பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு!

தீக்கதிர்

பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு!

ஒன்றிய அரசின் பட்ஜெட் நடுத்தர, ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகை யிலேயே உள்ளதாகவும், இதிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் அளிக்கவில்லை. மாறாக கடந்த காலங்களை போலவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உள்ளது. 

ஆட்சியைக் காப்பாற்றிக்  கொள்ளும் அறிவிப்புகள்

தனது கூட்டணி கட்சிகளை திருப்திப் படுத்தி ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கூடுதல் அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் இதர மாநிலங்களை புறக்கணித்துள்ளது. குறிப்பாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநி லங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. தமிழக திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டையே புறக்கணித்துள்ளது வன்மையான கண்ட னத்திற்கு உரியதாகும்.

திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, தனித்த பெரும்பான்மையில் பத்தாண்டுகள் ஆட்சி செய்த மோடி அரசின்  தோல்வியை அப்பட்ட மாக வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகித மாக வளர்ந்துள்ளது என்று பெருமை பேசிக் கொண்டாலும் துறை வாரியான, சமூக வளர்ச்சி ரீதியான புள்ளி விபரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன.

விலைவாசி, வேலையின்மைக்கு  எந்த தீர்வும் கூறப்படவில்லை

வேலையின்மை, விலையேற்றம், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கடந்த ஆண்டு மிகவும் மோசமான பொருளாதார விளைவு களை ஏற்படுத்தியதாக ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையேற்றம் 2023-இல் 6.6 சதவிகிதமாக இருந்தது, 2024-இல் 7.5 சதவிகிதமாக உயர்ந்தது என்பது சாதா ரண மக்களுடைய உணவுப் பொருள் நுகர்வின் மீது மிகுந்த பாதிப்பை உருவாக்கி யது. வேலையின்மையை சரிசெய்ய எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையே ஆய்வறிக்கை அம்பலப் படுத்தியது.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவின ருக்கான நிதிநிலை அறிக்கை என்று  ஏற்கெனவே புளித்துப் போன வசனத்தையே இந்த முறையும் பேசி இருக்கிறது. ஆனால், இவர்களுடைய நிலைமையை முன்னேற்ற எந்த புதிய  அறிவிப்புகளும் இல்லை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் மற்றொரு வழியாகும். 

விவசாயம் - தொழிற்துறையினர் கோரிக்கை ஏற்கப்படவில்லை

மேலும், மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்தைப் பற்றி பொருளாதார ஆய்வறிக்கையும் விமர்சனங்களை தெரிவிக்கிறது. அதற்கேற் றாற்போல் நிதிநிலை அறிக்கையிலும் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

வேலை வாய்ப்புகளை அதிகமாக தரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் நீண்ட கால கோரிக்கைகள் பல இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பெரு நிறுவனங்களுக்கு தரப்படுவது போன்ற ஊக்குவிப்புத் தொகை, வராக் கடன் செலுத்துவதற்கான கால வரம்பு 150 நாட்களாக வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. அரசின் கடந்த கால வாக்குறுதிகள் நடைமுறையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு சென்று சேரவில்லை. அதற்கான அரசின் மானியம் அரசு வங்கிகளுக்கு தரப்படவில்லை என்பதே நமது அனுபவம்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற அரசின் முழக்கம்  தொடர்ந்து ஏமாற்று வார்த்தைகளாகவே தொடர்கின்றது. விவசாய விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த சி2 + 50 சதவிகிதம் என்ற அளவு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

அப்பட்டமாக வெளிப்படும் கார்ப்பரேட் ஆதரவு

அரசின் வருமானத் திரட்டல் கொள்கை யிலும் கார்ப்பரேட் ஆதரவு அப்பட்டமாக வெளிப்படுகிறது. உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசு உரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வு பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா வில் கார்ப்பரேட் வரிகள் சற்றும் உயர்த்தப்பட வில்லை என்பது மட்டுமின்றி, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40  சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பது ஆட்சியாளர் களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை அம்பலப்படுத்துகிறது.

கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும்போது சுகாதாரம், கல்வி, விவசா யம் ஆகிய துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த துறை களின் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றி லிருந்து பார்க்கும்போது நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவே. இவ்வளவுக்கு பின்னரும் கூட, வருகிற ஆண்டு (2024-25) வளர்ச்சி விகிதம் 8.2 சதவிகிதமாக உயரும் என்று அவர்கள் முன்மொழிவது வேடிக்கையாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான முன்னேற்றத்தையும் கொண்டு வராது. எனவே, ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

- தீக்கதிர்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு