டிரம்ப்பின் "அமெரிக்காவே முதன்மை" கொள்கையின் தாக்கம்.
ரெட் ஸ்டார் இணையதளம்

பனிப்போர் காலகட்டத்திற்குப் பிந்தைய ஐரோப்பாவின் புவிசார் அரசியல் நிலவரங்களில் டிரம்ப்’ன் "அமெரிக்காவே முதன்மை" கொள்கையின் தாக்கம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவை நோக்கிய அமெரிக்காவின் போர்தந்திர அணுகுமுறையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டு, தற்போது ட்ரம்பின் 'அமெரிக்காவே முதன்மை' என்ற கொள்கை, பிறநாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை, காப்புக் கொள்கையின் கீழ் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தலைமையகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வலதுசாரி தேசியவாதத்தையும், சர்வாதிகார அரசியலையும் முன்னிறுத்தும் ட்ரம்ப் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில், நேட்டோ மீதான அவரது கடுமையான விமர்சனம் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்ட வலிமைமிக்க இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ, ஆரம்பத்தில் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாக இருந்ததோடு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதென்ற பெயரிலும் செயல்பட்டது. குறிப்பாக, நேட்டோ அமைப்பின் விரிவாக்கமே உக்ரைன் போருக்கு முக்கியக் காரணம் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் அமெரிக்கத் அதிபராக ட்ரம்ப் மாறிவிட்டார். டிரம்ப் மேலும் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த நலனுக்காகச் சூழ்ச்சிகரமாகப் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்வதென்ற உள்நோக்கத்துடன்தான் 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) உருவாக்கப்பட்டது என்று சாடினார். மேலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய அரசியல் மையங்களில் நடத்துவது என்ற நீண்டகால மரபை புறக்கணித்துவிட்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து, உக்ரைனின் பங்கேற்பையும் கண்டு கொள்ளாமல் விட்டது. இதன் விளைவாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ஏகாதிபத்திய போட்டியில் உக்ரைன் ஒரு போர்க்களமாக(பதிலியாக) மட்டுமே சிக்கித் தவிக்கிறது என்பது தெளிவாகிறது.
உக்ரைன் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகளின் தலையில் ஏற்றும் அதே வேளையில், முதன்மையான ஏகாதிபத்திய எஜமானராக திகழும் ட்ரம்ப், உக்ரைனுக்கு எந்தவிதப் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்காத ஒருதலைப்பட்சமான திட்டமொன்றை முன்வைத்துள்ளது மட்டுமல்லாமல் அதற்கு மாறாக, உக்ரைன் தனது மதிப்புமிக்க அரிய கனிம வளங்களை இராட்சத அமெரிக்க இராணுவ-தொழில்துறை கார்ப்பரேட்டுகள் வெட்டி எடுத்து, கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டும் என்று டிரம்ப் வற்புறுத்துகிறார். இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்காவின் முதன்மையான அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவக் கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) இருந்தபோதிலும், ஐரோப்பியப் பொருட்கள் மீது 25% காப்பு வரியை விதிப்போம் என்று ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நேட்டோவின் தற்போதைய எதிர்காலம் நிச்சயமற்றதாக நீடிக்கும் அதே வேளையில், அந்த அமைப்பிற்குள் இருக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகள் அமெரிக்காவின் நிதி ஆதரவு குறித்தும், அர்ப்பணிப்பு குறித்தும் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகின்றன. இச்சூழலில், டிரம்ப் ஏற்கனவே புதினுடன் இணைந்து உக்ரைனக்குள் செல்வாக்கு மண்டலங்களை பகிர்ந்துகொள்வதற்கும், அதன் மதிப்புமிக்க கனிம வளங்களைச் சுரண்டுவதற்குமான உடன்பாடு கண்டுள்ளார். அவ்வகையில் இன்று, உக்ரைன் ஒரு வழக்கமான புதிய காலனியாக மாற்றப்பட்டுள்ளது.
எஜமானர் டிரம்ப்பிற்கும், சேவகர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் வாய்த்தகராறாக இருக்கட்டும் – இருவருமே அவரவர் நிலைக்கேற்ப தீவிர வலதுசாரி புதிய பாசிச அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் - இச்சம்பவத்தில், ஜெலென்ஸ்கியையும் அவரது குழுவினரையும் வெளியேறும்படி வெள்ளை மாளிகை உத்தரவிட்டதாக இருக்கட்டும், இவை எதுவுமே ட்ரம்பின் போர்தந்திர போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. உலக நாடுகள் மீது புதிய காலனிய முறையில் மேலாதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அமெரிக்காவின் கடந்தகால நடவடிக்கைகள் எவ்வித மாற்றமுமின்றி தொடரவே செய்யும்.
புதினுடன் ட்ரம்ப் எட்டியுள்ள உடன்பாடு, ரஷ்யாவின் நெருங்கிய போர்த்தந்திர பங்காளியாகவும், உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் தீவிரமாக போட்டியிடும் நாடாகவும் இருந்து வரும் சீனாவுடனான அமெரிக்காவின் அணுகுமுறையில் ஒரு மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயத்தில், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையானது முதன்மையாக அமெரிக்காவிலுள்ள நிதி மூலதன ஆதிக்கம் செலுத்தும் முன்னணி பெருங்கோடீஸ்வரர்களின் உடனடியான கார்ப்பரேட்-நிதி மூலதன நலன்களால் வழிநடத்தப்படுகிறது. இது தவிர்க்க இயலாமல் எதிர்வரும் காலங்களில் உலக ஏகாதிபத்திய நாடுகளிடையே மேலாதிக்க போட்டிகளின் மறுசீரமைப்பிற்கு இட்டுச்செல்லும்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவுகளை மறுவடிவமைக்க ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகள்—இந்த உறவுகள் முதலில் மார்ஷல் திட்டம் மூலம் கட்டியெழுப்பப்பட்டன, இது ஐரோப்பிய புனரமைப்புத் திட்டம் எனவும் அறியப்படுகிறது, மேலும் இது கம்யூனிசத்திற்கு எதிரான ஜனாதிபதி ட்ரூமனின் பனிப்போர் வியூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது, பின்னர் நேட்டோ அமைப்பின் மூலம் வலுப்படுத்தப்பட்டது—அவரது "அமெரிக்காவை மீண்டும் மேன்மைப்படுத்துவோம்" (MAGA) என்ற கொள்கைத் திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக அமைகிறது.
காசாவிலிருந்து ஏறத்தாழ 20 இலட்சம் பாலஸ்தீனியர்களை பலவந்தமாக வெளியேற்றுவதோடு, ஜோர்டான், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நிரந்தரமாகக் குடியமர்த்திவிட்டு, காசாவை ஒரு உயர்ரகக் கடலோர உல்லாசபுரியாக மாற்றியமைக்கத் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முற்றிலும் இசைவானதாக இருக்கிறது. உக்ரைனுக்கான அவரது அணுகுமுறையும் இந்த "காசா திட்டத்தின்" சாராம்சத்தில் அமைந்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே மேலிருந்து திணிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னணியில், பாலஸ்தீனிய மக்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் இருந்ததை உணரலாம். அந்த உடன்படிக்கை தற்போது பாலஸ்தீனியர்களுக்கு சுருக்குக் கயிறாக மாறியுள்ளது. "டிரம்பிசம்" என்பதன் முழுமையான புவிசார் அரசியல் தாக்கங்கள் எதிர்வரும் காலங்களில் வெளிப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://redstaronline.in/2025/03/02/impact-of-trumps-america-first-policy-on-post-cold-war-european-geopolitics/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு