வர்க்க சமரசவாத கண்ணோட்ட தலைமையால் பாசிசத்தை வீழ்த்த முடியாது
துரை. சண்முகம்

நான் எனது இளமைப் பருவத்தில் மார்க்சிய லெனினிய அமைப்பில் (ம.க.இ.க.) இணைந்த போது அம்பேத்கர், பெரியார் போன்றவர்களை அரசியல் ரீதியாக சீர்திருத்தவாதிகள் அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல! அவர்களது ஆளும் வர்க்க சார்பை அம்பலப்படுத்தி அவர்கள் கருத்துக்களுடன் இணைந்து புரட்சி செய்ய முடியாது! புரட்சிகர நோக்கில் அவர்களது அரசியல் பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல் திட்டத்திற்கு எதிரானது! என்று அமைப்பால் அப்போது போதிக்கப்பட்டது.
மாணவப் பருவத்திலிருந்து பெரியார் அம்பேத்கர் கருத்துக்களின் தாக்கத்தில் சமூகத்தை பார்க்க பழகிய நான் பல கேள்விகளை கேட்டபோது,
"தத்துவ ரீதியாக அவைகள் ஆளும் அங்கத்தின் ஒரு சார்பானது என்பதால் அவைகளை மார்சிய லெனினிய அரசியலுக்கு இணை வைத்து தலைமை தாங்கி பேச முடியாது!" என்று தத்துவ பின்புலத்தில் தோழர்கள் விளக்கினர். புதிய கண்ணோட்டத்திற்கு வர முடிந்தது.
அது மட்டுமல்ல பெரியார் அம்பேத்கர் அரசியல் அதிகார கருத்துகளை பிழைப்புவாதமாக பயன்படுத்தும் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் தி.க. தலித்தியம் பேசி
பாட்டாளி வர்க்க அரசியலுக்கு எதிராக இயங்கிய பலரையும் அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் பார்வை தரும் கட்டுரைகள் வந்தன.
திராவிட தலித்திய காரியவாத அரசியலில் கவர்ந்து இழுக்கப்பட்ட பல்வேறு பிரிவு மக்கள் இளைஞர்களுக்கு வர்க்க அரசியல் தெளிவூட்டியது அமைப்பின் செயல்பாடுகள். பெரியார் அம்பேத்கரை ஆதரிக்கும் பலரும் கூட ஜனநாயக ரீதியாக முன்வைக்கும் நியாயமான கருத்துக்களை பரிசீலித்து அமைப்புகளை ஆதரித்தனர். வர்க்க அரசியலால் இளைஞர்கள் வென்று எடுக்கப்பட்டனர்.
இந்துத்துவ பாசிச எதிர்ப்பு எனும் செயல் தந்திரத்திற்காக மீண்டும் பெரியார் அம்பேத்கரை தேவையான அளவு இணைத்துக் கொண்டு இயக்கம் எடுப்பது நடந்தது.
இதன் தொடர்ச்சி தத்துவ ரீதியாக அரசியல் சித்தாந்த ரீதியாக வர்க்க அரசியலை பார்க்கத் தவறியதன் விளைவு இன்று முழுக்க முழுக்க அம்பேத்கர் பெரியார் பஜனை கோஷ்ட்டிகளாக மார்சிய லெனினிய இயக்கங்களை சீரழித்துள்ளது ஆளும் வர்கத்தின் செயல் தந்திரம்.
அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி நாடெங்கும் மேட்டுக்குடி அறிவு ஜீவிகள் ஆளும் வர்க்க விளிம்பு நிலை தத்துவ குழாம்கள் "அம்பேத்கரியம்" என்று முன்வைத்த போது அதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பல கட்டுரைகளை எழுதியது. அதனால் அமைப்பின் தோழர்கள் பல இடங்களில் அவதூறுக்கும் தாக்குதலுக்கும் கூட ஆளானார்கள்.
கீழைக்காற்றில் இருந்த போது பலரும் நேரடியாக வந்து வாதம் என்ற பெயரில் கொச்சையாக திட்டுவது, தனி நபராக குடும்பத்தை திட்டுவது என்ன ஆகுற பாரு ? என்று மறைமுகமாக மிரட்டி செல்வது!
அனைத்தும் நடந்தது. தோழர்கள் மார்சிய லெனினிய அரசியல் ஆளுமையுடன் எதிர்கொண்டு பலரையும் அமைப்புக்கு ஈர்த்தார்கள்.
அனுபவத்தில் பார்க்கிறேன்,
பாஜக பாசிச எதிர்ப்பு எனும் பெயரில் திமுகவை ஆதரிப்பது என்று போய் இந்த நான்கு ஆண்டுகளில் மார்க்சிய லெனிய கண்ணோட்டமும் அமைப்பும் வளர்ந்து பயன் பெற்றிருக்கிறதா? இல்லை திராவிட புல்லுருவி கண்ணோட்டம் வளர்ந்திருக்கிறதா? என்று பார்த்தால்! எதிரிதான் புரட்சிகர ஆற்றல்களை பயன்படுத்தி சீரழித்து இருக்கிறான்.
எவ்வளவு கசந்தாலும் இதுதான் இன்றைய தத்துவ அரசியல் செயல் களத்தில் பெறப்படும் உண்மை.
எனவே அம்பேத்கர் பெரியார் போன்றவர்களை அவர்களுடைய வரலாற்று அரசியல் பாத்திரத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளவும், அவர்களின் அனுபவங்களில் இருந்து வர்க்க ஒடுக்கு முறை அரசை எதிர்க்கின்ற போராட்டத்தோடு இணைக்கப்படாத இந்துத்துவ எதிர்ப்பு வெற்றி பெற முடியாது
என்பதையும் இன்றைய இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும். அது ஒன்றிய அரசு மட்டுமல்ல , அதன் வர்க்க ஒடுக்குமுறை அரசியலுக்கு ஒன்றிப்போகும் அரசும் கூட என்பதை தெளிவாக அரசு பற்றிய புரட்சிகர கண்ணோட்டத்தை இளைஞர்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அம்பேத்கர் பெரியார் முதுகுக்கு பின்னால் போய் பாசிசத்தை வென்று விடலாம்! என்பது இயலாது. ஏனென்றால் பாசிச எதிர்ப்புக்கான அரசியல் சித்தாந்த கண்ணோட்டம் அவர்களிடம் இல்லை. அவர்கள் முன்வைக்கும் ஜனநாயக கண்ணோட்டம் என்பதே ஆளும் வர்க்க கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.
தொடக்கத்திலிருந்து முற்போக்குப் பாத்திரம் ஆற்ற அருகதை அற்ற இந்திய முதலாளித்துவத்தின் கருத்துருக்களால் உருட்டி திரட்டப்பட்ட அழுக்கு பிள்ளையாரான இந்த அரசியல் சட்ட அமைப்பு முறையை அசைக்காமல் இங்கே ஜனநாயகம் என்பதே இனி சாத்தியம் இல்லை.
நடைமுறையில் உணர்ந்த சில தருணங்களில் பெரியார் அரசியல் சட்டத்தின் பிரிவை கொளுத்துவதும், அம்பேத்கர் இதைக் கொளுத்தும் முதல் ஆளாக நானே நிற்பேன்! என்று ஆத்திரப்படுவதும் குறிப்பிட்ட குரலில் எழுந்து மாற்று வழி காணாமல் அடங்கியது.
அரசு பாசிசமயமாகி வரும் நவீன மூலதன உலகமய காலகட்டத்தில் இந்த அனுபவங்களில் இருந்து இதற்கும் மேலான புரட்சிகர ஜனநாயக அரசியல் சித்தாந்த கண்ணோட்டம்தான் பாசிசத்தை வெல்ல முடியும். அதற்கான சமூக ஆற்றல்களை திரட்டவும் முடியும்.
"நீங்க பத்து பேர் இருந்து புரட்சி செய்வீங்களா?" என்று கம்யூனிஸ்டுகள் மீது ஏளனமும் ஆத்திரமும் கொண்டு பாயும் அரசியல் கட்சிகளே! நீங்கள் அத்தனை பேரும் நின்று தேர்தலில் வென்று ஏன் புரட்சி செய்ய முடியவில்லை? என்பதற்கான பதிலைத்தான் நாம் நேர்மையாக ஆராய வேண்டி இருக்கிறது.
களைகள் பெருத்து விளைச்சலுக்கு ஆகப்போவது என்ன? மக்களுக்கு எதிரான பெரிய கட்சிகள் எனும் உங்களது அளவு மாற்றம் எந்தப் புரட்சிகர பண்பு மாற்றத்தையும் தரப்போவதில்லை.
எங்கள் கட்சி பெரியது! லட்சக்கணக்கில் தொண்டர்கள் என்று சொல்லும் நீங்கள்தான்,
அம்பேத்கர் பெரியார் என்று ஆரம்பித்து குறைந்தபட்சம் அவர்களது அனுபவங்களில் இருந்து பாடம் கற்று முன்னேறிய அரசியலுக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அரசியல் சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு! அதற்கே ஆபத்து பாருங்கள்! என்று ஆளும் வர்க்கத்தின் அந்தக் கைத்தடி நம்மை காப்பாற்றும் என பிரச்சாரம் செய்கிறீர்கள்.
உழைக்கும் மக்களை ஒடுக்கும் குறிப்பான அரசியல் தருணங்களில் செந்தூர் போன்ற தேசவெறியில் நாட்டு நலன்களை மூழ்கடிக்கும் மோடியிடம் உங்களுக்கு துணையாக நிற்கிறோம்! என்று
கொடி பிடித்து கைகோர்க்கும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவாக இழிந்து நிற்கிறீர்கள்!
உங்களால், சமரசவாத கண்ணோட்டத்தால் எப்படி பாசிசத்தை வெல்ல முடியும்?
ஜனநாயகப்பூர்வமாக பாசிசத்திற்கு எதிரான ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைக்க விரும்பாத ஆளும் வர்க்கத்தின் அடியார்களா! இந்தியாவிற்கு ஜனநாயகத்தை வழங்கப் போகிறார்கள்?
பாசிச எதிர்ப்பு என்பதற்கும் அதற்கான ஆற்றல்களை ஐக்கியப் படுத்துவதற்கும் மார்சிய லெனினிய அடிப்படையிலான அரசியல் சித்தாந்த கண்ணோட்டம்தான் முதன்மைத் தேவை.
இத்தகைய அரசியலுக்கு தலைமை தாங்கும் ஆற்றலும் அருகதையும் மார்க்சிய லெனினிய அரசியல் சித்தாந்தத்திற்கு மட்டுமே உண்டு.
நீங்கள் கடுப்பாக கடவது ஆனாலும் இதுதான் எடுப்பான உண்மை!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/15bL3Cbk7K/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு