புரட்சிக்கவி பிறந்த நாள்

Subbaraj V

புரட்சிக்கவி பிறந்த நாள்

The Hindu இதழின் ஆசிரியருக்கு கடிதம் பகுதிக்காக 1904 டிசம்பர் 27-ல் பாரதி எழுதியது தான் முதன்முதலில் வெளியான பாரதியின் ஆங்கில எழுத்து என கருதப்படுகிறது.

"இந்நாட்டவன் என்ற நாட்டுரிமை உணர்வு இல்லாமல் அரசியல் விடுதலை இருக்க முடியாது. எங்கே சாதி அமைப்பு முறை பரவி இருக்கிறதோ அங்கே நாட்டுரிமை உணர்வு இருக்காது. குற்றம் கண்டுபிடிக்கிற அதிமேதாவி ஆராய்ச்சியாளர் சிலர் உலகத்திலுள்ள எல்லா மனித சமுதாயங்களிலும் சாதி அமைப்பு முறை உள்ளதுதான் என்று நம்மை நம்பும்படி வேண்டுவார்கள்!

இந்த சாதி அமைப்பு முறை இருக்கிறதே அது அதி ஆச்சரியமானது! ஏனென்றால் இது பறையன் ஒருவன் பெருங்கொடையாளியாக இருந்த போதிலும் அவன் பிராம்மணத் தரகனை விடக் கீழானவன் தாழ்ந்தவன் என்றே வைத்து நடத்துகிறது.      

இங்கிலாந்தில் உரிய  தகுதிகள் வாய்க்கப் பெற்ற அந்நாட்டுக் குடிமகனான சக்கிலியின் மகன் ஒருவன் பிரதம மந்திரியாவதற்கு எவ்விதத் தடைகளும் கிடையாதென்பதை பற்றி அங்குள்ள மக்களில் எவனும் ஐயப்படமாட்டான்.

சமஸ்கிருத சாஸ்திரங்களில் ஈடு இணையற்ற அறிவும்,   விழுமிய ஒழுக்கப் பண்பும்,  பக்தியும் கொண்ட (பஞ்சமர்களைக் கூட விட்டுவிடுவோம்) சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வரமுடியும் என இந்தியாவில் எவனாது நம்பினால் அது தேசத் துரோகமாகக் கருதப்படும் அல்லவா? 

மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள்?

சமுதாய சீர்திருத்தம் சாராத அரசியல் சீர்திருத்தம் என்பது வெறும் கனவும் கற்பனையுமே ஆகும். ஏனெனில் அரசியல் சுதந்திரம் என்ன என்பதைச் சமூக அடிமைகள் உண்மையாகவே புரிந்து கொள்ள மாட்டார்கள்."

- Subbaraj V

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு