போட்டித் தேர்வுகள்: 99% இந்திய இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள்?

மொழிபெயர்ப்பு கட்டுரைகள்

போட்டித் தேர்வுகள்: 99% இந்திய இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள்?

1
99% இந்திய இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள்?

போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவு என்ற பிரச்சனையை மீண்டும் ஒருமுறை கையாளுவதற்கு இளைஞர்களின் போராட்டங்கள் இந்திய அரசாங்கத்தை (GOI) தூண்டியுள்ளன. இதற்காக அது இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலாவதாக, அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், "அதிக வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டுவரவும்", பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டத்தைத் திருத்தியுள்ளது. இந்தத் திருத்தம் தேர்வு மோசடி வழக்குகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கான வழியை அறிமுகப்படுத்துகிறது.

இரண்டாவதாக, நாட்டின் தேர்வு முறையை "கசிவு இல்லாததாகவும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும்" மாற்றுவதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு உயர்மட்ட பணிக்குழுவை நியமித்துள்ளது. அந்தப் பணிக்குழு உறுப்பினர்களின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, அது தனது பணியில் வெற்றி பெறும் என்று நம்பத் தோன்றுகிறது. ஆனால் இந்த இரண்டு நடவடிக்கைகளுமே, அடிப்படையிலேயே முக்கியமான சிக்கலைத் தவிர்த்துவிட்டுச் செயல்படுகின்றன.

அந்தப் புள்ளி என்ன? விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் வேலை வாய்ப்புகள் குறைவதும், யாரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் யாரை விடுப்பது என்பதில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியையும் அதன் சமூக விளைவுகளையும் உருவாக்கியுள்ளன. இதற்கு மேலாக, நாம் குறைந்த நம்பிக்கையுள்ள ஒரு சமூகமாக மாறிவிட்டோம், அங்கு ஒவ்வொரு தோல்வியும் அநீதியின் விளைவாகவே பார்க்கப்படுகிறது.

2023-24 ஆம் ஆண்டில், 22 மத்திய சிவில் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் உள்ள 7,999 இடங்களுக்கு மொத்தம் 1,508,430 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர் என்பதைக் கவனியுங்கள். இது வெறும் 0.5% வெற்றி விகிதமாகும், இது மீதமுள்ள 99.5% விண்ணப்பதாரர்களை தகுதியற்றவர்களாக மாற்றுகிறது. இதன் சாராம்சம் என்னவென்றால், நமது படித்த இளைஞர்களில் பெரும்பாலோருக்கு அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வேலைகள் கிடைக்காது.

1854-ல், மெக்காலே தான் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையிலான நியமன முறையை ஒழித்துவிட்டு, போட்டித் தேர்வுகள் மூலம் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு சிவில் சர்வீசஸ் கமிஷன் (யுபிஎஸ்சியின் முன்னோடி) அமைக்கப்பட்டது, அடுத்த ஆண்டு அதன் முதல் தேர்வு நடத்தப்பட்டது.

1864-ல், சத்யேந்திரநாத் தாகூர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியரானார். இருப்பினும், மெக்காலே ஒரு வகையான பரிந்துரை முறையை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், மற்ற வடிவங்கள் தப்பிப்பிழைத்தன, அவை இன்றும் உறுதியாக நீடிக்கின்றன.

லண்டனுக்குச் சென்று (1922 வரை லண்டன் மட்டுமே தேர்வு மையமாக இருந்தது) தேர்வில் வெற்றி பெற ஐரோப்பிய செம்மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கு இந்தியர்களுக்கு 'சுதந்திரம்' இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் 1980-களின் தொடக்கம் வரையிலும் இந்தியர்கள் ஆங்கில வழியில் மட்டுமே தேர்வு எழுத 'சுதந்திரம்' பெற்றிருந்தனர். இக்காலக்கட்டத்தில் குதிரையேற்ற விளையாட்டு (equestrian sports) பற்றிய வினா ஒன்று கேட்கப்பட்டதால் ஒரு சிறிய சர்ச்சை வெடித்தது!

எந்தவொரு வடிகட்டுதல் முறையும் மதிப்பீடுகள் அற்றது (value-neutral) அல்ல. நமது போட்டித் தேர்வுகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் மாற்ற எடுக்கப்படும் தற்போதைய முயற்சிகள் இயந்திரத்தனமான சிக்கலை மட்டுமே சரிசெய்யும், மாறாகக் கட்டமைப்பு ரீதியான சிக்கலை அல்ல.

சொல்லப்போனால், ஆயிரக்கணக்கான வேலைகளுக்காகப் போட்டியிடும் மில்லியன் கணக்கான விண்ணப்பதாரர்கள் என்பது 99 சதவீதத்திற்கும் அதிகமானோரின் நிராகரிப்பையே குறிக்கும். ஒருவரின் வெற்றிக்கும் மற்ற மில்லியன் கணக்கானவர்களின் தோல்விக்கும் இடையிலான வேறுபாடு குதிரையேற்ற விளையாட்டு பற்றிய அந்த ஒரு மதிப்பெண்ணாகக் கூட இருக்கலாம்.

அப்படியானால், தேர்வு செயல்முறை என்பது வெறும் பரிந்துரை முறையை நிலைநிறுத்துவதற்கான ஒரு வடிகட்டுதல் முறைதானே? குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புற விண்ணப்பதாரர்கள் மீது இது கூடுதல் சுமையைச் சுமத்துவதையும் கவனியுங்கள்; அவர்கள் இதற்காக ஒரு நகரத்திற்குச் சென்று பயிற்சி பெற்று அதற்கான செலவுகளையும் ஏற்க வேண்டியுள்ளது.

போட்டித் தேர்வுகளில் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தரவரிசைகளுக்கு நாம் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு திறமையான அதிகாரியாகத் தயாராவதில் இவை இரண்டும் உண்மையில் முக்கியமில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒரு ராக்கெட் விஞ்ஞானியும் கலைப் பட்டதாரியும் வேலையைப் பொறுத்தவரை சமமான நிலையிலேயே உள்ளனர். அதனால்தான் பணிக்கு முந்தைய விரிவான பயிற்சியும், பணி முழுவதும் தொடர்ச்சியான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

நமது சிக்கலான தேர்வு முறையின் மூலம் நாம் சாதிப்பது என்ன? 'தெளிவற்ற நிலையில்தான் தீமை வளரும்' என்ற ஜி.கே. செஸ்டர்டனின் கூற்றை மெய்ப்பிப்பதைத் தவிர வேறென்ன செய்கிறோம்? எல்லாவற்றிற்கும் மேலாக, நமது இளைஞர்களுக்கு கண்ணியமான வேலைகளை வழங்கத் தவறுவது மட்டுமின்றி, அவர்களில் பெரும்பாலோரைத் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்துவது மனசாட்சியற்ற செயல் அல்லவா?

தேர்வு முறை என்பது தகுதியைப் பொறுத்ததா? இல்லை. இது மில்லியன் கணக்கானவர்களைத் தோல்வியுற்றவர்கள் என்று வடிகட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியது. அப்படியானால், கத்தியை ஏன் தேனில் நனைக்கக்கூடாது? நமது இரண்டு கட்டத் தேர்வு முறை என்பது இதுதான்; இதில் முதற்கட்ட வடிகட்டுதல் கீழ்மட்டத்தில் உள்ள சுமார் 90% பேரை நீக்குகிறது, பின்னர் இரண்டாம் கட்டம் எஞ்சியிருப்பவர்களிடமிருந்து அதிர்ஷ்டசாலிகளைப் பிரிக்கிறது.

ஹார்வர்ட் தத்துவஞானி மைக்கேல் ஜே. சாண்டெல், தனது தி டைரனி ஆஃப் மெரிட்’ (The Tyranny of Merit) என்ற நூலில், யேல் பல்கலைக்கழக சேர்க்கைக் குழு உறுப்பினர் எர்னஸ்ட் எஃப். தாம்சனின் இந்த ஆலோசனையை ஆதரித்தார்: "ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை எடுத்து படிக்கட்டுகளில் கீழே வீசிவிட்டு, அவற்றில் எதாவதொரு ஆயிரம் விண்ணப்பங்களை எடுத்தால் கூட, ஒரு கமிட்டி கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை விடச் சிறந்த அல்லது சமமான ஒரு மாணவர் குழுவை நீங்கள் உருவாக்க முடியும் என்ற சங்கடமான உணர்வு சில நேரங்களில் உங்களுக்கு ஏற்படலாம்."

மேலே குறிப்பிட்ட அந்த 22 மத்தியப் பணிகளுக்கு மட்டுமல்ல, பிற போட்டித் தேர்வுகளுக்கும் இதையே சொல்லலாம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் ஒரு குலுக்கல் முறையின் மூலமே நிரப்பலாம் என்பதே இதன் பொருள்.

தொழில்நுட்பம் மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த வேலைகள் மற்றும் படிப்புகளைக் குலுக்கல் முறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமா? உண்மையான தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை. நேர்காணல் செயல்முறையை உள்ளடக்கிய போட்டித் தேர்வுகளுக்குப் பதிலாக (இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அதிகம்), குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுப்பது அதிகத் திறமையாகவும், வேகமாகவும் மற்றும் நியாயமானதாகவும் இருக்கும்.

நேரடியான பாதைகளையும் எளிமையான தீர்வுகளையும் பார்த்து ஏளனம் செய்யும் நமது போக்கே இதற்குத் தடையாக உள்ளது. ஒரு சிலரால் மட்டுமே கையாளக்கூடிய சிக்கலான செயல்முறைகளின் மூலமே அதிகாரமும் சலுகைகளும் செயல்படுகின்றன.

முடிவாக, இரண்டு விஷயங்கள் நமது கவனத்திற்கு உரியவை.

ஒன்று, வினாத்தாள் கசிவு என்பது கல்விச் செயல்பாட்டின் வணிகமயமாக்கலால் விளைவதாகும். பயிற்சி மையங்கள் தங்கள் மாணவர்களுக்கு 100% வெற்றி என்ற வாக்குறுதிகளுடன் போட்டியிடும் வரை, ஏமாற்றுவதற்கான தூண்டுதல் இருக்கவே செய்யும். ஒரு தொழில்நுட்பச் சிக்கல் சரிசெய்யப்படும் போதெல்லாம், சட்டத்தை இறுக்கமாக்கவும் ஒரு குழுவை அமைக்கவும் வேண்டிய அதே பழைய இடத்திற்கே நாம் திரும்புவோம். ஒரு குலுக்கல் முறை இந்த வணிகமயமாக்கலை முற்றிலுமாக ஒழிக்காவிட்டாலும் பெருமளவு குறைக்கும்.

இரண்டு, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் முறையை நாளை முதலே இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. எங்காவது ஒரு பள்ளியின் சேர்க்கையில் ஒரு முன்னோடித் திட்டம் (Pilot project) முதல் படியாக இருக்கலாம். ஆனால் தகுதி என்ற பீடத்தின் முன் நாம் கண்மூடித்தனமாக விழுந்து வணங்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, தகுதி என்றால் என்ன? அது செவ்வாய் கிரகத்தில் முளைத்த ஒரு களைச் செடி போன்றது.

டி. ஷியாம் பாபு, கட்டுரையாளர் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (Centre for Policy Research) மூத்த ஆய்வாளர் ஆவார். இதில் உள்ளவை அவரது தனிப்பட்ட கருத்துக்கள்.

Times of India

=====================================================

2
"நீட் (NEET) தேர்வு அடிப்படையில் குறைபாடுடையது"

நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வில் உள்ள பிரச்சனை என்பது வெறும் வினாத்தாள் கசிவு சார்ந்தது மட்டுமல்ல. அதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால், அதன் கட்டமைப்பு மிகவும் செப்பனிடப்படாத (crude) நிலையில் இருப்பதுதான். அதன் மீது சுமத்தப்பட்டுள்ள உன்னதமான இலக்குக்கும், அதன் உள்ளே இருக்கும் பழமையான தன்மைக்கும் சற்றும் பொருத்தமில்லை. லட்சக்கணக்கான மாணவர்களில், மருத்துவப் படிப்பிற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதே நீட் தேர்வின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

விவாதிக்கத்தக்க சவாலான இந்தப் பணியைச் செய்யும் விதம் நம்பமுடியாத அளவிற்கு முதிர்ச்சியற்றதாக உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலிருந்து எடுக்கப்பட்ட 180 கேள்விகளைப் பட்டியலிடுவதை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கேள்விகள் அனைத்தும் ஒரே வடிவத்தில் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு சாத்தியமான விடைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று மட்டுமே சரியானது. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், அதை ஒரு நொடியில் கண்டறிந்து, அதைக் குறித்துவிட்டு அடுத்த பலவுள் தெரிவு வினாவுக்கு (MCQ) நகர்வீர்கள் என்பதே இதன் அடிப்படை அனுமானம். இந்த வடிவம் 'பலவுள் தெரிவு வினாமுறை' என்று அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த வடிவம் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது?

இந்த வினா முறை இந்தியாவை ஏன் ஆக்கிரமித்துள்ளது என்பது பதிலளிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. வங்கித் துறை முதல் மருத்துவத் துறை வரை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்று அனைத்துத் துறைகளும் பலவுள் தெரிவு வினா (MCQ) முறையையே நம்பியுள்ளன. இது ஏன் இவ்வளவு விருப்பமானதாக இருக்கிறது?

முதலாவதாக, இந்த வினாக்கள் தொழில்முறை ரீதியாகப் பெரிய அளவில் தேர்வு நடத்துவதற்கும், தயார் செய்வதற்கும் எளிதாக உள்ளன. பயிற்சித் தொழில் (Coaching industry) இப்போது கல்வியை விட ஒரு பெரிய நிதி நிறுவனமாக உருவெடுத்துள்ளது, மேலும் இந்தத் துறைக்கு இந்த வினா முறை மிகவும் பிடிக்கும். இயந்திரமயமாக்கப்பட்ட மதிப்பீட்டிற்கும் இந்த முறை வசதியாக உள்ளது. இத்தகைய மதிப்பீடு ஒருவித 'புறநிலைத் தன்மையை' (objectivity) வெளிப்படுத்துகிறது. அடிக்கடி நிகழும் வினாத்தாள் கசிவுகளைப் பற்றிப் கவலைப்படாமல், பலரைப் பாதிப்பது 'பார்பட்சம்' தான். எனவே, ஒரு முறை அந்தப் பார்பட்சத்தை நீக்கிவிட்டால், அதன் புகழைக் குறைப்பது கடினம்.

அங்கீகாரம் மற்றும் செல்லுபடித்தன்மை

அடிப்பப்படையில், பலவுள் தெரிவு வினா அடிப்படையிலான தேர்வுகள் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நீக்க அனுமதிக்கின்றன. இந்த நீக்கும் செயல்முறை இயந்திரத்தனமானது மற்றும் பாரபட்சமற்றது. இதனால்தான், இந்த செயல்முறை முற்றிலும் செல்லுபடியாகக் கூடியதாக (valid) இல்லாவிட்டாலும் கூட, நியாயமானதாக (legitimate) கருதப்படுகிறது.

அங்கீகாரம் (Legitimacy) மற்றும் செல்லுபடித்தன்மை (Validity) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு முக்கியமானது. அங்கீகாரம் என்பது பொதுமக்களின் பார்வை மற்றும் சட்டப்பூர்வமான தன்மையைக் குறிக்கிறது. மறுபுறம், செல்லுபடித்தன்மை என்பது தேர்வு முறையின் நோக்கத்திற்கும் அதன் செயல்பாட்டிற்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்பைக் குறிக்கிறது. நீட் தேர்வின் சூழலில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் பலவுள் தெரிவு வினாக்களை அதிவேகமாகத் தீர்க்கும் திறன் கொண்ட ஒரு மாணவர், ஒரு சிறந்த மருத்துவர் ஆவதற்கான திறனையும் மனப்பாங்கையும் கொண்டிருப்பார் என்று யாரும் வாதிட முடியாது.

நீட் வினாத்தாள் கசிவு

நீட் தேர்வு செய்வது என்னவென்றால், விண்ணப்பிக்கும் பெருந்திரளான மக்களில் பெரும்பகுதியினரை நீக்குவதுதான். இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் மருத்துவர் தொழிலைத் தொடரத் தேவையான குணாதிசயங்களையும் மன உறுதியையும் கொண்டிருந்திருப்பார்கள் என்பது யாருடைய கவலையும் அல்ல.

நீக்கப்பட்டவர்கள் சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களா என்பது அதைவிடக் குறைவான கவலையே. நீட் மற்றும் அது போன்ற பிற தேர்வுகளில் வெற்றி பெறுவது, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பயிற்சியுடன் (coaching) தொடர்புடையது. பயிற்சிக்காக விண்ணப்பதாரர்களும் அவர்களின் பெற்றோர்களும் செலவிடும் தொகை கணிசமானது. பல மாணவர்களால் எந்தவிதமான பயிற்சியையும் பெற முடியாது; குறிப்பாகத் தங்கள் வெற்றி விகிதம், பயிற்சியாளர்கள் மற்றும் நீண்ட காலத் தங்குமிட வசதிகள் குறித்து விளம்பரங்களுக்குப் பெருமளவு பணம் செலவழிக்கும் புகழ்பெற்ற மையங்களில் சேருவது என்பது அவர்களுக்கு எட்டாக்கனி. இத்தகைய அதீத வணிகமயமாக்கப்பட்ட சேவைகள் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் தேவையற்றதாக்கிவிட்டன.

வினாத்தாள் கசிவு ஊழல்

நீட் தேர்வைத் தாக்கிய வினாத்தாள் கசிவு ஊழல் ஒருமுறை நடந்த சம்பவமல்ல. உண்மையில், இது மிகவும் சாதாரணமாகிவிட்டது, ஒரு தேர்வு கசிவு இல்லாமல் நடந்தாலும் கூட மக்கள் அதைச் சந்தேகிக்கிறார்கள். வினாத்தாள் கசிவு ஒரு தேர்வை அழிப்பது மட்டுமல்லாமல், இளைஞர்கள் வாழும் சமூகச் சூழலையும், தேர்வில் வெற்றிபெற அவர்கள் படும் போராட்டத்தையும் சிதைக்கிறது. வினாத்தாள் கசிவு என்பது ஒன்றும் புதியதல்ல, இந்தியத் தேர்வு முறை எதிர்கொள்ளும் ஒரே முறைகேடும் இதுவல்ல. வினாத்தாள் கசிவு ஒரு மேலாதிக்கமான முறைகேடாக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தவறான வழிகளில் வெற்றி பெற்ற கதைகள் நவீன கல்வியின் நாட்டுப்புறக் கதைகளாக இருந்தன.

வரலாற்று ரீதியான முறைகேடுகள்

கேள்விகளைத் தீர்க்க உதவும் எந்தப் பொருளையும் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்தப் பழக்கம் ரவீந்திரநாத் தாகூரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்குப் பரவலாக இருந்தது. கவிஞர் தாகூர் அத்தகைய மாணவர்களை, லட்சுமணனின் உயிரைக் காக்கும் ஒரு குறிப்பிட்ட மூலிகையைத் தேடுவதற்குப் பதிலாக முழு மலையையே சுமந்து வந்த ஹனுமானுடன் கிண்டலாக ஒப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய, டிஜிட்டல் முறைக்கு முந்தைய காலத்தில், பல வகையான தேர்வு ஊழல்கள் எழுந்தன. ஒன்று, தேர்வு மையங்களின் 'விற்பனை'. அங்கு விண்ணப்பதாரர்கள் பாடப்புத்தகங்கள் அல்லது வினா-விடை வடிவில் வெளியிடப்பட்ட அதன் 'கையேடுகளில்' (keys) இருந்து விடைகளை நிம்மதியாகப் பார்த்து எழுத முடிந்தது. ஏலம் விடப்பட்ட சில தேர்வு மையங்கள் கரும்பலகையில் சரியான விடைகளை எழுதும் நேரடி உதவியாளர்களையும் வழங்கின. இன்னும் சில மையங்கள், பயந்துபோயிருக்கும் மாணவர்களை விட அதிக அறிவுள்ள 'மாற்றுத் தேர்வர்களை' (proxy examinees) அமர்த்தும் வசதியையும் அளித்தன.

தார்மீகக் கட்டமைப்பின் சரிவு

இருப்பினும், முறைகேடு செய்வதற்கும் வினாத்தாள் கசிவுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. வினாத்தாள் கசிவு என்பது வெறும் அமைப்பு ரீதியான தோல்வி மட்டுமல்ல, அதன் தார்மீகக் கட்டமைப்பின் சரிவையும் குறிக்கிறது. வினாத்தாள் கசிவைப் பற்றி கேள்விப்படும்போது, ஒரு விண்ணப்பதாரர் தனது நீதிக்கான உரிமை மீறப்படுவதை எண்ணி உதவியற்றவராக உணரக்கூடும்.

வினாத்தாள் கசிவு வழக்கமான ஒன்றாக மாறும்போது, நாம் எழுதும் தேர்வுத்தாள் ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருக்கும் என்றும், அவர்கள் முன்கூட்டியே அதைப் பார்த்ததால் கூடுதல் பலன் பெறுவார்கள் என்றும் சந்தேகம் எழுகிறது. இந்த ஆண்டு, வினாத்தாள் கசிவை மறைக்க முடியாத காரணத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது (பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது). கடந்த ஆண்டு, ஒரு சாமர்த்தியமான சட்டப் பயிற்சி ரத்தைத் தவிர்த்தது, ஆனால் அந்த வரையறுக்கப்பட்ட மறுதேர்வு, கசிவின் அளவு குறித்துக் கடுமையான சந்தேகங்களை எழுப்பியது.

அமைப்பின் தார்மீகச் சரிவு

இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த தற்கொலைகள் நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை: 18 வயது இளைஞர்களின் லட்சிய மனம் எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாகும் என்பதை அவை நமக்குச் சொல்கின்றன. நீட் தேர்வுடன் நேரடியாகத் தொடர்பில்லாத பல இளைஞர்களிடமும் இந்த வினாத்தாள் கசிவு எதிரொலித்தது என்பது, வினாத்தாள் கசிவு என்பது அமைப்பின் செயல்திறன் அல்லது ஒழுங்கமைக்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடு மட்டுமல்ல, அது அமைப்பின் தார்மீகப் பண்பில் ஏற்பட்ட நெருக்கடி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நீட் தேர்வை நடத்துவதற்கு எவ்வளவு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், அதன் உள்ளார்ந்த பண்படாத் தன்மை தீர்க்கப்படாமல் தான் இருக்கும். மூன்று பாடங்களில் இருந்து ஒரு தொகுதி பாடப்புத்தகக் கேள்விகளை அதிவேகமாக 'நொறுக்குவது' (cracking), ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற உந்துதலுடன் எந்தத் தொடர்பும் இல்லாதது.

பயிற்சி மையங்களின் அணுகுமுறை

பயிற்சி மையங்கள் இந்த 'வேகமான' செயல்பாட்டை விரும்புகின்றன. திசைதிருப்பும் விடைகளைக் (distractors) கண்டறிந்து சரியான விடையைக் குறிக்க அவர்கள் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். இந்தச் செயல்பாடு கற்றல் அல்லது புரிதலுடன் எந்தத் தொடர்பும் இல்லாதது; கல்வி வழங்க வேண்டிய மகிழ்ச்சியுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

https://www.tribuneindia.com/news/comment/neet-is-flawed-to-the-core/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு