெடிக்கிறது.

போட்டி முதலாளித்துவத்தை நீக்கிய ஏகாதிபத்தியம், சந்தை நோக்கிய, அல்லது சந்தையை உருவாக்கும் திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபடுகிறது. இதுவும் சோஷலிச திட்டமிடலும் ஒன்றல்ல. ஏகாதிபத்தியம் சந்தையை நோக்கி திட்டமிடுகிறது, சமூகத்தில் உள்ள மக்களின் தேவையை நோக்கி, சோஷலிச உற்பத்தியில் திட்டமிடப்படுகிறது.

ஏகாதிபத்திய உற்பத்தி முறைக்கு சமூக அளவில் மட்டுமல்லாது அனைத்து உலக அளவில் திட்டமிட்ட நிர்வாகம் தேவைப்படுகிறது. உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக ஏகாதிபத்தியத்தில் இருப்பதால், உலக உற்பத்தி ஒரு சில ஏகபோகங்களின் கைகளில் சிக்கியுள்ளது. இதனால் உற்பத்தியை தாம் மட்டும்  நடத்த வேண்டும் என்று விரும்பகின்றன, போட்டியாளர்களை வீழ்த்த முனைகிறது, ஒரு சில சொத்துடைமைப் பணக்காரர்களின் தன்னலங்கள் மேலானதாகக் கொள்ளப்படுகிறது. அதனால் போர் சூழல் மறையாமல் தொடர்கிறது.

இத்தகைய தனிவுடைமையிலானப் பிரச்சினைகளை முழுமையாக ஏகாதிபத்தியம் வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனத்தை அகற்றப்பட வேண்டிய வரலாற்றுக் கடமையை பாட்டாளி வர்க்கத்தின் முன் வைக்கிறது. 

முன்பைவிட அதிகமான சமூக உற்பத்திக்கும் ஒரு சில பணக்காரர்களின் சொத்துடைமைக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏகாதிபத்தியம் ஒருமுகப்படுத்துகிறது. இதுவே சோஷலிசப் புரட்சியின் தவிர்க்க முடியாதத் தன்மைக்கு நிபந்தனையாக இருக்கிறது. ஆக ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது ஆய்வுகளின் முடிவுகள், சோஷலிசப் புரட்சிக்கான தரணமிது என்பதை பாட்டாளி வர்க்கத்துக்கு உணர்த்துகிறது.

இதனைப் புரிந்து செயல்பட வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாக மார்க்சிய லெனினியம் முன்வைக்கிறது.

இந்தப் பத்து அத்தியாயங்களில் சிலவற்றை சற்று விரிவாகவும் மற்றதை சுருக்கமாகவும் பார்க்கலாம். அவ்வாறு பார்க்கும் போது, ஏகாதிபத்தியத்தில் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது என்றும் நெருக்கடி நிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுபவர்களின் கருத்து தவறு என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் பார்க்கலாம்.

1) உற்பத்தியின் ஒன்றுகுவிப்பும் ஏகபோகங்களும்

தொழில்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியும், மேன்மேலும் விரிவாகிக் கொண்டிருக்கும் தொழில் நிலையங்களில் உற்பத்தியானது விரைந்து ஒன்றுகுவியும் போக்கும் முதலாளித்துவத்தின் மிக முக்கியமான தனியியல்பாக இருக்கிறது. அதாவது தொழில் நிலையங்களின் விரிவான வளர்ச்சியும் உற்பத்தியின் விரைவான ஒன்றுகுவிப்பும் முதலாளித்துவத்தின் சிறப்பியல்புகளாகும்.

ஒன்றுகுவிப்பே, முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நேரடியாக ஏகபோகத்துக்கு இட்டுச் செல்கிறது.

உற்பத்தியினுடைய ஒன்றுகுவிப்பின் விளைவாக, ஏகபோகமாக மாற்றம் அடைந்த முதலாளித்துவத்தின் புதிய கட்டம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்றது. 

தடையில்லா போட்டி என்கிற பழைய முதலாளித்துவத்தை, திட்டமிட்ட புதிய ஏகாதிபத்திய முதலாளித்துவம், அகற்றிவிட்டதை புதிய வளர்ச்சியின் நிலை காட்டுகிறது.

சிதறுண்டும், ஒருவருக்கொருவர் தொடர்பின்றியும், தெரியாத ஒரு சந்தையை நோக்கி உற்பத்தி செய்து கொண்டிருந்த தொழில் அதிபர்களுக்கு இடையில் நடைபெற்ற, பழைய தடையில்லாப் போட்டியில் இருந்து முற்றிலும் வேறான ஒன்றுக்கு ஏகாதிபத்தியம் மாறிவிட்டது.

சந்தையை தங்களுக்கு இடையில் ஏகபோகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. உற்பத்தி செய்ய வேண்டிய சரக்கின் அளவை நிர்ணயம் செய்கிறது. விலையையும் நிர்ணயிக்கின்றன. இதுவே ஏகாதிபத்தியத்தின் தனியியல்பு.

லெனின் சுட்டிக்காட்டுகிற இந்த ஏகபோக ஏகாதிபத்தியம் என்பது முதலாளிகளுக்கு இடையான போட்டியை தவிர்த்துவிட்டது. திட்டமிட்ட சரக்கு உற்பத்தியில் ஈடுபடுவதால் உற்பத்தியில் அராஜகம் என்கிற முதலாளித்துவப் போக்கு மறைந்து போய்விட்டது என்று பலர் தவறாகப் புரிந்துக் கொள்கின்றனர். இந்தத் தவறானப் புரிதலுக்கு ஆதாரம் எதுவும் லெனினது “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலில் இல்லை.

ஏகாதிபத்திய உற்பத்தியில் சமூகமயமாக்கம் விரிவடைந்து முன்னேறி உள்ளது, குறிப்பாக தொழில்நுட்பப் புதுப்புனைவுகளும் மேம்பாட்டின் வளர்ச்சிப் போக்கும் சமூகமயமாகிவிட்டது. 

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் பழைய முதலாளித்துவத்தில் உள்ளது போலவே ஒதுக்கீடு தனியார் வசமே உள்ளது. அதாவது உற்பத்தியானது சமூகமயமாக இருக்கிறது ஆனால் வினியோகம் தனிச்சொத்தின் அடிப்படையில் பழைய முறையிலேயே நடைபெறுகிறது. இந்த முரண்பாடு ஏகாதிபத்திய கட்டத்திலும் தொடர்கிறது. 

தனிச்சொத்தின் அடிப்படையில் செயல்படும் உற்பத்தி முறை இருக்கும்வரை இந்தப் பிரச்சினை தீர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த உற்பத்தி முறையின் குறிப்பிட்ட இப் பிரச்சினை இந்த உற்பத்தி முறையிலுள்ளேயே தீர்வு காண முடியாது. ஏனென்றால் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் இந்த உற்பத்தி முறையே ஆகும். 

இந்த உற்பத்தி முறையை வீழ்த்துவதின் அடுத்த உற்பத்தி முறைக்கு மாறுவதின் மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

ஏகாதிபத்தியக் கட்டத்திலும் சமூக உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒருசிலரது தனிச்சொத்தாகவே இருக்கின்றது. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கவே செய்கிறது என்று லெனின் கூறியுள்ளார், மேலும் ஒருசிலராக இருக்கிற ஏகாதிபத்தியவாதிகள் ஏனைய மக்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை நூறுமடங்கு கடுமையானதாகவும், அழுத்துவதாகவும், சகிக்க முடியாததாயும் மாறிவிட்டது என்கிறார்.

பழைய தடையில்லாப் போட்டி முடிவுக்கு வந்ததையும் ஏகபோக திட்டமிட்ட உற்பத்தி முறையாக வளர்ந்துள்ளதையும் பற்றி லெனின் கூறியதை மட்டும் கவனத்தில் கொண்டு, அதன் உள்ளியல்பான முரண்பாடு தொடர்வதை லெனின் குறிப்பிட்டுக் கூறியதை சிலர் கண்டுகொள்ளவே இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்ட உற்பத்தி என்று கூறியவுடன் முதலாளித்துவத்தின் பழைய உற்பத்தியில் காணப்பட்ட அராஜகம் மறைந்து போய்விட்டதாக கருதிக் கொள்கின்றனர்.

இந்த நூலிலேயே இப்படிப் பேசுபவர்களை மறுத்து லெனின் எழுதியிருக்கிறார்.

ஏகாதிபத்தியத்தால் நெருக்கடிகளை இல்லாது ஒழித்துவிட முடியும் எனறு பலர் பேசுகின்றனர். குறிப்பாக முதலாளித்துவப் பொருளாதார அறிஞர் பரப்பி வரும் கட்டுகதை இது என்கிறார் லெனின். 

இவர்கள், முதலாளித்துவத்தை எப்படியாவது அனுகூலமானதாகக் காட்ட வேண்டுமென விரும்புகிறார்கள். 

ஏகாதிபத்தியம், நெருக்கடிகளை ஒழிப்பதற்கு நேர் மாறாக, சில தொழில் கிளைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் ஏகபோகமானது முதலாளித்துவ உற்பத்தி அனைத்துக்கும் உள்ளியல்பான அராஜகத்தை அதிகரிக்கவும் கடுமையாக்கவுமே செய்கிறது என்பதை லெனின் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் லெனின் கூறுகிற இப்படிப்பட்ட கருத்து சிலரது கண்ணில் படவேயில்லை.

2) வங்கிகளும் அவை ஆற்றும் புதிய பங்கும்

வங்கி பற்றி பேசும் இந்த அத்தியாயத்தில் உள்ள லெனினது ஒரு கருத்தை மட்டும் மேற்கோளாகப் பார்ப்போம். அதைப் படிக்கும் போது நம் நாட்டு வங்கியின் நினைவுகள் வரும் என்பதை மட்டும் இங்கே கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.

“சேமிப்பு-வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும் கோடிகள். முடிவாகப் பார்க்கையில். இதே வங்கி, மூலதனப் பெரும் புள்ளிகளது பிடிக்குள்தான், நடைமுறையில் வந்துசேர்கின்றன; மற்றும் முதலாளித்துவ சமூகத்தில் அரசாங்க ஏகபோகம், திவாலாகும் நிலையிலுள்ள ஏதேனும் ஒரு தொழிற்கிளைக் கோடீஸ்வரர்களது வருவாயை அதிகமாக்குவதற்கும், உத்தரவாதம் செய்வதற்குமான ஒரு சாதனமே ஆகும்.”

இன்றைய வங்கிகளும் ஏன் இப்படி செய்கின்றன என்கிற கேள்வி நம்முள் எழும், அதற்குக் காரணம் வங்கியும் முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாகவே செயல்படுகிறது என்பதே அதற்கு பதிலாகும்.

3) நிதி மூலதனமும் நிதியாதிக்க கும்பலும்

நிதி மூலதனத்தைப் பற்றி எளிய சொற்களில் வரையறையாக லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

உற்பத்தியின் ஒன்றுகுவிப்பு, அதிலிருந்து எழும் ஏகபோகம், தொழில்துறையுடன் வங்கியை இணைத்தல் - இதுதான் நிதி மூலதனத்தின் எழுச்சியின் வரலாறு, இதுவே நிதி மூலதனம் என்கிற கருத்தாக்கத்தின் உள்ளடக்கம்.

சரக்கு உற்பத்தி, தனியார் சொத்துடைமை ஆகிய இவற்றின் பொது நிலைமைகளில், முதலாளித்துவ ஏகபோகங்களுடைய, தொழில், வணிகச் செயற்பாடுகள், தவிர்க்க முடியாதபடி நிதி ஆதிக்கக் கும்பலாகிய சிலரது ஆதிக்கத்துக்கு இட்டுச் செல்கின்றன.

இந்த வகுப்பைப் பொருத்தளவில் லெனினது கருத்தாக்கத்தை முன்வைத்தால் மட்டுமே போதுமானதாகக் கருதுகிறேன். அவர் ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வின் முடிவாக என்ன கூறுகிறார் என்பதை சொன்னால் போதும், இதற்கு விளக்கம் எதுவும் பெரியதாகத் தேவைப்படாது.

ஏகாதிபத்தியம் வளர்ச்சி அடைந்தவுடன் அது அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி விடுகிறது என்கிறார் லெனின்.

ஏகபோகமானது, அது நிறுவப்பட்டு நூற்றுக்கணக்கான கோடிகளைத் தன்பிடிக்குள் கொண்டுவந்தவுடன், அரசாங்கத்தின் வடிவமும், ஏனைய எல்லா விவரங்களும், எப்படி இருப்பினும், தவிர்க்க முடியாத வகையில், பொதுவாழ்வின் ஒவ்வொரு துறையினுள்ளும் ஊடுருவிவிடுகிறது.

நம்முடைய இன்றைய வரலாற்று அனுபவமும் லெனின் கூற்று இன்றும் உண்மையாக இருப்பதை உறுதிபடுத்துகிறது.

4) மூலதன ஏற்றுமதி

தடையில்லாப் போட்டி தனியாட்சி செய்த பழைய முதலாளித்துவத்தின் சிறப்பியல்பாய் இருந்தது சரக்குகளின் ஏற்றுமதி. ஏகபோகங்கள் ஆட்சி செய்யும் முதலாளித்துவ புதிய கட்டத்தின் சிறப்பியல்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி. 

அதாவது காலனிய காலத்திய முதலாளித்துவத்தில் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தில் மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவே இரண்டுக்கும் உள்ள அடிப்படைவேறுபாடு, மற்றபடி அதன் உள்முரண்பாடுகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றன, ஏகாதிபத்தியத்தில் முரண்பாடுகள் விரிவாகவும் வளர்ச்சி அடைந்த வகையிலும் தொடர்கின்றது.

முதலாளித்துவம் வளர்ச்சி பெறுகிற போதெல்லாம் ஒரு குரல் ஒலிக்கிறது, அது என்னவென்றால், உபரியாய் இருக்கும் மூலதனத்தை புதியத் துறைகளுக்குப் பயன்படுத்துவதால் ஏழ்மையாய் வாழ்கின்ற பெருமக்களின் வாழ்க்கைத் தரம், முதலாளித்துவத்தால் உயர்த்தப்படும். 

நாம் காண்கின்ற இன்றைய வளர்ச்சிக் கட்டத்திலும் இத்தகைய பேச்சை கேட்க முடிகிறது. முதலாளித்துவத்தின் உற்பத்தி முறைக்கு உரிய உள்முரண்பாட்டில் இருந்து விடுபடாதவரை, அதாவது முதலாளித்துவம் முதலாளித்துவமாக இருக்கும்வரை ஏழ்மையை தவிர்க்க முடியாது என்கிற உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் இன்னும் அரைப் பட்டினியாகவும் ஏழ்மையாகவும் வாழ்கின்ற மக்கள் பெருந்திரளினரின் வாழ்க்கைத் தரத்தை முதலாளித்துவம் உயர்த்த முடியும் என்று முதலாளித்துவத்தின் குட்டி முதலாளித்துவ விமர்சகர்களால் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. அவர்கள் கருதுவது என்ன வென்றால், இன்று பின்தங்கி உள்ள விவசாயத்தை முதலாளித்துவத்தால் வளர்த்தோங்கச் செய்ய முடியுமானால், உபரி மூலதனத்தைப் பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது. 

இந்த குட்டி முதலாளித்துவ விமர்சகர்களின் கருத்து தவறாகும். உண்மையில் இப்படி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை, ஏன் என்பதை லெனின் அடுத்துக் கூறுகிறார்.

முதலாளித்துவம் முதலாளித்துவமாகவே இருக்கிறவரை, உபரி மூலதனமானது அந்த நாட்டின் மக்கள் பெருந்திரளினரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப் படமாட்டாது, ஏனென்றால் இது முதலாளிகளுடைய லாபங்களைச் சரிந்து விழச் செய்துவிடும். லாபங்களை அதிகமாக்கும் பொருட்டு பிற்பட்ட நாடுகளுக்கு மூலதனம் ஏற்றுமதி செய்வதற்கே உபரி மூலதனம் பயன்படுத்தப்படும் என்கிறார் லெனின். இதுதான் முதலாளித்துவத்தின் போக்கு.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதலாளித்துவம் பாடுபடவில்லை, அதிகமாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

முதலாளிகள் தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் மூலதனம் அவர்களை லாப நோக்கின் அடிப்படையிலேயே செயல்பட வைக்கும். மூலதனத்தின் இயல்பு இதுவே ஆகும். லாப வேட்டையில் இறங்குவதற்கே முதலாளித்துவம் உற்பத்தியில் இறங்குகிறது.

மூலதனத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ளாத வரை, முன்பு கூறிய குட்டி முதலாளித்துவவாதிகளின் கருத்தைப் போன்றே கூற வேண்டிவரும்.

உபரி மூலதனம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால், ஏற்றுமதி செய்யும் சொந்த நாடுகளின் வளர்ச்சிக்கு இது பயன்படவில்லை என்பது உண்மையே, ஆனால்  உலகெங்கும் மேலும் தொடர்ந்து முதலாளித்துவம் காணும் வளர்ச்சியை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் செய்கிறது.

ஏகபோகமான ஏகாதிபத்தியத்தில் “போட்டி” என்பது மறைந்து போகிறது என்று பலர் தொடர்ந்து கூறிவருகின்றனர், போட்டியின் வடிவம்தான் மாறுகிறது, போட்டி மறைந்து போகவில்லை என்பதே உண்மையாகும்.

பழைய முதலாளித்துவத்தில் காணப்பட்ட பகிரங்கச் சந்தையிலான போட்டிக்குப் பதில் ஏகாதிபத்தியத்தில் லாபகரமான பேரங்களுக்காகத் தொடர்புகள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன என்கிறார் லெனின். அதாவது பேரங்களுக்கான போட்டியாக புதிய வடிவம் பெறுகிறது. பேரங்களை பேசுவதற்கான போட்டிச் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 

ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைக்காக பிரித்துக் கொள்வதற்கு எந்த நாடும் மிச்சமில்லை, ஏற்கெனவே அனைத்து நாடுகளும் பிரித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் தங்களது நிதி மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான நாடாக மாற்றுவதற்கான போட்டியும் உலகைப் பிரித்தலும் தொடர்கிறது. அதாவது மறுபங்கீடுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

ஆக, முதலாளித்துவத்தில் காணப்பட்ட பழைய போட்டி மறைந்துவிட்டது புதுவடிவிலான போட்டி தொடங்கிவிட்டது. முதலாளிகளுக்கு இடையிலான போட்டி என்பது முழுமையாக மறைந்து விடவில்லை. இந்தப் போட்டியும் லாப வேட்டையுமே முதலாளிகளை இயக்குகிறது.

5) முதலாளித்துவக் கூட்டுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

முதலாளித்துவம் உலகை முழுமையாகப் பகிர்ந்து கொண்டுவிட்டது, இனிமேல் பகிர்வதற்கு இடம் இல்லை, அதனால் அவர்களுக்கு இடையே போராட்டத்துக்கும் பகிர்வுக்கும் வாய்ப்பு இல்லை என்று கருதுவது தவறு என்பதையே இந்த அத்தியாயத்தில் லெனின் விளக்குகிறார்.

சக்திமிக்க இரண்டு பெரிய ஏகாதிபத்திய முதலாளிகள், உலகை பங்கிட்டுக் கொண்டுவிட்டனர், இது ஓர் உண்மையான நிலைமையே ஆகும், ஆனால் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியாலும் போரினாலும் திவாலாவதாலும் பிற காரணங்களாலும், அவர்களினுடைய சக்திகளின் உறவு நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் மறுபங்கீட்டிற்கான தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படத்தானே செய்யும் என்கிறார் லெனின்.

முதலாளித்துவம் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாது, அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது என்று பல இடங்களில் லெனின் விளக்கி இருக்கிறார். இந்த இடத்தில் எவ்வாறு விளக்குகிறார் என்பதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

"முதலாளித்துவ ஏகபோகங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்பதையும், பல்வேறு முதலாளித்துவக் கூட்டுகளுக்கிடையே நடைபெறும் போராட்டத்தின் நோக்கம் என்ன என்பதையும் சர்வதேசக் கார்ட்டல்கள் காண்பிக்கின்றன. 

...

...போராட்டத்தின் வடிவங்கள் மாற்றமடையக் கூடும். இடையறாது மாற்றமடையவும் செய்கின்றன, ஆனால் போராட்டத்தின் சாராம்சம், அதன் வர்க்க உள்ளடக்கம், வர்க்கங்கள் இருந்து வரும் வரை நிச்சயம் மாற்றமடைய முடியாது. இன்றையப் பொருளாதாரப் போராட்டத்தின் சாராம்சத்தை (உலகின் பங்கீட்டை) மறைப்பதும், இப்போராட்டத்தின் ஒரு வடிவத்தை ஒரு நேரமும் மற்றொரு வடிவத்தை இன்னொரு நேரமும் வலியுறுத்துவதும், உதாரணமாக ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கே -மெய் நடப்பில் காவுத்ஸ்கி தமது தத்துவார்த்த வாதங்களில் இவ்வர்க்கத்தின் தரப்புக்கு மாறிச் சென்றுவிடுகிறார் (இதைப் பற்றி பிற்பாடு எடுத்துரைப்பேன்)- இயற்கையாக உகந்தனவாகும். 

...

முதலாளிகள் உலகைப் பங்கிட்டுக் கொள்வது குறிப்பிடத்தக்க எந்தக் கெட்ட எண்ணத்தாலும் உந்தப்பட்டு அல்ல; ஒன்றுகுவிப்பு ஏற்கெனவே வந்தடைந்துவிட்ட வளர்ச்சி நிலையானது லாபங்கள் பெறுவதற்காக இந்த முறையை மேற்கொள்ளுமாறு அவர்களை நிர்பந்தப்படுத்துவதாலேயே அவர்கள் இதைச் செய்கிறார்கள்."

லெனினது இந்தக் கூற்றுக்கு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் லெனின் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளார். 

நான் இங்கே தரவுகளை எடுத்துக்காட்டாது, அதன் அடிப்படையில் லெனின் எடுத்த முடிவுகளையே கூறுகிறேன். முதல்நிலையில் இந்த முடிவுகளை புரிந்து கொள்வது அவசியமானதாகவும் போதுமானதாகவும் நான் கருதுகிறேன்.

என்னைப் பொருத்தளவில் எளிமை என்பது இதுதான். பேச வேண்டியதை பேசாமல் அறிமுகம் செய்வதை எளிமை என்று நான் கருதுவதில்லை. ஏனென்றால் அறிமுக நிலையிலேயே நின்று போகக்கூடாது என்பதால் நூலின் சாரத்தை கொடுப்பதே அறிமுகமாகக் கொள்கிறேன்.

இந்த அத்தியாயத்தின் இறுதியிலும் உலகப் பகிர்வு என்பது முடிந்த ஒன்றாக இல்லை, அதற்கானப் போராட்டம் தொடர்கிறது என்கிறார் லெனின். 

முதலாளித்துவத்தின் மிகவும் அண்மைய கட்டத்துக்குரிய இந்தச் சகாப்தம் நமக்குத் தெளிவுபடுத்துவது என்னவெனில், உலகின் பொருளாதாரப் பகிர்வின் அடிப்படையில் முதலாளித்துவக் கூட்டுகளிடையே குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன; அதேபோது இதற்கு இணைவாகவும் இதனுடன் தொடர்பு கொண்டும் உலகின் பிரதேசப் பகிர்வின் அடிப்படையில், காலனிகளுக்கான போராட்டத்தின், செல்வாக்கு மண்டலங்களுக்கான போராட்டத்தின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளுக்கிடையில், அரசுகளுக்கிடையில் குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன என்கிறார் லெனின்.

முதலாளித்துவ நாடுகளின் வெளியுறவுக் கொள்கை இந்த அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளப்படுகிறது.

6) வல்லரசுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்

உலகப் பகிர்வு முடிந்துவிட்டது என்று கூறுவதால், முதலாளிகளுக்கு இடையே போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் அல்ல என்பதை நான் இந்த வகுப்பில் மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன். ஏனென்றால் பகிர்வு முடிந்துவிட்டது அதனால் போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது, இனிமேல் முதலாளிகளுக்கு இடையே போராட்டம் கிடையாது என்று தவறாகப் பேசுபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் இப்படிக் கூறிவருகிறேன், ஆனால் லெனினும் இந்த நூலில் இதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அதனால் இதை கூறியதுகூறல் என்கிற குற்றத்துக்கு ஆளாகாது என்பதும், வலியுறுத்திக் கூறுவதற்கே என்பதும் தெளிவாகிறது.

பகிர்வு முடிவுற்றுவிட்டது என்பது மறுபங்கீட்டுக்கு சாத்தியமல்ல என்கிறப் பொருளில் கூறப்படவில்லை என்கிறார் லெனின்.

முதலாளித்துவ நாடுகள் இந்த உலகில் பிடிக்கப்படாத பரப்புகள், கைப்பற்றப் படுவதை நிறைவு பெறச் செய்துவிட்டது என்னும் பொருளில்தான் பகிர்வு முடிவுற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இனி மறுபங்கீட்டுக்குதான் வாய்ப்பு இருக்கிறது, அதாவது ஒரு உடைமையாளரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்ற முடியும். உடைமையாக்கப்படாத பரப்புதான் கிடையாதே தவிர மறுபங்கீட்டிற்கான வாய்ப்பு மட்டுமே இப்போது இருக்கிறது.

இவ்வளவு தெளிவாக லெனின் கூறிய பிறகும், மறுபங்கீடு அவ்வளவு பெரிய போராட்டமாக இருக்காது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் லெனின் பதிலளித்துள்ளார்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ, மூலப் பொருள்களின் பற்றாக்குறை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப்பொருள்களின் ஆதாரங்களுக்கான வேட்டையும் போட்டியும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக கடுமையாகின்றனவோ, காலனிகளைப் பெறுவதற்கான போராட்டமும் அவ்வளவுக்கு அவ்வளவு மூர்க்கமானதாகிவிடுகிறது என்கிறார் லெனின்.

ஏகாதிபத்தியத்துக்கு இடையே நடைபெறும் போட்டியின் விளைவாக, இயற்கையின் மூலப்பொருட்கள் அதிகமாக வேட்டையாடப்படுகிறது. இதை நாம் இன்றைய எதார்த்தத்திலும் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள மூலப்பொருட்களை முதலாளித்துவம் சூரையாடுவதை ஒட்டி “மார்க்சிய சூழலியல்” என்கிறப் புதியப் பிரிவு மார்க்சியத்தில் தோன்றி உள்ளது. ஏகாதிபத்தியத்தை, பொருளாதார நிலைமையை வைத்து மட்டும் போராடக்கூடாது, அதற்கு எதிரான அனைத்தையும் பயன்படுத்தி போராட வேண்டும். பொருளாதாரப் போராட்டம்தான் அடிப்படை என்றாலும் அதனை ஒட்டியுள்ள அனைத்துப் போராட்டமும் பொருளாதாரப் போராட்டத்துடன் இணைத்து நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது பொருளாதாரப் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்.

7) முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம்

இதுவரை நாம் பார்த்தது அனைத்தும் முதலாளித்துவத்தின் தனிக்கட்டமான ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே ஆகும்.

இந்த அத்தியாயத்தில் லெனின் ஏகாதிபத்தியத்தின் தனித்தன்மைகளை விவரிக்கிறார்.

முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று லெனின் மிகவும் சுருக்கமான முறையில் இதனை விளக்கி உள்ளார்.

ஏகபோகமான ஏகாதிபத்தியமானது தடையில்லா போட்டி அடிப்படையிலான முதலாளித்துவத்தைவிட மேலானதோர் அமைப்பாக மாறிய நிலையாகும்.

உலகம் இனி பகிர்வதற்கு இடம் இல்லாத அளவுக்கு ஏகாதிபத்தியத்தால் முழுமையாகப் பகிரப்பட்டுவிட்டக் காலம் ஏகாதிபத்தியக் காலம் ஆகும்.

இந்த இடத்திலும் லெனின் போட்டிக்கு இடமில்லாது போகவில்லை, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை, உண்மையில் போட்டி கடுமையாக்கப்பட்டுள்ளது என்கிறார் லெனின்.

கூறியது கூறலாக இருப்பதால், இதை லெனின் கூறிய சொற்களிலேயே பார்ப்போம்.

“தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. ஏகபோகமானது முதலாளித்துவத்திலிருந்து அதைவிட மேலானதோர் அமைப்புக்கு மாறிச் செல்வதாகும்.”

ஆக, பழைய முதலாளித்துவத்தில் இருந்து ஏகாதிபத்தியமாக புதிய முதலாளித்துவம் மாறியது பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, அதன் கடுமையை அதிகரித்துள்ளது என்பதே உண்மையாகும்.

இங்கே லெனின் காவுத்ஸ்கியின் அதீத-ஏகாதிபத்தியம் பற்றியும் விமர்சிக்கிறார், இது அறிமுக வகுப்பு என்பதனால் அதைப் பற்றி பேசவில்லை. அறிமுகத்தில் ஒப்பிட்டுப் பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தும், அதனால் இதைத் தவிர்க்க விரும்புகிறேன். அவ்வாறு ஒப்பிட்டு எடுத்த முடிவுகளையே உங்கள் முன் வைக்கிறேன். 

காவுத்ஸ்கி பற்றி லெனின் எழுதிய தனிக்கட்டுரையை பதினொன்றாம் வகுப்பில் பார்க்கலாம்.

காவுத்ஸ்கியின் அதித-ஏகாதிபத்தியம் பற்றியும் அதன் மீதான லெனினது விமர்சனத்தையும் “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலில் நேரடியாக படித்து அறிந்து கொள்வோம்.

ஏகாதிபத்தியத்தின் அடிப்படைகளாக ஐந்தை லெனின் குறிப்பிடுகிறார்.

1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல்.

2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல்.

3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.

4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்.

5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பகிரப்படுதல் நிறைவுறுகிறது.

இதுவே ஏகாதிபத்தியத்தின் இலக்கணம்.

ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்தக் கட்டத்திலும் முதலாளிகளுக்கு இடையேயான போட்டி முடிவுக்கு வரவில்லை என்பதை இந்த இடத்திலும் லெனின் விவரிக்கிறார்.

உலகம் ஏற்கெனவே பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மையே, ஆனால் மறுபங்கீட்டுக்கு வாய்ப்பு இல்லாமல் போகவில்லை. மேலாதிக்கத்துக்கானப் போட்டி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பிறர் கைப்பற்றிய பகுதியை பிடிப்பதற்கு எதிராளியைப் பலவீனப்படுத்துவதற்காகவும் அவனது மேலாதிக்கத்துக்குக் குழிபறிப்பதற்காகவும் எழும் போட்டியானது, ஏகாதிபத்தியத்தில் இயல்பாகவே காணப்படுகிறது.

ஆக, ஏகாதிபத்தியக் கட்டத்திலும் போட்டியும் போரும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. போரின் வடிவமும் பழைய முறையிலேயே இல்லாது இந்தக் கட்டத்துக்கு உரிய புதிய முறையில் மாறிவிடுகிறது.

8) முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சிதைவும்

  (PARASITISM AND DECAY OF CAPITALISM)

“ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலை லெனின் எழுதி சுமார் 110 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இந்தப் நூலைப் பற்றிய தவறானக் கருத்துக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தக் தவறானக் கருத்துக்களைப் பரப்புபவர்கள், உண்மையில் இந்த நூலை முழுமையாகப் படித்து கருத்துரைக்கவில்லை, மேலோட்டமாக தலைப்பை வைத்துக் கொண்டு அல்லது சில துண்டான சொற்களை மட்டும் பிடித்துக் கொண்டு பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அந்தக் கருத்துக்கள் பரவலாக பரவியிருப்பது மோசமான உண்மையாக இருக்கிறது.

பழைய தடையில்லா போட்டி முதலாளித்துவத்தில் திட்டமிடுதல் இல்லாததால் உற்பத்தியில் அராஜகம் நிலவியது, ஏகபோகமான ஏகாதிபத்தியத்தில் திட்டமிட்ட உற்பத்தியே நிகழ்வதால் உற்பத்தியில் அராஜகம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இந்தத் தவறானக் கூற்றை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதே போல இந்த அத்தியாயம், முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சிதைவும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த நூலின் பெயரில் உள்ள முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்பதையும் இணைத்து, லெனின் ஏகாதிபத்தியத்தை உச்ச கட்டம் என்றும் சிதைவும் என்று கூறினார், ஆனால் ஏகாதிபத்தியம் இன்றும் லெனின் கூறியதற்கு மாறாக நிலைத்து நிற்கிறது என்று கூறுபவர்களை இன்றும் நாம் காண முடிகிறது. 

இந்தத் தவறானக் கூற்றுக்குக் காரணம் லெனின் நூலை முழுமையாகவும், முறையாகவும் படிக்காததின் விளைவே ஆகும்.

இந்த அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் சிதைவைப் பற்றி கூறியிருப்பது தவறாகப் பேசுபவர்களின் கருத்துக்கு மாறாகவே இருக்கிறது.

 

ஏகாதிபத்தியம் பழைய முதலாளித்துவ உற்பத்தியைவிட விரிந்த உற்பத்தியைக் கொண்டது, அதனால் அதனைக் கண்டு பிரமித்தவர்களே அதிகம். எதிர்படும் பிரச்சினைகளைக் கடந்து முதலாளித்துவம் புதிய வடிவம் எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும், இதன் வளர்ச்சிக்கு முடிவு என்பது கிடையாது என்றே சிலர் கருதி வந்தனர். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே லெனின் குறிப்பிட்டு சொல்கிறார். ஏகாதிபத்தியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தன்மையை பலர் விவாதிப்பதில்லை. அது என்னவென்பதைப் பார்ப்போம்.

ஏகபோகமான இந்த ஏகாதிபத்தியத்திலும் பரிவர்த்தனை சரக்கு உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழல், தீர்வு காண முடியாத முரண்பாடு காணப்படுகிறது. ஏகபோகமான ஏகாதிபத்தியத்திலும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் சிதைவுக்குமான போக்கு காணப்படுகிறது.

முதலாளித்துவத்தின் கீழ் ஏகபோகம் ஒருபோதும் முழுமையாகவும், மிக நீண்ட காலமாகவும், உலக சந்தையில் போட்டியை அகற்ற முடியாது என்கிறார் லெனின், மேலும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் புகுத்துவதும், உற்பத்திச் செலவைக் குறைப்பற்கும், லாபங்களை அதிகரிப்பதற்கும் தேவையான முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏகபோகத்தின் தன்மை, குறிப்பான தேக்கத்திற்கும் சிதைவுக்குமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.  சில நாடுகளில் குறிப்பிட்ட காலங்களுக்கு இந்தப் போக்கு மேலோங்கிவிடவும் செய்கிறது என்கிறார் லெனின்.

லெனின் கூறியதின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், வார்த்தைகளை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்ட சிலர், லெனின் இங்கே சிதைவு தொடர்கிறது, குறிப்பிட்ட காலங்களில் மேலோங்குகிறது என்றுதான் கூறியுள்ளார் என்று விளக்கம் கொடுப்பர். இதே அத்தியாயத்தில் மற்றொரு இடத்தில் லெனின், ஏகாதிபத்தியம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதைப் பற்றி கூறுகிற போது, ஏகாதிபத்தியத்தின் தற்காலிக சிதைவு என்று கூறியதைப் பார்க்க முடிகிறது.

“தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, அவர்களிடையே சந்தர்ப்பவாதத்தைப் பலம் பெறச் செய்து, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தற்காலிக சிதைவை உண்டாக்குவதாகிய ஏகாதிபத்தியத்துக்குரிய இந்தப் போக்கு, கிரேட் பிரிட்டனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கும் மிகவும் முன்னதாகவே வெளியாயிற்று என்பதைக் குறிப்பிட வேண்டும்.”

இங்கே லெனின் தற்காலிக சிதைவைப் பற்றிதான் பேசியுள்ளார். அதாவது வளர்ச்சியைத் தொடர்ந்து ஏற்படுகிற நெருக்கடியைப் பற்றிதான் கூறியுள்ளார். 

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் காணப்படும் உள்முரண்பாடு இத்தகைய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இத்தகைய நெருக்கடியையே சிதைவு என்று லெனின் கூறுகிறார். சிதைவு என்கிற நெருக்கடி என்பது லெனினது விருப்பம் சார்ந்த கருத்து கிடையாது, அது புறநிலையானது, இதுவே புரட்சிக்கான புறநிலை ஆகும். 

இந்தப் புறநிலையின் அடிப்படையில்தான் ருஷ்யாவில் புரட்சி நிகழ்த்தப்பட்டது.

புறநிலையை புரட்சியாக்கும் திறம் அகநிலைக்கு அதாவது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்களுக்கும் இல்லை என்றால் புரட்சி தவறிப் போகும். புறநிலையோடு அகநிலை இணையும் போதுதான் புரட்சி நிகழும். 

இதே நூலின் பத்தாவது அத்தியாயத்தில், லெனின், இந்த சிதைவுப் போக்கு முதலாளித்துவத்தின் விரைவான வளர்ச்சிக்கு இடமில்லாதபடிச் செய்வதாகக் கருதுவது தவறாகும் என்றும் கூறியுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது உருவான போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்கிற அகிலத்தின் வழிகாட்டுதலின்படி ருஷ்ய போல்ஷிவிக் கட்சி மட்டுமே செயல்படுத்தி, புரட்சியை நிகழ்த்திக் காட்டியது. இதனைப் புரிந்து கொள்ளாது ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பின்பற்றி கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையை இழந்து, உள்நாட்டு தேசிய வெறிக்கு ஆட்பட்டு முதலாளித்துவத்துடன் ஒன்று கலந்து சந்தர்ப்பவாதத்தில் மூழ்கியது. கம்யூனிசக் கோட்பாட்டின் புரட்சிகரத் தன்மையை இழக்காத போல்ஷிவிக் கட்சி மட்டுமே புரட்சியை நடத்திக் காட்டியது. 

இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் சிதைவு என்பது ஏகாதிபத்தியத்தின் நிரந்திரத் தன்மை என்றே பேசி வருகின்றனர்.

9) ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம்

ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம் என்பது, சமூகத்தின் வெவ்வேறு வர்க்கங்களும் அவற்றின் பொது சித்தாந்தத்தின் தொடர்பாக ஏகாதிபத்தியக் கொள்கை குறித்து அனுசரிக்கும் போக்கு என்கிறார் லெனின்.

பொருளாதார சாராம்சத்தில் ஏகாதிபத்தியமானது ஏகபோக முதலாளித்துவம் ஆகும்.  இதுவே வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடத்தை நிர்ணயிக்கிறது.

தடையில்லா போட்டி என்கிற பழைய முதலாளித்துவத்தை, ஏகபோகமான திட்டமிட்ட புதிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் அகற்றிவிட்டது. இந்த ஏகாதிபத்தியத்தில் போட்டியும் நெருக்கடியும் மறைந்து போகவில்லை, முன்பைவிட அதிகரித்துள்ளது. பழைய முதலாளித்துவத்தைவிட அதிகமான தேக்கத்தையும் கூடுதலான சிதைவையும் கொண்டதாக ஏகாதிபத்தியம் காணப்படுகிறது.

ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது விமர்சனம் அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி அதனைத் தூக்கி எறிவதைப் பற்றி பேசுகிறது. காவுத்ஸ்கியின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடு, ஏகாதிபத்தியத்தின் அடிப்படை முரண்பாடுகளை மறைத்து, மெருகேற்றி, தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை இணைக்கிறது. காவுத்ஸ்கியின் ஏகாதிபத்தியக் கோட்பாடு மார்க்சியத்துடன் முற்றிலும் ஒத்துபோகாத போக்குடையதாக இருக்கிறது.

இந்த இடத்தில் காவுத்ஸ்கியை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

10) வரலாற்றில் ஏகாதிபத்தியத்தின் இடம்

இந்த அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் இயல்புகள் என்று லெனின் கூறியதை முதலில் பார்ப்போம்.

ஏகபோகங்களான ஏகாதிபத்திய கும்பல் ஆதிக்கத்துக்கான முயற்சிகளை செய்கின்றன. ஒருசில மிகுந்த வலிமையான தேசங்கள், அதிக எண்ணிக்கையிலான சிறிய தேசங்களையும் பலவீனமான தேசங்களையும் சுரண்டுகிறது. இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் தனிப்பட்ட குறிப்பான இயல்புகளாகும். இத்தகைய இயல்புகளைக் கொண்ட ஏகாதிபத்தியத்தை புல்லுருவித்தனமானது என்றும் அழுகிவருகிற நிலையில் அதாவது சிதைவுறும் நிலையில் உள்ளது என்றும் லெனின் கூறுகிறார்.

மேலும் இந்த சிதைவு முதலாளித்துவத்தின் விரைவான வளர்ச்சிக்கு இடமில்லாதபடிச் செய்வதாகக் கருதுவது தவறு என்கிறார் லெனின், இந்த வளர்ச்சி ஏற்றத் தாழ்வானதாகி வருகிறது என்றும் கூறியுள்ளார். இதுபோன்றவற்றை லெனினது சொற்களிலேயே பார்ப்பது சரியாக இருக்கும்.

“இந்த சிதைவு போக்கு முதலாளித்துவத்தின் விரைவான வளர்ச்சிக்கு இடமில்லாதபடிச் செய்வதாகக் கருதுவது தவறாகும். இந்தப் போக்கு அப்படி ஒன்றும் செய்யவில்லை.

ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் சிற்சில தொழிற் கிளைகளும், முதலாளித்துவ வர்க்கத்தின் சிற்சில படிவத்தினரும், சிற்சில நாடுகளும் அதிகமாகவோ குறைவாகவோ இத்தகைய போக்குகளில் இப்பொழுது ஒன்றையும் பிறகு இன்னொன்றையுமாய் வெளிப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக முதலாளித்துவம் முன்னிலும் விரைவாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது; ஆனால் இந்த வளர்ச்சி பொதுவாக மேன்மேலும் ஏற்றத் தாழ்வானதாகி வருகிறது என்பது மட்டுமின்றி, மூலதனத்தில் மிகவும் செல்வந்த நாடாக இருப்பனவற்றின் (இங்கிலாந்தில்) சிதைவில் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி குறிப்பிடத்தக்கவாறு வெளிப்பட்டும் வருகிறது.”

ஏகாதிபத்திய உற்பத்தி முறை மேன்மேலும் சமூகமயமாகிறது, அதன் வினியோகம் தனியுடைமை அடிப்படையில் நடைபெறுகிறது. முன்பே பார்த்தது போல ஏகாதிபத்தியம் சிதைவுக் கட்டத்தில் இருக்கிறது. 

இந்தப் புறநிலையைப் புரிந்து கொண்டு அகநிலையான கட்சியும் உழைக்கும் மக்களும் புரட்சியில் இறங்க வேண்டும். அழுகிய மேலோடு, அதாவது சிதைவுறும் மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், சிதைவுறும் நிலையில் ஓரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் ஆனால் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பது தெளிவாகவே விளங்குகின்றன என்கிறார் லெனின்.

அதாவது, ஏகாதிபத்தியத்தின் அதீத வளர்ச்சி முரண்பாட்டையும் சேர்த்து வளர்க்கிறது. இந்த முரண்பாடு ஏகாதிபத்தியத்தின் சிதைவாகக் காட்சித் தருகிறது. இந்தப் புறநிலையைப் புரிந்து கொண்டு அகநிலையான கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களும் புரட்சியில் இறங்க வேண்டும். அப்படி இறங்காமல் போனால் புரட்சியை நடைபெறாமல் போகும், இதன் காரணமாக ஏகாதிபத்தியம் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செல்லலாம் ஆனால் எப்படியும் ஏகாதிபத்தியம் புரட்சியால் தூக்கி எறியப்படும். அதாவது அழுகிவீழ்ந்துவிடும், சிதைக்கப்பட்டுவிடும். இது தானே நிகழாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவத்தின் அடுத்தக் கட்டமான ஏகாதிபத்தியத்தை வரையறை செய்வது பாட்டாளி வர்க்கத்துக்கும் இந்த வர்க்கத்தின் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோஷலிசப் புரட்சியை நோக்கி பயணிப்பதற்கு வழிவகை செய்கிறது.

இத்துடன் “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலைப் பற்றிய வகுப்பு முடிவடைகிறது. இன்றைய வகுப்பில் “போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்” என்கிற நூலையும் சேர்த்துப் பார்ப்போம். கால வரிசையில் இந்த நூல்   “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்கிற நூலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. புரிதலுக்காக மாற்றி வகுப்பு எடுக்கப்படுகிறது.

“போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்” என்கிற நூலை 1914-ஆம் ஆண்டு லெனின் எழுதினார்.

நூலாகப் படிக்கிற இது ஒர் அறிக்கையாகும். ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய போது, போர் தொடர்பான போல்ஷிவிக் கட்சியின் ஆவணம் இது. 

ஏகாதிபத்தியத்துக்கும் போருக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றி லெனின் இதில் எழுதியுள்ளார்.

இந்த ஆவணத்தை, அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக தயார் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது என்று லெனின் தொடங்குகிறார். புதியதாகத் தோன்றிய ஏகாதிபத்தியம் சந்தையை விரிவுபடுத்துவதற்காகத் தோன்றியது இந்தப் போர். 

இந்தப் போரின் உள்ளடக்கத்தை லெனின் அடுத்துக் கூறுகிறார்.

நிலப்பரப்பைக் கைப்பற்றுதல், பிற நாடுகளை அடிபணியச் செய்தல், போட்டியிடும் நாடுகளை அழித்தல், அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்தல், ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் உள்ள உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புதல், அவர்களின் முன்னணி இயக்கத்தை வலுவிழக்கச் செய்தல் என்பதே இந்தப் போரின் உண்மையான உள்ளடக்கம் என்கிறார் லெனின்.

போராடும் நாடுகளின் ஒரு பிரிவுக்கு ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் தலைமைத் தாங்கியது. போருக்கான உண்மைக் காரணத்தை மறைந்து அது வேறு காரணத்தை முன்வைக்கிறது.

இப்போர் தாயகத்தையும் சுதந்திரத்தையும் நாகரிகத்தையும் பாதுகாப்பதற்கும், ஜாராட்சியால் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கும், பிற்போக்கான ஜாரிசத்தை அழிப்பதற்கும் போர் நடைபெறுவதாக கூறியது. இந்தக் கூற்றின் மூலம் ஜெர்மன் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தையும் பாடுபடும் மக்களையும் ஏமாற்றியது.

போரிடும் நாடுகளின் மற்றொரு பிரிவுக்கு பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கியது. போரில் ஈடுபடுவதற்கான காரணத்தை, இந்தத் தலைமையும் உண்மைக்கு மாறாகக் கூறியது.

தமது நாடுகளைப் பாதுகாப்பதற்கும் சுதந்திரத்திற்கும் நாகரிகத்துக்காகவும், ஜெர்மன் நாட்டின் ராணுவவாதத்தையும் அதன் கொடுங்கோன்மையையும் எதிர்த்துப் போராடுவதற்கும் இந்தப் போர் நடைபெறுவதாக கூறியது. உண்மையில் இந்தக் கூற்று தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் ஏமாற்றுவதற்கே ஆகும்.

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் தேசப் பக்தி என்கிறப் போர்வையில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டது. இங்கே “தேசப் பக்தி” என்பது சொந்த நாட்டிலும் அந்நிய நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்த வேண்டிய உள்நாட்டுப் போரில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை திசை திருப்புவதே உண்மையான நோக்கமாகும்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட வைப்பதே, முதலாளித்துவ வர்க்கத்தின் உள்நோக்கமாக இருக்கிறது. இந்த உள்நோக்கத்தை உணர்ந்து தொழிலாளி வர்க்கம், அனைத்து நாடுகளில் உள்ள கட்டற்ற தேசியவெறியை எதிர்த்துப் பாதுகாத்துக் கொள்வதைத் தமது மிக அவசரமானக் கடமையாகக் கருத வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் இந்தக் கடமையை கைவிடுவார்களானால், அவர்கள் தமது சோஷலிச விருப்பத்தை கைவிடுவது ஒரு புறமிருக்க, சுதந்திரம் ஜனநாயகத்திற்கான விருப்பங்களையும் துறந்தவர்களாவார்கள் என்று லெனின் எச்சரிக்கிறார்.

இந்த எச்சரிக்கையை லெனின் கோபத்தோடுதான் கூறியுள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால், முன்னணி ஐரோப்பிய நாடுகளின் சோஷலிஸ்டுக் கட்சிகள் இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டன. இதனை லெனின் ஏமாற்றத்துடன் பதிவு செய்கிறேன் என்று எழுதியுள்ளார்.

குறிப்பாக ஜெர்மானிய கட்சித் தலைவர்களின் நடத்தையானது, சோஷலிசக் குறிக்கோளுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் என்கிறார் லெனின். இரண்டாம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையானத் தலைவர்கள் சோஷலிசத்துக்கு துரோகம் இழைத்துவிட்டு, உள்நாட்டு தேசியவெறிக்கு இரையாகிப் போனார்கள்.

இந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் கட்சிகள், அரசாங்கத்தின் போர் நடவடிக்கையை எதிர்க்காமல், தமது நிலையினை ஏகாதிபத்திய அரசுகளின் நிலையோடு ஒன்றுபடுத்தியது. அதாவது இணைத்துக் கொண்டது. சோஷலிசக் கண்ணோட்டத்துக்கு மாறாக ஏகாதிபத்தியக் கருத்தை தொழிலாளர் கட்சிகள் ஏற்றுக் கொண்டது.

சொந்த நாடுகளின் முதலாளி வர்க்கத்தின் தேசியவெறி முழக்கத்தை வலியுறுத்தியும் போரை நியாயப்படுத்தியும் போரை ஆதரித்து, போரிடும் நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் சேர்ந்து கொண்டு, அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்தார்கள். இந்த நிலைக்கு ஜெர்மன் தலைவர்களே பொருப்பு என்கிறார் லெனின். இவர்கள் தான் இரண்டாம் அகிலத்தில் வலிமை வாய்ந்த செல்வாக்கு பெற்றத் தலைவர்கள்.

அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அது இந்த தேசியவெறி முகாமில் சேர்ந்திருக்கக் கூடாது என்கிறார் லெனின்.

இந்தக் கருததுக்களைப் படிக்கும் போது லெனினது கோபம் தென்படுகிறது. இந்தத் துரோகத்தை லெனின் வேதனையுடன் தெரிவித்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது.

ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சோஷலிஸ்ட் கடமையை புரிந்து ஏற்றுக் கொண்டு செயல்பட்டது.

ருஷ்யாவில் சட்ட வழியிலான பத்திரிகைகள் ஜார் அரசால் அடக்கப்பட்டன, தொழிலாளி வர்க்க சங்கங்கள் கலைக்கப்பட்டன, பெரும்பான்மையான கட்சித் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பல தியாகங்களைச் சந்தித்த ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தமது சோஷலிசக் கடமையை தியாகத்துடன் அன்று செய்து காட்டியது.

இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும், அதன் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி சந்தர்ப்பவாதத்தின் வீழ்ச்சியாகும் என்கிறார் லெனின்.

லெனின் கோபத்துடன் கூறியதை அவர் சொற்களிலேயே பார்ப்போம். இது ஒரு பெரிய மேற்கோள்தான், இதைப் படித்துப் பார்த்தால்தான் அகிலத்தின் வீழ்ச்சியைப் பற்றியும் அதன் துரோகத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

“சோஷலிசப் புரட்சியினை நிராகரித்தும் அதனிடத்தில் முதலாளித்துவ சீர்திருத்தவாதத்தை மாற்றாக வைத்தும்:- சில சமயங்களில் தவிர்க்க முடியாத வகையில் உள்நாட்டுப் போராக மாறத்தக்க வர்க்கப் போராட்டத்தை நிராகரித்தும், வர்க்க ஒத்துழைப்பைப் பிரசாரம் செய்தும்;- 

தேசபக்தி மற்றும் தாயகத்தின் பாதுகாப்பு என்ற வேடத்தில் முதலாளித்துவ தேசியவெறியைப் பரப்புரை செய்தும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையால் நீண்டகாலமுன்பே முன்வைக்கப்பட்டதான உழைப்பாளிகளுக்கு தாயகம் என்பதில்லை என்ற சோஷலிசத்தின் அடிப்படை மெய்மையை நிராகரித்தும்;- 

அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதிரான அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போரின் அவசியத்தை ஏற்பதற்குப் பதிலாக ஓர் உணர்ச்சிப் பகட்டான அற்பவாதக் கருத்தோட்டத்தின் அளவுக்கு இராணுவவாதத்தத்தை  எதிர்த்த போராட்டத்தைக் கட்டுப்படுத்தியும்;- 

முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்தையும், முதலாளித்துவ சட்டவழித்தன்மையையும் அவசியமாகப் பயன்படுத்துவதை ஒரு குருட்டு வழிபாடாக்கியும், நெருக்கடிகள் நிறைந்த காலங்களில் சட்டவழியற்ற வடிவங்களிலான நிறுவனமும் பரப்புரையும் அவசர அவசியம் என்பதை மறந்தும்... 

இவ்வாறெல்லாம் இந்த வீழ்ச்சிக்கு சந்தர்ப்பவாதிகள் அடிப்படையான தயாரிப்புகளை நீண்ட காலமாக செய்து வந்தார்கள்.”

இதில் லெனின் சந்தர்ப்பவாதிகளின் செயல்பாட்டை முழுமையாக அம்பலப்படுத்தி உள்ளார். இங்கு லெனின் கூறுகிற ஒன்றை மிகவும் கவனமாக கொள்ள வேண்டும்.

நெருக்கடியான நேரங்களில் சட்டவழியிலான போராட்டம் மட்டும் போதுமானதாக இருக்காது, சட்டவழியற்ற நிறுவனமும், அதற்கானப் பரப்புரையும் அப்போது அவசர அவசியம் என்பதை மறப்பது சந்தர்ப்பவாதம் என்கிறார் லெனின். 

கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிலாளர்களையும் ஒடுக்குவதற்கு சட்டவழியிலான முறையில் மட்டுமல்லாது சட்டவழியற்ற முறையையும் சுரண்டலாளர்களும் அரசும் பயன்படுத்துகிறது என்பதை நாம் மறந்திடக்கூடாது.

நெருக்கடியான நேரத்தில் நாடாளுமன்றம் போன்ற முதலாளித்துவ சட்டவழியிலான வடிவங்கள் போதாமையாகிவிடும், அப்போது சட்டவழியற்ற வடிவத்தை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தாக வேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல், ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்கிற இரண்டாம் அகிலத்தின் சோஷலிச முழக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. 



அகிலம் காட்டிய சோஷலிச வழியை, ருஷ்ய போல்ஷிவிக் தொழிலாளர் கட்சி மட்டுமே பின்பற்றியது.

அன்றைய ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றும் முன்னேறிய நாடுகளில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று லெனின் இந்த நூலில் எழுதியுள்ளார். அதை அவர் எழுத்துகளிலேயே பார்ப்போம்.

“ருஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், அதன் முதலாளித்துவப் புரட்சியை இன்னும் முழுமை செய்யாததாலும், அந்த நாட்டிலுள்ள சமூக-ஜனநாயகவாதிகள் முன், நிலையுறுதியான ஜனநாயக சீர்திருத்தத்திற்கான பின்வரும் மூன்று அடிப்படையான நிலைமைகளைச் சாதனையாக்கும் பணி உள்ளது: 

ஒரு ஜனநாயகக் குடியரசு (அனைத்து தேசங்களுக்கும் முழுமையான சமத்துவம் மற்றும் சுயநிர் ணய உரிமையுடன்), நிலச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், எட்டு மணி நேர வேலை நாள். 

ஆனால் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் போர், சோஷலிஸ்டுப் புரட்சி என்ற முழக்கத்தை நாள் நிகழ்ச்சி நிரலில் வைத்துவிட்டது.”

இந்தக் கட்டுரையை 1914-ஆம் ஆண்டு எழுதினார், 1914-ஆம் ஆண்டுவரை லெனின் ருஷ்யாவில் நடத்த வேண்டியது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்றே கூறியுள்ளார். ஆனால் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் ஆய்வுரையில் ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று தனது கருத்தை மாற்றியுள்ளார். அதற்கான காரணத்தை நாம் அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

மார்க்சிய-லெனினிய வழியில் செல்வோம் உழைப்பாளர்களுக்கு விடுதலையைப் பெற்றுதருவோம் என்றுகூறி, இன்றைய வகுப்பை நிறைவு செய்கிறேன்.

அ.கா.ஈஸ்வரன்

9884092972

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

லெனின் தேர்வு நூல்கள் (12 தொகுதிகள்) - சிறப்பு விலை ரூ.2500 ல் பெற தொடர்பு கொள்ளவும்

95437 38415