அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு - தேர்தலில் சாதகமா? பாதகமா?

பிபிசி தமிழ்

அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு - தேர்தலில் சாதகமா? பாதகமா?

அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 7000 விருந்தினர்களுக்கும், 3000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ் அனைத்து பெரும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி முதல் சிபிம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வரை விழாவுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சீதாராம் யெச்சூரி தான் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்பதைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோருக்கு குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்புகள் குறித்த முடிவுகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் அந்த நிகழ்வில் பங்கேற்காது என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

‘கடவுள் ராமரை பல லட்சம் மக்கள் வழிபடுகிறாகள். மதம் என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ராமர் கோவிலை அரசியல்படுத்துகிறது.

முழுதாகக் கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு திறப்புவிழா நடத்துவதற்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே காரணம். எனவே இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதையுடன் மறுக்கின்றனர். மேலும், இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சி,” என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான நிலையில் காங்கிரஸ்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோனியா காந்தி விழாவில் பங்கேற்பார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இருப்பினும், அவர் நிகழ்வில் கலந்துகொள்வது குறித்த தகவல் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், அது சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தி டெலிகிராப் ஆங்கில நாளிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்த நிகழ்வில் காங்கிரஸ் கலந்துகொள்ள நல்ல வாய்ப்புகள் உள்ளன எனக் கூறியிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், காங்கிரஸ் ராமர் கோவிலுக்கு எதிரானது அல்ல மாறாக, பாஜகவுடனான கட்சியின் மோதல் கருத்தியல் மற்றும் அரசியலுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

"நாங்கள் ஆர்எஸ்எஸ்-பாஜகவைவிட அதிக மதவாதிகள், அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே மதத்தைப் பயன்படுத்துகிறார்கள்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் செய்தித்தாளிடம் தெரிவித்தார். நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம், வகுப்புவாதிகள் அல்ல. ராமர் கோவில் கொண்டாட்டங்களை நாங்கள் புறக்கணிக்கிறோம்," அதை ஏன் நடத்த வேண்டும்?"

ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி பிரான் பிரதிஸ்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சுமார் மதியம் 1:45 மணிக்கு அவர் கருவறை சடங்குகளைத் தொடங்குவார். ஆகஸ்ட் 5, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

ராமர் கோவில் இயக்கம் பாஜகவால் வழிநடத்தப்பட்டு வருகிறது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று அரசியல் கூர்நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏன் காங்கிரஸால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை?

"ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்க தாமதம் ஏன்?" என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சவுத்ரியும் இந்த கேள்விக்கு அதிர்ச்சியடைந்தார், 1990களில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பூர்வ வழிகள் அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் ராமர் கோவிலை கட்ட உறுதியளித்தது. எனவே விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், "1992இல் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, ராமர் கோவில் பிரச்னை தேர்தல்களில் தீர்க்கமானதாக இல்லை. ஆனால் இந்த முறை கோவில் கட்டியதற்கான பெருமை பிரதமர் மோதிக்கு வழங்கப்படுகிறது. மக்களுடைய பார்வையில் நரேந்திர மோதியின் ஆளுமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவமாக கோவிலும் இருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் பாஜக செல்லும்.

இதனால், பாஜகவின் விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஏனெனில் அது நேரடியாகத் தனக்கு நன்மை பயக்கும். ஆனால், விழாவிற்குப் போகாமல் விட்டால் காங்கிரஸை இந்து விரோதப் பிம்பமாக பாஜக காண்பிக்கும். இந்தக் காரணத்திற்காக, காங்கிரஸ் தற்போது ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது.

காங்கிரஸ் தலைமை நெருக்கடி தொடர்பான செய்திகளின் மூலம் பாஜகவுக்கு உதவ ஊடகங்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் தலைவர் கூறியதாக டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

"நாங்கள் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் என எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லக்கூடாது?" என்று டெலிகிராப் நாளிதழிடம் காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் "உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட தேசிய அறக்கட்டளையால் நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்," எனத் தெரிவித்தார்.

முஸ்லிம்களிடம் இருந்து அழுத்தம் ஏற்படுகிறதா?

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸோடு கேரளாவில் கூட்டணியில் இருக்கும் கட்சி காங்கிரஸ் இந்த விழாவில் கலந்து கொள்வதை எதிர்த்துள்ளது. கேரளாவில் உள்ள காங்கிரஸ் அரசியல்வாதியும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சசி தரூர், இந்த நிகழ்வை பாஜகவின் அரசியல் மேடை என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 28ஆம் தேதி, “கோவில் குடமுழுகிற்கு அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விருப்பப்படி செல்லலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யலாம்” என்று ட்வீட் செய்துள்ளார். செல்லாமல் இருப்பவர்களை இந்து விரோதிகள் என்று குற்றம் சாட்டப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், செல்பவர்களை பாஜாகவின் கைகளில் விளையாடுபவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படும்.

மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆனா வினோத் ஷர்மா தெரிவிக்கையில், முஸ்லீம் சமூகத்திற்கு அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்வதால் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார்.

வினோத் ஷர்மாவின் தெரிவிக்கையில், "ராமர் கோவில் சர்ச்சை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். கட்சிகள் அங்கு சென்றால் முஸ்லிம்கள் கோபப்படுவார்கள், ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. காங்கிரஸ் அங்கு செல்வதால் முஸ்லிம் வாக்குகளை கட்சி இழக்காது," எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், "காங்கிரஸுக்கு கேரளா மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது வலுவாக இருக்கும் சில மாநிலங்களில் அதுவும் ஒன்று. அதன் கூட்டாளியான ஐயுஎம்எல் வருத்தப்பட விரும்பவில்லை," என்றும் நீரஜா சவுத்ரி கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "தொண்ணூறு சதவீத இந்துக்கள் கோவில் கட்டப்பட்ட விதத்தில் திருப்தி அடைந்துள்ளனர். மேலும் தேசிய கட்சியான காங்கிரஸ் இதை எப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்கும்? காங்கிரஸ் ராமரை எப்படிக் கையாளும்? ராமரை பாஜக சிறப்பாகக் கையாண்டுள்ளது. இங்கு இதில் சவால் உள்ளது.

பி.வி.நரசிம்மராவ் மற்றும் விஸ்வநாத் பிரதாப் சிங் ஆகியோர், 'பாஜகவுடன் நாங்கள் சண்டையிட்டிருப்போம், ஆனால் ராமருடன் எப்படி சண்டையிடுவோம்?' என்றனர். இப்போது காங்கிரஸ் ஒரு அசாதாரணமான இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது," எனத் தெரிவித்தார்.

ஒருவேளை காங்கிரஸ் இந்த விழாவுக்குப் போகாமல் போனால் பாஜகவினர் காங்கிரஸுக்கு இந்து நலன் மீது அக்கறை இல்லை என ஒரு பிம்பத்தை உருவாக்க முயலும். ஐயூஎம்எல் இதற்கு முன்னரே ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது, அதனால் பாஜக முஸ்லிம் கட்சி பயத்தால் காங்கிரஸ் வரவில்லை என்று காண்பிக்கும்.

குடமுழுக்கில் பங்கேற்றால் காங்கிரசுக்கு ஆதாயம் உண்டா?

கடந்த 2019ஆம் ஆண்டு ராமர் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, CWC இந்தத் தீர்ப்பைப் பாராட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது.

வினோத் ஷர்மாவின் கூற்றுப்படி, முந்தைய உள்துறை செயலாளராக இருந்த மாதவ் கோட்போல் ராமர் கோவில் பிரச்னை "ராமாயணத்தின் மகாபாரதம்" என்றும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் எழுதினார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வது நன்மை பயக்குமா அல்லது தீமையா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த வினோத் ஷர்மா, "அவர்கள் செல்லவில்லை என்றால், பாஜக காங்கிரஸை எல்லா இடங்களிலும் ராமரை அவமதித்ததாகவும், ஆரம்பத்தில் இருந்தே ராமருக்கு எதிரானவர்கள் என்றும் கூறும். எவ்வளவு பழைய கதைகளை தோண்டி எடுத்தாலும் உண்மைகள் நிலைத்து நிற்கும். ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் கதவுகள் திறந்திருந்தன.

கடந்த 1986ஆம் ஆண்டில், ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டது, அங்கு ராம் லல்லா சிலை வைக்கப்பட்டது."

அரசியலுக்கான பேரம்

பாபர் மசூதி திறக்கப்பட்டதற்குக் காரணம் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் (இந்த நேரத்தில் உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது). இது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முஸ்லிமில் விவாகரத்து பெற்ற ஷா பானோவின் வழக்கை எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் பராமரிப்பு கொடுப்பனவு குறித்து சட்டம் கொண்டு வந்தது. சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு ரத்து செய்யப்பட்டது. இந்த மொத்த விவகாரமும் காங்கிரசின் அரசியல் பேரம் என்று கூறப்படுகிறது.

வினோத் ஷர்மா கூறுகையில், இந்த மாதிரியான விழாவில் கலந்துகொள்வது காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிரானது அல்ல, ஏனெனில் இது அனைத்தும் பின்னணியில் உள்ள தனிநபர்களையும் ஊக்குவிக்கிறது மற்றும் வரவேற்கிறது எனத் தெரிவித்தார்.

"காங்கிரஸ் மீண்டும் அதே வடிவத்தைப் பெற வேண்டும், அது சிறுபான்மையினரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அதை பெரும்பான்மைக்கு எதிரானதாக மாற்றும் நிலையையும் ஏற்படுத்திவிடக்கூடாது."

உச்ச நீதிமன்றத்தின் 2019 தீர்ப்பின்போது அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றி சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தனர்.

பாபர் மசூதியின் பூட்டு போடப்பட்டது முதல் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு மசூதி இடிக்கப்படும் வரை மத்தியில் காங்கிரஸ் அரசுதான் ஆட்சியில் இருந்தது என்பதும் உண்மை.

ராஜீவ் காந்தியும், ராமர் கோவிலும்

1986 ஆம் ஆண்டில், ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அங்கே ராமர் சிலை வைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தியின் அரசு (அப்போது உத்தரபிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது) பாபர் மசூதியைத் திறந்தது என்று நம்பப்படுகிறது. ஏனெனில் முஸ்லிம் பெண்ணான ஷா பானோவின் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராஜீவ்காந்தியின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியதால் தான் காங்கிரஸ் கட்சி பாபர் மசூதியைத் திறக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஷா பானோ மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண். அவரது விவாகரத்து வழக்கில் அவருக்கு இழப்பீடு ஜீவனாம்சம் அளிக்க அவரது கணவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் ராஜீவ் காந்தி இந்தத் தீர்ப்பை நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்தார். ஷா பானோ வழக்கில் ராஜீவ் காந்தி முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சரணடைந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

31 ஜனவரி 1986 அன்று பாபர் மசூதியின் பூட்டைத் திறக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது, அதற்கு அடுத்த நாளே அதாவது 1986 பிப்ரவரி 1 அன்று, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகளைத் திறக்க மாவட்ட ஆட்சியர் கே.எம்.பாண்டே உத்தரவிட்டார்.

பல தசாப்தங்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இத்தகைய உயர்மட்ட வழக்கில், மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தாலொழிய, பைசாபாத் நிர்வாகம் இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி சட்டவிரோதமாக சிலை வைக்கப்பட்டதால் மசூதி பூட்டப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு, ராஜீவ் காந்தி எந்த கோவிலுக்கோ, மத தலத்திற்கோ சென்றாலும், அவரது மனைவி சோனியா காந்தி எப்போதும் அவருடன் இருப்பார். அவர் தலையில் முக்காடு அணிந்துகொண்டு, அவரும் பூஜை செய்வார்.

ரஷித் கித்வாய் தமது எழுத்துகளில், "ராஜீவ் காந்தி 1989 இல் நேபாளத்திற்குச் சென்றபோது, ​​வரலாற்றுச் சிறப்புமிக்க பசுபதிநாத் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தார். ஆனால் திருப்பதி மற்றும் பூரி போன்று பசுபதிநாதர் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை உள்ளது.

சோனியா தன்னுடன் வர வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார். ஆனால் அர்ச்சகர்கள் அவரை அனுமதிக்கவில்லை. மன்னர் பிரேந்திராவால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. ராஜீவ் காந்தி அதை ஒரு தனிப்பட்ட பிரச்னையாகக் கருதிக் கொண்டு பசுபதிநாதரை வணங்காமல் திரும்பினார்,” என எழுதியுள்ளார்.

இதற்குப் பிறகு, இந்தியா-நேபாள உறவுகளும் மோசமடைந்து, இந்தியாவும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. பின்னர், அப்போதைய வெளியுறவுச் செயலர் நட்வர் சிங் இரு நாடுகளுக்கும் இடையே இயல்பான உறவை அறிவித்தார்.

2001 ஆம் ஆண்டு கும்பமேளாவின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடினார். இருப்பினும், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வருகைக்கு முன்னதாக அவர் அலகாபாத் சென்றிருந்ததால் இந்த விஷயமும் விவாதப் பொருளாக மாறியது.

(முகமது ஷாஹித்)

- பிபிசி தமிழ்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு