தைவான்: மறு இணைப்பு என்ற பெயரில் சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தம்

தைவான் மீது இறுகும் அமெரிக்கா மற்றும் சீனாவின் புதிய காலனியாதிக்க பிடி

தைவான்: மறு இணைப்பு என்ற பெயரில் சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தம்

தைவானை கைப்பற்றுவதற்கான போர் ஒத்திகையை முடித்து கொண்டது சீனா. லெனின் கூறியப்படி ‘மறு இணைப்பு’ என்ற பெயரில்  தைவான் மறுபங்கீட்டிற்கான ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவது உறுதியாகியுள்ளது.

தைவானின் பதற்றமான எல்லையில் சீன இராணுவம் அச்சுறுத்தக்கூடிய வகையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த போர் ஒத்திகையை நேற்று நிகழ்த்தி முடித்துள்ளது. தன்னாட்சி பகுதியாக உள்ள தைவானை இராணுவ பலத்தின் மூலமாகக் கூட தனது கட்டுப்பாட்டின்  கீழ் கொண்ட வர முயலுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறது.

இந்த போர் ஒத்திகை ஒரு புதிய இயல்புநிலையை அதாவது சீனாவிற்கு அடிபணிந்த தைவானை உருவாக்கும் என்று சீன ஆளும் வர்க்கத்தினர் கூவி வருகின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு அடுத்த நாளே, ஆகஸ்ட்-4 அன்று தைவானைச் சுற்றி முன்னெப்போதில்லாத அளவுக்கு நேரடியாகவே போர் ஒத்திகையை சீன இராணுவம் மேற்கொண்டது, 

கடந்த புதன்கிழமை, சீன ஆளும் வர்க்கம் தைவான் பிரச்சினை தொடர்பாக  மூன்றாவது "வெள்ளை அறிக்கையை" வெளியிட்டது; இது "மறு இணைப்பு" நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதோடு, 1993, 2000 ஆம் ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட முந்தைய வெள்ளை அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட சில தன்னாட்சிக்கான வாக்குறுதிகளையும் திரும்பப் பெற்றுள்ளது. தைவானை கைப்பற்றிய பிறகு சீனப் படையினரோ அல்லது அதிகாரிகளோ தைவானில் பணியாற்றுமாறு அணுப்பி வைக்கப்படமாட்டார்கள் என்று பழைய அறிக்கையில் கூறியிருந்த வாசகமும் தற்போதைய அறிக்கையில் காணப்படவில்லை. 

"தைவான் குறித்தான பிரச்சினையும் புதிய சகாப்தத்தில் சீனாவின் மறு இணைப்பு" என்று தலைப்பிடப்பட்ட வெள்ளையறிக்கையில் "கூடுதலான நேர்மையுடனும், முடிந்தமட்டும் அமைதியான  வழியில் மறு இணைப்பை அடைய எங்களின் அதிகபட்சமான முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று கூறிவிட்டு "இருந்தபோதிலும் நாங்கள் படைபலத்தை பயன்படுத்துவதை கைவிட மாட்டோம், மேலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான வழிகளையும் நாங்கள் கைவசம் வைத்திருக்கிறோம்," என்று அதிலே மேலும் கூறப்பட்டுள்ளது;  "நிர்ப்பந்தமான சூழ்நிலையில் எடுக்கப்படக்கூடிய கடைசி முயற்சியாக இராணுவத்தை பயன்படுத்த வேண்டும்" என்று முந்தைய வெள்ளை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அதே கருத்தை இந்த அறிக்கையும் கூறுகிறது.

மாவோவின் சோசலிச சகாப்தத்திற்கு பிறகு டெங்கின் முதலாளித்துவ பாதையில் பயணித்த சீனா தற்போது ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது. இந்த மூன்றாவது சகாப்பதத்தின்(ஏகாதிபத்திய) தொடக்கத்தை "புதிய சகாப்தம்" என்று ஷி ஜின்பிங்கின் வர்ணிக்கிறார். 2012ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடங்கி, 69 வயதான ‘ஷி’, இதுவரையிலும் இல்லாத வகையில் மூன்றாவது (ஐந்தாண்டு)  முறையாக ஆட்சியில் இருந்து கொண்டு அறிவித்துக்கொள்ளாத பாசிஸ்டாக வலம் வருகிறார். இவரையே மேலும் ஒரு பத்தாண்டு காலத்திற்கு ஆட்சியில் இருக்க வைக்க சீன ஆளும் வர்க்கத்தினர் முயற்சித்து வருகின்றனர். 

சீன ஏகாதிபத்தியத்தின் தைவான் மீதான ஆக்கிரமிப்பை கம்யூனிஸ்ட் கட்சியின் "வரலாற்றுப் பணி" என்று வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் நடைமுறையில் உள்ள "ஒரு நாடு, இரட்டை ஆட்சி முறை" என்ற பழைய காலனிய தோசையையே திருப்பிப்போட்டு  புதிய காலனியத்திற்கான சூத்திரமாக தைவானிலும் பயன்படுத்தப்போவதாக வெள்ளை அறிக்கையில் அறிவித்துள்ளது.

தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் கொண்டுவந்துள்ள பாசிச சட்டங்களை போன்று ஹாங்காங்கிலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அம்மக்கள் மீது திணித்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களை கூர்ந்து கவனித்த வந்த தைவான் நாட்டு மக்களும், அங்குள்ள ஜனநாயக சக்தியிலும் சீனாவின் “மறு இணைப்பு அல்லது ஒரு நாடு இரண்டு ஆட்சி” முறை என்ற புதிய காலனிய சூத்திரத்தை மிக மிகக் குறைவான அளவிலேயே ஆதரிக்கின்றனர். இந்த குறைந்த ஆதரவு அதிக எதிர்ப்பு தவிர்க்கவியலாத முறையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய விடுதலை போராட்டத்திற்கு அம்மக்களை தயார்படுத்தும் என்பதை பறைசாற்றுகிறது. 

- செந்தளம் செய்திப் பிரிவு